மகேந்திரவர்மன்

சரித்திரத்தில் பொதுவாக – ஒரு காலகட்டத்தில் – ஒருவன் பெருநாயகனாக இருப்பான் – அருகில் இருக்கும் மன்னர்கள் அவனிடம் தோற்றிருப்பர் – அல்லது அடங்கியிருப்பர்.
ஒரு சிறு கற்பனை செய்து பாருங்கள்: அலெக்சாண்டர் – ஜூலியஸ் சீசர் – சமுத்திர குப்தன் அனைவரும் ஒரே சமயத்தில் ஆண்டால்?
அது போல ஒரு காட்சிதான் அன்று இந்தியாவில் விரிகிறது…
மகேந்திர பல்லவன் (நரசிம்ம பல்லவன்), இரண்டாம் புலிகேசி , ஹர்ஷவர்த்தனன் – மூவரும் ஒரே சமயத்தில் ஆண்டு – போரிட்டு – பெருமையுடன் நாட்டையும் ஆண்டனர். ஒவ்வொருவரும் ஒரு நாயகர்தான்.
ஒவ்வொருவரும் சரித்திர நாயகர்தான்.
இவ்விதழில் நமது நாயகர் ‘மகேந்திரவர்மன்’.

சண்டை சமாச்சாரங்களை முதலில் ஆராய்வோம்:
சாளுக்கிய – பல்லவ யுத்தங்கள் எப்படி நடந்தன என்பதுபற்றிப் பல கருத்துக்கள் – மாறுபட்ட கருத்துக்கள் – சரித்திரத்தில் – தாறுமாறாகச் சிதறிக்கிடக்கிறது.
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியை நோக்கிப் படையெடுத்தான். அய்ஹொளே கல்வெட்டு, ‘அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின துளியானது எதிர்க்கவந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச்செய்தது. புலிகேசியின் பெரும்படைக் கடலைக்கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்துகொண்டான்.’- என்று கூறுகிறது. புலிகேசியை காஞ்சி அருகில் வரும்வரை விட்டுவிட்டதால் அது ஒரு தோல்வி என்று ஒரு கூற்று.
புலிகேசியை காஞ்சிக்கருகில் வரவிட்டு – மகேந்திரன் – அவனைத் துரத்தினான் –என்பது பல்லவர் கூற்று. ( பின்னாளில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், ‘மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்’ என்று குறிக்கிறது). புலிகேசியை காஞ்சிவரையில் வரவிட்டு – அவனைத் துரத்தியது ராஜதந்திரம் என்பது பல்லவர் கூற்று.
சாளுக்கியன் கல்வெட்டு:

“துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஓட்டம் தடைப்பட்டுக் கடலிற் கலக்க இயலாதாயிற்று. புலிகேசியும் பல்லவப் பனியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்” –என்கிறது.
காவிரிவரை சென்ற சாளுக்கியன் திரும்பிக் காஞ்சிபுரம் வழியே வருகையில், புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரன் அவனைத் திடீரெனத் தாக்கினான். போர் நடந்த புள்ளலூர் காஞ்சிபுரத்திற்கு 10 கல் தொலைவில் உள்ளது. தன் நாட்டிற்குள் வந்து புகுந்த பகைவனை வெளிச்செல்ல முடியாத நிலையில் சுற்றிவளைத்துக்கொண்டான்! பல்லவன், தனக்கு வசதியான இடத்தில் வந்து பகைவன் சேரும்வரை சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலக் காஞ்சிபுரக் கோட்டைக்குள் இருந்தான்; பகைவன் தன்னை எதிர்ப்பவர் இல்லை என்று இறுமாந்து சுற்றித்திரிந்து காஞ்சிக்கருகில் வந்ததும். திடீரென அவனை வளைத்துக்கொண்டு போரிட்டுப் பகைவரை அழித்தான்.
கங்க அரசனான துர்விநீதன் புலிகேசியுடன் சேர்ந்து மகேந்திரனுடன் போரிட்டான். துர்விநீதன் காடுவெட்டியை (பல்லவனை)ப் போரில் வென்று தன் மகன் வயிற்றுப் பேரனைச் சாளுக்கிய அரசுக்கட்டிலில் அமர்த்தினான்’ என்று ஹும்சா’வில் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. மற்றொரு கன்னடக் கல்வெட்டு, “மகேந்திரனது சேனைத் தலைவனான வேடராசனுடன் போர்செய்த சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்யாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான்” என்று கூறுகிறது. கீழைச் சாளுக்கிய நாட்டில் விஷ்ணுகுண்டர் நண்பனான மகேந்திரவர்மன் அவர்கட்கு உதவி செய்து, குப்ஜ விஷ்ணுவர்த்தனன் (துர்விநீதன் மருமகன்) இறந்தபின் நாட்டை விஷ்ணு குண்டர் பெற முயன்றிருக்கலாம். விஷ்ணுவர்த்தனன் மகன் இரண்டாம் புலிகேசிக்குத் தம்பி மகன்; கங்க-துர்விநிதனுக்கு மகள் வயிற்றுப்பேரன். எனவே அவனுக்குப் பரிந்து அவ்விருவரும் பல்லவனை ஒழிக்க முயன்று படையெடுத்தனர் போலும். அப்பொழுது நடந்த போர்களில் மகேந்திரவர்மன் புள்ளலூரில் கங்கனையும் சாளுக்கியனையும் முறியடித்திருத்தல் வேண்டும்; பெருநகரத்திலும் போரிட்டிருத்தல் வேண்டும். இப்போர்கள் ஒன்றில் துர்விநீதன் படைத்தலைவனை மடித்திருத்தல் வேண்டும். இத் தோல்விக்குப்பிறகே கங்கரும் சாளுக்கியரும் தம் முயற்சியைக் கைவிட்டு ஓடினராதல் வேண்டும்.
சரி! சண்டை போதும்.
சமயத்துக்கு வருவோம். சமயத்தில் அன்று தென்னிந்தியாவில் பெரிய திருப்புமுனை ஏற்பட்ட காலம். சமணமதம் கோலோச்சி வந்த காலம்.
மன்னர்கள் பெரும்பாலோர் சமணத்தை ஆதரித்த காலம்.
சிம்மவிஷ்ணு வைணவத்தை ஆதரித்தாலும் – மகேந்திரன் பட்டத்துக்கு வந்தவுடன் சமணத்தைத் தழுவினான்.
சைவத்திருமுறையில் சிங்கமென வந்த திருநாவுக்கரசர் மகேந்திரனின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக்
கொண்டுவந்தார்.
அது என்ன?
சைவசமயம் மறுபிறப்பு அடைந்த பொற்காலம் பிறந்தது.
மகேந்திரன் அதற்குப் பெரிய காரணமாயிருந்தான்.
மகேந்திரன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவன்.
இசைக் கலையை வல்லாரிடம் முறைப்படி பாடம் கேட்டவன்.
சிற்ப ஒவிய நடனக் கலைகளில் பேரார்வம் கொண்டவன்.
மகேந்திரன் மாமல்லபுரத்தில் செய்தது என்ன?
நாடகத்துறையில் மகேந்திரன் செய்தது என்ன?
என்ன என்ன என்ன?
விரைவில்..

இதற்கு அடுத்தது என்ன சார்?? திருநாவுக்கரசர் தான் வராரு??
LikeLike
Dear Sir,
I am doing research on Tamil vettuvar.so kindly could you send the below mentioned Kannada inscription number to my mail id?
“கன்னடக் கல்வெட்டு, “மகேந்திரனது சேனைத் தலைவனான வேடராசனுடன் போர்செய்த சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்யாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான்” என்று கூறுகிறது. “
LikeLike