Related image
என்னை எனக்கே பிடிக்கவில்லை
     எதையும் ஒழுங்காய் முடிக்கவில்லை
முன்னை நினைவும் மறையவில்லை
     மூண்ட வருத்தம் குறையவில்லை
தன்னை மறந்தே உறங்கிடவும்
     சற்றே சுமையும் இறங்கிடவும்
இன்னும் வரம்நீ தரவில்லை
     இறைவா மனமேன் வரவில்லை?
நூலைப் புரட்டி இலக்கியத்தின்
     நுட்பச் சுவையை அறியவில்லை
ஆலைக் கரும்பாம் அமுதஇசை
     அளிக்கும் இன்பம் தெரியவில்லை
காலை வானில் கதிரெழுதும்
     கவிதை அழகு புரியவில்லை
வேலை, வேலை, வேலையென
     விரைந்த காலம் திரும்பவில்லை.மழலைக் குரலில்  துளிர்தேனை
     மாந்தக் காதைத் திறக்கவில்லை
குழலைக் குயிலும் இசைக்கையிலே
     குளிர்ந்து நெஞ்சம் பறக்கவில்லை
விழலைப் பயிராய்ப் பார்த்திட்டேன்
     வீணாய்ச் செருக்கைச் சேர்த்திட்டேன்
நிழலைத் தேடி அலைந்திட்டேன்
      நிலைத்த உண்மை களைந்திட்டேன். 

ஆடல், பாடல்,  அருங்கலைகள்,
     அறிவைக் கடந்து  ஞானத்தைத்
தேடல், தெளிதல் இவையெல்லாம்
       சிறிதும் அறிய விழையவில்லை.
பீடு    யர்ந்த   பண்பாட்டின்
     பெருமை, அருமை, தொன்மையெலாம்
கூடும்   மூப்பும்  நோயதுவும்
     கூறும்  முன்னே விளங்கவில்லை
      
       
கிண்ணம்  நிரம்ப   நீரிருக்கக்
     கேணி  சென்றேன் நீரிறைக்க.
எண்ணும் எழுத்தும் கற்றென்ன?
     எண்ணம் அறியக் கற்கவில்லை.
கண்ணும், காதும்  இருந்தென்ன?
     காண, கேட்கப் பழகவில்லை..
மண்ணில் மற்றோர் உயிரென்றே
     வாழ்ந்து மறைந்தே போவேனோ?