Related image

வயதும் நினைவிலில்லை

காரணமும் நினைவிலில்லை

அன்றொரு நாளில்

அப்பாவிடம் அடிவாங்கி

கால் சட்டை நனைத்தது

மூன்றாம் வகுப்பு ஆசிரியருக்குப் பயந்து

இரண்டாம் வகுப்பிலேயே

இரண்டாண்டுகள் இருக்க நினைத்தது

ஊர்ப்புற நூலகத்தில்

சிறுவர் மலர் புத்தகத்தைத்

தெரியாமல் திருடியது

துவக்கப் பள்ளி நாட்களிலே

தோழி அவள் விரல்கள்

என் உள்ளங்கை வருடியது

தும்பி பிடித்து நூலில் கட்டி

கல்தூக்க வைத்து மகிழ்ந்து சிரித்தது

வாலறுந்து அது இறந்து போக

தனியாய்ச் சென்று தேம்பி அழுதது

கடவுளுக்கு நீர் தர மறுத்ததாய்

ஓணான் மீது குற்றம் சாட்டி

அதற்கு தூக்கு தண்டனை

நிறைவேற்றிய சிறுவர் கூட்டத்தில்

நானும் இருந்தது

பள்ளி முடிந்து வீட்டிற்கு

வேகமாய் ஓடும்போது

சுவரில் மோதி முன்பற்கள்

உடைந்து விழுந்தது

ஆடை அவிழ்ப்பு நாடகமொன்றை

அறியாமல் நான் காணநேர்ந்தது

அறியாத வயதில் எனக்கு

அவள் மேல் காதல் வந்தது

அம்மன் கோவில் திருவிழாவில்

அவளை முதலாய்த் தாவணியில் ரசித்தது

அன்றொரு நாளில் அவசரமாய்

அவளிடம் ஒருமுறை முத்தம் ருசித்தது

இப்படியாய் இன்னும்

எத்தனையோ நிகழ்வுகள்

இன்றுவரை என் தினசரிக் குறிப்பேட்டில்

எழுதப்படாத குறிப்புகளாக… ….