Image result for அம்மா தரும் பூரி

அம்மா கை உணவு (16)

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
5. ரசமாயம் – ஜூலை 2018
6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019

16. பூரி ப்ரேயர் !

அதி காலைப் பொழுதினிலே அடிவயிறு பேசும் –
அன்றைக்கு எது வேண்டும் என்றழகாய் சொல்லும் !
அம்மா என்ற தெய்வம் எந்தன் முகம் பார்ப்பாள் –
இன்று என்ன தேவை என்று சொல்லாமலே செய்வாள் !

ஒரு சில பொழுதுகள் அமைதியாக விடியும் –
இட்டிலியும் சட்டினியும் போதும் என்று தோன்றும் !
வேறு சில நாட்களிலே நா நமநமவென நீளும் –
முறுகலான தோசை இரண்டு தின்றால்தான் தீரும் !

பூரிக்கென்றே சில நாட்கள் பூரித்தே நிற்கும் ;
புருபுருவென உடலெல்லாம் புதிய நாதம் கேட்கும் !
பரபரவென பூரியினை உடலும் மனமும் தேடும் ;
கேட்டது கிடைத்தால்தான் ஆசைத்தீயும் அடங்கும் !

உருளை இரண்டு போதும் அவை உறுபசியைப் போக்கும் ;
அம்மா கையை வைத்தால் அதில் மணமும் ருசியும் சேரும் !
வெங்காயம் இல்லாமலே விறுவிறுவென்று இருக்கும் ;
இருந்து விட்டால் சேர்த்திடலாம் – ருசியும் மணமும் கூடும் !

மசால் மசால் என்று சுவைகள் பல இருந்திடினும் –
அம்மா செய்யும் மசாலா தான் பூரி கேட்டு வாங்கும் !
அப்பப்பா என்ன சுவை – நான் என்னவென்று சொல்வேன் !
ஒன்றிரெண்டு, மூன்று பூரி கணக்கில்லாமல் தின்பேன் !

கரகரவென பூரியென்றால் சிறு வயதில் பிடிக்கும் !
மெத்தென்ற பூரி சிலர் நாவில் மெல்லக் கரையும் !
பார்த்தாலே பூரிக்கும் எந்தன் மனம் என்றும் –
புசுபுசுவென பூரி பொங்க மனமும் கூட பொங்கும் !

எனக்குப் பிடித்த பூரி எந்தன் அம்மாவுக்கும் பிடிக்கும் –
என்றைக்கும் அவள் வளர்ந்த சிறு பிள்ளை போல் தான் !
என்ன வேண்டும் என்றாலே பூரி என்று சொல்வாள் –
ரசித்து ருசித்து உண்பாள் ; ஆஹா என்றே சொல்வாள் !

பூரி பூரி பூரி இன்று பூரி எனக்கு வேண்டும் !
எண்ணெய்ச் சட்டி ஏற்று – அதில் இரண்டு பூரி போடு !
மசாலா வாசம் வந்து என் மூக்கைத் துளைக்க வேண்டும் !
மூக்குப் பிடிக்க உண்டு எந்தன் மூளை மறக்க வேண்டும் !

***********************************************

ஜி.பி. சதுர்புஜன்
E Mail: kvprgirija@gmail.com
Ph: 98400 96329