Image result for வதக்கல்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
  2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
  3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
  4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
  5. ரசமாயம் – ஜூலை 2018
  6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
  7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
  8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
  9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
  10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
  11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
  12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
  13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
  14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
  15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
  16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
  17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
  18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019

 

வதக்கல் வாழ்த்து !

 

எளிய வதக்கல் கறியே !

உன் எளிமையை என்றும் இகழேன் நான் !

எத்தனை வகை கறி உண்டாலும்

உன் சுவையை எதிலும் அறியேன் நான் !

 

உருளை வெங்காயம் வதக்கி வைத்தால்

நம் உள்ளம் முழுதாய் வசப்படுமே !

வாழையை பொடியாய் வதக்கி வைத்தால்

நம் வாயில் உமிழ் நீர் பெருகிடுமே !

 

வெண்டையை அழகாய் வதக்கி வைத்தால்

வெடுக்கென்று அதனை ருசித்திடுவோம் !

கத்திரிக்காயை வதக்கி வைத்தால்

கதி மோட்சம் நமக்கு கிட்டிடுமே !

 

கொத்தவரைக்காயை வதக்கி வைத்தால்

அதை ரசித்து ருசித்து சாப்பிடுவோம் !

அவரைக்காயை வதக்கி வைத்தால்

அனுபவித்து நாம் சுவைத்திடலாம் !

 

பீன்ஸ் பொரியல் என்றால் கூட

போதுமென்று நாம் சொல்வதில்லை !

பீட்ரூட்டைக் கூட நாம் விடுவதில்லை –

எதைக் கொடுத்தாலும் கறி சமைத்திடுவோம் !

 

 

தேங்காய் இன்றி வெறுமனே செய்தால்

சாத்வீகமாக ஒரு வதக்கல் !

தேங்காய் சேர்த்து விறுவிறுப்பாக

ரஜோ குணம் காட்டும் ஒரு வதக்கல் !

 

கண்டம் விட்டு கண்டம் தாவியும்

காண்போமா இச்சுவை தரணியிலே ?

அன்னை கைமணம் இருந்து விட்டால்

ஆண்டவனே நீயும் எனக்கெதற்கு ?