” என்னங்க, கிருஷ்ண ஜயந்தியும் அதுவுமா கிருஷ்ணருக்கும் நம்ப குட்டிப்பையனுக்கும்   சீடை,  முறுக்கு எதுவுமே இல்லையே.. ? “

காலையில் சுமதி வருத்தப்பட்டாள்.

 ஒப்பனைக் கலைஞனான  ஸ்ரீதர்  தொழில் நலிந்ததால், ஏதேதோ செய்து  பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருந்தான்.  

இப்போ   கோவிட் காரணமாக ரொம்பவே  பண நெருக்கடி.

வாசலில்  சோகமாய் உட்கார்ந்து இருந்தவன், இரண்டு பேர் பேசிக் கொண்டு போவதை கேட்டான்.

திடீரென்று  மேக்கப்புடன்   விறுவிறு என்று  எங்கோ போனான். 

அன்று  காலை அடையாறு ஆனந்த பவன் கடைக்குள் சீடை முறுக்கு பலகாரங்கள் வைத்துள்ள பகுதியில் அழகான கிருஷ்ணர் உட்கார்ந்து இருந்தார்.

அவரைப் பார்க்க வந்த ஏகப்பட்ட கூட்டம், முறுக்கு சீடை பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு நடந்தன.

கடை சூப்பர்வைசர் ,  வேஷம் போட்ட கிருஷ்ணரிடம் சொன்னார் ” ஸ்ரீதர் கவலைப் படாதீங்க , உங்க வீட்டுக்கு முறுக்கு, சீடை , இனிப்பு  எல்லாம் கொடுத்து அனுப்பி விட்டோம்.

 ராத்திரி கடை சாத்தியதும் உங்களுக்கான பணத்தையும் வாங்கிக்கொண்டு நீங்கள் வீட்டுக்கு போகலாம்”

 குறிப்பு: 

நான் Thursday, 25 August, Krishna Janmashtami 2016 க்கு முதல் நாளன்று வேளச்சேரி அடையாறு ஆனந்த பவனில் இந்த  வித்யாசமான  போட்டோ எடுத்தேன்.

அதை வைத்து இந்த கதை எழுதி இருக்கிறேன்.