ஒட்டுக் கேட்டது

இது நடந்தது அமெரிக்காவில் வசிக்கும் என் மகளைப் பார்க்க நியூ ஜெர்சி சென்று இருந்த பொழுது.
இன்று நான் அமர்ந்து இருந்த இடத்தில் ஒரு தமிழ்பேசும் தம்பதியர்.
பகலில் பக்கம் பார்த்து பேசு என பெரியவர்கள் யாரும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வில்லை போலும்.கண்களையும் வாயையும் மூடுவதற்கு ‘ஷட்டர்’கள் கொடுத்த இறைவன் காதுகளுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.
எனவே ஒட்டுக்கேட்டது என் தவறு இல்லை, நான்கேட்கும்படி பேசியது அவர்கள் தவறு. கீழே அவர்களது உறையாடல்:
கணவன்: ஏண்டா, அவனுக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டியா?
மனைவி: கிடைக்கலீங்க. செப்டம்பர் முதல் வாரம்தான் ஒரு ஸ்லாட் இருக்காம்.
கணவன்: ஆகஸ்டோட ஒரு வருஷம முடிஞ்சிடுமே. வேறு நல்ல இடம் இல்லையா.
மனைவி: வேற எங்க போனாலும் அவனுக்கு ஒத்துக்காதுங்க. ஏப்ரல் மாதம் போனோமே அங்க வேண்டும் என்றால் போகலாங்க. அங்க general checkup செய்வார்கள்.ஆனால் எண்பது மைல் போகனும் காசும் இருநூரு டாலர் வாங்கிடுவாங்க.
கணவன்: இந்த விஷயத்தில் காசு எல்லாம் பார்க்க முடியாது. அடுத்த வாரம் ஸ்லாட் கிடைக்குமான்னு பாரு. நான் லீவு போட்டு விடுகிறேன்.
மனைவி: ஏங்க போன வாரம், எங்க அம்மாவை கோயிலுக்கு கூட்டி போக லீவு போட முடியாதுன்னு சொன்னீங்க.
கணவன்: கோவிலுக்கு ஞாயிறு அன்றுகூடப் போகலாம். இவனை அப்பாயின்ட்மென்ட் கிடைக்கிறப்பதானே கூட்டிக்கிட்டு போக முடியும். அவன் வருகிறான். மூஞ்சியை தூக்கி வச்சுகிட்டு இருக்காதே. Mood out ஆகி விடுவான்.
நானும் கஷ்டப்பட்டு திரும்பி அந்த பாக்கியசாலி பையனை பார்த்தேன்.
வந்து நின்றது ஒரு அடி உயரத்தில் ஒரு நாய்.
