1. இதழ் இசையின் ரசிகன்
அவள் உதட்டசவையும்
முறுவலையும் மட்டும்
ரசித்துக் கொண்டிருந்தான்,
ஒரு பாட்டின்
சொற்களை ஒதுக்கி விட்டு
இசையை மட்டும் ருசிக்கும்
ரசிகனாய் அவன்!
அவள் பக்கமாய் நின்ற பூஞ்செடியின்
இரு பூக்கள்
அவள் கன்னங்களை ஒட்டிப் பிரிந்தன,
அவள் இதழ்கள் ஒட்டிப் பிரிவதை
ஓரப் பார்வையால் வாங்கிக் கொண்ட
காற்றும்
அவள் சொற்களின்
புது மணத்தைக் கவ்வ
அவள் உதடுகசை ஒற்றி ஒற்றி
சுற்றியது!
அவள் கூந்தலின் சில இழைகள்
காற்றிலேயே எழுந்து
காற்றுக்கே கருப்புக் கொடி
காட்டியது!
ரசித்து நடந்த கதிரவன்
மேக மேட்டில் கால் தடுக்கி
மேற்கே சாய்ந்தான்
அவளைச் சுற்றி இத்தனை நடந்தும்
அவன் பார்வை மட்டும்
அவள் இதழ் அசைவிலேயே
இலயித்து நின்றது
இன்னும்!
– சின்மயசுந்தரன்
–
சகுந்தலைப் பட்சி
*
என் சிறுபிணக்கின் இடைவெளி
உன் வழித்தடத்தின் பெருவெளியாக…
அன்பிற்கும் காலவதியாதல் உண்டா
நேசத்தின் நிறமிழத்தல் இயல்பானதொன்றா?
எத்தனை முறை எப்படி அழித்தாலும்
பிடிவாதமாய் எஞ்சிக் கிடக்கும்
இந்தக் காதலை வைத்துக் கொண்டு
என்ன செய்வது?
நிம்மதிக்கூடு நிவையிழந்து குலையும் போது
இறுக்கப் பற்றிக் கொள்ளல் தானே
அன்பு செய்யும் வம்புத்தனம்
துஷ்யந்த மறதி புரியாது
ஏங்கித் தவிக்கிறது சகுந்தலைப் பட்சி
நேசக் காய்ச்சலின் அக்னிக் குஞ்சு
பெருநெருப்பாக பரவும் முன்
இலேசாக தலைவருடி உனதிருப்பை உணர்த்தேன்
நான் நானாகி விடுவேன்
– – அன்புச்செல்வி சுப்பராஜூ
இளம் வயது காதல் மனக்கிளர்ச்சியின் வெளிப்பாடு!
இருபாலர் வயதும் ஏற காதலின் தன்மை மாறுபடலாம்!
பருவமாற்றத்தில் வெம்பிப் பழுத்ததெல்லாம் ,
காமமேயற்றிக் காதல் என்று கூறுவதோ?
மனம் ஒன்றி ஏற்படும் நேசமே காதல் என்றாகும்!
மணமான தம்பதியர் வாழ்நாள் முழுவதும்
பிழை பொறுத்து வாழ்வதும் காதல்தான்!
உனக்காக நான் எனக்காக நீ என்ற உணர்வொன்றே காதல்!
பெரியோர் பார்த்து மணம் முடிக்கும் வாழ்வினிலும்,
தம்பதியர் உளம் ஒத்து வாழ்வதும் காதல்!
சொந்தத்தில் மாமன் மகள் கதவுடுக்கில் பாதிமுகம் காட்டுவதும்,
அதில் சொக்கி மணமுடித்தால்,
அதில் உள்ள “கிக்கே” உயிர் காதல்!!
– மாரியப்பன்
பிணம் தழுவும் பிறிதொரு வாழ்க்கை…..
யானை கட்டிக்கிடக்கும் இடத்தில் யானையில்லை….
ஆயினும் முறக்காதுகள் ஆடும் நினைவுகள் அப்படியேஇருக்கிறது உள்மண்டபத்தில்.
உன்நினைவும் அப்படித்தான்…
காதலர் தினத்தில் மட்டும் நினைக்கும்படியான காதல் நமக்கில்லை.
இதுவரை சொல்லப்பட்ட கல்லறைக்காதல்களின்…
இலக்கியநிலைக்கு நமது ஒன்றும் குறைந்ததல்ல…
ஆயினும் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு…பிறிதொரு உடலைத் தழுவுகிறோம்
பிணங்களைப்போல.
– அனங்கன்
13.
என்னிதழில்
உன்னழகை
வாழ்த்தி
அரைக்கண்ணில்
உன்பாதம் உன் கொலுசு
முடிந்தவரை
உன் மோனாலிஸா
புன்னகையிலாழ்ந்து
முகம் தவிர
முக்காலும் மூடி
முடி தவழும்
இடையோடு
பின்னலிட்டு
உன்னருகில்
எனையிருத்தி
என் மனதைக்
கணையாக்கி
நான் செலுத்த
விழையுங்கால்
கூடவே வந்தவன்
சிறுவன் அகலமாய்
அம்மாவென்றழைத்தானே உன்னை
பாதகத்தீ!!
- – கணேஷ்ராம்
16 காதலி என்னைக் காதலி
உன்னைப் பார்க்கப் பார்வை
மட்டுமே போதாது
என்னில் பாதி நீயான
பின்னே நான் எப்படி…? 1
உன்னிதயம் சேர்த்து நான்
சுமப்பது தெரியாதா ?
அதனால் இதயமில்லாதவள்
நீயன்றோ புரிந்துகொள் அன்பே. 2
மறந்து போன மலர்ச்சி
மலருக்கு உண்டா?
உன்முகத்து மலர்ச்சி காணாமல்
போனது எப்படி? 3
காதல் ஒரு தொடக்கம்தான்
மனதோடு மனது இணைந்து
உடலோடு உடல் உராய்ந்து… ம்ம்
காதலி என்னைக் காதலி. 4
- சுரேஷ் ராஜகோபால்
18
16 வரிகள் வேண்டிடுமோ காதலுரைக்க
16 வரிகள் போதுமோ காதல் முடிக்க!
எச்சமின்றி, மிச்சமின்றி,”அச்சமே”யின்றி
எவ்வெதையும், அவ்வவ்வதுவே எடுத்துரைக்க,
இதமாய்ப் பகிர்ந்தளிக்க – இதோ
நான் உள்ளேனே! என்னுளே வா!
உள்ளது உள்ளபடி உனை உயிரோடணைக்க
என்றுரைக்க சிறு உயிர் வேண்டும்!
உரைத்த உயிர்தன்னுள் உனக்கெனவே ஊருமோர்
உறையா ஊருணி வேண்டும்!
சோகமெனில் சுகமாய் நீராட
“சுகமே”யெனில் தாகமாய்ப் பருகிட!
ஆணாயினென்ன ?
பெண்ணாயினென்ன?
“காதல்” ஒன்றேயன்றோ!
– இந்திரா ராமனாதான்
19 காதல் ”
காமனை எரித்தான் சிவன் எரிந்தாலும்
அரூபியாய் காமன் கணை தொடுத்தான்
கணவன் கட்டியவளை அணைத்தான் நாடிகள்
முறுக்கேற காமமாய் தன்னிட மிழுத்தான்
உடலும் மனதும் சரியில்லை யென்று அவள்
சொன்னவுடன் பதறி அவள் தோள் தொட்டு
மருத்துவரிடம் போவோம் வா கனிந்தே
சொன்னான் அவன் இதமான தடவலுடன்
சேர்த்து வைத்து மகிழ்வோம் நாளை
என்றாள் அவள் தோற்ற காமனையும்
வென்ற ஈசனையும் சேர்த்தே அடக்கி
வீறிட்டெழுந்த காமம் போரிட்டு மனதடக்கி
கடவுளாய் தேவனாய் சரி தூங்கும்மா என்றபடி
காதலாய்க் கனிந்து நோக்கி விலகிப் படுத்து
உணர்த்தினான் அவன் காதல் வெறும்
காமமல்ல காதல் காதல் … இதுதான் காதல்
- தமிழ்த்தேனீ
20
வானவில்லாக வா
மலையும் நதியும்
மனதைக் கிறங்கடிக்கிறது
மனங்குளிர நீ வருவாய் என
மனதாரக் காத்திருந்தேன்
வரவில்லை நீ…
உனைப் பற்றிய தகவலும் தான்…
நீ வராது போனதால்
மனம் அசையாமல் அப்படியே நின்றது
மரத்தில் கட்டிய ஊஞ்சல் போல…
வரவில்லை நீ வெகு நேரமாகியும்
வரவில்லை எந்தன் நெஞ்சில் மூச்சும்…
இறங்காமல் அங்கே காத்திருப்பேன்
இரக்கமிருந்தால் ஏறி வா அன்பே…
நிலவு தெரிகிறது..
நிலவை நிலவென்று சொல்ல மாட்டேன்…
உன் முகம் பார்த்த பிறகு…
வானவில்லாக வந்து போ வண்ணம் சேர்க்க…
எனையே நான் உயிரோடு பார்க்க…!!
- பால சாண்டில்யன்
21
காதல் அழியாது
கண்ணுக்குள் நிலவாய் நுழைந்து
கனவுக்குள் சிங்காரமாகத் திரிந்து
நெஞ்சினில் ஆசனமிட்டு அமர்ந்து
எஞ்சின எனது உயிரைப் பறித்தாய்
கண்ணில்லாக் கொடிய காலன்
உன்னைப் பிரித்துச் சிரித்தான்
என்னுயிர் உன்னிடம் சென்றதை
அவன் அறிந்திலை போலும்
உடலைப் பிரித்தால் என்ன
கடலில் ஓயாத அலைகளாக
காதலால் ஆத்மாக்கள் சேர்வதை
காலனும் பிரிக்க முடியுமோ!.
நீரோடையில் ஓடும்
கயல்களை விழியாக வைத்திருந்தாள்..
நாணநரம்பெடுத்து மேனியெங்கும்
தைத்திருந்தாள்…
மதுரப்புன்னகையை இதழ்மலரில்
தேக்கியிருந்தாள்…
மாயவன் மையல்கொண்டான்
ஜானகியின் வனப்பைக்கண்டு…
மோனம் கலைந்தடி மோகனம்
வந்ததடி…
காதல் எனும் யானைப்பசிக்கு
தன்னையே இட்டு நிரப்ப
ராமனும் அறிந்திருந்தான்
சீதையும் துணையிருந்தாள்…
கனமேறிய காண்டீபத்தை கணப்பொழுதில் முறித்தானடி…
இருவரும் பிழைத்திருக்க..
காதல் தன்னைத்தானே
எழுதிக் கொண்ட சாசனமே
இதிகாசமாய் ஆனதடி.
– புனித ஜோதி
24
போ
உண்மை!
உனது விலகல் என்னை வீழ்த்தி தான் விட்டது
அளவிலா துன்பம், சொல்லொணா சோர்வு
இனி எழ முடியாதென்பது போலொரு பிரமை…
ஓ! அது பிரமை தான்!
பாரேன்!
நான் எழுந்து விட்டேன் –
தஞ்சாவூர் செட்டியார் பொம்மை போல!
நீ போ, அப்பா!
உன் மனதாழத்தில் துளி குற்ற உணர்வு இருந்தால்
அதனையும் துடைத்தெறிந்து விட்டு
போ!
அளவற்ற காதலின்
மதிப்பை அறியாமலேயே
–
– வத்சலா

இருவரும் இதுவரை
சந்தித்ததில்லை
வாய்ப்புகள் இருந்தும் ஏனோ
அவளுக்கு அவனோ
அவனுக்கு அவளோ
அறிமுகம் கூட
செய்து கொள்ளவில்லை
காற்றில் பரவும்
செய்திகள் மூலம்
அவனது வீரம்
அவளது புலமை
இருவரின் மனதிலும்
செதுக்கிய சித்திரமாய்
படிந்து
என்றோ ஒரு நாள்
இணை சேர்வோம்
என நினைத்தது
இடையில் என்ன நடந்ததோ
தெரியவில்லை
இவளோ அவளது நாட்டில்
யாருக்கோ
பயந்து இறைவனிடம்
வேண்டி தன் உடலையே
முதுமையாக்கி
தடி ஊன்றி
“ஓளவையார்”
எனும் பட்டத்தை
வாங்கிகொண்டாளாம்
– தாமோதரன்
29 காத்திருக்கும் காதல்
————————————-
கருமேகம் நீர் பொழிந்தால் காணாமல் போய் விடும்
மலர்ந்த பூ காய்ந்து விட்டால் மணம் எங்கோ ஓடி விடும்
தயிராக ஆன பின்னால் பால் திரும்பி வாராது
தை மாதம் வந்து விட்டால் மார்கழியும் மறைந்து விடும்
சென்று போன தெல்லாமே சேராது இயற்கையிலே
விட்டுச் சென்றவுன்னைத் தொட்ட உணர்வு மட்டும்
விடாமல் அலைக்கழிக்கும் வேதனையை என்ன சொல்ல
ஓரக்கண் மலராலே உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால் இதயத்தைத் திருடிவிட்டு
தூரத்துப் மாம்பழமாய்த் தொங்குவதை விட்டுவிட்டு
நேரத்தில் விழுந்து விடு நெருக்கத்தில் வந்து விடு
காலத்தில் கனிந்தால் தான் காதலுக்கு மரியாதை
பாலுக்கு வயதானால் பழுதாகித் திரிந்து விடும்
பாலைக்கு நீராகப் பாய்ந்து வந்து விடு
ஏழைக்குச் சோறாக இன்பத்தைத் தந்து விடு
நாளைக்கு வந்துவிடு நம்பிக்கை தந்து விடு
– நாகேந்திரபாரதி
31 விதிகளும் காதலும்
#
ஓரு காதலின் தோல்வி
இன்னொரு காதலால்
தீர்க்கப்படும்.
காதலி கைப்பிடிக்க
கரணம் போடாதே
சரணம் சொல்லு
ஆதலினால் காதல் செய்வீர்!
மாற்று! ஆகாமல் போனாலும்
காதல் செய்வீர்!
மென்பொருள் அல்ல காதல்
வன்பொருள் கட்டமைப்பு
திடப்பொருட்கள் பரிசுகள் தேவை
வாழ்த்து அட்டை காசை உறிஞ்சும்!
– சிறகு ரவி
33
எங்கள் காதல் கூட
தெய்வீகக் காதல் தான்!
கோயில் வளாகத்தில்
தொடங்கியது !
கோயில் மண்டபத்தில்
தொடர்ந்தது!
கோயில் குளத்தில்
முடிந்தது !
ஆம் !
எங்கள் காதல் கூட
தெய்வீகக் காதல் தான்!
– தென்காசி கணேசன்
34
காதல் கீதம்
உன் கண்கள் என்னை பார்க்கும் போது, என் இதயம் பாடல் பாடுகிறது.
உன் புன்னகை என்னை தொடும் போது,
என் ஆன்மா மகிழ்ச்சியில் துள்ளுகிறது.
உன் குரல் என் காதுகளில் விழும் போது,
அது இனிமையான இசை போல ஓசை எழுப்புகிறது.
உன் கைகள் என் கைகளை பற்றும் போது,
என் உடல் வெப்பத்தில் சூடாகிறது.
நாம் ஒன்றாக இருக்கும் போது,
உலகம் மறைந்து போகிறது.
நாம் பேசும் போது, நேரம் பறக்கிறது
மழைத்துளிகளின் சத்தம்,
மனதில் ஓர் சங்கீதம்
உன் நினைவுகள் வந்து,
என்னை ஈர்க்கும் மந்திரம்
பூக்கள் மலர்ந்திட,
தேனீக்கள் வந்திட
உன் புன்னகை மலர்ந்திட,
என் நெஞ்சம் துள்ளிட
கண்மணியே,
உன் கண்கள் என் கனவுகளின் விண்மீன்கள்
உன் குரல் என் காதுகளில் ஓர் இன்ப ராகம்
உன் கைகள் என் கைகளை பற்றிட
என் உயிரே உன்னிடம் ஒன்றிட
காலம் மாறினாலும், காதல் மாறாது
– தயாளன்
37 காதல் சின்ன “ம்”!
நேர் நிகழ் சந்திப்பிலோ
தொலைபேசி சந்திப்பிலோ
சமயங்களில்
இந்த இரண்டுமே
வாய்த்து விடாத
மனவுணர் சந்திப்பிலோ
நிறைய உரையாடுவோம்
நா”ம்”!
அப்போதெல்லாமு”ம்”
நான் உணர்வுகளுள்
தடுமாறுவதை
எப்படியோ
நீ மிகத் துல்லியமாயறிந்து
உன் அசைவுகள்
நிகழ்த்துவாய்
ஓரெழுத்து சிறு மொழியுடன்..
இமைகளைத் தாழ்த்தி
இடது கன்ன கேசக்கற்றைகளை
வலக்கன்னம் மாற்றி
ஒரு “ம்”! என்பாய்.
இப்போது வலக்கன்னம்
திருப்பி
கூந்தல் தடை நீக்கி
ஒரு “ம்!” என்பாய்.
விழிகளை மூடியபடி
இரு முறை “ம்!” வரும்.
கழுத்தை இறக்கி
நெற்றி நடு காட்டி
ஒரு “ம்!” என்பாய்.
விழிகள் கிறங்கி
முக மென்மை நிரப்பி
இதழ்களைக் குவித்து
இதயத்திலிருந்து
ஒரு “ம்!” என்பாய்.
அடுப்பில் பொங்கும்
பாலின் மேல்
சிறு துளி
நீர் வீழ்ந்ததன்
கொதிப்படங்குவது போல்
உன் உணர்வு
முழுமையையும்
உன் சம்மத”ம்!”மிற்கு முன்
வரிசை மாறாமல்
ஒற்றி வைப்பேன்
உன்னுடனான என்
என் நிஜக் காதல்
முத்த “ம்” ஆக!
– ஆர்க்கே ராமநாதன்
39
எப்படி முடியும்?
காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்,
கண்ணோடு பேசும் கண்கள் கண்டதை எப்படிக் காணும்?
அறிவுரைகளைக் கேட்பதில்லை என்பார்கள்,
காதல்வேதம் ஒலிக்கையில் கடமுடஓசை எப்படிக் கேட்கும்?
கால்கள் தரையில் பதிவதில்லை என்பார்கள்,
காற்றில் மிதக்கும் கால்கள் தரையில் எப்படிப் பதியும்?
சரியாக உண்பதே இல்லை என்பார்கள்,
காதல் அமுதம் ஊறக் கடும்பசி எப்படித் தோன்றும்?
இந்த உலகிலேயே இருப்பதில்லை என்பார்கள்,
அவ்வுலகத்து அன்பில் திளைப்போர்
இவ்வுலகிருக்க எப்படி முடியும்?
காதலர்களை இவ்வுலகிற்கு இறக்க முயற்சிக்காதீர்…
பாவம்.. இறந்து போவார்கள்..! மானிடர்களே!
இடர் செய்யாதீர்கள்! மணம் செய்வியுங்கள்!
– துரை தனபாலன்
42
என்றும் காதல் –
திருமண நெரிசலில் கைவிரல் வியர்வையில்
மூன்று முடிச்சுக்குள் காதல் முகம் புதைத்துக் கொண்டது;
வெட்கத் திரைக்குள் மௌனம் காத்த
முதலிரவுக் கட்டிலில் அது முகவுரையானது;
ஆண்டுகள் ஓட அணைப்புகள் இடையே
பிள்ளை வந்தவுடன் காதல்
பின்னிருக்கைக்குத் தள்ளப்பட்டது;
அன்றாட தேவைக்குள் ஆயிரம் கனவுக்குள்
மன்றாட நின்றாட மணித்துளிகள் இடையே
ஏதோ ஓர் ஒற்றைப் பின்னிரவில்
மின்னலாய் நெளியும் காதல் கீற்று.
இன்று –
மறுபடி மாலை மஞ்சள் குங்குமம்
ஆயிரம் பிறை கண்ட அற்புத விழாவில்
நடுங்கும் கரத்துடன் விரல்கள் கோத்தேன்;
ஆரவாரமில்லாத முதுமைக் காதல்
அழகாக ஓர் ஆலாபனை செய்தது.
44
*அன்றில் பறவை*
அன்றில் பறவை ஆவோமா
அன்பில் கலந்து கரைவோமா
நமக்குள் இனி நடக்கும் போட்டிகள்
மூச்சின் வெப்பத்திலும் முத்த சத்தத்திலும்
நார்வே பகல் போல் நீளட்டுமே..
ஒரு போர்வைகுள்ளே போர்முரசாக
டெசிபல் தெறிக்க அலரட்டுமே..
பாலும் தேனும் கசக்கிறதே
உன் முத்தம் சுவைத்த பின்னாலே
பன்னீரும் மழையும் சுடுகிறதே
உன் வியர்வையில் நான் நனைந்த பின்னாலே
காகிதம் கூட இனிக்கிறதே உன் பெயரை எழுதி தின்னாலே
காந்தம் செயல் இழக்கிறதே உன் பார்வை அதில் பட்டாலே
படர்வோம் தொடர்வோம்
உச்சம் தொடுவோம் இணைந்தே இருவருமே
– சாய் கோவிந்தன்
45
போட்டி – பரிசு
வகுப்பறை மரத்தடி முன் நிறுத்தி
தைரியம் திரட்டி, தயக்கமுடன் கேட்டேன்.
ஒத்திகை போல உடன் பேசியபடி
மரத்தடி, நூலகம், பஸ்ஸ்டாண்ட் வரவேண்டும்.
காதல் கவிதைப் போட்டியில் நடித்துப் பார்த்தாவது
கவிதையெழுதியனுப்ப ஆசை என்றேன்.
தொடவே கூடாதெனச் சொல்லிச் சம்மதித்தாய்.
மேகத்தில் மிதந்து, நீயும் உன் வாசமும் உடன்வர
காதல் கவிதை அனுப்பினேன் போட்டிக்கு.
ஆறுதல் பரிசுமில்லையென மனம் தளர்ந்து
நூலகம் தஞ்சம்புக, ஆறுதலாய்த் தோள் தொட்டு
காதோரம் கிசுகிசுத்தாய், சினிமா போகலாமென.
திரையரங்கக் குளிரில் கையோடு கை கோர்த்து,
காதல் என்றாலே கவிதைதான் போட்டிப் பரிசில்லையெனில்
போகட்டுமென மிழற்றி மென்முத்தம் கையில் பதித்தாய்.
உடல்மனமெலாம் சிலிர்க்க இழந்தேனேனை இன்னொருமுறை
– மதுவந்தி
46 ஒளி, இருள்
குகை வாயிலில் நின்றேன்.
உள் நுழைகையில் சூழ்ந்த இருட்டிற்கு
கண்கள் பழகின இயல்பாக
வளைந்து நெளியும் பாதை
தடச் சுவடுகளில்லை எனக்கேயென
விரிந்த ஒன்றில் உட்புறக் கல் வரையில்
ஈச்சங்குலைகளும், தேன் கூடுகளும்
செவ்வொளி படர நின்றன. உட்குரல்
சொன்ன மாணிக்கம் முடிவில் என்ற அலை
எனை இழுத்துச் செல்ல மாதுளை முத்துக்களாய்
ஒளிர்ந்த அவள், காதோரம் சொன்னாள்
பாயும் ஒளியாய் இருட்டில் தவழ்ந்தாய்
உனைத் திருடிய பாவை விளக்காய் நான் மிளிர
இப்போது உனது இருட்கவிதையானேன்.
நீ ஒளியாய் அதன் வெளியாய்.
– பானுமதி
48
சந்திப்போமா?
மண்ணும் விண்ணும் மயங்கி முயங்கி
மகிழும் இடத்தில் சந்திப் போமா?
உண்ணும் நீரை உயரே மேகம்
ஒளிக்கும் இடத்தில் சந்திப் போமா?
கண்ணும் காணாக் கடலின் மற்றோர்
கரையின் ஓரம் சந்திப் போமா?
எண்ணம் கூட எட்டிப் பிடிக்க
இயலா இடத்தில் சந்திப் போமா?
துயிலில் துளிர்க்கும் கனவின் நிழலில்
சுழலும் சுகத்தில் சந்திப் போமா?
குயிலின் குரலில் குலவும் இனிய
குளிரின் குழைவில் சந்திப் போமா?
மயலின் நறவு வடியும் கவிதை
வரியின் வனப்பில் சந்திப் போமா?
உயிரில் உறையும் உணர்வில் உலவும்
உவப்பின் ஒளியில் சந்திப் போமா?
– தில்லை வேந்தன்
69 .
*லூசுப்பையன்*

ஐஸ்கிரீமை
உன் கையில் தரும்போது
முதன்முதலில் பட்ட
உன் விரலின் ஸ்பரிசம்
அன்றொருநாள்
பேருந்தில் முதலாய் நீ ஏறி
நான் தொடர நீ நீட்டிய ஈர கையின் மென்மை
சொல்லாமல் என் வீடு வந்து
பதறிய நான் வெற்றுடம்பில் சுற்றிய துண்டை கண்டு நீ சிரித்த கேலிச்சிரிப்பு
அன்று நீ சிலமணி நேரம் நகரவேயில்லை என்பதும் நினைவில்
மென் குரலில் காதருகில் வந்து
“பிறந்தநாளுக்கு எதுவேணா கேளு” என்கிறாய்.
எதை கேட்க சொல்கிறாய் எனவும் புரிகிறது.
எப்போதும்போல் வெட்கமாய் சிரிக்கிறேன்.
“லூசுப்பயலே…நான்தாண்டா நீ… என்ன வெட்கம்?”
என்ற உன் திட்டலையும் ரசித்தபடி.
- அப்பு சிவா


