42) கலிக்கம்ப நாயனார்
![]()
மலர்ச்சோலைகள் சூழ்ந்த பெண்ணாகடம் என்ற தொன்மையான ஊரில் வணிகர் குலத்தில் தோன்றியவர் கலிக்கம்பர்.
அவ்வூரில் தூங்கானை மாடத்தில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடிகளை வழிபட்டுத் தொண்டு புரியும் இயல்புடையவர்.
சிவனடியார்களுக்குச் சுவையான கறி, நெய், தயிர், தீம்பால், தேனை விட இனிமையான கனிகள் ஆகியவை கொண்டு அமுது செய்விக்கும் பணியை அன்புடன் செய்து வந்தார்.
ஒருநாள் வந்திருந்த அடியவர்கள் அமுது செய்யும் முன் முறைப்படி அவர்களது திருவடிகளைக் கழுவும் பணியில் ஈடுபட்டார்.
அவருடைய மனைவியார் உண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். பின்னர் அவர் செம்பில் நீர் கொண்டு வந்து விடக் கலிக்கம்பர் அடியார் திருவடிகளைக் கழுவலானார்.
அவர்களுள் ஓர் அடியார்.முன்பு கலிக்கம்பரின் இல்லத்தில் ஏவலராய் இருந்தவர். அவர் தம் ஏவலைச் செய்யாமல் விட்டுப் போனவர் ஆயிற்றே என்று அம்மையார் மனத்துள் நினக்கத் தண்ணீர் விடுவது தடைப்பட்டது.
அடியாராய் வந்திருக்கும் இவருடைய பழைய நிலையைத் தம் மனைவியார் எண்ணி நீர்வார்க்காது விட்டார் என்பதை அறிந்த கலிக்கம்பர், அவர் கையில் இருந்த செம்பினை வாங்கிக் கொண்டு, ஒரு வாளை எடுத்து அவரது கையை வெட்டி விட்டார்.
பிறகு, தாமே நீர் வார்த்து அடியவரின் கால்களை விளக்கினார்.
உணவு படைப்பதற்கு வேண்டுவன எல்லாம் தாமே செய்து, அசைவில்லாத மன உறுதியுடன் அத்தொண்டருக்கு அமுது
செய்வித்தார்.
இத்தகைய அளவற்ற பெருமை மிக்க தொண்டு செய்து வந்த கலிக்கம்பர், இறைவனின் திருவடி நிழலில் அடியாருடன் சேர்ந்திருக்கும் பேறு பெற்றார்.
“கை தடிந்த வரிசிலையான் கலிக்கம்பன்’
என்று திருத்தொண்டத் தொகை இவரைக் குறிப்பிடுகிறது.
கலிக்கம்ப நாயனார் வெண்பா
ஏவலராய் முன்பிருந்தார் இன்றடியார் என்றறிந்தும்,
மேவநீர் தாளில் விடாமனைக்கை – சீவிப்பின்
வேண்டுவன தாம்செய்து மேலாம் அமுதளித்தார்
ஆண்டவன்தாள் சேர்ந்தார் அறி.
********””*****””””
43) கலிய நாயனார்

தேருலவும் நெடிய வீதிகள் நிறைந்த பெருமையுடையது திருவொற்றியூர்.
இவ்வூர், திருப்பதிக இசை பயிலும் மண்டபங்களும் மடவார்கள் ஆடும் அரங்குகளும், விழாக்கள் மலிந்த வீதிகளும் , உணவுப் பொருள் குவிந்திருக்கும் திருமடங்களும் இருக்கும் சிறப்புடையது.
இத்தகைய பெருமையுடைய திருவொற்றியூரில், செக்கில் எண்ணெய் ஆட்டும் தொழில் செய்வோர் மரபில் தோன்றியவர் கலியனார்.
இவர், முக்கண் இறைவனுக்குத் தொண்டு செய்யும் நன்னெறியில் வாழ்ந்து வந்தார்.
பெரிய செல்வந்தரான கலிய நாயனார் திருவொற்றியூரில் உள்ள கோவிலின் உள்ளும், புறமும் அல்லும் பகலும் திருவிளக்கேற்றும் பணியை விரும்பிச் செய்து வந்தார்.
நாளடைவில் இவரது செல்வம் மறைந்து வறுமையுற்றார்.
மற்ற வணிகரிடம் எண்ணெய் வாங்கி விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தம் பணியைத் தொடர்ந்து வந்தார்.
பிறகு அதுவம் கிடைக்காமல் போனதும், தாமே செக்காடி அந்தக் கூலியைக் கொண்டு விளக்கேற்றினார்.
அந்தத் தொழிலும் இல்லாமல் போகத் தம் வீட்டை விற்றுத் திருவிளக்கேற்றி வந்தார்.தம் மனைவியாரை விற்க முற்பட்டார். அதுவும் நடவாமல் போனது.
இப்படி, எவ்வகையிலும் விளக்கேற்ற வழியில்லாமல் போனது.
தாம் வழக்கமாக விளக்கேற்றும்,” படம் பக்க நாதர்” கோயிலுக்குப் போனார். அகல் விளக்குகளை முறையாக அடுக்கித் திரியிட்டார்., எண்ணெய்க்கு ஈடாகத் தம் உடலில் உள்ள குருதியை அவற்றில் நிறைக்க எண்ணினார். கருவி கொண்டு தம் கழுத்தை அரிய முனைந்தார். அப்போது முக்கண் இறைவன் அவர் கையைப் பற்றித் தடுத்தருளினான்.
அவர்க்கு முன்பாகக் காளை ஊர்தியில் காட்சி கொடுக்க,அரிதலால் உண்டான புண் நீங்கியது. கைகளைக் கூப்பி வணங்கிய கலிய நாயனார்க்குச் சிவபுரியில் சிறப்பாக இருக்கும் பெரும் பேற்றினை இறைவன் வழங்கியருளினான்
,” தேவர்பிரான் திருவிளக்குச் செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார் ‘
என்று சேக்கிழார் இவரைப் போற்றுகிறார்.
கலிய நாயனார் வெண்பா
செக்குத் தொழிலில் சிறந்த கலியனார்
மிக்க வறுமைவந்து மீதூரத் – தக்கவிளக்(கு)
எண்ணெய்க்குத் தம்மிடற்றை ஈர்ந்தார் குருதிதர;
கண்ணுதலான் கைதடுத்தான் காத்து.
(ஈர்ந்தார்- அறுத்தார்)
**************”*****””””””
14) சத்தி நாயனார்
உழவர்கள், வயலில் விளைந்த தாமரை மலர்களைக் களை என்று கருதி அகற்ற, அம்மலர்கள் சொரிந்த தேனானது குளத்தை நிறைக்கும். இத்தகைய வளம் நிறைந்த, செங்கோல் செலுத்தும் சொழர்களின் காவிரி பாயும் சோழ நாட்டில் உள்ளது வரிஞ்சையூர்.
இவ்வூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் சத்தி நாயனார்.
இவர் சிவபெருமானின் திருவடிக்குத் தொண்டு செய்பவர்.
சிவபெருமானின் அடியவரை இகழ்ந்து பேசுபவரின் நாவை வலிந்து அரியும் சக்தி வாய்ந்தவர்.
சிவனடியார்க்குத் தீங்கு சொல்பவரின் நாவைத் “தண்டாயம்” என்னும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்து , அன்புடன ஓங்கும் திருத்தொண்டினைப் பன்னெடுங்காலம் செய்து வந்தார்.
அரிய திருப்பணியை, மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டரான சத்தி நாயனார் ,உலகம் உய்ய அழகிய மன்றத்தில் ஆடுபவனின் சேவடி நிழலைச்சேர்ந்தார்.
இவரது பணியை,
ஐய மின்றி அரிய திருப்பணி,’ என்று சேக்கிழார் பாடுகிறார்.
சத்தி நாயனார் வெண்பா
வளவர்வண் நாட்டு வரிஞ்சையூர் வாழ்ந்த
அளவிலா மாண்பின் அடியார்- உளம்நிறைந்த
பத்தியார், தீதுரைத்தார் பற்றியவர் நாவரியும்
சத்தியார் செந்நெறியைச் சாற்று.
(தொடரும்)
