ராஜகோபாலன் | எழுத்தாளர் ஜெயமோகன்

நவம்பர் 10 ஆம் தேதி குவிகம் அளவளாவலில் விஷ்ணுபுரம் நாவலைப் பற்றி திரு ஜா ராஜகோபாலன் அவர்கள் நிகழ்த்திய உரை மிகச் சிறப்பான ஒன்று.

77  நண்பர்கள் இதில் கலந்து கொண்டது மிகவும் பெருமை தருகின்றது. 

விஷ்ணுபுரம் நாவலை 45 நிமிடங்களில் சொல்வது என்பது இயலாத காரியம். ஆனால் அதன் அறிமுகத்தை -அதை படிக்கவேண்டிய அவசியத்தை – அந்த நாவல் காட்டும் தர்க்கப் பாதையை – அந்த நாவல் தமிழ் இலக்கிய மரபில் இன்று நிற்கும் இடத்தை – அடைந்த உயரத்தை  – அதன் உன்னதத்தை நேர்த்தியாக  தெளிவாக அவர் கூறிய பாங்கு மிகவும் போற்றுதலுக்குறியது.   

நிகழ்ச்சியைக் காணத்  தவற விட்ட நண்பர்களுக்காக அதன் காணொளி இங்கே தரப்பட்டுள்ளது. கேட்டு ரசிக்கவும்.  

 

குவிகம் ரசிகர்களுக்காக விஷ்ணுபுரம் நாவலின் சுருக்கத்தை இணையதளத்தில் விசு என்பவர் ‘விஷ்ணுபுரம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் 2012 இல் எழுதிய கட்டுரையிலிருந்து  தந்திருக்கிறோம்.

விசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.  (https://vishnupuram.com/tag/விசு/)

 

விஷ்ணுபுரத்தின் ‘கதை’ பற்றி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், சிறுகுறிப்பு வரைக, என்று பரிட்சையில் கேள்விகேட்டால், கீழ்கண்டவாறு எழுதுவேன். (விஷ்ணுபுர நாவல் மூன்று பகுதிகளாக ஆனது.).

 

விஷ்ணு யுகத்திற்கு ஒருமுறை புரண்டு படுப்பார் என்பது ஐதீகம். தென்னாட்டின் தென்கோடியில் உள்ள ஊர் விஷ்ணுபுரம். காலாகாலமாக, விஷ்ணுபுரத்தை  நோக்கி தாந்திரீகர், வைதீகர், சமணர், பௌத்தர், காளாமுகர், வேதாந்திகள் என எல்லா மரபினரும் ஞானத்தைத் தேடி வந்தவன்னம் உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்குமுன் தென்னாட்டில் நடந்த ஞான விவாத சபையில், மற்ற மரபுகளை வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக வைதீக மரபை நிலைநாட்டியவர், வடநாட்டினரான அக்னிதத்தர். நான்காம் நூற்றாண்டில், அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதத்தில் வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்தத்தை நிலைநாட்டியவர் அஜிதர். பௌத்தத்திலிருந்து சமணம். பின்பு மீண்டும் வைதீகம். விஷ்ணுபுரத்தின் சொல் எதுவோ, அதற்குக் கட்டுப்பட்டது, மதுரையை ஆளும் பாண்டியனின் கோல்.    

முதல் பாகம் : திருப்பாதம் 

நாவலுடைய முதல் பகுதியின் காலம், பக்திமரபு ஓங்கியிருந்த பத்தாம் நூற்றாண்டு. கதைக்களம், விஷ்ணுபுரத்தில் பண்ணிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஶ்ரீபாத திருவிழா. பத்தாம் நூற்றாண்டில், விஷ்ணுபுரத்தின் சொல்லாக இருக்கும் வைதீக மரபின் காவலராக இருப்பவர் சூர்யதத்தர். திருவிழாவின் ஒரு பகுதியாக கூடும் தர்க்க விவாத சபையில், தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றி, பெறும் பரிசில் மூலம், தன் வறுமை நீங்கும் என்ற கனவோடு,  தன் மனைவி, மக்களுடன் வரும் சங்கர்ஷணன், சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்டு, காவியக் கனவு கலைந்து, ஒரு விபத்தில் மகனைப் பறிகொடுத்து, கணிகையர் வீதியில், பத்மாட்சி எனும் கணிகையிடம், சென்று சேர்கிறான்.

விஷ்ணுபுரத்தில் உள்ள வைதீக குருகுலத்தைச் சேர்ந்த பிங்கலன் என்ற இளம் சீடன், வைதீகத்திலும், தன் குருகுலத்திலும் நம்பிக்கை இழந்து, குருகுலத்தை விட்டு வெளியேறி, சாருகேசி எனும் கணிகையிடம் தஞ்சமடைந்து, போகத்தின் எல்லைக்கும், ஞானத்தேடலின் எல்லைக்கும் இடையே முடிவின்றி அலைகழிக்கபடுகிறான்.

சங்கர்ஷனனின் மனைவியான லட்சுமி, மகனை இழந்த துக்கதிலிருந்து மீள, ஒரு பஜனைகோஷ்டியில் சேர்ந்து, பின்பு பிங்கலனில் தன் மகனை ‘கண்டடைந்து’, துக்கத்திலிருந்து மீள்கிறாள். சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்ட சங்கர்ஷணன், அதிகார பகடையாட்டத்தின் ஒரு பகுதியாக, சூர்யதத்தராலேயே ஞான சபையில் காவியம் அரங்கேற்ற அழைக்கப்படுகிறான். ஞான சபையை அவமதிக்க, பத்மாட்சி இல்லாமல் காவியம் அரங்கேறாது என்கிறான் சங்கர்ஷணன். கணிகையான அவளின் தூய்மையை சோதிக்க நடக்கும் அக்னிப்பரிட்சையில் ‘வெல்லும்’ பத்மாட்சியை காவிய தேவதையாக்கி, சிலை வைக்க உத்தரவிடுகிறார், விஷ்ணுபுரத்தில் ‘புதிதாக எதுவும் நிகழ்ந்துவிடாமல்’ பார்த்துக்கொள்ளும் சூர்யதத்தர். தன் காவியத்தை அரங்கேற்றியபின், லட்சுமியுடன் மீண்டும் இனைந்து, விஷ்ணுபுரத்தில் நடக்கும் கேலிக்கூத்துகளால் மனம் வெறுத்து, விஷ்ணுபுரத்தை விட்டுச் செல்கிறான் சங்கர்ஷணன். 

கணிகையர் குலத்தில் பிறந்த லலிதாங்கியிடம் காதல் வயப்படும் வாத்தியக்காரனான திருவடி, கணிகையர் வீதியில் அவளுக்காக காத்திருந்து, காத்திருந்து, பித்தேறி, தன்னிலை இழந்த நிலையில், திருவிழாவில் பங்கேற்க வந்த கிழ ஆழ்வார், குதிரைமீதேறி ‘வைகுந்தம்’ போய்ச்சேர்ந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, அவன் உறவினர்களால், திருவடி ஆழ்வாராக ஆக்கப்பட்டு, விஷ்ணுபுரத்தில் கைவிடப்பட்ட கடையனிலும் கடையர்களுக்கு ரட்சகனாகிறான். 

ஹரிதுங்கா மலையிலுள்ள செங்கழல் கொற்றவையின் ரூபமான, விஷ்ணுபுரத்தின் பத்தினித்தெய்வத்திடம் ‘உன் குலக் கொழுந்தாவாய்’ என்று ஆசிபெற்ற சித்திரை எனும் பதின்பருவச் சிறுமி, ஒரு மாயத் தருணத்தில், தீயினால் உண்ணப்பட்டு, தன் குலத்தின் தெய்வமாகிறாள்.

விஷ்ணுபுரத்தின் தலைமை அதிகாரியான நரசிங்கரிடம் இருந்து, சதி மூலம், பாண்டிய மன்னன் ஆதரவுடன், தலைமைப் பொறுப்பை அடைகிறான் காவலாலியான வில்லாளன். விஷ்ணுபுரத்தின் அடையாளமான விஷ்ணு கோவிலின் தலைமைச்சிற்பியான பிரசேனர், காளாமுகர்களால் உந்தப்பட்டு, விஷ்ணுபுரக் கோவிலை இடித்துவிட எண்ணி, ராஜகோபுரத்தின் மீது ஏறி, மனம் பேதலித்து, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார். 

இரண்டாம் பாகம்: உந்தி  

பத்தாம் நூற்றாண்டிலிருந்து, கதை நான்காம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. (நாவலின் இரண்டாம் பகுதி)

அப்போது, விஷ்ணுபுரத்தின் சொல்லாக, வைதீக மரபின் காவலராக இருப்பவர் பவதத்தர். இளம் பௌத்த பிக்குவான அஜிதனின் வாதத்திற்கான அறைகூவலை ஏற்று, பவதத்தர் விஷ்ணுபுர ஞான சபையை கூட்டுகிறார். பவதத்தர் தன் வாதத் திறமையால், சமணர்களையும், சைவர்களையும், திபேத்திய பௌத்தர்களையும் வெல்கிறார்.

பவதத்தரின் மருமகனாகிய விஷ்ணுதத்தன் என்ற பண்டிதன், தான் கற்ற ஞானமனைத்தையும் துறந்து, உடலெங்கும் சாம்பல் பூசி, பெருச்சாளித் தோலில் செய்த கௌபீனம் அனிந்து, சுடுகாட்டுச் சித்தனாகி விஷ்ணுபுர வீதிகளில் கூத்தாடுகிறான்.

சித்தனும் அவன் சீடனும் விவாதத்தில் பங்கேற்காமல், வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள்.

பவதத்தர், வேதத்தை மூல நூலாக ஏற்க மறுக்கும் அஜிதனிடன் தோல்வியுறுகிறார். அதிகாரத்தை விட மனமில்லாதவர்கள், பௌத்த மரபை விஷ்ணுபுரத்தின் சொல்லாக ஏற்க மறுத்து கலகம் செய்கிறார்கள். தாந்ரீக பௌத்தர்களின் துனையுடன், சந்திரகீர்த்தி எனும் வணிகன், கலகத்தை அடக்குகிறான்.

விஷ்ணுபுரத்தின் அதிகாரம் வைதீகர்களிடமிருந்து, வணிகர்களின் கைகளுக்குப் போகிறது. வாதத்தில் வென்றபின் அதிகாரத்திற்கான போட்டியை நினைத்தும், சித்தனை நினைத்தும் அஜிதன் துணுக்குறுகிறான். விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்த மரபு மாறியதே தவிர, வேறொன்றும் மாறவில்லை.

தன் குருவின் சொல்லை ஏற்று, பௌத்தமரபைக் கற்க,  நரோபா என்ற திபேத்திய பௌத்தன், அஜிதனின் கடைசிக் காலத்தில், விஷ்ணுபுரத்திற்கு வருகிறான். நரோபா, அஜிதரின் அறையில் நுழையும்போது, அவர் தனிமையில் மரணமடைகிறார். அஜிதரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்ற சங்ககீர்த்தியின் ஆணையை அறிந்து, பதறி, மனம் வெறுத்து, நரோபா விஷ்ணுபுரத்தை விட்டு விலகி ஓடுகிறான். 

மூன்றாம் பாகம்: மணிமுடி 

நாவலின் கடைசிப்பகுதி, கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. விஷ்ணுபுரத்தின் கோவில் இடிந்து, கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது.

நரோபாவின் திபேத்திய நூலிலிருந்து, விஷ்ணுபுரத்தை பற்றி அறிந்து, அதைத்தேடி வருகிறார் காசியைச்சேர்ந்த யோகவிரதர். பத்மாட்சி யட்சியும், கொன்றைவனத்தம்மனும் (சித்திரை), மகாபத்மபுராணமும் விஷ்ணுபுர மக்களின் வாழ்வில் கலந்துவிட்டிருக்கின்றன. எந்தப் புராணத்தை யார் இயற்றினார்கள் என்று பண்டிதர்கள் முரண்பட்டுக்கொள்கிறார்கள்.

வைதீக மரபின் காவலராக இருக்கும் ஆரியதத்தர் இறந்தபின் அவருடைய பைத்தியக்கார மகனைக்கு பட்டம் சூட்டுவதன்மூலம், விஷ்ணுபுர சர்வக்ஞப் பதவி ஒரு பைத்தியத்திடம் சென்று சேருகிறது.

திருவடி மடத்தின் குருமகா சன்னிதானம், தன் சீடனுடன் மதுரைக்குப் போய்விடுகிறார்.

சில நூற்றாண்டுகளுக்குமுன் விஷ்ணுபுரத்தின்மீது படையெடுத்து வந்த முகமதியர்களுடன் சேர்ந்து, விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த சூத்திரர்களின் ஒரு பிரிவினரும், ஹரிதுங்கா மலையிலுள்ள பழங்குடியினரும் விஷ்ணுபுரக் கோவிலை இடித்துவிடுகிறார்கள்.

ததாதகராகவும், விஷ்ணுவாகவும் அறியப்படும் விஷ்ணுபுரத்தின் மூலவிக்ரகம், தங்களுடைய பெருமூப்பனின் சிலை என்று நம்புகிறார்கள் பசுங்குன்றத்திலுள்ள (ஹரிதுங்கா) பழங்குடிகள்.

நாட்கள் செல்ல செல்ல, பிரளயத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. விஷ்ணுபுரத்தின் கோயிலைச் சுற்றி ஓடும் சோனா நதியில் மீன்கள் செத்துமிதக்கின்றன; எங்கிருந்தோ பறவைகள் வந்து கோவிலில் முட்டிச் சாகின்றன. பழங்குடிகளில் சிலர் மட்டும், குறத்தியான நீலி வழிகாட்ட, பிழைக்கிறார்கள். குறத்தியான நீலி பேருருவம் கொண்டு சோனாவில் பெருவெள்ளமாக மாறி விஷ்ணுபுரத்தை அழிக்கிறாள். பெருமூப்பன் புரண்டு படுக்கிறார். 

யுகம் முடிவுக்கு வந்தது. அடுத்த யுகம் தோன்றும்போது, விஷ்ணு மீண்டும் குழந்தையாக ஆலிலையில் மிதக்கிறார் என்று விஷ்ணுபுரக் கதையை சொல்லும் பாணன் பாடுகிறான்.