அடிமை வம்சம்
கோரி முகம்மது இந்தியாவில் ஒரு முஸ்லிம் ஆதிக்கத்தை ஏற்படுத்தினான். அதைத் தொடர்ந்து, அடிமை வம்சம், கில்ஜிகள், துக்ளக்குகள், சையதுகள், லோடிகள், மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டனர்.
அதில் இனம் விபரம் பின்வருமாறு:
முகம்மது பின் காசிம், சையதுகள் – அராபியர்கள்.
கஜினி, கோரி, அடிமை மன்னர்கள், துக்ளக் – துருக்கர்கள்.
லோடிகளும், சூர்கள் – ஆப்கானியர்கள்.
கில்ஜிகள் – ஆப்கானிய துருக்கர் கலப்புக் குலத்தினர்.
மொகலாயர்கள் à மங்கோலியர்கள்.
1150 –1210: இந்த நாட்களில் தெற்கே தமிழ்நாட்டில், சோழ சாம்ராஜ்யம் அழியத்தொடங்கியிருந்தது. மூன்றாம் இராஜராஜன் பாண்டியனிடம் தோற்றோடினான். பாண்டியர்களின் மறுமலர்ச்சி துவங்கிய காலம்.
வட இந்தியாவில். கோரியின் ஒரு அடிமையாக இருந்த குத்புதீன், அழகு குன்றியவனாக இருந்தாலும், ஆற்றலில் மிக்கவன்.
அவன் கதைச்சுருக்கம் இதோ:
துருக்கிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட குத்புதீன் ஐபெக், குழந்தையாக இருந்த போது அடிமையாக விற்கப்பட்டான். பாரசீகத்தில், ஒரு நீதிபதி இவனை விலைக்கு வாங்கினான். அங்கு இவன் வில்வித்தை, குதிரை ஏற்றம் போன்ற திறமைகளைக் கற்றான். காசுனியில், முகம்மது கோரியிடம் இவன் இறுதியாக விற்கப்பட்டான். அரசரின் குதிரை லாயத்தில் அதிகாரி என்ற நிலைக்கு அங்கு இவன் உயர்ந்தான். தன்னுடைய அடிமைகளுக்கு பரிசுகளை சுல்தான் வழங்கிய போது ஒரு முறை ஐபக் தன்னுடைய பங்கை சக பணியாளர்களுக்கு பிரித்து அளித்தான். இச்செயலால் மதிப்புணர்வு கொண்ட சுல்தான் இவனை உயர் நிலைக்கு உயர்த்தினான். கோரியின் வெற்றிக்கு பிறகு இவன் விடுதலை செய்யப்பட்டான். கோரி இரண்டாம் தரைன் வெற்றிக்குப் பிறகு, இந்திய நாட்டை குத்புதீன் ஐபெக்கிடம் ஒப்படைத்துவிட்டு தன் நாட்டுக்குச் சென்றான். குத்புதீன் ஐபெக் அந்த ராச்சியத்தை தன் வெற்றிகளால், விரிவு படுத்தினான். தன்னுடைய தலைநகரை லாகூரில் அமைத்தான்.
1206இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு இவன், டெல்லி சுல்தானகத்தை (1206–1526) நிறுவினான். சுல்தானகம் இந்தியாவை 1290 வரை ஆண்டது. குத்புதீன் ஐபக் குஜராத் மீது படையெடுத்த போது சாளுக்கிய இரண்டாம் பீமனின் தளபதியான சாத்வான் கொல்லப்பட்டான். மார்ச் 1206இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு, 25 சூன் 1206 அன்று அலுவல் பூர்வமாக இல்லாமல் அரியணைக்கு ஐபக் வந்தான். ஆனால், அதிகாரப்பூர்வ அங்கீகாரமானது மிகப் பிந்தைய காலமான 1208-1209இல் கிடைத்தது. டெல்லியில் குதுப்மினார் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தான்.
1210இல் லாகூரில் சோவ்கனை (குதிரை மீது அமர்ந்து விளையாடும் செண்டாட்டத்தின் ஒரு வகை) விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு குதிரையிலிருந்து இவன் கீழே விழுந்தான். சேணத்தின் முன்புறத்தில் இருக்கும் உருண்டையான பகுதி இவனது விலா எலும்புகளை கிழித்ததால் உடனடியாக இறந்தான்.
அனைத்து சம கால வரலாற்றாளர்களும் குத்புதீன் ஐபக்கை ஒரு விசுவாசமான, ஈகை குணம் கொண்ட, துணிச்சலான மற்றும் எளிமையான மனிதன் என்று புகழ்கின்றன. 17ஆம் நூற்றாண்டு வரை “இக்கால ஐபக்” என்ற சொற்றொடரானது ஈகைக் குணம் கொண்ட மக்களை குறிப்பிடுவதற்காக இருந்தது. குத்புதீன் ஐபக்கின் படையெடுப்புகள் பெருமளவில் மக்களை அடிமைகளாக்கியதை உள்ளடக்கியிருந்தது. புதுத்தகவல்: லாகூரின் அனார்கலி பசாரில் இருக்கும் குத்புதீன் ஐபக்கின் சமாதி, 1970இல் செப்பனிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
இல்த்துத்மிசு:
குத்புதீன் ஐபக்கிற்கு பிறகு கஜினி, முல்தான், வங்காளம் நாடுகளிலிருந்த கவர்னர்கள், சுதந்திரப் பிரகடனங்களை வெளியிட்டனர். அடிமை வம்சம் அழிந்து விடுமென்று தோன்றியது. இந்தச் சூழலில், ஐபக்கின் மகன் ஆராம் ஷா, லாகூரில் சுல்தானாக முடிசூட்டிக்கொண்டான்.
முன்னர், 1197இல் ஐபக், இல்த்துத்மிசு அன்ற அடிமையை விலைக்கு வாங்கி இருந்தான். இல்த்துத்மிசை அடுத்த ஆட்சியாளராக ஐபக் எண்ணினான். இல்த்துத்மிசை தனது மகன் என்றும் அழைத்து வந்தான். ஐபக், தன் மகளை இல்த்துத்மிசுவுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தான். சில துருக்கிய அதிகாரிகள் இராச்சியத்தைக் கைப்பற்ற வருமாறு இல்துத்மிசுவை அழைத்தனர். ஆராம் ஷா, இராணுவ சண்டையில் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். கிளர்ச்சி செய்த ஆளுநர்களை இல்த்துத்மிசு அடிபணிய வைத்தான். 1211ல் இல்த்துத்மிசை சுல்தானாகினான். இல்த்துமிசு, டெல்லி சுல்தானகம் சிதறாமல் காத்து நிறுவினான். கிழக்கே காசி வரை ஆட்சி பரந்தது. கஜினியை தாக்க வந்த இல்துசு என்ற பாரசீகமன்னனை இல்த்துத்மிசு தோற்கடித்தான்.
அதே நேரம், மங்கோலியாவில், ஒரு அசுரசக்தி உருவெடுத்தது. ஆசியா- ஐரோப்பாவும் அதைக்கண்டு நடுங்கின. அவர்கள் கொடியவர்கள், மனித உருவில் வந்த பிசாசுகள். (இதை அமீர்குஸ்ரு என்ற புலவர் வர்ணித்துள்ளான்). அதன் தலைவன் செங்கிஸ்கான். இந்தப்பேரைச் சொன்னாலே, ஆசியா-ஐரோப்பா நடுங்கியது. அவன் கொடுமை அவன் வீரத்தை நிகர்த்தது. பாரசீகம் வரை வாகை சூடி வந்த செங்கிஸ்கான், சிந்து நதியைக் கடந்து இந்தியா வராமலிருந்தது, இந்தியாவின் தவப்பயன் என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம் இந்தியாவின் ‘கொடிய வெயில்’ என்று ஒரு கூற்று உண்டு. வெயிலுக்கு இப்படி ஒரு பயன் பார்த்தீர்களா? இல்த்துமிசு செங்கிஸ்கானின் சினத்தை தூண்டும் வகையில் ஒன்றும் செய்யாமையால், தப்பினானாம்!
இல்த்துமிசுவின் வெற்றிகள்: 1225ல் வங்காளம், 1226ல் இரணஸ்தம்பபுரி (ரத்தம்போர்), 1232ல் குவாலியர், 1234ல் உஜ்ஜயினி. உஜ்ஜயினியிலிருந்த சிவலிங்கம் டில்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. 1231-1232ல் குதுப்மினாரைக் கட்டி முடித்தான். இறக்கும் முன்னர், தனது மகள் ரஜியாவே தனக்குப் பின் ஆட்சி செய்யத் தகுந்தவள் என்று கருத்துத் தெரிவித்திருந்தான். 1236ல் இல்த்துமிசு இறந்தான்.
ருக்நுதீன்: இல்த்துமிசுவின் எண்ணத்துக்கு எதிராக, ‘அடிமைப் பிரபுக்கள்’, இல்த்துமிசுவின் மகன் ருக்நுதீனை சுல்தானாக்கினர். ருக்நுதீன் மதுவின் வசப்பட்டு மயங்கிக் கிடந்தான். அவன் தாய் அரசியலைக் கவனித்து வந்தாள். வங்காளம், முல்தான், லாகூர், மற்றும் டில்லியில் கலகங்கள் வளர்ந்தன. ருக்நுதீன் கொல்லப்பட்டான். அவன் தாய் சிறையில் அடைக்கப்பட்டாள்.
ரஜியா: அறிவறிந்த மகள் ரஜியா 1236ல் சுல்தானானாள். அவள் திறமைசாலி. அனைத்துக் கலகங்களையும் ஒறுத்தாள். ஆண் உடை தரித்தாள். முஸ்லிம் பெண்களுக்குரிய முகமூடியைக் களைந்தாள். பெயரை, ‘சுல்தானா ரஜியா’ என்று மாற்றிக்கொண்டாள். அரண்மனையில் அதிகாரம் கொண்ட நாற்பது பேர் ஒன்று சேர்ந்து, (‘நாற்பதின்மர்’) ரஜியாவின் வீழ்ச்சிக்குத் திட்டமிட்டனர். பாடிண்டாவில் கவர்னராக இருந்த அல்தூனியா, ரஜியாவைச் சிறைப்பிடித்தான். எந்நிலையிலும் நெஞ்சம் தளராத ரஜியா, இந்த நிலையிலிருந்து தப்ப, அல்தூனியாவை மணக்க விரும்புவதாகத் தெரிவித்தாள். அல்தூனியாவும் ரஜியாவை மணம் செய்து கொண்டு, டில்லி நோக்கித் தன் படையைச் செலுத்தினான். 1240ல், டில்லிப் ‘பிரபுக்கள்’ இருவரையும் தோற்கடித்துக் கொன்றும் விட்டனர். திறமை படைத்தும், ரஜியாவின் வீழ்ச்சிக்குக் காரணம், ‘நாற்பதின்மர்’ செல்வாக்கு வளர்ந்ததேயாகும்.
பாஹ்ராம்: ரஜியாவுக்குப் பின், (1240-1242) பாஹ்ராம் சுல்தானானன். இவன், ‘நாற்பதின்மர்’களில் ஒருவனை, தக்க காரணங்களுக்காக் கொல்லுவித்ததால், சினமுற்ற நாற்பதின்மர்களால் கொலை செய்யப்பட்டான்.
மாஸூத்: ருக்நுதீனின் மகன் மாஸூத் சுல்தானானான்.நான்கு வருடம் ஆண்டான். நாட்டில் குழப்பம் பெருகியது. நாற்பதின்மர்கள் அவனைப் பட்டத்திலிருந்து இறக்கிச் சிறையிலிட்டனர்.
நசிருதீன் முகம்மது: 1246ல் சுல்தானானான். இவன் இல்த்துமிசுவின் மகன். ஆட்சிக்குப் பெருமை ஒன்றுமில்லை. ஒரே பெருமை பால்பன் என்ற முதலமைச்சர் அவனுக்கு இருந்தான். பால்பனின் மகளை நசிருதீன் மணந்திருந்தான். பால்பன் முதலமைச்சனாகவும், திவானாகவும், படைத்தலைவனாகவும், ஆட்சி புரிந்தான்.
பால்பன்:
சரித்திரப்படத்தில் ஒரு 2 மார்க் கேள்வி வரும். அடிமை வம்சத்தில் சிறந்த மன்னர் யார்? ‘பால்பன்’ என்று எழுதி இரண்டு மதிப்பெண்களை தட்டிச் சென்றோம். அந்த பால்பன், 1205 ல் பிறந்தான். முதலில், மங்கோலியர்களிடம் அடிமையாக இருந்தான். பாக்தாத் அடிமைச்சந்தையில் விற்கப்பட்டான். டெல்லியில், பகாவுதீன் அவனை விலைக்கு வாங்கினான். தண்ணீர் தூக்கியாக இருந்து படிப்படியாக உயர்ந்தான். 1266ல் பால்பன் சுல்தானானான். பால்பன் மங்கோலியரை இருமுறை வென்றான். கலகம் செய்பவர்களை அடக்கினான். கொள்ளைக்கூட்டங்களை ஒழித்தான். இந்த ‘நாற்பதின்மரை’ ஒழித்துக்கட்டினான். பால்பன் புகழ் பரந்தது. துவைதக் கோட்பாட்டின் ஸ்தாபகர் மத்வரை அன்போடு வரவேற்றான். நாடு பிடிக்கும் ஆசை இன்றி, இருந்த நாட்டை நன்கு ஆண்டான். அவனது மூத்தமகன் மகம்மது கானை மேற்கில் மங்கோலியர்களிடமிருந்து தாக்குதலைச் சமாளிக்க அனுப்பினான். இளையமகன் புக்ராகானை வங்காளத்துக்கு கவர்னராக அனுப்பினான்.
1285ல், மங்கோலியர்கள், முல்தானைத் தாக்க, மகம்மது கான் அவர்களைத் துரத்தி விட்டான். ஆனால், அந்தப்போர்க்களத்தில், அவன் உயிரிழந்தான். இது பால்பனுக்குப் பேரிடியாயிற்று. மனம் தளர்ந்த பால்பன், இளையமகன் புக்ராகானை டெல்லி சுல்தானாக நியமித்தான். அவனோ, தந்தைக்குத் தெரியாமல், வங்காளத்துக்கு சென்றுவிட, பால்பன் தனது மூத்தமகன் முகம்மதுகானின் மகன் கைகுஸ்ரூவை சுல்தானாக்கினான். 1286ல் பால்பன் காலமானான்.
கைகோபாத்: பிரபுக்கள், புக்ராகானின் மகன் கைகோபாத்தை 1286ல் சுல்தானாக்கினர். அவன் அதிகார ஆணவத்தால், தீயபழக்கங்ளைக் கொண்டு, அந்தப்புரமே கதியாக இருந்தான். மன்னன் எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி. அதிகாரிகளும் அதே பழக்கங்ளைக் கொண்டிருந்தனர். கைகோபாத் – கை கால் இழுத்து, கொடிய நோய்களுக்கும் ஆளானான். பிரபுக்கள், அவனைப் பட்டத்திலிருந்து நீக்கி விட்டு, அவனது மூன்று வயதுக் குழந்தையை சுல்தானாக்கினர். அடிமை ஆட்சி அழியத் துவங்கியது.
அடுத்து வருவது, இந்தியாவை ஒரு குலுக்கு குலுக்கியது. அந்தக்கதைகளை சரித்திரம் விரைவில் சொல்லும்.
