பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மனதை அடக்குவது, தியானம் செய்வது, யோக வாழ்க்கை நடத்துவது ஆகியவற்றைப் பற்றி விரிவாக போதிக்கிறார். அர்ஜுனனின் மனக்குழப்பத்தைப் போக்கும் விதமாக ஸ்ரீகிருஷ்ணர் மனஅமைதி மற்றும் தியானத்தின் மூலம் ஆன்மிக முன்னேற்றம் பெறும் வழியை விளக்குகிறார். இந்த அத்தியாயம் ஆத்ம சம்யம யோகம் அல்லது தியான யோகம் என்றே அழைக்கப்படுகிறது. தியானம் மற்றும் ஆத்ம சம்யமம் இரண்டும் மனத்தை ஒருநிலைப் படுத்தி தியானம் செய்வதையே குறிக்கும்.
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முக்கியமான கருத்தைச் சொல்கிறார். யோகி என்பவர் உலகத்தை விட்டு ஓடிப்போகும் ஒருவர் அல்ல; தனது கடமைகளைச் செய்து கொண்டே அதன் பலனைப் பற்றிய ஆசையை விடுபவர். அதாவது, கடமையைச் செய்ய வேண்டும்; ஆனால் அதன் பலனைப் பற்றிய பற்றை விட வேண்டும். இதை கர்மயோகத்தின் உயர்ந்த நிலை என்று கூறுவர்.
ஸ்ரீகிருஷ்ணர் இங்கு ஒரு மனிதனின் மனமே அவனுக்கு நண்பனாகவும் அல்லது பகைவனாகவும் இருக்க முடியும் என்று கூறுகிறார். ஒருவன் தனது மனதை கட்டுப்படுத்தினால், அந்த மனமே அவனை உயர்த்தும். ஆனால் மனம் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் அதே மனம் மனிதனைக் கீழே இழுத்து விடும். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஒரு மனிதனுக்கு எந்த ஆன்மீக வளர்ச்சியும் இருக்காது.
மனதின் இந்த திறன்களை வளர்க்க, வேதங்கள் தியானத்தை பரிந்துரைக்கின்றன. தியானம் என்பது மனதை ஒழுங்குபடுத்துவதற்கும் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆன்மீக வளர்ச்சி பெறுவதற்கும் ஒரு அற்புதமான பயிற்சியாகும். நாம் வளர்க்க விரும்பும் திறனை அடிப்படையாகக் கொண்டு, தியானத்தைப் பல வகைகளாக வகைப்படுத்தலாம். ஒவ்வொரு வகை தியானமும் ஒரு குறிப்பிட்ட வகை திறனை உருவாக்கும்.
- ஆத்ம தியானம் (ஆத்மாவில் மனதை நிலைநிறுத்துதல்): இது மிகவும் முக்கியமான தியான வகையாகக் கருதப்படுகிறது. இதனால் மனதை வெளிப்புற விஷயங்களில் இருந்து திரும்பப் பெறலாம். மனதை உள்மயமாக்கி ஆத்ம சிந்தனையில் மனதை நிலைநிறுத்த வேண்டும். இந்த தியானப் பயிற்சியானது மனிதன் தனது உண்மையான இயல்பை உணர உதவும்; “நான் உடல் அல்ல, ஆத்மா” என்ற உணர்வு மனத்திற்குள் வர வைக்கும். இதுவே ஆன்மிக முன்னேற்றத்திற்கு அடிப்படையாக நிற்கும்.
- ஏகாக்ர தியானம் (ஒருமுகத் தியானம்): இந்த தியானத்தினால் மனம் அலை பாயாமல் ஒரே எண்ணத்தில் நிலைத்து நிற்கும். ஸ்ரீ கிருஷ்ணர் மனதை கட்டுப்படுத்தி ஒரே இலக்கில் கவனம் செலுத்துவது ஒருமுகத் தியானத்திற்கு வழிவகுக்கும் என்கிறார். இந்த தியானம் செய்ய மூச்சில் கவனம் செலுத்தி, இறைவனின் உருவத்தை நினைத்தல் வேண்டும் மற்றும் குரு உபதேசிக்கும் மந்திரத்தை மனதில் கூறிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
- சமபாவ தியானம் (சமநிலை மனதுடன் தியானம்): இந்த தியானத்தினால் மனிதன் வெற்றி–தோல்வி, சுகம்–துக்கம், நண்பர்–பகைவர் என்ற எந்த பாகுபாடும் இன்றி எல்லோரிடமும் சமநிலை மனப்பான்மை கொண்டு இருக்க உதவும். இதையே ஸ்ரீகிருஷ்ணர் ஒரு உண்மையான யோகி
அனைத்து உயிர்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்றும், இதன் மூலம் மன அமைதி, கருணை, பகைமை இல்லாத நிலை உண்டாகும் என்றும் கூறுகிறார். - பக்தி தியானம் (இறைவனை நினைத்து தியானம்): இந்த வகை தியானத்தில மனதை இறைவனின் மீது நிலைநிறுத்தி அவன் மேல் பக்தியுடன் கண்களில்நீர் மல்க அவனைத் துதிக்க வேண்டும். இதனையே ஸ்ரீகிருஷ்ணர் “என்னை மனதில் நினைத்து பக்தியுடன் தியானம் செய்பவர் எல்லா யோகிகளிலும் உயர்ந்தவர்” என்கிறார். இந்த தியானத்தில் இறைவனின் நாமம், அவன் உருவம், மற்றும் அவனது குணங்களை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
- கட்டுப்பாடு தியானம் (மனத்தையும் இச்சைகளையும் கட்டுப்படுத்துதல்): இந்த தியானம் மனக் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த தியானத்தினால் ஆசைகளை கட்டுப்படுத்தி, உணர்வுகளை அடக்கி, மனதை அமைதியாக்கலாம். இதன் மூலம் மனம் சுத்தமாகும், சிந்தனை தெளிவாகும்.
- அமைதி தியானம் (ஆழமான மன அமைதி): இது தியானத்தின் இறுதி நிலையை அடைய வழி காட்டும். இந்த தியானத்தினால் மனம் முழுமையாக அமைதியாகும்; ஆசைகள் குறையும்; உள்ளார்ந்த ஆனந்தம் தோன்றும். இந்த நிலையை எய்திய ஒருவன் வெளிப்புற சந்தோஷத்தைத் தேட மாட்டான். உள்ளார்ந்த ஆனந்தத்தை அனுபவிப்பான்.
இந்த ஆறாம் அத்தியாயத்தில் மொத்தம் 47 ஸ்லோகங்கள் உள்ளன. இந்த அத்தியாயம் கர்மம் (செயல்), துறவு மற்றும் தியானம் ஆகியவற்றுக்கிடையிலான பரஸ்பர தொடர்பை விளக்குவதுடன் தொடங்குகிறது. 4 முதல் 17 வரை உள்ள ஸ்லோகங்கள், உடலை விழிப்புணர்வுடன் கட்டுப்படுத்துவது மற்றும் மனமும் புலன்களும் கட்டுப்பாட்டில் வருவதற்கு உதவும் சில நடைமுறைகளைப் பற்றி விளக்குகின்றன. 18 முதல் 32 வரை உள்ள ஸ்லோகங்கள், பிரம்மத்தை நோக்கிச் செல்லும் ஆன்மிகப் பாதையில் பயணிக்கும் தேடுபவர் (சாதகர்) அடையும் உள்மாற்றம் மற்றும் உள்ளார்ந்த சுத்திகரிப்பு பற்றி இந்த ஸ்லோகங்கள் விவரிக்கின்றன. 33 முதல் 47 வரை உள்ள ஸ்லோகங்கள், தியானப் பாதையில் ஏற்படும் தடைகள், அவற்றின் விளைவுகள், மேலும் அந்த தடைகளை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பதையும் விளக்குகின்றன. இந்த அத்தியாயம் முந்தைய அத்தியாயங்களில் விளக்கப்பட்ட கர்ம யோகம் மற்றும் துறவின் யோகம் ஆகியவற்றிற்கு ஒரு தொடர்ச்சியான விளக்கமாக அமைந்துள்ளது.
மனிதனுடைய ஐந்து புலன்கள் – பார்வை, மணம், தொடுதல், சுவை மற்றும் கேட்கும் திறன் – இவைகளை உறுதியான முயற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் உடலின் உள் கருவியாக உள்ள மனம் மிகவும் சுலபமாக கட்டுப்படுத்தப்படுவதில்லை; அதை அடக்குவது மிகவும் கடினமானது.
பொதுவாகக் காணப்படும் ஒரு முக்கியக் கொள்கை என்னவென்றால்:
வெளிப்புற புலன்களை விழிப்புணர்வுடன் கட்டுப்படுத்தினால், அது மெதுவாக மனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். இந்த உண்மையை இங்கு கிருஷ்ணர் விளக்குகிறார்.
கர்ம யோகம் மட்டும் தனித்து செயல்பட்டால், அது ஒரு வரையறுக்கப்பட்ட பலனையே தரும். அதாவது, சரியான மனப்பாங்குடன் செயல்களைச் செய்வதால் செயல்களின் சுத்திகரிப்பு (purification of actions) கிடைக்கும் என்பதை நாம் முன்பு பார்த்துள்ளோம். ஆனால், மனத்தில் இன்னும் விருப்பம் மற்றும் வெறுப்பு (likes and dislikes) என்ற இரட்டை உணர்வுகள் எழும் வாய்ப்பு உள்ளது. அதனால், கர்ம யோகம் தியானத்துடன் இணைக்கப்பட வேண்டும், அப்போதுதான் சிறந்த பலன் கிடைக்கும்.
இதற்கு பின்பு மூன்று நிலை கற்றல் முறையும் அவசியமாகும்:
- ஸ்ரவணம் (śravaṇam) – சாஸ்திரங்களை கேட்டு அறிதல் / படித்தல்
- மனனம் (mananam) – அதைப் பற்றி ஆழமாக சிந்தித்து ஆராய்தல்
- நிதித்யாசனம் (nididhyāsanam) – அதை வாழ்க்கையில் உணர்ந்து நடைமுறைப்படுத்துவது.
அதேபோல், செயல்களைத் துறந்து துறவு மேற்கொள்வது மட்டுமே ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்காது. இதனுடன், தியானம், சுயக் கட்டுப்பாடு, மேலும் வேத சாஸ்திர நூல்களைக் கற்றல், மற்றும் கற்றதை மீண்டும் சிந்தித்துப் பார்த்தல், மற்றும் ஆன்மிக உணர்வு ஆகியவற்றுடன் இணைந்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெறலாம்.
நாம் பொருட்களை விரும்பி, அவற்றைப் பெற முயல்வதற்கான காரணம் என்னவென்றால், நாம் அந்தப் பொருட்களுக்கு மதிப்பு கொடுத்து, அவற்றை அடைய விழைகிறோம். அல்லது பிறர் அவற்றை பெரிதாகப் புகழ்ந்து காட்டுவதால் அவை முக்கியமானவை என்று நினைக்கிறோம். இவ்வாறு பொருட்களை அதிகமாகப் புகழ்ந்து, அவற்றில் மதிப்பு இருப்பதாகக் கருதும் எண்ணத்தை விட்டுவிடுவதுதான் தியான யோகத்தின் முதல் படி. இங்கு ‘சங்கல்பம்’ (saṅkalpa) என்ற சொல் மிகவும் முக்கியமானது. அதன் பொருள், இயல்பாக நிலையற்றதும் தற்காலிகமானதும் ஆன ஒரு புலனின்ப பொருளுக்கு நாம் அதிக மதிப்பைச் சேர்த்துக் கொள்வது என்பதாகும். (6:4)
இதற்குப் பிறகு கிருஷ்ணர் ஒரு மிக முக்கியமான அறிவுரையை வழங்குகிறார்:
“உத்தரேத் ஆத்மனாத்மானம், நாத்மானம் அவசாதயேத்
ஆத்மைவ ஹி ஆத்மனோ பந்துஃ, ஆத்மைவ ரிபுராத்மனஃ.” (6:6)
இதன் பொருள்:
“ஒருவன் தன்னுடைய முயற்சியால் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்; தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
மனிதனுக்குத் தானே நண்பனாகவும் இருக்க முடியும்; தானே பகைவராகவும் இருக்க முடியும்.”
ஒரு மனிதனின் உயர்வும் வீழ்ச்சியும் அவனையே சார்ந்தது. அவன் தன்னையே தாழ்ந்து போக அனுமதிக்கக் கூடாது. இங்கு ‘ஆத்மன்’ (ātman) என்ற சொல் இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது:
- மனிதனுடைய உள் சுயம் (Self)
- உடல்–மனம் சேர்ந்து உருவாகும் அமைப்பு (body–mind complex)
இந்த உடல்–மனம் அமைப்பே மனிதனின் உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும் பயன்படும் ஒரே கருவியாகும். இதனை நன்றாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அது மனிதனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்கும். புலன் உறுப்புகள் திறந்திருக்கும் வாயில்கள். “அனுமதி இல்லாமல் அனுமதி இல்லை” என்று ஒரு பலகையை வைக்கவும். உங்கள் மனதைப் பொது கழிப்பறையாக மாற்றாதீர்கள்” என்று சுவாமி சின்மயானந்தா அழகாகச் சொல்லியுள்ளார்.
ஆறாம் அத்தியாயம் தியானம் சம்பந்தமாக ஐந்து முக்கிய விஷயங்களைக் கூறுகிறது. முதலாவது, தியானம் என்ற அனுபவத்திற்காக மனதைத் தயார் செய்து கொள்ளல்; இரண்டாவது, தியானம் செய்வதற்கு முன்னால் குறிப்பிட்ட விஷயங்களைத் தயார் செய்து வைத்தல்; மூன்றாவது, தியானம் செய்யும் முறை பற்றிக் கூறுகிறது; நான்காவது தியானத்தினால் ஏற்படும் பலன்கள்; ஐந்தாவது தியானத்திற்கு உண்டாகும் தடைகள் மற்றும் தீர்வுகள்.
இவற்றில் தியானத்திற்கான பொதுவான ஒழுக்க நெறிகள், நமது அன்றாட வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள் ஆகும். தியானம் செய்யும் போது:
- அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நிலையாக உட்கார வேண்டும்.
- உடல், தலை, கழுத்து நேராக இருக்க வேண்டும்.
- மனதை ஒரே இடத்தில் நிலைநிறுத்த வேண்டும்.
- அளவான உணவு, அளவான தூக்கம் வேண்டும்.
அதாவது அளவான வாழ்க்கை முறையே யோகத்திற்கு அடிப்படை. தியானத்தின் மூலம் மன அமைதி, உள்ளார்ந்த ஆனந்தம், சமநிலை மனப்பான்மை, ஆன்மிக முன்னேற்றம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பகுதி கூறுகிறது.
தியானம் செய்யும்போது மனம் அலைபாய்வது, கவனம் சிதறுவது, மனச்சோர்வு அல்லது சலிப்பு போன்ற தடைகள் பற்றியும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். அத்துடன் அவற்றை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும், பயிற்சி (abhyāsa) மற்றும் பற்றின்மை (vairāgya) மூலம் மனத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதையும் விளக்குகிறார்.
மன ஒழுக்கத்திற்காக மனதின் நான்கு அம்சங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
- மனம் சாந்தம் மற்றும் அமைதியை அனுபவிக்க வேண்டும். இப்போதெல்லாம் எல்லோரும் மன அழுத்தமான வாழ்க்கை மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை பற்றி நிறைய பேசுகிறோம். நமது இன்றைய வாழ்க்கையில் நிறைய மன அழுத்தம் உள்ளது. ஒரு நிதானமான மனம் மட்டுமே வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும், அது ஆன்மீகமாகவோ அல்லது பொருள் சாதனைகளாகவோ இருக்கலாம். எனவே மனம் ஓய்வெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
- செறிவு: மனம் தான் செய்யும் செயலில் கவனம் செலுத்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
- உடன்படு மற்றும் ஒத்துப்போதல்: படைப்பில் உள்ள அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மனம் விரிவடைய வேண்டும்.
- நெறிமுறை: மதிப்புகளை மேம்படுத்துதல்.
மனதின் இந்த திறன்கள் அல்லது துறைகளை வளர்க்க, வேதங்கள் தியானத்தை பரிந்துரைக்கின்றன, உபாசனம் என்பது மனதை ஒழுங்குபடுத்தி இந்தத் தகுதிகளைப் பெறுவதற்கான ஒரு அற்புதமான பயிற்சியாகும்.
தியானத்தின் பங்கு அல்லது நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன், தியானத்தின் பங்கு குறித்து இருக்கும் பல தவறான கருத்துக்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். முதலில் தியானம் விடுதலைக்கான ஒரு வழி அல்ல. மோக்ஷத்திற்காக தியானம் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏன்? ஏனெனில் உபநிஷத போதனையின்படி; விடுதலை என்பது அடைய வேண்டிய ஒரு குறிக்கோள் அல்ல; விடுதலை என்பது நமது உள்ளார்ந்த இயல்பு; அது ஒரு சித்த-வஸ்து; அது ஒரு சாத்யம் அல்ல. மேலும் மோக்ஷம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட உண்மை என்பதால், அதை அடையவும் முடியாது; அறிந்து கொள்ளவும் முடியாது. உபநிஷதங்கள் ஞானத்தையே விடுதலைக்கான வழியாகக் காண்கின்றன. இதனால் தியானத்தின் உண்மையான வழிமுறையைப் பின்பற்றி, உள்ளத்தூய்மையும் ஆன்மீக நாட்டமும் பெற்று, ஞானத்தின் உதவியுடன் ஆனந்த வாழ்க்கை நோக்கிச் செல்வோமாக.
கேள்வி: நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?
_
