குவாண்டம் மெக்கானிக்ஸ் நிபுணர் – நோபல் பரிசு பெற்றவர் ஸ்ரோடிங்கர்.
அவர் சொன்ன பௌதிகத் தத்துவம் புரிந்ததோ இல்லையோ அவருடைய பூனைக் கதை மிகவும் பிரபலம். அவருடைய 126வது பிறந்த நாளை கூகுளும் கொண்டாடியது. குவாண்டம் மெக்கானிக்ஸில் அணுவைப் பற்றியும் மற்றும் புரோட்டான் , எலெக்ட்ரான் பற்றிச் சொல்லும்போது அவை எப்படி இருக்கும் , எந்த மாதிரி செயலாற்றும் என்பது அவை இருக்கும் இடத்தைப் பொறுத்தே அமையும்; அவற்றைப் பார்க்காமல் சும்மா சொல்லமுடியாது என்பது அவரது விளக்கம்.
அதெப்படி என்று கேட்டவருக்கு அவர் அந்த பூனைக் கதையைச் சொன்னார்.
ஒரு பூனையைப் பிடித்து ஒரு பெட்டிக்குள் வையுங்கள். அதில் ஒரு ரேடியம் போன்ற கதிர்வீச்சு வரும் பொருளை வையுங்கள். அந்தக் கதிர்வீச்சை அளக்கும் இயந்திரத்தையும் வையுங்கள். அத்துடன் ஒரு சுத்தியலையும் இணைத்து வையுங்கள். அந்த சுத்தியல் அசைந்தால் ஒரு விஷ வாயு உள்ள பாட்டில் உடைந்து விஷம் வெளிவருமாறு செய்யுங்கள்.
அந்த ரேடியம் போன்ற பொருள் கதிர் வீச்சை வெளியிடும் போது அந்தக் கருவியின் முள் அசைந்து , அது சுத்தியலை அசைத்து, விஷ வாயு பாட்டிலை உடைத்து விஷம் வெளியே வரும். அப்போது விஷ வாயு தாக்கிப் பூனை இறந்துவிடும்.
இதில் சஸ்பென்ஸ் என்னவென்றால் கதிர்வீச்சு எப்போது துவங்கும் என்பது யாருக்கும் தெரியாது. அது துவங்கினால் முன்னால் சொன்ன மாதிரி தொடர் விளைவுகள் நடக்கும்.
இந்த சமயத்தில் அந்தக் கதிர்வீச்சுப் பொருளில் இருக்கும் அணுக்கள் ஒரு சூப்பர் பொசிஷன்ல இருக்கும்னு பௌதிகம் சொல்கிறது. அதாவது அந்த அணுக்கள் கதிர்வீச்சை வீசின மாதிரியும் வீசாதது மாதிரியும் இருக்கும். கதிர்வீச்சு வந்ததா இல்லையா என்பது அந்த அணுக்களை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.
இது எப்படி என்றால், அந்தப் பூனை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பது மாதிரி.
அதற்கு முன்னாடி அந்தப் பூனையும் சூப்பர் பொசிஷன்ல இருக்கும். அதாவது அந்தப் பூனை உயிருடன் – உயிரற்ற ஆகிய இரண்டும் சேர்ந்த நிலையில் இருக்கும். அது உயிருடன் இருந்திருக்கலாம். அல்லது இறந்திருக்கலாம். அதில் எது சரி என்று எப்போது தெரியும் ? பொட்டியைத் திறந்து பார்த்தால்தான் தெரியும்.
இதுதான் ஸ்ரோடிங்கர், அணுவில் உள்ள புரோட்டான் , எலெக்ட்ரான் ஆகியவை செல்லும் அலைபோன்ற பாதையை விளக்கக் கூறிய கதை!
புரியவில்லை என்றால் நாம அடுத்த கதைக்குப் போவோம் !

