ஆன்ம வளர்ச்சி!
மாலைக் கதிரோன் மேலைக் கடலை
மருவ மயங்கி வருகிறான்
காலை தொடங்கி உலகைச் சுற்றிக்
களைத்துக் காட்சி தருகிறான்
சேலை மடிப்பாய் அலைகள் நெளியச்
சிலிர்த்து மகிழ்ச்சி உறுகிறான்
வேலை முடிந்து வீடு திரும்ப
விழைந்து நுழைந்து மறைகிறான்!
மறையும் அழகோ மகிழ்வின் வடிவு
மகிழ்ச்சிக் குண்டோ முடிவு?
நிறையும் அமைதி வாழ்வின் முகிழ்ச்சி
நெஞ்சில் தெரியும் நெகிழ்ச்சி.
குறையும் இல்லை, கறையும் இல்லை
கொள்ளை இன்பக் கிளர்ச்சி
இறையின் தண்மை இயற்கைத் தன்மை
இதுவே ஆன்ம வளர்ச்சி!