சிறகோசை

திருமதி பக்கங்கள்: சிட்டுக்கள்! சின்னச் சிட்டுக்கள்!

சிறு குழந்தையின் கைப் பிடியில்

அடங்கிவிடும் அளவுதான்

ஆனாலும் அதைக் கேட்டு நீ

செய்கிற வம்புகள் சுவையானவை

கூர் அலகைத்

தீட்டி ஓமப்பொடித் தூவலுக்காய்

நீ கரைந்ததில் தொடங்கிய ஸ்னேகம்

கை வேலையாய் இருக்கிறேன் பொறு

என்றால் ஒன்றரைக் கண்களால்

துழாவும் அபாரம்

உன் குழுவுடன் சமயங்களில்

வந்து விடுகிறாய்

எங்கே வைத்திருக்கிறேன் எவ்வளவு

என்பதெல்லாம் நீ அறிவாய் எனவும் நான்

அறிவேன். வீட்டிலும் செய்யவில்லை

கொரோனாவால் கடைகளுமில்லை

என்ற போது ரோஷப்பட்டு பறந்து போகிறாய்

காலி டப்பாவில் உன் சிறகோசையை

பார்த்தவாறு இருக்கிறேன்.

      

சிதறல் 

என்னிடம் சொன்னார் அம்மா!

கவனமிருக்கட்டும்

காய் சிதறித் தெறிக்க வேண்டும்

உன் காரியங்கள் தடைகளைத்

தாண்ட அதுதான் நல்வழி

நாலைந்து சிறார்கள்

என் கைகளைப் பார்த்து

பின்னர் கண்களையும்

அவசரமாக முகங்களைத் தாழ்த்தி

கால்களைப் பரப்பி முதுகுகள் வளைத்து

கைகள் தயாராக

முழுதாய்க் கொடுத்து விட்டேன்

அம்மாவிடம் பொய் சொல்லலாமா?

ஆண்டவனிடம் தவணை கேட்கலாமா?