எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022 – சுரேஷ் ராஜகோபால்

 


எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்” – திண்ணை 27 நவம்பர் 2022  கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்!


 

நவம்பர் மாதம் 2022ல் வந்த வாராந்திர / மாதந்திர இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வந்த சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு குவிகம் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.

 இந்த நவம்பர் மாதம் 2022ல், 69 சிறுகதைகள் தேர்விற்கு வந்தன. இதில் எல்லாக் கதைகளிலும் ஏதாவது ஒரு சுவை அல்லது சிறப்பம்சம் இருக்கின்றன. சில கதைகள் வெகுஜன ரசனைக்கேற்ப வழக்கமான பாணியில் இருந்தன. குறையாகத் தெரியவில்லை.

நவம்பர் மாதக்  கதைகளை படித்ததில் கவனித்த சில விஷயங்கள்.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையைக்  கொடுத்தது.

இரண்டு கதைகள் முழுவதும் நகைச்சுவை கதைகள் – (நந்து சுத்து எழுதிய “மரு பெயர்ச்சி”, இந்திரா பார்த்தசாரதி எழுதிய “மத யானை”)

இரண்டு கதைகள் நிலையாமை, அதாவது இறப்பு, பற்றிய செய்திகளை கதை முழுவதும் பேசுகின்றன..

யாரும் விரும்பி படிக்கும் வகையில் எல்லாக் கதைகளுமே இருக்கிறன்றன. கதைகளில் சமூக சாடல், ஜனரஞ்கம், பிறப்பு இறப்பு, வயோதிகம், குடும்பச் சண்டை, சமூகச்  சண்டை என்ற எல்லாம் பலவித  மையக் கருத்துகள் வருகின்றன.

 மிக முக்கியமான விஷயம் .இலக்கிய இதழ்களில் வரும் கதைகள் மட்டுமே தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை பொய்யாக்கும் விதமாக வெகுஜன இதழ்களில் வந்த எல்லாக் சிறுகதைகளும் தரத்தில் மேன்மையாக இருக்கின்றன..

 இந்த சிறுகதைத் தேர்வில் பலவித சிறு கதைகளை படித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. மனதை நெகிழ வைக்கிறது..

இனி தேர்வுக்கு உகந்த கதைகளைப் பார்ப்போம்:::

 

எழுத்தாளர் சோம. அழகு எழுதிய “ருக்கு அத்தை”

திண்ணை 06 நவம்பர் 2022

விரும்பி மரணத்தை ஏற்றுக் கொண்டது தப்பு எனப் புரிந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று தன் கணவரிடம் கெஞ்சுவது, தாயில்லாமல் எப்படி தன் இரு மகன்களும் இருப்பார்கள் எனப் புலம்புவது.. இவை எல்லாம்     அருமையாக எழுதுகிறார் கதாசிரியர் .

இந்த சிறுகதையை “அனு ” என்ற மருமகள் தன் அத்தையிடம் பேசுவது போலக் கதையை நகர்த்துகிறார். உணர்ச்சி பூர்வ எழுத்தால் கதையை நகர்ந்து செய்கிறது. கதை ஒரு நேர்கோட்டில் ஒரே கதாபாத்திரம் எழுதிய கடிதமாகக் கொண்டு செல்லப் படுகிறது..

ஒரு நயமான கதை .

#

எழுத்தாளர் சரசுராம் எழுதிய “வானுக்கும் எல்லை உண்டு”

தினமணி கதிர் 27 நவம்பர் 2022

60 வயதுக்கு மேற்பட்ட தம்பதிக்கிடையே சண்டை. கணவன் மனைவியை (அடிக்கடி அடிப்பதுண்டு) அடித்து விடுகிறான். மனைவி வீட்டை விட்டுக் கிளம்பி தனது தோழி வீட்டில் அடைக்கலம் பெறுகிறாள். வெளியேறிய பின்னரே வாழ்க்கையை

ரசிக்க முடிகிறது,.

ருசிக்க முடிகிறது,

வாழ முடிகிறது வாழப் பிடிக்கிறது. இது தான் கதையின் கரு.

மீண்டும் தாய் தந்தையரை இணைக்க வரும் மகன் மகளிடம் சொல்வதாக ஒரு காட்சி, மிக அற்புதம்.

மனைவி பேசுவதாக “நினைச்சப்ப தூங்கறேன், எழுந்திருக்கிறேன். பிடித்ததை சாப்பிடறேன். பிடித்த இடத்துக்குப் போய் வரேன்.சுதந்திரம் என்பது என்ன என்று இப்பதான் புரிகிறது. நிஜமா நான் நானாக இருக்கேன்”

கதாசிரியர் பெண் கொடுமை, வன்கொடுமைகளை அழகாக விவரிக்கிறார்.

##

எழுத்தாளர் வி. உஷா எழுதிய “பெரிய கிளைகள் சிறிய இலைகள் ”

தினமலர் வாரமலர் 27 நவம்பர் 2022

“இரு வேறு உலகத்து இயற்கை” என்ற வரிகளை நினைவு படுத்தும் கதை..

ஒரு வீட்டில் பாட்டி போற்றப்படுகிறாள். மகன் மருமகள், பேரன், பேத்தி அனைவரும் உயிருக்கு உயிராக நேசிக்கப் படுகிறாள். மற்றொரு இடத்தில் உதாசீனப்படுத்தப் படுகிறாள் மற்றொரு பாட்டி. இருவரும் சந்திக்கும் போது போற்றப்படும் பாட்டி அனுசரித்தல் பற்றி மற்றவளிடம் பேசுகிறாள். இது தான் கதையின் கரு.

கதாசிரியர் “மரியாதை என்பது என்ன… பதவியால் வருமா… பொருளால் வருமா…?அது எப்படி வரும்? அது நிலைத்திருக்கவேண்டும் இல்லையா..? அதற்கு சில முயற்சிகள் செய்ய வேண்டும் ” அருமையான வரிகள்.

மற்றொரு இடத்தில் “நாம் பணத்தைச் சம்பாதிக்க வேண்டாம், மதிப்பு மரியாதை அன்பு இதனைச் சம்பாதித்தாலே போதும்” – மற்றொரு அருமையான வசனம்.

##

எழுத்தாளர் சன்மது எழுதிய “நீ வருவாய் என”

கணையாழி Nov 2022

அப்பா ராமகிருஷ்ணனுக்கு யாழினி ஒரே மகள், அவளுக்கு “டவுன் சின்ரோம்” என்ற நோய்.

மிக நேர்த்தியாகக் கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்.

இவ்வளவு தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த மருத்துவத் துறையில் இந்த நோய்க்கு ஏன் மருந்தில்லை, ஏன் கண்டு பிடிக்கவில்லை. எல்லாம் வியாபாரமாகிப் போய் விட்டது என்று புலம்புகிறார்.

மாலையில் துவண்டு படுத்திருக்கும் போது ஆளரவம் கேட்கிறது, ஒரு தலை கலைந்த பெண்ணின் நிழல் தெரிகிறது. அது யாழினியா? என்ற மர்மத்துடன் கதையை முடிக்கிறார்.

##

எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸ் எழுதிய “திருக்கூத்து”

சொல்வனம் 27 நவம்பர் 2022

அந்த மலைக் கிராமத்தில் சில மர்மங்கள் இருக்கின்றன. அது சம்மந்தமாக பல புனைவுகள் பேசப் படுகின்றன. செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி விளக்கம் மலைச் சாமி மூலம் சொல்லப்படுகிறது.

இது தான் கதையின் கரு. மிக கனமான கதை. முடிவை நம்முடைய கருத்துக்கு விட்டு விடுகிறார்.

“மீன் மூச்சு விடுவது கூட விழும் காதுகள் விநாயகத்தினுடையது ” என்ற சொல்லாட்சி அருமை.

“தோட்டத்துச் சாமி அதிகம் பேசமாட்டார், வார்த்தைகள் அவருக்குள் இருக்கும் கடலாழத்தில் புதையுண்டு இருப்பதாக தோன்றும்” இங்கும் சொல்லாட்சி சிறப்பு.

கதை இன்னும் செல்கிறது.அந்த கிராமத்தை நமது கண்ணெதிரில் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

சிறப்பான கதை.

##

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய “மத யானை”

ஆனந்த விகடன் 09 நவம்பர் 2022 நகைச்சுவை சிறுகதை

முதியவர் ஒருவர் தன் படுக்கை அறையில் கட்டில் அருகில் கரப்பான்பூச்சியைப் பார்க்கிறார். அதை விரட்டவோ சாக அடிக்கவோ முயல்கிறார். அது கிடைக்காமல் அரைமனதோடு தூங்கப் போகிறார். இதுதான் கனவில் அந்த பூச்சிகளின் ஆக்ரமிப்பு.கதையின் கரு.

கதையைக் கொண்டு செல்கையில் முதியவர் கதாபாத்திரம் அச்சத்திலும் நகைச்சுவை, வீறு கொண்டு எழும் போதும் நகைச்சுவை. எழுத்தில் அங்கங்கே நகைச்சுவை மிளிர்கிறது.

அவரது குட்டை கட்டிலுக்கு வாமன அவதாரம் என்று பெயர்.

எறும்புக்கு திருவெறும்பூர் என்று ஊர் இருக்கிறதே ஏன் கரப்பான்பூச்சிக்கு இல்லை?

கண்ணுக்கு ஒரு கணம் தோன்றி உடனே மறைவதைப் பார்த்தல் அது கடவுளாக இருக்குமோ?

ஏன் இருக்கக் கூடாது மீனாய், ஆமையாய், பன்றியாய், சிங்கமாய் கடவுள் தோன்றும் போது ? என்ற வசனங்கள் மிக அருமை.

கிராப்பை ‘பல நூறாயிரம் வருஷத்துக்கு முன் தோன்றி இருந்தாலும் பருவ நிலைக்கேற்ப தன் வடிவத்தை மாற்றாமல் உலகிலே அணுகுண்டு வெடித்தால் கூட சாகாத வரம் பெற்றது’. என்று வர்ணிக்கிறார்.

எளிய சொல்லாட்சி நகைச்சுவை, நையாண்டி வெகு யதார்த்தமாக வந்த கதை இது.

##

கீழ்கண்ட இந்தக் கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்

எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்”

திண்ணை 27 நவம்பர் 2022

இலங்கை நகரிலிருந்த இனப்படுகொலையில், யுத்தம் என்ற பெயரில் சூறையாடப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இடிபாடுகள் இடையே அப்பா பார்த்த வீட்டில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள், புரியாமல் இருந்த தருணங்கள், மற்றும் இப்போது இடிபாடு இடையே கிடக்கும் நிலை பற்றியே பேசும் கதை.

சிறுவயதில், பள்ளி விடுமுறை நாட்களில் பட்டணத்திலிருந்து கதை சொல்லியும் அவரது தங்கையும் போவது வழக்கமான ஒன்று. அவர்கள் வீடு யாழ்ப்பாணத்திலிருந்த சண்டிலிப்பாய் என்ற கிராமத்திலிருந்து. விவரம் தெரியாத வயதில் விளையாட்டு. சாப்பாடு, என்று பலவற்றைக் கூறுகிறார்.

பல வகை மாம்பழங்கள் விவரம் எல்லாம் அருமை. பாண்டி, சேலம் கொழும்பு பச்சைத்தின்னி மல்கோவா என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

விடுதலை போராட்டத்தில் ஈடுபாடு இருந்த நிலையில் அவள் வீட்டை விட்டுப் போய் விடுகிறாள்.

கதாசிரியரின் பார்வையில் “ஆண்களை விட பெண்களுக்குத்தான் இனமான உணர்வு அதிகமிருக்கலாம்” என்கிறார். மேலும் “யுத்தம் முடிந்த விட்டதாகச் சொல்லப்பட்டாலும் பிரியாவின் நிலை என்ன?” என்று உணர்வு பூர்வமாக எழுதுகிறார்.

“அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று அங்கு ஆண்ட அரசு நிர்வாகம் சொல்லாதது ஒரு அவலம்”

கதை சொல்லி தனது இளமை நினைவுகளை, தனது அத்தை மகள் பிரியாவை நினைத்து அழுகிறார், அது அவருக்கு மட்டும்தான் தெரிந்த ரகசியம் என்று முடிக்கிறார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தமாதிரி பாரதியாரின் “எந்தையும் தாயும் ‘மகிழ்ந்து குலாவி இருந்தது இவ்வீடே … அதன் முந்தையராயிரம் மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது இந்நாடே” என்று மாற்றிப் பாடி தங்கள் கண்ணீர் அஞ்சலி கொடுப்பது மிக மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இதனை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையெனத் தேர்வு செய்கிறேன்.

 

https://puthu.thinnai.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/