No photo description available.
11/12/2022 அன்று  பாரதியாரின்   பிறந்த நாளையொட்டி ,”வானவில் பண்பாட்டு மையம்” , திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில் நடத்திய கவிதைப் போட்டியில், 
விவேக்பாரதியின்  முதல்பரிசு பெற்ற கவிதை 

 

நானெனும் நாடகம் எத்தனைநாள்? – இந்த
நானிலம் மீதினில் என்னகதை?
வானெனும் மேடையின் கீழ்நடக்கும் – என்
வாழ்க்கையின் நாடகம் என்னவிலை?
மானிடனாய் இச் சென்மத்திலே – நான்
வந்ததும் ஆதியின் காலவினை
ஏனெதற்(கு) என்கிற கேள்வியிலே – வழி
ஏறி நடத்திடும் கால்களெனை!

கருக்குடம் வாழ்கையில் சிசுவெனும்பேர் – கண்
கண்டபின்னால் எனைக் குழந்தையென்றார்
தெருக்களில் திரிகையில் பாலகன்நான் – மதி
தேறி அமர்கையில் மாணவனாம்
உருக்கொள இளமையின் புகழெனக்கு – உடன்
ஊழியன், தோழமை பட்டங்களாம்
சுருக்குகள் மேல்வர கிழவனென்றும் – பின்
சுடலையில் ஓர்பிடி சாம்பலென்றும்

எத்தனை எத்தனை பெயரெனக்கு – இதில்
எதுதான் நான்?எது மெய்க்கணக்கு?
வித்தகம் நானா விளைபொருளா – கொளும்
விதிகளில் நானா மீறலிலா?
மத்தகம் உடைந்த காலமெனும் – கரி
மீதினில் நானமர்ந்தோடுகிறேன்
வித்தினை ஒருத்தி விதைத்துவிட்டாள் – பலர்
வீணே எடுத்தெடுத்(து) ஆயுகிறார்!

காதினில் ஓர்குரல் கேட்கிறது – அது
கதிதரும் குரலெனத் தெரிகிறது
காதலில் உட்புறம் திரும்புகையில் – ஒரு
காரிருள் மட்டுமே விரிகிறது!
வேதங்கள் சொல்வது நானெனும்பொய் – என்
வேஷங்கள் சொல்வதும் நானெனில்பொய் – இதில்
மீதமிருப்பது தெய்வதமாம் – அதுவும்
மெய்யிலை பொய்யெனில் என்னசெய்வேன்?

 

தில்லை வேந்தனின் மூன்றாம் பரிசு பெற்ற கவிதை:
        நெட்டைக் கனவு!
நெட்டைக் கனவின் சிகரத்தில்
   நீண்ட கவிதை நதிபிறக்கும்;
குட்டைச் செங்கல்  கோபுரமாய்க்
   குலவும் அழகுக்  கலைசிறக்கும்;
ஒட்டைச் சிவிங்கி உயர்கழுத்தாய்
  ஓங்கி விண்ணின் மீன்பிடிக்கும்;
பட்டை     தீட்டி     வைரமெனப்
    பழைய கல்லும் ஒளிவிடுக்கும்!
மனமும் செயலும் சோர்ந்துவிட்டால்,
    வாழ்வின் ஊற்றுத் தூர்ந்துவிட்டால்,
தினமும் துன்பம் நேர்ந்துவிட்டால்,
   தெளிவும் திறனும் பேர்ந்துவிட்டால்,
சினமும் உள்ளே ஊர்ந்துவிட்டால்,
   திகைப்பும் வெறுப்பும் சேர்ந்துவிட்டால்,
இனிமை  ஆர்ந்த   ஒருகனவால்
   எல்லாம் நொடியில் தீர்ந்துவிடும்!
காற்றில் ஏறி  விண்முழுதும்
   கடிதில் செல்லும் நிலைவேண்டும்.
வேற்றுக் கோளில்  குடியேறி
   விரும்பி வாழும் நிலைவேண்டும்.
ஆற்றை இணைத்துத் தரிசுநிலம்
   அனைத்தும் செழிக்கும் நிலைவேண்டும்-
நேற்று வாழ்ந்த முன்னோரின்
    நெட்டைக் கனவும் மெய்ப்படுமோ?
யாதும் ஊரே என்றுரைப்போம்,
    யாரும் உறவே என்றுரைப்போம்,
தீது பகையே என்றுரைப்போம்,
    செய்யும்  போரின் வேரறுப்போம்.
ஓதும் மதங்கள் நன்மையன்றோ?
   உரைக்கும் அன்பும்  உண்மையன்றோ?
நீதி    நிலைக்க   நாம்காணும் —
    நெட்டைக் கனவும் மெய்ப்படுமோ?
உடையும் உணவும் உறைவிடமும்,
   உலக மக்கள்  அனைவருமே
அடையும் நிலையும் வரவேண்டும்,
    ஆற்றல் அமைதி தரவேண்டும்.
இடையில் வந்த பிரிவெல்லாம்
     இல்லை என்ற முறைவேண்டும்.
கடையை விரித்தேன் கருத்துரைத்தேன்-
     கவிஞன் கனவு மெய்ப்படுமோ?
சிட்டுக் குருவி போலெங்கும்
   சிலிர்த்துத் திரியும்  உடல்வேண்டும்;
எட்டி  நிற்கும்  வானம்போல்
    இயைந்து விரியும் மனம்வேண்டும்;
கொட்டிக் கிடக்கும் எழிலுலகில்
   கூவிக் களிக்கும் உயிர்வேண்டும்;
பட்டப்  பகலில்  வரும்கனவில்
   பாக்கள் நூறு தரவேண்டும்!
வெட்ட வெளியில் அளவெடுத்து,
    விரும்பும் வடிவில் உருக்கொடுத்து,
நெட்டைக் கனவு மாளிகையை,
    நெடிய விண்ணில் கட்டுதற்குத்
திட்ட. மிட்டால்,  அதன்கீழே
    செயலாம் கடைக்கால் ஒன்றமைப்போம்.
எட்டுத்  திசையும்  கைப்படுமே!
    எல்லாக் கனவும் மெய்ப்படுமே!