மூன்று லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்து நெகிழ்ந்த படம்
சமீபத்தில் வெளியான ’ஸ்கூல் பேக்’ என்ற குறும்படம், இணைய ரசிகர்களிடையே வைரலாகி இருக்கிறது.
புதுடெல்லியைச் சேர்ந்த தீரஜ் ஜிண்டால் இயக்கிய இந்தக் குறும்படம், 22 விருதுகளைக் குவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஒரு தாய்க்கும் மகனுக்குமான உணர்வை எடுத்துச்சொல்கிறது இந்தக் குறும்படம்.
2014-ம் ஆண்டு, பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 132 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தை மையப்படுத்தி குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் குறும்படத்தில்…
பெஷாவரில் ஒரு குடும்பம். அம்மாவும் மகனும் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். தந்தை ராணுவத்தில் இருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வருகிறான் மகன் ஃபரூக். பள்ளியில் நடந்த கதைகளை அம்மாவிடம் சொல்கிறான். அவன் அம்மா, “சரி, நான் உனக்கு ஸ்நாக்ஸ் தருகிறேன்” என்கிறார். அதற்கு ஃபரூக், பள்ளியிலேயே சாப்பிட்டுவிட்டதாகச் சொல்கிறான். அவன் அம்மா, ”சரி, நாளை உனக்குப் பிறந்தநாள். உனக்குப் பிடித்த உணவைச் செய்துதருகிறேன்” என்கிறார். அவன் குதூகலமாகிறான்.
சிறிது நேரம் கழித்து ஃபரூக் தன் அம்மாவிடம், “நாம் அன்று மார்க்கெட்டில் பார்த்த ’ஸ்கூல் பேக்’ எனக்கு வேணும்மா” என்கிறான். அவன் அம்மா அதைப் பற்றிய நினைவு இல்லாமல், “எங்கே பார்த்தோம்?” என்று கேட்கிறார். அந்த ஸ்கூல் பேக்கின் விவரங்களை விளக்குகிறான் ஃபரூக். அப்போது அம்மா, “இப்போது நமாஸ் செய்யும் நேரம். எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு ’நமாஸ்’ செய்யச் செல்கிறார். ஃபரூக் ஏமாற்றமடைகிறான்.
அன்றிரவு அவன் மீண்டும் அம்மாவிடம் ஸ்கூல் பேக் கேட்டு நச்சரிக்கிறான். அவன் அம்மா, “சும்மா நச்சரிக்காதே” என்கிறார். “எனக்கு ஸ்கூல் பேக் வாங்கித் தராவிட்டால், நாளை பள்ளிக்குப் போகமாட்டேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டுச் செல்கிறான் ஃபரூக்.
மறுநாள் காலை… புத்தகப்பை கிடைக்காத ஏமாற்றத்தோடு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்கிறான் ஃபரூக். அவன் அம்மா, கதவைத் திறக்கும்படி கூறுகிறாள். அவன் கோபத்துடன், “முடியாது, நான் உன்னுடன் பேசவே மாட்டேன்” என்கிறான். சில நொடிகள் கழித்து, அவன் கதவு திறந்து பார்த்து ஆச்சரியமடைக்கிறான். அவன் கேட்ட ஸ்கூல் பேக் அங்கே இருக்கிறது. குதூகலமாக ஒடிச்சென்று, அம்மாவை அணைத்துக்கொள்கிறான்.
“நான் உனக்கு மிகவும் தொல்லை தருகிறேன். இனி அப்படிச் செய்யமாட்டேன். நீ சொல்லும் எல்லாவற்றையும் கேட்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறான். “என் மகனுக்கு இன்று ஏழு வயது. நீ மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று பூரிக்கிறார் அம்மா. அவன் மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் செல்கிறான். பள்ளியில், நண்பனிடம் அந்த புத்தகப்பைபற்றிப் பெருமையோடு பேசுகிறான்.
வீட்டில் அவனுக்குப் பிடித்த உணவைத் தயாரித்தவாறு ரேடியோவில் செய்தி கேட்கிறார் அம்மா. அப்போது, ராணுவ பள்ளியில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த செய்தி ஒலிபரப்பாகிறது. அம்மாவின் முகம் மாறுகிறது. அதேநேரம் வீட்டின் கதவு தட்டப்படுகிறது. ஒரு காவல் துறை அதிகாரி அந்தப் புதிய புத்தகப்பையுடன் நிற்கிறார். அவள் அதிர்ச்சியில் உறைகிறாள்.
( நன்றி : விகடன் )
