Related image

நமது கவிதைகள் நெடுங்கால மரபு உடையதுஇன்று கவிதைகள் எழுதுபவர்கள் இத்தகைய கவிதைச் சுரங்கத்தின் காலடி தூரம் சென்றுவந்தாலும் அவர்களுக்குள் சேரும் அனுபவச் செழுமை அவர்களுடைய படைப்புகளுக்கு வலிவான ஆதாரமாக இருக்கும்.

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நாம் வாசிக்கிற பல தனிப் பாடல்கள் காலத்தை மீறியதாக எந்தக் காலத்துக்கும் அர்த்தமுள்ளதாக நவீனமாக தொனிக்கிறது.

இன்று நாம் வாசிக்கிற பல காதல் கவிதைகள் நுண்ணுர்வில்லாத கவிநயமில்லாத தட்டையான வார்த்தைகளாக ஒலிப்பதைப் பார்க்கிறோம்.

ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிற சில சமஸ்க்ருதக் காதல் கவிதைகள் எவ்வளவு நயத்துடன் வெளிப்படுகிறதென்று அறியும்போது நமக்கு அந்த உன்னதக் கவிஞர்கள் மீது பிரமிப்பும் மரியாதையும் ஏற்படுகின்றன.

இந்த வகையில் அநேக கவிதைகள் பர்த்ருஹரி அமரு ஹர்ஷா என்ற கவிஞர்களின் பெயரிலேயே காணக் கிடைக்கின்றன.

* * * * *

 

அவள் போதும் போதும் 

என்று சொல்லியும்

முத்தத்துக்குள் சத்தம்

புதைந்து போய்……..

ம்ம்….ம்ம்ம்ம்ம்….

என்று கேட்டது அவனுக்கு

” இன்னும் இன்னும் 

என்று அவன்

தப்பர்த்தம் செய்து கொண்டான்;

ஆசையுடன்..

– பர்த்ருஹரி

********

மதியேஎனது நண்பனே!

நிம்மதியிழந்து நீயும் தான்

இரவில் தூக்கமற்று அலைகிறாய்

பகலில் பசலையாகிப் போகிறாய்..

ஒரு வேளை எனைப் போல்

நீயும் அவளைத் தான் எண்ணிக்

கொண்டிருக்கிறாயா?

– பர்த்ரு ஹரி

***************

அந்த நிலவு

ஒவ்வொரு மாதமும்

உன் முகத்தைத் தான்

உருவாக்க நினைத்து

தோற்றுப் போகிறதுபோலும்1

– பர்த்ரு ஹரி

****************

மஞ்சத்தில் சேர்ந்து படுத்துக்

கொண்ட போதும்.. இடையில்

மௌனம் இறுக்கமாக ஈரமற்றதாக…..

ஒரு வார்த்தை பேசவில்லை அவன்

அவளும் பேச மறுத்தாள்…..சில வினாடிகள்….

தவிர்த்தாலும் கடைக்கண்பார்வை

தன்வசமின்றி பின்னலிட்டுக் கொண்டன

ஊடல் பறந்தது ஒரு கணத்தில்

மூழ்கிக் கரைந்தது அவர்களின் தழுவல்

சிரிப்பின் பேரொலியில்.

– அமரு

***************