அந்தக் கோர்ட்டே ஸ்தம்பித்து போயிருந்தது.
என்ன சொல்கிறார் பிராஸிக்யூட்டர் பரந்தாமன்.? ஒரு அணுகுண்டையல்லவா தூக்கிப் போட்டு விட்டார்?
அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நீதிபதி முகத்தில் ஈயாடவில்லை. டி·பன்ஸ் அட்டர்னி ராமன் முகத்திலே ஒரு குழப்பம். குற்றவாளிக் கூண்டிலே
நிறுத்தப்பட்டிருந்த பாபு, ராமு, சோமு அயர்ந்து போய் முகத்திலே கலவரம் சூழ நின்றிருந்தார்கள். கோர்ட் ஹாலில் நிரம்பி வழிந்திருந்த பார்வையாளர்கள் முகத்திலே குழப்பத்துடன் ‘என்ன நடக்கப் போகிறதோ’ என்ற ஆர்வ ரேகைகள்.
ஒரு பயங்கரமான நிசப்தம் கோர்ட் ஹாலில். அந்த குண்டைத் தூக்கிப் போட்ட பரந்தாமன் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கடையிதழில் வழியும் ஒரு புன்னகையோடு.
அமைதியாக சீராக ஓடும் நீரோடை போல் போய்க் கொண்டிருந்த அந்த வழக்கிலே ஒரு எதிர்பாராத ‘ட்விஸ்ட்.’
ஆறு மாதங்கள் முன்பு நாட்டையே உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்குதான் நடந்து கொண்டிருந்தது. அந்த ஊரின் பெரிய தனவந்தரும், நல்ல அரசியல் செல்வாக்குமுடைய தணிகாசலத்தின் மகன் பாபு, தனது நண்பர்கள் ராமு, சோமுவுடன் சேர்ந்து அவர்களது கெஸ்ட் ஹவுஸில் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணை, அவள் கதறக் கதற பலாத்காரம் செய்து, கொன்று விட்டார்கள்’ என்பதுதான் வழக்கு.
அவர்கள் மூவரும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப் பட்டிருந்தனர். அந்த வழக்கு ஏறக்குறைய ஒரு முடிவை நெருங்கியிருந்தது. அந்த சமயத்தில்தான் பரந்தாமன் ஒரு அணுகுண்டைத் தூக்கி போட்டார்.
‘ரிப்போர்டர் மோகனை எனது அடுத்த சாட்சியாக அழைக்க விரும்புகிறேன்’ என்றார்.
தன்னைச் சுதாரித்துக் கொண்டு, ஒரு சிறிய நக்கல் சிரிப்போடு மெதுவாக எழுந்த ராமன், ‘யுவர் ஆனர்…மிஸ்டர் பரந்தாமனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, ப்ராஸிக்யூஷன் தரப்புப்படி அந்தக் கோர சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாக கருதப்படும் ரிப்போர்டர் மோகன், அந்த சம்பவம் நடந்த அன்று இரவு சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி பின் இறந்து விட்டார் என்று ஹாஸ்பிடல் ரிகார்ட்ஸ¤ம், போலீஸ் ரிகார்ட்ஸ¤ம் கூறுகின்றன. அப்படி இறந்து விட்ட மோகனை ப்ராஸிக்யூடர் சாட்சியாகக் கூப்பிடப் போகிறாரா என்ன? இது கோர்ட்டின் டைமை வீணடிக்கும் வேலை.. அவர் என்ன இதிகாசத்தில் கூறப்படும் சாவித்திரி மாதிரி எமனிடம் மன்றாடி அவரை மீட்டு வந்திருக்கிறாரோ..? அல்லது ஏதாவது ஜால வித்தை காட்டப்போகிறாரோ?’ என்று நிறுத்தினார்.
பார்வையாளர்கள் சிரிப்பலை நிற்க சில நிமிடங்களாயின.
‘அதை நீங்கள் சிறிது நேரத்தில் பார்க்கத்தானே போகறீர்கள்’ என்றார் பரந்தாமன்.
‘அப்படியே வந்தாலும், கூண்டில் நிற்கும் என் கட்சிகரர்களை அடையாளம் காட்ட முடியாது. ஏனென்றால் சம்பவம் நடந்த அன்று அவர்கள் ஊரிலேயே இல்லையே..
அவர்கள் திருச்சியில் ஏ.பி.ஸி. லாட்ஜில் இருநூற்று பத்தாம் ரூமில் நாள் முழுதும் இருந்ததற்கு அந்த லாட்ஜ் ரிஸப்ஷன் ஸ்டாப் ஜேம்ஸ் சாட்சி கூறி இருக்கிறார். அதனால் இது கோர்ட்டின் நேரத்தை வீணடிக்கும் முயற்சி. இதை ஒத்துக் கொள்ளக் கூடாது..’ என்றார்.
‘மிஸ்டர் ராமன், ப்ராஸிக்யூஷனுக்கு ஆகட்டும், டி·பன்ஸ¤க்கு ஆகட்டும், நீதிபதி தீர்ப்பு எழுதும் வரை டைம் இருக்கு. எப்பொழுது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
யுவர் ஆனர்..அந்த மறைந்த ஆத்மாவுக்கு ஐ வான்ட் டு கெட் ஜஸ்டிஸ்.. இது நாடே எதிர்பார்த்து உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் வழக்கு. அதனாலே ப்ராஸிக்யூஷனுக்கு ஆகட்டும், டி·பன்ஸ¤க்கு ஆகட்டும் அவர்கள் பக்கத்து சாட்-
சிகளை தீர விசாரிக்கவும், அவர்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லவும் அனுமதிக்க வேண்டும்’
‘பெர்மிஷன் க்ரான்டட்..’
‘யுவர் ஆனர்.. ரிப்போர்ட்டர் மோகனை அழைப்பதற்கு முன், நேற்று சாட்சியம் அளித்த ஏ.பி.ஸி. லாட்ஜ் ரிஸப்ஷன் ஸ்டா·ப் ஜேம்ஸை அழைக்க நினைக்கிறேன். அவரை மேலும் சில கேள்விகள் கேட்க வேண்டும்..’ என்றார் பரந்தாமன்.
‘டாமிட்.. மை காட்.. திஸ் ஈஸ் டூ மச்.. அப்ஜக்ஷன் யுவர் ஆனர்.. ஜேம்ஸை நேற்றே விசாரித்தாகி விட்டது. ப்ராஸிக்யூட்டரும் நன்றாக விசாரித்து விட்டார்.. அவரை
எகெய்ன் விசாரிக்க அழைப்பது வேஸ்ட் ஆ·ப் டைம்..ஒத்துக் கொள்ளக் கூடாது’ என்றார் ராமன் தன் இருக்கையிலிருந்து எழுந்து.
‘மிஸ்டர் ராமன்.. மேலோட்டமாகப் பார்க்கும்போது சில உண்மைகள் புலப்படுவதில்லை.. நன்றாக உற்றுக் கவனிக்கும்போது, யோசிக்கும்போதுதான் புலப்படுது.’
‘மிஸ்டர் பரந்தாமன்.. அப்படி என்ன உங்களுக்குப் புலப்பட்டு விட்டது..?’
‘சிறிது பொறுமையாக இருங்கள்.. நீங்கள் கொண்டு வந்த சாட்சியான ஜேம்ஸே சொல்வார்..’
ஒரு கணம் யோசித்து விட்டு ‘அப்ஜக்ஷன் ஓவர்ரூல்டு’ என்றார் நீதிபதி.
ஜேம்ஸ் சாட்சிக் கூண்டில் வந்து நின்றார்.
எக்ஸிபிட்டாகக் கொடுக்கப்பட்டிருந்த ஏ.பி.ஸி லாட்ஜின் விருந்தினர் வருகைப் பதிவேட்டின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தபடி அவரை நெருங்கி வந்தார் பரந்தாமன்.
மிஸ்டர் ஜேம்ஸ், இந்தப் பதிவேட்டின் எல்லாப் பக்கங்களிலும், முதல் வரியும், கடைசி வரியும் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது. மற்ற வரிகளெல்லாம் நீல வண்ணத்தில் இருக்கின்றன இல்லையா..?’
‘ஆமாம்..’
‘ப்ராஸிக்யூட்டர் சாட்சிக்கு நிறங்களைப் பற்றி வகுப்பு எடுக்கிறார் போலிருக்கு’ என்றார் ராமன் நக்கலாக.
கோர்ட்டில் சிரிப்பலை பரவியது.
‘ஆர்டர்… ஆர்டர்..’ என்றார் நீதிபதி.
‘இந்தப் பக்கங்களில் சிவப்பு கோடுகளான முதல் கோடையும், கடைசி கோடையும் விட்டு விட்டு நீலக் கோடுகளில் தான் நீங்கள் விருந்தினர் வருகையைப் பதிவு செய்திருக்கிறீர்கள் இல்லையா.. அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா..’
‘அது எங்கள் லாட்ஜில் பழக்கத்தில் வந்தது. தனிப்பட்ட காரணம் ஒன்றும் இல்லை..’
‘ஓகே.. விருந்தினர் வர வர ஒவ்வோரு லைனாக எழுதிக் கொண்டே வருவீர்கள் அல்லவா…? அதாவது ஒரு விருந்தினர் காலை ஆறு மணிக்கு வந்திருந்தால் முதல்
லைனிலும், இரண்டாமவர் ஆறு முப்பதுக்கு வந்தால் இரண்டாவது லைனிலும் என்று எழுதிக் கொண்டே வருவீர்கள் அல்லவா…?’
‘ஆமாம்..’
‘ குட்கோயிங்.. யுவர் ஆனர்.. இதை நோட் செய்து கொள்ளுங்கள்’ என்று நீதிபதியை நோக்கிக் கூறிவிட்டு, சாட்சியிடம் திரும்பி, ‘இந்தப் பதிவேட்டை எழுதுவதற்கு ஒரே
பேனாவை யூஸ் பண்ணுவீங்களா.. அல்லது வேறவேற பேனாவை யூஸ் பண்ணுவீங்களா..’
‘ரிஸப்ஷன் டெஸ்கில் ஒரு பேனா ஸ்டான்ட் இருக்கு. அதில் ஒரு பேனா. பால் பாய்ன்ட் பேனா- வைக்கத்தான் ப்ரொவிஷன் இருக்கு. அதிலிருந்து பேனாவை எடுத்து எழுதி விட்டு அந்த ஸ்டான்டிலேயே வைத்து விடுவோம்’
‘எக்ஸலன்ட்..இப்பொழுது சம்பவம் நடந்த மார்ச் ஆறாம் தேதி குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் மூவரும் உங்கள் லாட்ஜுக்கு எத்தனை மணிக்கு வந்தார்கள்..? எந்த ரூமில் தங்கினார்கள்..?எத்தனை மணிக்கு ரூமைக் காலி செய்தார்கள்’
‘அவர்கள் மார்ச் ஆறாம் தேதி பகல் பதினொன்று மணிக்கு வந்து லாட்ஜில் ரூம் எடுத்தார்கள். அடுத்த நாள் அதாவது, ஏழாம் தேதி பகல் இரண்டு மணிக்கு காலி செய்தார்கள். அவர்கள் தங்கியிருந்த அறை எண் இருநூற்று பத்து
‘அவர்கள் வந்த டீடேய்ல்ஸ் எந்தப் பக்கத்தில் பதிவாகி இருக்கு..’
‘இதோ நாப்பத்தஞ்சாம் பக்கத்தில் பதிவாகியிருக்கு..’ என்று அந்தப் பக்கத்தை எடுத்துக் காட்டினார் ஜேம்ஸ்.
‘குட்.. அன்றைய என்ட்ரீஸ் நாப்பத்தஞ்சாம் பக்கத்தில் முதல் லைனில் ஆரம்பித்திருக்கிறது.. முதல் கஸ்டமர் காலைஆறு மணிக்கு வந்திருக்கார்.. பின் ஆறு பதினைந்து, ஆறு முப்பது, ஏழு, ஏழு பதினஞ்சு, ஏழு முப்பது என அடுத்தடுத்த
லைன்களில் பதிவாகி இருக்கிறது. குற்றவாளிகள் என்ட்ரிக்கு முன் லைனில் கஸ்டமர் வருகை பிற்பகல் மூன்று மணி என்று பதிவாகி இருக்கு. தொடர்ச்சியாக அடுத்த பக்கத்தில் முதல் என்ட்ரி மூன்று முப்பது என்று இருக்கு. இது எப்படி
நடந்தது மிஸ்டர் ஜேம்ஸ்…?’
‘அது வந்து… அது வந்து…”
‘ஓகே.. அது போகட்டும்.. ஒரு பக்கத்திலேயும் சிவப்பு கோட்டில் எழுதாதவர் இந்தப் பக்கத்தில் மட்டும் ஏன் சிவப்பு லைனில் எழுதி இருக்கீங்க..?
‘அது வந்து… அது வந்து.. எப்படி நடந்தது என்றே தெரியவில்லை..’
‘ஓகே.. அதுவும் போகட்டும்… இன்னொன்று பார்த்தீர்களா.. அந்தப் பக்கத்தில் எல்லா என்ட்ரீஸ¤ம் நீல நிற பால் பாய்ன்ட் பென்லே எழுதியிருக்கீங்க.. இந்த ஒரு என்ட்ரி மட்டும் எப்படி கறுப்பு மை பேனாவால் எழுதப்பட்டிருக்கு?’
‘என்ன ஸார்.. அதில் மை தீர்ந்திருக்கும்..வேறே பேனாவால் எழுதியிருப்பேன்..’ என்று மெதுவாக நகைத்தார் ஜேம்ஸ் பார்வையாளர்களைப் பார்த்துக் கொண்டே. பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய தான் சமயோஜிதமாக இந்தக் கேள்விக்கு பதில் சொல்லி விட்டோமே என்ற ஒரு திருப்தி இருந்தது அவர் முகத்தில்.
‘ஓ.. ஐ ஸீ.. ஆனா மிஸ்டர் ஜேம்ஸ்.. நீங்க அடுத்த பக்கத்தைப் பார்த்தீங்கன்னா அந்த நீல மையே கன்டின்யூ ஆகியிருக்கு..’
பக்கங்களைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த பரந்தாமன், ‘இன்னொன்று கவனிச்சீங்களா.. எழுபதாம் பக்கத்திலிருந்து கறுப்பு மை பேனாவை யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கீங்க.. அதாவது மார்ச் இருபதாம் தேதியிலிருந்து.. அதே பேனாதான் நாப்பத்தஞ்சாம் பக்கம் குற்றம் சாட்டப்பட்ட இந்த மூவர் வந்த என்ட்ரியையும் பதிவு பண்ண உபயோகப்படுத்தபட்டிருக்கு.. ப்ளீஸ் நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்..
மிஸ்டர் ஜேம்ஸ் உங்கள் லாட்ஜில் மார்ச் ஒன்றாம் தேதி ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பாக பேப்பரில் வந்ததே.. ஞாபகம் இருக்கா,,?’ என்றார் பரந்தாமன் திடீரென்று..’
‘யுவர் ஆனர்.. அந்தக் கேஸிற்கும் இந்தக் கேஸ¤க்கும் என்ன சம்பந்தம்.? அப்ஜக்ஷன் யுவர் ஆனர்.’ என்றார் ராமன்
‘யுவர் ஆனர் இன்னும் சிறிது நேரத்தில் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியும்..’
‘அப்ஜக்ஷன் ஓவர் ரூல்டு..’
‘ஆமாம்.. அதை எப்படி மறக்க முடியும்..?’
‘தாங்க் யூ… அந்த தற்கொலை எந்த ரூமில் நடந்தது என்று சொல்ல முடியுமா..?’
‘முடியும்.. இருநூற்று பத்தாம் அறையில்..’
‘அந்தச் சம்பவம் நடந்த அந்த ரூமை போலீஸ் மார்ச் ஒன்றாம் தேதி முதல், டீடேய்ல்ட் இன்வெஸ்டிகேஷனுக்காக பூட்டி ஸீல் வெச்சிருந்தாங்க இல்லையா… இன்வெஸ்டிகேஷன் முடிந்து என்னைக்கு அதை உங்கள் பொஸஷனுக்கு திருப்பிக் கொடுத்தாங்க..?’
‘மார்ச் இருபத்தஞ்சாம் தேதி…’
‘அப்போ மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து மார்ச் இருபத்தஞ்சாம் தேதி வரை அந்த ரூம் போலீஸ் கஸ்டடியில் இருந்தது. அப்படியிருக்க நீங்க எப்படி மார்ச் ஆறாம் தேதி அந்த ரூமை இந்த குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அலாட் பண்ணினீங்க…?’
‘அது வந்து.. அது வந்து…”
‘மிஸ்டர் ஜேம்ஸ்.. நீங்க சத்தியப் ப்ரமாணம் எடுத்துட்டு சாட்சிக் கூண்டிலே நின்னுட்டிருக்கீங்க.. நீங்கள் பொய் சொன்னாலோ, சாட்சியம் முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னாலோ என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா..?’
‘யுவர் ஆனர்.. யுவர் ஆனர்.. பரந்தாமன் என் சாட்சியை மிரட்டி அவருக்கு தேவையான ஸ்டேட்மென்டை வாங்கப் பார்க்கிறார்’ என்றார் ராமன் பரிதாபமாக.
இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்காத பார்வையாளர்கள் ஆர்வமொடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீதிபதியும் ஆர்வத்தின் உச்சத்திற்குப் போய், ‘ அப்ஜக்ஷன் ஓவர்ரூல்டு..மிஸ்டர் ஜேம்ஸ் பதில் சொல்லுங்கள்’ என்றார்.
‘மிஸ்டர் ஜேம்ஸ்.. உங்க நிலைமை எனக்குப் புரியுது… இட் ஈஸ் நாட் டூ லேட்.. உண்மையை இந்தக் கோர்ட்டுக்குச் சொல்லிட்டீங்கன்னா நீங்க எந்தத் தொந்தரவும் இல்லாம தப்பிக்கலாம்..’ என்றார் பரந்தாமன்.
‘ ஸார் என்னை மன்னிச்சிடுங்க.. ஏப்ரல் முதல் வாரத்துலே தணிகாசலம் ஸாரும், அவர் லாயரும் வந்து இந்த மாதிரி செய்யச் சொன்னாங்க.. வேறு ஒரு ரூமும் அந்த தேதியில் காலி இல்லாமல் இருந்ததனால் இந்த ரூமை அலாட் செய்ததாஎழுதச் சொன்னாங்க.. நான் அந்த ரூமை அலாட் செய்ய முடியாது என்று எவ்வளவோ சொன்னேன்.. ‘ஆனால் அதை யாரும் பார்க்கப் போறதில்லெ.. என்ன ஆனாலும் நாங்க உங்களுக்குப் பாதகம் வராம பார்த்துக்கறோம்னு சொன்னாங்க.. பெரியவங்க.. இந்த சமுதாயத்திலே நல்ல அந்தஸ்து உள்ளவங்க.. அவங்க சொல்லும்போது என்ன செய்வது.. நானும் ஒத்துக்கிட்டேன்..’ என்றார் பாதி அழுகையோடு.
‘அப்போ இந்தக் குற்றம் சுமத்தப்பட்டவங்க மார்ச் ஆறாம் தேதி உங்கள் லாட்ஜில் தங்கவில்லை அல்லவா..?
‘ஆமாம்..’ என்றார் ஜேம்ஸ் ஈனக்குரலில் பயத்தோடு. ‘தட்ஸ் ஆல்..’ யுவர் விட்னெஸ்’ என்று ராமன் பக்கம் திரும்பி கை காட்டினார் பரந்தாமன்.
”நோ க்வெஸ்ச்சன்ஸ்..’ என்றார் ராமன் பரிதாபமாக. அவர் முகம் இறுகிப் போயிருந்தது.
‘யுவர் ஆனர்.. அடுத்ததாக நிருபர் மோகனை விசாரிக்க விரும்புகிறேன்’
‘மோகன்.. மோகன்.. மோகன்’ என்று டவாலி கத்த,அந்த கோர்ட்டே ஆவலால் உறைந்து போயிருந்தது.
(மீதி அடுத்த இதழில் )