திரை ரசனை வாழ்க்கை 5 – எஸ் வி வேணுகோபாலன் 

                                                              பேராண்மை 
RIP Director S. P. Jananathan | Iyargai | Peranmai | Labam | #RIPJANANATHAN - YouTube
                   அசாத்திய வாசிப்பு அனுபவத்தின் திரைமொழி 

நல்ல கதை அல்லது கட்டுரை வாசித்தால், எப்படியாவது எழுதியவர் மின்னஞ்சல் முகவரி அல்லது அலைபேசி எண் தேடிப்பெற்று எண்ணங்களை அவர்களுக்கு உடனடி தெரிவிப்பது உண்டு, அது வழக்கமானது.

திரைப்படங்களில் ஆழ்ந்து ரசித்துப் பார்த்துவிட்டு, இயக்குநருக்கு உடனே கருத்தைத் தெரிவிக்கத் துடிப்பு இருந்தபோதும், அழைத்துப் பேசவோ, பிரதிபலிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவோ அத்தனை வாய்ப்பு கிடைத்தது இல்லை. மிகச் சில இயக்குநர்களிடம் பேசியது உண்டு. அந்த வரிசையில் 45 நிமிடங்களுக்குமேல் உரையாடலும், கருத்து பரிமாற்றமும் சாத்தியமான தருணம் மறக்க முடியாதது,  அறிமுகம் அற்ற ஓர் எளிய ரசிகரின் குரலை எத்தனை மதித்துக் கேட்டுக் கொண்டிருந்த காதுகளும் உள்ளமும் அவருடையவை! 

எஸ் பி ஜனநாதன் அவர்கள் அண்மையில் மறைந்தது பேரிழப்பு, இனி எப்போது எப்படி அவரோடு பேச…

பேராண்மை திரைப்படம் பார்த்துவிட்டு வந்தது உண்மையில் உள்ளக் கிளர்ச்சியை வழங்கி இருந்தது. 

தத்துவ தரிசனங்கள், மிக அதிகம் எம் ஜி ராமச்சந்திரன் படங்களில் பார்த்திருக்கிறோம். அதற்கேற்ற திரைப்பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அள்ளியள்ளிக் கொடுத்தது அவரது படத்திற்கு அதிகம். ‘வறுமை நிலைக்கு பயந்து விடாதே, திறமை இருக்கு மறந்து விடாதே, திருடாதே’  என்ற பல்லவியை சிந்தித்தால் மட்டுமே பல நூறு திறப்புகள் கிடைக்கும். அதிகம் திரையில் பார்த்தறியாத வித்தியாசமான கதைக்களத்தில் நுட்பமான தத்துவப் பார்வையைத் துணிந்து முன்வைத்த முக்கியமான படங்கள் வரிசையில் என்றென்றும் பேசப்படும் ஒன்றாக அமைந்தது பேராண்மை. 

பரீஸ் வஸீலியெவ் அவர்களது அற்புதமான ‘அதிகாலையின் அமைதியில்’ நாவல், எண்பதுகளின் புதிய வாசிப்பு அனுபவத்தில் அசர வைத்த படைப்பு. கமாண்டர் வஸ்கோவ், இராணுவ விதிமுறைகளை இலக்கண சுத்தமாகக் கடைப்பிடிக்கத் துடிக்கும் ஒரு முரட்டு செயல்வீரர். அவரது உள்ளத்தில் தாய்நாடு காத்தல் எனும் இலட்சியத்தைக் காட்டிலும் முன்னுரிமை வேறு எதற்கும் கிடையாது. தாறுமாறான குடிப்பழக்கம், ஒழுங்கீனம் கொண்ட ஆட்களையே தொடர்ந்து அனுப்பும் மேலதிகாரிகளிடம் வெறுத்துப் போய் அவன் எழுப்பும் புகார்களின் எரிச்சலில், அவன் உறக்கத்தைக் கெடுக்கும்படியான ‘நல்லெண்ணத்தோடு’ வித்தியாசமான குடும்பப்பின்னணி, வாழ்க்கை போக்கு உள்ள பெண்கள் சிலரை உள்ளடக்கிய படையை வழி நடத்துமாறு பணிக்கப்படுகிறான் வஸ்கோவ். 

அசாத்திய குறும்பும், வம்பும், ஏளனமும், கேலி கிண்டலுமாக அவனை அலைக்கழித்துப் பின்னிப் பின்னி எடுக்கின்றனர் அந்த இளம் பெண்கள். ஆனால், அவனோ எல்லாவற்றையும் எச்சிலோடு சேர்த்து விழுங்கித் தனது இராணுவ சீருடைக்கு அர்ப்பணிக்கப்பட்டவனாக அவர்களைத் தலைமை தாங்கி முன்னே நடந்து கொண்டே இருக்கிறான். காலம் தான் எத்தனை முற்றிலும் வேறான அனுபவங்களை சுமந்து கொண்டு அவனுக்கு இரண்டடி முன்னே நடந்து போய்க்கொண்டிருக்கிறது என்று விரியும் அபாரமான கதையில், தாய் நாட்டுக்கு எதிரான அராஜக அயல்நாட்டு ஆட்கள் சிலரை அந்தக் காட்டில் அந்தப் பெண்களில் ஒருத்தி அடையாளம் கண்டு விழிப்புற வைப்பதும், அவளது அனுமானத்திற்கு அதிகமான மடங்கு ஆட்கள் ஆயுத பலத்தோடு பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறியக் கிடைப்பதும், துணிவுமிக்க அந்தப் பெண்களின் அளப்பரிய தியாகத்தில், அவர்களை அந்த உறுதிமிக்க கமாண்டர் முறியடிப்பதும், அதனிடையே அந்தப் பெண்களை ஒவ்வொருவராக பலிகொடுக்க நேரும் துயரத்தில் அவன் இதயம் வெடிக்கத் தன்னையும் அவர்களையும் வேறொரு தரிசனத்தில் கண்டெடுப்பதும் அசாத்திய வாசிப்பு அனுபவமாகும். உண்மைக்கு நெருக்கமான போர்க்களக் கதைகளை வாசிப்பது கல்லையும் நெகிழ்விப்பது.

ஜனநாதன், இப்பேற்பட்ட கதையை எப்படி தமிழ் ரசிகர்களுக்கான திரைக்கதையாக உருவாக்கிப் படமாகப் படைத்தார் என்பது எப்போது சிந்தித்தாலும் மலைப்புற வைப்பது. ஜெயம் ரவிக்கு அப்படியான படத்தின் நாயகனாக நடிக்கக் கிடைத்தது அவருக்கும் அரிய அனுபவமாகவே இருந்திருக்க வேண்டும். மாடு ஒன்று கன்றுபோடும் காட்சியில் மிகவும் தன்னியல்பாக நடித்திருப்பார் அவர். படத்தின் இறுதிக் காட்சிகளில் சாகசத் துடிப்பும் வெளிப்படுத்தி இருப்பார். பேராண்மை படத்தில் முக்கியமான பாத்திரங்களில் தோன்றிய பொன்வண்ணன், வடிவேலு, ஊர்வசி, அந்தக் கல்லூரிப் பெண்களாக வந்தவர்கள் உள்ளிட்டு திரைக்கலைஞர்கள் யாராக இருப்பினும்,வாழ்நாள் பெருமைக்குரிய பங்களிப்பாகவே அவர்களுக்கு அமைந்திருக்கும்.

துள்ளலும் எள்ளலும் ஆட்டமும் பாட்டமும் நிறைந்த இளமைப்பருவத்தில் என் எஸ் சி பயிற்சியின் பகுதியாக அந்த மலைப்புறப் பகுதிக்கு வரும் பெண்களில் மிகுந்த குறும்புக்குரிய சிலரும், அப்பாவிப் பெண் ஒருத்தியும் தனித்து நிற்கின்றனர். பயிற்சி கொடுக்கும் இளம் அதிகாரியைத் தங்களது சீண்டலில் சிக்கவைத்து, எல்லா விளைவுகளுக்கும் அவனையே பொறுப்பாக்கி அவமானத்திற்குரிய இடத்தில் நிற்க வைக்கும் அளவுக்கு முன்னேறும் அவர்களது விளையாட்டில், அவனோ அவர்களை வழிப்படுத்தும் நோக்கில் முக்கியமான பயிற்சி என அவர்களை மட்டுமே தேர்வு செய்து தனியே அழைத்துச் செல்லும் இடத்தில் கதையின் சுவாரசியம் தொடங்குகிறது.

அதன் நீட்சியில் அதிர்ச்சியாக விரியும் அனுபவங்களில், தேசத்தை சீர்குலைக்கும் நோக்கில் வெளிநாட்டு சதியின் மூலம் அந்த மலைக்காட்டுப் பகுதியின் இதயப்பகுதியில் ஊடுருவி இருக்கும் சிலரை இந்தப் பெண்களில் ஒருத்தி பார்த்துவிடுகிறாள். அந்த அதிகாலையின் அமைதி அப்படித்தான் குலையத் தொடங்குகிறது. அதற்குப்பின் அந்தப் பெண்கள், படிப்படியாகத் தங்களது சீண்டல்களை நழுவவிட்டுப் படிப்படியாக போராளிகளாக உயர்வதும், அவர்களில் இருவரை அயலநாட்டுக் கொடியவர்களுக்கு எதிரான போரில் இழக்க நேரும் துயரமும், அனுபவங்களற்ற ஒரு குறும்படையை வைத்துக் கொண்டு பெரும்பயிற்சியோடு வந்திறங்கி இறங்கியிருக்கும் அந்நிய வெறிக்கூட்டத்தை நாயகன் அழித்தொழிப்பதும் தான் திரைக்கதை.

ஆனால், இந்த நிகழ்வுகளை அப்படியே அவனுக்கு எதிராக சித்தரித்து, அவனை வில்லனாக நிறுத்த முனையும் பேராசையும், ஊழலும் மிகுந்த வனத்துறை உயர் அதிகாரி ஒருவரது அராஜக செயல்பாடும், நாயகனின் இலட்சிய தீரத்தில் விளைந்த தேச பக்த வெற்றியைத் தனதாக அவன் கூச்சமின்றி சுவீகரித்துக் கொண்டு நிற்க முனையும் கள்ளத்தனமும் பட்டவர்த்தனமாக சித்தரித்த இடத்தில் ஏராளமான நடப்புக்கால செய்திகளைச் சொல்லிவிட்டிருந்தார் ஜனநாதன். 

ஒரு பாவமும் அறியாத மலைவாசிகளின் நேர்மையும், தன்னலமற்ற சீரான வாழ்க்கையும், துணிவுமிக்க எதிர்வினைகளும் இயற்கை வளங்களைத் திருட்டுத் தனமாகச் சுரண்டி விற்கத் துடிக்கும் அதிகார வர்க்கத்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை தமிழகத்தில் வாச்சாத்தி நிகழ்வு உள்ளிட்டு அறிந்திருக்கிறோம். தங்களுக்கு காட்டு பிராணிகளைப் பிடித்து அடித்துக் கொடுக்கத் தவறும் மலைக்குறவர் ஒருவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி நீதி மன்றத்தில் நிறுத்த, அந்த எளிய மனிதர் முன்வைக்கும் வாதங்களை ஆயிஷா இரா நடராசன் தமது சிறுகதை ஒன்றில் கண்ணில் நீர் வர சித்தரித்திருப்பார். 

பேராண்மை படத்தில், கற்பழிப்பு என்ற விஷயமே எங்கள் மலைச்சாதி மக்கள் அறியமாட்டார்கள் என்று கதறுவார் வடிவேலு. தன்னை மோசமாக சித்தரித்த மேலதிகாரியைப் பழிவாங்கும் நோக்கம் கூட இராது, தனது கடமையில் வழக்கம்போல் நாயகன் இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் தான் கதை நிறைவு பெறுகிறது. ஆனால், அவன் இதயக் குமுறலும், பறிகொடுத்த தோழியரின் கண்ணீர் நினைவுகளோடு சொந்தவூர் நோக்கிய பயணத்தில் அங்கிருந்து புறப்படும் கல்லூரிப் பெண்கள் குழுவும், பொறுப்பாசிரியரும் தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் முகங்களோடு ரசிகர்களுக்கு உறக்கமற்ற அடுத்த சில இரவுகளைப்  பரிசாக அளித்தே விடை பெறுவார்கள். 

‘ழேனியா, மன்னித்து விடு என் கண்ணே, உன்னை மிக மோசமாகத் தான் புதைக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க, கமாண்டர் வஸ்கோவ், கையில் கிடைத்த மரக்குச்சிகளைக் கொண்டு மண்ணைக் கீறி அந்த வீர மங்கைக்கு இறுதி மரியாதையை செலுத்திவிட்டுக் கண்ணிமைக்கும் நேரமும் சோர்வுறவோ, கண்ணயரவோ வாய்ப்பின்றி எதிரிகளை முறியடிக்க விரையும் இடம், அதிகாலையின் அமைதியில் நாவலில் மறக்க முடியாத பக்கங்களில் ஒன்று. கதையின் இறுதிப் பக்கங்களில், ஒருவன் விடாமல் எதிரிகள் எல்லோரையும் அழித்து முடித்த கணத்தில், தங்களது செம்படை தான் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று காதுகளில் கேட்டு மூளைக்கு உறுதிப்படுத்தவும் தான் தன்னை மயக்கமுற்று வீழ அவன் அனுமதித்தான் என்று முடியும் வாக்கியம் இதயத்தை ஏதோ செய்துவிடும் ஆற்றல் கொண்டது. பேராண்மை படத்தின் நாயகன், தன்னை சிக்கவைக்கும் மேலதிகாரியிடமிருந்து விடுபட்டு சதிகாரர்களை அழித்தபின்தான் தன்னையே ஒப்புக்கொடுக்கவும் தயாராகும் இடம் இதயத்தை அரற்ற வைப்பது.

அதிகாலையின் அமைதி நாவலில் மனத்தை வருடும் மெல்லிய காதல் ஒன்று பரவுவதும், ஜனநாதன் சித்தரிப்பில் பேராண்மையில் பொலிவுற அமைந்திருக்கும். நகைச்சுவை காட்சிகளில் கூட மூல நாவலின் பிடிமானங்களை சிறப்பாகக் கொண்டுவந்திருப்பார் இயக்குநர். 

படத்தின் உயிர் நாடி, கல்லூரிப் பெண்களாக வருவோரின் பேசத்துடிக்கும் கண்களும், நாயகன் அவர்களோடு பேசும் பொதுவுடைமை அரசியலும். மிக சிக்கலான பொருளாதார கோட்பாடுகளை, உழைப்பின் மதிப்பை, உபரி மதிப்பை  மர நாற்காலி, சாக் பீஸ் வைத்து விளக்கும் வசனங்களும் என்று குறிப்பிட முடியும். ஆயுதங்கள் இல்லாது கூட ஓரு புரட்சி சாத்தியமாகலாம், ஆனால், புத்தகங்கள் இல்லாமல் அல்ல என்று சொல்லப்படுவதுண்டு. மலைப்புறமக்களின் எளிய குடியிருப்புகளில் வன்முறை ரெய்டு நடத்தும் அதிகார வர்க்கத்திற்கு, இளம் தலைமுறையினர் வைத்திருக்கும் புத்தகங்களே வெடி குண்டுகளாகக் கண்ணுக்குப் புலப்படுவது படத்தின் முக்கிய காட்சிப்படுத்தலில் ஒன்று. 

10 Years of Peranmai: 20 facts you probably didn't know about Jayam Ravi's  landmark action-drama- Cinema express

பழைய காலத்து சிமெண்ட் காரை பூசிய தரையில் கோரைப் பாய் மீது மீளா உறக்கத்தில் கிடத்தப்பட்டிருந்த ஜனநாதன் உடலும், அவரது உழைப்பை அலங்கரித்துக் கொண்டிருந்த ஓர் எளிய பூமாலையும் வாட்ஸ் அப் பகிர்வில் காணக் கிடைத்தது மதிப்பு மிக்க வணக்கத்தைக் கோருகின்றது.

பரீஸ் வஸீலியெவ் அவர்களது நாவலை வாசித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் எடுத்து வாசித்தே தீர வேண்டும் என்று அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கும். கார்ல் மார்க்ஸ் நினைவு தினமான மார்ச் 14 அன்று ஒரு தற்செயல் ஒற்றுமையில் நம்மைப் பிரிந்து விட்ட ஜனநாதன் அவர்களது அர்ப்பணிப்பு மிக்க திரைக்கலை இலட்சிய வேட்கையின் நினைவில் பெருகும் கண்ணீரைத் தவிர்த்து அந்த வாசிப்பு நிகழ சாத்தியம் இல்லை.

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

பிரபல எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு சாகித்ய அகாதமி பரிசு 2020 ஆண்டுக்காக வழக்கங்கப்பட்டுள்ளது. 

அவரது செல்லாதபணம் என்ற நூலுக்கான  விருது இது !

இதற்கு முன்பாக இமையம் இந்திய அரசு வழங்கிய இளநிலை ஆய்வு நல்கை, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, ஆனந்த விகடன் விருது, பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது உள்ளிட்ட கௌரவங்களைப் பெற்றிருக்கிறார்.

2016 குவிகம் இதழில் இமையம் அவர்கள் 2000 க்குப் பிறகு வந்த நூல்களில் சிறந்தவை என்று பட்டியலிட்டதைக் குறிப்பிட்டிருந்தோம்.

இமையம் அவர்களுக்குக் கிடைத்த இந்த விருதுக்கு குவிகம்  மிகவும் பெருமைப்படுகிறது. 

அவரின் சிறப்புக்களை ‘இன்னும் சில படைப்பாளிகள் ‘ என்ற பக்கத்தில் எஸ் கே என் விளக்கிக் கூறுகிறார்.  

ImageImage

 

 

இமையம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர். இயற்பெயர் அண்ணாமலை. முதல் புதினமான ‘கோவேறு கழுதைகள்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகி உள்ளது. சுந்தர ராமசாமி “தமிழ் எழுத்துலகில் கடந்த நூறு ஆண்டுகால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை” என்று புகழ்ந்து கூறியுள்ளார். இவரது ‘எங் கதெ’ மிகவும் கவனத்தை ஈர்த்த மற்றொரு புதினம்.

ஆறு நாவல்களும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் தமிழிலக்கியத்திற்கு இதுவரை இவரது பங்களிப்பு.

இந்த மாதப்படைப்பாளிகளில் இமையம் அவர்களின் கதையினைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும்போது கிடைத்த செய்தி

எழுத்தாளர் இமையத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது அறிவிப்பு: ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது

** ** ** ** ** ** **

நறுமணம் என்கிற சிறுகதை

கைக்கடிகாரத்தைப் பார்த்தான் கதிரேசன். மணி ஐந்து. பத்து இருபதடி தூரத்தில் முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோடலைட்டின் வழியே விருத்தாசலத்தைச் சுற்றிச் செல்லும் புறவழிச் சாலை போடுவதற்கான வரைபடத்தையும், அதற்கான நிலத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தனைப் பார்த்தான்.

புறவழிச்சாலை அமைக்கக் கையகப்படுத்தவேண்டிய தேவையான நிலத்தை அடையாளம் கண்டு குறிக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆனந்தனும் அவனது உதவியாளன் கதிரேசனும்.

நேரமாகிவிட்டதால் வேலையை மறுநாள் தொடரலாமே என்கிற எண்ணம் கதிரேசனுக்கு. அதைப பலமுறை வாய்விட்டும் சொல்கிறான். ஆனந்தனோ இன்னும் சற்று நேரம் வேலை செய்யும் எண்ணத்துடன் சில கட்டளைகளை இடுகிறான். இன்னும் சில புள்ளிகளை அடையாளம் இட வைக்கிறான்.

நடக்கும் வேலையை இப்படி விவரிக்கிறார்

காலையிலிருந்து ஒவ்வொரு இடமாக அடையாளமிடுவது, கம்பி ஊசி, வெள்ளை மாவுப் பைகளைத் தூக்கிக்கொண்டு நெல் வயல், கரும்பு வயல், முந்திரிக்காடு, முள்காடு என்று நடப்பது, கடுமையான வெயில் என்று எல்லாம் சேர்ந்து அவனைக் களைப்படையச் செய்திருந்தன. ஆனந்தனுக்கு எந்த இடத்தில் அடையாளமிட வேண்டும் என்று சொல்வது மட்டும்தான் வேலை. அதுவும் தியோடலைட்டைப் பார்த்து. கதிரேசனுக்கு ஆனந்தன் சொல்கிற இடத்தில் கம்பி ஊசி ஊன்றி அடையாளமிடுவதோடு அதற்கு நேர் எதிர்ப் புறத்திலும் சரியான அளவில், சரியான இடத்தில் ஊசியை ஊன்றி அடையாளமிட வேண்டும். அது முன்பு அடையாளமிட்ட இடத்துக்கும், புதிதாக அடையாளமிடுகிற இடத்துக்கும் நேராக இருக்க வேண்டும். அது கல்லாக இருந்தாலும், முள்ளாக, சேறு, சகதி, உளையாக இருந்தாலும் அடையாளமிட்டுத்தான் தீரவேண்டும். வடக்கிலும் தெற்கிலுமாக இரண்டு அடையாளங்களுக்கிடையே உள்ள தூரத்தை அவ்வப்போது டேப்பால் அளந்து பார்க்க வேண்டும். அளவு பொருந்தி வரவில்லையென்றால் அடையாளத்தை மாற்ற வேண்டும்.

அப்படிக் குறியிடவேண்டிய ஓரிடம் ஒரு சாமி கோயிலாக இருக்கிறது. ‘சாமிக் குத்தம்’ வந்துவிடும் எனச் சொல்கிறான் கதிரேசன்.

“அதெல்லாம் பாத்தா நம்ப நாட்டுல ஒரு அடி ரோடுகூடப் போட முடியாது. பொக்லைன் வந்தா எல்லாத்தயும் ஒரு நிமிஷத்தில கிளியர் பண்ணிடும். பொக்லைனை சாமிக் குத்தம் ஒண்ணும் செய்யாது. அந்தப் பெரிய ஆலமர வேர்ல பாயிண்ட் பண்ணு. அதுக்கு எதிர் சைடுலயும் மார்க் பண்ணு.” கட்டளையாக வெளிப்பட்டது ஆனந்தனுடைய குரல்.

இன்னும் சில இடங்களைத தேர்ந்தெடுத்து அடையாளம் இட்டபிறகு “பேக் அப்.” என்று ஆனந்தன் சொல்கிறான். கிளம்புகிறார்கள். கொண்டுவந்த தண்ணீர், ‘கூல்ட்ரிங்’ தீர்ந்துபோயிருக்கிறது. அந்த ஆளில்லாக் காட்டில் ஒரு கூரைவீடு கண்ணில்படுகிறது

மக்கிப்போன சிறிய கூரை வீடு. வாசல் தெற்குப் பக்கம் பார்த்து இருந்தது, வீட்டு வாசலிலிருந்து பத்தடி தள்ளி ஒரு கிழவரும், கிழவியும் எதிரெதிராக உட்கார்ந்துகொண்டு புளிச்சக்கீரையை உருவிக்கொண்டிருந்தனர். இரண்டு பேருக்கிடையில் முறம் இருந்தது. கிழவிக்குப் பக்கத்தில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அடுப்பிலிருந்து ஏழெட்டு அடி தூரத்தில் இரண்டு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. மாடுகள் கட்டப்பட்ட இடத்திலிருந்து மேற்கில் பத்தடி தூரத்தில் ஆறு ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. கிழவியைச் சுற்றி ஒரு கோழியும் ஏழெட்டுக் குஞ்சுகளும் சுற்றிச்சுற்றி மேய்ந்து கொண்டிருந்தன.

‘வியாதி வந்துடும்’ என்கிற கதிரேசனின் எச்சரிக்கையையும் மீறி, தண்ணீர் வாங்கிக் குடிக்கிறான் ஆனந்தன். “என்ன, இங்க சமையல் பண்றீங்க?” என்று கேட்கிறான்

“அடுப்பு எரிஞ்சா சோறு எங்கனாலும் வேவும்.” (-இது கிழவர்.) “கல்யாணத்துக்கா ஆக்குறன்? ஒரு சோறு. ஒரு குழம்பு. அதுவும் ஒரு நாளக்கி ஒருவாட்டி. அத இங்க வச்சே பொங்கிடுவன்.” (இது கிழவி)

மழை வந்தால், இடையில், மழை விடும் சமயத்தில், சோறாக்கிக் கொள்வார்களாம். நகை, பணம் என்றெல்லாம் இல்லாததால் திருடர் பயமும் கிடையாதாம். இரண்டு மகள்கள் மூன்று மகன்கள் இருந்தும் பத்து வருடமாக இங்கேதான் வாசமாம்.

எங்களுக்காக நீங்க சண்டப் பண்ணிக்க வேணாம். காட்டுல இருக்கிற மோட்டாரு கொட்டாயிக்கிட்ட இருக்கிற களத்தில் தங்கிக்கிறம்னு நாங்களே ஒதுங்கி வந்துட்டம்.”

காட்டில் வசிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை (“காட்டுல இருக்கிறது கஷ்டமில்ல. ஊருல இருக்கிறதுதான் கஷ்டம். பாம்பு பல்லியவிட துஷ்ட மிருகம் மனுசங்கதான்.”)

ரேஷனில் கொடுக்கும் அரிசி, காட்டில் விளையும் கீரை இவைதான் உணவு. மேல் செலவிற்காக மகன்கள் பணம் கொடுப்பார்களா?

 “தருவாங்க. போட்டிபோட்டுக்கிட்டு. கூலி ஆளுவுளக் கொண்டாந்து வுட்டுட்டு வேல வாங்குன்னு சொல்லிட்டுப் போவாங்க. முந்திரிக் கொட்டப் பொறுக்கிவையின்னு சொல்லுவாங்க. காட்டுல ஆடு மாடு நுழயாம பாத்துக்கச் சொல்லுவாங்க. கரண்ட் உள்ள நேரத்துக்கு மோட்டாரு போடும்பாங்க. இப்பிடி நூறு வேல தருவாங்க. அது போதாதா?” கிழவர் வாய்விட்டுச் சிரித்தார்.

“அவனவன் சோத்த அவனவன்தான் சம்பாரிக்கணும். அவனவன் வவுறு அவனவன்கிட்டதான இருக்கு?”

அங்கே இருக்கிற மாடுகள் பெரிய மகனுடையது. இரண்டாவது மகன் தன பங்கிற்கு ஆடுகளை கொடுவந்து விட்டிருக்கிறான்.

“ஒங்களோட இன்னொரு மவன் கொண்டாந்து கோழிய வுட்டுட்டாரா?” சிரித்துக்கொண்டே ஆனந்தன் கேட்டான்.

மூன்றாவது மகன், (அரசாங்கப் பணியில் இருப்பவன்- மனைவியும் அப்படியே) தன் பங்கு நிலம் வீடுகளை விற்றுவிட்டு சென்னையோடு போயிவிட்டான்.

‘எதயும் விக்காத, நாங்க உசுரோட இருக்க மட்டும் ஒன்னோட பாகத்தப் பாத்துக்கிறம். நம்ப காட்டுக்குள்ளாரப் பிறத்தியாளக் கொண்டாந்து வுடாத’ன்னு இந்தக் கிழவரு எம்மானோ சொல்லிப்பாத்தாரு. கால்ல வியிந்துகூடக் கேட்டாரு. அவன் நாங்க சொன்ன எதயும் கேக்கல.

தினம் ஒரு ஆளாவது, கார்- மோட்டர்பைக் பஞ்சர் என்று வண்டியை நிறுத்துவார்கள். அந்த வழியாகப் பள்ளிக்குப் போகும் சிறுவர்கள் தண்ணீர் கேட்க வருவார்கள்.

 “அதுக்குன்னே குடம் வச்சியிருக்கன். ந்தா அங்க இருக்குதில்ல?” கிழவர் கை காட்டிய இடத்தைப் பார்த்தான். வாசலை ஒட்டி ஒரு செப்புக் குடம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் சில்வர் சொம்பு ஒன்றும் இருந்தது.

அந்த வயதான தம்பதியர் தனியாக இல்லையாம்.

 “அங்க வெள்ளக் குதிரமேல கள்ளவீரன் சாமி குந்தியிருக்கான் பாரு.”

ஆனந்தன் எழுந்து நின்று கிழக்கில் பார்த்தான். ரோட்டிலிருந்து கிழக்கில் ஒரு பர்லாங் தொலைவில் ஏழெட்டு மரங்களுக்கிடையே சிமெண்டால் செய்யப்பட்ட குதிரை மட்டும்தான் மங்கலாகத் தெரிந்தது. சாமி சிலை இருப்பது தெரியவில்லை .

கிழவரோ அந்த ‘கள்ள வீர’னின் பிரதாபங்கள், வீர பராக்கிரமங்கள், அவனது இருபத்தியொரு சேனாதிபதிகள் என்று உற்சாகமாகச் சொல்கிறார். கிழவருடைய உற்சாகமான பேச்சைக் கேட்ட ஆனந்தன், எழுந்து நின்று கோவில் இருக்கிற இடத்தையும் கிழவருடைய வீட்டையும் பார்த்தான். நேராக இருந்தது. முன்பு அடையாளமிட்ட இடங்களையும் பார்க்கிறான். கடைசியாக அடையாளமிட்ட இடத்தில் கதிரேசனை நிற்கச் சொல்கிறான்.

கிழக்கில் கள்ளவீரன் சாமி கோவில் பக்கம் பார்த்தான். பிறகு கிழவர், கிழவி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். நாளைக்குக் காலையில் வந்ததும் அடையாளமிட வேண்டிய இடம் கிழவருடைய வீடு. பேண்ட் பாக்கெட்டில் இருந்த வரைபடத்தை எடுத்துப் பார்த்தான். பிறகு அணைக்கப்பட்டிருந்த அடுப்பைப் பார்த்தான். சோற்றுக் குண்டான், கீரைச் சட்டி, ஆடு, மாடு, கோழி, பள்ளிக் குழந்தைகள், வழிபோக்கிகளுக்காகத் தண்ணீர் வைத்திருந்த செப்புக் குடம் என்று ஒவ்வொன்றாகப் பார்த்தான். எல்லாம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள்வரைதான் இருக்கும். பிறகு பொக்லைன் வந்து எல்லாவற்றையும் சமமாக்கும். கருங்கல் ஜல்லி கொட்டப்படும், தார் ஊற்றப்பட்டுச் சாலையாகும். இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் ஹாரன் அடித்தபடி எந்தத் தடையும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனந்தனும் கதிரேசனும் போகவேண்டிய கார் வந்துவிடுகிறது. ஏறிக்கொள்கிறார்கள். கிழவர் கேட்ட ‘ரோடு எந்தப் பக்கமா வருது?’ என்கிற கேள்வி ஆனந்தன் காதில் விழவில்லை .

“இந்தக் கூர ஊட்டுல நெருப்ப வச்சிடாதிங்க. நாங்க போறதுக்குச் சுடு காட்டத் தவிர வேற எடமில்ல.” கிழவர் சொன்னது காரில் ஏறிவிட்ட ஆனந்தனுடைய காதில் விழவில்லை. சைலோ கார் விருத்தாசலத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது. காரிலிருந்தபடியே திரும்பிப் பார்த்தான். கிழவியும், கிழவரும், வீடும் தூசு மாதிரி காணாமல் போயிருந்தனர்.

என்று கதை முடிகிறது.

—-  ———— ——————- —————-

அதிகம் பேசப்பட்ட சிறுகதைகளில் ஒன்று நறுமணம். கதையின் பெயர் நடுவே இப்படி வருகிறது

திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி ஆனந்தன் கேட்டான் “இந்த ஊரு பேரு என்ன?”

 “நறுமணம்.”

“நல்லா இருக்கு. அந்த நகர், இந்த நகர்னு இல்லாம.”

யதார்த்தமான வர்ணனைகள், விவரங்கள், உரையாடல்கள் ‘பை-பாஸ்’ பயணிகளுக்கு செய்யும் சௌகரியங்கள் எளிய மக்களின் கஷ்டங்கள் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் வினோதம். சிரமங்கள் புரிந்தும், எதையும் தடுக்கவியலாத நிலைமை ….. இவையெல்லாம் படிப்பவர்களின் மனதில் சில அடையாளங்களை விட்டுத்தான் செல்கிறது

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

நன்றியறிதல்!
‘நன்றி மறப்பது நன்றன்று’ என்றே நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பதே நன்றியறிதல். நன்றியறிதலின் சிறப்பு குறித்தே திருவள்ளுவரும், ‘செய்ந்நன்றி அறிதல்’ என்னும் அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களைச் சொல்கிறார். நன்றியறிதல் என்பது வாழ்வின் மிக முக்கியமான அறங்களுள் ஒன்று என்றால் அது சற்றும் மிகையல்ல.
‘நன்றி’ – “ஒருவர் செய்த நன்மைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வு; விசுவாசம்; (gratitude). இந்த மரியாதை உணர்வையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதற்கான சொல் – ‘நன்றி’ என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. ஒருவர் செய்த உதவியை முன்னிட்டு, அவரிடம் கொள்ளும் கடமை உணர்வு, ‘நன்றிக் கடன்’!
நம் பெற்றோரிடம் தொடங்குகிறது நம் நன்றிக்கடன். நம்மை வளர்த்து, ஆளாக்கி ஒரு நல்ல நிலையிலே வைத்திருக்கும் பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், அவர்கள் வயோதிகத்தில் நாம் அவர்களை அன்புடன் அரவணைத்துக் காப்பது! அறிவுக்கண்ணைத் திறந்த ‘குரு’ விற்கு செய்யும் நன்றிக் கடன், அவர் காட்டிய நல்வழிப்பாதையில் ஒழுக்கத்துடன் நடந்து, அறம் காப்பது! வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு உதவி, அன்புடன் கைதூக்கி விட்டவர்களை மறக்காமல், நம்மால் ஆன ‘நன்றி கடனை’ செய்வது மிகவும் உயர்வானது.
செய்ந்நன்றியறிதல் நம் சங்க இலக்கியங்களிலும் பேசப்படுகிறது. ஆலத்தூர் கிழார் என்னும் புலவர், கிள்ளிவளவனைப் புகழ்ந்து பாடும் பாடலில் இப்பண்பு சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
“ஆன்முலைஅறுத்த அறனிலோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும்
பார்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளவே
நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம்பா டிற்றே ஆயிழை கணவ!”. (புறம் 34).
(செய்தி – செய்த நன்றி)
பசுவின் பால்தரும் மடியை அறுத்த அறனில்லாதவர்க்கும், மகளிரின் கருவைச் சிதைத்தவர்க்கும், பார்ப்பாரிடம் தவறிழைத்த கொடுமையோர்க்கும், தீமைகளை உண்டாக்கியவர்கள் அத்தீமைகளில் இருந்து தப்பிப் பிழைக்க வழிகள் உண்டு. ஆனால், உலகமே தலைகீழாக மாறினாலும், செய்ந்நன்றி மறந்தவர்களுக்கு, அதிலிருந்து தப்பிப் பிழைக்க வழியில்லை என்று அறநூல்கள் வலியுறுத்தியுள்ளன – என்பது இப்பாடலின் பொருள்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”. (குறள் எண் 110)
என்று அறம் பாடும் திருக்குறள் இச்செய்தியையே வலியுறுத்துகிறது!
கர்ணனிடம், கண்ணன் சொல்கின்றான்: “கர்ணா! நீ குந்தியின் மைந்தன். ஆதித்த பகவானால் உதித்தவன். ஆதலால் பாண்டவர்கள் உன் சகோதரர்கள். அவர்களுடன் வந்து சேர்ந்துவிடு. மூத்தவனான உன்னை அவர்களும் வணங்கி ஏற்றுக் கொள்ள, இந்த அகிலத்தையே ஒரு குடைக்கீழ் நீ ஆளலாம். துரியோதனன் மூடன். தீயவருடன் சேர்ந்திருப்பது பிழை. தூயவர்களுடன் சென்று சேர்ந்து விடு”
‘ஆரென் றறியத் தகாதஎனை
அரசு மாக்கி முடிசூட்டிச்
சீருந் திறமும் தனதுபெருந்
திருவும் எனக்கே தெரிந்தளித்தான்
பாரின் றறிய நூற்றுவர்க்கும்
பழிதீர் வென்றிப் பாண்டவர்க்கும்
போரென் றறிந்தும் செய்ந்நன்றி
போற்றா தவரில் போவேனோ’
ஊர் பெயர் தெரியா என்னை, அரசனாக்கி, அண்ணா என்றழைத்து சீரும், சிறப்பும் தந்தான் துரியோதனன். அந்த செய்ந்நன்றியை ஒருபோதும் நான் மறவேன் – என்று கூறி கர்ணன் மறுக்கிறான்.
தன்னை ஈன்ற அன்னை குந்திதேவிதான் என்பதை அறிகிறான் – இழிகுலத்தில் பிறந்தவன் என்று செல்லுமிடமெல்லாம் அவமானம் – தன் வீர பராக்கிரமங்களை அங்கீகரிக்காத அரசவைகள் – ஆச்சாரியர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு – குந்தியின் மகனென்றால் கர்ணனுக்குக் கிடைக்கும் மரியாதை, அவனது வீரத்திற்கான பெருமை, பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்கிற பெரிய இடம்! எவ்வளவு பெருமை!!
பெட்டியில் வந்த பட்டுப் புடவையைப் போர்த்தியவுடன், கண்ணீர் துளிர்க்க, கொங்கையில் பால் சுரக்க, பாசத்தில் மடியில் கிடத்திய மகன் கர்ணனிடம் கேட்கிறாள் குந்திதேவி! “மகனே! நீ சிறிதும் தயங்காமல் பாண்டவர்களுடன் சேர்ந்து விடு”!
“அம்மா, நீங்கள் பழிக்கு அஞ்சி என்னை நதியினிலே விட்டீர்கள். துரியோதனன் என்னை அன்புடன் ஆதரித்து, நாட்டினையும் தந்தான் – எல்லோருக்கும் பொல்லாதவன், எனக்கு நல்லவன். சொக்கட்டான் ஆடும்போது, அவன் மனைவியின் ஆடையை இழுத்து ஆட்டத்தைத் தொடரச் சொன்னபோது, அவளது மேகலாபரணம் அறுந்து சிந்தியது.
அங்கு வந்த துரியோதனன், என் தலையை சீவியிருக்கவேண்டும் – அவன் என்ன செய்தான் தெரியுமா அம்மா? ‘பானுமதி, நீ அண்ணாவுடன் ஆடு. இந்த முத்துக்களை நான் எடுக்கவோ, கோக்கவோ?’ என்றான். அவனை எப்படி என்னால் விட்டு வரமுடியும்? செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, அவனுடன் போர்க்களம் சென்று அவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். அதுவே என் புகழும், கருமமும், தருமமும் ஆகும்” என்கிறான் கர்ணன்.
அதற்கும் ஒரு படி மேலே செல்கிறான் கர்ணன். அன்னையால் கைவிடப்பட்ட, பரிதாபத்திற்குரிய பாத்திரம் கர்ணன். ஆனாலும், ஈன்ற அன்னைக்குச் செய்ய வேண்டிய செய்ந்நன்றிக் கடனையும் அவன் மறக்கவில்லை. கண்ணன் தந்திரமாகக் கேட்கச் சொல்லும் இரண்டு வரங்களை குந்தி கேட்க, “அம்மா, உனக்கு நான் எதுவும் செய்யவில்லை. வறியவர்க்கு வாரி வழங்கினேன். நீ கேட்கும் வரங்களை தர மறுப்பேனா?” என்று தன் உயிருக்கே ஆபத்தான அந்த வரங்களை அளிக்கிறான்!
அதற்கு அவன் அன்னையிடம் கேட்கும் வரம், எந்தக் கல்மனதையும் கரைய வைக்கும் வரம். “போரில் நான் மாண்டால், உன் கண்ணீர் என் மீது சிந்த அழுவாயா? அன்றாவது நான் குந்தியின் மைந்தன் என்று உலகம் அறியட்டும். என் பிறப்பு, குலம் மீதான களங்கம் மறையட்டும்”
செய்ந்நன்றிக் கடன் தீர்ப்பதில் கர்ணனுக்கிணை கர்ணன் மட்டுமே.
“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு” (குறள் 107).
(நம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைந்து போற்றுவர் பெரியோர்).
செய்ந்நன்றியறிதலின் பெருமையை அறிவோம் – நன்றியறிதலை ஒரு விரதமாகக் கொள்வோம்!!
ஆதாரம்: சங்க இலக்கியம் – நெடுநல்வாடை (கங்கை புத்தக நிலையம்), மகாபாரதம் – தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், திருக்குறள் பி.எஸ். ஆச்சார்யா (நர்மதா பதிப்பகம்).