1.மிச்சம் மீதம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு ? (தென்காசி கணேசன்)
மிச்சம் என்பது நாம் பயன்படுத்திய பிறகு மிகுந்திருப்பது . மீதம் என்பது நாம் பயன்படுத்தாமல் மிகுந்திருப்பது . மிச்சம் என்பது ஒரு வகையில் எச்சில் எனலாம் . மிச்சில் மிசைவான் புலம் என்று குறள் கூறுவது எண்ணிப்பார்க்கத் தக்கது. உணவில் மிச்சம் மீதி என்று சொன்னால் இதுதான் பொருள் . ஒன்று உண்டபின் எஞ்சியிருக்கும் உணவு; மற்றொன்று உண்ணப்படாமலேயே மிகுந்திருப்பது .
2.நெல்லை மாவட்டத்தில் வல்லிசா முடிந்ததா என்பார்கள் . அதாவது முழுவதும் என்ற அர்த்தம் . வல்லிசா என்ற வார்ததை எதில் இருந்து வந்தது?
(தென்காசி கணேசன்)
பொதுவாக ஒரு விஷயம் ஏதும் பிரச்சினை இன்றி முடிந் தால் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள் . இது நெல்லை இராமநாதபுரம் மாவட்டங்களில் மறவர் சமூகம் பயன்படுத்தும் சொல்லாடல் . முக்கியமாக அடிதடி இல்லாமல் சுமுகமாக பஞ்சாயத்து முடிந்துவிட்டால் “வல்லிசா முடிந்ததா”என்பார்கள் . வலிமை காட்டாமல் இசைந்ததா என்பதே வல்லிசா ஆக மாறியிருக்கலாம்.
3.பொன்னியின் செல்வன் படித்திருப்பீர்கள் ! வரப்போகும் சினிமா பற்றி உங்கள் கருத்து ? (சந்திரசேகரன் பாஸ்டன் )
என்னைப் பொறுத்தவரை கல்கியின் எழுத்தே சினிமா பார்க்கிற மாதிரிதான் இருந்தது. பல வாசகர்களுக்கும் அப்படித்தான் இருக்கும். ஒவ்வொரு வாசகனும் மனக்கண்ணிலே இதை சினிமாவாகப் பார்த்திருப்பான் .எனவே மணிரத்தினம் வெர்ஷன் அவர்களுக்குப் பிடிக்குமா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வி . பொ .செ . வைப் பலமுறை படித்தவன் நான் .அந்த ரசனையை விஞ்சசும் அளவுக்கு சினிமா அமையுமா என்பது சந்தேகமே . கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலைப் பலமுறை படித்த காரணத்தால் , அந்த எழுத்து, நிகழ்வுகள் ,வசனங்கள் இவற்றை சினிமாவில் எதிர்பார்த்து ஏமாந்தவன் நான். எல்லோரும் இரசித்த அப்படத்தை என்னால் ஓரளவே இரசிக்க முடிந்தது. இதுவும் அப்படித்தான் என்று நினைக்கிறேன் .
4.இரா முருகனின் மிளகு நாவலின் கதைச் சுருக்கம் சொல்ல முடியுமா? (சுந்தரராஜன் சியேட்டில்)
ரொம்ப கஷ்டம் சார் , நாலு நுற்றாண்டுகளைத் தடவிக்கொண்டு முன்னும் பின்னும் ஓடுகின்ற கதை .15-ம் நூற்றாண்டு மிளகுராணியாக விளங்கிய சென்னபைரவ தேவியை மையமாகக் கொண்டு நகரும் கதை. 20-ம் நூற்றாண்டு கதாபாத்திரம் ஒன்று காலவெளியில் பின் நோக்கிப் பயணித்து மிளகுராணியின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கின்றது.இக் கதாபாத்திரம் இப்பின்நோக்கிய பயணத்தை மேற்கொண்டிராவிட்டால் சென்னபைரவ தேவியின் வாழ்க்கை எப்படி ஆகியிருக்கக் கூடும் என்று நினைப்பதற்கும் இடமுண்டு.இது போன்ற மாய யதார்த்தவாத படைப்புகளை சுருக்கமாகச் சொல்வது கடினம் .சொல்ல ஆரம்பித்தால் அது சுருக்கமாக இருக்காது . மிளகின் காரத்தையும் சாரத்தையும் முழுவதும் அனுபவிக்கவேண்டும் .
5.தமிழில் பல சொற்கள் வழக்கொழிந்து வருகின்றனவே! பழையன கழிதலும் புதியது புகுதலும் எல்லா மொழிக்கும் பொது என்றாலும் தமிழில் இது அதிகம் என்று தோன்றுகிறது . உங்கள் கருத்து என்ன? (சுந்தரராஜன் சியேட்டில்)
உண்மைதான். உலகத்தின் பல மொழிகளில் பிறமொழிச் சொற்கள் வரும்போது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள் . தமிழில் நாம் ஒவ்வொரு பிறமொழிச் சொல்லுக்கும் தமிழ்ச் சொல்லை உருவாக்குகிறோம் .எனவே நிறைய சொற்கள் புதிதாக வருகின்றன. பல பழைய சொற்கள் வழக்கொழிய, அவற்றின் பயன்பாடு இல்லாமல் போனதே காரணம் . வில்லைப் பயன்படுத்தாத காரணத்தால் “நாண் “ எனும் சொல் வழக்கொழிந்துவிட்டது . தேர் இல்லாததால் ‘அச்சாணி “ போய்விட்டது. அளவீடுகள் தசமத்தில் ஆனதால் வீசை, பலம், காணி எல்லாம் விடைபெற்றுவிட்டன. தமிழ் எழுத்துக்களில் பிற மொழிச் சொற்களை உச்சரிக்கும் வகையில் மாற்றங்கள் செய்தால் அதில் பயனுண்டு என்பது மகாகவி பாரதியின் கருத்து .
6.வானத்தில் எண்ணிலடங்கா விண்மீன்கள் உள்ளன ஆனால் நாம் (இந்தியர்கள்) 27 விண்மீன்களை மட்டுமே கணக்கில் கொள்கிறோம் , ஏன் ?” – ( சுரேஷ் ராஜகோபாலன் )
வானியல் முறையில் பார்த்தால் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் நமது இந்திய சோதிட இயல் முறைப்படி பழங்காலத்தில் 28 நட்சத்திரங்கள் இருந்தன. அது சந்திர நாட்காட்டி முறை. .நாம் இன்று கடைப்பிடிக்கும் முறை சூரிய சந்திர நாட்காட்டி இணைந்த முறை. ( Integration of solar and lunar systems of calendar ). சூரிய முறையில் 12 ராசிகள் ; சந்திர முறையில் 28 நட்சத்திரம் என்பது சரியாக வகுப்படாது. எனவே 27 நட்சத்திரங்களும் அவற்றின் 4 பாதங்களும் ( 27x 4 )108 பாகங்களாக ஆகும் போது கணக்கு சரியாக வந்தது,
7.நம் சமய நூல்கள் 6 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் பெருமான், அப்பர் பெருமான் தேவாரங்களோடு தொடங்குகின்றன. என் ஐயம் திருவள்ளுவர் காலத்தின் முன்னும், அவர் காலத்திலும் சமய அருளாளர்கள் இருந்ததில்லையா? அவர்கள் ஞானநூல்கள் எதுவும் இயற்றியதில்லையா? இருந்தார்கள் என்றால் ஏதேனும் இலக்கிய, வரலாற்று சான்றுகள் நமக்கு – (சிவாயநம முத்துசாமி )
வெகுகாலமாகப் பலரும் விடை தேடிவரும் ஓர் ஐயம். பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுவது போல ,இலக்கியங்கள் கிடைக்காத போது கல்வெட்டுகள் , செப்பேடுகள் போன்றவற்றின் துணைகொண்டு சில முடிவுகளுக்கு வரலாம் என்றாலும் அவை முழுமையான ஆய்வுகள் அல்ல. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் காலம் என்று ஒதுக்கிவிட்டதன் காரணம் ,அக்காலகட்டத்தில் படைக்கப்பட்ட இலக்கியம் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. தற்போது பழைய ஓலைச்சுவடிகள் கிடைத்தாலும் அவற்றைப் படிக்கும் அளவுக்குப் பலருக்குத் திறன் இருப்பதாகத் தெரியவில்லை.
8.திருக்குறள் இல்வாழ்க்கை அதிகாரத்தில் வரும் ‘தென்புலத்தார் ‘ என்னும் சொல்லுக்கு பிதிரர் அல்லது இறந்து விட்ட முன்னோர் என்று பொருள் கூறியிருக்கிறார்கள். ‘தென்புலத்தார் ‘ என்ற சொல்லுக்கு குருமார்கள் என்று பொருள் காண முடியுமா? ( சிவாயநம முத்துசாமி )
நிச்சயமாக முடியாது. எள் இரைத்து வழிபடும் திசையில் உறைபவரே தென்புலத்தார். அதுவே யமன் என்ற மறலி உறையும் திசை. குருவை இறைவனாகத்தான் பார்க்க வேண்டும் என்பதை சங்கர பகவத்பாதாள் சரித்திரத்தில் மகாபெரியவா சொல்லியிருப்பார்கள் .
9.இந்நாள் இளைஞர்களிடம் தமிழார்வம் பெருக இந்நாள் இலக்கியவாதிகள் செய்ய வேண்டியது என்ன?
குதிரையைத் தண்ணீர்த்தொட்டி அருகில்தான் அழைத்துச் செல்ல முடியும். குடிப்பதை அதுதான் செய்ய வேண்டும், என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. இலக்கியவாதிகள் தண்ணீர்த்தொட்டிகள்தான் . (ராமமூர்த்தி லாஸ் ஏஞ்சலிஸ் )
10. சங்கப் பாடல்களில் காணப்படும் கருத்துக்கள் இன்றைக்குப் பொருந்துமா? (வீ. ராகவன் .பெருங்களத்தூர்)
சங்கப் பாடல்கள் என்று பொதுவாகக் கேட்டால் பதில் சொல்ல இயலாது . அதாவது பொருந்தும் என்றும் சொல்லலாம் பொருந்தாது என்றும் சொல்லலாம் .
காலத்துக்கேற்ற வகைகள் அவ்வக் காலத்துக்கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் விளங்கிடும் நூலொன்றுமில்லை
என்பது பாரதி வாக்கு. எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான ஒரு கொள்கையோ அல்லது கருத்தோ இருக்கவே முடியாது. திருக்குறளுக்கும் அதே நிலைதான் . சங்ககாலத்தில் சொன்ன வள்ளண்மை , வீரம், அன்பு, மனிதநேயம் எல்லாம் இன்றும் பொருந்தும். ஆனால் பல பெண்ணியக் கொள்கைகள் இன்று பொருந்தாது. முத்தொள்ளாயிரம் போன்ற கைக்கிளை அதாவது ஒருதலைக்காமம் பற்றிப் பாடும் கருத்துக்கள் இன்று ஏற்புடையன அல்ல.
அரிய தகவல்களைத் தருகிற பதில்.
பயனுள்ள பகுதி.
LikeLike
“வல்லிசா” அல்ல, “வள்ளிசா”. இதன் பொருள் மொத்தமான அல்லது முழுமையான – ஃwholesome-என்பது. தென்மாவட்ட நாவலாசிரியர் கள் அதிகம் பயன்படுத்தும் சொல் இது .
LikeLike