பர்வதராஜனின் மலை வடிவைப் பற்றிச் சொல்லிய கவிஞர் அவனது மனித வடிவைப் பற்றிக் கூறுகிறார்.
அழகே உருவெடுத்த தெய்வமகள் மேனாவை முறைப்படி மணந்த இமவான்
பறக்கும் சிறகுபெற்ற மைனாகன் தன்னை மைந்தனாய்ப் பெற்ற இமவான்
தக்ஷன் தந்தஉடல் அழித்துவந்த தேவிக்குத் தந்தையாய் ஆன இமவான்
செல்வக் குலவிளக்காம் பார்வதியை மேனைக்கு அளித்திட்ட இமவான்
அடுத்தது பார்வதி தேவியின் அறிமுகம் !
மங்களநாயகி பார்வதி சங்க நாதத்துடன் வந்தாள் சந்தன வாசமுடன் வந்தாள்
ரத்தினக்குவியல் மின்னிய மலைபோல மேனையும் பொலிவு பெற்றாள்
மலையரசனிடம் வந்துதித்த பார்வதியும் மலைமகளெனப் பேர் பெற்றாள்
வளர்பிறை நிலவென மின்னும் அங்கமும் ஒருங்கே சேரப்பெற்றாள்
கங்கைப்புனிதமும் தீபஒளியும் சொல்லின்அழகும் ஒருசேர வளர்ந்தாள்
மங்கைப் பருவம்வரை கங்கைக் கரையினில் தோழியர்சூழ பவனிவந்தாள்
அழகே உருவெடுத்த பார்வதியின் புறஅழகை சொல்லுவது இயலாது
கங்கை நீருக்கு அன்னங்கள் தாமே வருவது போல
ஒளிச்செடிக்கு ஒளிக்கற்றை தாமே வருவது போல
முற்பிறவியில் கற்றது பார்வதிக்குத் தாமாகவே வந்தன
மணக்கும் மலரினும் மயக்கும் மதுவினும் மிஞ்சுவது பார்வதியின் இளமை
தூரிகைபட விரியும் சித்திரம் சூரியனைக் கண்ட தாமரை அவளது ரூபம்
செம்பாதம் தரையில் பதிந்து நடைபழகும்போது தாமரை மலராய் மாறும்
எழில்பொங்கும் நடைஅழகு அன்னப் பறவைக்கே வெட்கம் தரும்
உருண்டு திரண்ட காலிற்கே பிரும்மனின் திறமை முழுதும் சென்றதுவோ ?
யானையின் துதிக்கை வாழையின் தண்டு இணைந்தது அவளது தொடைகள்
சிவபிரானே மயங்கிய இடையழகை சொல்லில் சொல்ல இயலுமோ ?
மேகலையில் பதித்த நீலமணியின் ஒளி அவளது ரோமாவளி
இடையின் மெல்லிய மடிப்புகள் மன்மத அழைப்பின் படிகள்
மலரினும் மெல்லிய கரங்கள் சிவனைத் தழுவிடும் கயிறுகள்
மார்பினில் தவழும் முத்துமாலை தனக்கே தேடிக்கொண்ட அழகு
சந்திரனின் ஒளியும் தாமரையின் மணமும் சேர்ந்த காந்த முகம்
பவழத்தில் பதித்த முத்து செந்தளிரில் பூத்த முல்லை அவள் புன்னகை
குயிலே நாணி ஓடும் தேன்கொண்ட தெள்ளமுதம் அவள் குரல்
மருளும் தாமரைக் கண்கள் மான்கள் அவளிடம் பெற்றனவோ?
மையிடாத நீண்ட புருவம் மன்மதன் வளைக்கும் வில்லோ?
மங்கையவள் கூந்தலைக் கண்டும் வெட்கமின்றி வாலசைக்கும் மான்கள்
அழகின் உவமை அனைத்தையும் அவளிடமே பதித்துவிட்டான் பிரும்மனும்
இமவான் இல்லம் வந்த நாரதரரும் சிவபிரானுக்கே அவள் சொந்தம் என்றுரைக்க
நெஞ்சம் நெகிழ்ந்த இமவான் மனத்தால் அன்றே அவளைத் தாரை வார்த்து
பெண்ணை மணமுடிக்க சிவன்வரும் நாளை எண்ணிக் காத்திருந்தான்.
ஸதியைப் பிரிந்த சிவனும் பற்றை முற்றும் துறந்து அலைந்து திரிந்தார்
தவமே சிவம் எனக் கொண்டு இமயச்சிகரம் நோக்கி தாமே நாடிவந்தார்
சிவம் இருக்குமிடம் சிவகணம் இருக்குமிடம் சேவை புரிந்திட தேடிவந்தன
சிவனது வாகனம் ரிஷபமும் ஆங்கேவந்து ஆனந்தக் குரல் எழுப்பிற்று
தவப்பலன்தரும் சிவனே அக்னி சாட்சிகொண்டு அருந்தவம் புரிய வந்தார்
இமயம் வந்த சிவனுக்கு சேவை செய்ய மகளையும் அனுப்பினன் இமவான்
புலன்களை அடக்கிய பிரானும் பார்வதியின் சேவையை ஏற்றுக்கொள்ள
மலர்ந்த முகத்தினள் பார்வதியும் நியமமுடன் சிவசேவை செய்யலானாள் !
(முதல் சர்க்கம் முடிந்தது .. அடுத்தது இரண்டாம் சர்க்கம் !)
அருமை
LikeLike
நன்றி
LikeLike