ஒரு ஞான யோகி சிவனிடம் சென்று, உங்கள் பக்தர்கள் எப்பொழுதும் மந்திரங்களை உரக்கக் கத்திக்கொண்டு திரிகின்றனர். இதனால் என்ன நடக்கும்? நீங்கள் ஏன் அவர்களை நிறுத்தச் சொல்லக்கூடாது என்றார்.
சிவன் அவரைப் பார்த்துச் சொன்னார்:
“நீ ஒன்று செய்”என்றவர் ஒரு புழுவைச் சுட்டிக்காட்டி, ” நீ அதனிடம் சென்று ‘ஷிவ ஷம்போ’ என்று சொல், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார்.
ஞான யோகி அங்ஙனமே செய்தார், அந்தப் புழு செத்து விழுந்தது. அவர் அதிசயித்தார்!
சிவன் புன்னகைத்தவாறே, ஒரு பட்டாம்பூச்சியைக் காட்டி “அதனிடம் போய், அதே மந்திரத்தை சொல்” என்றார்.
ஞான யோகி அப்படியே சொல்ல, அதுவும் செத்து விழுந்தது. யோகி வருத்தத்துடன் இருக்கும் போதே சிவன், ஒரு மானைக் காட்டி, “அதனிடம் போய் மீண்டும் ஒரு முறை சொல்” என்றார். யோகி முதலில் மறுத்தார். ஆனால் சிவனின் வற்புறுத்தலால், சொன்னார். அதுவும் மடிந்து விழுந்தது. “இது என்ன மந்திரம்? எல்லாவற்றையும் கொல்கிறதே!” என்றார் யோகி அதிர்ச்சியாக.
அப்போதுதான் பிறந்த குழந்தையை ஏந்தியபடி ஒரு தாய், சிவனிடம் ஆசிர்வாதம் வாங்க அங்கே வந்தார். சிவனோ யோகியிடம், “அந்த மந்திரத்தை நீ ஏன் இந்தக் குழந்தையிடம் முயற்சி செய்யக் கூடாது” என்றார்.
இந்த பிஞ்சுக் குழந்தையையும் என்னால் கொல்ல முடியாது “என்ற யோகி பதறினாலும், சிவனின் கர்ஜனைக்குப் பயந்து, அந்தக் குழந்தையிடம், ” ஷிவ ஷம்போ”என்று உச்சரித்தார்.
ஆச்சரியம்… அந்த குழந்தை எழுந்து உட்கார்ந்து பேசியது…
“நான் ஒரு புழுவாக இருந்தேன், உங்களின் மந்திர உச்சாடனையில் என்னை ஒரு பட்டாம்பூச்சியாக மாற்றினீர்கள். மற்றும் ஒரு மந்திரத்தால் என்னை ஒரு புள்ளிமானாக மாற்றிப் பரிமாண வளர்ச்சியைக் கொடுத்தீர்கள். மேலும் ஒரு உச்சாடனையில் என்னை மனித உயிராகப் பிறக்கவைத்தீர். இன்னொரு முறை கூறுங்கள்… நான் இறைமையை அடைய விரும்புகிறேன்! “
எங்கே அதிர்வு இருக்கிறதோ, அங்கே ஒலி இருந்தே ஆகவேண்டும். பிரபஞ்சமே ஒலிதான். இதுவே ‘நாதப் பிரம்மா’ பிரபஞ்சம் பல ஒலிகளின் சங்கமம். இந்த ஒலிக் கூட்டில், சில முக்கியமானவை. இவைதான் ‘ மந்த்ரா ‘ என்றழைக்கப்படுகிறது