திருநாவுக்கரசர்
‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்பர்.
அதுபோல் சண்டை போட்டு வென்றவன் சரித்திரத்தில் நாயகன்.
அட .. பொதுவாகச் சொன்னேன்!
சில நாயகர்கள் – ‘இலக்கியவாதி’கள் – காளிதாசன் போல.
சில நாயகர்கள் – ‘பேரழகி’கள் – ஆம்ரபாலி போல.
சில நாயகர்கள் – ‘உலகம் சுற்றும் வாலிபர்’கள்- பாஹியான் போல.
சில நாயகர்கள் – ‘இறையருள் பெற்ற சமயக்குரவர்கள்’ – திருநாவுக்கரசர் போல.
இன்று அவர் தான் நமது நாயகர்.
இடம்: பல்லவ நாட்டின் திருமுனைப்பாடி.
அங்கு புகழனார்-மாதினியார் என்ற தம்பதிகள்.
அவர்கள் மகள் ‘திலகவதி’!
மகன் ‘மருள்நீக்கியார்’!
திலகவதி பெதும்பையானாள்!
அதாவது 12 வயது அடைந்தாள் என்று எழுதியிருக்கலாம்.
ஆனால் என் தமிழ்ப்புலமையை வேறு எங்கு காட்டுவது?
திலகவதி மணப்பருவம் அடைந்தாள் (அந்தக்காலத்தில்!)
மணமகன் – பல்லவ நாட்டு சேனாதிபதி ‘கலிப்பகையார்’!
திருமணம் நிச்சியக்கப்பட்டது.
பல்லவ நாட்டில் அனுதினமும் யுத்தம்.
கலிப்பகையார் யுத்தத்திற்கு அனுப்பப்பட்டார்.
வீட்டில்…
தந்தை புகழனார் மரணமடைந்தார்..
தாயார் மாதினியாரும் காலமானார்.
மக்கள் இருவரும் துவண்டனர்..
இடி மேல் இடி இடித்தது..
போர்க்களத்திலிருந்து மரணமென்னும் தூது வந்தது.
கலிப்பகையார் வீர மரணமடைந்த செய்தி.
மணமாவதற்கு முன் மரணம்.
திலகவதி.. துடித்தார்…
‘இனி வாழ்வில் அர்த்தம் இல்லை’ என்று துவண்டார்.
தன்னைக் கைம்பெண்ணாகக் கருதினார்.
சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி!
திலகவதி உயிர் துறக்க முடிவு செய்தார்.
பாலகன் மருள்நீக்கியார் அழுதான் :
“அக்கா! நீயும் போவதானால்.. பின்னே எனக்கு யாரும் இல்லை. நான் உனக்கு முன்னே போகிறேன்”
திலகவதி:
“தம்பி! உனக்காக நான் வாழ்வேன்”.
மாறாத துன்பங்களைச் சந்தித்த மருள்நீக்கியார் – பற்றற்ற வாழ்வுக்கான வழி தேடினார்.
அந்நாளில் சமணசமயம் ஓங்கிக்கிடந்தது.
ஈர்க்கப்பட்ட மருள்நீக்கியார் – சமணத்தைப் பயின்று பெரும் புலமை கொண்டார்.
சமணத்தில் ஆழ்ந்த அவருக்கு ‘தருமசேனர்’ என்று பட்டமளித்தனர்.
தமக்கையார் திலகவதியார் பெரும் சிவபக்தை…
தம்பி – சிவமார்க்கத்தை விட்டுச் சென்றது அறிந்து – வருந்தினார்.
மருள்நீக்கியார் திடீரென்று சூலை (வயிற்று வியாதி) நோயால் பாதிக்கப்பட்டார்.
பெரும் வேதனையில் துடித்தார்.
தனக்குத் தெரிந்த சமண மருத்துவங்கள் செய்துபார்த்தார்.
ம்ஹூம்.
சமண மருத்துவர்கள் குணப்படுத்த முயன்றனர்.
வேதனை மேலும் கூடியது.
தணல் மேல் நீந்தும் புழுவென துடியாய்த் துடித்தார்.
மயங்கி விழுந்தார்.
சமணக்குருமார்கள் மயில்பீலியைக் கொண்டு தடவி – மந்திரித்த குண்டிகை நீரைக் குடிக்கச்செய்து வைத்தியம் செய்துபார்த்தனர்.
வைத்தியம் பலிக்காமல் – அவர்கள் கம்பி நீட்டினர்.
மருள்நீக்கியார் தமக்கை திலகவதியிடம் சென்றடைந்தார்.
“அக்கா. உயிர் போகிறதே” – என்று அலறிப் புலம்பினார்.
திலகவதி: “சிவபெருமான் உன்னை சோதனை செய்து ஆட்கொள்ளவே இந்த நோய் தந்தார் போலும். அவரைத் தியானித்து இந்தத் திருநீறு அணிந்து… சிவனைப் போற்றிப் பாடுவாய்”- என்றாள்.
சிவாலயம் அடைந்து சிவலிங்கம் முன் அமர்ந்து ‘கூற்றாயினைவாறு விலக்கலீர்’- என்று பதிகம் பாடினார்.
உடனேயே.. நோய் நீங்கியது.
வானில் ஒரு அசரீரி: ”நாவால் இனிய தமிழ்ப்பாடல் பாடினை. இனி நீ நாவுக்கரசன் என்றழைக்கப்படுவாய்”
மருள்நீக்கியார் … திருநாவுக்கரசர் ஆனார்.
அவரது சைவத்தொண்டு துவங்கியது..
கதை இங்கு முடிந்தது என்று நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
இங்கு தான் நம் கதையில் ஒரு ‘ட்விஸ்ட்’.
ஆக்ஷன் சினிமாபோல ஒரு திரைக்கதை விரிகிறது!
சமணமதகுருக்கள் வெகுண்டனர்.
‘துரோகி’ – என்று திருநாவுக்கரசரைத் தூற்றினர்.
அரண்மனையை அடைந்து மன்னன் மகேந்திரவர்மனைச் சந்தித்தனர்.
மன்னன் சமணனாயிற்றே!
“அரசே.. தருமசேனர் தனக்கு சூலை நோய் என்று பொய் சொல்லி – நமது மதத்தை விட்டு விட்டு.. சைவனாகினார்”- என்று புலம்பினர்.
மன்னன் அமைச்சரை அழைத்து தருமசேனரை அழைத்துவர ஆணையிட்டான்.
அமைச்சர் திருநாவுக்கரசரை அணுகி :
“மன்னர் மகேந்திரனின் கட்டளை – உங்களை உடனே அழைத்து வர”
திருநாவுக்கரசர்: “நாமார்க்கும் குடியல்லோம்.. நமனை அஞ்சோம்…” என்று பதிகம் பாடி – வருவதற்கில்லை என்றுரைத்தார்.
அமைச்சர் மனம் நெகிழ்ந்து.. அவர் தாள் பணிந்து :”தயவு செய்து வந்தருள வேண்டும்” – கெஞ்சினார்.
திருநாவுக்கரசர் அன்புக்குப் பணிந்து உடன் சென்றார்.
பல்லவன் சபை.
சமண குருக்கள்: “மன்னா.. வெண்ணீறு அணிந்த இவனை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளவேண்டும்”.
மன்னன்: “அவ்வாறே ஆகட்டும்”
திருநாவுக்கரசரை எரியும் நெருப்பில் இருந்த சுண்ணாம்புக் காளவாயில் தள்ளினர்.
சூரியனைப் போல சுட்டெரித்த தீ!
அது..
நிலவின் அடியில் வீசும் இளவேனில் தென்றல்போல் அவருக்குக் குளிர்ந்தது..
‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ – என்று பதிகம் பாடினார்.
ஏழு நாட்கள் கடந்தபின் – மன்னன் ஆணைப்படி – சமணகுருக்கள் நீற்றறையைத் திறந்தனர். திருநாவுக்கரசர் புன்முறுவலுடன் சுகமாக இருந்தார்.
ஆத்திரம் பொங்க சமணகுருக்கள்- மன்னனிடம் சென்று:
“மன்னா.. இவன்.. சமண மந்திரங்களைக் கூறி சாவிலிருந்து தப்பினான். இவனை நஞ்சிட்டுக் கொல்லவேண்டும்” – வேண்டினர்.
பல்லவன் : “அப்படியே செய்யுங்கள்” என்றான்.
அவர்களும் திருநாவுக்கரசரை நஞ்சு கலந்த பாற்சோறு அருந்த வைத்தனர்.
நஞ்சே அமுதமாயிற்று.
சமணர்கள் நிலைகுலைந்தனர்.
மன்னரிடம் சென்று:
“இவனை மத யானையால் இடறச்செய்து கொல்லவேண்டும்”- என்றனர்.
பல்லவன்: “சரி”
மதயானை திருநாவுக்கரசர் மீது ஏவிவிடப்பட்டது..
திருநாவுக்கரசர் சிவனை சிந்தையிலிருத்தி : “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்”- என்று துவங்கி “அஞ்சுவது யாதொன்றுமில்லை.அஞ்ச வருவதுமில்லை “ என்று முடியுமாறு பதிகம் பாடினார்.
மதயானை சமணர்களைத் துரத்தி …பலரைக் கொன்றழித்தது.
தன் வினை தன்னைச் சுடும்!
எஞ்சியவர்கள் மன்னரிடம் சென்றனர்.
மன்னன் சமணர்களை வேண்டாவெறுப்பாகப் பார்த்தான்.
‘இனி என்ன”- கர்ஜித்தான்.
சமணர்கள் “தருமசேனரைக் கல்லில் கட்டிக் கடலில் செலுத்தவேண்டும்”.
மன்னன்: “இதுவே கடைசி முறை.. “-எச்சரித்தான்.
கல்லில் கட்டிக் கடலில் படகில்சென்று திருநாவுக்கரசரை கடலில் தள்ளிவிட்டுத் திரும்பினர்.
‘சொற்றுணை’ என்று தொடங்கி ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ – என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார்.
உடனே கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்தது…கல் தெப்பமாயிற்று… வருணன் – காற்றை கரை நோக்கி வீச…கரை சேர்ந்தார்.
மனிதர்குலத்தை கரை சேர்க்கப் பிறந்தவர் … சுகமாகக் கரையேறினார்!
இரண்யன் பிரகலாதனை செய்ததுபோல … மகேந்திரன் திருநாவுக்கரசரை செய்தான்..
நரசிம்மர் பிரகலாதனைக் காத்து … இரண்யணைக் கோபித்து அவனைக் கிழித்தார்..
சிவபெருமான் திருநாவுக்கரசரைக் காத்து… மகேந்திரனுக்குப் பாடம் புகட்டினார்.
அன்பே சிவம்!!
வைணவ ரசிகர்கள் கோபப்படவேண்டாம்!
மகேந்திரன் – திருநாவுக்கரசரின் மகிமை அறிந்து… சமணர்களைத் துரத்தினான்
திருநாவுக்கரசர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவதிகை அடைந்தார்.
கேள்வியுற்ற மகேந்திரன் .. நால்வகைப்படையுடன் மங்கல வாத்தியம் முழங்க திருநாவுக்கரசரின் பாதங்களைப்பற்றி.. வணங்கி.. பிழை பொறுத்தருள வேண்டினான்.
திருநாவுக்கரசர் பல்லவனுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து திருவெண்ணீர் அளித்தார்.
மகேந்திரவர்மன் அன்றிலிருந்து சைவனானான்!
இந்தியாவின் சரித்திரத்தில்.. சமணம் மெல்ல அழியத் துவங்கியது..
இந்தக்கதைக்கு இங்கு ‘இடைவேளை’ நேரம்!
நமது சூப்பர் ஸ்டார் திருநாவுக்கரசர் கதை…
(தொடரும்..)