சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –
-என். செல்வராஜ்
திலீப்குமார்
குஜராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் மீது பற்று கொண்டவர். இவருடைய கதைகள் யதார்த்தத்தின்
களத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவபூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். மூங்கில் குருத்து, கடவு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. கடவு சிறுகதை தொகுப்பை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழிலிருந்து சிறப்பாக ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு செய்யக்கூடியவர். சிறந்த தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் இரண்டு நூல்களாக தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் மூங்கில் குருத்து, கடிதம், அக்ரஹாரத்தில் ஒரு பூனை, மனம் எனும் தோணி பற்றி
கோணங்கி
சுதந்திர போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் பேரன் கோணங்கி. இவரது இயற்பெயர் இளங்கோ. இவரது அண்ணன் ச தமிழ்ச்செல்வன். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோணங்கி “கல்குதிரை” என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார். இவரது மொழி நடை தனித் தன்மையானது.இவரின் சிறுகதைகளில் மதினிமார்களின் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள் சிறப்பானவை. சலூன் நாற்காலியில் சுழன்றபடி என்ற முழு தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் மதினிமார்களின் கதை, கருப்பு ரயில், கோப்பம்மாள்
ஜெயமோகன்
1987 ல் கணையாழியில் நதி சிறுகதை அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. 1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தமிழ்ப் புத்தகாலயம் இந் நாவலை வெளியிட்டுள்ளது. 1998 முதல் 2004 வரை “சொல்புதிது” என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் என்ற நாவல் புகழ் பெற்றது. ஜெயமோகன் சிறுகதைகள் என்ற முழு தொகுப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்புக்குப் பின் ஊமைச்செந்நாய், அறம், வெண்கடல் ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், சங்க சித்திரங்கள் ஆகிய கட்டுரை நூல்கள் சிறப்பானவை. இவரின் சிறந்த சிறுகதைகள் திசைகளின் நடுவே பத்ம வியூகம், நதி, மாடன் மோட்சம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய்
லா ச ராமாமிர்தம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்தவர் லா ச ரா. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டும் எழுதிவந்த லா ச ரா தனது ஐம்பதாவது வயதில்
புத்ர நாவலை எழுதினார். தினமணிக்கதிரில் சிந்தாநதி என்ற வாழ்க்கைத்தொடரை எழுதினார். சிந்தாநதி நூலுக்காக 1989 ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றார். அவருடைய பாற்கடல் முக்கியமான படைப்பு. ராமாமிர்தத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். லா ச ரா தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார். அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும்.தமிழின் முன்னோடி எழுத்தாளரான அவர் மணிக்கொடி எழுத்தாளுமைகளுளின் இறுதிச் சுடராகவும் ஒளி வீசியவர். கதை சொல்லலில் புதிய நுட்பங்களைப் புகுத்தியவர். மனத்தின் அசாதாரணங்களைக் கவிதை மொழியில் புனைவாக ஆக்கியவர். ‘அபிதா, ‘புத்ர’. ‘செளந்தர்ய’ ஆகிய அவரது நாவல்கள் தமிழின் செவ்வியல் நாவல்களாகப் போற்றப்படுகின்றன. ஒரு விதத்தில் லா.ச. ரா அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை. இவரின் சிறந்த சிறுகதைகள் பாற்கடல், ஜனனி, பச்சை கனவு
சுப்ரபாரதி மணியன்
இவர் சிறுகதைகள் , நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பல தளங்களிலும் முப்பது வருடங்களாக எழுதி வருபவர். பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டவர். கனவு என்ற இலக்கிய சிற்றிதழை முப்பது வருடங்களாக நடத்தி வருபவர். இவரது சாயத்திரை, மற்றும் சிலர், ஆகிய நாவல்கள் சிறந்த நாவல்களாகும். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை சுப்ரபாரதி மணியன் கதைகள் என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.சுப்ரபாரதி மணியனின் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே சமகால வாழ்வியல் தரிசனத்தின் பன்முகக்கூறுகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. நகரமயமாதலின் விளைவான சூழல் பாதிப்பு, பொருள் மயமாதலின் காரணமாக மனித உறவுகளில் ஏற்படும் முரண்கள் இவை இரண்டும் இவரது கதைகளில் துலக்கம் பெறுகின்றன. இவரின் சிறந்த சிறுகதைகள் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும், வாக்கு
இந்திரா பார்த்தசாரதி
கும்பகோணத்தைச்சேர்ந்த இந்திரா பார்த்தசாரதி சிறந்த நாவலாசிரியர். சிறந்த நாடகாசிரியர். இவர் படைப்பாளியாகவும் ,பேராசியராகவும் ஒருங்கே
செயல்படும் வாய்ப்பு பெற்றவர். குருதிப்புனல் என்ற நாவலுக்காக 1977ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். குருதிப்புனல் , தந்திர பூமி, சுதந்திர பூமி போன்ற இவரது நாவல்கள் அரசியல் சார்ந்தவை. இராமானுஜர் நாடகத்திற்காக சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர். இவரது நாடகங்கள் ஔரங்கசீப், நந்தன் கதை, இராமானுஜர் ஆகியவை சிறந்த படைப்புக்களாகும். கணையாழி இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றினார். 39 ஈழத்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை எஸ் பொவுடன் இணைந்து ” பனியும் பனையும் “என்ற தொகுப்பை தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு கப் காப்பி, தொலைவு,
இளமாறன் கொடுத்த பேட்டி, நாசகார கும்பல், பயணம்
எம் வி வெங்கட்ராம்
கும்பகோனத்தில் சௌராஷ்டிரா குடும்பத்தில் பிறந்த இவர் பல சிறுகதைகளை எழுதி உள்ளார். தேனீ என்ற சிற்றிதழை சில காலம் நடத்தினார்.
இவரது சிறுகதைகள் முழு தொகுப்பாக வெங்கட்ராம் கதைகள் என்ற தொகுப்பாக கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் வெளியிட்டுள்ளது. நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் 50 க்கு மேற்பட்ட நூல்களை சிறுவர்களுக்காக இவர் எழுதி பழனியப்பா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு காதுகள் என்ற நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றார். இவரது நித்ய கன்னி அழியாப்புகழ் படைத்த நாவலாகும். இவரின் சிறந்த சிறுகதைகள் பைத்தியக்கார பிள்ளை, தத்துப்பிள்ளை,
சார்வாகன்
சார்வாகன் என்று இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் ஹரி ஸ்ரீனிவாசன் ஒரு தொழுநோய் மருத்துவர் மற்றும் தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரியாக்குவதில் சார்வாகன் கண்டுபிடித்த முறைகள்தான் இன்றும் அவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. இதற்காக இவருக்கு 1984 இல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.எழுத்தில் ஆர்வம் கொண்ட இவர் கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். இவரின் கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.இவர் எழுத்துக்கள் முழு தொகுப்பாக சார்வாகன் கதைகள் என்ற பெயரில் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவரின் சிறந்த கதைகள் கனவுக்கதை, சின்னூரில் கொடியேற்றம்
எஸ். சம்பத்
சம்பத்தின் இளமைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. 1984-ல் இடைவெளி நாவல் வெளிவருவதற்கு முன்பு எஸ். சம்பத் என்று
அறியப்பட்ட சம்பத் இடைவெளி வந்த பின் ‘இடைவெளி சம்பத்’ என்றே அறியப்பட்டார். சிறுகதைப் பரப்பில் சம்பத் எழுதிய கதைகள் அதிகம் இல்லை. ஆனால் எழுதிய கதைகள் எதிர் மரபு சார்ந்தவை.அங்கீகரிக்கப்பட்ட கதைகூறல் மரபுக்கு, கருத்துக்கு எதிராகப் புனைவு செய்யப்பட்டவை. இவரது கதைகளை இரண்டு தொகுதிகளாக நவீன விருட்சம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் சாமியார் ஜூவுக்கு போகிறார், இடைவெளி
நகுலன்
டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது
கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். ‘எழுத்து’ இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த ‘குருஷேத்திரம்’ இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன். நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகள். அவர் மனிதனின் இருப்பு சார்ந்தே கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவரின்சிறந்த சிறுகதைகள் ஒரு ராத்தல் இறைச்சி, அயோத்தி, ஒரு எட்டு வயது பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்