கைகளில் முகம் புதைத்து டைனிங் டேபிளில் கவிழ்ந்திருந்தவனை செல் போன் சிணுங்கிக் கலைத்தது. அசுவாரஸ்யமாக செல்லை எடுத்துப் பார்த்தவன் வந்த காலை நிராகரித்தான்..
அவன்.. விக்னேஷ்.. வயது இருபத்தாறு.. ஜெயம் ரவி தோற்றம்.. ப்ரீ-லான்ஸ் எழுத்தாளன்.. பல ஆங்கிலப் பத்திரிகைகளில் அவன் எழுத்து பிரசித்தம்.. தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு.. முக்கியமான விஷயம்.. பிராமாதமான குக்..
சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்தக் காலத்துக் கடிகாரத்திலிருந்து பட்சி நான்கு முறை உள்ளே வெளியே செய்து கூவியது..
விக்னேஷ் அறையை எட்டிப் பார்த்தான்..
உள்ளே ஆத்மா என்ற ஆத்மநாதன்.. விக்னேஷின் அப்பா.. கட்டிலில் கால் மேல் கால் போட்டபடி அட்டகாசமாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.
விக்னேஷ் மெதுவாக எழுந்து அவரருகில் சென்றான்..
”ஆத்மா..”
அப்பாவை அவன் அப்படித் தான் அழைப்பான்..
“ஆத்மா.. எழுந்திருங்கோ”
ஆத்மா கண் திறக்காமல் எதையோ அனுபவிப்பது போல் முக மலர்ச்சியுடன் தலையாட்டினார்..
“ஆத்மா..”
என்று அவரைத் தட்டி எழுப்பினான் விக்னேஷ்.
பட்டென்று கண் விழித்த ஆத்மா ”என்ன?” என்பது போல் அவனை முறைத்தார்..
“நேரமாறது.. எழுந்திருங்கோ”
ஆத்மா முறைப்பு குறையாமல் சீறினார்.
“அறிவு இருக்கா.. மதுரை மணி ஐயர் தாயே யசோதா பாடிண்டிருந்தார்.. அனாவசியமா எழுப்பி என் கனவுல ஓடிண்டிருந்த அருமையான கச்சேரியை பாதில கெடுத்திட்டியே..”
இதைக் கேட்டு விக்னேஷ் லேசாகச் சிரித்தான். இது வழக்கமாக நடப்பது தான்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவு..
”சீக்கிரம் பல் தேச்சிட்டு வாங்கோ.. காப்பி சாப்பிடலாம்”
ஆத்மா பல் விளக்குவதற்குள் விக்னேஷ் ஸ்ட்ராங் காப்பியுடன் வந்தான். ஒரு வாய் உறிஞ்சிய ஆத்மாவின் முகத்தில் சந்தோஷம்..
“சும்மாச் சொல்லக் கூடாது.. உங்கம்மாவோட கை மணம் உங்கிட்ட அப்படியே இருக்கு”
“இதை இதோட லட்சத்து இருபது தடவை சொல்லியாச்சு”
“உண்மையை எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லலாம்டா.. ஆமா இன்னிக்கு என்ன பிரேக் பாஸ்ட் பண்ணப் போறே?”
”உங்களுக்குப் பிடிச்ச பொங்கல் பண்ணலாம்னு இருக்கேன்”
“கூட வெங்காய கொத்சு பண்ணிரு”
“இன்னிக்கு வெள்ளிக் கிழமை.. வெங்காயம் கூடாதுன்னு நீங்க தானே சொல்வேள்?”
“ஓ.. இன்னிக்கு வெள்ளிக் கிழமையா? அஞ்சு நாள் ஓடிப் போச்சா? சரி.. வெங்காயம் வேண்டாம்.. சாம்பாரும் சட்னியும் பண்ணிரு”
”சரிப்பா”
விக்னேஷ் உடனே வேலையில் இறங்கினான்.
டைனிங் டேபிளில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஆத்மா திடீரென்று ஞாபகம் வந்தவராக..
“விக்னேஷ்.. கொஞ்சம் ஆனந்தம் முதியோர் இல்லம் வரை போயிட்டு வரணும்”
மிக்ஸியில் சட்னிக்கு அரைத்துக் கொண்டிருந்த விக்னேஷ் புரியாமல் திரும்பி அப்பாவைப் பார்த்தான்.
“எதுக்குப்பா?”
“உள்ள நிறைய வேஷ்டி, ஜிப்பாலாம் எடுத்து வெச்சிருக்கேன்.. நான் அதிகமாப் போட்டுக்காம எல்லாம் புதுசா அப்படியே இருக்கு.. நான் எங்க அதெல்லாம் போட்டுக்கப் போறேன்? அதான்.. அதையெல்லாம் அங்க.. ஆனந்தத்துல இருக்கிறவா கிட்டக் கொடுத்தா.. சந்தோஷமாப் போட்டுப்பா”
“இப்ப என்னப்பா அதுக்கு அவசரம்?”
“இல்லைடா.. ஏதோ தோணித்து.. சொன்னேன்.. நல்ல விஷயம் தானே..”
விக்னேஷ் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவனுக்குத் தெரியும்.. அப்பா ஒன்று நினைத்தால் அதை முடிக்காமல் விட மாட்டார்.
மதியமே ஆனந்தம் முதியோர் இல்லம் போய் துணிமணிகளைக் கொடுத்து விட்டு வரும் வரை விக்னேஷை அவர் விடவில்லை என்பது தான் உண்மை..
அன்று ஆத்மா மும்முறமாக ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.. விக்னேஷ் அவரருகில் அமர்ந்து..
“என்னப்பா படிக்கறேள்?”
“சுஜாதாவோட வாரம் ஒரு பாசுரம்.. பாசுரங்களுக்கு.. இதை விட எளிமையா நச்சுன்னு யாராலயும் விளக்கம் சொல்ல முடியாதுடா..”
என்று தொடர்ந்து அதில் லயித்தார்..
”கேளேன் பூதத்தாழ்வார் என்ன சொல்றார் தெரியுமா?
அன்பே தகளியா.. ஆர்வமே நெய்யாக..
இன்புருகு சிந்தை இடுதிரியா.. நன் புகழ்சேர்
ஞானச் சுடர் விளக்கேற்றினேன்.. நாரணற்கு..
ஞானத் தமிழ் புரிந்த நான்..”
படித்து முடித்து சில விநாடிகள் கண்களை மூடிக் கொண்டார்.. பிறகு அவரே தொடர்ந்தார்..
“என்ன ஒரு பக்தி பார்த்தியா? அன்பை அகல் விளக்காக்கிட்டார்.. ஆர்வத்தை அதுல நெய்யா விட்டுட்டார்.. சிந்தனையை திரியாக்கிப் பத்த வெச்சுட்டார்.. அதுல கிடைக்கிற பகவத் தரிசனம்.. ஞானம்.. விஷுவலைஸ் பண்ணிப் பாரு.. நினைச்சாலே புல்லறிக்கறது..”
மறுபடியும் கண்களை மூடிக் கொண்டு அனுபவிப்பு..
“இந்தப் புஸ்தகத்தை.. ஒரேயடியாப் படிக்கக் கூடாது.. திகட்டிடும்.. அப்பப்ப எடுத்துப் படிக்கணும்.. அப்பத்தான்.. உள்வாங்கி ரசிக்க முடியும்.. அனுபவிக்க முடியும்.. சுஜாதா.. சுஜாதா தான்..
அப்பாவின் அனுபவிப்பில் விக்னேஷும் கரைந்து போனான்.
மறுநாள் ஆத்மவும் விக்னேஷும் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருக்க..
“என்னடா காத்தே இல்லை” என்று ஆத்மா சலித்துக் கொண்டார்.
”வெதர் அப்படி இருக்குப்பா”
சமாதானம் சொன்னான் விக்னேஷ்.
“ஹும்.. ரெண்டு மாசம் முன்னால ஊட்டி போகலாம்னு நீ சொன்னே.. அப்ப இருந்த மூடுல வேண்டாம்னு சொல்லிட்டேன்..”
ஆத்மாவின் குரலில் ஏக்கம் தெரிந்தது.
“இப்பக் கூடச் சொல்லுங்கோப்பா.. உடனே ஏற்பாடு பண்ணறேன்..”
“வேண்டாம்.. இப்ப வேண்டாம்”
“ஏம்பா?”
“என்னமோத் தோணலை.. இப்ப இங்கயே இருக்கணும் போலருக்கு.. சரியா?”
“சரிப்பா”
கைகளில் முகம் புதைத்து டைனிங் டேபிளில் கவிழ்ந்திருந்த விக்னேஷை செல் போன் சிணுங்கிக் கலைத்தது. எடுத்துப் பார்த்து..
“ஹலோ”
“விக்னேஷா.. இன்னும் கிளம்பலையா? அவாள்ளாம் காத்திண்டிருப்பாடா..”
விக்னேஷின் பெரியப்பா..
“கிளம்பறேன் பெரியப்பா.. அப்பா கூடப் பேசிண்டிருந்தேன்..”
மறுமுனையில் சிறிது மௌனம். பிறகு பெருமூச்சு விட்டு..
“புரியறதுடா.. பேசிக்கோ.. அப்பா கூட நன்னாப் பேசிக்கோ.. இன்னும் கொஞ்ச நேரம் தான்..”
விக்னேஷ் மௌனமாக இருந்தான்..
“உங்கப்பாவோட ஸ்தூல சரீரம் மறைஞ்சாலும்.. இந்த பத்து நாளும் அவன் ஆத்மா அங்கயே தான் சுத்திண்டிருந்தது.. உன் பாசத்துக்குக் கட்டுப் பட்டு உங்கூடவே தான் இருந்திருக்கு.. இன்னிக்கு பத்தாம் நாள்.. அந்தப் பாசத்துலேர்ந்து விடுபட்டு.. அடுத்த கட்டம்.. கடவுளை நோக்கி.. ஞானத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பிச்சுரும்.. அப்புறம் உங்கப்பாவை நீ ஒரு ஞான ரூபியாத் தான் பார்க்கணும்.. இதை நான் சொல்லலைடா.. புராணம் சொல்றது..”
”… …”
“விக்னேஷா.. உனக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் எனக்குத் தெரியும்டா.. ஆனா என்ன பண்ண? காலத்தை நம்மால ஜெயிக்க முடியாதே.. மனசைத் தேத்திக்கோ.. சீக்கிரம் கிளம்பி வா..”
செல்லை வைத்த விக்னேஷ் அறையை எட்டிப் பார்த்தான்..
உள்ளே கட்டில் காலியாக இருந்தது..
அவனையுமறியாமல் கைகளில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழுதான்.
இறுதி வரிகளில் இதயத்தை உலுக்கி விட்டீர்…
திகிலே ஏற்படாத வண்ணம் ஒரு திகில்.
அற்புதம்
வாழ்த்துகள்
முகில் தினகரன்
கோவை
LikeLike
அப்பா மீதான பாசம் இப்படித் தான் இருக்கும் அவர் இல்லாத போதும். நன்று சார்.
LikeLike
ஆடைகளை அனாதை ஆசிரமத்திற்கு தர வேண்டும் எனும் போதே, முடிவு இப்படித்தான் என ஊகிக்க முடிந்தது. இருப்பினும் “ஆத்மா”ர்த்தமான பாசத்தை அழகாய் வெளி படுத்தியது கதை.
LikeLike
உணர்ந்த முடிவுதான் எனினும் அந்திமத்தை, தந்தை மகன் பாசத்தை, நெக்குருகும் இறையுணர்வை இப்படி பலவற்றையும் உணர்த்துகிறது ஆத்மா.வாழ்த்துகள் படைப்பாளிக்கு.
LikeLike