தீர்ப்பு – மூலம் : பிரான்ஸ் காஃப்கா தமிழில் : தி.இரா.மீனா

 

வசந்தகாலத்தின் ஒரு ஞாயிறு காலைப் பொழுதில், ஜார்ஜ் பெண்டர்மென் முதல்மாடியிலுள்ள தனது சிறிய அறையில்உட்கார்ந்திருந்தான். தாழ்வான ஆற்றுப் பகுதியை ஒட்டி மிக மோசமாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடம் அது. உயரத்தையும் ,நிறத்தையும் மட்டும் வைத்தே ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தறிய முடியும். அவன் அப்போது தான் வெளிநாட்டிலுள்ள தன் இளம்பருவத்து நண்பன் ஒருவனுக்கு கடிதம் எழுதி முடித்திருந்தான். எழுதும் மேஜையில் கையை ஊன்றி ஜன்னல் வழியாக ஆறு,பாலம், கண்ணுக்குத் தெரிகிற பசுமையான குன்றுகள் ஆகியவற்றை நிலையின்றிப் பார்த்தபடி கடிதத்தை ஒட்டினான்.

தனக்கு சாதகமான நிலை வீட்டில் இல்லாததால் அங்கிருப்பதை வெறுத்து சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவிற்கு ஓடிப்போன தன் நண்பனை நினைத்துப் பார்த்தான்.இப்போது அவன் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு தொழில் நடத்துகிறான். தொடக்கத்தில் நன்றாக நடந்த தொழிலில் இப்போது தள்ளாட்டம் இருப்பதால் ஊருக்கு வரவேண்டிய தன் நிர்பந்த நிலையை வருத்தமாகச் சொல்லியிருக்கிறான். வெளிநாட்டில் வேலை செய்வதால் எந்தப் பயனுமில்லை என்ற எண்ணம் ஜார்ஜுக்குள் எழுந்தது. தனது இளம்பருவ நாட்களிலிருந்து நினைவிலிருந்த அந்த முகம் இப்போது தாடியால் மறைக்கப்பட்டு,தோல் வெளிறி, நோயாளி போன்ற தன்மையைத் தந்தது. அவன் சொன்னதுபோல அவனுக்கு அந்தக் காலனியில் தன் நாட்டு மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. உள்ளூர்க் குடும்பங்க ளோடு அத்தனை நெருக்கமின்றி தன்னை ஒரு நிரந்தர பிரம்மச்சாரியாக நினைத்துக் கொண்டான்.

அப்படிப்பட்ட நண்பனுக்கு உதவி எதுவும் செய்யமுடியவில்லை. வருத்தம் தெரிவிப்பதைத் தவிர என்ன எழுதமுடியும். பழைய நட்பை,உறவுகளை புதுப்பித்துக் கொள்ள மீண்டும் வீட்டிற்கு வரச் சொல்லி அறிவுரை சொல்லலாமா? உண்மையில் யாரும் தடை சொல்ல முடியாது. இங்கே வாழ்வதற்கு,நண்பர்களின் உதவியை நாட அறிவுரை சொல்லலாமா அப்படிச் சொல்வதும் அவன் நிலையைத் திரும்ப எடுத்துச் சொல்வது தானே—யாரோ சொன்னது போல அது அவனை மிகுதியாகக் காயப்படுத்தலாம் —முன்னாள் முயற்சிகள் வெற்றியடையாமல் போனதைச் சொல்லி அவன் அங்கிருந்து வரவேண்டும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரும்பும் அவனை ஊதாரியாக எல்லோரும் பார்ப்பார்கள். நண்பர்கள் மட்டும் புரிந்து கொள்வார்கள். குடும்பத்துடன் தங்கியிருந்து, வெற்றிபெற்ற நண்பர்களின் பேச்சிற்குப் பணிந்து, வயதுவரம்பு கடந்தவனாக இருக்க வேண்டிய நிலைவரலாம்.அவனைக் குறை சொல்லியவர்களுக்கு இது சாதகமாகி விடும்.அவனைத் திரும்ப ஊருக்கு வரச்சொல்வது சரியான முடிவாக இல்லாமல் போகலாம்—அவனால் தன் ஊர் நிலையைப் புரிந்து கொள்ளமுடியாது.அறிவுரைகளால் வெறுப்படையும் அவன் நண்பர்களைப் பிரிந்திருந்தாலும் வெளிநாட்டிலிருப்பதே சரி ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
2
ஆனால் அவர்களின் அறிவுரைப் படி இங்கு வந்து மன அழுத்தம் அடைந்து – வேண்டுமென்றே இல்லை, ஆனால் அவனுடைய சூழ்நிலை யால்-– நண்பர்களுடனோ ,நண்பர்களில்லாமலோ ,வாழ்க்கையோடு இணங்க முடியாமல்,உண்மையில் நாடோ,நண்பர்களோ இல்லாமல் வருந்துவதை விட இப்போது இருப்பது போலவே வெளி நாட்டில் இருப்பது உசிதம். அவனால் உண்மையாகவே இங்கு வந்து முன்னேற முடியுமா?

உண்மை நிலையை வெளிப்படுத்தாமல் கடிதங்கள் மூலமாகத் நட்பை தொடர்ந்து கொண்டு, நெருக்கமானவர்களிடம் தடையின்றிப் பேசலாம். நண்பன் ரஷ்யா போய் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ரஷ்யா வின் நிலையற்ற அரசியல் பிரனைகள் காரணமாகத் தன்னால் வரமுடிய வில்லை என்று பொருத்தமில்லாத காரணத்தை அவன் சொல்கிறான். ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் உலகம் முழுவதும் அமைதியாகப் பயணம் செய்து கொண்டிருக்க, சிறிய வியாபாரியான அவன் சில நாட்கள் கூட வரமுடியவில்லை என்பது ஏற்க முடியாதது தான்.

ஆனால் இந்த மூன்று வருடங்களில் ஜார்ஜின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தாயின் மரணத்திற்குப் பிறகு ஜார்ஜ் தந்தையோடிருந்தான். நண்பனுக்கு செய்தி தெரிந்து கடிதத்தில் தன் இரங்கலைத் தெரிவித்திருந்தான். வெளி நாடுகளில் அது போன்ற நிகழ்வு அத்தனை வருத்தத்தை தராது என்பதால் அவன் கடிதம் உணர்ச்சியற்று இருந்தது.ஆனால் அந்தச் சமயத்திலிருந்து ஜார்ஜ் தன் தொழிலை தீர்க்க மான முடிவோடு கையாளத் தொடங்கியிருந்தான். ஜார்ஜ் தனக்கெனத் தனியாகத் தொழில் தொடங்கக் கூடாதென்பது அப்பாவின் எண்ணம்.தவிர அம்மா உயிருடனிருந்த வரை தொழிலில் அவன் எந்த அபிப்ராயம் சொன்னாலும் அப்பா அதற்குத் தடை சொல்பவராக இருந்தார்.அம்மாவின் மறைவிற்குப் பிறகு தொழிலில் இருந்தாரெனினும் ஒருவிதத் தளர்ச்சி அவரை ஆட்கொண்டது; அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் திரும்பியது. அது மிக அரியதுதான்.இந்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்க்காமல் தொழில் நல்லவளர்ச்சி அடைந்தது. வேலையாட்களின் எண்ணிக்கை இரண்டு பங்காக அதிகரித்தது.வருமானம் பெருகியது. இன்னும் வரப்போகும் வருடங்களில் அது பெருகும் என்பதில் சந்தேக முமில்லை

அவனுடைய நண்பனுக்கு இந்த மாற்றங்கள் பற்றியெல்லாம் தெரியாது. கடிதத்தில் ஜார்ஜ் ரஷ்யாவில் குடியேறவேண்டும் என்றும் அத்தொழில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நன்றாக வளரக் கூடியது என்றும் குறிப்பிட்டிருந்தான்.அந்த நல்ல வளர்ச்சியை இப்போது இங்கேயே ஜார்ஜின் தொழில் பெற்றிருந்தது. ஆனால் தன் தொழில் ரீதியான வளர்ச்சியை நண்பனுக்கு தெரிவிக்க ஜார்ஜுக்கு விருப்பமில்லை.தவிர இவ்வளவு தாமதமாக இப்போது அதைச் சொல்வது நிஜமாகவே வினோதமாகவே இருக்கும். அதனால் மிக முக்கியமற்ற விவரங்களை மட்டும எழுதினான். தானில்லாத காலத்தில் ஊரில் நடந்தவைகள் தெரியாமல் தனது ஊரைப் பற்றிய கற்பனையில் அவன் வாழப் பழகிக் கொண்டு விட்ட நிலையை ஜார்ஜ் மாற்ற விரும்பவில்லை.
3
அதிகப் பரிச்சயமில்லாத ஒருவனின் நிச்சயதார்த்தம் குறித்து நண்பனுக்கு ஜார்ஜ் விரிவாகக் கடிதங்கள் எழுதினான்.ஜார்ஜின் எதிர்பார்ப்புக்கு மாறாக நண்பன் அந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.ஒரு மாதத்திற்கு முன்னால் தனக்கு ப்ரீடா பிராண்டன்லெட் என்ற பெண்ணோடு தனக்கு நடந்த நிச்சயதார்தத்தை எழுதி மன்னிப்பு கேட்பதை விட இப்படி யான சில விஷயங்களை எழுதுவதை விரும்பினான்.தபால் மூலமாக நண்பனுக்கு வித்தியாசமான கடிதங்கள் எழுதியது குறித்து அடிக்கடி தன் காதலியிடம் பேசியிருக்கிறான்.“அப்படியென்றால் அவர் நம் திருமணத்திற் குக் கண்டிப்பாக வர வாய்ப்பில்லை என்றாலும் உங்கள் எல்லா நண்பர்களையும் சந்திக்கும் உரிமை எனக்கிருக்கிறது ”என்று அவள் சொன்னாள்.“நான் அவனைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதே.ஒருவேளை அவன் வரலாம் என்று நான் நினைக்கிறேன்.ஆனால் கண்டிப்பாக அவன் என்னைப் பார்த்து பொறாமைப் படலாம். மகிழ்ச்சியின்றி தனியாக வர நேர்ந்தது பற்றி வருத்தப்படுவான்.”
“தனியாக—உனக்கு அதன் அர்த்தம் புரிகிறதா?”
“ஆனால் நம் திருமணம் பற்றி அவர் வேறுவழியில் தெரிந்து கொள்ள முடியாதா?”
“ஆமாம்.என்னால் அதைத் தடுக்க முடியாது.ஆனால் அவன் வாழ்க்கை வசதிகளைப் பார்க்கும் போது அது இயலாதது என்றுதான் தோன்றுகிறது.”
“ஜார்ஜ், உங்களுக்கு அப்படியான நண்பர்களிருந்தால் நீங்கள் நிச்சயதார்தத்திற்கு உடன்பட்டிருக்கக் கூடாது.“சரி,எங்கள் மீது தப்புதான்,ஆனால் இப்போது எதுவும் மாறுவதை நான் விரும்பவில்லை.” என்று சொல்லி முத்தமிட்டான்.“ஆனாலும் இது எனக்கு வருத்தம் தருகிறது.”என்றாள் அவள்.’இப்படித்தான் நான். அவன் என்னை அப்படித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் .நட்பு என்பதற்காக நான் இன்னொரு மனிதனாக என்னை செதுக்கிக் கொள்ள முடியாது.’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

உண்மையில் அவன் தனக்கு நடந்த நிச்சயதார்த்தம் பற்றி நண்பனுக்கு எழுதிய விரிவான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.”மிக அழகான, முக்கியமான இந்த விஷயத்தை கடைசியில் எழுதுவதற்காக நான் வைத்திருக்கிறேன். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பரீடாவை மணக்கப் போகிறேன் .நீ போனதற்குப் பின்னால்  அவர்கள் குடும்பம் இங்கு குடியேறியது. எனவே அவர்களை உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.என் காதலியைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்ல எனக்கு வாய்ப்புகள் உண்டு. நான் அதிர்ஷ்டமானவன் என்று இப்போது உனக்குத் தெரிந்தால் போதும். நம் நட்பைப் பொறுத்த வரையில், இன்று நீ சந்தோஷமானவனாக  இருக்கிறாய் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது.என் காதலி தன் அன்பைத் தெரிவிக்கச் சொன்னாள். உனக்கு அவள் விரைவில் கடிதம் எழுதுவாள். சாதாரணமாக ஒரு பிரம்மச்சாரிக்கு கிடைக்காத வகையில் உனக்கு ஓர் அருமையான பெண் தோழியாக இருப்பாள்.இங்கு நீ திரும்பி வருவதைத் தடுக்கும் வகையில் உனக்கு பல பிரச்னைகள் உண்டு என்றெனக்குத் தெரியும். ஆனால் ஒரு நண்பனின் திருமணத்திற்காக அவைகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வருவது உனக்குச் சரியான வாய்ப்பாக இருக்குமல்லவா? ஆயினும் உனக்கு நல்லதென்று தெரிவதைக் கவலைப்படாமல் செய்”

ஜார்ஜ் ஜன்னலைப் பார்த்தபடி நீண்ட நேரம் இந்தக் கடிதத்தோடு உட்கார்ந்திருந்தான். தனக்குத் தெரிந்த ஒருவன் தன் நிலையைப் பாராட்டுவான் என்பது குறித்து அவனுக்குச் சந்தேகமாக இருக்க. தன்னை மறந்து சிரித்தான்.

4
கடைசியில் அந்தக் கடிதத்தை பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்து எதிராக இருந்த தந்தையின் அறைக்குப் போனான். அவன் அங்கு போய்ப் பல மாதங்களாகிவிட்டன.அவன் அங்கு போகவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.ஏனெனில் அவன் தந்தையை அலுவலகத்தில் பார்த்து விடுவான். தினமும் இருவரும் ஒரே ஹோட்டலில்தான் மதியச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.மாலையில் இருவரும் அவரவருக்குப் பிடித்தமானதைச் செய்வார்கள். பெரும்பாலான நேரங்களில் ஜார்ஜ் தன் நண்பர்களுடன் அல்லது தன் காதலியுடன் இருப்பான்.எனினும் இரவில் ஹாலில் இருவரும் அவரவர் செய்தித்தாளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.
அந்தக் காலை நேரத்திலும் தந்தையின் அறை இருட்டாக இருப்பதைப் பார்த்து ஜார்ஜ் வியப்படைந்தான். மிகக் குறுகியதாக இருந்த முற்றத்தின் மறு பகுதியில் உயர்வாக எழுந்திருந்த சுவர் அப்படி நிழல் விழக் காரணமாக இருந்தது. அவனுடைய தாய் பலவிதமாக அலங்கரித்து வைத்திருந்த பொருட்களின் ஞாபகம் எழும்படியாக இருந்த அந்த அறையில் ஜன்னலோரத்தில் ஒரு கண்ணுக்கு முன்னால் செய்தித்தாளை வைத்து ,தலையைச் சாய்த்து உட்கார்ந்து தந்தை படித்துக் கொண்டிருந் தார்.அங்கிருந்த மேஜையில் இருந்த மீதமான காலை உணவு அவர் அதிகம் சாப்பிடவில்லை என்று சொல்லியது.

“ஓ,ஜார்ஜ்,” கூப்பிட்டபடி அவர் அவனருகில் வந்தார். அவருடைய கனமான இரவு உடை அவரை முழுவதுமாகச் சுற்றியிருப்பது போலிருந்தது. இன்னும் அப்பா பலசாலிதான் ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“பொறுக்க முடியாத இருட்டு அங்கே” என்று சொன்னான்.
“ஆமாம், மிக இருட்டாகத்தானிருக்கிறது”அப்பா பதிலளித்தார்.
“நீங்கள் ஜன்னல் கதவுகளையும் மூடி விட்டீர்கள்?”
“எனக்கு அதுதான் பிடிக்கிறது.”
“வெளியில் வெம்மையாக இருக்கிறது.” தான் முன்பு சொல்லியதைத் தொடர்வது போலப் பேசிவிட்டு அவன் உட்கார்ந்தான்.
காலை உணவுத் தட்டை எடுத்து அப்பா சுத்தம் செய்துவைத்தார்.
“செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு நான் என் நிச்சயதார்த்த விவரத்தை அனுப்பி யிருக்கிறேன் என்று உங்களிடம் சொல்ல வந்தேன்”அடிக்கடி மறந்து போகும் தநதைக்கு நினைவுபடுத்த விரும்பியவனாக ஜார்ஜ் அதைச் சொல்லிவிட்டு தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கடிதத்தை வெளியே இழுத்து பின்பு திரும்பவும் உள்ளே வைத்தான்.
“ஏன் பீட்டர்ஸ்பர்க்கிற்கு? ” தந்தை கேட்டார்.
“என் நண்பனுக்கு “சொல்லிவிட்டு அவர் கண்களை ஊடுருவிப் பார்க்க முயன்றான்.தொழில் என்று வரும்போது அவர் மிக வித்தியாசமானவர் என்று நினைத்தான்.மார்பில் கையைக் கட்டிக் கொண்டு எப்படி உட்கார்ந்தி ருக்கிறார்.
“ஆமாம், உன் நண்பனுக்கு ”அழுத்தமாகச் சொன்னார்.
“அப்பா,முதலில் என் நிச்சயதார்த்தத்தை அவனிடம் சொல்லவேண்டாமென்றுதான் நினைத்தேன்.இதற்கென்று காரணம் எதுவுமில்லை. அவன் வித்தியாசமானவன் என்று உங்களுக்கே தெரியும். தனிமையில் வாழும் அவனுக்கு இது தெரிய வாய்ப்பில்லையென்றாலும் மற்றவர்கள் மூலமாக தெரிந்துவிடும் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். அதை என்னால் தடுக்கவும் முடியாது.ஆனால் ஒருபோதும் என் மூலம் அவனுக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தேன்.”
“இப்போது நீ அதைப் பற்றி வித்தியாசமாக நினைக்கிறாய்? ” ஜன்னலின் கீழே செய்தித்தாளையும்,மேலே தன் மூக்குக் கண்ணாடியையும் வைத்தார்.

“ஆமாம், இப்போது நான் அதை மறுபரிசீலனை செய்கிறேன்”

 

(மீதி அடுத்த இதழில் )

———————————————-
பிரான்ஸ் காஃப்கா இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்க ளில் ஒருவர் என விமர்ச்கர்கள் மதிப்பிடுகின்றனர். நனவிலி நிலை, அந்நியமாதல், உடல் மற்றும் மன ரீதியிலான கொடூரம் உள்ளிட்டவை அவர் கதையின் கருப்பொருள்களாகின்றன.The Metamorphosis, The Trial, The Judgement ,The Castle ஆகியவை அவரது சிறந்த படைப்புகளில் சிலவாகும்.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.