பலப்பல பிறவிகள் வேண்டும் முருகா – உன்
பாதம் தொழுது நான் மகிழ்வதற்கே..!
அழகின் திருவுருவம் முருகா – என்
கனவிலும் நினைவிலும் நீதானே மருகா
உன்முகத்தைப் பார்க்கையிலே சூழலையும் மறக்கின்றேன்
தித்திக்கும் மதுவுண்ட வண்டாக ஆகின்றேன்!
நீநினைவில் நின்றாலே குழப்பமில்லை
மனதினிலே ஒருபோதும் கலக்கமில்லை
வஞ்சகரை யெதிர்த்திடவே தயக்கமில்லை
எதிரிக்கென் முன்வரவே துணிச்சலில்லை..!
பேச்சிலே கடுமையிலை நோக்கிலே கொடுமையிலை
நெஞ்சிலே கோபமிலை மனதினிலே தாபமிலை
அமைதியாய் இருக்கின்றேன் வெற்றி வடிவேலா
இன்பத்தில் திளைக்கின்றேன் சக்தி சிவபாலா..!