சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை
இரவில் சுடர் விடும்
மின் மினி பூச்சிகளை
கொன்று குவிக்காதே !
பள்ளி செல்வதற்கு
மனம் இல்லையா ?
பாதகமில்லை
பள்ளி செல்லும்
பிள்ளையின் புத்தகங்களை
மறைத்து வைக்காதே!
உண்மை பேச உனக்கு
உள்ளம் இல்லையா
அது தவறு இல்லை
அரிச்சந்திரன் வரலாற்றை
குற்றம் குறை கூறி
பொய்யின் உதடுகளுக்கு
சாயம் பூசி மகிழ்ந்து
அழகு பார்க்காதே!
கொடுமைகளைக் கண்டு
மனம் குமுறவில்லையா
குற்றமில்லை
கொடுமை கண்டவுடன்
தடுக்க ஓடும் கால்களை
வெட்டி வீழ்த்தாதே!
மனித நேயமிக்க
மனிதர்கள் மீது
மலர்களை உன்னால்
தூவ முடியாவிடில்
முட்களை வீசி
காயப்படுத்தாதே !
எவ்வுயிரும்
தம் உயிர்போல் நினை
முடியாவிடில்
வாழும் வரையாவது
மனிதனாக இரு !