Daily Archives: January 15, 2015
தலையங்கம்
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்..
2014 போய் 2015 வந்துவிட்டது. காலண்டர் மாறிவிட்டது.
அந்த மாற்றம் நமது வாழ்விலும் வரவேண்டும்!
நமது உடலின் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டே இருக்கும். இருக்க வேண்டும். இல்லையென்றால் அவை இறந்து விடும்.
மாற்றம் என்பது தேவையான ஒன்று. மாற மறுப்பவர்கள் மரிக்க வேண்டும். இது தான் இயற்கையின் நிதி.
மாற்றம் என்பது எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்.
உங்கள் மாற்றம் (x ) உங்களுக்கோ மற்றவருக்கோ தீமை விளைவிக்கும் என்றால் அதற்கான எதிர் மாற்றமும் பல மடங்கு பெரியதாக (-10 x ) உருவாகும்.விளைவு எதிர்மறை -9 x. இந்த நெகடிவ் மாற்றங்களால் தான் கொலை கொள்ளை கற்பழிப்பு அநியாயம் ஆக்கிரமிப்பு போர் எல்லாம் தோன்றுகின்றன. .
அதற்குப் பதிலாக உங்கள் மாற்றம் .(x ) உலகுக்கு நன்மை தருவதாக இருந்தால் அதற்கான எதிர் மாற்றம் (- .0.1 x. ) சிறிய அளவு இருக்கும் விளைவு + 0.99 x . இந்த பாசிடிவ் மாற்றங்கள் உலகுக்கு அமைதி, இன்பம், மகிழ்ச்சி, முன்னேற்றம், பெருமை எல்லாம் தருகின்றன.
ஆகமே நாம் பாசிடிவ் ஆக மாற முயலுவோம்.
அதன் முதற் படி தான் புத்தாண்டு தீர்மானங்கள்!
தீர்மானியுங்கள்!
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
ஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
கிராபிக்ஸ் : அனன்யா
(மாறும் கண்ணோட்டம் – சுழலும் கண்ணாடி -நன்றி TUMBLR)
பக்கம் 2/25
அஞ்சலி! அஞ்சலி! புஷ்பாஞ்சலி!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு எங்கள் இதய பூர்வமான அஞ்சலி !
பக்கம் 3/25
This gallery contains 2 photos.
2014ல் 117 தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் 30 படங்களை முதலில் தேர்ந்தெடுத்தோம். அவற்றை சில கலைத் திறம் கொண்ட திரைப்பட ரசிகர்களுக்கு அனுப்பி 30 படங்களுக்கும் மதிப்பெண் வழங்கும்படி கேட்டுக் கொண்டோம். அவற்றுள் 10 படங்கள் வியாபார ரீதியான படங்கள். 20 படங்கள் வித்தியாசமான கருத்து அமைந்த படங்கள். அவர்கள் வழங்கிய மதிப்பெண்களுக்கு இணங்க முதல் மூன்று படங்களை குவிகம் தமிழ்ப்பட வரிசையாக வெளியிட்டுள்ளோம். Commercial movies: முதல் இடம் … Continue reading
நாம் தொலைத்த விளையாட்டுகள்!
ஒரு காலத்தில் நம் கிராமங்களில் இந்த விளையாட்டுக்கள் நம்முடன் பின்னிப் பிணைந்து கொண்டிருந்தன ! எங்கே போயிற்று அந்த விளையாட்டுகள் எல்லாம்?
நாம் தொலைத்து விட்டோமா?
கில்லி தாண்டா
பல்லாங்குழி
நொண்டி
பாண்டி -ஏரோப்ளேன் பாண்டி
நாலு மூலைத்தாச்சி
ஐஸ்பாய்
திருடன் போலீஸ்
தாயம்
பரமபதம்
சாக்கு ரேஸ்
செதுக்கு முத்து
கோலி
பம்பரம்
காத்தாடி
பட்டம்
சைக்கிள் டயர் ஓட்டம்
கயிறு இழுக்கும் போட்டி
கிச்சு கிச்சு தாம்பாளம்
சப்பரம்
அம்மானை
கபடி
மண் வீடு
மரக்குதிரை
கோலாட்டம்
கும்மி
கண்ணாமூச்சி
கோபி பீஸ்
மஞ்சத் தண்ணி தெளித்தல்
உறியடி
சிலம்பாட்டம்
கரகாட்டம்
கூட்டாஞ்சோறு
குழந்தைகள் ரயில்
பூவரசன் பீப்பி
சறுக்குப் பலகை
சீ -சா
தட்டா மாலை
சாட் பூட் த்ரீ
ஆல மரத்தில ஊஞ்சல்
மாங்காய் அடித்தல்
குரங்கு பெடல்
குளத்தில் மூச்சுப் பிடிக்கிறது
வில் அம்பு
டமாரம்
பூனைக்கு வால் வரைவது
கொலைகொலையாய் முந்திரிக்காய்
ரேக்ளா ரேஸ்
கோலம்
பச்சைக்குதிரை
கம்ப்யூடரும் டிவியும் இந்த விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியாமல் தடுத்துவிட்டன. ஒன்றிரண்டு வேண்டுமானால் இன்னும் இருக்கலாம்.
ஆனால் கோமாவில் இருக்கும் மற்ற விளையாட்டுகளுக்கு எப்பொழுது உயிர் கொடுக்கப் போகிறோம்?
பக்கம் 5/25
ஷாலு மை வைஃப்!
இது ஒரு புது மாதிரி தொடர்..
என் மனைவி . ஹவுஸ் வொய்ஃப் . பெயர் ஷாலினி. கூப்பிடும் பெயர் ஷாலு. வயது சொல்லக்கூடாது. என்னைவிட மூன்று வயது சின்னவள். எனக்கு 36 . இரண்டு குழந்தைகள். மூத்தவன் ஷ்யாம். ஒரு கழுதை வயது – 7 . இரண்டாவது ஷிவானி நாலடி நீளம் வாயும் வாலும். வயதா? 4 அப்படியே பாட்டி சொன்னதை உள்வாங்கிப் பேசும் சாமர்த்தியம்.
ஷாலு! இந்தத் தொடரின் நாயகி!
கல்யாணமான புதிதில் நான் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் ஷாலு கலகலவென்று சிரிப்பாள். எனக்கு என் ஜோக்கைப் பற்றிப் பெருமையாக இருக்கும்.
அதே ஜோக்கை ஒரு வருடம் கழித்து சொன்னேன். ஒரு நமுட்டுச் சிரிப்பு.
இன்னும் ஒரு வருடம் கழித்து.. .ம்ம்ம்ம் என்று சிரிப்பே இல்லாத அமானுஷ்யக் குரல்.
இன்னும் ஒரு வருடம் கழித்து ..‘இதெல்லாம் ஒரு ஜோக்கா என்கிற பார்வை.
அடுத்த வருடம் ஸ்ஸ்.. இப்ப ஜோக் ஒரு கேடா?
அடுத்த வருடம் ‘உங்க ரோதனை தாங்க முடியலையே?
இப்பெல்லாம் நான் வாயைத் தொறந்தாலே ஆரம்பிச் சுட்டார்டா உங்கப்பா!
இதுக்கும் மேலே ஜோக்கடிச்சா பறக்கும் தட்டு தான் !
இந்த கால கட்டத்தில் தான் மேல் பிளாட்டுக்கு புதியதா ஒரு மாமா மாமி வந்தனர். அவர் முகத்தைப் பார்த்தாலே ஒரு தனி தேஜஸ். மனைவி போட்ட மழைக் கோட்டைக் கூடத் தாண்டியதே இல்லை என்பதை சுத்தமாக எடுத்துக் காட்டும் முகம். அந்த மாமி கண் ஜாடையிலேயே மாமாவை ரிமோட் கண்ட்ரோலில் வைத்திருப்பவர் என்பது அவர்களைப் பார்த்த ஒரு நிமிடத்திலேயே கண்டுபிடித்துவிடலாம்.
அவர்களின் பையன் அம்மாவின் கொத்தடிமையாக இருந்தான். மாமி செய்த ஒரே தப்பு ! அவனை அவர்களிடமிருந்து தப்பி ஓடச் செய்தது. அப்படி என்ன தப்பு செய்தார் என்று கேட்கிறீர்களா? அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார். அப்பாவின் ஜீன் அப்படியே அவனுக்கு. கல்யாணம் ஆன மறு நாளே பொண்டாட்டி சொற்படி கேட்டு அம்மா அப்பாவை தனிக் குடித்தனம் போக வைத்தான். நான் தான் கொழந்தைகளைத் தனியே இருக்கச் சொன்னேன் என்று மாமி சொல்வாள்! நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். அதனால் மாமா மாமி எங்கள் வீட்டுக்கு மேல் பிளாட்டில் குடி வந்தனர்.
விட்ட குறையோ தொட்ட குறையோ மாமியைப் பார்த்ததுமே அவர் தான் தன் நண்பி.. தத்துவ மேதை. வழிகாட்டி என்று ஷாலு தீர்மானம் செய்துவிட்டாள். அவள் இதில் விஜய் ஸ்டைல். ஒரு தடவை தீர்மானம் எடுத்துட்டான்னா அப்பறம் அவ பேச்சையே அவ கேட்கமாட்டா! என் பேச்சை எப்போதும் கேட்க மாட்டா -அது வேற விஷயம்.
இந்த வருடம் புத்தாண்டில் அவள் புது தீர்மானம் எடுத்தாள். . அவளது கனவுகளை யெல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதினாள். உபயம் அவளுக்குக் கிடைத்த புது குரு -சுவாமினி குசலா தேவி. ஒவ்வொரு மாதமும் தனது ஒவ்வொரு கனவை நிறைவேற்ற முயல வேண்டும். அதன் வெற்றி தோல்விகளை மாதக் கடைசியில் சுவாமினியிடம் சொல்ல வேண்டும்!
சும்மா இருந்த ஷாலுவை சந்திரமுகி ஸ்டைலுக்கு உசுப்பி விட்டார் அந்த சுவாமினி. அவரை அறிமுகப் படுத்தியது மேல் வீட்டு மாமி.
இந்த கால கட்டத்தில தான் நீங்க வர்ரிங்க எங்க வீட்டுக்கு -நான் கொடுத்த போர்வையைப் போர்த்திக் கொண்டு – கண்ணுக்குத் தெரியாத மனிதராய்! எனக்கு மட்டும் தான் நீங்க தெரிவீங்க! வேற யாருக்கும் தெரிய மாட்டீங்க. குறிப்பா ஷாலுவுக்குத் தெரிய மாட்டீங்க. உங்களால் பார்க்க கேட்க மட்டும் தான் முடியும். மற்றபடி பேசவோ தொடவோ சாப்பிடவோ காபி குடிக்கவோ முடியாது. சுருக்கமாகச் சொன்னால் டிவியில் சீரியல் பார்க்கும் ஒரு ஜடம் மாதிரி தான் இருப்பீர்கள்.
முதல் மாதம். அவளது குறிப்பு நோட்டில் முதல் கனவு..
“நான் சிறு வயதில் கற்றுக் கொள்ள முடியாத பரத நாட்டியத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன்…….”
.
( தொடரும்)
பக்கம் 6/25
அன்று பாரதி .. இன்று நிர்கதி .. நாளை ? (E S விஜயலக்ஷ்மி)
அன்று பாரதி ! இன்று நிர்கதி ! நாளை?
அன்றுபாரதி: ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
இன்றுநிர்கதி: ஐ பாட் வாங்கித்தா அப்பா – அதில்
ஆங்க்ரிபேர்ட்ஸ் லோட் பண்ணு அப்பா
நெட்கனெக்ஷன் வேணுமே அப்பா – நீ
Outdated ஆகாதே அப்பா
அன்றுபாரதி: காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா
இன்று நிர்கதி: காலை எழுந்தவுடன் ட்யூஷன் – பின்பு
நாள் முழுவதும் பள்ளிடென்ஷன்
மாலை வந்ததும் போகோ – இதில்
ஓடி ஆட நேரமெங்கே அப்பா
அன்று பாரதி: பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா – ஒரு
தீங்கு வர மாட்டாது பாப்பா
இன்று நிர்கதி: பொய்யே எமக்கு வேதம் அப்பா – இன்று
அடுத்துக் கெடுப்பதே அரிச்சுவடி அப்பா
கூகிள் நமக்குத் துணை அப்பா – அதில்
கிட்டாத விஷயமே இங்கில்லை அப்பா
அன்று பாரதி: பாரத நாடு பழம் பெரும் நாடு – நீர்
அதன் புதல்வர் அந்நினைவகற்றாதீர்
இன்று நிர்கதி: பாரத நாடு பழம் பஞ்சாங்க நாடு – அந்நிய
நாட்டின் குடியுரிமையே எங்கள் தேவை.
அன்று பாரதி: தீரத்தி லேபடை வீரத்திலே – நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு – இந்த ( பாருக் )
இன்று நிர்கதி: பேரத்திலே லஞ்ச பேரத்திலே – ஊழலிலே
பலகோடி ஊழலிலே
ஆட்சியிலே சுயநல ஆட்சியிலே
வன்முறையிலே உயர் நாடு – இந்தப்
பாருக்குள்ளே பழம் பஞ்சாங்க நாடு.
அன்று பாரதி: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி
இன்று நிர்கதி: பப்புக்குப் போவதும் பார்களில் குடிப்பதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
கெட்டுப் போவதில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.
அன்று பாரதி: காதலொருவனைக் கைப்பிடித்தே – அவன்
காரியம் யாவிலும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!
இன்று நிர்கதி கண்டதும் மயங்கிக் கைப்பிடித்தே – பின்
அவன் வேண்டாமென்று ரத்து செய்து
அன்னியர் வாழ்வில் மோகம் கொண்டு
நம் பாரதத்தின் பேரைக் கெடுப்போமடி.
அன்று பாரதி: வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் – அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்- எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
இன்று நிர்கதி: மலையை அழித்துக் கிரானைட் கொள்ளை அடிப்போம் –அடி
மேலைக் கடலில் கழிவு நீரைக் கலப்போம்
பள்ளிக் கருகினிலே பார்கள் திறப்போம் – எங்கள்
பாரத தேசத்தின் பெருமை அழிப்போம் – எங்கள்
பாரத தேசத்தை நாசமாக்குவோம்.
அன்று பாரதி: சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
இன்று நிர்கதி: சிங்களத்தில் தமிழரைக் காவு கொடுப்போம்
சேதுவைக் காட்டியே ஓட்டு வாங்குவோம்
காவிரியில் ஓடிவரும் நீரைத் தடுத்து
ஏழை உழவரின் வாழ்வை அழிப்போம்.
அன்று பாரதி: ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் பள்ளிச் சாலைகள் வைப்போம்:
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
இன்று நிர்கதி: வெடிகுண்டுகள் செய்வோம் டிரெயினில் வெடிக்கவும் செய்வோம்
பணத்தினைச் சேர்க்க கல்விக்கூடம் திறப்போம் குப்பையைச் சேர்ப்போம் பிளாஸ்டிக் குப்பையைச் சேர்ப்போம்
சுத்தம் தொலைப்போம் கொடிய நோயினைச் சேர்ப்போம்
பாரதி: நெஞ்சு பொறுக்குதிலையே
நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால், நெஞ்சுபொறுக்குதிலையே
பெண்: பகவானே! அறியாமையாலும் ஆணவத்தாலும் அன்று பாரதி சொன்ன நல் வாக்குகளை மறந்தும், மாற்றியும் செய்து நம் நாட்டை இன்று இந்த நிர்க்கதியான நிலைக்கு ஆளாக்கி விட்டோம். நாங்கள் அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளை எல்லாம் பொறுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும். நாளைக்கு வைகுண்ட ஏகாதசி ! பெருமாளே நீங்கள்தான் எங்கள் நாட்டைநலம் பெறச் செய்து எங்களுக்கும் வழி காட்ட வேண்டும்! நாளைக்கு எங்கள் நிலைமை என்ன ? பகவானே !
விஷ்ணு: பக்தர்களே உங்கள் பக்தியை மெச்சினோம். நீங்கள்தான் ஏற்கனவே swacha ஆனந்த் தொடங்கி நாட்டை சீர் திருத்தத் தொடங்கிவிட்டீர்களே பின் என்ன கவலை?நாளை நிம்மதி .நாளை நிம்மதி நாளை நிம்மதிதான்!
பெண்: நம் தாய்த்திருநாட்டை மேம்படுத்த, நாளை நிம்மதியான வாழ்வைப் பெற, நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் என்ன செய்ய வேணும்?
ராகம்: ஏக் தோ தீன், சார் ஒத்துக்கடி படம்: அஞ்சான்
அடி மேல் அடி வைத்து முன்னே செல்வோம்
நாம் ஒண்ணொண்ணா சரி செய்து காட்டிடுவோம்.
வீட்டை சுத்தம் செய்திடுவோம்
நாடு தானா மாறிடுமே ஏ ……….ஏ ( அடி )
நீ பள்ளியிலே நல்லொழுக்கம் கத்துக்கிடணும்
நீ பண்பான இளைஞனாய் வளர்ந்திடணும்
நல்ல நேர்மையான தலைவன் ஆள வந்திடணும்
அவன் சட்டம் நீதி ஒழுங்குதனைக் காத்திடணும்
லஞ்சம் எனும் பேயினை விரட்ட வேணும்
நீயும் அஞ்சாமல் நல்லதை செய்து செய்து காட்டணும் ( அடி )
மது விலக்கை கொண்டு வந்து காட்ட வேணும்
பதுக்கல் கொலை கொள்ளை எல்லாம் தொலைக்க வேணும்
ஜாதி மத பேதம் எல்லாம் அழிக்க வேணும்
அட ஊழலதை நாட்டை விட்டே ஒழிக்க வேணும்
ஏய் வானத்திலே நிலவைத் தொட வேணும்
தாயைப் போல பெண்ணை நாமும் மதிக்க வேணும் .( அடி )
நாம் உலகில் முதலாய் வந்திடணும்
யாரும் போற்றும்படி யாய்மாறிடணும் ( அடி )
பக்கம் 7/25
நாய்கள் ஜாக்கிரதை – சிவமால்
பக்கம் 8/25
ஒன்பது
ஒன்பது – பத்தின் இளையவள் !
ஒற்றை – நாடிகளில் பெரியவள் !
ஒன்பதை நவம் என்று சொல்வர் !
நவரத்தினம் நவ கிரகம்
நவ தானியம் நவ நாயகியர்
நவ ராத்திரி நவ பாஷாணம்
நவமி திதி ஸ்ரீ ராம நவமி
ஒன்பது என்று திருநங்கைகளைச் சொல்வதேன்?
பைனரி படி 1 ஆண் 0 பெண்
ஒன்றும் பூஜ்யமும் இணைந்து பத்தானால்
ஆணும் பெண்ணும் வாழும் இல்லறமோ ?
ஒன்றும் பூஜ்யமும் சேர்ந்து ஒன்பதானால்
இரண்டும் இணைந்து வாழும் உடலமைப்போ ?
நவ கோளும் நவ அம்சமும்
நம்மை நிலை நிறுத்தும் ஜாதகமோ ?
மனித உடலைத் தான் சித்தர் எப்படிச் சொல்லுவார் ?
ஓட்டை உடம்பு ஒன்பது வாசல் !
உடம்பின் உயிர் பிரிவதும் ஒன்பதில் ஒன்றில் !
உத்தமர் உயிர் நாசியில் பிரியுமாம் !
ஞானிகள் உயிர் கண்ணில் பிரியுமாம் !
அதமர் உயிர் பின்புறம் பிரியுமாம் !
பக்கம் 9/25
சன்ஞ்னாவின் பெயிண்டிங்க்ஸ்
லலித் கலா அகாடெமியில் தனது ஓவியப் படைப்புகளை அலங்கரித்த சன்ஞ்னாவுக்கு குவிகத்தின் பாராட்டுதல்கள்!
பக்கம் 10/25
ரசித்த படைப்புகளும் படைப்பாளிகளும் (எஸ். கே. என்)
இந்த மாத எழுத்தாளர் : கு ப ரா
வறுமையில் வாடிய -ஆனாலும் துளிர் விட்டு பிரகாசமாக இருந்த மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா. என்று அழைக்கப்படுகிற கு.ப.ராஜகோபாலன். (1902-44)
பெண் விடுதலை பெண்ணின் சமூக மேம்பாடு இவற்றையே தன் கதைப் பொருளாக வைத்து எழுதியவர்.
நாடகம், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என்று பல வடிவங்களிலும் வாசகர்களைக் கவர்ந்த கு. ப. ராஜகோபாலன் (கு.ப.ரா), ஏராளமாகக்ச் சிறுகதைகள் எழுதி உள்ளார். எல்லா சிறுகதைகளும் (அக்கால வழக்கத்திற்கு மாறாக) பக்க அளவில் குறைவாக இருக்கும். தாக்கம் எவ்விதத்திலும் குறையாது
அக்காலத்தில் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஆதர்சமாக விளங்கிய எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் கு ப ரா வும் தான். “கு.ப.ரா மாதிரி ஒரு வரியாவது என்னால் எழுத முடியுமா என்று எனக்கு ஆதங்கம்" என்று தி.ஜானகிராமன் சொன்னதாகச் சொல்வார்கள்
சிறந்த சிறுகதைகள் பட்டியல் என்று நான் பார்த்த எந்த பட்டியலிலும் இவரது "விடியுமா?” இல்லாத பட்டியல் என் கண்ணில் படவில்லை. பல பட்டியல்களில் “கனகாம்பரம்” தென்படுகிறது.
அவரது “காமுவின் கதை” இப்படிப் போகிறது
விடிந்ததுமே மனைவி காமு டைப்ரைட்டரில் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் கணவன். அவள் லாகவத்துடன் சர்வசாதரணமாக டைப் அடிப்பதைவிட, பல்கூட தேய்க்காமல் ஆரம்பித்தது தான் ஆச்சரியம்.
என்னவென்று கேட்டதற்கு, இரவில் ஒரு கதை மனதில் உருவானதாகவும் அது கலைவதற்குள் அடித்து முடித்துவிட்டதாகவும் சொல்கிறாள். கதையைப் படிக்கலாம், ஆனால் அபிப்ராயம் சொல்லக்கூடாது என்கிறாள்.
காமு எழுதிய கதை
தாய்தந்தையற்ற, மாமாவினால் வளர்க்கப்படும் மோஹத்திற்கு அம்மையினால் ஒரு தழும்புகூட இல்லாவிட்டாலும் கண்பார்வை போய்விடுகிறது. அவள் பார்வை இல்லாமலேயே வாழக் கற்றுக்கொண்டுவிடுகிறாள்.
[…… இந்த இடத்தில் ஒரு வர்ணனை – காக்கைச் சிறகு போன்ற புருவங்கள், சர்பம்போன்ற பின்னல்,:- கண்விழிகள் மட்டும் கருவிழிகளற்ற இரண்டு கண்ணீர் ஊற்றுக்கள்.- இதைப்படித்ததும் "இந்த வர்ணனையை என் மனதிலிருந்து எப்படித் திருடினாய்?“ என்று கேட்கிறான் கணவன். அதற்கு "அதான் அப்பொழுதே சொன்னேனே, கேலி செய்யக் கூடாதென்று?” என்கிறாள் காமு ]
காமு எழுதிய கதை தொடர்கிறது
ஆனால் திருமண வயது வந்தபோது எப்படி அவளைக் கரையேற்றுவது என்று மாமாவும் அத்தையும் கவலைப்படுகிறாகள். .ஒருநாள் மாமனும் அத்தையும் உறங்கியபிறகு மாமனின் மகன் ரமணி, மோஹம் கண்ணீருடன் படுத்திருப்பதைப் பார்க்கிறான். பெரியவர்களின் துயரமும் கவலையும் தன்னால்தான் என்ற சோகம் அவளுக்கு. தானே அவளை திருமணம் செய்துகொள்கிறேன் என்று ரமணி.சொல்கிறான். பெற்றோரின் அரைமனச் சம்மதத்துடன் செயலாற்றவும் செய்கிறான்.
ஒருநாள், “என்னைக் கல்யாணம் செய்துகொண்டதால் எவ்வளவு சிரமம் உங்களுக்கு?” என்று மோஹம் கேட்கிறாள். தனக்கொன்றும் சிரமமோ, குறையோ இல்லை என்று ரமணி சொல்ல,. – ‘அனாதையான என்னைக் கைப்பிடித்த என் அத்தானை கண்குளிரப் பார்க்க முடியவில்லையே’ என்கிற குறை தனக்கிருப்பதாக மோஹம் சொல்கிறாள். அதற்கு “உன் மனம் குளிர இப்படியே நீ இருந்துவிட்டால் போதும் போ” என்கிறான் ரமணி..
காமு எழுதிய கதை முடிகிறது.
கதையைப் படித்துவிட்டு “அதிருக்கட்டும் "என் மனத்தை எப்படி ஊகித்தாய் சொல்லு… என் மனமே இந்தக் கதையா யிருக்கிறதே. நீ ‘மாயாவி’ தான்” என்று கணவன் ஆச்சரியப் படுகிறான்.
இந்த இடத்தில்தான் காமு எழுதியது தன் சொந்தக்கதைதான் என்று நமக்கு உறைக்கிறது. திரும்பவும் படிக்கும்போதுதான் , அதற்குண்டான சங்கேத வார்த்தைகள் நம் கண்ணில் படுகின்றன. உத்தியிலும், சரளத்திலும் மிகச் சிறந்த கதை.
முன்னே குறிப்பட்ட கதைகளின் லிங்க்
“விடியுமா" http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_30.html
"கனகாம்பரம்" http://azhiyasudargal.blogspot.in/2010/09/blog-post_15.html
பக்கம் 11/25
பக்கம் 12/25
பொங்கலென்னும் நங்கையவள் பொங்கி வருகின்றாள் (கோவை சங்கர்)
பொங்கலென்னும் நங்கையவள் பொங்கி வருகின்றாள்
உயர்ந்தோங்கும் பயிர் கண்டு பூரிப்பு கொள்கின்றாள்
தங்கமன்ன நிலமகளின் செழிப்போங்கச் செய்கின்ற
பண்புமிகு மாந்தர்க்கு வாழ்த்துகள் கூறுகிறாள்
சிங்கமென வானோக்கி நிற்கின்ற பயிரே போல்
நேர்மையொடு மனிதருமே வாழ்ந்திடவே சொல்கின்றாள்
மங்காத பூமகளின் ஈரமுடை நெஞ்சம்போல்
ஈரமிகு நெஞ்சினராய் பயின்றிடவே கூறுகிறாள்!
உணவதுவும் உடையதுவும் ஏருழவன் உதவியினால்
சீர்பெற்ற வாழ்க்கையுமே ஒழுக்கத்தின் தயவதனால்
பணிவுநிறை உழவர்தம் கள்ளமிலா உள்ளம் போல்
வெள்ளையுள்ளம் கொண்டவராய் புகழோடு வாழ்ந்திடுவீர்
மணங்கொண்ட மலரே போல் ஒளிவீசும் தீபம்போல்
குணங்கொண்ட குடும்பத்தில் இன்பங்கள் நிறையட்டும்
எண்ணங்கள் ஈடேற ஆசிபல கூறிடவே
பொங்கலென்னும் நங்கையவள் பொங்கி வருகின்றாள்
பக்கம் 13/25
வைகுண்ட ஏகாதசி
இந்த வருடம் ஜனவரி முதல் தேதியே வைகுண்ட ஏகாதசி. கோவில்களில் கூட்டத்துக்குக் கேட்கவா வேண்டும்? அதுவும் ஸ்ரீரங்கத்தில்! ரங்கநாதரின் ரத்னாங்கி சேவையும் முத்தங்கி சேவையும் பரமபத சொர்க்க வாசலும் ராப்பத்தும் பகல் பத்தும் நம்மைப் பக்தியில் மூழ்கடிக்கும் என்பது நிதரிசனம்.
பக்கம் 14/25
ஆனந்த் நகர் குழந்தைகளின் வண்ண வண்ணப் படங்கள்!!
பக்கம் 15/25