ஒரு அருமையான இனிமையான பெருமையான தீபாவளிப் பாடலைக் கேட்கவேண்டுமா? க்ளிக் செய்யுங்கள்!
Daily Archives: October 15, 2017
தலையங்கம்
முத்தமிழில் ஒன்றான நாடகக் கலை சங்க காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும், நாடகக் கலையைப் பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
சங்க காலத்தில் கோலோச்சிய நாடகம் களப்பிரர் காலத்தில் புத்த ஜைன மதங்களால் புறக்கணிக்கப்பட்டது. பின்னர் பல்லவர் சோழர் காலத்தில் புத்துயிர் பெற்றது.
நகரங்களில் நாடகமாகவும் கிராமங்களில் தெருக்கூத்தாகவும் அது பரிணமித்தது.
சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் இராசமாணிக்கம், பம்மல் சம்மந்தமுதலியார், பாய்ஸ் கம்பெனி, டி கே எஸ் சகோதரர்கள்,அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர், சிவாஜி, சுந்தராஜன், சிவகுமார், மனோகர், சோ, பூர்ணம், ஒய் ஜி பி , கே பாலச்சந்தர், காத்தாடி ராமமுர்த்தி, மகேந்திரன், எஸ் வி சேகர், கிரேஸி மோகன் , போன்றவர்கள் தமிழ் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்தவர்கள்.
சினிமா மற்றும் தொலைக்காட்சி சாதனங்கள் நாடகமேடையை அடித்து நொறுக்கி அதகளப்படுத்திவிட்டன.
ஆனால் நாடகம் ஒரு ஜீவித கலை. என்றைக்கும் அழிந்துவிடாது.
முத்துசாமியின் கூத்துப்பட்டறை, ஞானியின் பரிக்ஷா, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் புத்துயிர் கொடுக்கிறார்கள்.
ஏராளமான இளைஞர்கள் நாடகங்களில் பங்கேற்க முன் வருகிறார்கள். நான்கு மணிநேரம் நடக்கும் பொன்னியின் செல்வன் முதல், பத்து நிமிடம் நடக்கும் ஷார்ட் & ஸ்வீட் நாடகங்களும் வரத் தொடங்கிவிட்டன.
அரசு நாடகத்தை ஊக்குவிக்கவேண்டும். ஊடகங்கள் இதைப் போற்றவேண்டும். புரவலர்கள் ஆதரிக்கவேண்டும். பள்ளிகளில் நாடகங்கள் நடத்தப்பெறவேண்டும். இசை விழாக்களைப்போல் நாடக விழாக்கள் நடைபெற வேண்டும். நாடகக் கலைஞர்கள் பெருமை பெறவேண்டும். மக்கள் அனைவரும் நாடகங்களைப் பார்க்கத் திரண்டு வரவேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கும் நீட்டுக்கும் நடத்தியதைப்போல் இதற்கும் ஒரு போராட்டம் நடத்தப்படவேண்டும்.
பூனைக்கு யார் மணி கட்டுவது?
குவிகம் இதற்கான பணியில் இறங்கத் தயாராயிருக்கிறது.
நீங்கள்?
தெய்வத்துள் தெய்வம் – நாடக விமர்சனம்- வி எல் நரசிம்ஹன்
( போட்டோ: நன்றி, லலிதா தாரிணி )
தெய்வத்துள் தெய்வம்
கடலுக்கு எல்லை உண்டு, கருணைக்கு எல்லை உண்டா? இல்லவே இல்லை. அந்தக் கருணைக் கடலையே நம் கண்ணுக்குள் மீண்டும் நிறுத்தியிருக்கிறார்கள், இந்த மிகப் பெரிய படைப்பின் மூலம்.
இந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து, நம்மைச் சற்றே விலக்கி,வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த இரண்டரை மணி நேரமும் ஒரே நிசப்தம். ஒரு செல்போன் மணி ஒலிகூட நமது காதில் விழவில்லை. இது புது மொழி.(குண்டூசி விழும் சப்தம் கேட்டது- இது பழைய மொழி). பெரியவாளை தரிசனம் செய்யப் போகிறோம் என்பதனால் எல்லோரும் செல்போனை மறந்தே போனார்கள், நல்லது!
சாதாரணமாக நாடகம் என்றால் ஒரு சிறிய நடிக, நடிகையர் கூட்டம், இரண்டு அல்லது மூன்று காட்சி அமைப்பு, அதில் நகரும் கதையமைப்பு என்றே பார்த்துப் பழக்கப்பட்ட நாம், இதில் சற்று வித்தியாசமாக ஒரு 108 நடிக நடிகைகளைப் பார்க்கிறோம். எல்லோருமே இதில் பங்குபெறுவதை ஒரு “பகவத் கைங்கர்யமாக”ப் பார்க்கிறார்கள் என்றே அறிகிறோம்.
தோட்டா தரணியின் கைவண்ணத்தில் ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் நம்மைப் பழைய காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள். அப்பப்பா என்ன ஒரு தத்ரூபம்.
ஸ்வாமிநாதனாக அவதரித்த மகா பெரியவா நம் எல்லோர் உள்ளத்திலும் மஹாஸ்வாமியாக வீற்றிருக்கிறார்கள்.
பள்ளி மாணவனாக அறிமுகமாகிறார் ஸ்வாமிகள். அவர் நண்பர்களிடத்தில் எவ்வளவு ப்ரீத்தி வைத்திருக்கிறார் என்பதிலாகட்டும், தன்னுடைய ஆச்சார்ய பக்தியிலாகட்டும், ஆசிரியரை மதிப்பதிலாகட்டும், தின்பண்டம் விற்கும் மாமியிடம் குறும்பு செய்வதிலாகட்டும் என்னே நேர்த்தி. அந்தக் கிராமத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆச்சார்ய பீடத்திற்கு வந்தவுடன் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவரை வரவேற்க, பூரண கும்ப மரியாதை கொடுக்க அந்தக் கிராமமே திரண்டுவருகிறது. நிஜமான நாதஸ்வரக் கலைஞர்களையே வரவழைத்திருக்கிறார்கள். யானை மற்றும் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு வருகிறார்கள் (வேஷம் தான்).இதையெல்லாம் பார்க்கும் பொழுது நாமே அந்தக் காட்சிகளை நம்மை மறந்து காண்கிறோம். முறுக்கு மாமியும், ஸ்வாமிகளும் மனதாலேயே பேசிக்கொள்வது, ஸ்வாமிகள் எல்லோர் மனதிலும் நிறைந்து இருப்பார் என்பதைப் பறைசாற்றுகிறது. முறுக்கு மாமி (தாரிணி கோமல்) கண்களே பேசுகிறது. பால ஸ்வாமிகள் வேதம் உபநிடதம் மற்றும் சம்பிரதாய விஷயங்களைக் கற்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். .
நாம் சுதந்திரம் பெற்றதைக் காட்டுகிறார்கள். தேர்தலைப் பற்றியும், ஜனநாயகத்தைப்பற்றியும், அஹிம்சையைப்பற்றியும் அழகாக ஸ்வாமிகள் எடுத்துரைக்கிறார்கள். நாம் காசு வாங்கி ஓட்டுப் போடக்கூடாது என்று 1952ல் ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார். அவர் மகான் அல்லவா? அதனால் தீர்க்கதரிசியாய் சொல்லி இருக்கிறார். நமக்குத்தான் கொஞ்சம் “ரோஷம்” வரவேண்டும்.
ஸ்வாமிகள் மேடையிலே நடக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும் நாமும் அவருடனே பயணிக்கும் சிஷ்யனாக மாறிவிடுகிறோம். சபாஷ் டைரக்டர் ஸார், எங்களையே மறந்து போகிறோம். ஸ்வாமிகள் நம்மையும் தீர்த்த யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறார்.
ஸ்வாமி கருணையை மட்டுமா கொடுப்பார், அவர் நம் தாய் அல்லவா? குழந்தைகளுக்கு மருந்தும் கொடுப்பார். “நான் கல்யாணத்திற்கு வரதக்ஷிணை வாங்கக் கூடாது, பட்டுப்புடவை வேண்டாம்’னு சொல்றேன். யாரும் கேட்கமாட்டேங்கிறா. என் படத்தை வேற போட்டுக்கிறா” என்று அங்கலாய்க்கிறார். எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்பதாகச் சொல்லுவது நம் காதில் விழுகிறது. அந்த முதியவராக வரும் பெரியவா (வாசுதேவன்)- அவர் வாசுதேவன் அல்ல தேவாதிதேவன்- நம் எல்லோர் மனதிலும் குடிகொண்டுவிட்டார். அப்படி ஒரு தேஜஸ், உருவ ஒற்றுமை, நடை உடை பாவனை எல்லாம் சேர்த்து மீண்டும் அந்த மகானை நம்மிடையே அனுப்பி வைத்து இருக்கிறார்கள், ஒப்பனைக் கலைஞர் மற்றும் டைரக்டர்.
ஸ்வாமியின் கருணையால் பலரது வாழ்க்கை மாறியிருக்கிறது. அதில் சிலவற்றை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர் கருணை, விவசாயி, ஏழைப்பெண் திருமணம், வளையல்காரர், அணு விஞ்ஞானி, குழந்தை எனப் பட்டியல் நீளுகிறது.
“கேளு, தெரிந்ததைச் சொல்கிறேன், இல்லாட்டி தெரிஞ்சுண்டு சொல்றேன்” என்று அவர் நீதிபதி இஸ்மாயிலிடம் சொல்வதைக் கேட்கும்பொழுது அவர் ஞானம் தெரிகிறது.
எல்லா மதத்தினரையும் மதிக்கவேண்டும் என்றும், உண்மையான பகுத்தறிவு எது என்பதைப்பற்றியும் சொல்லும்போது போலி மதவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படுகிறது.
ஸ்வாமிகளின் கனகாபிஷேகம் நிகழ்ச்சி நம்மை அப்படியே 90க்கு அழைத்துச்செல்கிறது. ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளாக நடிக்கும் அந்த நபர் பாடியே அச்சு அசல்..
ஒவ்வொரு நடிகரையும் தேடித்தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள். டைரக்டருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
ஓ, யாரது.. திருமதி அருணா சாயிராமா.. அட ஆமாம். நேரே மேடைக்கே வந்து ஸ்வாமியின் முன்னால் பாடுகிறார். மகுடத்திற்கு மேல் மேலும் ஒரு வைரம் வைத்ததுபோல் இருந்தது.
ஸ்வாமிகளின் பல பருவம் முதல் முக்திவரை காட்டுகிறார்கள். குறிப்பாக ஸ்வாமியின் ‘ஒரு நாள்’ என்னென்ன செய்கிறார் என்று காண்பிக்கிறார்கள். நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார் ஸ்வாமிகள்.
அட அதற்குள்ளே இரண்டரை மணிநேரம் முடிந்துவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. கண்டிப்பாக இந்த நாடகம் நம் மனதில் அமைதி மற்றும் பக்தி என்ற விதையை விதைத்திருக்கிறது. இது ஆலமரமாக வளர்ந்து நம்மைச் செம்மைப்படுத்தும் என்று நம்புகிறோம்
டைரக்டர் சார்… இரண்டாம் பாகம் ரெடியா? நாங்க ரெடி. .
சரித்திரம் பேசுகிறது – யாரோ
பாஹியான்-1
வாசகர்களே!
அடுத்து வருவது விக்ரமாதித்யன் என்கிற இரண்டாம் சந்திரகுப்தன் என்னும் மாமன்னனின் கதை.
அது வெகு விரைவில்…
அதற்கு முன் இன்னொரு மனிதன் செய்த செயல்களால் சரித்திரமே பெரும் பயன் அடைந்ததுடன் அவனைப் போற்றவும் செய்கிறது.
பொதுவாக…
‘மன்னர்கள்’ சரித்திரத்தில் இடம் பெறுவது என்பது சற்று எளிது.
ஆனால் ‘சாமானியன்’ சரித்திரத்தில் இடம் பெறுவது அரிது.
அதிலும் சரித்திரம் எழுதியே சரித்திரத்தில் இடம் பெறுவது என்பது வெகு அரிது.
(அட.. என்னைச் சொல்லவில்லை! ஹா ஹா !!)
அப்பேர்ப்பட்ட ஒருவன் அந்நாளில் இருந்தான்.
அவன் ஒரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’!
பாஹியான்!
அவன் கதை படிப்போம்:
அந்நாளில் சீனா நாடு பாரதவர்ஷ என்கிற பாரத நாட்டின் சிறப்பையும், அறிவுச்செல்வதையும் அறிந்து அதன் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. தங்களுக்குப் பிடித்த புத்த மதத்தின் பிறப்பிடம் பாரதம் என்பதால் அதன் மீது சீனா பெரும் அன்பு கொண்டிருந்தது.
கி.பி. 400ல் அந்நாட்டில் பாஹியான் என்ற அறிவாளி இளைஞன் ஒருவன் இருந்தான்.
‘புத்த மதம் சீனாவில் சரியான கொள்கைகளால் அமைக்கப்படவில்லை. பாரதம் சென்று அந்தத் தத்துவங்களை அறிந்து கொள்ளவேண்டும்’ என்று முடிவெடுத்தான்.
தனது நாட்டின் அறிவு ஜீவிகளுடன் ‘பாரத பயணம்’ செல்ல ஒரு குழு அமைத்து பயணத்தைத் துவங்கினான். அந்தப் பயணம் 15 வருடம் நீடிக்கும் என்று அவன் அன்று கனவிலும் எண்ணவில்லை.
பாதையோ நெடியது!
பயணமோ கொடியது!
போகுமிடம் வெகு தூரம்!
புத்தர் பிறந்து வளர்ந்து ஒளியூட்டிய இந்தியா அவர்களை ஆகர்ஷித்தது!
மனத்திண்மையே அவர்களுக்கு சக்தி கொடுத்தது!
காரகோரம் நெடுஞ்சாலை வழியாக இந்தப் பயணிகள் பல மாதங்கள் நடந்து வந்தனர்.
பயணம் தொடர்ந்தது.
முதலில் ஷன்ஷன் (Shanshan) சென்றடைந்தனர்.
அங்கு நாலாயிரத்துக்கும் மேலான மக்கள் புத்த சமயத்தைக் கொண்டாடி வந்தனர்.
ஒப்பிடமுடியாத கடினமான பாதைகள்…
கோபங்கொண்டு தாறுமாறாய் ஓடும் நதிகள்…
பனிமழையும் பனிக்கட்டிகளும் மலை வழியைக் கொடூரமாக்கியது.
இவை அனைத்தையும் கடந்து பாஹியானும் நண்பர்களும் ‘கோடான்’- என்ற சீனாவின் எல்லைப்புற நகரத்தை அடைந்தனர்.
அது பட்டுச்சாலையின் (silk road) ஒரு கிளையில் இருக்கும் நகரம்.
அங்கு பத்தாயிரத்திற்கும் மேலான மகாயான புத்தப் பிக்ஷுக்கள் இருந்தனர்.
‘கோமதி’ என்ற புத்த விஹாரத்தில் அனைவரும் இருந்தனர்.
அங்கு மணி ஒன்று அடித்தவுடன் மூவாயிரம் பிக்ஷுக்கள் உடனடியாக உணவறையில் கூடினர்.
கோடானில் இப்படிப்பட்ட விஹாரங்கள் பதினான்கு இருந்தது.
வீதியில் நடந்து வந்த பாஹியான் ஒரு மாபெரும் விஹாரத்தைக்கண்டு மலைத்துப்போனார்.
அருகில் நடந்த வயோதிகரிடம்:
‘ஐயா! இந்த விஹாரம் இவ்வளவு அழகாக இருக்கிறதே.
இதன் சரித்திரத்தைக் கூறுங்கள்’ – என்றான்.
சீன மொழியில் தான் கேட்டான்.
ஆனால் அது ‘உங்களுக்கு’ புரியாதே!
அதனால் தமிழில் எழுதுகிறேன்!
வயோதிகன்:
“இதைக் கட்டுவதற்கு 80 வருடங்கள் பிடித்தது. அதற்குள் மூன்று அரசர்கள் வாழ்ந்து மறைந்தனர். கட்டிடத்தின் மேல் ‘வெள்ளி’ – ‘தங்கம்’ இவற்றால் செய்யப்பட்ட தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது.”
‘ஆஹா! புத்தர் பெருமை அகில உலகிலும் பொன்னொளி போல் வீசுகிறதே’ – பாஹியான் புளகாங்கிதம் அடைந்தார்.
அதன் பிறகு சில நகரங்கள் தாண்டி, மிகவும் சிரமப்பட்டு, ஆயிரக்கணக்கான பாறைப்படிகளைக் கடந்து சிந்து நதியின் தீரம் வழியாக நடந்தனர்.
கயிற்றுப் பாலம் மூலம் சிந்து நதியைக் கடந்தனர்.
கரணம் தப்பினால் மரணம்.
நதியைத் தாண்டியவுடன் அவர்களை அங்கிருந்த புத்த பிக்ஷுக்கள் வரவேற்றனர்.
“நீங்கள் வரும் கிழக்கு நாட்டில் புத்தரை வழிபடும் மக்கள் உளரா?’ என்று வினவினர்.
பாஹியான்: “எங்கள் நாட்டில் மட்டுமல்ல. வழி எங்கும் கண்டோம்”
சென்ற இடங்களில் எல்லாம் ‘புத்தம் சரணம் கச்சாமி’- என்ற முழக்கம்.
பாஹியான் காந்தாரம் வந்தடைந்தான்.
தக்ஷசீலா நகர் வந்தடைந்தனர்.
அங்கு கனிஷ்கர் அமைத்த 400 அடி உயரமான கோவிலைக் கண்டனர்.
நகரெங்கும் புத்தர் பிரான் வாழ்க்கை பற்றிய பொருட்கள் காணப்பட்டன.
அவரது காலடித் தடயங்கள்..
அவரது துணிகளைக் காய வைத்த கல்..
அவரது பிச்சைப் பாத்திரம்..
இப்படிப் பலப்பல பொருட்கள்…
அனைத்தும் கண்டு பாஹியான் கண்களில் நீர் மல்கினான்…
அடுத்து நகரஹரா (இன்றைய ஆப்கானிஸ்தானத்தில் ஜலாலாபாத்) என்ற நகரத்தை அடைந்தனர்.
அங்கு புத்த கோவிலில் புத்தரின் மண்டையோடு வைக்கப்பட்டிருந்தது.
அதற்கு அண்டை நாட்டு மன்னர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி காணிக்கைகளைச் செலுத்திவந்தனர்.
கோவிலில் புத்தரின் ஆடைகள் வைக்கப்பட்டிருந்தது.
நாட்டில் எப்பொழுது பஞ்சம் வந்தாலும் அந்த ஆடைகளை வெளியே எடுத்துப் பூஜை செய்தால் – பஞ்சம் அகன்று விடுமாம்.- இது அந்த நாட்டு மக்களின் நம்பிக்கை…
பாஹியான் கூட வந்த குழுவில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் சீனாவுக்குத் திரும்பிச் சென்றனர்.
பாஹியான்கூட இருந்த இருவரில் ஒருவன் ‘ஹுய் சிங்’..
பனி மலையைக் கடக்கும் போது…
ஒரு பயங்கர குளிர் காற்று வீசியது.
உறைந்து போன யாத்திரிகர்கள் பேச முடியாமல் தவித்தனர்.
ஹுய் சிங்-ஐ குளிர் நோய் தாக்கியது..
அவன் வாயில் வெள்ளை நுரை வந்தது..
“பாஹியான்! இங்கிருந்தால் நாம் எல்லோரும் செத்துப்போவோம்.
உன் உடல் வலு இருக்கும் போதே இந்த மலையைக் கடந்து சென்று விடு..”
பேச்சு முடியும் போது.. அவன் மூச்சும் நின்றது.
“விதியை யாரே வெல்ல வல்லார்” – பாஹியான் நொந்தான்.
காந்தாரத்தைக் கடந்து மீண்டும் சிந்து நதியைக் கடந்து இன்றைய பஞ்சாப் பகுதி வந்தடைந்தான். அங்கும் புத்த மதம் பெருவாரியாகக் கொண்டாடப்பட்டது.
பஞ்சாப் முழுதும் புத்தரின் தாக்கம் பெரிதும் இருந்தது.
யமுனை ஆற்றங்கரையில் பல புத்த விஹாரங்கள் இருந்தன.
மெல்ல மெல்ல … மதுராபுரி வந்தனர்.
அப்பாடா! ஒரு வழியாக குப்த சாம்ராஜ்யம் வந்தாயிற்று..
புத்த மதத்தின் ஆதிக்கம் குறைந்து- இந்துக்கள் நிறைந்த நாடு துவங்கியது…
(மதுரா)
பாஹியான் பிறகு எங்கெங்கு சென்றார்?
கண்ட காட்சிகள் என்ன?
இனியாவது அவர் பயணம் இனிதாக இருக்குமா?
சரித்திரம் அந்த விடைகளுடன் உங்களுக்காகக் காத்திருக்கும்.
நீங்கள்?
பத்து கோடி மக்கள் பார்த்த 2 நிமிடக் குறும் படம் !
பாராட்ட வார்த்தைகளே இல்லை !
பிம்பம் – வைதீஸ்வரன்
கட்டிலில் இருந்து எழுந்துகொண்டு கையைத் தேய்த்துக் கண்ணைக் கசக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்….
விடிந்து வெகு நேரமாகி விட்டதோ!!..விடியப் போகும் இந்த நாளைப் பற்றி நேற்று இரவெல்லாம் எனக்குள் பரபரப்பாக இருந்தது. அநேகமாகத் தூக்கம் வரவேயில்லை. விடிவதற்காக இரவை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
ஆறு மணிக்கே எழுந்துவிடவேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். இந்த ஆறு மணி நான் என்றோ பிறந்த சுப வேளை. இதே தேதியில் எழுபது வருஷங்களுக்கு முன்னால் பிறந்த அதே தேதி… அதே ஆறு மணி… மீண்டும் இன்று!! ..
தினந்தினம் வேகமாக இறந்து கொண்டிருக்கும் இந்த முதுமையில் என் இன்றைய பிறந்த நாள் பற்றி எனக்குள் ஏனோ ஒரு அர்த்தமில்லாத …அக்கறை….பரபரப்பு…..
ஏதோ அசட்டு ஆசையாகக்கூட…இருக்கலாம்.. எழுந்தவுடன் என்னை சூழ்ந்துகொண்டு என் மகன் மகள் பேரன் பேத்தி எல்லோரும் கூடி நின்று என்னைக் கொண்டாடித் தழுவி என்னை நமஸ்காரம் செய்து “”என்னை.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ பாட்டீ “ என்று ஆசையுடன் மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளவேண்டும். சிரித்துச்சிரித்துப் பேச வேண்டும்……என்று ஒரு…ஏக்கம்….
இப்போது யாரும் என்னுடன் இல்லை. எதுவும் நேரவில்லை. கையைத் தேய்த்துக்கொண்டு தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறேன் எனக்கு நானே பேசிக் கொண்டு..
மங்கலாக எதிரே தெரிகிறது வெற்றுச்சுவர்.. யாரும் என்னிடம் இல்லை. யாரும் வரவில்லை. இந்த முக்கியமான நாளைப் பற்றி யாருக்கும் அக்கறையோ ஞாபகமோ இருக்குமோ இருக்காதோ!!.
எல்லோரும் எங்கோ தூரத்து மூலையில் ஒளிந்து கொண்டு நான் உயிரோடிருப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள். இல்லை இன்னும் உயிரோடிருக்கிறேனா என்று கவலையுடன் பார்க்கிறார்கள். பார்க்காமலும் இருக்கப் பழகிக்கொண்டு விட்டார்கள்
என் மகன்களும் உறவுகளும் எல்லோருமே உலகத்தில் கால தூரங்களுக்கு அப்பால் உள்ள வேறு தேசங்களில் எட்டாமல் இருந்து கொண்டு என் அந்திம நகர்வின் முடிவான நிறுத்தத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் மெள்ள எழுந்து அடுப்பில் வென்னிர் சுடவைத்து அதில் டீத் தூளைப் போட்டுக் கலக்கி இரண்டு வாய் குடித்தேன். நகர்ந்து கூடத்துக்கு வந்து அண்ணாந்து பார்த்தேன். சுவற்றில் மாட்டியிருந்த படங்களில் மகன் மகள் குடும்பங்களும் பேரன் பேத்திகளும் கூடி உட்கார்ந்து கொண்டு போட்டோக்காரனைப் பார்த்துஅச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்…
அவர்கள் கொஞ்சம் என்னைப் பார்த்தும் சிரிப்பதாக எண்ணிக் கொண்டு என்னை ஏமாற்றி மகிழ்ந்து கொண்டிருந்தேன். சிரித்துக் கொண்டேன்.. இருந்தாலும் துக்கம் தான் மிஞ்சியது.. யாரையாவது எந்த முகத்தையாவது ரூபத்தையாவது நேரில் பார்க்க முடியாத இந்த நிசப்தமும் தனிமையும் பாரமாக நெஞ்சை அழுத்தியது..
பீரோக் கதவில் மாட்டியிருந்த கண்ணாடி முன்னால் போய் நின்றேன். அங்கே அசைகின்ற ஒரே..முகம்… எனக்குத் தெரிந்த முகம்.. அது ஒன்று தான்…
Happy Birth Day too You ..” என்று கண்ணாடிக்குள் அந்த முகம் சொல்லிக் கொண்டிருந்தது … ஒரு பிம்பம் இன்னொரு பிம்பத்துக்க்கு வாழ்த்துக் கூறுகிறது.!!
தாழ்வாரத்து ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பின்கொல்லை வெளிச்சமாகத் தெரிந்தது.. ஆகாசம் பரந்து சிவந்திருந்தது… பசுமையான மரங்கள் பூக்களுடன் குலுங்கிக் கொண்டிருந்தது..
என் தனிமைக்கு சற்றும் ஒவ்வாத குதூகலமாக அந்த வெளிச்சமும் மரங்களும்!!
நான் வழக்கமாகக் காலையில் சாப்பிடும் அவல் பொரியைக் கிண்ணத்தில் போட்டுக்கொண்டு பின் கதவைத் திறந்துகொண்டு அங்கே போனேன். அங்கே இருந்த கல்மேடையில் உட்கார்ந்து கொண்டேன்.
காற்று மெதுவாக இதமாக . எனக்கானது போல்.. வீசியது. ஆறுதலாக என் மனசை ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது.
மெள்ள மெள்ள இனிமையான மிருதுவான ஏற்ற இறக்க ஸ்தாயிகளில் மறைந்திருக்கும் பறவைகள் பல்வேறு தொனிகளில் என்னை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தன. ஏதோ என்னிடம் ஒட்டுறவுடன் பாசமுடன் செல்லமாக சீட்டியடித்து அழைப்பதைப் போல் ஒலித்தது.
வண்ண வண்ணமாக சீருடை அணிந்த என் பேரன் பேத்திகள் போல் குருவிகளும் கிளிகளும் மைனாக்களும் கிளைகளில் தோன்றித் தோன்றி மறைந்து எனக்கு வேடிக்கை காட்டி விளையாடிக் கொண்டிருந்தன.
நான் என் கையிலிருந்த அவல் பொரியைப் புல் வெளியில் ஆசையுடன் இறைத்தேன். பறவைகள் கூடிக்கூடி இறங்கி வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு பொரியை கொத்திக்கொத்தித் தின்று தலையாட்டிவிட்டு சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. இவைகளுக்கெல்லாம் இன்று ஏதோ கொண்டாட்டமாக இருப்பது போல் குதூகலிக்கின்றன. இது… எனக்காத்தானோ! அப்படித் தான் தோன்றியது.!
என் காலடியில் திடீரென்று பஞ்சுப் பூவைத் தடவியதுபோல் ஒரு மெது மெதுப்பு. குனிந்து பார்த்தேன். வெண்கல நிறத்தில் ஒரு குட்டிப் பூனை உடம்பை நெளித்து வாலை நீட்டி வளைத்து முறுக்கி உடல் சிலிர்த்து சிப்பிக்குள் முத்துப் போன்ற நீலக் கண்களை சுருக்கி என்னைப் பார்த்து “மியாவ்” என்றது. அண்ணார்ந்து பார்த்து… வாஞ்சையுடன்..
அதற்கு எப்படி என் பிறந்த நாள் ஞாபகத்துக்கு வந்தது?..
மனத்தில் சற்று முன் உழன்றுகொண்டிருந்த வெறுமை பனிபோல் சற்று கரைந்து போய்க்கொண்டிருந்தது. கையிலிருந்த அவல் பொரியை மேலும் வெளியெங்கும் இறைத்தேன்…
அப்போது அடுத்த வீட்டு சுவர் தாண்டி ஒரு சின்னப் பந்து எகிறி வந்து என் காலருகில் உருண்டு விழுந்தது… நான் சுவற்றைப்பார்த்தேன். “அந்தப் பந்து “” எனக்குத் தெரிந்த பந்து தான் .!!
“ பாட்டீ…பாட்டீ… அந்தப் பந்தை கொஞ்சம் தூக்கிப் போடுங்கோ பாட்டீ…” என்று கண்ணன் கத்தினான்…அடுத்த வீட்டுக் குழந்தைக்கு இதுதான் வழக்கமான… குறும்பு…
” நாம்ப விளையாடலாமா…பாட்டீ?..”
“ஏண்டா…கண்ணா… ஒங்கூட நான் எப்படீடா வெளையாட முடியும் கோந்தை…. எனக்கு வயசாயிடுத்து டா….”
என் பிறந்த நாள் ஞாபகம் எனக்கு மேலும் உறுத்தலாக வயதைக் கூட்டிக் காட்டியது. ..
“போ பாட்டி…பொய் சொல்லாதே! ஒனக்கு வயசாகல்லெ!! நீ இன்னிக்குத்தானே பொறந்தே! எனக்குத் தெரியுமே!..” பலமாக சுவற்றுக்குப் பின்னாலிருந்து சிரித்தான்… கண்ணன்
கண்ணனிடம் நான் என்றோ சொன்ன தகவல்..!!!!
குழந்தைகள் எதையும் மறப்பதில்லை. யாரையும் வெறுப்பதில்லை.
சுவற்றுக்குப் பின்னால் உள்ள கண்ணனைப் போல்தான் எல்லோரும் இருப்பார்களோ!! . யாரும் யாரையும் வெறுப்பதில்லை எதையும் மறப்பதில்லை. கண்ணுக்குத் தெரியாமல்.. இருந்தாலும்….
குறை என்னுடைய பிம்பத்தில்தானோ!!..
மறைப்பது என் மனச் சுவர்தானா??…………….
குவிகம் இலக்கியவாசல் – நிகழ்ச்சி விவரம்
குவிகம் இலக்கிய வாசலின் 31 வது நிகழ்வு
அசோகமித்திரன் அவர்களின் “காந்தி” என்ற சிறுகதை மிகவும் வித்தியாசமான சிறுகதை. அதைப்பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்த்த வேண்டும் என்பது கிருபாநந்தனின் ஆசை.
அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் மாலை 7 மணி அளவில் ஒரு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
வாசகர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறோம்.
இனி , செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்ப்போமா?
( காணொளி : நன்றி விஜயன் )
செப்டம்பர் 30, சனிக்கிழமை
இலக்கியச் சிந்தனையின் 568 வது நிகழ்வு
” கவியோகி சுத்தானந்த பாரதி “
உரையாற்றியவர் : திரு. புதுவை ராமசாமி
அவரது பேச்சை இங்கே கேட்கலாம்.
தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 30 வது நிகழ்வு
நூல் அறிமுகம்
“நான் என்னைத் தேடுகிறேன்”
சுரேஷ் ராஜகோபால் அவர்களின் கவிதைத் தொகுப்பு
அறிமுக உரை : திரு ஆர். அரவிந்த்குமார் (கல்வியாளர், புதுவை)
அந்த உரையின் காணொளியை இங்கே காணலாம்.
அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாத குவிகம் வெளியீடும் அறிமுகமும்
பிரபல நாடக ஆசிரியரும் பல சிறுகதைகளின் ஆசிரியருமான ஈஸ்வர் அவர்களின் இரு குறுநாவல்களை ஒரே புத்தகமாக வெளியிட்டதில் பெருமை கொள்கிறோம்.
“பாஸ்டனில் ஒரு தேரடி” என்ற கதை முதல் பகுதியாக வருகிறது. அதே புத்தகத்தைத் திருப்பிப் பார்த்தால் “ஏரி காத்த ராமர்” என்ற கதை முதல் பகுதியாக வந்திருக்கிறது.
இதைப் புதுமை என்று சொல்லவில்லை; சற்று வித்தியாசமான முயற்சி.
அதன் அறிமுக உரை அரங்கு நிறைந்த மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவின் தொகுப்பும் திரு மாதவன் சுந்தரராஜன் பேசிய அறிமுக உரையும் பார்க்கலாம்.
அங்கிள் – அழகியசிங்கர்
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ஸில் இடம் பிடித்து அமர்ந்தவுடன், வண்டி கிளம்புவதற்குச் சரியாக இருந்தது.
என் மனநிலை. அது சரியாக இல்லை.
என் பக்கத்திலமர்ந்த அவளிடம் வேறுவிதமாக நடந்து கொண்டேன். நான் யாரோ அவள் யாரோ என்பதுபோல். எனக்கு அவள் மீது கோபம். ஆனால் இரைந்து கூச்சலிட்டுக் கோபத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. எனக்கு அது பொருந்தாத விஷயம். கோபத்தின் அலையில், சிந்தனையைச் செலவழித்துக் கொண்டிருந்தேன். நான் அவளுடன் பேச விரும்பவில்லை.
இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கும் அவளுக்கும் ஏற்பட்ட உறவும், அதனால் ஏற்பட்ட பந்தமும், அந்தப் பந்தத்தின் விளைவால் ஏற்பட்ட பாசப் பிணைப்பும் இப்போது அவளைப் பார்த்துப் பேச வேண்டாமென்று தடுக்கிறது. முடியுமோ? அவள் சைகை செய்கிறாள். ” ஏன்? ஏன்?” என்று முணுமுணுக்கிறாள். அப்போது மூர்க்கமாகிப் போய் முறுக்கிக் கொள்கிறேன். கோபத்தை கண்களால் வெளிப்படுத்துகிறேன்.
காப்பி வேண்டும் என்கிறாள். பாராமுகமாக இருக்கிறேன். அவளுக்குப் புரியவில்லை. புரியவில்லை என்பதுபோல் பார்க்கிறாள். இல்லை, இல்லை அவளுக்கும் புரிகிறது. இதெல்லாம் சரியாகிவிடுமென்று தோன்றுகிறது.
“நிம்மதியாக இருப்போம்… நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள். அவர்கள் குழந்தையை சரியாகப் பார்த்துக் கொள்வார்கள்.”
“இருக்கட்டும். உனக்கு இரக்கமில்லை. அக்கறை இல்லை…”
“வேறு வழி.”
“ஏன் நீ லீவு போடக்கூடாது”
“லீவே இல்லை… அவர்கள் என்னைவிட நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.”
“உனக்கு எப்படி மனசு வந்தது… நீ பெத்தவள்தானே?”
அவள் பதில் பேசவில்லை. பேசப் பேச என் கோபம் எல்லை மீறி, வார்த்தைகள் கேட்கச் சகிக்காமல் போய்விடும். மௌனமானேன்.
எப்படிக் குழந்தையை விட்டுவிட்டு இருக்க முடிகிறது?
அவளுக்குத்தானே என்னை விட அன்பு அதிகமாக இருக்கவேண்டும். அவள் ஏன் யந்திரமாக இதை ஏற்றுக்கொண்டு இருக்கிறாள். புரியவில்லை. பெற்ற குழந்தையிடம் அதிக அன்பு செலுத்துவது பெற்ற தாயா? அல்லது தகப்பனா? என்று பட்டிமன்றம் வைத்தால் தகப்பன்தான் என்று வாதாடுபவள்போல் தோன்றுகிறது. பட்டிமன்றமும், அதைக் கேட்கிற கும்பலும், மனதில் நிழலாடி சகிக்க முடியாமலிருந்தது. இதெல்லாம் விரக்தி நிலையின் விபத்து. எதுவும் சகிக்க முடியாமல் தோன்றும்.
வண்டியின் வேகத்துடன், எண்ணத்தின் வேகமும் சேர்ந்து கொண்டது. எப்படி அவளை வேறு யாரோ ஒருத்தியாக நினைக்கத் தொடங்கினேன் அந்த நிமிஷத்தில், என்பதும் ஆச்சரியமாக இருந்தது. என் பக்கத்திலிருந்தாலும், நான் அறியாத ஒருத்தியாகத் தென்பட்டாள். ஒரு அறியாத பெண் பக்கத்தில் அமரும்போது ஏற்படும் கூச்சம் தொற்றிக்கொண்டது. அவள் என்னைப் பார்க்கும்போது யாரோவாக உணர்ந்தேன். கோபத்தின் எல்லையில் அவளுடன் பேச விரும்பவில்லை. அவளும் புரிந்துகொண்டு மௌனமானாள்.
சில மணி நேரத்திற்கு முன், ஷ்யாம் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு, உள் அறையிலிருந்து, ரோடைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்ணில்படாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
குழந்தையை அங்கே விட்டுவிட்டுச் செல்வது என்பது உறுதியான பிறகு, அந்தக் கணத்தில் பிரிந்து, இன்னும் சில மாதங்கள் கழித்தே பார்க்க வேண்டுமென்ற உணர்வு, தேவையற்ற சங்கடத்தை உண்டாக்கியது. இதை எதிர்த்துச் சொல்லவேண்டுமென்ற எண்ணம் அப்போது எழவில்லை.
அவள் அம்மாவும், அக்காவும் பிடிவாதமாக இருந்தார்கள். ஒரு சில மாதங்களாவது குழந்தையுடன் இருக்கப் போகிறோமென்ற உணர்வு அவள் அக்காவிற்கு சந்தோஷத்தைத் தரலாம். இல்லாதவர்களுக்குத்தான் குழந்தையின் அருமை புரியுமென்பதால், எந்த நிமிஷமும் அவள் அக்காவின் மனத்தை புண்படுத்தக்கூடாது என்றுபட்டது.
அவள் எனக்கு ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், மறுப்பைத் தெரிவித்திருப்பேன். அவள் இது மாதிரியான விஷயங்களில் முன்னதாக முடிவெடுத்து விடுவாள். ஒரு வேளை இதைப் பெரிய விஷயமாக நினைத்திருக்கமாட்டாள். நான் முக்கியத்துவம் கொடுக்கிறேனா? உணர்ச்சி வசப்படக்கூடிய விஷயமாக ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள். சந்தேகம் இல்லை. பின் ஏன் இந்த விஷயம் குறித்து மனதைப் போட்டுக் குடைய வேண்டும்.
அங்கிருந்து கிளம்பி வரும்போது, ஜன்னல் வழியாக ஷ்யாம் எங்களைப் பாத்து விடக்கூடாது என்பதற்காக, தெரியாமல் வந்தோம். பார்த்தால் ஒரு வேளை ஆர்ப்பாட்டம் செய்யலாம்.
பெங்களூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த பிறகுதான், ஷியாம் நினைவும், அவள் நடந்து கொண்ட விதமும் என்னுடைய வெளிப்படுத்த முடியாத இயலாமையையும் சேர்ந்து சித்திரவதை செய்தன. அதைப்பற்றி யோசிக்கயோசிக்கப் புரிபடாத ஆத்திரம் என்னுள் மண்டிக் கிடந்தது.
சென்னையை வந்தடைந்த பிறகும், நானும் அவளும் அறிமுகமில்லாதவர்கள்போல் இறங்கினோம். நிழல்போல் அவள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள். பேசுவதைத் தவிர்த்தோம். வழக்கம்போல், சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரிலுள்ள பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தோம். பஸ் வருவதும் போவதுமாக இருந்தது. பஸ் ஸ்டாண்டிற்குப் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியின் நெடியும், அங்கு நெளிந்த நோயின் சூழலும் வெறுப்பாய் இருந்தது. வெள்ளை உடையில் தெரிந்த நர்ஸ்களின் முகங்களில் எந்திரத்தனம்.
நாங்கள் எதிர்பார்த்த பஸ் வந்தது. அவள் மீது கோபம் இருந்தாலும், பஸ்ஸில் ஏறிவிட்டாளா என்று பார்க்கத் தோன்றியது. என் கோபத்திற்கு எதிர்க் கோபமாய் “உன்னுடன் வரமாட்டேன்” என்று போய்விடுவாளோ என்றும் பட்டது. பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். உற்சாகமில்லாமலிருந்த மனநிலை. பஸ்ஸைவிட்டு இறங்கியபிறகு ஒன்றைக் கவனித்தேன். பஸ்ஸில் என் பர்ஸ் பறி போயிருந்ததை. கோபத்திற்கான பலன் கிடைத்துவிட்டதாக நினைத்தேன். கவனக்குறைவால், கோபத்தில் உச்ச நிலையில், உணர்ச்சி வேகத்தில் கொதி நிலையில் என்னுள் நடப்பது தெரியாமல் போய்விட்டது.
சில தினங்களுக்குப் பிறகு, என்னிடமிருந்த கோபம் நழுவிவிட்டது. நானும் அவளும் சகஜமாகப் பழக ஆரம்பித்தோம். தேவையில்லாமல் எனக்குள் ஏற்படுத்திக்கொண்ட கோபத்தை நினைத்து, வெட்கமாக இருந்தது. கோபம் போனபிறகு, அவள் என்னிடம் திரும்பி வந்து விட்டாளென்று தோன்றியது. வெட்கமில்லாமல் அவளுடன் பழகிய தருணங்கள் ஞாபகத்திற்கு வந்தது. கூடுதலான சந்தோஷத்தை தரத் தவறவில்லை. குழந்தை எல்லாம் மறந்து அவளுடன் ஒன்றிவிட்டதாகப்பட்டது. நாட்கள் எப்படி ஓடிற்று என்பது தெரியவில்லை.
சில மாதங்கள் கழித்து நானும், அவளும், குழந்தையையும், அவள் அம்மாவையும் அழைத்து வருவதற்காகத் திரும்பவும் பெங்களூர் சென்றோம். இப்போது செல்லும்போது, கரைகடந்த உற்சாகத்துடன் இருந்தேன். வண்டியில் என் பக்கத்தில் அவள் வீற்றிருப்பது பெருமிதமாக இருந்தது. அவள் ஏதோ ஒரு வஸ்து போலவும், அந்த வஸ்து என்னிடம் ஒட்டிக்கொண்டதுபோலவும்பட்டது. அவள் தூங்கும்போது உரிமையுடன் என் தோளில் சாய்ந்து படுத்தாள். அவளுக்கு அப்படித் தூங்குவது பிடிக்கும். எனக்கும்தான்.
அவள் அக்கா வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஷ்யாமைத் தூக்கிக்கொண்டு கொண்டாடினாள். பையனை வினோதமாகப் பார்த்தேன். அவன் நிறத்தில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் இளைத்துவிட்டதுபோல் கண்களில் தென்பட்டான். இதைத் தெரிவித்தவுடன் சில தினங்களுக்கு முன் சுரம் வந்து அவன் அவதிப்பட்டதாகச் சொன்னார்கள். குழந்தையை கொஞ்சுவதற்குக் கைகளை நீட்டினேன், வருவதற்குத் தயக்கம் காட்டினான்.
அம்மாவைத் தெரிந்த அளவிற்கு என்னைத் தெரியவில்லை. விளையாட்டுக் காட்டினேன். அதை ரசித்தாலும் என்னிடம் வரவில்லை. அல்லது வலுக்கட்டாயமாக அவனை அழைத்துக் கொஞ்சினாலும், வர விரும்பவில்லை என்பதோடல்லாமல் சிணுங்கவும் தொடங்கினான். பக்கத்தில் நின்ற அவளை கோபத்துடன் பார்த்தேன். அவள் என்னை சமாதானப்படுத்தினாள்.
” பார்த்து ரொம்பநாள் ஆயிற்றே. அடையாளம் தெரியலை” என்றாள் அவள் அம்மா. குழந்தையின் இந்தச் செய்கை அவர்களிடம் சிரிப்பை உண்டாக்கியிருக்கும். எனக்கோ அந்த இடத்தைவிட்டுக் கிளம்ப வேண்டும்போல் தோன்றியது. அவ்வாறு செய்யவில்லை. செய்திருந்தால், அவர்களை அவமானப்படுத்தியிருப்பதைப்போல் தோன்றியிருக்கும். மேலும், சில மாதங்களாக அவர்கள் என் குழந்தையை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் வேறு வழியில்லாமல், குழந்தையை அங்கு விட்டிருக்கிறேன். இத்தருணத்தில், கோபத்தை வெளிப்படையாகக் காட்டினால், அது மரியாதைக்குரிய ஒன்றாகத் தோன்றாது.
ஷ்யாம் என் பக்கத்தில் வருவதற்கே வெட்கப்பட்டவன் போலிருந்தான். அவர்களோ அவனிடம் என்னைக் காட்டிப் பக்கத்தில் போகும்படி சொன்னார்கள். இப்படிச் சொல்வது கூட ஏதோ விளையாடுவதுபோல் தோன்றியது. மறைமுகமாகக் கிண்டல் செய்வது போலிருந்தது. அதனால் அவர்களுக்கு திருப்தி ஏற்படுவது போலிருந்தது. அவர்களின் வற்புறுத்தல் தாங்காமல், அவன் என்னிடம் வந்தான். தயங்கிக் தயங்கி நின்றான்.
பிறகு, மெதுவாக என்னைப் பார்த்து ‘ ” “அங்கிள்” என்று கூப்பிட்டான்.
ஜிமிக்கி கம்மல் பாட்டு – கலக்கல்
இப்போதைக்குக் கலக்கல் பாட்டு இந்த ஜிமிக்கி கம்மல் தான்
எமபுரிப்பட்டணம் ( எஸ் எஸ் )
சூரிய தேவனுக்கு ஸந்த்யாவைத் தனியே சந்தித்ததில் சொல்லமுடியாத மகிழ்ச்சி. மற்றவர்கள் யாரும் வருவதற்குமுன் அவளது தளிர் மேனியை இறுக்க அணைத்து அவளது சிவந்த கன்னத்தில் தன் இதழைப் பதிக்க விரும்பினான். அவளைப் பார்க்கப் பார்க்க அவனது ஆவல் கட்டுக்கடங்காமல் பொங்கியது.
அதைச் செயலாற்றப் பாய்ந்து சென்ற அவன் கரங்களை ஒரு கண்ணாடித் திரை தடுத்தது. கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரையை அமைத்தது யார்? அவள் தந்தை விஸ்வகர்மாவா? ஒருவேளை திரைக்கு அப்புறம் இருப்பது ஸந்த்யாவா அல்லது அவளது பிம்பமா?
சூரியதேவனின் தடுமாற்றத்தையும், அதனால் அவனுக்கு ஏற்பட்ட கோபத்தையும் பார்த்த ஸந்த்யாவால் அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை.
“ பிரபு! நம்மைப் பிரிப்பது திரை மட்டுமல்ல. எனது படைப்பின் ரகசியமும்கூட. நான் உங்களுக்கென்றே பிறந்தவள்தான். ஆனால் தங்களின் வெப்பப் பார்வையைக்கூடத் தாங்க முடியாத அளவிற்கு என்னை மென்மையாகப் படைத்துவிட்டார் பிரம்மதேவர். என் தந்தையாலும் அதை மாற்ற முடியவில்லை.”
அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. சூரியதேவன் துடித்துப் போனான்.
“பிரபு ! நீங்களும் நானும் சங்கமித்த அந்தச் சில கணங்களில் நான் நெருப்பில் இட்ட பொன்போல உருக ஆரம்பித்துவிட்டேன். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. தங்கள் திருப்பார்வைபட்டு உடனே மறையும் பனித்துளியாக நான் இருந்தால் எனக்கு அதுவே போதும்.”
“இல்லை, ஸந்த்யா இல்லை! உன்னுடன் என்றென்றும் வாழத்தான் விரும்புகிறேனே அன்றி உன்னை உருக்கி அழிக்க விரும்பவில்லை. ஆனால் உன்னைப் பார்த்த அந்தக் கணத்திலேயே நான் என்னையே மறந்தவனாகி விட்டேன். நீ இல்லையென்றால் நான் வெடித்துச் சிதறி விடுவேன். இதற்கு ஒரு வழி இல்லாமல் போகாது. ”
“ இருக்கிறது சூரியதேவா!” என்று கூறிக் கொண்டே விஸ்வகர்மா வந்தார்.
“ என்ன வழி, சொல்லுங்கள் “ என்றான் சூரியதேவன் ஆவலுடன்.
“ஸந்த்யா தங்களை மணாளனாக அடைய உண்மையிலேயே பாக்கியம் செய்தவள். ஆனால் நீங்கள் அவளை அடைய வேண்டுமானால் உங்கள் உடலின் உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.”
“அது எப்படி முடியும் விஸ்வகர்மா அவர்களே?”
“ நான் கைலாசத்தில் பார்வதி தேவியிடமிருந்து பெற்ற காந்தப் படுக்கை இருக்கிறது. அதில் தங்களுக்குச் சந்திரனைக் கொண்டு சந்திர காந்தச் சாணை பிடிக்கவேண்டும். அதைச் சூரிய கிரகணம் என்றும் சொல்லலாம். அது சில நாழிகைகள்தான் பீடிக்கும். அப்படிச் செய்யும்போது உங்களின் பிரதிபலிப்பு, உக்கிரம் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். சில நொடிகள் நீங்கள் முற்றிலும் இருளடைந்து மறைந்ததுபோன்ற உணர்வு உண்டாகும். அந்த சிகிச்சை முடியும்போது உங்களிடமிருந்து ஒரு வைர மோதிரம் தோன்றும். அதை ஸந்த்யா அணிந்துகொண்டாள் என்றால் அதன் பின் உங்கள் உக்கிரம் அவளைப் பாதிக்காது. ஆனால் இது நிரந்தரமானது அல்ல. வருடா வருடம் தாங்கள் இந்த சாணை பிடித்துக் கொண்டால்தான் அவளுடன் நீங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ முடியும். இது தங்களால் முடியக்கூடிய காரியமா?” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டார் விஸ்வகர்மா.
சூரியதேவன் என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றான்.
ஸந்த்யாவின் கண்ணீர் ததும்பும் விழிகள் அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற துடிப்பில் இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
எமியின் பாந்தமான அழகைப்போலவே அவளுடைய குரலும் அந்த இலக்கியக் கூட்டத்தில் உள்ள மக்களை வசீகரித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
எவ்வளவு புண்ணியம் செய்தவள் எமி என்கிற யமுனை என்பது யாருக்கும் தெரியாது. பிற்காலத்தில் மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதாரம் எடுக்கப்போகும் சமயத்தில் அவரைக் குழந்தையாகத் தன் மடியில் தாலாட்டப்போகும் பெருமை பெறப்போகிறவள்.
கிருஷ்ணன் அவதரித்த உடனே அவரைக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு அவரது தந்தை யமுனை ஆற்றைக் கடக்க வருவார். அப்போது அவருக்கு வழிவிட்டு அந்தக் குழந்தைக் கிருஷ்ணனின் பாதங்கள் கூடைக்கு வெளியே இலேசாகத் தெரியும்போது தன் நீரால் வருடி பாதபூஜை செய்யும் பேற்றைப் பெறப்போகிறவள். அதனால் கங்கையிலும் அதிக புனிதத்தைப் பெறப்போகிற புண்ணிய நதியல்லவா அவள்?
“ உங்கள் அனைவரையும் இங்கு இந்த நல்ல நாளில் சந்தித்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல பொழுதை எனக்கு அளித்த என் அன்பு அண்ணனுக்கு நன்றி சொல்வதா, அல்லது சிறப்பாகப் பேசி அனைவரையும் அன்பினில் தோயச்சொன்ன ஜெயகாந்தன் அவர்களுக்கு நன்றி சொல்வதா, அல்லது நரகத்தில் வாடும் ஜீவன்களுக்காக வாதாடி என்னை அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவைத்த அன்பருக்கு நன்றி சொல்வதா என்று தெரியாமல் அனைவருக்கும் ஒருசேர நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று சொர்க்கபுரிக்கு அழைத்து வந்த என் சகோதரன் நாளை நரகபுரிக்கு அழைத்துச்செல்ல உத்தேசித்திருக்கிறார். என் அண்ணனுடன் செல்லும்போது எனக்கு நரகமும் சொர்க்கமாகவே தெரியும்.
இருந்தாலும் உண்மையான நரகம் என்பது நாம் அன்பு கொண்ட உள்ளத்திலிருந்து பிரிந்து வாழ்வதுதான். உங்கள் புரட்சிக் கவிஞன் கேட்கவில்லையா? “ நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்தில் உழலுவதோ? என்று.
அந்த வகையில் நான் சிறு வயதிலேயே நரகத்தை அனுபவித்திருக்கிறேன்.
என்னுடன் இணைந்தே பிறந்த என் அண்ணன்மீது எனக்கு இருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது. நாங்கள் அன்னை என்று நினைத்த எங்கள் சிற்றன்னை எங்களைக் கொடுமை செய்தபோது எனக்கு ஆறுதல் என் அண்ணன்தான். நான் பட்ட சித்திரவதைகளைக் கண்டு கோபத்தில் ஆழ்ந்த என் அண்ணன் சிற்றன்னையைக் காலால் உதைக்கும் அளவிற்குப்போனான். அதனால் அவன் கால்களைக் கொதிக்கும் நெருப்பில் போட்டது மட்டுமல்லாமல் அவனை எங்கோ காட்டிலும் விட்டுவிட்டு வந்துவிட்டாள் எங்கள் சிற்றன்னை. அவனைப் பிரிந்து நான் அழுத அழுகை இன்றைக்கு நினைத்தாலும் என்னை வாட்டுகிறது.
( இதைப் பற்றிய விவரமான கதைக்களம் எமபுரிப்பட்டணத்தின் முதல் பாகத்தில் அதற்கான காலம் வரும் போது விவரிக்கப்படும்)
அதுதான் நரக வேதனை என்பதனை உணர்ந்தேன். அதனால் நரகத்தில் துன்பப்படும் ஜீவன்களின் வேதனைகளுக்கு ஒரு வடிகால் தேட நான் முயல்வேன் என்று இப்போது உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதுதான் என் தந்தையின் கட்டளையும் கூட.
உங்கள் அன்பிற்கு நன்றி. வணக்கம்.”
(தொடரும்)
பொருள்வயிர் பிரிவு – சிவ.விஜயபாரதி


இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல… – ஈஸ்வர் (திடீர் த்ரில்லர்)
இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல…
ஈஸ்வர்.
திருநெல்வேலி சிவசங்கரன் சுப்பிரமணியன் என்ற மணி சாப்-, மாதுங்காவின்அந்தப் பழைய பல மாடிக் குடியிருப்பின் முன்,தன்னுடைய 89-ம் வருட பத்மினி-பிரீமியரை நிறுத்தி, கார் கதவைத் திறந்தபொழுது மணி எட்டு –பத்து. கண்களில்பட்ட பெயர் , மங்கிய வெளிர் நீல மகாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ்.
அங்கங்கே கவலையான முகங்கள், இரண்டாவது மாடி பால்கனியைப் பார்த்தவாறு குசுகுசுத்துக் கொண்டிருந்தன. மூன்று போலீஸ் கட்டடத்தைப் பாதுகாத்துக்கொண்டிருந்தது. உள்ளே வர முயன்று கொண்டிருந்தவர்களை மராத்தியிலும், ஹிந்தியிலும் மிரட்டுவதிலும், விரட்டுவதிலும் மும்முரமாக இருந்தது.
பயிற்சி பெற்ற போலீஸ் உடம்பின் மிடுக்கு இருந்தாலும், மணியின் முகத்தில் அதை மீறி சற்றே நளினமான நாகரிகம் இருந்தது. இவனிடம் ஏதோ இருக்கிறது என்கிற மாதிரி கூர்மைமிகு கண்கள். வாயிலில் நிற்கும் போலீஸ் சல்யூட் வைத்தது.
“ஊப்பர் சார்… .. ஃப்ளாட் நம்பர் சாத்”.
மணி அவசரப்படவில்லை. நிதானமாக அந்த வீதியின் நீள, அகலங்களில் அவன் பார்வை வியாபித்தது. எதிர் திசை அபார்ட்மென்டையும் ஒரு அலசல்.
மும்பையில் இது இந்த மாதத்தின் மூன்றாவது கொலை. கடந்த இரண்டு மாதங்களில் நடந்த, ஐந்தாவது அமைதியான கொலை.
இந்த முறை ஏதோ ஒரு பாலக்காட்டுப் பாட்டி. பிள்ளை , துபாயில். பல வருடங்களுக்கு முன்னர் பம்பாயில் குடியேற்றம். இப்பொழுது, மும்பையிலேயே கடைசி மூச்சை, கஷ்டப்பட்டு விட்டிருக்கிறாள். தனிமை வாசம். கொலையின் நோக்கம்…?
உடமைகள் ஏதேனும் காணாமல் போயிருக்கின்றனவா? சொல்வதற்குக்கூட ஆட்கள் யாரும் கிடையாது. துபாய் பையன் வந்தபிறகே தெரியும்.
வயர்லெஸ்ஸில் மணிக்கு முன்கூட்டியே தகவல் வந்துவிட்டது. கடந்த முறைகள்போல், அவன் இந்த முறை கடைசியாகக் கூப்பிடப்படவில்லை. முன்கூட்டியே தகவல் வந்தது. முதலில் அவன் அங்கு வந்துவிடவேண்டும். மேலிடத்து விருப்பம்.
டி எஸ் பியும், மாதுங்கா இன்ஸ்பெக்டரும் ஏற்கெனவே அங்கு இருந்தார்கள். டி எஸ் பி, பூனாக்காரன். இளம் வயதை இலேசாகக் கடந்துகொண்டு இருக்கின்றவன். விவரமானவன். சிவசேனாவின் செல்லப் பிள்ளை என்று , சில முன்னாள் போலீஸ் வட்டாரங்கள் , காங்கிரஸ் காதில் கிசுகிசுக்கும் அளவுக்கு, பத்திரிகை பிரபலம் ஆனவன். ஆனால் கிருஷ்ணா கமிட்டி ரிப்போர்ட் , அது இது என்று எதிலும் மாட்டிக்கொள்ளாதவன். டி எஸ் பி . மல்ஹோத்ரா ராம்குமார் ஆங்கிலத்தை அழகாகப் பேசுவான். அவனுடைய உயரம், மிடுக்கு, நிறம் ஆங்கில உச்சரிப்பு இவற்றிற்காகவே அவனுக்கு ஏராளமான விசிறிகள் உண்டு.
மணி -சாப்புடன் சேர்ந்து அவனும் செயல்படவேண்டும் என்ற மகாராஷ்டிரா அரசின் ஆணைதான் இந்த முறை , அவனுக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது. மணியின் மீது அவனுக்குப் பொறாமையோ , கசப்போ கிடையாது. இது மணிக்கும் தெரியும்.
ஏழாம் எண் ஃபிளாட். வாசலிலேயே மல்ஹோத்ரா நின்று கொண்டிருந்தான் .
. “ வழக்கம்போல்தான். உயிரு போயி இருபது மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கலாம். டாக்டர் உள்ளே இருக்காரு.”
“ மரணத்துக்குக் காரணம்?”
“அதுவும் வழக்கம்போலத்தான்.விழா ஊசிதான். சயனைட் டெத்.. பேட் ஆ க்ருயல் மர்டர்.”
“பையனுக்கு சொல்லியாச்சா?”
“ம். . துபாயில சார்டட் அக்கௌண்டண்டா இருக்கான். பெரிய எண்ணைக் கிணறு கம்பெனி. .சொந்தக்கார ஷேக்குக்குக் கிட்டத்தட்டக் கூடப் பொறந்ததவன்மாதிரி ஆயிட்டானாம். நாளைக்கே அவனை ஏதாவது ஒரு ஏர்லைன்ல போட்டு,இந்தியாவுக்கு அனுப்பறது இனிமே அந்த ஷேக்கோட கடமையாம்.
மல்ஹோத்ரா இலேசாகப் புன்னகைத்தவாறே சொல்கிறான். அழகாகவும், புன்னகைத்தால் மந்தஹாசமாகவும் இருக்கிறான்.
மும்பைக்கு என்ன ஆயிற்று? ஒரேயடியாக. தாத்தாக்களும், பாட்டிகளுமாக, பரலோகம் போய்க்கொண்டு இருக்கிறார்கள். தப்பு, தப்பு. அனுப்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! அதுவும் , அதிக வலியே இல்லாமல்.
முதலில், ஒரு பஞ்சாப் சிங்க். இடம், முலண்ட்.
இரண்டாவது, ஒரு மராட்டியப் பாட்டி. தாராவி பக்கம்.
இவை, போன மாதம்.
மூன்றாவது, ஒரு பார்சிப் பெண்மணி. இதே மாதுங்காவில்.
நான்காவது, ஒரு கன்னடக் கிழவர். மீண்டும், முலண்ட்.
ஐந்தாவது, இதோ, ஒரு பாலக்காட்டுப் பாட்டி.
இடம். இதே மாதுங்காவில்தான்.
ஏதோ, எங்கோ, ஒரு லிங்க் இருக்கவேண்டும். எங்கே, என்ன என்பதுதான் புரியவில்லை.
(தொடரும்)
கார்ட்டூன் – லதா
“போட்டி” ஜி.பி. சதுர்புஜன்
நம்பவே முடியவில்லை.
எழுத்தாளர் ராம்நாராயணன் ‘முத்தமிழ்’ இலக்கிய இதழில் வெளிவந்திருந்த சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பை மீண்டும் ஒரு முறை முதலிலிருந்து ஒரு வரி விடாமல் படித்து மூக்கின்மேல் விரலை வைத்தார்.
இருக்காதா பின்னே?
சென்னைத் தமிழ்ச்சங்கம் என்ற முன்னணி இலக்கிய அமைப்பு ஒன்று ‘அமரர் விஷ்ணம்பேட்டை வி.சீ.சுந்தரம் நினைவுச் சிறுகதைப்போட்டி’யை அறிவித்திருந்தது.
பொதுவாக இதுபோன்ற போட்டிகளின் அறிவிப்புகளை மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் பக்கத்தைத் திருப்பிவிடுவதுதான் ராம்நாராயணனின் வழக்கம். ஏனென்றால், இந்த சிறுகதைப் போட்டிகளில் சுதந்திரமாக ஒரு கதையை எழுதி அனுப்பிவிட முடியாது. முதலில் நான்கு பக்கங்களுக்குள் இருக்கவேண்டும் என்பார்கள். சமுதாயத்திற்கு உபயோகமான நல்ல கருத்து ஒன்றை, கதைக்குள் கருவாய் வைத்துச் சொல்லவேண்டும் என்பார்கள். ஏற்கெனவே கதைகளை வெளியிடாத அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பார்கள். இன்னும் இதுபோன்ற ஆயிரம் நிபந்தனைகள். இது போதாதென்று, நடுவர்கள் யார் என்று பார்த்து அதையும் மனதில் வைத்துக் கதையை எழுதித் தொலைக்க வேண்டும். கடைசியில் பார்த்தால், முதல் பரிசே ஐந்நூறு, ஆயிரத்தைத் தாண்டாது.
ஆனால், இந்த அறிவிப்பு…?
எந்த விதமான அபத்த நிபந்தனையும் இன்றி வந்தது.
இது எல்லாவற்றையும்விட, ’ஒரு லட்ச ரூபாய் முதல் பரிசு’ என்றால் எந்த எழுத்தாளருக்கும் ஆசை வரத்தானே செய்யும்?
ராம்நாராயணனும் இதற்கு விதி விலக்கல்லவே!
நான் இதுவரை என் நண்பன் ராம்நாராயணின் இயற்பெயரை குறிப்பிட்டிருப்பதால், உங்களுக்கு அவர் யார் என்று தெரிந்திருக்க நியாயமில்லைதான். ‘வெற்றிவரதன்’ என்ற அவருடைய புனைப் பெயரைக் குறிப்பிட்டால் நீங்கள் சிறுகதைகளை விடாமல் படிக்கின்றவர் என்ற காரணத்தால் உங்களுக்கு இப்போது உடனே பிடிபட்டுவிடும்.
ஆம். சிறுவயதிலிருந்தே தன்னுடைய புனைவெழுத்துப் பயணத்தைத் தொடங்கி, தொன்னூறுகளில் தமிழ் எழுத்துலகில் சிறுகதை மன்னராகச் சரேலென்று விஸ்வரூபமெடுத்த அதே வெற்றிவரதன்தான். ஆனந்த விகடன், கல்கி என்று எல்லா முன்னணிப் பத்திரிக்கைகளிலும் அவர் பெயரைத் தாங்கிய ‘முத்திரைக் கதைகள்’ சரசரவென்று வந்து விழுந்தபோது, அவரது சொல்லாட்சியிலும் கற்பனையிலும் மனதைப் பறிகொடுத்த ஆயிரக்கணக்கான வாசகர்களில் என்னைப்போல் நீங்களும் இருந்திருப்பீர்கள்தானே? அழகிய பெண்களை மட்டுமே அட்டைப்படமாய்ப் போட்டிருந்த காலம் மாறி, இலக்கியவாதிகளை அட்டையில் போட்டாலும் பத்திரிக்கைகள் விற்கும் என்று வெற்றிவரதன்தானே மாற்றிக் காட்டினார்?
இதையெல்லாம் நினைத்து அசைபோட்டபோது, வெற்றிவரதனாகவே முழுமையாக பெயர் மாற்றம் ஆகிவிட்ட ராம்நாராயணனுக்குப் பெருமையாகவே இருந்தது. தன்னையறியாமல் அவர் வலதுகை, அவருடைய நரைத்த மீசையை முறுக்கிவிட்டு முதிர்ந்த முகத்தில் ஒரு முறுவலையும் வரவழைத்தது.
எவ்வளவுதான் வெற்றிமேல் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த சிறுகதைப் போட்டி அறிவிப்பைக் கண்டதும் அவருக்குள் புது ரத்தம் பாய்ந்தது. எப்படியும் ஒரு சிறந்த கதையை எழுதி முதல்பரிசைத் தட்டிச் செல்ல வேண்டும் என்று உடனே மனதிற்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அத்தகைய கதையின் கருவைத் தேடி அவர் மனம் அமைதியின்றி அலைபாயத் தொடங்கியது.
எப்போதையும்விட அன்றைக்கு அவருக்கு குளியல் அதிக நேரம் பிடித்தது. ஏனென்றால், தீவிரமாகக் கதையைப்பற்றி யோசிக்கும்போது அவருக்குத் தலையில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கவேண்டும். ஒரு நல்லகரு பிடிபட்டவுடன்தான் சுயநினைவு திரும்பி ஒருவழியாகக் குளியலை முடித்துக்கொள்வார்.
லட்ச ரூபாய் பரிசு என்றால் நிறைய எழுத்தாளர்கள் போட்டி போடுவார்களே? எல்லாவற்றையும் மிஞ்சுவது போலல்லவா கதை இருக்கவேண்டும்…?
தலையைத் துவட்டிக் கொண்டு வந்தபோது அவர் முகத்தில் திருப்தியும் சந்தோஷமும் கொப்பளித்தது. விநாயகர் அகவலை எப்போதும்போலப் படித்து முடித்துவிட்டு, சிற்றுண்டி முடித்து, தன்னுடைய அறையில் ஒரு திடமான முடிவோடு உட்கார்ந்து கொண்டு எழுதத் தொடங்கினார்.
பிள்ளையார் சுழி போட்டதுதான் தாமதம், அவருடைய கைப்பேசி அலறியது.
பெயர் எதுவும் இல்லை. நம்பர் மட்டும்தான் இருந்தது. ஆனாலும் எடுத்தார்.
“ஹலோ சார்… எழுத்தாளர் வெற்றிவரதன் சார்தானே…?”
“ஆமாம் …. வெற்றிவரதன்தான்… சொல்லுங்க…”
“வணக்கம் சார்… என் பேரு ஆனந்த் சீனிவாசன்… நான் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் சார்… எம்ஃபில் பண்றேன். உங்களைப் பற்றியும் உங்களோட சிறுகதைகளைப்பற்றியும்தான் என்னோட ஆய்வு. உங்களோட சிறுகதைத் தொகுப்பு அத்தனையும் முழுசாப் படிச்சு குறிப்பெடுத்து வெச்சிருக்கேன்!”
“சரி அதுக்கு நான் என்ன செய்யணும்?”
“வேற ஒண்ணும் இல்ல சார்! ஒரு பத்து நிமிஷம் உங்களோட பேசணும். சில கேள்விகள் இருக்கு… அதை நேர்ல வந்து பாத்து பேசிட்டுப் போலாம்னு தோனிச்சு. சார் ஒரு பத்து நிமிஷம் எனக்கு இன்னிக்கு நேரம் ஒதுக்குங்களேன்… ப்ளீஸ்!”
“பத்து நிமிஷங்கறே… சரி, சரி… வந்து பாரு… எனக்கு சென்னை தமிழ்ச் சங்கத்தோட சிறுகதைப் போட்டிக்கு வேற கதை எழுதி அனுப்ப வேண்டியிருக்கு… ஆனாலும், நீ ஸ்டூடன்ட்ங்கறே… காலையில பத்து மணிக்கே வந்து பாத்துட்டுப் போயிடு… அப்புறம் என் வேலையைத் தொடர்வேன்…!”
“ரொம்ப நன்றி சார்!”
கைப்பேசியைக் கட் பண்ணிவிட்டு மீண்டும் கதையைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார் வெற்றிவரதன்.
பத்துமணிக்கு டாண் என்று அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்ததும் புன் சிரிப்புடன் முதுகில் நீலநிறப்பை ஒன்றை மாட்டிக் கொண்டு அந்த இளைஞன் தயங்கித் தயங்கி உள்ளே வந்தான். அவன் அணிந்திருந்த கண்ணாடி அவன் ஒரு தீவிர படிப்பாளி என்று பறை சாற்றியது.
“வாப்பா… உட்காரு. வழி கண்டுபிடிக்கக் கஷ்டமா இருந்துதா…?”
“நீங்க வேற… அதெல்லாம் இல்லே சார். எழுத்தாளர் வெற்றிவரதன் வீடுன்னு தெருமுனையில கேட்டாலே எல்லாரும் சொல்றாங்க. நீங்க நெறய அவார்ட்ஸ் எல்லாம் வாங்கியிருக்கீங்க. ஒங்க முகம் எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ளகூட அடிக்கடி பேட்டி, அது இதுன்னு வரீங்க. யூ ஆர் எ செலிப்பிரிட்டி சார்!”
புகழ் போதை மனிதனுக்கு எங்கே போகிறது? வெற்றிவரதன் மீண்டும் குளிக்காத குறைதான்.
“சரி… கேளுப்பா ஒன்னோட கேள்விகளை!” என்று அவரே தொடங்கி வைத்தார்.
அவர் நினைத்ததைவிட ஆனந்த் சீனிவாசன் தீவிர வாசிப்பாளனாக இருந்தான். அவர் எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் கரைத்துக் குடித்திருந்தான். அவரே மறந்துவிட்டிருந்த அவருடைய அந்த நாளையப் பழைய சிறுகதைகளை ஞாபகப்படுத்தி, அவற்றில் இடம் பெற்ற சம்பவங்களைப்பற்றி நுணுக்கமான ஆயிரம் கேள்விகளை அடுக்கினான். கதைமாந்தர்களின் மனப்போக்கைப் பற்றி அறிவதில் ஆர்வம் அவனுக்கு அதிகமாக இருந்தது. ஏன் இப்படி எழுதவில்லை, ஏன் இப்படி ஒரு முடிவை எழுதினீர்கள் என்று அவனுடைய தீராத ஆர்வம் பல திசைகளில் பாய்ந்தது.
வெற்றிவரதனுடைய சிறுகதைகளைத்தவிர, பொதுவாக சிறுகதைகள் எழுதும் கலையைப்பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டான். சிறந்த கதைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த எழுத்தாளர்களைப் படித்தால் சிறுகதைச் சூத்திரம் பிடிபடும் என்று துருவித்துருவித் தெரிந்துகொண்டான்.
ஆனந்த் சீனிவாசனுடன் பேசுவதும் அவனுடைய கேள்விகளுக்குப் பதிலுரைப்பதும் வெற்றிவரதனுக்கு மிகவும் சவாலான, சந்தோஷமான அனுபவமாக இருந்தது. இந்த சிறிய வயதில் இப்படி ஒரு தீவிர வாசகரை அவர் இதுவரை சந்தித்ததே இல்லை.
“சார்! சென்னை தமிழ்சங்கம் நடத்தற மெகாபரிசு சிறுகதைப் போட்டியில் நீங்களும் கலந்துக்கறீங்களா சார்…? அப்படிக் கலந்து கொண்டா, உங்களுக்குத்தான் சார் முதல் பரிசு ஒரு லட்சம்! அது நிச்சயம் சார்…!”
“ஆமாம்ப்பா… நான் கலந்துக்கப்போறேன். ஒரு கல்லூரி மாணவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா எப்படித் தீவிரவாதியா மாறினான்ங்கறதை வெச்சுத்தான் என்னோட கதை…”
“அப்படியா சூப்பர் சார்! அதை எப்பிடி சார் ஆரம்பிப்பீங்க? எப்பிடி டெவலப் பண்ணுவீங்க? கடைசியில் திருப்பம் ஏதாவது இருக்குமா…?”
மீண்டும் மீண்டும் ஆனந்த் சீனிவாசனின் இடைவிடாத கேள்விகள்.
அவனுடைய ஆர்வத்துக்குத் தீனிபோடும் விதமாய் வெற்றிவரதன் தன் மனதிலுள்ள சிறுகதையை அப்படியே உணர்ச்சிகரமாய் விளக்கினார். இந்த முயற்சியில் கதையும் முழுமையாய் அவருடைய மனதிலும் விரிந்தது.
“சூப்பர் சார்! நன்றி சார்! வாழ்த்துக்கள் சார்!” – உற்சாகம் கொப்பளிக்க விடை பெற்று விரைந்தான் அவருடைய இளம் விசிறி.
விடைகொடுத்துவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பி கதையை ஒருவாறாக எழுதி முடித்தார் வெற்றிவரதன். ஆனாலும் கால அவகாசம் நிறைய இருந்ததால், இரண்டு வாரங்கள் கழித்தே அதைப் போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
***
ஒரு மாதம் கழித்து சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வெளியானபோது இலக்கிய உலகமும் வாசகர் வட்டங்களும் வியப்பில் விரிந்தன.
‘ஒரு மாணவன் மாறுகிறான்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதை மிகச் சிறந்த சிறுகதையாக நடுவர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லா முன்னணித் தமிழ்ப் பத்திரிகைகளிலும் இந்த விபரம் கொட்டி முழங்கியது.
கதையை விறுவிறுவென்று படு சுவாரசியமான நடையில் எழுதி ஒரு லட்சம் ரூபாய் மெகா பரிசைத் தட்டிச் சென்றது ஒரு கல்லூரி மாணவனாம்.
அறிமுக எழுத்தாளர் ஆனந்த் சீனிவாசன் கண்ணாடியின் வழியே எல்லாப் பத்திரிக்கைகளிலிருந்தும் சிரித்துக் கொண்டிருந்தான்.
வெற்றிவரதன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்.
நாம் ( முன்பு) வாழ்ந்த வீடு ! – தில்லைவேந்தன்
