காதலெனும் சிறகடித்துப் பறந்தே னன்று
சாதலெனும் திசைநோக்கி செல்கிறே னின்று
மெய்க்காத லென்காத லென்றே னன்று
பொய்க்காதல் மயக்கமென உணர்ந்தே னின்று!
தேனமுது அளித்தனளே கன்னி அன்று
வன்சொல்லுந் தெளிக்கின்றாள் நங்கை இன்று
கிடைக்குமென நம்பினேன் மகிழ்வே அன்று
கிடைத்ததோ தாளாத துயரம் இன்று!
அணைத்திடுவா ளெனவெண்ணம் கொண்டே னன்று
பிணங்குகிறா ளுளம்நோக நங்கை யின்று
பேறுசெய்தே னவள்கிட்ட என்றே னன்று
குற்றமென்ன செய்தேனென குழப்பம் இன்று!
பிறருக்கு மாலையிடேன் சொன்னா ளன்று
பிறனுக்கு மாலையிட நின்றாள் இன்று
மணமென்றா லெனையேதான் என்றாள் அன்று
பணங்கொண்ட மாப்பிள்ளை பிடித்தாள் இன்று!
உயிரிற்கும் மேலாகக் கொண்ட நேசம்
மையலொடு காதலிலே துவண்ட கோலம்
கட்டிய கற்பனைக் கோட்டை யெல்லாம்
கட்டோடு மறந்தனளே பாவி இன்று!
தற்கால காதலெலாம் உதட்டின் மேலே
பற்றின்றித் தள்ளிவிடும் சேற்றின் கீழே
எழில்நோக்கிக் காதல்கொளும் மக்காள் நீவீர்
உழலுமென் வாழ்க்கையைச் சான்றாய்க் கொள்வீர்!