குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்

நூறு பூக்கள் மலரட்டும்: புத்தகம் படிக்கலாமா?

67. புத்தகம் படிக்கலாமா ?

அம்மா, அம்மா, நீயும் நானும் –
புத்தகம் படிக்கலாமா ?
படித்துப் புதிய விஷயங்களை –
தெரிந்து கொள்ளலாமா ?

பாட்டு, கவிதை என்று எல்லாம் –
படித்து ரசிக்கலாமா ?
குட்டி கதைகள் பெரிய கதைகள் –
அனைத்தும் படிக்கலாமா ?

பெரியோர்கள் வாழ்ந்த விதம் –
தெரிந்து கொள்ளலாமா ?
வேற்றுநாட்டு மனிதர் பற்றி –
அறிந்து கொள்ளலாமா ?

புத்தகங்கள் பொக்கிஷங்கள் – நாம்
புரிந்து கொள்ளலாமா ?
அள்ள அள்ள அறிவு வளரும் –இதை
அறிந்து கொள்ளலாமா ?

படித்துப் படித்து அறிவை நாமும் –
வளர்த்துக் கொள்ளலாமா ?
படித்து ரசித்து பிறருடன் நாம் –
பகிர்ந்து கொள்ளலாமா ?

வாழை இலை மகத்துவம் – chinnuadhithya

68. சாப்பிட நான் ரெடி !

அம்மா, சாப்பிட நான் ரெடி !
தட்டில் எல்லாம் வை ! வை ! வை !
ஒவ்வொன்றாய் நான் ருசித்திடுவேன் –
சப்புக்கொட்டி சாப்பிடுவேன் !

முதலில் பாயசம் சாப்பிடுவேன் !
முந்திரி திராட்சை பிடித்திடுமே !
பச்சடி என்றால் இரு வகையும் –
ரசித்து ருசித்து சாப்பிடுவேன் !

அவியல் கூட்டு கறி எல்லாம் –
அள்ளி அள்ளி சாப்பிடுவேன் !
அப்பளம் வடகம் சிப்ஸ் எல்லாம் –
கரக் முரக்கென்று சாப்பிடுவேன் !

பருப்பு, சாம்பார், ரசம் சாதம் –
கடைசியில் வருவது தயிர் சாதம் !
ஒவ்வொரு சுவையும் தனிச்சுவையே !
அனைத்திலும் அன்பு பளிச்சிடுமே !

எதைச் செய்தாலும் நீ செய்தால் –
ருசியாய் எனக்கு இருந்திடுமே !
அம்மா அன்பாய் கொடுப்பதனால் –
கைமணம் என்பது அதுதானே !

 

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.