கிரேக்க டிரோஜன் போரில் மிகப் பெரிய பயங்கரம் அக்கிலிஸின் உயிர் நண்பனான பெட்ரோகுலஸின் கொடூர மரணம்.
அக்கிலீஸின் கவச உடையை அணிந்து வந்த பெட்ரோகுலஸ் அதி தீவிரமாகப் போரிட்டு டிரோஜன் படையினருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினான். ஆனால் அவனுக்குப் பின்னால் மறைந்துவந்து அவன் கவசத்தைக் கழட்டிய அப்போலோவின் செய்கை மன்னிக்க முடியாதது. கவசப் பாதுகாப்பு இல்லாத பெட்ரோகுலஸை ஹெக்டர் ஈட்டியால் குத்தி கீழே சாய்த்தான். டிரோஜன் தலைவர்கள் ஒவ்வொருவரும் பெட்ரோகுலஸைக் குத்தி அவனைச் சின்னாபின்னமாக்கினர். அவனை நிர்வாணமாக்கி அவன் அணிந்திருந்த அக்கிலிஸின் கவச உடையை ஹெக்டர் அணிந்து கொள்ளத் துடித்தான் இரக்கமற்ற ஹெக்டர். அதைத் தடுத்த பெட்ரோகுலஸ் ஹெக்டரிடம்” என உயிர் நண்பன் அக்கிலிஸின் கரங்களில் என்னை விடப் பல மடங்கு சித்திரவதையை அனுபவிக்கப் போகிறாய் “என்று வீரமொழி கூறி உயிர் துறந்தான் பெட்ரோகுலஸ்!
அதற்குப் பின் தொடர்ந்தது டிரோஜன் வீரர்களின் வெறித்தனம். ஹெக்டரின் ஆணைப்படி பெட்ரோகுலஸ் உடலைத் தங்கள் டிராய் கோட்டைக்குள் எடுத்துச்செல்ல டிரோஜன் தளபதிகள் பாய்ந்தார்கள்.
இன்னும் சற்று நேரம் டிரோஜன்களே வெற்றிக்கொடியை ஏந்த வேண்டும் என்ற திட்டமிட்ட ஜீயஸ் கடவுளுக்கும் ஹெக்டரின் . வெறித்தனமான செய்கை ஆத்திரத்தை மூட்டியது. ஹெக்டர் அக்கிலிஸின் கவசங்களை அணிந்துகொண்டதும் ஜீயஸுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. புயற்காற்றை அக்கிலிஸின் வடிவில் ஹெக்டருக்கு எதிராகத் திருப்பிவிடுவதற்குத் தயார் நிலையில் இருந்தார் ஜீயஸ். அணையப்போகும் விளக்கு சுடர்விட்டு எரிவதைப் போல ஹெக்டர் இருக்கட்டும் என்று அவனுக்கு ஆதரவாக ஒரு பனிப் படலத்தையும் ஏற்படுத்தினார் ஜீயஸ்.
ஆனால் பெட்ரோகுலஸ் உடலை எக்காரணம் கொண்டும் டிரோஜன் வீரர்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் கிரேக்க வீரர்கள் உறுதியாக நின்றார்கள். கிரேக்கர்களின் தன்னிகரற்ற தளபதி அஜாக்ஸ் மடிந்த மாவீரன் பெட்ரோகுலஸ் உடலை எடுத்துத் தங்கள் கப்பலுக்குச் செல்லவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தான். அவனுக்குத் துணையாக மற்ற தளபதிகளும் வந்து சேர்ந்தார்கள். மடித்த மாவீரன் பெட்ரோகுலஸ் உடல் இங்கும் அங்கும் இழுக்கப்பட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற கடவுளர்களுக்கும் கண்ணீர் வரவழைத்தது.
அதேசமயம் ஹெக்டரின் படையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அவனது முக்கிய உப தளபதி ஹெக்டரின் அநாகரிகச் செயலைக் கண்டு படுகோபம் அடைந்தான். ‘பெட்ரோகுலசைக் கேவலப்படுத்தியற்குப் பழிக்குப்பழி வாங்க அக்கிலிஸ் வருவான். அவன் வரும்போது நம்மில் ஒரு வீரர் கூட திரும்பச் செல்லமுடியாது’ என்பதை உணர்ந்த அவன் தன் படை இனி டிராயைக் காப்பாற்ற வராது என்று போர்க்களத்தின் வாசலிலேயே அறிவித்தான்.
ஆனால் மூர்க்கனான ஹெக்டருக்கு ஜீயஸ் தன் பக்கம் இருக்கிறார் என்ற எண்ணம் ஆயிரம் குதிரைகளின் பலத்தை அளித்தது. பெட்ரோகுலஸ் உடலை எடுத்துவர அவனே போர்க்களத்தின் முன்னணிக்கு வந்தான். அங்கே அஜாக்ஸ் பெட்டோகுலஸ் உடலைச் சுற்றி கேடயக் கவசம் அமைத்திருப்பதைக் கண்டு கடுங்கோபம் அடைந்தான். அஜாக்ஸின் உப தளபதி தான் எப்படியும் ஹெக்டரின் முன்னேற்றத்தைத் தடை செய்கிறேன் என்றும் அந்த இடைவெளியில் எப்படியாவது பெட்ரோகுலஸ் உடலை எடுத்துக் கொண்டு அகழியைத் தாண்டி கப்பலுக்குள் செல்லுமாறும் அஜாக்ஸிடம் கூறினான்.
அஜாக்ஸ் தன் வீரர்களின் துணையோடு எதிர்த்துவரும் டிரோஜன்களைத் தாக்கிப் பின்னடையச் செய்தான். ஆனாலும் தாங்கள் முன்னேறித் தாக்க இயலாத பனிப்படத்தின் காரணகர்த்தா ஜீயஸ் கடவுளாகத்தான் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தான். இந்தப் பனிப்படலத்தை மட்டும் அவர் போக்கட்டும் அதன் பின் சுத்த வீரனாகப் போரிட்டு முடிந்த வரை டிரோஜன்களை அழித்து பின் மரணம் என்னைத் தழுவட்டும் எனக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை என்று வேண்டி நின்றான். அவன் குரல் ஜீயஸ் காதில் விழுந்தது. பனிப்படலத்தை அகற்றினார்.
தன் குரலுக்குச் செவிசாய்த்த ஜீயசுக்கு நன்றி கூறிவிட்டு அஜாக்ஸ் தன் திறமை முழுவதையும் காட்டினான். தடுத்த எதிரிகளைப் பந்தாடினான். ஹெக்டரும் தடுக்கப்பட்டதால் முன்னேறி அஜாக்சிடம் வர இயலவில்லை. அஜாக்ஸ் பெட்ரோகுலஸ் உடலை எடுத்துக் கொண்டு உட்குழிந்த கப்பல் அரணுக்குள் சென்றான். அதற்கு முன்னே ஒரு தூதுவனிடம் பெட்ரோகுலஸ் மரணம் பற்றி அக்கிலிஸிடம் கூறுமாறு ஆணையிட்டான்.
தன் உயிர் நண்பன் பெட்ரோகுலஸ் மரணச் செய்தி கிடைத்ததும் அக்கிலிஸ் தீயில் விழுந்த பாம்பு போல துடித்தான். போருக்கு அவனை அழைத்துவரும்போது அவன் பெற்றோர்களிடம் அவனைத் தன் உயிர் போல பாதுகாப்பேன் என்று உறுதி கூறியதை எண்ணி அளவில்லாத் துயரம் அடைந்தான். அதுவும் அவனைப் பின்புறம் தாக்கி கவச உடையைக் கழற்றி கொடூரமாகத் தாக்கி நிர்வாணப்படுத்திக் ஹெக்டர் கொன்றான் என்பதைக் கேள்விப்பட்டதும் அவன் உள்ளத்தில் புயல்போலக் கோபம் பொங்கியது. இனி அகெம்னன் என்ன சொன்னாலும் சரி கிரேக்கருக்கு ஆதரவாகப் போரில் இறங்கி அந்த ஹெக்டரையும் அவனுக்குத் துணையாய் வரும் அத்தனை வீரர்களையும் கொன்றால்தான் என் நெஞ்சில் சாந்தி கிட்டும் என்று போர்க்களத்தின் முன்னணிக்கு வந்தான்.
ஆனால் அந்தக் கணம் பெட்ரோகுலஸின் மரித்த உடலை அவன் முன் அஜாக்ஸ் மரியாதையுடன் வைத்தபோது அக்கிலிஸின் கோபம் மறைந்து துயரம் பெருக்கெடுத்தது. ‘என் உயிர் நண்பனே இறந்த பிறகு நான் வெற்றி பெற்று என்ன பயன்? இதோ இந்தக் கணமே என் உயிரை விடுகிறேன் என்று தன் கத்தியைத் தூக்கினான்.
கிரேக்கர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஹீரா தேவதை சட்டென்று வந்து அவன் கரத்தை பிடித்து அவனைத் தற்கொலையிலிருந்து நிறுத்தினாள். “ “அக்கிலிஸ் ! நீ உன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்வது இப்போது மிக மிக முக்கியம். உன் மீது மிகப் பிரியம் வைத்திருக்கும் ஜீயஸ் உன் வெற்றிக்காகக் கண்டிப்பாக உதவுவார்! நீ உன் கடமையைச் செய்ய போருக்குப் போ! உன் நண்பனுக்காக நீ இறப்பதைக் காட்டிலும் அவனைக் கொன்றவரைப் பழிவாங்குவதுதான் உன் முதற்காரியமாக இருக்கவேண்டும்” என்று அவனைத் தூண்டினாள்.
அப்போதும் தயங்கித் தலைகுனிந்து பெட்ரோகுலஸ் உடல்முன் அமர்ந்திருந்த அக்கிலிஸின் தலையை அழகான கரம் ஒன்று ஆதரவுடன் தடவியது. தலையைத் தூக்காமலேயே அதுதன் தாயின் ஆதரவுக் கரம் என்பதை உணர்ந்துகொண்டான்.
“ அக்கிலீஸ் ! நீ உன் கடமையை ஆற்ற வேண்டியத் தருணம் வந்துவிட்டது. உன் வீரம் உன் புகழ் கடவுளரைவிட அதிகம் போற்றப்படும். அதை நிலை நாட்ட இப்போது நீ புறப்படவேண்டும். உன் நண்பனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவது அல்ல உன் நோக்கம். உலகில் யாரும் சாதிக்க இயலாத காரியத்தைச் சாதித்தவன் என் மகன் அக்கிலிஸ் என்பதை அந்தக் கடவுளரும் ஒப்புக்கொள்ள வைக்கும்படி சாதனை புரியவேண்டும். அதற்காக வாழ்த்தவே உன் தாய் நான் வந்துள்ளேன்! இப்போது கிரேக்கர்களுக்கு மாபெரும் வெற்றி கிட்டப்போகிறது. அந்த மூச்சுக் காற்றுதான் வெற்றிக் காற்றாக மாறப்போகிறது. உன் கவசங்களை அணிந்துகொண்டு ஆணவத்தில் திரிகிறான் அந்தக் கிராதகன் ஹெக்டர். இதன் மூலம் அவன் தனக்கும் தன் நாட்டுக்கும் பெரிய சமாதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான். கவசம் இன்றி எப்படி யுத்தத்தில் கலந்து கொள்வது என்று நீ கவலைப்பட வேண்டாம். தேவ உலகில் கவச உடை செய்யும் சிற்பியிடமிருந்து உனக்காகப் புதிய சக்தி வாய்ந்த தலைக் கவசம், கேடயம், உடல் கவசம் மற்றும் முழங்காலுக்குக் கீழே அணியும் பாதுகாப்புப் பட்டயம் அனைத்தும் கொண்டுவந்திருக்கிறேன். புறப்பட்டு மகனே ! புறப்பட்டு! உன் புகழாவது அழியாமலிருக்கட்டும்” என்று அவன் தலையில் முத்தமிட்டாள் அவன் அன்னை! அவள் கண்களிலிருந்து பொல பொல என்று கண்ணீர் வழிந்தது.
“ என் தாயே! வீரமாகப் பேசிய உங்கள் கண்களில் ஏனிந்தக் கண்ணீர்? போரில் நான் வெற்றி பெற மாட்டேன் என்று கருதுகிறீர்களா? உங்கள் கண்ணீரின் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா? “ என்று பாசத்துடன் வினவினான் அக்கிலிஸ்.
“ அதை மட்டும் கேட்காதே அக்கிலிஸ்! உன் வெற்றி நிச்சயம். கிரேக்கர்களின் புகழை நீ உயர்த்தப் போகிறாய். உன்னைவிடச் சிறந்த வீரன் இந்த உலகில் இல்லை ! இனித் தோன்றப்போவதும் இல்லை என்பதை நிரூபிக்கப் போகிறாய்! உன் முன்னால் அந்த டிராய் நாடு சிங்கத்திடம் அகப்பட்ட ஆட்டுக்குட்டியைப் போல அழியும் என்பதில் எனக்கு ஐயமில்லை! உனக்கு என்இதய பூர்வமான வாழ்த்துகள் ! உனக்கு வெற்றி நிச்சயம் “ என்று தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் சக்தியில்லாதவளாகச் சென்றாள் அவன்தாய்!
எப்படிச் சொல்வாள்! வெற்றியுடன் மரணமும் அவன் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்று ! அதுதான் அவனை உயிருடன் சந்திக்கப்போகும் கடைசித் தருணம் என்று !
புத்திசாலியான அக்கிலிஸ் அவள் கண்ணீரின் வழியே தன் வாழ்வின் கதை முடியும் தருணத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். இந்தப் போரின் முடிவில்தான் தன் வாழ்க்கையின் முடிவும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான்.
தாய் தந்த கவச உடைகளை அணிந்துகொண்டான் அக்கிலிஸ். கணுக்காலை மறைக்கத் தாய் தந்த பட்டயத்தை அணிந்தபோது அதில் தன் தாயின் கண்ணீர் இருப்பதைக் கண்டு மனதிற்குள் சிரித்துக்கொண்டான். அந்த சிரிப்பு வெறிச்சிரிப்பாக மாறி சிம்மக் குரலில் உரத்த கர்ஜனையில் வீர முழக்கமிட்டான்.
அந்த வீர முழக்கம் கிரேக்கப் படையின் அனைத்துத் தளபதிகளையும் அந்த இடத்திற்கு வரவழைத்தது. அகெம்னன் , மெனிலியஸ் ,ஓடிசியஸ், அஜாக்ஸ் ஆகிய தலைவர்களும் வந்தார்கள். கிரேக்கர் பெருமையை உயர்த்த தானைத்தலைவன் வந்துவிட்டான் என்பதை உணர்ந்தார்கள். இனி வெற்றிக்கனி நமதே என்ற மகிழ்ச்சி அனைவர் கண்களிலும் தெரிந்தது.
அந்த வீரமுழக்கம் டிரோஜன் வீரர்களின் முதுகுத் தண்டில் சில்லென்ற பய உணர்ச்சியை அளித்தது.
அதைக் கேட்டு, கொஞ்சமும் அசராமல் மாபெரும் துணிவோடு கையில் ஈட்டியோடு குரோதம் கொழுந்து விட்டு எரியும் கொடூர முகத்தோடு போருக்குத் தயாரானான் டிராய் நாட்டுக் காவலன் ஹெக்டர்!!!