திரைக் கவிஞர்கள் – முனைவர் தென்காசி கணேசன்

இம்மாதப் பாடலாசிரியர் பத்மஶ்ரீ கொத்தமங்கலம் சுப்பு

கொத்தமங்கலம் சுப்பு | இது தமிழ்

 

இலக்கியவாதிகள், சினிமாவிலும் சாதிப்பது அதிசயம் என்ற குற்றச்சாட்டைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் மிகப் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு என்பது அக்மார்க் உண்மை.

ஜெமினி பட இலாகாவிலும், வாசன் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுத்தாளராகவும், கவிஞராகவும், ஜெமினி படங்களில் நடிகராகவும் , பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு.

கண்ணும் கண்ணும் கலந்து
சொந்த்ம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம்
பந்தாடுதே

சாதுர்யம் பேசாதடி
என் சலங்கைக்குப் பதில் சொல்லடி

ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா

கட்டடத்துக்கு மனப் பொருத்தம் அவசியம்
காதலுக்கு மனப் பொருத்தம் அவசியம்

பெண்கள் இல்லாத உலகத்திலே
கண்களினாலே என்ன பயன்

குபு குபு குபு குபு நான் என்ஜின்
டகு டகு டகு டகு நான் வண்டி

இப்படிப் பல பாடல்கள் தந்த ஒரு பன்முகக் கலைஞர் திரு சுப்பு அவர்கள்.
எழுத்தாளர், கவிஞர், நடிகர், பாடலாசிரியர், இயக்குனர, கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டுக் கலைஞர் , நாடக நடிகர், பத்திரிகை ஆசிரியர் என பல பரிமாணங்கள் கொண்ட மாமேதை திரு சுப்ரமணியன் என்ற சுப்பு.

பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் பிறந்தாலும், அன்றைய இயக்குனர கொத்தமங்கலம் சீனு என்பவர் அறிமுகப் படுத்தியபின், இவர் பெயர் கொத்தமங்கலம் சுப்பு என்றே ஆனது.

தொடர்ந்து கே.சுப்ரமணியத்தின் “பக்த சேதா , “கச்ச தேவயானி” உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 1941-ல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கே.சுப்பிரமணியத்தின் (நாட்டியத் தாரகை பத்மா சுப்ரமணியத்தின் தந்தை தான் ) சினிமா ஸ்டுடியோ முழுவதுமாக எரிந்துவிட, நஷ்டத்தை சமாளிக்க தனது மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு கொடுக்கும்போது, சுப்ரமணியத்தால் ‘சிறந்த கலைஞர், பன்முக திறன் மிக்கவர்’ என்ற அறிமுகத்துடன் எஸ்.எஸ்.வாசனிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் சுப்பு.

சுப்புவின் திறமையை பல விஷயங்களில் நேரில் கண்ட வாசன் அவரை தன்னுடனேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்..

ஜெமினியில் ,கொஞ்சநாளில் வாசனின் பிரியமான நண்பராகவும் ஆகிப்போன சுப்பு, ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்காற்றினார். ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது.

ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார், கொத்தமங்கலம் சுப்புவுக்கு, நல்ல பெயரும் புகழும் தந்தது. பெரும்புகழ் அளித்தது. சிறப்பான முறையில் படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் என சுப்பு அவர்களின் பங்களிப்பு, அவர்க்கு,அன்றைய மாகாண பிரதமராக இருந்த , மூதறிஞர் ராஜாஜி உட்பட பல ஆளுமைகளின் பாராட்டுக்கள் கிடைத்தது. முன்னாள் முதல்வர் திரு பக்தவத்சலம் “தமிழ் உலகுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் வாசனும் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது” எனப் பாராட்டினார்.
ஜெமினியின் ‘கண்ணம்மா என் காதலி’ திரைப்படம் கொத்தமங்கலம் சுப்புவுக்கு நற்பெயருடன் , கதாநாயகி நடிகை எம்.எஸ்.சுந்தரிபாய் அவர்களை , அவரின் துணைவியும் ஆக்கியது.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு புகழை தந்த படங்களில் முக்கியமானது,‘மிஸ். மாலினி’ . பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947-ல் வெளியிட்டனர். இப்படத்தில் ‘சம்பத்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் இன்னுமொரு சிறப்பு ஜெமினி ஸ்டுடியோ அலுவலகத்தில் பணியாற்றிய இளைஞர் ஒரு காட்சியில் நடித்திருந்தது. அவர்தான் பின்னாளில் காதல் மன்னன் என திரையுலகில் புகழ்பெற்ற ஜெமினி கணேசன்.

இரண்டாவது உலகப் போர் முடிந்து நாட்டில் பஞ்சம் நிலவிய இப்படம் வெளியான காலகட்டத்தில் ரேஷன் கடை அமலில் இருந்தது. உணவுத் தேவையில் கட்டுப்பாட்டை கொண்டுவந்த இந்த அவலத்தை கிண்டல் செய்து பாடல் எழுதியிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு.

‘காலையில எழுந்திரிச்சு
கட்டையோட அழுவணும்’
‘சக்கரைக்குக் கியூவில போய்
சாஞ்சுகிட்டு நிக்கணும்
சண்ட போட்டு பத்து பலம்
சாக்கட மண் வாங்கணும்’-
என்ற அந்தப்பாடல் அன்றைக்கு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாயிற்று.

1947லேயே, மிஸ் மாலினி படத்தில்,
பலே ஜோர் பலே ஜோர் பட்டண வாசம்
பாத்துப்புட்டென் பாத்துப்புட்டென் பணத்துக்கு நாசம்,
என்று , பின்னால் வந்த, கண்ணதாசனின் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடல் போலே எழுதி உள்ளார்.

ஜெமினியின் ‘சந்திரலேகா’ வெளியாகி அதன் வெற்றி, இந்திய திரையுலகையும் அசைத்துப்பார்த்தது. இப்படத்தில் மூன்று வசனகர்த்தாக்களில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர்.
எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடித்த ஜெமினியின் சிறந்த படங்களில் ஒன்றான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் சுப்பு , பாடல்களை இயற்றியிருந்தார். வி.நாகையா நடித்த ‘சக்ரதாரி’ என்கிற படத்தில் பாடல்களை எழுதியிருந்தார்.

1951 இல் வெளிவந்த ‘சம்சாரம்’ படத்திலும் சுப்பு உருக்கமான பாடல்களை எழுதியிருந்தார்.
‘அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே’
ஆண்டவன் எங்களை மறந்தது போலே
அன்னை நீர் மறவாதீர்

பாலும் பழமும் வேண்டாம் தாயே
பசிக்குச் சோறு கிடைத்தால் போதும்
என்கிற இப்படப்பாடல் தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு அழைத்து வந்தது எனலாம். அவர்களுக்கு , இந்தப் பாடல் “ பசி கோவிந்தம் “ பாடலாகவே ஆனது எனலாம், என்பார்கள்.

துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு

வண்ண வண்ண கோலம் வாசலில் மேளம்
தாலிகட்டும் மேடை தங்கமணி மேடை

என்ற மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படப் பாடலில் காதல் ரசம் பொங்கி வழியும்.

அதேபோல,

மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம் என்று அதே படத்திலும்,

மயிலேறும் வடிவேலநே
வயதான கிழவி முன் வாதாட வந்தாயோ என்று அவ்வையார் படத்திலும்

இன்னும் பல படங்களில் ஆன்மிக பாடல்கள் எழுதி உள்ளார்.

இரும்புத் திரை படம், நடிகர் திலகம் – வைஜயந்திமாலா நடித்து, வெற்றி கண்ட படம். தொழிலாளர் பிரச்னை பற்றிய படம் என்பதால், பொதுவுடமைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை ஜெமினி நிறுவனம் பாடல்கள் எழுதச் சொன்னது.

கொத்தமங்கலம் இருக்கும்போது, நான் எதற்கு என்று மறுத்த கவிஞரை, சுப்பு அவர்களே நேரில் பார்த்து, நீ பாடல்கள் எழுது – நான் தான் உன்னைப் பற்றிச் சொன்னேன் – நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் எனக்கு சம்பளம் உண்டு – நான் ஜெமினியின் மாதச் சம்பளக்களாரன் என்று கூறி எழுத வைத்தாராம். கவிஞர் 4 பாடல்கள் மற்றும் சுப்புவும், பாடல்கள் எழுதினார். அதில் ஒன்று –

நன்றி கெட்டமனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்
நாவினிக்க பொய்யுரைக்கும் பேரை நம்ப மாட்டோம்

பஞ்சம் நோய்க்கும் அஞ்சிடோம்
பட்டினிக்கு அஞ்சிடோம்
நெஞ்சினை பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம்

காலி என்றும் கூலி என்றும்
கேலி செய்யும் கூட்டமே
காத்து மாறி அடிக்குது
நீர் எடுக்க வேண்டும் ஓட்டமே, என்றும்,

சம்சாரம் படத்தில்,

மாநிலத்தில் விதியை வென்ற மனிதர் யாருமில்லையே
ஞானியென்ன அரசன் என்ன – யாருமே விலக்கில்லையே என்றும்,

சந்திரலேகாவில், நாட்டுப்புறப் பாட்டாக –

ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பா வெற்றிலையாம்
போட்டா சிவக்குதில்ல பொண்மயிலே உன் மயக்கம்

வெட்டிவெரு வாசம் – வெடலபுள்ள வாசம் , என்றும்

இப்படிப் பல்வேறு வகையான பாடல்கள் எழுதிய கவிஞர் திரு சுப்பு அவர்கள்.

நாட்டுப்புற மற்றும் கிராமத்து மண் வாசனை உள்ள பாடல்கள் அதிகம் எழுதியதால், தமிழ்த் தென்றல் திரு வி.க..அவர்கள், சுப்பு அவர்களை, மண்ணாங்கட்டிக் கவிஞர், என்று செல்லமாக அழைப்பாராம்.

மங்கம்மா சபதம் படத்தில், இவரின் ஒரு பாடலை கதாநாயகன் ரஞ்சன் அவர்களே பாடி இருக்கிறார். அதேபோல, கதாநாயகி வசுந்தரா தேவி (வைஜயந்திமாலாவின் தாய்) சுப்பு அவர்களின் பாடலை பாடி இருக்கிறார்.

Nalamdhana Full HD | Thilana Mohanambal Movie Song | Sivaji Ganesan Padmini | Tamil Old Hit Songs - YouTube

கலைமணி என்ற பெயரில் அவர் எழுதிய கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. விகடனில், அவரது மாஸ்டர் பீஸ் ‘தில்லானா மோகனாம்பாள்’. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது.
அற்புதமான இந்தத் திரைக்கதைக்காக திரு வாசன் அவர்களைத் தவிர, திரு ஏ பி நாகராஜனும், சுப்பு அவர்களை சந்தித்து, பணம் தந்து மரியாதை செய்தார். இன்னொரு முக்கியமான விஷயம் – எங்களது குடும்ப நண்பரும, மிக நல்ல மனுஷியுமான, சுப்பு அவர்களின் புதல்வி திருமதி லலிதா சபாபதி அவர்கள் என்னிடம் சொன்னது.
திடீரென்று ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து சுப்பு அவர்கள் வெளியேறியபோது , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திரு சுப்பு அவர்களை சந்தித்து , தனது பங்காக ஒரு தொகையை அன்புடன் வழங்கினாராம். . அது அப்பாவை மிகவும் மகிழ்ச்சியிலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது என்றார்கள்.

தில்லானா மோகனாம்பாள் 3 தொகுதி : Dial for Booksகல்கி அவர்களுக்கு பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் பெருமை சேர்த்ததுபோல, கொத்தமங்கலம் அவர்களுக்கு, தில்லானா மோகனாம்பாள் கதை அமைந்தது. அவரின் புதல்வி லலிதா சொன்ன சில விஷயங்கள் பிரமிப்பைத் தருகின்றன.

தில்லானா நாவல் ஆனந்த விகடனில் வெளிவந்தபோது, மன்னார்குடியில் ஒருவர் வீட்டில் வியாழன் தோறும், இங்கு இந்த வாரக் கதை படிக்கப்படும் என்று அறிவித்து, அதற்கென்றே ஒரு கூட்டம் கூடுமாம்.

ஆனந்த விகடனில் நாவல் முடியும் வேளை, சண்முகசுந்தரம் – மோகனா திருமணத்திற்காக, நிஜமான பத்திரிகை அடிக்கப்பட்டு, விகடனில் இணைக்கப்பட்டது. மோகனா வளையல், குஞ்சலம், புடவை என அப்போது கடைகளில் வியாபாரம் களை கட்டியதாம்.

அதைவிட முக்கியமான தகவல் – திருமணத்தை ஒட்டி, அந்த வாரத்தில், சுப்பு அவர்களுக்கும், வாசன் அவர்களுக்கும், திருமண அன்பளிப்புகள் குவிந்தனவாம்.

இருந்தாலும், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில், வைத்தி வேடம் தான் செய்ய விரும்பி அது நடக்காமல் போனது அவர்க்கு வருத்தம் என்பார்கள்.

விகடனில், தொடர்ந்து அவர் எழுதிய‘ராவ் பகதூர் சிங்காரம்’ என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் இந்தக் கதைதான், நடிகர் திலகம் நடித்து விளையாட்டுப்பிள்ளை என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

கொத்தமங்கலம் சுப்பு - Tamil Wikiகொத்தமங்கலம் சுப்பு அவர்கள் சுமார் 30 படங்களில் நடித்தவர். 300 பாடல்களுக்கு மேல் எழுதியவர். வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் காந்திமகான் கதையை, வில்லுப்பாட்டு மூலமாக தமிழகம் முழுவதும் நடத்தினார். மஞ்சு விரட்டு, நாடக உலகம் போன்ற நூல்களை, கவிதை நடையில் எழுதிஉள்ள இவர், 50 நாடகங்களும் படைத்துள்ளார்.

அதனால் தான் சாதனையாளர ஜெமினி ஸ்டூடியோ அதிபர் வாசன் அவர்கள், “ சுப்புவின் நரம்புகளில் ஓடுவது எல்லாம் தமிழ் உணர்வு – அவர் ஒரு தனி மனிதரல்ல – ஒரு ஸ்தாபனம் “ என்று கூறினார்.

ஆம். கொத்தமங்கலம் சுப்பு, தமிழ்த் திரையுலகின் ஆரம்பக் காலங்களில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர் என்பதே பேருண்மை.

அடுத்த மாதம் இன்னோரு கவிஞருடன் சந்திப்போம் – நன்றி

 

 

 

 

One response to “திரைக் கவிஞர்கள் – முனைவர் தென்காசி கணேசன்

  1. ஆஹா என் 11 வயதில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களை என் தந்தையுடன் பார்த்து பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.