
2026 ஏப்ரல் மாதத்தின் சிறந்த கதையாக உமா – மாலதி சகோதரிகள் தேர்ந்தெடுத்த சிறுகதை
சொல்வனம் 26.04.2026 இதழில் வெளியான ‘செத்த வீடு’ ஆசிரியர்:- ஜே. ஜே.
*****************************************************************************************************************
வெகு நாட்களுக்குப் பிறகு தொடர் வாசிப்பனுபவம் கொடுத்தமைக்கு நன்றிகள் பலப்பல.
படித்த நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளில் எங்களைக் கவர்ந்தவற்றின் குறும் பட்டியல்
- அந்தி மழை எண்ணம் இரங்காதோ? ஆசி. சுந்தர்ராஜா
பிஜி தீவில் கரும்புத் தோட்டத் தொழிலாளராக (indentured labor) வாழ்ந்த ஒரு முதியவரின் வாழ்க்கையையும், அவரது இறுதி ஆசையையும் மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
சிங்காரம்பிள்ளை யாரிடமும் காட்டாமல் ஆமைப்பூட்டுப் போட்டுப் பாதுகாத்த ஒரு பழைய இரும்புப் பெட்டி கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவரது இறப்பிற்குப் பிறகு அந்தப் பெட்டி திறக்கப்படுகிறது.
அந்தப் பெட்டியில் இருந்த பாரதியார் கவிதைப் புத்தகத்திற்குள் ஒரு பண உறையும் கடிதமும் இருந்தது. அதில், **”இந்தப் பணம் என் பேராண்டிக்கு. ‘நீயாவது ஒருமுறை ஊருக்குப் போய்வா'”** என்று தனது பேரனைத் தமிழகத்திற்குச் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
கதையின் போக்கு கதைக்குள் நம்மை அழைத்துச் சென்று அவரது இறுதி ஆசை நிறைவேற்றப் பட வேண்டுமே என தவிக்கச் செய்கிறது. பிழைப்புக்காகா கூலிகள் சென்ற ஒரு தலைமுறையினர் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வரவே முடியாமல் போனதையும் அந்த வலியையும் நாம் உரை முடியும்.
- மங்கையர்மலர் தொடுவானத்தில் ஒரு மின்னல் சியாமளா கோபு
திருநங்கையர் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் உணர்வுகள் மற்றும் அவர்கள் சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்கான அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றி இக்கதை பேசுகிறது.
- குங்குமம் சிநேகிதி ரிஷபன்
கவிஞரான அருண், தனது தோழி சந்தியாவிற்கு எழுதிய கடிதம் மற்றும் அதைத் தொடர்ந்து அவருக்கும் அவர் மனைவி விஜிக்கும் இடையே ‘உறவு’ மற்றும் ‘நட்பு’ குறித்து ஏற்படும் சுவாரசியமான விவாதமே இக்கதையின் கருப்பொருள்.
விவாதங்களின் முடிவில், தனது மனைவியே ஒரு சிறந்த சிநேகிதி என்பதை உணர்கிறார் அருண். அவர் சொல்லச் சொல்ல விஜி கவிதையை எழுதத் தொடங்க, கடிதம் மற்றும் பதில்களைப் பற்றிய கவலைகள் நீங்கி இருவரும் இணக்கமாவதுடன் கதை முடிகிறது
- நடுகல் ஆமணக்கு மாரி கிருஷ்ணமூர்த்தி
சிங்கப்பூரில் வசிக்கும் தனது நண்பன் ராயனின் ஒரு ஏக்கர் நிலத்தை விற்க முயற்சிக்கும் சந்தானம், எதிர்பாராதவிதமாகத் தனது பழைய ஆசிரியரைச் சந்திக்கிறார். அந்த நிலத்தின் வரலாற்றுப் பின்னணியும், ஆன்மீக ரகசியமும் வெளிப்படுவதே இக்கதையின் மையமாகும்.
கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை விற்காமல், அதைத் தானமாக வழங்கச் சொல்லுமாறு ஆர்.கே. சார் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் சந்தானம் வீட்டிற்குச் செல்லும்போது, அவர் உடலில் இருந்து எண்ணெய் வாசனை வீசுவதை அவர் மனைவி கவனிக்கிறாள். ராயனிடமிருந்து வரும் வீடியோவில் மலைத் தீபம் தெரிவதுடன் கதை முடிகிறது. வரலாற்று தகவலையும் உள்ளடக்கிய கதை.
- யாவரும் தேர் பொம்மை ந சிவநேசன்
பறக்கும் ஹெலிகாப்டர் பொம்மை மீது தீராத ஆசை கொண்ட முரளி என்ற சிறுவன், தனது வறுமைக்கு இடையிலும் பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஒரு உடைந்த ஜேசிபி பொம்மையைப் பெறுவதும், அதன் மூலம் அவனது ஆசை எப்படி நிறைவேறுகிறது என்பதுமே இக்கதையின் மையக்கருத்தாகும்.
ஹெலிகாப்டர் வைத்திருந்த அந்தப் பையனின் பொம்மை மரத்தில் மோதி உடைந்து போகிறது. அவன் முரளியின் ஜேசிபி பொம்மையைப் பார்த்து வியந்து அதைக் கேட்கிறான். இருவரும் தங்களது பொம்மைகளை மாற்றிக் கொள்கிறார்கள். உடைந்து போனாலும், தனது நீண்ட நாள் கனவான அந்த ஹெலிகாப்டரை கையில் ஏந்தி, சத்தமிட்டு ஓட்டி மகிழ்வதுடன் கதை நிறைவடைகிறது. பொருளாதார ஏற்ற தாழ்வுடன் உள்ள குழந்தைகளின் மனநிலையை உணர்வுப் பூர்வமாக சொன்னவிதம் சிறப்பு.
குழந்தைகளின் மன நிலையை கதை எடுத்துச் சென்ற விதம் ரசிக்க வைக்கிறது.
- சொல்வனம் செத்த வீடு ஜே. ஜே.
வெளிநாட்டில் உள்ள உறவின் பிரதிநிதியாக ஒரு துக்க வீட்டுக்குச் செல்ல வேண்டியவன் தவறுதலாக ஒரு அந்நியரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும்படி நேர்கிறது. அந்தத் தவறின் மூலம் ஒரு முதியவரின் தனிமையையும், மரணத்திற்குப் பின் அவர் காட்டிய நெகிழ்ச்சியான அன்பையும் உணர்வதே இக்கதையின் சுருக்கமாகும்.
ஆகச் சிறந்த கதைகள் என நாங்கள் தேர்ந்தெடுத்த இரு கதைகள்
- செத்த வீடு
- தேர் பொம்மை
மிகச் சிறப்பு என இந்த மாதக் கதையாக சொல்வனத்தில் வெளியான, ஜே ஜே எழுதியுள்ள ‘செத்த வீடு’ என்னும் படைப்பினைத் தேர்வுசெய்துள்ளோம்.
