கீதை காட்டும் பாதை

ஏழாவது அத்தியாயத்தை நிறைவு செய்யும்போது, ​​பகவான் கிருஷ்ணர், ‘ஞானி’யான பக்தரைச் சிறப்பித்துப் பேசுகிறார். அத்தகைய பக்தர் நிர்குண ஈஸ்வரஞானத்தை அடைவான் என்று கூறுவதற்குப் பதிலாக ஸ்ரீகிருஷ்ணர் ஒரு தந்திரத்தைக் கையாண்டு ஞானி பக்தனாக இருப்பவன் தன்னை ஆறு வகைகளில் அறிந்து கொள்வான் என்று கூறுகிறார். இது சம்பந்தமாக அவர் ஆறு சொற்களை அறிமுகப்படுத்துகிறார். இந்த சொற்கள் பிரும்மம், , கர்மம், ஆத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம் மற்றும் அதியக்ஞம் என்பவையாகும். இப்படிப்பட்ட ஞானி பக்தர்  பரா மற்றும் அபரா பிரகிருதிகளை உள்ளடக்கிய இறைவனின் முழுமையான தன்மையை அறிந்தவர்; மரணத் தருணத்திலும் இறைவனை நினைப்பவராகத் திகழ்கிறார்.

மேற்கூறிய புதிய கலைச்சொற்களைப் புரிந்துகொள்ளும் விருப்பத்துடன், அர்ஜுனன் கிருஷ்ணரிடம் ஏழு கேள்விகளைக் கேட்கிறான். எட்டாவது அத்தியாயம் இந்தக் கேள்விகளுடனேயே தொடங்குகிறது. இந்த அத்தியாயம் “அக்ஷர பிரம்மம்”, அதாவது அழிவில்லாத பரம்பொருள் பற்றியும், மரண நேர நினைவு, ஆத்மாவின் பயணம், கர்மம், யோகம், பக்தி, மற்றும் இறைவனை அடையும் மார்க்கம் பற்றியும் விளக்குகிறது. முதல் ஆறு கேள்விகள் ‘பிரும்மம்’ எனத் தொடங்கும் ஆறு கலைச்சொற்களைப் பற்றியவை; ஏழாவது கேள்வி, மரணத் தருணத்தில் ஒரு மனிதனின் மனநிலை அல்லது சிந்தனை ஓட்டம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றியது. அர்ஜுனன் கேட்கும் இந்தக் கேள்விகள்

மனித வாழ்க்கையின் மிக ஆழமான கேள்விகளுக்கு விடை தேடும் விதமாக அமைகின்றன. அர்ஜுனன் கேட்கும் கேள்விகள்

  1. பிரம்மம் என்றால் என்ன?
  2. ஆத்யாத்மம் என்றால் என்ன?
  3. கர்மம் என்றால் என்ன?
  4. அதிபூதம் என்றால் என்ன?
  5. அதிதைவம் என்றால் என்ன?
  6. அதியஜ்ஞன் யார்?
  7. இறப்பின்போது யோகி உம்மை எவ்வாறு அறிகிறான்?

இந்த கேள்விகள் ஆன்மிகத்தின் அடிப்படை அமைப்பை உருவாக்குகின்றன.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்தக் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளிக்கிறார். பிரம்மம் என்பது அழிவற்ற பரம்பொருளாகிய சத்தியமாகும்.. “அக்ஷரம் பிரம்ம பரமம்” அழிவில்லாதது, நித்தியமானது, எல்லாவற்றிற்கும் ஆதாரமாகி நிற்பது மற்றும்  காலத்தாலும் மாற்றமடையாதது. இதுவே பரம்பொருள் என அழிக்கப்படும்.

ஆத்யாத்மம் (அல்லது ஆத்மா) என்பது, தனிப்பட்ட உயிரின் உடலமைப்பிற்குள் (உபாதிக்குள்) இருந்து இயங்கும் அதே பிரும்மமே ஆகும். ஆத்யாத்மம் ஜீவனின் உண்மையான தன்மையாகும். அது ஆத்மாவின் இயல்பு ஆகும். உடலைத் தாண்டிய ஆன்மீக உண்மை ஆகும்.

‘கர்மம்’ என்பது, அனைத்து உயிரினங்களின் பிறப்பிற்கும் காரணமாக அமையும் அனைத்துச் செயல்களையும் குறிக்கிறது.  இது உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான செயல்; உலக வாழ்க்கையை இயக்கும் காரண-விளைவு விதி. இங்கு கர்மம் வெறும் “செயல்” அல்ல; உயிர் பிறப்பு மற்றும் உலக இயக்கத்தின் தத்துவம்.

‘அதிபூதம்’ என்பது, அழிவுக்கும் மாற்றத்திற்கும் உட்பட்ட, சடத்தன்மை வாய்ந்த இந்த முழுப் பிரபஞ்சத்தையும் குறிக்கிறது. அழிவுக்குட்பட்ட பொருட்கள் மற்றும் உடல் மற்றும் பொருள் உலகம் இதில் அடங்கும். இவை நிலையற்றவை.

‘அதிதெய்வம்’ என்பது, அனைத்து உயிரினங்களின் புலன்களுக்கும் ஆற்றலையும் அருளையும் வழங்கும் ‘ஹிரண்யகர்ப்பர்’ ஆவார். அதாவது பிரபஞ்சத்தை இயக்கும் தெய்வீக சக்தியாகும். இதனை “புருஷன்” அல்லது பேரண்டப் பேரறிவு (cosmic intelligence) என்பர்.

‘அதியக்ஞம்’ என்பது, தனிப்பட்ட உயிரின் அனைத்துச் செயல்களுக்கும் தலைமை தாங்கும் தெய்வமாக, அந்தச் செயல்களுக்குச் சாட்சியாக விளங்கும் இறைவனையே குறிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்: “அதியஜ்ஞன் நானே”; அதாவது எல்லா யாகங்களிலும் உள்ள பரமாத்மா, மனித உடலுக்குள் உறையும் இறைவன் நானே என்கிறார்.

5-வது சுலோகத்திலிருந்து இந்த அத்தியாயத்தின் இறுதிவரை, பகவான் கிருஷ்ணர் ஏழாவது கேள்வியை — அதாவது, மரணத் தருணத்திலும் இறைவனை எவ்வாறு நினைவில் கொள்வது என்பதை — மிக விரிவாக விளக்குகிறார். இந்த அத்தியாயத்தின் மிக முக்கியமான பகுதி இதுவாகும். இதன் முக்கிய சுலோகம்:

“யம் யம் வாபி ஸ்மரன்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்…”

பொருள்: மரண நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதையே அடைகிறோம் மரணத் தருணத்தில் ஒருவரின் மனதில் எந்தச் சிந்தனை ஓட்டம் அல்லது எண்ணம் மேலோங்கி நிற்கிறதோ, அதுவே அந்த உயிரின் மறுபிறவிக்கான இடத்தையும், அந்த மறுபிறவியின் தன்மையையும் தீர்மானிக்கிறது (6). எனவே, ஒரு மனிதன் மரணத் தருணத்தில் இறைவனை அடைய வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கத்துடன் இருந்தால், அவனது மறுபிறவி இறைவனைத் தேடும் ஆன்மீகப் பயணத்திற்கு மிகவும் உகந்ததாக அமையும்; அத்தகைய பயணத்தில் அவன் இயல்பாகவே வெற்றியும் பெறுவான் (5). ‘நிஷ்காம சகுண உபாசகர்கள்’ (எவ்விதப் பலனையும் எதிர்பாராமல், இறைவனை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வழிபடுபவர்கள்) ‘பிரம்மலோகத்தை’ அடைவார்கள் என்று கூறப்படுகிறது. படைப்புக் கடவுளான பிரம்மனிடமிருந்தே நேரடியாக ஞானத்தைப் பெற்று, அவர்கள் முக்தியை அடைவார்கள். இது ‘கிரம-முக்தி’ (படிப்படியான முக்தி) என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் இறக்கும் தருணத்தில் எழும் சிந்தனைப் போக்கு, ஒருவரின் வாழ்நாள் முழுவதும் மேலோங்கி நின்ற சிந்தனைப் போக்கினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இறப்பின் போது மனம் எதைக் கவர்ந்திருக்கிறதோ அது வாழ்க்கை முழுவதும் நாம் வளர்த்த பழக்கத்தின் விளைவு. அதனால் இறைவனை தொடர்ந்து நினை; பக்தியுடன் வாழ்; மனதை பயிற்சி செய் என்பதே கிருஷ்ணரின் போதனை.

இறைவனை நினைத்து மரணமடைவது என்பது ஸ்ரீகிருஷ்ணரின் கூற்றுப்படி, யார் இறப்பின் போது என்னை நினைக்கிறார்களோ, அவர்கள் என்னையே அடைகிறார்கள். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இது பக்தியின் உச்ச நிலை.

எனவே, இறக்கும் தருணத்திலும் நாம் இறைவனை நினைவுகூரும் பொருட்டு, எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டிருக்குமாறு கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார் (7). இது கடினமாகத் தோன்றினாலும், தொடர் முயற்சியாலும் உண்மையான பயிற்சியாலும் இதில் வெற்றி பெற முடியும். 9-வது செய்யுளிலிருந்து 13-வது செய்யுள் வரை, இறக்கும் தருணத்தில் மேற்கொள்ள வேண்டிய ‘உபாசனை’ (வழிபாட்டுப்) பயிற்சியை கிருஷ்ணர் விரிவாக விவரிக்கிறார். ஒருவர் தனது ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் (அறிவு மற்றும் செயல் உறுப்புகளை) கட்டுப்படுத்த வேண்டும். பின்னர், யோகப் பயிற்சியின் திறமையால், பிராணனை (சுழுமுனை நாடி வழியாக) புருவங்களுக்கு இடையில் அமைந்துள்ள தலை உச்சியின் பகுதிக்கு உயர்த்த வேண்டும். அதன்பின், மனதை அதன் மூலஸ்தானமான இதயத்திற்குத் திருப்ப வேண்டும். அத்தகைய ஒருமுகப்பட்ட மனதுடன், அவர் ‘ஓம்’காரத்தையோ அல்லது தான் தேர்ந்தெடுத்த ஏதேனும் ஒரு தெய்வத்தையோ முழு பக்தியுடன் தியானிக்க வேண்டும். கிருஷ்ணர் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் முக்கியத்துவத்தை கூறுகிறார். “ஓம்” என்பது பரம்பொருளின் ஒலி வடிவம்; யோகியின் தியான மையம்; பரம்பொருளுடன் இணைக்கும் சின்னம்.

சர்வஞானியும், நித்தியமானவரும், அனைத்தையும் ஆள்பவரும், நுண்மையிலும் நுண்மையானவரும், அனைத்தையும் தாங்குபவரும், எவராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதவரும், பேரொளி கொண்டவரும், அறியாமைக்கு அப்பாற்பட்டவருமான இறைவனை அவர் அடைகிறார். அனைத்து சாஸ்திரங்களும் அவரைக் குறித்தே பேசுகின்றன. பற்றற்ற தேடுதலையுடைய அனைவரும் அவரையே அடைகின்றனர். அனைத்து ஆன்மீகப் பயிற்சிகளும் அவரை அடைவதற்காகவே வகுக்கப்பட்டுள்ளன. பற்று நீங்கிய உபாசகர்களின் (நிஷ்காம உபாசகர்களின்) இறுதி இலக்கு அவரே ஆவார். இறைவனைத் தியானிக்கும் பயிற்சியில் உண்மையாகவே அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள ஒருவருக்கும், எவ்விதப் பிரிவும் இல்லாத முழுமையான பக்தியைக் கொண்டவருக்கும், இறைவனை அடைவது மிக எளிதான ஒன்றாகும் (14). கிருஷ்ணர் தெளிவாகக் கூறுகிறார்: ஒருமனதாக என்னை நினைப்பவன், எப்போதும் என்னில் மனதை வைத்திருப்பவன் என்னை எளிதில் அடைகிறான். இங்கு “அனன்ய பக்தி” முக்கியம்.

பின்னர், இறைவன் இரண்டு வகையான இலக்குகளை — அதாவது, இறைவனையும் இவ்வுலகையும் — ஒப்பிட்டுப் பேசுகிறார். உயர்ந்த உலகங்களை அடைவதாலோ அல்லது சிறந்த உடல்களைப் பெறுவதாலோ எவராலும் பிறப்பு-இறப்புச் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாது. இந்த அத்தியாயத்தில் பிரபஞ்ச கால அளவுகள் பற்றி குறிப்பிடப்படுகிறது. பிரம்மாவின் ஒரு நாள்: ஆயிரம் யுகங்கள். பிரம்மாவின் இரவு: ஆயிரம் யுகங்கள் இதன் மூலம்:மனித வாழ்க்கை மிகச் சிறியது, பிரபஞ்சம் சுழற்சியுடனானது என்பது உணரப்படுகிறது படைப்புக் கடவுளான பிரம்மா கூட — மிக நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டிருப்பவர் என்றாலும் (அவருடைய ஒரு பகல் இரவு என்பது இரண்டாயிரம் சதுர்யுகங்களுக்குச் சமமானது) — அழிவற்ற தன்மையை அடைய முடிவதில்லை. அப்படியிருக்கையில், பிரம்மாவின் பகல் பொழுதில் தோன்றி, இரவுப் பொழுதில் மறைந்துபோகும் மற்ற அனைத்துப் பொருட்களையும் உயிரினங்களையும் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன? ஆகவே, அனைத்து உலகங்களும், அவற்றில் அடையப்படும் சாதனைகளும் அழிவுடையவையே. வெளிப்படாத மற்றும் வெளிப்பட்ட படைப்புலகங்களுக்கு அப்பாற்பட்ட, நித்தியமானதும் மாற்றமற்றதுமான ஒரே தத்துவம் இறைவனே ஆவான். அவன் அழிவற்றவன்; அவனே வாழ்வின் பரம லட்சியமும் ஆவான். அனைத்து உயிரினங்களும் அவனிலேயே நிலைபெற்றுள்ளன; அனைத்தும் அவனாலேயே வியாபிக்கப்பட்டுள்ளன. அவனை அடைபவன், இந்த இறப்புக்குரிய உலகத்தில் (சம்சாரத்தில்) மீண்டும் பிறவி எடுப்பதில்லை (15 முதல் 22 வரை). இவ்வாறு, மற்ற அனைத்து சாதனைகளுடனும் ஒப்பிடுகையில், இறைவனை அடைவதே மிக உயர்ந்த லட்சியம் என்பதை இறைவன் நிலைநாட்டுகிறார்..

இப்போது கிருஷ்ணர், ‘மீளா நிலை’ மற்றும் ‘மீண்டும் திரும்புதல்’ ஆகிய இரு நிலைகளுக்கு இட்டுச்செல்லும் இரண்டு பாதைகள் குறித்து விவாதிக்கிறார். பலனை எதிர்பாராத ஒரு உபாசகன் (நிஷ்காம உபாசகன்), நெருப்பு, பகல், வளர்பிறை மற்றும் உத்தராயணம் ஆகியவற்றுக்குரிய தேவதைகளால் ஆளப்படும் ‘ஒளிப் பாதை’ (சுக்ல கதி) வழியாகப் பயணித்து, ‘கிரம முக்தி’யை (படிநிலை முக்தியை) அடைகிறான். (அவன் பிரம்மலோகத்திற்குச் சென்று, பிரம்மனிடமிருந்து ஆன்ம ஞானத்தைப் பெற்று, முக்தி அடைகிறான்.) பலனை எதிர்பார்த்துச் சடங்குகளைச் செய்யும் கர்மவாதிகள், புகை, இரவு, தேய்பிறை மற்றும் தட்சிணாயணம் ஆகியவற்றுக்குரிய தேவதைகளால் ஆளப்படும் ‘இருள்ப் பாதை’ (கிருஷ்ண கதி) வழியாகச் செல்கின்றனர். அவர்கள் சுவர்க்க இன்பங்களை அனுபவித்த பிறகு, மீண்டும் பூமிக்கே திரும்பி வருகின்றனர் (23 முதல் 26 வரை).

ஒளிப் பாதையானது ஞானம், யோகம், பக்தி மூலமாக ஒருவனை இறைவனிடம் இட்டுச்செல்வதால் இந்த பாதையில் சென்றவர் திரும்ப பிறப்பதில்லை. அந்தப் பாதையில் பயணிக்க, ஒருவன் பலனை எதிர்பாராத உபாசகனாக (நிஷ்காம உபாசகனாக) மாற வேண்டும். எனவே, நிஷ்காம உபாசனையில் (பலனை எதிர்பாராத வழிபாட்டில்) உறுதியுடன் இருக்குமாறு கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார் (27).

இத்தலைப்பை நிறைவு செய்யும் விதமாக, மற்ற அனைத்து முயற்சிகளின் மூலம் கிடைக்கும் பலன்களை விட, உபாசனையின் மூலம் கிடைக்கும் பலனே மிகச் சிறந்தது என்று கிருஷ்ணர் போற்றுகிறார். ஏனெனில், உபாசகன் அடையும் அந்தப் பரம லட்சியத்தை — அதாவது, அந்தப் பரம்பொருளான இறைவனை — மற்ற எந்தவொரு முயற்சிகளாலும் ஒருவனைச் சென்று அடையச் செய்ய இயலாது. நிஷ்காம உபாசனை, ஒரு சாதகரை குருவிடமும் சாஸ்திரங்களிடமும் இட்டுச் செல்லும். இயல்பாகவே, அந்த உபாசகர் ஒரு ஞான பக்தராகப் பரிணமிக்கிறார். அவர் இவ்வுலக வாழ்விலேயே முக்தி அடைகிறார்.

இந்த அத்தியாயம் நமக்கு சொல்லுவது: வாழ்க்கை தற்காலிகம்; மனம் எதனால் நிரம்புகிறதோ அதுவே நம்மை வடிவமைக்கிறது; பயிற்சி இல்லாமல் ஆன்மிக நிலை வராது; இறைவன் நினைவு மன அமைதியை தரும். மேலும் இந்த அத்தியாயம்  பரம்பொருளின் இயல்பை விளக்குகிறது; மரணத்தின் ஆன்மீக அர்த்தத்தை கூறுகிறது; மனத்தின் சக்தியை எடுத்துரைக்கிறது; பக்தி, யோகம், ஞானம் ஆகியவற்றை இணைக்கிறது; இறைவனை நினைத்த வாழ்வே முக்திக்கு வழி என போதிக்கிறது.

 

*********************