
![]()
![]()
அ கி வ ராதராஜன் என்னும் கம்பன் அடியார் குவிகம் வாசகர்களுக்கு அளித்த இனிப்பு ப் பெட்டகம் ‘கம்பனளி கன்னல்.’
சாதாரணமாகக் கன்னல் என்னும் கரும்பின் இனிப்புப்பகுதி அடிக்கரும்பு என்றே சொல்லுவோம். ஆனால் இது, கம்பனளி கன்னல். கம்பன் அளித்த – அளிக்கின்ற – அளிக்கப்போகும் கரும்பல்லவா? அடி முதல் நுனி வரை ஒரே சீராக இனித்திடும் தெள்ளமுது.
கழனியில் விளைந்த கரும்புகளில் நன்கு விளைந்த கரும்பை எடுத்து அதன் சாற்றைப் பிழிந்து ,வடிகட்டி அதில் இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து , பனிக்கட்டி சேர்த்து குவளை குவளையாக குடிக்கத் தோதுவாக கருப்பஞ்சாறு அளித்த வள்ளல் வரதராஜன் ஆசான் அவர்கள்.
பாற்கடலைக் கடைந்தபோது திரண்டு வந்த அமுதம் போல , கம்பன் கவிக்கடலைத் எண்ணம் என்னும் மத்தால் சொற்கள் என்னும் கயிற்றைக் கட்டி கடைந்து எடுத்துப் பொங்கி வந்த வெண்ணையை நமக்குத் தாயாக ஊட்டிவிட்ட கலியுக வரதர் இவர் என்றால் மிகையில்லை.
கம்பனின் கவிக் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர். ஞானப் பழத்தைப் பிழிந்து ரசத்தை அன்புடன் நமக்குக் கொடுத்த நல்ல குருநாதர் அவர்.
தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கம்பன் கொடையாக அளித்த கிட்டத்தட்ட 10500 பாடல்களில் 176 பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் கம்பனின் காவிய சாரத்தை கேட்போர் நெஞ்சில் ஈரம் கசியும் வண்ணம் எடுத்துரைத்தவர் ஆசான் அ கி வ அவர்கள்.
வாரம் ஒரு வகுப்பு. 90 நிமிடங்கள் மட்டுமே! . ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு காண்டம் என பாலகாண்டம் , அயோத்யா காண்டம். ஆரண்யகாண்டம் , கிஷ்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம் என ஐந்து காண்டங்களைக் கடந்து யுத்த காண்டத்தை மூன்று வகுப்பிலுமாக முடித்த மாமேதை அவர்!
கம்பனின் கங்கைப் பிரவாகத்தை சொம்பில் அடக்கி கம்பனுக்கே அன்புடனும் பணிவுடனும் அபிஷேகம் செய்து நமக்கெல்லாம் தீர்த்தப் பிரசாதமாகத் தந்தவர் கம்ப வாரியார் அ கி வ அவர்கள்.
கம்பன் அடிப்பொடி சா கணேசன் ஐயா அவர்களைப் போல ‘எல்லாப் புகழும் கம்பனுக்கே’ என்று கோவை – சிங்கப்பூர் – அமெரிக்க என்று எங்கிருந்தாலும் தொடர்ந்து முழக்கமிடும் அ கி வ அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு எப்படி நன்றி பாராட்டுவது?
நமது அன்பு உள்ளங்களை ஆளுயர மாலையாகத் தொடுத்து அவருக்குக் குரு தட்சிணையாகப் பணிவன்புடன் அணிவித்து குருவருள் கிட்ட வாழ்த்தி வணங்குகிறோம் !
குவிகம் பற்றி அவர் எழுதிய பாடலைக் கேட்டதும் ‘நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்’ என்பதற்கேற்ப அவரது பணிவு நம்மை அவரை வணங்கச் செய்கிறது.
செவியில் தேனை வார்க்கின்ற, செய்யுள் பலவாய் உலகத்துக்
கவிகள் மெச்சத் தந்தவனாம் கம்பன் பெருமை தனைக்கூற
அவிகள் சொரிந்து வேள்வியெதும் ஆற்றாக் கடையன் நான்கூடக்
குவிகம் அவையில் பேசுகிற கொடுப்பி னையைப் பெற்றேனே?
அ கி வ அவர்களின் ‘கம்பனளி கன்னல்’ வகுப்புகளுக்கு வர இயலாதவர்கள் அவர் ஆற்றிய உரைகளை இந்த 8 காணொளிகளில் கேட்டு இன்புறலாம். கம்ப சித்திரத்தையும் காணலாம்.
பால காண்டம் :
அயோத்யா காண்டம் :
ஆரண்ய காண்டம்:
கிஷ்கிந்தா காண்டம்:
சுந்தரகாண்டம்:
யுத்தகாண்டம் -1
யுத்த காண்டம் -2
யுத்தகாண்டம் -3
