வேண்டாம் சரித்திரம்!
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அமானுஷ்யம், சரித்திர நாவல்கள் எழுதுவதில்லை. கலைமகள் மாத இதழ் விழாவில் சக எழுத்தாளர் தேவிபாலாவுடன் கலந்துரையாடல் நிகழ்வில் இதுதொடர்பாக அவர் பகிர்ந்து கொண்டது. ‘அமானுஷ்யம், ஜோதிடம், ஜாதகம் மீது நம்பிக்கை இல்லாததால் அவற்றை மையமாக வைத்து எழுதவில்லை.
“மன்னிக்க மனமில்லை, மன்னிக்க!” என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதினேன். அதில் ஒரு பின்னோட்ட சம்பவம். அசோகர் காலத்திலே புதைக்கப்பட்ட பொக்கிஷத்துக்காக சண்டை போட்டுப்பாங்க. பொக்கிஷம் அங்கே எப்படி புதைக்கப்பட்டது என்பதை தெளிவாக எழுதியிருந்தேன். பொக்கிஷத்தோடு வரும் குதிரை வீரன் வாள் சண்டையில் இறந்து விடுகிறான். அந்த மலைப்பிரதேச வழக்கப்படி அவனது பொருள்களையும் சேர்த்து புதைப்பது வழக்கம் என்றும் சொல்லி இருந்தேன். வீரன் கடந்து வந்த பாதையில் ரோஜா தோட்டம் இருந்ததுன்னு ஓர் அடையாளத்துக்காக எழுதியிருந்தேன்.
நான் வழக்கமாகச் செல்லும் நூல் நிலையத்துக்கு இந்த நாவல் வெளியான நிலையில் சென்றேன். நண்பரான நூலகர், ‘அசோகர் காலத்திலே ரோஜா தோட்டம் இந்தியாவுக்கு வரவில்லை’ என்று உரிமையோடு நாசூக்காகச் சொன்னார்.
சரித்திரக் கதை எழுதுவது சாதாரண விஷயமில்லை. அசாத்திய உழைப்பு தேவை என்பதை உணர்ந்து கொண்டேன். சரித்திரக் கதை சாதனையாளர்களுக்கு வணக்கம் போட்டுவிட்டு ‘நம்ம வழி தனி வழின்னு’ அந்த வழியில் பயணப்படுகிறேன்.
.சரித்திரக் கதைகள், நாவல்கள் ஏன் நீங்கள் எழுதுவதில்லை என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார் பட்டுக்கேட்டை பிரபாகர்.
மேடை பேச்சு அலர்ஜி
மறைந்த எழுத்தாளர் சுஜாதா இயற்பெயர் ரங்கராஜன் நவீன யுகத்தின் முகம். குமுதம் வார இதழ் மட்டுமல்ல ‘அம்பலம்’ இணைய இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்துள்ளார். சிறுகதை, நாவல், நாடகம் என அவர் எழுதாத துறை இல்லை. சிறந்த சிறுகதை எழுத்தாளர். ‘நகரம்’, “இரு கடிதங்கள்” சுஜாதாவின் ஆகச்சிறந்த சிறுகதைகள்.
துடிப்பான நடைக்குச் சொந்தக்காரர். பாலியல் கலந்து எழுதியவர் என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு.அமரர் நா.பார்த்தசாரதி தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது நடத்திய வெண்பா போட்டியில் ( ஈற்றடி-வேண்டாம் வரதட்சணை) கலந்து கொண்டு மு தல் பரிசு பெற்றவர் சுஜாதா.
குடும்பத்தை அவர் கவனிக்கவில்லை என்பது தவறான பிரசாரம்.
ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க அவருக்கு மேடையில் பேசுவது என்றால் அலர்ஜி.இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். எழுத்தாளர் சந்திப்பு கூட்டமொன்றை பத்திரிகை உலக ஜாம்பவான் அமரர் சாவி கூட்டினார். சுஜாதா அதில் கலந்து கொண்டார். அவரைப் பார்க்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் வாசகர்கள் பெருமளவு குவிந்தனர். சுஜாதா பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. 10 நிமிடம் கூட அவரால் பேச முடியவில்லை.
‘ நீங்கள் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன்’ என்று அறிவித்தார். வாசகர் ஒருவர் உங்களுக்குப் பாடத் தெரியமா என்று கேட்டார். ‘ஓ தெரியுமே!’ என்று தேசிய கீத பாடலை (ஜனகண மன) பாடி விட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டார். பிற்காலத்தில் அவர் மேடை பயம் இல்லாது ஓரளவு பேச பழகிவிட்டார்.
பத்திரிகை உலக முன்னோடிகள் குறித்து எழுத்தாளர் மாலன் முன்னின்று நடத்திய ‘அழியாத ரேகைகள்’ இறுதி நிகழ்வு மே 11-இல் சென்னையில் நடைபெற்றது. சுஜாதா பற்றி அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசுகையில் மேற்கண்ட தகவலை பகிர்ந்து கொண்டார்.
ஓரெழுத்து பெயர் வரலாறு
வழக்கறிஞர், துக்ளக் இதழ் ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், அரசியல் சாணக்கியர் என்று பன்முகத் தன்மை கொண்ட சகலகலா வல்லவர் சோ. தினமணி கதரில் அவர் எழுதிய ‘மை டியர் பிரும்ம தேவா’ சிறந்த நகைச்சுவைத் தொடர். ‘முகமது பின் துக்ளக்’, யாருக்கும் வெட்கமில்லை அவர் எழுதிய வெற்றிகரமான நாடகங்கள். திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.
கல்கியில் 18 ஆண்டுகள் பணியாற்றியவர் பகீரதன். அமரர் கல்கியோடு பணிபுரிந்தவர். பகீரதன். எழுதிய நாவல் ;தேன்மொழியாள்’. அதே தலைப்பில் நாடகமானது. இருநூறு முறைக்கு மேல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேடையேறியது என்ற பெருமை மிக்கது இந்த நாடகம்.
இதில் வரும் ‘சோ’ என்ற நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தவர் ராமசாமி என்ற இளைஞர். நாடகத்தில் தனது முத்திரையைப் பதித்து விட வேண்டும் என்று அந்த இளைஞர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தார். அவர் தோன்றிய காட்சிகளின் போது அரங்கம் ரசிகர்கள் கைதட்டலால் அதிர்ந்தது. நடிகரின் இயற்பெயரான ராமசாமி என்பதே பின்னர் மறைந்து போய் சோ என்ற ஓரெழுத்து பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
ஹெப்சிபா ஜேசுதாசன்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள் புலிப்புனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெப்சிபா. திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிப் பேராசிரியையாக பணிபுரிந்த இவர், அதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த ஜேசுதாசனை திருமணம் செய்து கொண்டார்,.
ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற ஹெப்சிபா, தனது கணவருடன் இணைந்து ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகுக்கு ‘புத்தம் வீடு’ நாவல் மூலம் ஹெப்சிபா அறிமுகமானார்.’டாக்டர் செல்லப்பா’, ‘அனாதை’, ‘மானீ’ ஆகியன இவர் எழுதிய பிற நாவல்கள்.
மெளனியுடன் ஒரு பேட்டி
மெளனி தமிழ் நவீன எழத்துலகில் ஓர் அபூர்வ நேர்வு-அழியாச் சுடர்- இது மெளனி பற்றி கவிக்கோ டாக்டர் எஸ்.அப்துல் ரகுமானின் வரிகள் மெளனியை பேட்டி கண்டு 1982-ல் தாய் வார இதழில் மூன்று வாரங்கள் எழுதியுள்ளார் ஜே.வி.நாதன். அதிலிருந்து கேள்விகளும் பதில்களும்:.
திருக்குறள் இலக்கியம் இல்லையா?
நீதி நூல் இலக்கியம் ஆகாது.
பாஞ்சாலி சபதம் நல்ல படைப்பு இல்லையா?
ஆவேசத்தில் எழுதப்பட்டது இலக்கியம் ஆவதில்லை.
லா.ச.ராவின் எழுத்துக்களை வாசித்ததுண்டா?
நாலுவரிக்கு மேல் அவருடையது எதுவும் படிக்க முடியவில்லை.
தி. ஜானகிராமன்?
ஜானகிராமனை என்னால் படிக்க முடிகிறது.கும்பகோணம் பேச்சு வழக்கை நன்றாக கையாண்டுள்ளார்.
ஜெயகாந்தன்?
ஜெயகாந்தன் படிச்சிருக்கேன்.ஒண்ணும் ஞாபகத்தில் இல்லை.
நீங்கள் எழுதிய 24 சிறுகதைகள் போதும் என்று நினைக்கிறீர்களா?
என்னுடைய 24 கதைகளின் 300 பக்கங்களை ஜீரணிக்கவே இங்குள்ளவர்களுக்கு 200 வருடங்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.
உங்கள் எழுத்து பலருக்கு புரியவில்லை என்கிறார்களே?
நல்ல சிறுகதை ஒரு கவிதை. என் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையே.என் எழுத்து ஏன் புரியலைன்னு எனக்குப் புரியலை.
ஒரு கதையின் கதை
குமுதத்தில் 1978-இல் ‘ஒரு ஜனவரி ஞாயிற்றுக்கிழமை’ என்ற கிரைம் தொடரை ராஜேஷ்குமார் எழுதினார். பரத நாட்டிய டான்சரை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. குமுதத்துக்கு கதை சுருக்கத்தை ராஜேஷ் குமார் எழுதி அனுப்பியிருந்தார். இது தொடர்பாக பேச அவரை ஆசிரியர் எஸ்.ஏ.பி. அழைத்திருந்தார்.
‘தொடர்கதையோட முடிவு சோகமாக இருக்கு. அதை ஏன் சந்தோஷமாக மாற்றக்கூடாது?’ என்று ஆசிரியர் கேட்டார்.’ மனைவி, ஒரு பெண் எழுத்தாளர், ஒரு வாசகியிடம் கதை பற்றி கருத்து கேட்டேன்.கதையின் முடிவு நல்லாயிக்குன்னு மூவருமே சொன்னாங்க’ என்றார் ராஜேஷ் குமார்.
இதையடுத்து ‘நானும் முடிவை மாத்த விரும்பவில்லை’ என்று எஸ்.ஏ.பி. ஒப்புக்கொண்டார். தொடர் கதைக்கு ராஜேஷ் குமார் வைத்திருந்த பெயர் ‘ஜனவரியில் ஒரு நாள்’. கதையின் தலைப்பை ‘ஒரு ஜனவரி ஞாயிற்றுக்கிழமை’ என்று வெச்சுக்கலாமா? என்று எஸ்.ஏ.பி. கேட்டார். ராஜேஷ் குமார் அதனை ஏற்றுக்கொண்டார்.கையோடு கொண்டு சென்றிருந்த முதல் அத்தியாயத்தை ஆசிரியரிடம் கொடுத்தார். தொடர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
கரிச்சான் குஞ்சு
சம்ஸ்கிருத்தில் வித்வான் பெற்ற இவர் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இயற்பெயர ஆர்.நாராயணசாமி. இவரது ஆதர்ச குரு எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன். இவர் கரிச்சான்( இரட்டை வால் குருவி) என்ற பெயரில் கட்டுரைகள் எழுதினார். குருவின் புனைபெயருடன் குஞ்சு என்பதை இணைந்து ‘கரிச்சான் குஞ்சு’ என்ற பெயரில் நாராயணசாமி எழுதினார்.
இவரின் சிறுகதைகள் 11 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ‘பசித்த மானுடம்’ இவர் எழுதிய ஒரே புதினம். தமிழில் முதல் பிறழ்வெழுத்து நாவல், நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரின புணர்ச்சியை கையாண்ட முதல் நாவல் என்று இந்த படைப்பு விமர்ச்சிக்கப்படுகிறது. இவரின் நாடகங்கள் ‘கழுகு’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
‘பாரதி தேடியதும் கிடைத்ததும்’ கரிச்சான் குஞ்சுவின் ஆகச் சிறந்த படைப்பு.மார்க்ஸிய தத்துவப் பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத் யாவின் ‘இந்திய தத்துவங்களில் நிலைத்தனவும் அழிந்தனவும்’ நூலை மொழிபெயர்ந்துள்ளார்.
ஜே.எம்.சாலி மறைவு
சிறுகதை, நாவல், கட்டுரை என எழுத்தின் அனைத்து துறைகளிலும் ஆற்றல் மிக்கவர் மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஜமாலுதீன் முகம்மது சாலி ( 87). மயிலாடுதுறையைச் சேர்ந்த நீடுரில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவால் 15.05.2026-இல் காலமானார்.மனைவி, மகன் உள்ளனர்.
ஜே.எம்.சாலி 1939-இல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இரவாஞ்சேரியில் பிறந்தார். கண்ணன் சிறுவர் இதழில் பரிசு பெற்ற ‘இரு கண்கள்’ தொடர்கதை மூலம் 1959-இல் எழுத்துப் பயணத்தை தொடங்கினார்.சிங்கப்பூர் தமிழ் முரசு, ஆனந்த விகடன், மயன் என்ற இளைஞர் இதழ் உள்ளிட்ட அச்சு ஊடகங்களிலும் சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார்.
இவரது சிறுகதைகள் 10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளாக நூல் வடிவம் பெற்றுள்ளது. ஆனந்த விகடனில் தொடராக 1970-களில் வெளிவந்த நாவல் ‘கனா கண்டேன் தோழி’. ஜே.எம்.சாலியின் ஆகச்சிறந்த புதினமாக இன்றும் பேசப்படுகிறது. தமிழக அரசின் 1978-ம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான பரிசு வென்ற படைப்பு ‘கனா கண்டேன் தோழி’ என்பது குறிப்பிடத்தக்கது.
அலைகள் பேசுகின்றன, வெள்ளைக் கோடுகள், ஆயுள் தண்டனை, கவிதை தேடும் ராகம், மூன்றாவது கணை, மஞ்சள் ரோஜா இவரது பிற நாவல்கள். சிங்கப்பூரின் உயரிய விருதான கலசாரப் பதக்க விருதும் தாய்லாந்தின் தென்கிழக்கு ஆசிய விருதும் பெற்றவர் சாலி.
