முதல் பக்கம் எப்போதும் அட்டைப்படம்

கடைசிப்பக்கம் என்ற பதமே மிகவும் பிரசித்தி பெற்றது.

சுஜாதா அதற்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தே கொடுத்துவிட்டார்.

நாம் புதிதாக ஒரு நடுப்பக்கம் என்று ஒன்று ஆரம்பித்தால் என்ன?

(இது ஏற்கனவே எல்லா நாளேடுகளிலும் இருக்கிறது என்று சொல்கிறீர்களா?

நடுப்பக்கம் என்று ஒரு இணையதளமே இருக்கிறது என்கிறீர்களா?

விளையாட்டு - naduppakkam.com

இருக்கட்டுமே!

என்ன செய்வது ?

நமது ஐடியாவை  நமக்கு முன்னாடியே பலர் காப்பி அடித்து விடுகிறார்கள்)

நமது குவிகம் நடுப்பக்கத்தில் சில சிறந்த கட்டுரைகள் வரும் !

இந்த மாதம் சந்திரமோகனின் எல்லோரும் நல்லவரே கட்டுரை.

அவரது எழுத்தும் பாணியும் கருத்தும் சற்று வித்தியாசமாக இருக்கும் !

 

எல்லோரும் நல்லவரே

Ellorum Nallavare - Wikipedia

இது நான் 1975 ம் ஆண்டு பார்த்த ஒரு படத்தின் பெயர்.

ஜெமினி நிறுவனம் கடைசியாகத் தமிழ்,தெலுங்கு , கன்னடம், இந்தி என 4 மொழிகளில் எடுத்தது.

படம் ஓடவே இல்லை.

ஆனால் படத்தின் பெயரும் அதில் கூறப்பட்ட கருத்தும் இன்றும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன .

நான் இதை எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் சிறு வயதில் நாம் கேட்கும்,பார்க்கும்,படிக்கும் எதுவும் சட்டென மனதில் பதிந்து விடுகிறது.

மறந்து போன சில விஷயங்களை ஞாபகப்படுத்துவதே எனது நோக்கம்.

சரி, படத்துக்கு வருவோம். எல்லோரும் நல்லவரே என்பது எனக்குச் சரியெனவே படுகிறது. இம்மண்ணில் தோன்றும் அனைவரும் நல்லவரே.

புலமைப்பித்தன் “ எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே” என்று கூறுகிறார். உண்மையே.

ஆனால் அவரது அடுத்த வரியில் எனக்குச் சம்மதமில்லை.

ஒருவர் நல்லவராவதும் தீயவராவதும் எதனால்?

பின் அவரே”நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள் என்கிறார்.

நான் disclaimer ஆக ஏற்கனவே சொல்லி விட்டேன் , நான் கூறுவது அறிவுரையில்லை.

ஔவை பாட்டியைக் கேட்டால் அவர் எல்லாமே பழக்கம் என்கிறார்.

சித்திரமும் கைப் பழக்கம்

செந்தமிழும் நாப் பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்

நித்தம் நடையும் நடைப்பழக்கம்

நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்

முதல் மூன்று வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை. நான்காவது வரியில் நடை என்பது நல்ல நடை, ஒழுக்கம் ஆகும் .

எனவே அதுவும் நம் பழக்கத்தில்தான் வருகிறது என்கிறார்

கடைசி வரியில் சற்று குழப்புகிறார் பாட்டி.

நட்புடன் இருப்பது ,அடுத்தவரிடம் அன்பு காட்டுவது, பிறருக்குக் கொடுத்து உதவுவது மூன்றும் பிறவிக்குணம் என்கிறார்.

அது சரியா எனக் கேட்டால் எனது குரு சும்மா …. என்கிறார். தனது சம கால புலவரான கம்பரை மட்டம் தட்டவே கடைசி வரியாம்.

அவரும் இவரை நிறையத் திட்டி எழுதியிருக்கிறாராம்..

பெரிசுங்க அப்பவே இப்படி !

 

எல்லோரும் நல்லவரே