ராணிமைந்தன்
புனைவு சாரா இலக்கிய உலகில் தடம் பதித்தவர் ராணி மைந்தன்.இயற்பெயர் ராதா கிருஷ்ணன். 40 வாழ்க்கை வரலாற்று நூல்கள், 21 மொழிபெயர்ப்பு நூல்கள், 8 தொகுப்பு நூல்கள் இவரது சாதனை.தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் கலைமாமணி விருது பெற்றவர்.
ராணி மைந்தன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் புனைகதை போல் சுவாரசியம் மிகுந்தவை என்கிறார் எழுத்தாளர் சிவசங்கரி.தமிழ்நாடு முன்னாள் அமைச்சர்கள் ராசாராம், ஆர்.எம்.வீரப்பன், எழுத்தாளர் சாவி, இலக்கிய வீதி இனியவன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோரை பற்றிய ராணி மைந்தனின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
தன் வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து ‘வந்த பாதை- ஒரு பார்வை’ என்ற தலைப்பில் புதிய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். எழுத்து அவருக்கு எண்ணற்ற பரிசுகளுடன் ஏராளமான ஆளுமைகளின் நெருக்கத்தையும் தந்துள்ளது அவருக்கு கிடைத்த வரம்.80 வயதை கடந்துள்ள ராணி மைந்தன் ‘இனிமேல் ஆசைப்பட ஏதுமில்லை’ என்று வாழ்க்கை வரலாற்று நூலை நிறைவு செய்துள்ளது சிறப்பு.
நளினி சாஸ்திரி
சு
ஜாதாவின் தாக்கத்தால் எழுத்தாளரானவர். நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தலமைப் பொறியாளராக பணிபுரிந்தவர். இயற்பெயர் ஆர்.சேகர். கல்கி ராஜேந்திரன் இவருக்கு நளினி சாஸ்திரி என்ற புனை பெயரைச் சூட்டினார். பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். சினிமா விமர்சனங்களும் எழுதியுள்ளார். அறிவியல் புனைகதைகள் இவரது தனிச் சிறப்பு.
கல்கியில் இவர் எழுதிய விஞ்ஞான பக்கங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது. கல்கி பொன்விழா போட்டியில் ‘ஆத்மாவுக்கு ஆபத்து’ என்ற குறுநாவல் முதல் பரிசு பெற்றது. ஆனந்த விகடனில் ‘ப்ரெளன் வாஷ்’ என்ற தொடரை எழுதினார்.திசைகள் இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். குமுதம் வைரமோதிர சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, இதயம் பேசுகிறது, இலக்கியப் பீடம், வாசுகி இதழ்களிலும் முதல் பரிசை வென்றுள்ளன.
படுதலம் சுகுமாரன்
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தும் எழுத்துலகில் தடம் பதித்தவர் படுதலம் சுகுமாரன். காதல், சமூகம், கிரைம், நகைச்சுவை என பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தவர்.
1978-இல் இவரது நகைச்சுவை துணுக்கை வெளியிட்டதன் மூலம் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் சிறை சென்றார். இந்த துணுக்கு மூலம் படுதலம் சுகுமாரன் இதழியல் உலகில் கவனம் பெற்றார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவிலும் பணிபுரிந்தார்.
‘கொக்கு’, ‘பட்டாம் பூச்சியும் சிறைக் கதவும்’ இவரது சிறுகதைத் தொகுப்புகள்.20-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். ‘நீயா நானா’, ‘என் உயிர்த் தோழி’, ‘சிறகடிக்கும் பூக்கள்’, ‘பூக்களின் போர்க்களம்’ நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.
தி.ஜ.ர.
குழந்தை இலக்கிய, கட்டுரை இலக்கிய, மொழிபெயர்ப்பு இலக்கிய முன்னோடியாகப் போற்றப்படுபவர் தி.ஜ.ர. என்று பரவலாக அழைக்கப்படும் திங்களுர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன். ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியவர்.
‘ஆனந்த போதினியில்’ முதல்கட்டுரை எழுதினார்.தொடர்ந்து ‘ஸ்வராஜ்யா’, ‘சுதேசமித்ரன்’ இதழ்களில் படைப்புகள் பிரசுரமாயின. ‘சமரச போதினி’, ‘சுதந்திர சங்கு’, ‘ஹனுமான்’, ‘நவமணி’, ‘நவசக்தி’ இதழ்களில் பணிபுரிந்தார். ‘சக்தி’ இதழின் ஆசிரியராக 6 ஆண்டுகள் இருந்தார்.மஞ்சரி இதழின் முதல் ஆசிரியர் இவர் என்பது குறிப் பிடத்தக்கது.
‘ஆசிய ஜோதி ஜவஹர்’, ‘இது என்ன உலகம்’, ‘புதுமைக் கவி பாரதியார்’ இவரது கட்டுரைத் தொகுப்புகள். ‘சந்தனக் காவடி’,’காளி தரிசனம்’, ‘மஞ்சள் துணி’, ‘விசைவாத்து’ இவரது சிறுகதைத் தொகுப்பு. தி.ஜ.ர. நூல்கள் 2007-இல் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டது.
ந.பிச்சமூர்த்தி
புதுக்கவிதை இயக்கத்தின் பிதாமகர், சிறந்த சிறுகதை எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி. இயற்பெயர் வேங்கட மகாலிங்கம். முதல் சிறுகதை ‘சயன்ஸுக்கு பலி’ கலைமகளில் 1932-இல் வெளிவந்தது. ‘முள்ளும் ரோஜாவும்’ கதை கலைமகள் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. இவரது ‘வீடும் வெளியும்’ நாவல் ஆனந்த விகடனில் மூன்றாம் பரிசு பெற்றது. மூன்றாம் பரிசை பெற விரும்பாத அவர் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டார். கையெழுத்துப் பிரதி தொலைந்து போனதால் அந்த நாவல் புத்தக வடிவம் பெறவில்லை.’குடும்ப ரகசியம்’ இவரது சிறந்த குறுநாவல். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘பதினெட்டாம் பெருக்கு’ 1944-இல் வெளி வந்தது.
மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, கலைமகள் இதழ்களில் இவரது படைப்புகள் பிரசுரமாயின.ஞானப்பால் இவரது சிறந்த சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கது.1938-இல் வெளிவந்த .’ஸ்ரீ ராமானுஜர்’ திரைப்படத்தில் ஆளவந்தராக நடித்துள்ளார். இவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டது
நீல பத்மநாபன்
நடுத்தர மக்களின் வாழ்க்கையை அவர்களின் பார்வையிலேயே எழுதி புகழ் பெற்றவர் நீலகண்ட பிள்ளை பத்மநாபன். கேரள மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் ‘உதயதாரகை’. 1958-இல் 20 வயதில் எழுதிய நாவல் 1980-இல்தான் வெளியானது. ‘பள்ளிகொண்டபுரம்’ நாவல், ‘திருவனந்தபுரத்தின் ஆன்மா வெளிப்பட்ட நாவல்’ என்கிறார் விமர்சகர் கிருஷ்ண வாரியர்.’தலைமுறைகள்’, ‘உறவுகள்’ நாவல்கள் முன்னோடி நாவல்கள் வரிசையில் இன்றும் இடம் பெற்றுள்ளது.
‘ தலைமுறைகள்’ நாவல் நாயகி நாகா கணவனால் தள்ளி வைக்கப் படுகிறாள். நாகாவின் சகோதரன் திரவியத்தின் நண்பன் குத்தாலம் நாகாவை மணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். பாழும் கிணற்றில் விழுந்த நாகா கணவனை காப்பாற்ற அவனது இரண்டாவது மனைவி, குத்தாலத்தை அழைக்கிறாள். கிணற்றில் நடந்த தேடுதலில் நாகா கணவன் உயிருடனும் குத்தாலம் பிரேதமாகவும் மீட்கப்படுகின்றனர். நாகா வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாகி கதை முடிகிறது. பத்மநாபனின் தலைமுறைகள் நாவல் கதையல்ல வாழ்க்கை!
‘இலையுதிர் கால’ம் நாவல் சாகித்ய அகாதெமி பரிசு வென்றது.நீல பத்மநாபன் கவிதைகள் ‘நேரடி உணர்ச்சி பெருக்கு’ என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
