அலாரம் – அழகியசிங்கர்

அழகியசிங்கர் நவீன விருட்சம் என்ற சிற்றிதழை கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகத் தொடர்ந்து  நடத்தி வருபவர். சிறந்த கதாசிரியர் – பதிப்பாளர் -மேடைப் பேச்சாளர். அவரது நவீன விருட்சத்தின் 100 வது இதழ் விரைவில் வெளிவரப் போகிறது. அவர் குவிகத்திற்கு மாதம் ஒரு கதை எழுத ஒப்புக் கொண்டது குவிகத்தின் அதிர்ஷ்டம் . 
 
                             
வந்து இறங்கியபோது மணி எட்டாகிவிட்டது.  குருமூர்த்தி அலுத்துக்கொண்டான்.  வண்டியை வாசலில் வைத்தான்.  மாடிக்குப் போய் அறைக் கதவைத் திறந்தான்.  ஃபேனைப் போட்டு சேரில் காலை நீட்டியபடி உட்கார்ந்து கொண்டான்.  பின் ச்சூ..கொட்டினான். அலுப்பாக இருந்தது.  தினமும் அவனால் எப்படி இவ்வளவு தூரம் வண்டியில் சென்று திரும்பி வந்து இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவனால் அவனை நம்ப முடியவில்லை.  கடந்த சில மாதங்களாக அவன் இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறான்.ART 8
 
சட்டையைக் கழட்டினான்.  பின் லுங்கியைக் கட்டிக்கொண்டு பேண்டை மாட்டினான்.  பாத்ரூம் சென்று முகத்தை தண்ணீர் விட்டு அலம்பிக்கொண்டான். குளிர் தண்ணீர் பளிச்சென்று முகத்தில் பட்டவுடன் ஆரோக்கியமாக இருந்தது.  பவீத்திரா மெஸ்ஸிற்கு போன் செய்தான்.
 
என்ன டிபன்?” என்று கேட்டான்.
 
ரவா உப்புமா..” என்று பதில் வந்தது.
 
அலுப்பாக இருந்தது குரூமூர்த்திக்கு…ஏன் பேசாமல் அர்ச்சனா ஓட்டலுக்குப் போகலாமா என்று யோசித்தான். அப்படித்தான் முடிவு செய்தான்.
அப்போதுதான் அந்தப் போன் வந்தது.
 
சார்,  நீங்கள் ஏஎம் மா?”
 
ஆமாம்.  ஆமாம்.”
 
“உடனே வாங்க…உங்கள் பாங்கிலிருந்து பர்கலரி அலார்ம் சத்தம் போடுகிறது..திருடர்கள் வந்திருப்பார்கள்..”
 
சொன்னது பந்தநல்லூரிலுள்ள சப் இன்ஸ்பெக்டர்.  ஒரு லேடி.
குருமூர்த்தி யோசித்தான்.  பின் சொன்னான் :
 
திருடர்கள் வர வாய்ப்பே இல்லே..”
 
சீக்கிரம் வாங்க…உங்க பாங்க் முன்னாடி ஒரே கூட்டம்..”
 
கூட்டமா…இதோ வர்ரேன்..”
 
திரும்பவும் பந்தநல்லூருக்குப் போக வேண்டுமென்பதை நினைத்தபோது குரூமூர்த்திக்கு அலுப்பாக இருந்தது.  ஏன்டா இதுமாதிரி அவஸ்தையில் மாட்டிக்கொண்டோம் என்று யோசித்தான்.
 
ராஜேந்திரனுக்குப் போன் செய்தான்.  “ஏன் சார்?”
 
ராஜேந்திரன் வாங்க..பர்கலரி அலாரம் கத்தறது…பாங்க் முன்னாடி கூட்டம்..”
 
வாங்க வாங்க..நான் ரெடியா இருக்கேன்..”
 
ராஜேந்திரன் பந்தநல்லூரில் குரூமூர்த்தியுடன் பணிபுரிபவர்.  க்ளார்க். அவருக்கு குரூமூர்த்தி மாதிரி ஆக வேண்டுமென்ற ஆசை..
 
திரும்பவும் பாண்டை மாட்டிக்கொண்டு, ஜோல்னா பையில் இருக்கும் ஆபீஸ் கீயை பாண்டில் வைத்துக்கொண்டு. வாசலில் வீற்றிருக்கும் வண்டியை எடுத்துக்கொண்டு, கீழே குடியிருக்கும் மாமியிடம் வாசல் கேட்டைப் பூட்ட வேண்டாமென்று சொல்லி அவர்கள் வீட்டின் உள்ளே நோட்டம் விட்டான். ரம்யா கண்ணில் தட்டுப்படவில்லை.
 
பின் அர்ச்சனா ஓட்டலுக்குச் சென்று இட்டிலியும் காப்பியையும்   உண்டு அவசரம் அவசரமாக பந்தநல்லூருக்குக் கிளம்பினான்.
 
அதற்குள் இன்னொரு போன் வந்துவிட்டது.  “இதோ வர்ரேன்..”என்றான்
 
குரூமூர்த்தி.  அவசரத்தில் ஆபிஸ் சாவியை எடுத்துக்கொண்டு வந்தோமா என்று யோசித்தான்.  இப்படி அடிக்கடி அவனுக்கு சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். பின் பேன்ட் பையில் கையை வைத்து சோதித்துக்கொண்டான்.  சரி..எல்லாம் இருக்கு..
 
பாதி தூரம் டூவீலரில் பறந்து சென்று கொண்டிருந்தபோது,
ஸ்ரீனிவாசனிடமிருந்து போன் வந்தது.  “நான் கும்பகோணம் வந்து விட்டேன்..நீ போய்ப் பாக்கறியா?” என்றான் சீனிவாசன்.
 
நான் பாத்துக்கறேன்..நீ கவலைப்படாதே..” என்றான் குரூமூர்த்தி.
 
சீனிவாசனும் அவனைப்போல ஒரு ஏஎம்.  நடிகர் நீலூ ஜாடையில் இருப்பான்.  காலை ஆபீஸ் நேரத்தில் பக்கத்திலிருக்கும் டீ கடையில் போய் போண்டா சாப்பிடுவான். போண்டா சீனு என்று செல்லமாகக் கூப்பிடுவான்.
 
மானேஜர் பழனிச்சாமியும் போன் செய்தார்.  அவர் அன்று லீவு.  திருச்சியில் இருந்தார்.  “என்னப்பா பர்கலரி அலாரம் கத்தறதாமே..போய்ப் பாருங்க…எனக்குப் போன் பண்ணுங்க்..”
 
சரி சார்..”என்றான் குரூமூர்த்தி.
 
மயிலாடுதுறை மேம்பாலத்தைத் தாண்டி வரும்போது.  எதிரில் வண்டிகள் ஒளிக் கற்றைகளை குரூமூர்த்தி மீது வாரி இறைத்தன.   தடுமாறியபடி வண்டியை ஓட்டினான்.
 
முதலில் ராஜேந்திரனைப் போய்ப் பார்க்க வேண்டும்.  அங்கு டூவீலரை வைத்துவிட்டு பின் ஒரு வாடகைக் காரை எடுத்துக்கொண்டு பந்தநல்லூருக்குப் போக வேண்டும்.  இருட்டில் ஹோன்னு இருக்கும் பந்தநல்லூருக்கு டூவீலரை எடுத்துக்கொண்டு ஓட்ட முடியாது.
 
ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தவுடன், ராஜேந்திரன் ரெடியாக இருந்தார்.
உடனே இருவரும் கிளம்பினார்கள்.
 
ஏன் இப்படி ஆயிற்று என்று தெரியவில்லை,”என்றான் குரூமூர்த்தி.
 
எனக்கு அந்த ஊர்ல இருக்கிற அக்பர் பாய் போன் பண்ணினார்..பாங்க் முன்னாடி ஒரே கூட்டமாம்…”
 
இதெல்லாம் தலையெழுத்து ராஜேந்திரன்…நிம்மதியா ஹெட் ஆபிஸிலே இருந்தேன்.  ஒருத்தன் கேள்வி கேட்கமாட்டான்…ஏன் பிரமோஷன்னு மாட்டிக்கொண்டேன் தெரியலை..”
 
இது சகஜம்..இதுக்கெல்லாம் ஏன் அலுத்துக்கிறீங்க…நல்ல காலம் நீங்க சாவியை வைச்சிருக்கீங்க..”
 
சீனிவாசன்கிட்டேயும் சாவி இருக்கு..”
 
அவர் வேஸ்ட்…அவர் எங்க கும்பகோணத்திலிருந்து வர்றப் போறாரு..”
 
ராஜேந்திரன் நீங்க இந்த ஊர்க்காரரு..தவறிப்போய்க் கூட பிரமோஷன்ல போயிடாதீங்க…”
 
அதான் கிடைக்க மாட்டேங்கறதே….நானும் பரீட்சை எழுதறேன்.  தேறவே முடியலை..”
 
கவலைப்படாதீங்க..ஆனா எழுதாதீங்க…எழுதினாலே புடிச்சுப் போடுவாங்க..”
 
அப்படியா?”
 
காலம் மாறிப்போயிடுத்து..எங்கும் ஆள் இல்லை..எழுதினாப் போதும் கொடுத்துடுவாங்க..”
 
“இந்த ஒரு தடவ மட்டும் எழுதுவேன்…அப்புறம் எழுத மாட்டேன்..”
 
“ராஜேந்திரன் ஒவ்வொருத்தர் தலையெழுத்தை மாத்த முடியாது…என்ன செய்யறது..என்னை நீங்க பாக்கலை..நான் சந்தோஷமாவா இருக்கேன்..முழுக்க முழுக்க ஆபீஸ்ன்னு ஆயிடுத்து..வேற சிந்தனை இருக்கா..விலங்கை மாட்டறாப்பலே சாவியை வேற கொடுத்துட்டாங்க..சரி ஆபிஸ விட்டு சீக்கிரமா கிளம்ப முடியறதா…அப்படியே கிளம்பினாலும் பழனிச்சாமிக்குப் பிடிக்கலை..அவர் இன்னும் ஆபிஸிலேயே உட்கார்ந்திருக்காரு..”
 
“நீங்களும் சீனிவாசனும் வீட்டுக்குக் கிளம்ப போட்டிப் போடறா மாதிரி தெரியுதே…”
 
“அவன் என்ன கஸ்டமரைப் பார்த்து சத்தம் போடறான்…யாராவது மொட்டை எழுதினா…அவனைத் தூக்கிடுவாங்க…இன்னும் மோசமான இடத்துலப் போடுவாங்க..”
 
“அவர் எதுக்கும் கவலைப்பட மாட்டார்…”
 
“அவன் 6மணிக்கெல்லாம் கிளம்பிடறான்…இப்பப் போனாதான் பஸ் பிடித்துப் போக ஏழரை ஆகும்னு சொல்றான்…பழனிச்சாமி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறாரு…நானும் சொல்லிட்டேன்…சீனு கிளம்பினா நானும் கிளம்பிடுவேன்னு..”
 
“பழனிச்சாமி பாவம் சார்…உங்க இரண்டுபேர்க்கிட்டேயும் மாட்டிண்டு முழிக்கிறாரு…”
 
“நான் பாவம்பா…சென்னையிலிருந்து இங்க வந்து எல்லார்கிட்டேயும் மாட்டிண்டு முழிக்கிறேன்..”
 
கார் அந்த இருட்டில் போய்க்கொண்டிருந்தது.  ராஜேந்திரன் பேசவில்லை.  அவருக்கு எப்படியும் ஆபிஸராக வேண்டுமென்ற வெறி இருந்துகொண்டு இருக்கிறது.  சிலருக்கு இப்படித்தான்.  ஆபீஸ். பின் அதைப் பற்றிய சிந்தனை இருக்கும்.  பழனிச்சாமிக்குக் கூட மேலும் மேலும் பதவி உயர்வு பெற்றுக்கொண்டே போக வேண்டுமென்ற வெறி.
 
குருமூர்த்தி ஏன் இதில் மாட்டிக்கொண்டோம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
 
சாலையோரங்களில் இருந்த பனை மரங்கள் காற்றில் சலசலத்துக்கொண்டிருந்தன.
 
“ராஜேந்திரன், இந்தப் பனை மரங்கள் இருட்டில் பேய்கள் டான்ஸ் ஆடுவதுபோல் ஆடுகின்றன.”என்றான் குருமூர்த்தி.
 
ராஜேந்திரன் சிரித்துக்கொண்டே,”உங்க கற்பனையே வித்தியாசமாக இருக்கிறது, சார்..”என்றார்.
 
குரூமூர்த்தி இப்படித்தான் எதாவது சொல்லிக் கொண்டிருப்பான்.  பின் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறோம் என்று யோசித்துக் கொண்டிருப்பான்.  பேசி முடித்தவுடன் அவனிடம் தென்படும் அமைதி அளவுக்கு அதிகமானது.
 
கார் வங்கி வாசலில் போய் நின்றது.  வங்கி முன் பெரிய கூட்டம் கூடியிருந்தது.  குருமூர்த்திக்கு திகைப்பாக இருந்தது.  காரை விட்டு அவனும் ராஜேந்திரனும் இறங்கியதைப் பார்த்தவுடன் எல்லோரும் சத்தம் போட்டார்கள்.
 
“வர்றாங்க…….பாரு,,,பாங்கா நடத்தறாங்க…”என்று.
 
குருமூர்த்தி காதில் வாங்காமல் பெண் இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். வங்கியின் கட்டடத்திலிருந்து ஊன்னு ஊளையிடுவதுபோல் சத்தம் காதைத் துளைத்தது.  முன்னால் கூடியிருந்த கூட்டம் சத்தம்போட்டபடி ஆவலாக இருந்தது.
 
வங்கிக் கதவைத் திறந்தவுடன், உள்ளே போய் உடனே சுவீட்டை ஆப் செய்தான்.  சத்தம் நின்று விட்டது.  பின் எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு வங்கியின் உள்ளே போய் பெண் இன்ஸ்பெக்டரும் அவனும் போய்ப் பார்த்தார்கள்.  ஒன்றுமில்லை.  அன்று முழுவதும் மின்சாரம் இல்லை. திடீரென்று மின்சாரம் வந்தவுடன் பர்கலரி அலாரம் தானகவே அடித்திருக்கும். வாசலில் கூட்டம் கலைந்து போயிற்று.  யாராவது திருடன் உள்ளே புகுந்திருப்பான் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.  அவர்களுக்குப் பெரிய ஏமாற்றம்.  எல்லோரும் போய் விட்டார்கள்.  அந்த ஊரில் வங்கி இருக்குமிடத்தில் எல்லாக் கூட்டமும் கூடும்.  பஸ் ஸ்டாப் அங்குதான் இருக்கும். கும்பகோணம், மயிலாடுதுறைக்கு அங்கிருந்துதான் போக வேண்டியிருக்கும். டீ கடை சிறிய ஓட்டல் என்றெல்லாம் இருக்கும்.
 
வங்கியில் எப்போதும் கூட்டம் கசகசவென்று இருக்கும்.  சமாளிக்கவே முடியாது.  நகைகளை அடகு வைப்பார்கள்.  பின் திருப்புவார்கள்.  பென்சன் வருகிறதா என்று கேட்பார்கள்.  பயிர் கடன் வாங்குவார்கள்.  ஒரு குழுவிற்கு தரவில்லை என்றால் சண்டை போடுவார்கள்.  பின் அந்த வங்கி இருக்கும் தெருவிலேயே கூட்டம் போட்டு வங்கி மேனேஜர் ஒழிக என்று கோஷம் போடுவார்கள்.  அங்கு இரண்டு ஜாதிகள்தான் பிரதானம்.  அந்த ஜாதிக்குள் நடக்கும் கலவரத்தைத் தீர்க்கவே முடியாது.  பிரதான ஜாதியில் உள்ள ஒருவரைத்தான் வங்கியில் மானேஜராகப் போடுவார்கள்.  இல்லாவிட்டால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
 
பழனிச்சாமியால் வங்கியை நடத்திக்கொண்டே போகமுடியவில்லை. சீனிவாசனையும், குரூமூர்த்தியையும் அவர் திட்டுவார் சீக்கிரம் வீட்டிற்கு ஓடி விடுகிறார்கள் என்று.  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அந்தக் கிராமத்தில் இருக்கவே முடியாது.
 
ஒருவழியாக வங்கிக் கதவுகளை பூட்டிக்கொண்டு திரும்பவும் காரில் ஏறி வீட்டிற்குக் கிளம்பினார்கள்.  பழனிச்சாமியிடம் போன் பண்ணி குரூமூர்த்தி என்ன நடந்தது என்று சொன்னான்.  பழனிச்சாமி வித்தியாசமானவர்.  அவர் மானேஜர் என்ற கோதாவில் அவனுக்குப் போன் பண்ணவே மாட்டார்.  ஆனால் அவன் போன் பண்ணி அவரிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார். சீனிவாசனும் போன் பண்ணிக் கேட்டான்.
 
இந்த அலாரம் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்பதுபோல் யோசிக்கத் தொடங்கினான் குரூமூர்த்தி.  ஒவ்வொரு ஞாயிறு இரவும் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு அவனும், அவனுடைய சகலையும் ஒரே ரயில் வண்டியில் வருவார்கள்.  காலையில் நாலுக்கெல்லாம் மயிலாடுதுறைக்கு வண்டி வந்துவிடும்.  சகலை செல்போனில் அலாரம் வைத்துவிடுவார்.  சரியாக 4 அடிப்பதற்கு முன் அலாரம் அடிக்கும்.  சகலையும் குருமூர்த்தியும் உடனே இறங்க தயாராக இருப்பார்கள்.  அந்த நேரத்தில் அலாரம் அடிக்கவில்லை என்றால் கும்பகோணம் தாண்டித்தான் போக வேண்டியிருக்கும்.
 
சகலைதான் அவனுக்கும் சேர்த்து டிக்கட் ரிசர்வ் செய்வார்.  சில சமயம் சனிக்கிழமை அவருடன் குருமூர்த்தி செல்வான்.  பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வரும்போது இரண்டு பேர்களும் ஒன்றாகத்தான் வருவார்கள். ஒவ்வொருமுறை ஞாயிறு செல்போனிலிருந்து அலாரம் அடிக்கும் சப்தத்தைக் கேட்காமல் தப்பிக்க முடியாது.
 
“என்ன சார் எதாவது யோசனையா?”
 
“இல்லை…இல்லை..இதுமாதிரி அலாரம் அடிக்கிறதைப் பற்றி யோசனை.  சென்னையில்  மாதாகோயில் பக்கத்தில் எங்கள் வீடு..ஒவ்வொரு முறையும் நேரத்தை குறித்து சர்ச் பெல் முழங்கும்..”
 
“இப்போதெல்லாம் சேவல் எல்லாம் நேரம் கெட்ட நேரத்திலதான் கூவறது.”என்றார் ராஜேந்திரன்.
 
ராஜேந்திரனை இறக்கிவிட்டு தன் வண்டியை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறைக்குப் போனபோது மணி 11 ஆகிவிட்டது.  வள்ளலார் கோயிலைப் பூட்டி விட்டார்கள்.  தெருவில் சில நாய்கள்.  ஆனால் குருமூர்த்தியைப் பார்த்து ஒன்று குலைக்கவில்லை.
 
கேட் கதவைத் திறந்து வண்டியை உள்ளே வைத்து கேட்டை மூடிக்கொண்டு உள்ளே நீளமான பாதையைக் கடந்து மேலே உள்ள தன் அறைக்கு குருமூர்த்தி சென்றான்.
 
திரும்பவும் நாற்காலியில் தொப்பென்று விழுந்தான்.  அப்படியே சாய்ந்தபடி யோசித்தான்.  மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறி எல்லாம் சுற்றிக்கொண்டிருந்தது.
 
நாற்காலியில் அப்படியே அசந்து தூங்கி விட்டான் குருமூர்த்தி.
 

ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )

 

South Indian parents and children operating laptop MR748S 748T 748U 748V

ஷாலு சொன்னதைக் கேட்டு அதை என் மனசில் உள்வாங்கி நான் அதைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நேரம்  பிடித்தது. அப்படியும் சரியாகப் புரியவில்லை.

இதற்கு ஷாலு அடிக்கடி சொல்லும் வார்த்தை – “இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். பொண்டாட்டி   சொன்னா  அதைப் புரிஞ்சிக்க முயற்சியே செய்ய மாட்டாங்க” இதற்குப் பதில் எப்பவும் என் மனசில் ஓடும் ‘ ஏம்மா, தாயிங்களா! புருஷன் காரன் புரிஞ்சிக்கிற மாதிரி என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா?” ஆனால் அதைச் சொல்லிவிட்டு அதனால் விளையும் பக்க விளைவுகளை  நன்றாகப் புரிந்துகொண்டதால் அந்தப் பதில் மண்டையில் உருவாகி தொண்டையிலேயே நின்றுவிடும் .

அதுக்கு மேலே  போய் “உங்களுக்கெல்லால் எதையும் ரெண்டாந்தரம் சொன்னாத் தான் புரியும். ஏன்னா முதல் தரம் எதைச் சொன்னாலும் நீங்க அதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டீங்க! ”  இந்த டயலாக்கை எப்போ கேட்டாலும்  எனக்கு ரெண்டாம் தாரம் – முதல் தாரம் அப்படின்னு காதில் விழுந்து நமுட்டுச் சிரிப்பு வரும். அதைப் பாத்தா ஷாலுவுக்குப் பத்திக்கிட்டு வரும்.

சமீபத்தில வாட்ஸ் அப்பில  ஒரு ஜோக் வந்திருந்தது. மனைவிக்கும் கேர்ள் பிரண்டுக்கும்  என்ன  வித்தியாசம் என்று விலாவாரியா சொல்லியிருந்தாங்க.

மனைவி இருக்கா.ளே  அவ டி வி மாதிரி. கேர்ல்பிரண்ட் மொபைல் மாதிரி.

வீட்டிலே டி‌வி பாப்போம். ஆனால் வெளியே போகும் போது மொபைலத் தான் எடுத்துக்கிட்டு போவோம்.

சிலசமயம் டி‌வி ஐப் பார்த்து ரசிப்போம். அதுவும் புதுசா வந்த போது. ஆனால் மொபைலோடத் தான்  எப்பவும் விளையாடிக் கிட்டே இருப்போம்.

டிவி ஆயுசுக்கும் ப்ரீ. ஆனால் மொபைலுக்கு நீங்க சரியா பணம் போடலைன்னா கனெக்ஷன்  துண்டாயிடும்

டிவி எப்பவும் பெருசா குண்டா இருக்கும். சிலது ஒல்லியா குச்சி மாதிரியும் இருக்கும். ஆனால் எல்லாம் பழசு. மொபைல் கவர்ச்சியா வளைவும் சுழியுமா கைக்கு அடக்கமா இருக்கும்.

என்ன, டிவிக்கு செலவு கொஞ்சம் கம்மி தான். ஆனால் மொபைல் உபயோகத்துக்கு தகுந்த மாதிரி செலவும் எகிறிக் கிட்டே  போகும்.

மொபைல்ல இன்னொரு  சவுகரியம். அதுக்கு ரிமோட் கிடையாது.

முக்கியமான சமாசாரம். மொபைல்ல கேட்கவும் செய்யலாம். பேசவும் செய்யலாம். ஆனால் டிவி , அது மட்டும் தான் பேசிக்கிட்டே இருக்கும். பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கேட்டுத்தான் ஆகணும்.

டிவியை கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா தான் நமக்கு நல்லது. மொபைல் அப்படி இல்லே. நெருக்கமா பாக்கெட்டில வைச்சுக்கலாம்.

இதை ஷாலு கிட்டே படிச்சுக் காட்டினேன். ” ஆனாலும் இந்த ஆம்பிளைங்களுக்கு ஏன் புத்தி இவ்வளவு சீப்பா போகிறது? நாங்களும் தான் மொபைல் வச்சுக்கிறோம். எப்பவாவது அதை பாய் பிரண்டு . புருஷன்காரனை  குத்துக்கல்லு, கிரிக்கெட் பாக்கிற மிஷின், தின்னுட்டு தூங்கற  ஜடம்,  கம்ப்யூட்டர் பைத்தியம், பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கிற  ஆந்தை, ஜொள்ளு பைப் அப்படின்னு அடிக்கடி சொல்றோமா?” என்று அடி மேல் அடி போட்டுத் தாக்கினாள்.

சும்மா ஒரு ஜோக் சொன்னா இப்படிக்  கோவிச்சுக்கிறியே?

பெண்கள்னா  உங்களுக்கு எப்பவுமே இளக்காரம்.   நானும் ஆம்பளைங்களைப் பத்திச் சொல்லுறேன் கேட்டுக்கோங்கோ ! நாங்க நாலு பெண்கள் சந்திச்சா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்குவோம் ! ஆனா நீங்க தடியா, மாமு, லூசுன்னு அப்படன்னு தானே கூப்பிடறீங்க?

அது சரி, நாங்க எங்களுக்குத் தேவையானா  பத்து ரூபாய் பெருமான சாமானை 20 ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஆனா நீங்க 20 ரூபாய் சாமானை 10 ரூபாய்க்கு உங்களுக்குத் தேவையில்லாட்டி கூட    தள்ளூபடின்னா  வாங்குவீங்க!

இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே! நாங்க  ஏன் உங்க மாதிரி ஆட்களைக் கல்யாணம்  பண்ணிக்கறோம்னு தெரியுமா? அதுக்கக்கப்பறமாவது நீங்க திருந்துவீங்கன்னு தான். ஆனா நீங்க மாறறதேயில்லை.

நாங்க ஏன் உங்களைக் கல்யாணாமா செஞ்சுகறோம்னு தெரியுமா? நீங்க முன்னாடி இருந்த மாதிரி தேவதையா எப்பவும் மாறாம இருப்பீங்கன்னு நினைச்சு தான். ஆனா நீங்க கல்யாணம்  ஆன உடனே பத்ரகாளியா மாறிடறீங்க!

அதுக்கு என்ன காரணம்  தெரியுமா?   நாங்க கல்யாணம் ஆகிற வரைக்கும் எப்பவும் எங்க எதிர்கால நிலமையை நினைச்சு பயந்துகிட்டிருப்போம்.

ஆனா , எங்களுக்கு எங்க எதிர்காலத்தைப் பத்திய கவலையே கல்யாணத்துக்கு அப்புறம் தான்   வருது.

அது எப்படியோ போகட்டும்! நாங்க எப்பவும் எவ்வளவு டீஸண்டா  டிரஸ் பண்ணிக்கறோம். நீங்க எப்பவும் லுங்கி -கிழிசல் பனியன் தான்.   கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது.

அதெல்லாம்  விடு, நீங்க எத்தனை தடவை டிரஸ் மாத்துவீங்க ? காலையில எந்திரிச்சதும்,, குளிச்சிட்டு வந்ததும். கோவிலுக்கு போகும்  போது , குப்பையைக் கொட்டும் போது , புஸ்தகம் படிக்கும் போது, செடிக்கு தண்ணி ஊத்தும் போது – இப்படி ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ். தேவை தானா? நாங்க கல்யாணத்துக்கோ எழவுக்கோ போனா தான் டிரஸ்சே மாத்திக்கறோம்.

நிறுத்துங்க ! உங்களுக்கு நம்ம ஷாSouth Indian parents and children MR748S 748T 748U 748Vலினி ,ஷ்யாம் அவங்களைப் பத்தி என்ன தெரியும்? போன காப்பரிக்ஷையில  ரெண்டு பேரும் என்ன ரேங்க் வாங்கினாங்கன்னு சொல்லுங்க பாப்போம்.

ரேங்க் கார்டை என்  கண்ணிலே  காட்டவே இல்லையே ?

உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது. இதைப் பத்தி தான் போன மாசம் எங்க மகிளா சபாவிலே .. “

இத நான் நூறு தடவை கேட்டுட்டேன். அதுக்கு மேல கேக்கிற பொறுமை எனக்கு அப்போ இல்லை.

அதெல்லாம் விடு, ஷாலு,  உன்னோட புது போஸ்ட் பத்தி நீ சொன்னது உண்மையா? நீ தமிழகக் கோமாதா-காமதேனு முன்னேற்றக்   கழகத்தின் கொ.ப.செ யா? GKMK பேரு நல்லா இருக்கு.

“சே! எவ்வளவு பெரிய  கான்செப்ட். அதைப் போய் இப்படிக் கழகம், கொ.பா.செ ஈனு கொச்சையா சொல்றீங்களே? பை த பை , அதென்ன கொ.ப.செ. கேட்டு ரொம்ப நாளாச்சு?

கொள்கை பரப்புச் செயலாளர். அம்மாவுக்கு  அந்தக் காலத்தில எம்.ஜி.ஆர் இருந்த போது கிடைச்ச போஸ்ட். அது என்ன கோமாதா? காமதேனு?           நீ கொஞ்சம் விவரமா சொன்னாத் தானே புரியும்?     என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டேன். இனிமே அரை  மணிக்கு ஷாலுவை யாரும் நிறுத்தமுடியாது.

டி வி ஆரம்பமாகிவிட்டது.

உங்களுக்குப் புரியற  மாதிரி விளக்கமா சொல்றேன். நடுவில குறுக்க பேசக்கூடாது.

நாங்க  சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி வீட்டிலே ஆபூஜை பண்ணினோமே  ஞாபகம் இருக்கா?

எனக்கு ஆயுத பூஜை தான் சட்டென்று ஞாபகம் வந்தது. அப்பறம் தான் குருஜினியும் இவளும் சேர்ந்து கோமாதா பூஜை செய்தது ஞாபகம் வந்தது.  அதிலிருந்து அவ ஆரம்பிச்சா இன்னும் மூணு மணிநேரம் பழைய சரஸ்வதி சபதம் மாதிரி ‘கோமாதா வண்ணக் குல மாதா’ அப்படின்னு ஈஸ்ட்மேன் கலரில் ஆரம்பிச்சிடுவா. அதனாலே பேச்சை மாற்றி ,   “அதில்லை. ஷாலு, சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் மோடிஜியை பாத்ததிலிருந்து சொல்லு.”

ஒரு பத்துப் பதினைஞ்சு நாளை பாஸ்ட் பார்வேர்ட் செய்ய முயற்சித்தேன்.

உங்களுக்கு நல்லா புரியனும்னா அந்த பூஜையிலிருந்து தான் ஆரம்பிக்கணும்.

விதி வலிது தான். சும்மாவா சொன்னாங்க ‘மனைவியோட ஆர்கியூ பண்ணற போது கடைசி ஆர்குமெண்ட் அவளோடது தான். அதுக்கப்பறம் கணவன் பேசறதெல்லாம் அடுத்த ஆர்கியூமெண்டுக்கு  ஆரம்பம்’ என்று. ஷாலு அப்படித்தான். ஏதோ ஒரு படம் வந்ததே. அது என்னா ஸ்பீட் இல்லே அன்ஸ்டாப்பபிள் . ஒரு ரயில் நிக்காமே ஓடிக்கிட்டிருக்குமே. அது தான் ஷாலு.

” சும்மா இருங்க! நம்ம குருஜினி நம்ம வீட்டிலே ஆபூஜை செஞ்ச நியூஸ் டெல்லி வரைக்கும் போயிடுச்சு. அதனால தான் குருஜினியை சென்னை ஏர்போர்ட்டிலே உலக யோக தினத்தில யோகா எல்லாம் செய்யச்சொன்னாங்க.   நாங்க சிங்கப்பூர் போற அன்னிக்கு அதைச் செஞ்சதில மோடிஜி  ரொம்ப  குஷி ஆயிட்டாராம்.  அதனால எங்களை சிங்கப்பூரிலேயே பாக்கணும்னு திட்டம் போட்டாராம். ஆனா அவர் வந்து சேர்ர  அன்னைக்குத் தான் நாங்க அங்கிருந்து கிளம்பற நாள்.  அன்னிக்கு சிங்கப்பூரில அவர் எக்கச்சக்கமான ஒப்பந்ததிலே கையெழுத்து வேற போடணுமாம்.

சரி, அடுத்த நாளைக்கு நான் பிரயாணத்தைச் சேஞ்ச் பண்ணிக்கலாம்னு பாத்தா எங்க விசா அன்னிக்கோடா முடிஞ்சு போகுது. அதனால ஏர்போர்ட்டில  சந்திக்க முடிவு செஞ்சோம். டெல்லி பஜ்ரங்க்பலி அங்கிள் தான் போனிலே குருஜினியோட பேசி எல்லா ஏற்பாடும் செஞ்சார்.

சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலே நானும் குருஜினியும் வி ஐ பி லவுஞ்சில் உக்காந்திருக்கோம். சுத்திலும் செக்யூரிட்டி. எனக்கு ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கிட்டிருந்தது. குருஜினியோ அலட்டிக்காம தைரியமா இருந்தாங்க. அப்போ தான் சொன்னாங்க. “எனக்கு மோடிஜியை ரொம்ப வருஷமா தெரியும். அவர் காந்திநகரில முதன் முதலா முதல் அமைச்சரா ஆன போது வாழ்த்து சொன்ன முதல் ஆள் நான் தான். அப்போ  அவர் வீட்டுக்கு எதுத்தாப்போல இருந்த ‘க பார்க்கில’  கோமாதா பூஜை செஞ்சுகிட்டிருந்தேன். ( ஷாலுவின் எக்ஸ்ட்ரா நியூஸ்: அந்த ஊரில ரோட்டுக்கு சர்க்கிளுக்குப் பேர் எல்லாம் க, கா, கி, கீ ,  என்று இருக்குமாம்.)

நடுவில நான் ஒரு கேள்வி மடத் தனமா கேட்டதில குருஜினிக்குக் கெட்ட கோபம் வந்திடிச்சு தெரியுமா?

எனக்கெப்படித் தெரியும்? நீ வழக்கமா கேக்கற மாதிரி கேட்டிருப்பே?

கதை சொல்ற ஜோரில் என்னோட கிண்டலை அவ கவனிக்கவில்லை.  அதனால நான் தப்பிச்சேன் 

“மோடிஜி எப்ப அடையார் காந்திநகரில் இருந்தார்னு கேட்டேன்”

இப்படிக்  கேட்டா குருஜினிக்கென்ன, எனக்கே கோபம் வரும். குஜராத்தின் கேபிடல் காந்திநகர்னு தெரியாதா? ஜியாக்கிரபி கிளாசில அதைச் சாய்ஸில  விட்டிட்டியா? இனிமே ஷிவானிக்கு வேற டீச்சர் பாக்க வேண்டியது தான்.

“எல்லாம் தெரிஞ்சவங்க நீங்களே இனிமே ஷிவானிக்கும் ஷியாமுக்கும் பாடம் சொல்லிக் குடுங்க. இனிமே எனக்கு எக்கச்சக்க வேலை இருக்கு”

இப்போ நான் ஜகா வாங்கவேண்டிய நேரம்.

” அத்தை விடு ஷாலும்மா,  நீ மோடிஜியை மீட் பண்ணினதைப் பத்தி இன்னும் சொல்லவே இல்லையே?

அந்த கோமாதா பூஜை பிரசாதத்தை  குருஜினி  மோடிஜி  கிட்டே கொடுத்த  அன்னிக்கு தான் அவர் சி எம் ஆகிட்டாராம். அதே மாதிரி 2014இல் குருஜினி டெல்லியில கோமாதா பூஜை செஞ்சு  மோடிஜி கிட்டே பிரசாதம் குடுத்த அன்னிக்கு தான் அவர் பி எம் என்ற நியூஸ் வந்ததாம். இதைப் பத்தி என்ன சொல்றீங்க? ரெண்டு தடவையும் பஜ்ரங்கி அங்கிள் தான் கூடவே இருந்திருக்காராம்.

என்ன சொல்வது? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைன்னு ஷாலுக்கிட்டே அப்போ சொல்ற தைரியம் எனக்கில்லே .

அப்படி நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது மோடிஜி அந்த ல
வுஞ்சுக்கு வந்தார். எனக்கு அப்படியே “36 வயதினிலே ” ஜோதிகா மாதிரி மயக்கம் போட்டு விழுந்திடுவேனோன்னு பயம் வந்திடுச்சு. தலை சுத்தற மாதிரி இருந்தது.

கொஞ்சம் இருங்கோ ஷிவானி கூப்பிடற மாதிரி இருக்கு.” என்று என்னை சஸ்பென்ஸ் லவுஞ்சில் நிறுத்தி விட்டு ஷாலு பறந்துவிட்டாள்.

எப்பவும் அவ இப்படித்தான். நல்ல மூடிலே இருக்கும்
 போது ‘ போன் அடிக்கிற மாதிரி இருக்கு . எங்க அப்பாவாத் தான் இருக்கும் ‘ னு ஓடிப் போய் விடுவாள்,

“காத்திருந்தேன்.. காத்திருந்தேன்.. “

 

குறும்படம்

கருணாகரன் நடிக்கும் நலனின் இந்தக் குறும் படத்தைப் பாருங்கள்!

குறும்படம் எடுப்பதைப் பற்றியே ஒரு குறும்படமா?

நல்லாவே இருக்கு !

 

மூன்று சகோதரிகள் – சிறுகதை – ராமன்

 

 

இந்த மூன்று பாறை வடிவமைப்பு ‘தி த்ரீ சிஸ்டெர்ஸ்’ – மூன்று சகோதரிகள் என்று அழைக்கப்படும். இருக்குமிடம் ஆஸ்ட்ரேலியா  ‘ந்யூ சௌத் வேல்ஸ்’ மாகாணத்தின் கடூம்பா பகுதியில் ‘ப்ளு மௌண்டன்’  மலைத் தொடர்களில் ‘எக்கோ பாயிண்ட்’டில் அமைந்துள்ளது.   கடல்  மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேல்  கம்பீரமாக இருக்கும் அடுத்து அடுத்து அமைந்துள்ள இந்த மூன்று பாறை அமைப்பு ஆஸ்ட்ரேலியாவின் சுற்றுலா தளங்களின் முக்கிய இடங்களில் ஒன்று. மூன்று சகோதரிகளின் தனித்தன்மை நாள் முழுவதும் சூரிய கிரணங்களினால் வெவ்வேறாக மாறி பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன.

இந்த இடத்திற்கு ஆஸ்ட்ரேலியா ஆதிவாசிகளான அபரிஜினி குடிமக்களின் பழங்கால மரபுக் கதைகள் இரண்டு உள்ளன. இரண்டிலும் காரணங்கள், பாத்திரங்களின் பெயர்கள், முடிவுகள்  ஒரே மாதிரியாய் இருப்பதால்   அவைகளில் ஒன்றை மட்டும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.

கடூம்பா ஜமைசன் பள்ளத்தாக்கு  ஆதிவாசிகளின் குடியில் ‘மீனி’ ‘விம்லா’ ‘குன்னெடூ’ என்று கன்னிபெண்களான மூன்று சகோதரிகள் வசித்து வந்தனர். இந்த அழகிய சகோதரிகள்  நேப்பியன் ஆதிவாசிகளின் குடியில் வசித்த மூன்று சகோதர்களுக்கு தமது உள்ளங்களைப் பறிகொடுத்தனர். ஆனால் ஆதிவாசிகளின் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் தரவில்லை.

சகோதரர்களின் காதல் அவர்கள் கண்களை மறைத்தன. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மூன்று சகோதரிகளையும் கட்டாயப்படுத்திக் கைப்பற்ற அவர்கள் முயன்றதால் அந்த செய்கை இரு ஆதிவாசிகளுக்குள்ளும் பெரிய யுத்தத்தை ஏற்படுத்தியது.

அந்த மூன்று சகோதரிகளுக்கும் பெரிய ஆபத்து நிகழப்போவதை அறிந்த கடூம்பா பள்ளத்தாக்கு மந்திரவாதி அவர்களை ஆபத்திலிருந்து மீட்க மூன்று கல் பாறைகளாக சமைத்துவிட்டான். யுத்தம் முடிந்ததும் மீண்டும் அவர்களை மீட்டுக் கன்னிப் பெண்களாக மாற்ற எண்ணியிருந்தான்.  யுத்தம் முடிவதற்குள் அவன் மாண்டே போனான். அவன் ஒருவனால் மட்டுமே  கற்களாய் சமைந்துவிட்ட சகோதரிகளை மறுபடி அழகிய கன்னிகளாய் மாற்ற இயலும்! அது இயலாததால் கன்னிகள் இன்றும் மூன்று கல் பாறைகளாகவே  இருந்து வருகின்றனர்.

இப்போது  The Great Continent Drift theory பற்றி ஒரு சிறு தொகுப்பு! பல மிலியன் நூற்றண்டுகளுக்கு முன் உலகின் ஏழு கண்டங்கள் உருவாவதற்கு முன் ஒரே ஒரு கண்டம் உலகின் தென் கோடியில் இருந்ததாக கூறப்படுகிறாது. அதன் பெயர் காண்ட்வானா. பிறகு மெதுவாக கண்டத்தின் பகுதிகள் வடக்கு நோக்கி ஆசைந்து அசைந்து மேலே சென்று இன்றைய கண்டங்களான வடக்கு அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா உருவாகியன. பின் ஆஸ்ட்ரேலியாவின் வட கிழக்கிலிருந்து   ஒரு பகுதி மேலெழும்பி ஆசியாவின் தென் பகுதியில் மோதி இன்றைய இந்தியா 

3.2

உருவானது. இது 1915ன் ஆல்ஃப்ரெட் வெகெனெர் என்ற புவி தரை தோற்றவியலாளரின் தொகுப்பு.

ஆஸ்ட்ரேலியாவின் வடகிழக்கில் ஒரு விரிசல் இருப்பதைக் காணலாம். இந்த விரிசலும் இந்தியாவின் தீபகற்ப பகுதியும் சரியாக பொருந்துவது அந்த தொகுப்பை உறுதி செய்கிறது. ஆஸ்ட்ரேலியாவின் அபரிஜினியின் உடல் தோற்றம் கிட்டத்தட்ட தென் இந்திய இந்தியர்களின் தோற்றத்தை ஒத்து இருக்கிறது. சைவர்கள் வீபூதியை உடம்பில் பூசிக்கொள்வது போல அபரிஜினி சாம்பலை உடலில் பூசிக்கொள்ளுகிறார்கள். அவர்கள் மரபுக் கதைகள் இந்திய புராதன கதைகள் போல இருக்கின்றன. அவர்களின் உதடுகள் பெரியதாக உள்ளன. மேலும் இந்தியர்களை விட கருப்பு மிகுந்தவர்களாய் காணப்படுகிறார்கள்.

மரபுக்கதையில் வரும் பெயர் விம்லா நமது விமலாவா? மீனி கிட்டத்தட்ட நமது மீனாவாக இல்ல? மற்றும் தோற்ற ஒற்றுமைகளையும் சில செயல்பாடுகளைப் பார்க்கும்போது நமக்கும் அபரிஜினிகளுக்கும் தொடர்பு இருக்கக்கூடுமா?

சரித்திரம் பேசுகிறது ( யாரோ)

சந்திரகுப்த மௌரியர்

அலெக்சாண்டர் சென்ற பிறகு இந்தியாவில் பெரும் சரித்திர நிகழ்வுகள் நடந்தன. ஒரு மாபெரும் அரசாட்சி மறைந்து மற்றொரு பிரம்மாண்டமான அரச வம்சம் துவங்கியது. சந்திரகுப்த மௌரியர் அதன் நாயகர். அது பற்றி இன்று ஆராய்வோம்..

இராமன் கதை சொல்ல வேண்டுமென்றால் இராவணன் கதை சொல்வது  அவசியமாகும். ஆக – சந்திரகுப்த மௌரியரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் – நந்த அரசாட்சியைப் பற்றி முதலில் சொல்லியே ஆகவேண்டும்.

அலெக்சாண்டர் வேண்டுமென்றால் பயப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது சேனை – நந்தர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு – நடுநடுங்கினர். குறிப்பாக நந்தர்களது சேனை (காலாட்படை: 200000 குதிரைப்படை: 80000 ரதப்படை: 8000; யானைப்படை: 6000) பலம் கண்டு – நொந்தனர். போரஸின் 30 யானைகளே அவர்களைப் படுத்தி எடுத்தது என்றால் – 6000 யானைகளா? ஆள விடுங்க சாமி- என்றனர். அவ்வளவு சக்தி வாய்ந்தது தன நந்தனின் படை பலம்.

நந்தர்களின் ஆட்சி – வங்காளம் முதல் பஞ்சாப் வரையிலும் பரவியிருந்தது. தெற்கே விந்திய மலை வரை விரிந்திருந்தது. அவர்களது அபரிமிதமான செல்வக் குவிப்பு அவர்களது புகழை(?)க் கூட்டியது. தமிழ் நாட்டில் சங்கத்தமிழ்ப் புலவர் மாமூலனார் நந்தர்களது தலைநகரான பாடலிபுத்திரத்தைப் பற்றியும் நந்தர்களது செல்வச் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார்.

பல முதல்கள்:

மகாபத்ம நந்தன் – ‘முதல்’ நந்தன். இந்திய சரித்திரத்தில் க்ஷத்ரியரல்லாத ‘முதல்’ அரசன். அவன் ஆட்சிக்குப் பின்னர் மகன் தன நந்தன் அரசனானான். பெயரிலேயே ‘தனம்’ (‘நிதி’ J ).இவர்கள் இருவரும் இந்தியாவின் ‘முதல்’ மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். மக்களை மிரட்டி – இரக்கமில்லாமல் வரி வசூல் செய்து – பெரும் செல்வம் சேர்த்து மக்கள் மத்தியில் செல்வாக்கற்றிருந்தனர். இவர்கள் செய்த ஊழல் – இன்றைய 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை விடப் பெரியது! இவர்கள் தான் உலகின் ‘முதல்’ அரசியல்வாதிகள் போலும்.

அலெக்சாண்டரால் வெல்ல இயலாத நந்தர்களை – 20 வயதான சந்திரகுப்த மௌரியர் வென்றார். அலெக்ஸாண்டருக்குப் பிறகு வந்த கிரேக்கர்களையும் வென்றார். அவரை இந்தியாவின் ஜுலியஸ் ஸீசர் என்கிறார்கள் (உண்மையில் ஜுலியஸ் ஸீசரை ரோமின் சந்திரகுப்தர் என்றல்லவா  கூறவேண்டும்!!)

சந்திரகுப்தர் பாடலிபுத்திரத்தில் பிறந்தார். தகப்பனார் அரச குல க்ஷத்ரியர் என்றும் தாயார் சூத்திரக் குடும்பத்தினர் என்றும் அறியப்படுகிறது.

இந்த சரித்திர சம்பவங்களைப் பார்க்கும்போது கல்கி அல்லது சாண்டில்யன் இதை எழுதவில்லையே என்று என் மனம் ஏங்குகிறது.

நீங்கள் ஏன் ஏங்க வேண்டும்!

‘யாரோ’ எழுத இருக்க உங்களுக்கு அந்தக் கவலை ஏன்? J

மேலே படியுங்கள்!

 

இந்தியாவின் காவலன்

 

“என்ன பேறு பெற்றேனோ?!” -வியந்தான் அந்த இளைஞன்.

அவனது வியப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை! தனக்கு முதலில் கல்வி கற்கக் கிடைத்ததோ உலகின் ‘முதல்’ பல்கலைக் கழகம். அதுவும் முதல் தரமான ஒன்று. பிரம்மாண்டமானது. பதினாயிரம் மாணவர்கள் கற்கும் உன்னதமான கல்விச் சாலை. கிரேக்கர்கள், பாபிலோனியர்கள், சீனர்கள் தவிர இந்திய நாட்டினர் என்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்!

தக்ஷசீலம்!

his1

கற்களாலே கோட்டை போல் அமைந்திருந்த பாடசாலைகள். மரங்கள் பாதை ஓரத்தை அலங்கரிக்க அலை அலையாக அதில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாட சாலைக்குச் செல்லும் அழகே அழகு! மயில்கள் சாலை ஓரம் தத்தி தத்தி நடை பழகியது.

முகப்பு மண்டபத்தில் பல வண்ண ஓவியங்கள் தொங்கின. அந்த இளைஞன் அந்த படங்களை வெகு ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மாலை  வெயிலில் அந்த ஓவியங்கள் தங்க முலாம் தீட்டியது போல் தக தகத்தது -மின்னியது. தினமும் பார்த்த ஓவியங்கள் தான் என்றாலும் அவன் மனதில் அன்றும் அவை பிரமிப்பை ஊட்டத் தயங்கவில்லை.

அந்த படங்கள் எல்லாம் அந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணாக்கர்கள். எப்படிப்பட்ட மாணாக்கர்கள்  அவர்கள் என்றால் – அவர்கள் மாணாக்கர்களாக இருந்து  பின்னர் அங்கேயே ஆசிரியராகி உலகிற்கே பெருமை சேர்த்தவர்கள்!

முதல் ஓவியத்தில் பணிநி (Panini) –சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் அமைத்தவர்! அதன் விதிகளை அமைத்தவர்!

அடுத்து சராகா (Charaka) – ஒரு ஆயுர்வேத மருத்துவர்! இவரது சராகா சாமிதா (Charaka Samhita) இன்றைய ஆயுர்வேதத்திற்கே மூலமாக உள்ளது.

ஜீவக் – ஆஹா! இந்த ஆயுர்வேத மருத்துவர் – புத்தருடைய நோயைக் குணமாக்கியவர்! இவரது அறுவை சிகிச்சை  பற்றிப்  பேசாத வாயே இல்லையே!  அமராப்பள்ளி என்ற உலகப் பேரழகியை * (சென்ற குவிகம் இதழில் இவள் அழகைப் பற்றி ‘யாரோ’ எழுதியிருந்தார்) இளமை குன்றாமல் காத்து சிகிச்சை செய்தவர்! உலகின் முதல் Plastic surgeon போலும்!

அடுத்த ஓவியம் விஷ்ணு ஷர்மா- அரசியல் துறையில் புரட்சி செய்த ‘பஞ்ச தந்திர’ கதைகளால் பெரும் புகழ் பெற்றவர்!

பலப்பல ஓவியங்கள் கடந்து வந்தான் அந்த இளைஞன்.

கடைசியாக ஒரு ஓவியம் பாதி வரையப்பட்டிருந்தது.

அதன் ஓவியர் அதன் அருகிலே அமர்ந்து தூரிகையை வண்ணத்தில் தோய்த்துக் கொண்டு இருந்தார்.

“ஐயா. இது யார் ஓவியம்?”

“நீ யாரப்பா?” – ஓவியர்

“என் பெயர் சந்திரகுப்தன். இங்கு அரசியல் பாடம் பயில்கிறேன்”

“சரியான ஓவியத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்! – இது நீ இதுவரை பார்த்த படங்களில் இருப்பவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் இல்லை… மேலும் அரசியல் பாடத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் இவரை விடப் பெரிய மேதை இன்று இவ்வுலகில் யாரும் இல்லை”

சந்திரகுப்தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்:

“அலெக்சாண்டர் தக்ஷசீலம் வாசல் வரை வந்து விட்டாரே! அவரை வெல்ல முடியுமா இவரது ராஜதந்திரத்தால்”

“அவரிடமே கேட்டுப்பார்” – ஓவியர் குரலில் பெரும் நம்பிக்கை ஜொலித்தது.

“அவர் எங்கே இருக்கிறார்? யார் அவர்?” சந்திரகுப்தன் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.

“அவர் பெயர் விஷ்ணு குப்தர். சாணக்யா என்றே அனைவரும் அழைப்பர்.

இதே ஊரில் குரு குல பள்ளி ஒன்று நடத்தி வருகிறார்”

“நன்றி ஓவியரே..ஆமாம்…என் படம் ஒன்றும் வரைவீரா?” சந்திரகுப்தன்  சிரிக்கவில்லை.

“அது நீ என்ன சாதிக்கிறாய் என்பதைப் பொறுத்தது”- ஓவியர் சிரித்தார்

“வரும் கிரேக்க எதிரிகள் அனைவரையும் நம் நாட்டிலிருந்தே ஒழித்து கொடுங்கோல் மன்னன் தன நந்தனையும் வென்றால்?” சந்திரகுப்தன் மெல்லச் சிரித்தான். அதில் உறுதியும் இருந்தது.

ஓவியன் (மனதில் ‘கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ என்று விளம்பரம் ஓடியது?) திகைத்துப்போனான். இந்த வாலிபன் உடல் வலிவு மட்டுமல்ல நெஞ்சத் துணிவும், கொள்கையும் கொண்டவன் தான் போலும்…

“அதைச் செய்தால் என் ஓவியம் மட்டுமல்ல – இந்திய சரித்திரத்திலேயே உனக்கு இடம் உண்டு..”

மயில் ஒன்று தவழ்ந்து வந்து சந்திரகுப்தன் அருகில் நின்றது. சந்திரகுப்தன் அதைத் தொட்டு என்ன மாயம் செய்தானோ, மயில் தோகை விரித்து ஆடியது.

ஓவியன் வியந்து போனான்.

“மயிலைப் பழக்குவது எங்கள் குலத்தொழில்” – சந்திரகுப்தன்.

“அப்படியானால், நீ சொன்னபடியே நீ மன்னனால்… உனது வம்சம் மௌரியர் (மயில்) என்றழைக்கப்படட்டும்”

அவனது சொல் சரித்திரத்தில் இடம் பெறும் என்று அந்த ஓவியன் கனவு கூட கண்டதில்லை.

அதற்கு மேலும் சந்திரகுப்தனுக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை. சாணக்கியரை சந்திக்க விருப்பம் கொண்டு ஓவியரிடம் விடை பெற்றான்.

மாலை வெயில் மறைந்து இருள் மெல்லப் பரவத் தொடங்கியிருந்தது.

சந்திரகுப்தன் வேகமாக நடந்து தனது குதிரை கட்டப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றான். குதிரையில் ஏறி வழி விசாரித்துச் செல்ல சற்றே தாமதமாகியது. இருள் கவ்வி நின்றது.

சாணக்கியரின் பெருங்குடில் அடைந்து கதவைத் தட்டப்போனான். அப்பொழுது சாணக்கியரின் வாசலில் இரண்டு குதிரை பூட்டிய ரதம் ஒன்று வந்து நின்றது. வாசலில் பத்து வீரர்கள் வேல் பிடித்துக் காவல் காக்கத் தொடங்கினர், சந்திரகுப்தன் அது  தக்ஷசீல மன்னன் அம்பியின் ரதம் என்று உணர்ந்தான். சற்றே ஒளிந்து மறைந்தான். அம்பி உள்ளே சென்று சாணக்கியரிடம் பேசத் தொடங்கினான். அவன் குரலில் பெரும் பதட்டம் இருந்தது. உள்ளே பேசுவது சந்திரகுப்தனுக்கு மெல்லக் கேட்டது. அலெக்சாண்டர் படையுடன் நாடு வாசல் நெருங்கியது பற்றிக் கூறி – என்ன செய்யலாம் என்று கேட்டான். சாணக்கியன் – எதிர்த்துப் போரிடுவது தான் சரியான முடிவு என்றான்.

அம்பி: “விஷ்ணு குப்தரே… அலெக்சாண்டரின் பிரதாபங்கள் நீங்கள் கேள்விப்படவில்லையா? பாரசீக மன்னர் எவ்வளவு பலம் பொருந்தியவர். அவரையே வீழ்த்தினானாமே? நகரங்கள் பல எரிந்து மக்கள் மடிந்தனரே!” சொல்லும்போதே அம்பியின் குரல் நடுங்கியது!

சாணக்கியர் – அம்பி அலெக்ஸாண்டரை எதிர்ப்பது எவ்வளவு அவசியமாகும் என்று பல விதமாக அறிவுரை கூறியும் அம்பி அதை ஏற்கவில்லை. அவன் உடல் முழுவதும் பயம் ஒன்றே பரவி இருந்தது.

சற்று நேரத்தில் அம்பி வெகு சோகமாகக்  குடிலை விட்டு வெளியேறினான். ரதத்தில் புறப்பட்டுச் சென்றான்.

சட்டென்று ஒரு கரம் சந்திரகுப்தனின் தோளைப் பிடித்தது. அது சாணக்கியன் கரம். ஒரு பிராம்மணனின் கரத்திற்கு இவ்வளவு சக்தியா!

“ஐயா வணக்கம்” – சந்திரகுப்தன்.

“சந்திரகுப்தா, இங்கு என்ன ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்? இது அரச சமாசாரம்!”

சந்திரகுப்தனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

‘உங்களுக்கு என் பெயர்?”

“நீ இங்கு ஒளிந்த போதே நீ யார் என்பதை அறிந்தேன். நீ நந்த குலத்தில் பிறந்தவன். 20 வயதே ஆனாலும் மாவீரன். ஒரே நேரம் 20 எதிரிகளுடன் போரிட்டு வெல்லக்கூடியவன். இதை தக்ஷசீலப்  பல்கலைக்கழகத்துப் போர் பயிற்சி சாலையில் நீ செய்யும்போது நான் பார்த்திருக்கிறேன். போர்க்கலையில் பெரும் திறமை சாலி. மக்களாதித்துவத்தில் (leadership) மிகச் சிறந்தவன். அம்பி போல் இல்லாமல் – பயமற்றவன். கொள்கை உள்ளவன்…” என்று சிலாகித்துக்கொண்டே போனார்.

சந்திரகுப்தன் சிறிது வெட்கமும் பெரும் பிரமிப்பும் அடைந்தான்.

“என்னைப்பற்றி   இவ்வளவு விபரம்..எப்படி…”

“அரசியலில் இது ரொம்ப சகஜமப்பா! ஒற்று அறிவது அரசியலின் முக்கிய அங்கம். உன்னைப்போன்ற திறமைசாலிகளைக் கண்டெடுத்து அவர்களுக்குப் போதிப்பது தான் எமக்குத் தொழில். உன்னைச் சந்திக்க வேண்டும் என்று நானும் ஆவலுடன் இருந்தேன்”

சந்திரகுப்தனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல் இருந்தது.

“உண்மையைச் சொல்லப் போனால் பாடலிபுத்திரத்தில் உனது வீரத்தையும் அறிவையும் பார்த்து நான் தான் உன் தந்தையிடம் சொல்லி உன்னைத் தக்ஷசீலத்துக்குக் கல்வி கற்க அனுப்பினேன். இது உனக்கும் தெரியாது”

his2

‘இது தான் இறைவன் திருவுளமோ’ – வியந்தான் சந்திரகுப்தன்.

சாணக்கியர் சந்திரகுப்தனை இருக்கையில் அமரச் சொல்லிப் பின் தொடர்ந்தார்.

நாட்டின் பல பகுதிகளின் நிலைமை மற்றும் அரசாட்சிகளின் பலம் மற்றும் பலவீனம் – இவை அனைத்தையும் சுருக்கமாக சாணக்கியர் விவரித்தார்.

தக்ஷசீலாவின் ஒரு மூலையில் இருந்து கொண்டு பாடலிபுத்திரத்திலிருந்து மாசிடோனியா வரை எப்படி அரசியலை ஆராய்ந்து இருக்கிறார் இந்த மேதை!

சந்திரகுப்தனுக்கு ஒரு கேள்வி!

“அலெக்சாண்டர் – நந்தன் இந்த இருவரும் நமது நாட்டை உடைத்து விடுவரோ? இதற்கு என்ன செய்யலாம்?”

“நீ தான் அதைச் செய்ய வேண்டும்” – உறுதியுடன் – ஆணை இட்டார்.

சாணக்கியரின் அந்தத் தொனியில் சந்திரகுப்தனுக்கு மெய் சிலிர்த்தது.

“மன்னன் புருஷோத்தமனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“யாரே அந்த மாவீரரை அறியாதவர்கள்” – சந்திரகுப்தன்.

“அவனது நட்பு உனக்கு வேண்டும்; நீ ஒரு அரசியல் கூட்டணி அமைக்க வேண்டும். புருஷோத்தமனைச் சந்தித்து அலெக்ஸாண்டரைத் தடுக்கச் சொல்லவேண்டும். அவனுடன் ஒரு நட்பு ஒப்பந்தம் செய்து கொள். அலெக்சாண்டரையும் சந்தித்துப் பேசு.  அவனும் நந்தனும் இணைந்து விட்டால் இந்த நாட்டைக் காக்க இந்த சாணக்கியராலும் இயலாது!” சாணக்கியரின் முகம் லேசாகக் கருத்தது.

“அலெக்சாண்டரிடம் என்ன பேசுவது?” ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான் சந்திரகுப்தன்.

“நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறு. பாரசீகத்தில் கிடைத்த செல்வத்தை விட நூற்றுக்கணக்கான மடங்கு செல்வம் இருப்பதைக் கூறி அவனை உசுப்பேத்து!”

“இதில் நமக்கு என்ன லாபம்?”

“அதே சமயம் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து நந்தனின் பெரும் படை பலம் பற்றிப் பேசு. முக்கியமாக கங்கை நதி தாண்டினால் அங்கு இருக்கும் 6000 யானைப்படைகளைப் பற்றிப் பேசு.”

“அலெக்சாண்டர் நந்தனை வென்றால் நமக்கு ஒரே எதிரி அலெக்சாண்டர் மட்டும் தான். அலெக்சாண்டர் திரும்பிச் சென்றால் நமக்கு ஒரே எதிரி நந்தன் மட்டும் தான்!! நாம் இந்தப் பூசலில் வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும்”

என்ன ராஜதந்திரம்! சந்திரகுப்தன் பெரு வியப்பில் ஆழ்ந்தான்.

“சந்திரகுப்தா .. இன்னுமொன்று சொல்ல வேண்டும்.உன்னிடம் மட்டும் தான் இதைச் சொல்வேன். இது எனது சொந்த விஷயம்” சாணக்கியர் முகம் சிவந்தது. துக்கச் சாயல் முகத்தில் விரிந்தது.

“எனது அரசியல் புகழ் தன நந்தனையும் சென்றடைந்திருந்தது. அவன் என்ன தான் கொடுமையான வசூல் ராஜா வானாலும் அவன் நிர்வாகம் மெச்சத் தகுந்ததே! பல மந்திரிகள் – சில ராஜதந்திரிகள் ஆலோசனை கேட்டு நடப்பவன். என்னை ராஜதந்திர ஆலோசனையாளனாக நியமிக்க அழைத்தான்”

“அவன் ராஜ கொலு மண்டபத்திற்குச் சென்றேன்! அவனது வரிக்கொடுமையால் மக்கள் படும் இன்னலைச் சொன்னேன்.”

“நந்தன் அதை சற்றும் விரும்பவில்லை. பெருங்கோபத்தில் என்னை அவமானம் செய்தான்”

“நான் என் உயிரைப்பொருட்படுத்தாமல் சொன்னேன்”

“உன்னையும் உன் குலத்தையும் அடியோடு அழித்த பின்னரே எனது குடுமியை முடிப்பேன் – என்று சூளுரைத்தேன்”

“நந்தன் என்னை அங்கேயே கொல்ல விரும்பினான்.ஆனால் அவனது ஆலோசகர்கள் தடுத்ததால் நான் இன்று இங்கு இருக்கிறேன்”

சாணக்கியரின் விரிந்த குடுமி மேலும் பரந்து கோபம் கொண்ட முகம் நெருப்புப் போல் சிவந்தது.

“ஆசிரியரே! நான் வாக்களிக்கிறேன். தன நந்தனை வென்று உங்கள் பழி தீர்க்கிறேன்”- என்றான் சந்திரகுப்தன்.

 

அன்றிலிருந்து சந்திரகுப்தன் தினமும் சாணக்கியரைச் சந்தித்து – அரசியல் பாடம் கற்றான். இடையில் புருஷோத்தமனைச் சந்தித்துப் பேசினான். அம்பியின் துரோகம் பற்றியும் அலெக்சாண்டரை எதிர்ப்பதின் அவசியத்தையும் கூறினான்.

“புருஷோத்தமரே, எனது படை மகதத்தில் பரந்து கிடக்கிறது. நந்தனை வீழ்த்த பின்னாளில் உங்கள் துணை எனக்குத் தேவை. ஆனால் இன்று நீங்கள் அலெக்ஸாண்டரை நிறுத்த வேண்டும்”

புருஷோத்தமன் பெரு மகிழ்ச்சி கொண்டான். சந்திரகுப்தனின் பிரதாபங்களைப்  பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவனது துணிவையும் தீர்க்க தரிசனத்தையும் கண்டு இவன் நட்பு தனக்குத் தேவை என்று முடிவு செய்தான்.

மழைக்காலம் வந்தது. அலெக்ஸாண்டரின் படையும் வந்தது. எதிர்பார்த்தபடி அம்பி அலெக்ஸாண்டரிடம் சரணடைந்தான். பரிசு பல கொடுத்துப் பிழைத்தான். மாமன்னன் புருஷோத்தமனைப் பற்றி பல விவரங்களைக் கூறி அலெக்ஸாண்டருக்குப் பேருதவி செய்தான்.

புருஷோத்தமன் மாபெரும் யுத்தம் செய்தான். இந்த சண்டையில் அலெக்சாண்டர் வென்றதாக கிரேக்க இலக்கியம் கூறும். ஆனால் இது சற்றே சர்ச்சைக்கு இடம் பெற்ற விஷயம். போருக்குப் பின் புருஷோத்தமன் மன்னனாக ஆட்சி செய்தான். மற்றும் அவனது நாட்டுக்கு மேலும் பல பகுதிகள் (அலெக்சாண்டர் முன்பு வென்ற பகுதிகள் உட்பட) சேர்ந்தது. எனவே போரானது வெற்றி-தோல்வியல்லாமல் – ஒரு உடன்படிக்கையால் முடிந்தது என்றும் ஒரு பேச்சு உண்டு. மொத்தத்தில் அலெக்ஸாண்டர் படைக்கு புருஷோத்தமன் ஒரு பெரும் கலக்கம் கொடுத்தான்.

அலெக்சாண்டர் சன்டிரகொட்டோஸ் (Sandrokottos) –(நமது சந்திரகுப்தன் தான்) என்னும் மாவீரன் நந்தருக்கு எதிராக படை திரட்டி வருவதை அறிந்திருந்தான். அவனைப் பார்ப்பதில் அவனும் விருப்பம் கொண்டிருந்தான். இவன் உதவி பின்னாளில் தேவைப்படுமோ?

சந்திப்பு நிகழ்ந்தது.

முன்னம் கூறிய படி சந்திரகுப்தன் நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறி அவனை உசுப்பேத்தினான்.

மேலும் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து:

“தளபதிகளே! போரஸின் 30 யானைகள்  உங்களை எப்படித் தாக்கியது? கங்கை நதியைத் தாண்டினால் அங்கு 6000 யானைப்படைகள் உங்களை துவம்சம் செய்யத் தயாராகக் காத்திருக்கிறது. நன்று யோசித்து அலெக்சாண்டருக்கு  அறிவுரை கூறுங்கள்”

மாதங்கள் பல சென்றன.

அலெக்சாண்டர் மற்றொரு போரில் காயப்பட்டான். ஆனாலும் நந்தனின் செல்வம் அவனை ஈர்த்திருந்தது. ஆனால் தளபதிகள் முரண்டு பிடித்ததால் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்பினான்.

சந்திரகுப்தன் – சாணக்கியர் இருவரும் தக்ஷ்சீலத்தை விட்டு ரதத்தில் பாடலிபுத்திரத்தை சென்று அடைந்தனர். காட்சிகள் மாறின. பாடலிபுத்திரம் மாட மாளிகைகளுடனும் பரந்த சாலைகளுடனும் விளக்கின் ஒளியாலே அலங்கரிக்கப்பட்டு மின்னியது. நகரின் எந்த பகுதியிலும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து சென்றனர். மக்கள் தங்களுக்குள் – நந்த ராஜனைப் பற்றியும் அவனது வரி பற்றியும் பேசித் துயருற்றனர். வளர்ந்து வரும் தலைவன் சந்திரகுப்தன் அவர்களுக்கு ஒரு தெய்வ தூதனாகவே தோன்றினான்.

சந்திரகுப்தன்- சாணக்கியர் நேரடியாக நந்தனின் அரண்மனையை கத்தியில்லாமல் – ரத்தமில்லாமல் வெல்ல முயன்று தோற்றனர்.

அனைவரும் அறிந்த கதை தான் இது:

மகத நாட்டு எல்லையில் ஒரு சிறு கிராமம். அங்கு ஒரு குடும்பத்தோடு சந்திரகுப்தன் தங்கியிருந்தான். அவன் தான் சந்திரகுப்தன் என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த வீட்டில் சிறுவன் சூடான சப்பாத்தி சாப்பிடும் போது அவசரமாக நடுவில் கையை வைக்க –  சூடு தாங்காமல் அலறினான்.

அதற்கு அவன் அன்னை:

“அட.. ஏன் நடுவில் இருந்து சாப்பிடுகிறாய்? சந்திரகுப்தன் நந்தனின் அரசை நடுவில் தாக்கியது போல செய்கிறாயே!  விளிம்பில் இருந்து சாப்பிடு. சுகமாகச் சாப்பிடலாம்.”

சந்திரகுப்தனுக்கு இது வேத வாக்காகத் தெரிந்தது. படைகளைத் திரட்டினான்.

பல இளைஞர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.

சந்திரகுப்தன் ஓலை அனுப்ப – புருஷோத்தமனும் படைகளை அனுப்பி உதவி செய்தான். சாணக்கியர் தனது உயர்ந்த மாணாக்கர்களைச் சேர்த்துக் கொண்டார். தக்ஷசீலத்தின் தளபதி – சந்திரகுப்தரின் நண்பன். அவனும் இந்த சேனையில் சேர்ந்தான்.

‘மலை நாயகன்’ என்று அழைக்கப்பட்ட குறு நில மன்னன் – மிகவும் சக்தி வாய்ந்தவன்.  அவன் படையும் திறமை மிக்கது. சாணக்கியர் மலை நாயகனனுடன் சந்திரகுப்தனுக்காக ஒரு கூட்டணி அமைத்தார்.

சாணக்கியர்: “நாம் வென்றால் நந்த நாட்டில் ஒரு பகுதி உனக்கு”!

மலை நாயகன் சந்திரகுப்தரின் படையில் சேர்ந்தான்.

மகத எல்லையிலிருந்து மெல்ல உள்நோக்கிப் படைஎடுத்து – அங்கு மக்கள் ஆதரவும் பெற்றுப் பின் நந்தனை வென்றான் சந்திரகுப்தன்.

‘தன நந்தன்’ கைது செய்யப்பட்டு அரண்மனைக் கூடத்தில் கொண்டு வரப்பட்டான்.

அன்றைய நாளின் மிகப்பெரிய கேள்வி:

‘நந்தனை என்ன செய்யலாம்?’

சாணக்கியன் குடுமியை முடித்திருந்தான்.

முகத்தில் வெற்றிப் பெருமிதம்.

தன நந்தன்: “சாணக்கியரே! அன்றொரு நாள் நீங்கள் என் நிலையில் இருந்தீர்! உம்மை நான் உயிருடன் விட்டேன் என்பதை நினைவு கூறும்”

சந்திரகுப்தன் சாணக்கியரின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

“உண்மை தான் தன நந்தரே! நீர் சாவது எங்களுக்கு முக்கியமல்ல… நாடு சாவாமல் இருப்பதே முக்கியம். தன நந்தா! நீ உன்னால் சுமக்க முடிந்த தனங்களை மட்டும் எடுத்துக் கொள். எங்கள் கண் காணாத இடத்துக்குச் சென்று விடு. ஆனால் எங்கள் கண்ணில் பட்டால்.. அதன் பிறகு உன் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை”

தன நந்தன் சரித்திரத்திலிருந்து மறைந்தான்.

பாடலிபுத்திரம் புதுப் பொலிவு பெற்றது.

சந்திரகுப்தன் மகதத்தின் அரசனானான்.

மௌரியர் ராஜ்யம் மலர்ந்தது.

மக்கள் விரும்பிய மன்னன்.

சாணக்கியர் போன்ற மகா மந்திரி.

பொற்காலம் ஒன்று பிறந்தது.

his3

இத்துடன் இந்தக் கதையை முடித்திருக்கலாம். ஆனால் சந்திரகுப்தன்- சாணக்கியர் கூட்டணி இன்னும் பல வெற்றிகளை அடைந்தது.

அரண்மனை ஆலோசனைக்கூடம்:

சந்திரகுப்தன்: “ஐயா! மலை நாயகன் மறைவு பற்றி”

சாணக்கியர்: “அவன் தான் அகால மரணம் அடைந்தானே! நாட்டின் எல்லாப் பகுதிகளும் உனக்கே!” – அவரது குரலில் சோகத்தை விட ஒரு சந்தோஷமே தென்பட்டது.

சந்திரகுப்தன்: “அவன் விஷமிடப்பட்டதாக….ஒரு வதந்தி…”

சாணக்கியர்: “அரசியலில் சில விஷயங்கள் நடக்கும்… அது விஷமாகவும் இருக்கும். விஷமமாகவும் இருக்கும். அது நமக்கு விசேஷமாக உதவினால் அதை ஆராயக்கூடாது”

சந்திரகுப்தனுக்குப் புரிந்துவிட்டது…

“அப்ப புருஷோத்தமன்?”

“புருஷோத்தமன் நமக்குத் தேவை. அவனால் தான் மேற்கு நாட்டைக் காக்க முடியும். மேலும் கிரேக்கர்கள் வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியம்”

“ஆஹா… நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன கவலை”

சாணக்கியர் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினார்.

கவலை அவர் நெற்றிச் சுருக்கத்தில் நெளிந்தது.

சந்திரகுப்தன்: “இன்னும் என்ன யோசனை தலைவா?”

சாணக்கியர்: “சந்திரகுப்தா .. நமது வெற்றி முழுமையாகவில்லை… புரிந்தததா?”

சந்திரகுப்தன்: ”ஆமாம் … நமது திட்டத்தின் படி நந்தனை வென்றோம். ஆனால் … அலெக்சாண்டர் போன பிறகு மாசிடோனியாவின் செலுகஸ் நிகேடர் (Seleucus Nicator)  … மேற்கில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க உள்ளான். அதை…அவனை.. முறியடிக்க வேண்டும்”

“சரியாகச் சொன்னாய்”his4

வெகு விரைவில் காரியங்கள் நடந்தேறின.

படையெடுப்பு நடந்ததது. செலுகஸ் நிகேடர் தோல்வி அடைந்தான். உடன்படிக்கைப் படி இளவரசியான தன் மகள் ஹெலெனா (helena) வை சந்திரகுப்தனுக்கு மணம் முடித்தான்.

his5

மேலும் அவன் வசமிருந்த- காந்தாரம், காம்போஜம், காந்தகார், பலோசிஸ்தான் பகுதிகள் சந்திரகுப்தன் அரசுடன் இணைந்தது. பதிலுக்கு 500 யானைகளைப் பெற்றான்.

his6

‘இந்தியாவின் காவலன்’ என்ற இந்தக் குறுங்கதை  நிறைவு பெறுகிறது.

(சாண்டில்யனும் – கல்கியும் மன்னித்து அருள்வார்களாக)

சரி….எந்த கதை நாயகனுக்கும் – அவனது வெற்றிக்காலம் முடிந்த பின் கஷ்டங்கள் வரும். மனிதனாகப் பிறந்தாலே இது சகஜம் தானே!

பரசுராமருக்கு ராமனைச் சந்திக்கும் வரை தான் வெற்றி.

ராமன் பட்டாபிஷேகம் முடிந்த பின் அடைந்ததது சோகங்களே.

கிருஷ்ணன் தன் மகன்கள் அனைவரும் அடித்துக்கொண்டு சாவதைக் கண்டு நொந்தான்.

பாண்டவர்கள் மகாபாரதம் முடிந்த பின் சந்தோஷமென்பதே அறியவில்லை.

அதே போல் நம் நாயகன் சந்திரகுப்தன் கதையிலும் சோகங்கள் … அதை விட்டு விடுவோம்.

இன்னும் சில வருடங்கள் கழித்து –இந்த வம்சத்தில்- உலகம் போற்றும் மாமன்னன் – ‘மகா அசோகன்’ தோன்றுவான்.

சரித்திரம் இன்னும் பேசும்….

***சிறு குறிப்பு:

‘இந்தியாவின் காவலன்’ என்ற சரித்திரக் கதையா?.. மருந்துக்கு ஒரு பெண் பாத்திரமே இல்லை என்ற குற்றம் சொல்பவர்களே! அமரப்பள்ளி என்ற அழகியைப் பற்றி கோடி காட்டியுள்ளேன்! நீங்கள் ஆணையிட்டால் அமரப்பள்ளி என்ற சரித்திரக்குறுங்கதை எழுதத் தயார். Circulation worry கொண்ட குவிகம் ஆசிரியரும் மகிழ்வார் !

 

 

 

 

 

 

 

 

 

 

குட்டீஸ் லூட்டீஸ் : கோணங்கள் (சிவமால்.)

 

‘சம்மர் வந்தாச்சு… வாங்க.. நாம நம்ம ஏ.பி.ஸி. ஸ்டோர்ஸ¤க்கு
போய் ஒரு ஏர் கண்டிஷனர் வாங்கிடுவோம்..’ என்ற டி.வி.
விளம்பரத்தை நானும், என் மனைவியும், என் பத்து வயதுப்
பெண்ணும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘ஓ கே .. புறப்படு ரமா.. ஸம்மர் சூடு தாங்கலை. நாமும்
இப்பவே ஏ.பி.ஸி. ஸ்டோர்ஸ¤க்குப் போய் ஓர் ஏர் கண்டிஷனர்
வாங்கிடுவோம்’ என்றேன் மனைவியிடம்.

‘நோ… வேண்டாம்பா… இந்த ஆன்டி நம்மள ஏமாத்தறாங்க..
இதே ஆன்டிதான் போன வருஷமும் இதையே சொன்னாங்க..
அந்த ஏர் கண்டிஷனர் ஒரு வருஷம் கூட வரவில்லை போலிருக்கு.
அதுதான் இந்த வருடமும் வாங்கக் கிளம்பிட்டாங்க. இவ்வளவு
காசைக் கொட்டி வாங்கிட்டு ஒரு வருஷம் கூட வரலைன்னா
எப்படீப்பா..? அதனாலே இந்த ஸ்டோர்ஸ் வேண்டாம்பா.. வேறே
நம்பகமா ஒரு கடைக்குப் போவோம்’ என்றாள் என் பெண்.

திகைத்து நின்றோம் நானும், என் மனைவியும். அட,
இப்படியும் ஒரு கோணத்தில் விளம்பரங்களைப் பார்க்கலாமா..!.

 

கடல் புறா -நாடக விமர்சனம்

கடல் புறா [Kadal Pura]

குமுதத்தில் கிட்டத்தட்ட மூன்று வருடம் தொடர் கதையாக வந்து மாபெரும் வெற்றி  பெற்ற சாண்டில்யனின் காவியப் புறா அது. இளைய பல்லவன் என்ற கதாநாயகனை எம்.ஜி.ஆர். பாணியில் ஏன் அதற்கும் மேலாகப் படைத்திருப்பார் சாண்டில்யன்.

அவனுடைய புத்திசாலித்தனம், எந்த சூழ் நிலையிலும் தன் அறிவு மீது அபார நம்பிக்கை வைக்கும் திறமை,  பெண்களைக் கவரும் கவர்ச்சி, வீரம், துணிச்சல், விவேகம் எல்லாம் கலந்த கலவை அவன்.

கருணாகர பல்லவன் என்ற இளைய பல்லவன் உண்மையில் சரித்திரத்தில் சோழன் குலோத்துங்கனுக்கு சேனாதிபதியாக இருந்தவன். பிற்காலத்தில் கலிங்கத்துடன் போரிட்டு கலிங்கத்தையே எரித்தவன் என்று கலிங்கப்பரணி என்ற காவியத்தைப் படைத்த  ஜெயங்கொண்டார்  என்ற புலவர் கூறுகிறார்.

குலோத்துங்கன் இளவரசனாக இருந்த போது  அதாவது – கலிங்க யுத்தத்திற்கு முன் – ஸ்ரீவிஜயம் – கடாரம் என்ற இரு நாடுகளுக்கிடையே இருந்த அரசுரிமைப் போர்களில் கலந்து கொண்டு தீர்த்து  வைத்தான் என்பது வரலாறு. குலோத்துங்கன் சீனாவிற்கும் சோழப் பிரதிநிதியாகச் சென்றான் என்றும் வரலாறு கூறுகிறது.

இதையும் கருணாகர பல்லவன் என்ற நம் இளைய பல்லவனே செய்து முடித்தான் என்பது  தான் சாண்டில்யனின் கற்பனை.

சரி, இனி நாடகத்திற்கு வருவோம்.

கதையைச் சொல்வதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறார்கள். செட்டிங் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உடைகள் பள பளவென்று நாம் கற்பனை செய்து வைத்திருந்த அரச காலத்தை அப்படியே  காட்டுகிறது. கடல் போரும் அதற்கு முக்கியத் தேவையான கடல்புறா என்ற கப்பலும் தான் கதையின் நங்கூரங்கள். அவற்றைத் திரையில் காட்டுவது கடினம் தான் என்றாலும்  அதில் அவர்கள் அதிகம் மெனக்கிடவில்லை என்பது சுத்தமாகத் தெரிந்தது.

கதையை மட்டும் எடுத்துக் கொண்டு வசனத்தைத் தங்கள் போக்கில் அந்தக் காலத்து ராஜா – ராணி சினிமா  பாணியில் எழுதியிருப்பது கதையின் உயிரோட்டத்தைப் பாதிக்கிறது.

சாண்டில்யனின் கதையில் சோகம் என்பது இலேசாக இழையோடியிருக்கும் அவ்வளவு தான். ஆனால் இதில் எல்லா பாத்திரங்களும் சோகத்தைப் பிழிந்து சிவாஜி, பத்மினி போன்று  அழுது நடிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. அதுவும் கொடூரமாவன் என்று பெயர் பெற்ற  அகூதாவை ஒரு குணசித்திர நடிகர் போல் குலுங்கிக் குலுங்கி ஆழ வைத்திருப்பது தாங்க முடியவில்லை சாமி.

கதாநாயகிகள் காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகி இருவரும் கவர்ச்சிகரமாக உடையணிந்து வருகிறார்கள். மஞ்சளழகியாக நடித்தவரின் குரல் முதல் வரிசைக்கே கேட்டிருக்குமோ என்பது சந்தேகம். ஆனால் அபாரமாக ஆடுகிறார்  அதுவும் தலையில் விளக்கை வைத்துக் கொண்டு.

கதையைப் படித்தவர்களுக்கு அதன் போக்கு புரியும் . மற்றவர்களுக்கு ரொம்பவே சிரமம் தான்.

தேவையில்லாமல் பாத்திரங்கள் வள வள வென்று பேசுகிறார்கள். மேடைக்கதையை இன்னும் கச்சிதமாகச் சொல்லியிருக்க வேண்டும். கதையின் சில பகுதிகளை விட்டால் தவறு ஒன்றும் இல்லை. ( உதாரணம்: பாலிக் குள்ளன்). பலவர்மனை, சேந்தனை முழுக் காமெடியனாகப் போட்டிருப்பதில் நயம் இல்லை.

கலிங்க மன்னர்கள், அநபாயன் ,ஜெயவர்மன் ,அமீர், கண்டியத்தேவன் எல்லாரும் நன்றாக நடித்தார்கள்.

இளையபல்லவனாக நடித்தவர் நன்றாக நிற்கிறார். ஆனால் அந்தப் பாத்திரத்துக்கு உயிர் தரவில்லை. ஒரு ஜோஷ் இல்லை.

நாலேகால் மணி நேரம் நடக்கிறது. திரை மாறும் நேரத்தைக் குறைத்திருந்தாலே நாடகம் ஒரு மணி நேரம் குறைந்திருக்கும்.

சிறப்பான மேடைக் கதையும், இன்னும் நிறைய பணபலமும் இருந்திருந்தால் இந்த நாடகம் பெரும் வெற்றி அடைய வாய்ப்பு இருந்திருக்கும்.

( இரண்டு காட்சிகள் என்று சொல்லி கடைசி நாளில் இரண்டையும்  ஒன்றாக மாற்றி அப்படியும் பாதி அரங்கு தான் நிறைந்தது என்றால் என்ன வென்று சொல்ல?)

சில்லறையில் ( மொத்தத்தில் அல்ல) எனக்குப் பிடித்திருந்தது. ஐம்பது மார்க் தருவேன்.

இலக்கியவாசலின் பன்னிரண்டாவது நிகழ்வு

இலக்கியவாசலின் பன்னிரண்டாவது  நிகழ்வு  வாசுகி கண்ணப்பன் அரங்கத்தில் 19 மார்ச் மாலையில் நடைபெற்றது.


தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு சுந்தரராஜன் வந்திருந்த முக்கிய விருந்தினர் திரு ஞாநி அவர்களையும் மற்றும் இலக்கிய
ஆர்வலர்களையும் வரவேற்றார்.

 

திருமதி உமா பாலு அவர்கள் அவருக்கே உரிய முத்திரைக் கவிதைகளை எதார்த்தமாக வழங்கினார். கவிதைகள் சிறியதாக இருந்தாலும் காரமாக இருந்தது.

 

திரு ஈஸ்வர் தனது பரிசுபெற்ற ‘சிகாகோ மாம்பழம்’ என்ற கதையைப் படித்த விதம் மிக அருமையாக இருந்தது. பாத்திரங்கள் பேசுவதைப் போலவே அவர் படித்தது கேட்பவர் கருத்தை மிகவும் கவர்ந்தது.

 

 

சாகித்ய அகாதமியின் மொழியாக்க 2015 ஆவது ஆண்டுக்கானவிருது பெறும் திருமதி கௌரி கிருபானந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  குவிகம் இலக்கியவாசலும் அவர்களைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டது.

வோல்கா எழுதிய”விமுக்தா”  என்ற கதைத் தொகுப்பின்  ‘மீட்சி’ என்ற நூலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.      திருமதி கௌரி கிருபானந்தன்  நம்  மேடையில் அந்தக் கதை எழுதிய  அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அதற்குப்  பிறகு , “பரிக்ஷா”  நாடக அமைப்பைக் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக நடத்தி நாடகக் கலைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் .  திரு ஞாநி அவர்கள் தமிழ் நாடகத்தின் வரலாற்றை அவருக்கே உரிய பாணியில் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பட்டி தொட்டியிலும் நடைபெற்ற நாடகங்கள்  எப்படிப் படிப்படியாகத் தேய்ந்து இன்று சென்னையில் மட்டும் எப்பொழுதாவது நடக்கும்  அபூர்வப் பொருளாக மாறிவிட்டது என்பதை விளக்கினார்.

ரசிகர்களுக்கும் நாடகக் குழுவிற்கும் இடையே பாலமாக இருக்கவேண்டிய சபா செயலர்கள்  இடைத் தரகர்களாக மாறி இந்த அழகான கலையை அழித்தது ஒரு காரணம். பள்ளிகளில் ஒரு காலத்தில் கோலோச்சிய  நாடக வடிவத்தை சுத்தமாக மறந்தது இந்தக் கலையின் வீழ்ச்சிக்கு இன்னொரு  காரணம். தொலைக்காட்சி தொடர்  சீரியல்களை நாடகம் என்று ஒப்புக் கொள்ள மறுத்த ஞாநி அவர்கள் , இந்த மீடியத்தின் அசுர வளர்ச்சி நாடக மன்றங்களின்  வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் என்று விளக்கினார்.  மேலும்  அரசாங்கமும்  குறைந்த கட்டணத்தில்  நாடக அரங்கங்களை அமைத்துக் கொடுத்திருந்தால் இந்தக் கலை நன்றாக வளர்ந்திருக்கும் என்றும் ஆதங்கத்துடன் கூறினார்.

ஞாநி அவர்களுடைய உரைக்குப் பிறகு இலக்கிய வாசலின் சிறப்பு அம்சமான கலந்துரையாடல் நடைபெற்றது. நேற்றைய இன்றைய நாளைய நாடகங்களைப் பற்றி மக்களின் கேள்விகளுக்கு ஞாநி விளக்கமாக பதில் அளித்தார்.


கிருபானந்தன் , விழாத்  தலைவர் ஞாநி  அவர்களுக்கும், வந்திருந்த விருந்தினர்களுக்கும் மற்றும் விழா நடைபெற  உதவிய செந்தில்நாதன் அவர்களுக்கும் , அரங்கம் தந்த வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் நன்றி கூற கூட்டம்  இனிதே முடிந்தது.

 

 

பரீக்ஷா – நாடகக் குழு – ஞாநி

பரீக்‌ஷா: 1978 முதல் இன்று வரை தொடர்ந்து இயங்கி வரும் முன்னோடி நவீன நாடகக்குழு.

விஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பிரெக்ட், பிண்ட்டர்,
பிரீஸ்ட்லி ஆகியோரின் நாடகங்களை தமிழுக்கேற்ற விதத்திலும், தமிழ் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ந..முத்துசாமி, ஜெயந்தன், பிரபஞ்சன், அறந்தை நாராயணன், அம்பை, எஸ்.எம்.ஏ.ராம், சுந்தர ராமசாமி, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் படைப்புகளையும் சென்னை நாடக ரசிகர்களுக்கு
வழங்கி வந்துள்ளது.

பாதல் சர்க்கார்: இந்தியாவில் வீதி நாடக வடிவத்தின் முன்னோடி. வங்கத்தில் மூன்றாவது அரங்கம் என்ற புதிய வகையை அறிமுகம் செய்து மனித விழிப்புணர்வுக்காகவே நாடகம் என்ற கோட்பாட்டை பரவலாக்கிய பாதல் சர்க்காரின் படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளில் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன.

தேடுங்கள்: பாதல் சர்க்காரின் மிச்சில்தான் தமிழில்
தேடுங்கள்.ஊர்வலங்களின் கால்களுக்குக் கீழே நசுங்கிக் கொல்லப்படும் இளைஞனும், காணாமற் போய்விட்ட கிழவனும் நிஜமான வீட்டுக்கு வழி சொல்லும் ஊர்வலத்தை தேடுகிறார்கள். அன்பை முன்னிறுத்தும் நிஜமான மனிதர்களின் ஊர்வலம் எப்போது வரும் ? கோரஸ் வடிவில் நம் வாழ்க்கையை நமக்கே படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி இந்த நாடகம். பரீக்‌ஷாவின் தயாரிப்பில் இது முற்றிலும் இன்றைய தமிழ் சூழலுக்கேற்றதாக மாற்றப்பட்டிருக்கிறது.

சென்னை நகரின் முதல் நவீன தீவிர தொழில்முறையல்லாத தமிழ் நாடகக் குழுவான பரீக்‌ஷா 1978-ல் தொடங்கியபோது, வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பிடையே இருக்கும் போலி நம்பிக்கைகளைக் களைவதே தன் நோக்கம் என்று அறிவித்தது. கடந்த 37 வருடங்களில் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களான இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை, ஜெயந்தன், பிரபஞ்சன், திலீப் குமார், சுஜாதா, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் நாடகங்களையும், பிற மொழிப் படைப்பாளிகளான பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், மகாஸ்வேத தேவி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர், ஜே.பி,பிரீஸ்ட்லீ ஆகியோரின் நாடகங்களின் தமிழ் வடிவங்களையும் பரீக்‌ஷா நிகழ்த்தியுள்ளது.

வாரந்தோறும் நவீன நாடகம் என்ற முயற்சியை 1992-93ல் ஓராண்டு நடத்தியது. நாடக விழாக்களில் பங்கேற்பு தவிர, இதர புரவலர் ஸ்தாபன ஆதரவு, மான்ய உதவிகள் இல்லாமல், பார்வையாளரிடம் திரட்டும் பணத்தைக் கொண்டு மட்டுமே பரீக்‌ஷா நாடகங்களை நிகழ்த்தி வருகிறார் இதன் நிறுவனரான எழுத்தாளர் ஞாநி.

ஜெர்மன் நாடகாசிரியர் பிரெக்ட்டின் காகேசியன் சாக் சர்க்கிள் நாடகத்தை தமிழுக்கேற்ற விதத்தில் மாற்றியமைத்து ஞாநி எழுதி இயக்கியிருக்கும் நாடகம்‘வட்டம்’. துரைகள் காலம் முதல் புரட்சி காலம் வரையிலான கதையை 20-க்கும் மேற்பட்ட நடிகர்களுடன் சொல்கிறது இந்த நாடகம். ஒரு குழந்தை யாருக்கு சொந்தம்…பெற்ற அன்னை துரையம்மாவுக்கா, வளர்த்த அன்னை கன்னியம்மாவுக்கா என்பதை திருடியாக இருந்து நீதிபதியாக மாறிய முனியம்மா எப்படி தீர்மானிக்கிறாள் என்பதே கதை. பெண்களுக்கான சம உரிமை, நிலத்தின் மீதான உழவரின் உரிமை, ராணுவம் முதலிய ஆட்சி இயந்திரங்களின் பங்கு எல்லாவற்றையும் பற்றி சமூக அரசியல் தொனியில் எள்ளலுடன் சொல்கிறது ‘வட்டம்’.

எட்டுக் கதைகளின் தொகுப்பு வட்டம்!

தனி நபர் நடிப்பு வடிவத்தில் மேல் சாதி விதவை, ஓர்பால் உறவாளர், மகளை இழந்த தாய், மனைவியை தொலைத்த கணவன், பெண்சீண்டல் எதிர்ப்புப் போராளி, குழந்தையைக் கொன்ற இளைஞன், கணவனைக் கொன்ற இளைஞி, காதலைத் தேடும் இளைஞன், உள்ளேயும் வெளியேயும் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர் என விதவிதமான எட்டு கதைகளைப் பேசுகிறது வட்டம்.

சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைக்கு, நாடகாசிரியர் அ.ராமசாமி அளித்துள்ள நாடக வடிவம்தான் “பல்லக்குத் தூக்கிகள்.”

இது ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோர் பற்றிய நாடகம்.

நாடக நிகழ்வு 20 நிமிடங்கள்.

தனி நபர் நடிப்பு வடிவத்தில் உள்ள பல சிறு நாடகங்களின் தொகுப்பு நாடகம்தான் “நாங்கள்”.

 

‘நான் நீ, நாம்’ என்ற சூழலைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள இந்த நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரமும் தன் கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு கதையும் நமக்குப் பரிச்சயமானதுதான் ஆனால் அதிர்ச்சியானது. நம் குடும்பம் சார்ந்த கதைகள் .இந்தியச் சூழலில் புனிதமாகவும் நம்மை தொடர்ந்து வாழவைக்கும் வடிவமாகவும் கருதப்படும் குடும்ப அமைப்பின், சமூக அமைப்பின் அழகும் அழுக்கும் வெளிப்படும் கதைகள்.

 

இதில் இருக்கும் எட்டு கதைகளில், ஆறு கதைகளை ஞாநியும், இரண்டை ’மா’வும் எழுதியுள்ளனர்.

“சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு வேலைகளிலிருந்தாலும், நாடகம் மீது காதலும் சமூகம் மீது அக்கறையும் கொண்டிருப்பதே பரீக்‌ஷாவில் இணைவோரை ஒன்றுபடுத்துகிறது” என்று ஞாநி பெருமிதப்படுகிறார்.

 

 

உங்கள் படைப்புகளை வெளியிடலாமே !

 ftp
இலவச தமிழ் மின்புத்தகங்களை ( கிண்டில், ஆண்ட்ராய்ட்,   ஐ ஓ எஸ், மற்றும் பி டி ஃப்  வடிவுகளில் வெளியிட ஒரு நிறுவனம் வந்துள்ளது.

அது தான் FREE TAMIL EBOOKS  (FTE) என்ற அமைப்பு.

கிரியேட்டிவ் காமன்ஸ்  என்ற நிறுவனத்துடன் இணைந்து கிட்டத்தட்ட 200 மின் புதகங்களை ஆரம்பித்த முதல் இரண்டு ஆண்டிலேயே வெளியிட்டு மூன்றாம்  ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

தமிழில் நிறைய  மின்புத்தகங்கள் (EBOOKS ) வருவதற்கு  உதவுங்கள்.

குவிகமும் FTE உடன் இணைந்து தமிழ் மின்  புத்தகங்கள்  வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

அவர்கள் திட்டத்தைப் பற்றி அவர்களே கூறுகிறார்கள். படியுங்கள் :

 

மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:

மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.

ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:

ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.

தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:

தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.

சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.

எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.

சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?

சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.

நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.

எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?

கூடாது.

ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.

அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.

அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.

வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.

பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு
அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்

வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.

FreeTamilEbooks.com

இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.

PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT

இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவிறக்கம் (download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.

இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை
எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.

அவ்வளவுதான்!

மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:

  1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்
  2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்
  3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்

விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?

யாருமில்லை.

இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.

மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.

இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?

ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை.

ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.

அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.

தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

 

 

தவிர்க்க வேண்டியவைகள் யாவை?

இனம்பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?

நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?

படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –

மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற
பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.

  1. நூலின் பெயர்
  2. நூல் அறிமுக உரை
  3. நூல் ஆசிரியர் அறிமுக உரை
  4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்
  5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)

இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.

——————————————————————————————————–

நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.

மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –

தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs

இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook

எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooks

FreeTamilEbooks மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்

நமது FreeTamilEbooks.com திட்டம் மின்னூல்கள் படிப்பதையே பெரிதும் ஆதரிக்கிறது. ஆனால் சிலர் அச்சு வடிவில் படிக்க நூல்களை அச்சிடுவதை அறிகிறோம்.

மேலும் சில எழுத்தாளர்கள் தாம் வெளியிட்ட மின்னூல்களின் அச்சுப் பிரதி தம்மிடம் இருந்தால் மிகவும் மகிழ்வர்.

இது போன்ற தேவைகளுக்காக, ஒரு பிரதி அல்லது ஒரு சில பிரதிகள் மட்டும் அச்சிட்டுக் கொள்ளும் வகையான Print On Demand சேவையை, மிகக் குறைந்த விலையில் தர, காரைக்குடியைச் சேர்ந்த நண்பர் லெனின் குருசாமிமுன்வந்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான விலை விவரம்

பக்கத்திற்கு 45 பைசா (1 பக்கதிற்கு 2 பக்கங்கள், 2 பக்கங்களுக்கு 4 பக்கங்கள்)
நூல் கட்டுமானத்திற்கு ரூ.15
அட்டைபடம் வண்ணத்தில் அச்சு எடுக்க விரும்பினால் ரூ.7

உதாரணத்திற்கு 6 inch PDF ல் 255 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்திற்கு,

255/4 = 63.5 X 0.45 X 2 = 57 + 15 = ரூ.72

பக்கத்தின் தடிமன் 70GSM
தபால் செலவு தனி.

இந்த விலை FreeTamilEbooks.com திட்டத்தில் உள்ள மின்னூல்களுக்கு மட்டுமே.

மேலும், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் ‘NonCommercial’ என்ற வார்த்தை இருந்தால் அந்த நூலை, அச்சிட்டு விற்பனை செய்ய இயலாது. எனவே “NonCommercial” இல்லாத நூல்களை மட்டும் அச்சு நூலாக வாங்கலாம். இல்லையெனில், நூல் ஆசிரியருக்கு தனியே மின்னஞ்சல் எழுதி, அவரிடம் அனுமதி வாங்கி, பின் அச்சிட்டு வாங்கலாம்.

தொடர்பு விவரங்கள்

திரு. லெனின் குருசாமி
sun_creations@ymail.com
+91 95780 78500
57/1, கல்லூரி சந்திப்புச் சாலை,
அழகப்பாபுரம்,
காரைக்குடி – 630 003

நன்றி !

நகைச்சுவை மன்னர் – தேவன்

தேவன்’ நினைவு நாள்: மே 5, 2010

துப்பறியும் சாம்பு என்ற காலத்தால் அழியாத பாத்திரத்தைப் படைத்த அமரர் தேவன் அவர்களைப் பற்றி பசுபதிவுகள் ( http://s-pasupathy.blogspot.in/) என்ற வலைப்பூவில் விளக்கமாக எழுதியுள்ளார் .

திருவிடை மருதூரில் பிறந்த மகாதேவன் என்ற தேவன் ஆனந்தவிகடனின் ஆசிரியராக இருந்தவர்.

ஆங்கிலத்தில்   பி ஜி ஓட்ஹவுஸ்  போல் நகைச்சுவைத்  ததும்ப எழுதியவர்.

சாம்புவைப் பற்றி திரு பசுபதி அவர்கள் எழுதிய கவிதைகள் :

காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு
வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் — ஆகமது
நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான்
சாகா வரம்பெற்ற சாம்பு

துருவும் கூர்மை விழிமுகம் –   துப்பறி தொழிலில் தனிரகம்;
இரும்புக் கரங்கள் பேசினால் – எதிரி மீண்டும் எழுந்திரான்
தெருச்சீ ராளம் புசிப்பான்  – திருவாய் மொழியும் ரசிப்பான்
திருடும் நபர்க்குச் சத்துரு – தேவன் படைத்த சந்துரு!

தேவனின் பல கதை, கட்டுரைத் தொடர்களுக்குச் சித்திரங்கள் வரைந்தவர் ராஜு. ‘துப்பறியும் சாம்புவிற்கு’ உயிரூட்டியவர் அவரே.

பிறகு, விகடனில், தேவனின் மறைவுக்குப் பின், ‘சாம்பு’ ஒரு சித்திரத் தொடராக வந்தபோது ‘கோபுலு’ படங்கள் வரைந்தார்.

கோபுலுவின் சித்திரங்கள் குறிப்பாக சாம்புவின் மூக்கு அந்தக் கதைகளுக்கு மெருகேற்றியது என்பது உண்மை !
சாம்புவை வைத்து முதலில் ஒன்பதே கதைகளை ‘தேவன்’ எழுதினார். பின்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் ஒன்பது கதைகளை எழுதினார். ஆனால், பொதுமக்கள் சாம்புவை அதிகமாக எதிர்பார்க்கவே திரும்பவும் இருமுறை சாம்பு கதைகளைத் தொடர்ந்தார். மொத்தம் 50 சாம்பு கதைகள் வெளிவந்துள்ளன. சாம்பு கதைகள் எழுது முன்பு “கோபாலன் கவனிக்கிறார்’ என்ற ஒரு சிறு துப்பறியும் தொடரையும் எழுதினார்”

சாம்பு’ என்.எஸ். நடராஜன்

திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் கிளப் மிகச் சிறந்த முறையில்  நாடகங்கள் நடத்திப் பேரும், புகழும் அடைந்ததற்கு முக்கிய காரணம் திரு.தேவன் எழுதிக் கொடுத்த ‘மைதிலி’, ‘கோமதியின் காதலன்’, மிஸ் ஜானகி’, ‘துப்பறியும் சாம்பு’, ‘கல்யாணி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘பார்வதியின் சங்கல்பம்’ நாடகங்கள் தாம். இந்த நாடகங்கள் சுமார் 500 தடவைகள் நடிக்கப்பட்டு ரசிகர்களால்  வெகுவாகப் பாராட்டப்பட்டவை.

  அவர் எழுதிய உன்னதப் படைப்பான ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதையை நாடகமாக்க முடியுமா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டு அவர் என்னிடம் யோசனை கேட்டார். நாங்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அதை நாடகமாக்க முடியும் என்று முடிவெடுத்தோம். ஆனால் அவர் எனக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, ‘சாம்பு’ பாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டுமென்பதுதான் . அதற்கு முதலில் நான் சம்மதிக்கவில்லை. காரணம், அந்த நாடகத்தை நல்ல முறையில் அரங்கேற்ற வேண்டுமானால், பயிற்சியாளன் என்ற முறையில் நான் அவர் எழுத்தோவியத்திற்கு உயிர் ஊட்டவேண்டும். அப்படியிருக்க, நானே பயிற்சியாளனாகவும், கதாநாயகனாகவும் பணியாற்ற முடியுமா என்று திகைத்தேன் ஆனால் அவர் என்னை ஊக்குவித்து அவர் விருப்பத்தைச் சாதித்துக் கொண்டார். எனக்குச் ‘சாம்பு’ என்ற பட்டமும் பெறக் காரணமாக இருந்து, நான் ‘சாம்பு’ நடராஜன் ஆனேன்.

சாம்பு கதை சாம்பிள் ஒன்று படிக்க வேண்டுமா? பசுபதியார் உதவிக்கு வருகிறார்.

 

தேவன் எழுதிய மற்றொரு சிறுவர் கதை !  ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான் என்று துவங்குவார்.

ராஜ்மவுலியின்  ‘நான் ஈ’ க்கு முன்னோடி. 

ஒரே ஒரு சின்ன ஈ ஒரு பெரிய ஓட்டல் மேஜை மேலே இப்டி சுத்தி சுத்தி பறந்துட்டு, கடைசியிலே ஒரு இடத்தைப் பொறுக்கி உட்கார்ந்துது. அங்கேருந்து நாலாப் புறமும் கண்ணோட்டம் விட்ட போது ஒரு மைசூர் பாக் விள்ளல் திருஷ்டிலே விழுந்தது. அதை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறப்போ, அங்கே காபி சாப்பிட்டிண்டிருந்தான் ஒருவன். அவன் கையிலே வைச்சிருந்த பேப்பரைச் சுருட்டி, ‘டப்’னு ஒரு அடி போட்டானே பார்க்கலாம், குறிபார்த்து! சின்ன ஈ முதுகிலே ‘பளாச்’சுனு விழுந்தது அது. ஒரு கலங்கு கலங்கி, இறக்கையை உதறிண்டு, காலை நீட்டி சரி பண்ணிண்டு சின்ன ஈ விட்டது சவாரி! மேஜைக்குக் கீழே ஓடி, மேல் மூச்சு வாங்க, தாத்தா ஈ பக்கமா நின்னு, “தாத்தா, தாத்தா! இன்னிக்கு நான் ஒரு கண்டத்திலே தப்பிச்சேன்!” அப்படின்னுது.

தாத்தா ஈ எல்லாத்தையும் கவனிச்சுண்டுதானே இருந்தது? சும்மா சிரிச்சுட்டு, “போடா! முட்டாள் பையா! ஒரு கண்டமும் இல்லை! அவன் உன்னை அடிச்சது நேத்து நியூஸ் பேப்பராலே! நாலே நாலு காயிதம்தானேடா அதிலே! உம்! என்ன காயம் பட்டுடப் போறது! முன் காலத்திலே எப்படி இருந்தது பேப்பர்னு கேளு, சொல்றேன்! 16, 24 பக்கம். அதனாலே ஒரு அடி வாங்கியிருந்தயானால்…” என்று ஆரம்பிச்சுது.

அதுக்குள்ளே இன்னொரு பெரிய ஈ, “அதைச் சொல்றிங்களே, தாத்தா! அடிச்சானே, அந்த ஆளுக்கு உடம்பிலே திராணி இருக்குதா, பார்த்தியா? ஆறு அவுன்ஸ் ரேஷனிலே என்ன பண் ணிட முடியும் அவனாலே! இங்கே வந்து குடிக்கிறதோ காபிங்கிற வெறும் தண்ணி”னு சொல்லிச் சிரிச்சுது.

இதுக்குள்ளே சின்ன ஈ ஒடம்பைச் சரி பண்ணிண்டு, “கெடக்கிறது, தாத்தா! இதுக்கெல்லாம் பயந்து சாவலாமா? உசிரை லெச்சியம் பண்ணாம கௌம்பிட வேண்டியதுதான்”னுது.

தாத்தா ஈ வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டு, “போடா பைத்தாரப் பையா! உசிரை எதுக்கடா லச்சியம் பண்ணப்படாது? அதோ கொண்டு வரானே, அந்தக் கோதுமை அல்வாவுக்காகவாடா? போடா! முன் காலம் மாதிரி வெண் பொங்கல், சேமியா-பேணி, பால் போளி என்று இருந்தால், உசிரு போனாலும் உட்கார்ந்து சாப்டோம் என்று இருக்கும். இதென்னடா, சோளத்தைப் போட்டு ஒபயோக மத்த பண்டங்கள்…”

சின்ன ஈ நேரே ஓடிப் போய், ஸர்வர் கையிலிருந்த சப்பாத்தியிலே உட்கார்ந்துண்டுது. சூடு பொறுக்காமல் எழுந்திருக்கிறதற்குள்ளே, ‘டணார்’னு மண்டையிலே விழுந் தது ஒரு அடி! ஸர்வர் போட்டு விட்டான். சின்ன ஈக்கு ஸ்மரணையே தப்பிப் போச்சு! ஸர்வர் இப்போ அதைத் தட்டினது நியூஸ் பேப்பராலே இல்லை; இன்னொரு சப்பாத்தியாலேயாக்கும்! அதுதான் அப்படிக் கல்லு மாதிரி அதன் தலை மேலே விழுந்திருக்கு. ஸர்வர் ஒண்ணையும் கவனிக்கவே இல்லை. அவன் சப்பாத்தியைக் கொண்டு போய் மேஜை மேலே வச்சுட்டான்.

இதிலேருந்து நாம் தெரிஞ்சுக்கற நீதி என்ன தெரியுமா? ஆகாயத்திலே பறக்கிற இரண்டு ஈக்களைவிட, ஆகாரத்திலே அகப்பட்டிருக்கும் ஒரு ஈ எவ்வளவோ மேலானது!

காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நாடகத்தில் நடித்திருக்கிறார். நாடகத்தையும் தேவனே எழுதி இருக்கிறார் – கதைகளை வெட்டியும் ஒட்டியும் உருவாக்கி இருக்கிறார். நாடகமும் இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது.

தூர்தர்ஷனில்  தொடல் சீரியலில் ஒய் ஜி மகேந்திரன் துப்பறியும் சாம்புவாக நடித்திருக்கிறார்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் சாம்பு மாதிரி குணாதிசயமும், சாம்பு என்ற பேரும், சாம்புவைப் போலவே அதிருஷ்டம் உடைய துப்பறிபவராக நாகேஷ் நடித்திருக்கிறார். .

துப்பறியும் சாம்புவின் ஒலிப் புத்தகம் கேட்க வேண்டுமா?  இதோ இந்த லிங்கில் கேளுங்கள்:

 

மாணவர்களுக்கு கூகுள் நடத்தும் விஞ்ஞானக் கண்காட்சியும் போட்டியும் !!

 

science1

கூகுள் நடத்தும்  விஞ்ஞானக்  கண்காட்சியும் போட்டியும் !

இதில் 13-18 வயது வரை உள்ள மாணவர்கள் தனியாகவோ குழுவாகவோ கலந்து கொள்ளலாம்.

இதன் அடிப்படைக் கருத்து :

விஞ்ஞானத்தைக்  கொண்டு உலகை மேலும் சிறப்படையச் செய்வது எப்படி?

science 3

 

 

https://www.googlesciencefair.com/en/

சித்திரைப் புதுமலரே வாராயோ ! — கோவை சங்கர்

தமிழகத்துப் பொழிலினிலே புதுமலரும் பூத்ததுவே
தத்திவரும் புள்ளினமும் களிப்பதனில் மூழ்கியது;
தெம்மாங்கு பாடியது மக்களிலே யோர்கூட்டம்
தித்திக்கு மூணுண்ண நின்றதுவே மறுகூட்டம்
செம்மையுற பயிரோங்க அரும்பெருந் தொழில்வளர
செய்விக்கும் நம்பிக்கை கொண்டதுவே நம்தேயம்
‘அம்மா’வென இரக்கின்ற கூட்டமினி யிலையென்று
அடங்காத ஆவலொடு பார்க்கின்றாள் தமிழ்த்தேவி!!

சின்னஞ்சிறு குழவிக்கு பால்கிடைக்கு மெனவெண்ணம்
விளையாட்டுப் பொருள்மீது ஆசைகொளும் மழலையுமே
இனிக்கின்ற கல்விதனைக் கற்கின்ற சிறுவர்க்கு
இகத்தினிலே முதலாக விளங்குவதி லோர்நாட்டம்
மனமொத்துப் பருவத்தால் கட்டுண்ட காதலர்க்கு
மணந்தனை யிவ்வாண்டு வைத்திடலா மெனவாசை
துணையோடு குழந்தைகள் பலகொண்டு உழல்பவரோ
இடர்தீர்க்கும் புத்தாண்டு எனக்கொள்வா ருறுதியுமே!

உண்டிகொடுத் துயிர்காக்கு முழவனது மனதினிலே
‘உயர்ந்தோங்கி பயிர்களுமே வளரு’மென நம்பிக்கை
வேண்டிய பொருளினையே கொடுத்துவரும் வியாபாரி
‘வியாபாரம் பெருகு’மென கொண்டிடுவான் பேராசை
பண்பாடும் ஆலைகளும் பெருகிடவே முதலாளி
‘புத்தாண்டு வழிசெய்யும்’ என்றுபல எண்ணிடுவார்
பணமாக்கப் பணியில்லை யென்றலையும் மாந்தருமே
‘பணிகொடுக்கும் புத்தாண்டு’ என்றவரும் கூறிடுவார் !

ஈராறு திங்கட் கொருமுறையே மலர்ந்துவரும்
இணையில்லாப் புதுமலரே இசைகொண்ட பொன்மலரே
அரும்பெரு மாற்றலொடு இலங்கிவருந் தண்மலரே
அடைதற்கருந் தன்மைகளை யுட்கொண்ட தேன்மலரே
பாரதனில் பயில்கின்ற பண்புமிகு மாந்தரெலாம்
பூமலரே யுன்னிடமே பலப்பலவும் நோக்குகிறார்
சீர்மிகவே அவரவரின் எண்ணத்தைச் செயலாக்க
மென்மலரே யுன்னிடமே பணிவோடு வேண்டுகிறேன்!

பஞ்சாங்கம் (சு.ரா.)

பழைய பஞ்சாங்கம் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். அதில்  எத்தனை விஞ்ஞானம் இருக்கிறது தெரியுமா?  அது பெரிய ஆகாயம்.

அந்த வான வெளியை நாம் கொஞ்சம் அண்ணாந்து பார்ப்போமா? 

பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.  அவை: 

வாரம் ,   திதி ,   கரணம்,   நட்சத்திரம்,    யோகம்.

வாரம்:

ஞாயிறு, திங்கள் என்பது  வாரமாகும் . 

திதி:  

திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்கும் உள்ள தூரமாகும். : 

அமாவாசை முதல் பிரதமை   துதியை   திருதியை  சதுர்த்தி   பஞ்சமி   சஷ்டி   சப்தமி   அஷ்டமி   நவமி   தசமி  ஏகாதசி துவாதசி திரயோதசி   சதுர்த்தசி  ஆகிய  15 நாட்கள் .

பிறகு பௌர்ணமி  முதல் மறுபடியும்  பிரதமை   துதியை   திருதியை   சதுர்த்தி   பஞ்சமி  சஷ்டி  சப்தமி  அஷ்டமி      நவமி       தசமி      ஏகாதசி  துவாதசி திரயோதசி  சதுர்த்தசி ஆகிய. 15 நாட்கள்.

மொத்தத்தில் 30 திதிகள். 

கரணம்,

ஒரு திதிக்கு இரு கரணங்கள் . ஆக மொத்தம் 60 கரணங்கள்.  

கீழே கொடுக்கப்பட்டுள்ள  11 கரணங்கள் சுழற்சி முறையில் வரும். 

  1. பவம்
  2. பாலவம்
  3. கௌலவம்
  4. சைதுளை
  5. கரசை
  6. வனசை
  7. பத்திரை
  8. சகுனி
  9. சதுஷ்பாதம்
  10. நாகவம்
  11. கிமிஸ்துக்கினம்

நட்சத்திரம் :

நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 டிகிரி  கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். ( மொத்தம் 360 டிகிரி).  சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது

அனைவருக்கும் தெரிந்த அசுவதி முதல் ரேவதி வரையில் உள்ள:  27 நட்சத்திரங்கள். 

 யோகம்:

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.

.1. விஷ்கம்பம் 10. கண்டம் 19. பரிகம்
2. பிரீதி 11. விருதி 20. சிவம்
3. ஆயுஷ்மான் 12. துருவம் 21. சித்தம்
4. சௌபாக்கியம் 13. வியாகதம் 22. சாத்தீயம்
5. சோபனம் 14. அரிசணம் 23. சுபம்
6. அதிகண்டம் 15. வச்சிரம் 24. சுப்பிரம்
7. சுகர்மம் 16. சித்தி 25. பிராமியம்
8. திருதி 17. வியாதிபாதம் 26. ஐந்திரம்
9. சூலம் 18. வரியான் 27. வைதிருதி

ராசி: 

 

பன்னிரண்டு ராசிகள்:

  1. மேஷம்
  2. ரிஷபம்
  3. மிதுனம்
  4. கடகம்
  5. சிம்மம்
  6. கன்னி
  7. துலாம்
  8. விருச்சிகம்
  9. தனுசு
  10. மகரம்
  11. கும்பம்
  12. மீனம்

 

ஒரு நட்சத்திரத்தை 4 பங்காக ஆக்குங்கள். ஒவ்வொரு பங்கிற்கும் பாதம் என்று பெயர்.  அப்படியானால் 27 ம் நட்சத்திரத்திற்கு 27 x 4 = 108 பாதங்கள். நாம் இப்போது மேலே கூறிய 12 ராசிகளில் வரிசைக் கிரமமாக அடைக்கப் போகிறோம். ஒரு ராசிக்கு 9 வீதம் 12 ராசிக்கும் 108 பாதங்களை அடைக்கப் போகிறோம்.

ராசியின் பெயர் நட்சத்திரங்கள்
மேஷம் அஸ்வனி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம்.
ரிஷபம் கார்த்திகை 2, 3, 4, பாதங்கள், ரோகிணி 4 பாதங்கள் மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்.
மிதுனம் மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்.
கடகம் புனர்ப்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
கன்னி உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்
துலாம் சித்திரை 2, 3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்கள்
விருச்சிகம் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
தனுசு மூலம், பூராடம், உத்திராட்டம் 1-ம் பாதம்
மகரம் உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்
கும்பம் அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டதி 1, 2, 3 பாதங்கள்
மீனம் பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

 

ஆக ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள் வீதம் 27 நட்சத்திரங்களையும் 12 ராசியில் அடக்கி விட்டோம்.

இந்த 12 ராசிகளிலும் 9 கிரகங்களும் வலம் வருகிறது

கிருகங்கள் :

  1. சூரியன் 
  2. சந்திரன் 
  3. செவ்வாய் 
  4. புதன் 
  5. வியாழன்  
  6. வெள்ளி 
  7. சனி 
  8. இராகு (நிழற்கோள்)
  9. கேது (நிழற்கோள்)

சூரியன் ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொண்டு ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் கடக்கிறது. 

 

வாக்கியப் பஞ்சாங்கம் :

கி .மு. 1200 முதல் கி.மு.400 வரையில்  உள்ள காலத்தில் கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ரிஷிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் ஒரு முறையைக் கண்டு பிடித்தனர்.   இது “வாக்கிய முறை” எனப்பட்டது. இதுதான் முதன் முதலாக வந்த பஞ்சாங்கக் கணித முறை. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் “வாக்கியப் பஞ்சங்கம்” எனப்பட்டது.. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.

ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,  திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம்,ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம்,சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம்,திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்

 

.திருக்கணித பஞ்சாங்கம்

சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு.
வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் இந்தப்  பிழைகளைக்  திருத்திப் புதிய முறையைக் கண்டனர். அதற்குப் பெயர் “திருகணித முறை” எனப்படும். இந்த திருகணித முறையை ஒட்டிப் பஞ்சாங்கங்கள் கணிக்கப் படுகின்றன. இந்தப் பஞ்சாங்கங்களுக்குப் பெயர் “திருகணிதம்” பஞ்சாங்கம் எனப் படும்.
ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

 

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு “டெலஸ் கோப்புகள்” வந்து விட்டன. கிரகங்களின் வேகம், பாதையைக் கண்டறியும் அளவிற்குக் கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள கணித முறையும், திருகணித முறையும் எந்த வித மாறுதல் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. 

ஒவ்வொரு வருடமும் பஞ்சாங்கக் கருத்தரங்கங்கள் பொதுவாக ஆடி மாதம்  நடக்கும்.  காஞ்சி மடாதிபதி, அஹோபில மடாதிபதி, தர்மபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் போன்ற மகான்கள் தலைமை வகிக்கும் அந்த கருத்தரங்கங்களில் பிரபல ஜோதிடர்களும், பஞ்சாங்கம் மற்றும் தினசரி காலண்டர் தயாரிப்பாளர்களும், கலந்து கொள்வார்கள்.

கருத்தரங்கில் பெரிய விவாதமே நடக்கும். வாதங்களும், பிரதிவாதங்களும், சர்ச்சைகளும், கருத்துப் பரிமாற்றங்களும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்படும்.

இதில் அனைவராலும், ஒருமுகமாக ஏற்றுக்கொள்ளப்படும் தகவல்களும், நிர்ணயிக்கப்படும் விரத காலங்கள் மற்றும் கோயில் உற்சவ நாட்கள் எல்லாம் அடுத்து வரும் பஞ்சாங்கத்தில் இடம் பெறும்.’

 

ன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்  http://www.eegarai.net/t111579-topic

நன்றி : தமிழ் விகிபீடியா – பஞ்சாங்கம் 

நன்றி : தினகரன் ஜோதிடம்  http://astrology.dinakaran.com

 

படைப்பாளி ஆதவன் – (எஸ் கே என்)

ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் 

1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்த  கே எஸ் சுந்தரம் (ஆதவன்) இந்திய இரயில்வேயிலும், ‘நேஷனல் புக் டிரஸ்டின்’  தமிழ்ப் பிரிவில் துணையாசிரியராக தில்லியிலும்  பெங்களூரிலும்  பணியாற்றியவர். 1987 ல் சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக  வழங்கப்பட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

“1960, 70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதைக்  கழித்த, படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை அபிலாஷைகளையும், சோகங்களையும் நிராசைகளையும் ஆதவன் போல யாரும் தமிழில் பிரதிபலிக்க முடிந்ததில்லை” என்கிறார் திரு அசோகமித்திரன்.

அவர் சொற்களிலேயே ஏன் எழுதுகிறேன் என்பதைப்பற்றி :

“எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன் முடிந்தது; காதலித்தவளை மறக்க முயன்றேன், முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.”

தன் எழுத்துக்கள் குறித்து

‘நானும் என் எழுத்தும்’ என்று சொல்லிக் கொள்ள முற்படும்போது, இந்தச் சொற்றொடரில் பெருமையுடன் கூடவே ஓர் ஏளனத்தின் சாயலும் கலந்து தொனிப்பதாக எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது – ‘இவனும் இவன் மூஞ்சியும்’ என்று சொல்வதைப் போல. வேறு சிலரும் இதே விதமான அபிப்ராயந்தான் கொண்டிருக்கிறார்களென்பதை நான் அறிவேன் – என் மூஞ்சியைப் பற்றியும், என் எழுத்தைப் பற்றியும். இப்படி ஒரு பிரகிருதியா! இப்படி ஒரு எழுத்தா! என்று பரிகாசத்துடன் சிரித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கெடுப்பானேனென்று, பல சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன். “யூ ஆர் ரைட், ஆஸ் யூ ஸே – இந்த – என்ன சொன்னீர்கள்?”

 

சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞனான ராமசேஷனின் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் பதிவாகும் “என்பெயர் ராமசேஷன்” இவரது தலை சிறந்த படைப்பு என்று அறியப்படுகிறது. இந்தப் புதினத்தின்  ரஷ்ய மொழியாக்கம் இலட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனை ஆகியது.

இந்தியத் தலைநகரின் மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு மக்களின்  வாழ்க்கைப் போக்கு, மன ஓட்டங்கள் அதிகார வர்க்கம். மாணவர் உலகம், பத்திரிகை உலகம், அரசியல் உலகம், கலை உலகம், விஞ்ஞான உலகம், தொழிலாளர் உலகம் ஆகிய சூழலில் படைக்கப்பட்ட “காகித மலர்கள்” மற்றொமொரு சிறந்த புதினம்.

‘இண்டர்வியூ’, ‘அப்பர் பெர்த்’, ‘தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு’, ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’, ‘புதுமைப்பித்தனின் துரோகம்’,  ‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ ஆகியவை  இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் சில.

சுசீ என்றழைக்கப்படும் பள்ளியாசிரியை சுசீலா, மற்றொரு ஆசிரியையான மிஸ் டாமினிக் பற்றி சொல்லும் இவரது ‘சினேகிதிகள்’ சிறுகதை

“மிஸ் டாமினிக் தன்னைவிட இருபது ஆண்டுகள் ஜூனியரான என்னைப் பார்த்து பொறமைப்படுகிற ஒரு காலமும் வரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை”

என்று தொடங்குகிறது

வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு வந்த அன்றே மிஸ். டாமினிக் தான் பிரின்சிபால் அறைக்கு வழி சொல்கிறாள். நேர்முகத்தேர்வின் குழுவில் அவளும் இருக்கிறாள். கேள்விகள் கேட்டதெல்லாம் பிரின்சிபால் அகதா மட்டுமே.

வேலைக்குச் சேர்ந்தபிறகு ஆறாம் வகுப்பிற்குக் கணக்குப் பாடம் எடுப்பது  சுசீலாவிற்குக் கிடைக்கவும் மிஸ் டாமினிக் தான் காரணம் என்று பேசிக்கொண்டார்கள். ‘மிடில்’  வகுப்புகளுக்குக் கணக்கு எடுப்பது மிஸ் டாமினிக்கின் ஏகபோக உரிமையாம்.

டாமினிக்கும் சுசீலாவும் சிநேகிதிகள் ஆகிவிடுகிறார்கள். கொண்டு வரும் மதிய உணவை மிஸ் டாமினிக் வீட்டிற்குச் சென்று சாப்பிடும் அளவிற்குப் பழகிவிடுகிறார்கள். அகதா பிரின்சிபாலாக இருந்தவரை டைம் டேபிள் வாங்குதல், எல்லா வகுப்பு பிராகரஸ் கார்டுகளை மேற்பார்வையிடுதல், பார்ட்டிகளோ சுற்றுலாக்களோ ஏற்பாடு செய்தல் என்று பல பொறுப்புகள்  மிஸ் டாமினிக் வசம் இருந்தன. ப்ரின்சிபாலுடன் டாமினிக் டீ சாப்பிடும்போது சுசீலாவும் பல சமயம் இருப்பாள்.

வெவ்வேறு ஆசிரியைகளின் பலவீனங்கள், வகுப்புகளில் நடந்த தவறுகள், ரகளைகள், போட்டிகள், பொறாமைகள் முணுமுணுப்புகள்  எல்லாம் பற்றி பிரின்சிபாலுக்கு  மிஸ் டாமினிக் மூலமாகத் தகவல் கிடைத்துவிடும். யாரவது லீவு  போட்டால் அதை எடுக்க மிஸ் டாமினிக்  வந்துவிடுவாள். நோட்புக்குகளை பரிசீலித்து அதிலுள்ள தவறுகளை பிரின்சிபாலுக்கு ரிப்போர்ட் செய்துவிடுவாள்.

டாமினிக்குடன் நல்ல உறவுகளைப் பேணிவர ஒவ்வொரு டீச்சரும் பாடுபட்டாள். அதே சமயத்தில் அவளுக்கு மிக நெருக்கமாகச் சென்றால் தங்களைப் பற்றி- தங்கள் குறைபாடுகளைப் பற்றி – அவளுக்குத் தெரிந்து விடுமோ என்று பயந்துகொண்டு சற்று விலகியே இருக்கவும் செய்தார்கள். என் ஒருத்தியிடம் மட்டும் டாமினிக் காட்டிய   அன்பும் பரிவும் அவர்களுடைய  பொறாமையைக் கிளப்பிவிட்டதில் ஆச்சரியமில்லை. ஒற்று வேலை செய்வதிலும், தங்களைப் பற்றி பிரின்சிபாலிடம் கோள் மூட்டி விடுவதிலும் நானும் டாமினிக்குக்கு உடந்தை என்றும் சிலர் நினைத்தார்கள்.

சிலர் டாமினிக்கைப் பற்றி, தனியாக இருக்கிறாளா, ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, காதல் தோல்வியா,   சகோதர சகோதரிகள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் இவள் வாயைக் கிண்டுவார்கள். இவள் பதிலளிக்காமல் நழுவிவிடுவாள்.

அகதா ஓய்வுபெற்று பெண்டிக்டா பிரின்சிபாலாக வந்தும் டாமினிக்கின் பொறுப்புகளிலோ, அதிகாரத்திலோ எந்த குறைவும் ஏற்படவில்லை.

பிரின்சிபாலுக்குத் தளபதியாக, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பயமூட்டுபவளாக இருந்த டாமினிக் சுசீலாவிடம்  மட்டும் செடி கொடிகள், நாய்கள், உலக நடப்புகள், கல்விமுறையில் சீர்திருத்தங்கள் என்று அரிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பவளாக இருந்தது யாருக்குத் தெரியும்.

டாமினிக்கின் தோழமை காரணமாக ப்ரின்சிபலின் அந்தரங்க வட்டத்தில் தானும் அடக்கம் என்ற பிரமையில் திளைத்து வந்தாள்.

பள்ளி அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த பெண் பணம் கையாடிவிட்டதால் அவளை நீக்கிவிட்டார்கள். அலுவலகத்தை நிர்வகிக்க ஒரு நம்பகமான ஆள் தேவைப்பட்டது. பிரின்சிபால் பெனடிக்டாவும் டாமினிக்கும் வேறு  ஆளை நியமிக்கும் வரை அந்தப் பொறுப்பை சுசீலாவை ஏற்க வைக்கிறார்கள். நாமும் அதிகார வட்டத்தில் ஒரு நபர் என்னும் பிரமையில் அப்பொறுப்பை ஏற்று சுசீலா என்னும்  ‘டீச்சர்’,  ‘கிளார்க்’ ஆகிவிடுகிறாள். புதுப் பொறுப்பில் வாசுதேவன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது.  சுசீலாவைச் சந்திக்க வந்த வாசுதேவனை, பள்ளியின் கணக்கு வழக்குகள் பரிசீலிக்க பெனடிக்டா கேட்டுக்கொள்கிறாள்.  சுசீலா – வாசுதேவன் நட்பு  திருமணத்தில் முடிகிறது.

திரும்பவும் குமாஸ்தாவிருந்து ஆசிரியை ஆகலாம் என்றால், “அந்த லைனிலிருந்து தொடர்பு அறுந்துபோய் இவ்வளவு நாளாகிவிட்டதே!” என்று சொல்லிவிடுகிறாள், பிரின்சிபால் பெனடிக்டா

பெனடிக்டா ஓய்வுபெற்றதும் மரியம் என்னும் புது பிரின்சிபால் பொறுப்பேற்கிறார். அவருக்கு டாமினிக்கின் வழிமுறைகள் பிடிக்கவில்லை. தன் வழி முறைகளை நியாயப்படுத்த  முயன்ற டாமினிக்கிடம் “உங்கள் கருத்துக்களை ஆதரிக்கும் வேறு பள்ளிக்கூடத்தில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம்” என்கிறார் பிரின்சிபால்.

ஸ்டாஃப் ரூமில் இருந்தாலே உரத்த குரலும் சிரிப்புமாக அந்த அறையையே கலகலக்க வைக்கும் மிஸ் டாமினிக், அமைதியாகி விடுகிறாள். அரசியாக இருந்தவள், ஒரே நாளில் சாதாரணப் பிரஜை ஆனாள். சுசீலாவிற்கு அவள் மீது அனுதாபமாக இருந்தது.

டாமினிக் இன்னும் ஒரு மாதத்தில் ஒய்வு பெற இருக்கையில், காசு வசூலித்து ஸ்வீட் காரம் காப்பியுடன், தனது வீட்டிலேயே ஒரு ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்கிறாள் சுசீலா.

தேநீர் விருந்து பெரும் வெற்றி. எல்லோரும் கலைந்துபோனதும் சுசீலாவின் கையைப் பிடித்துக்கொண்டு உரக்க அழுகிறாள்.

“நான் உனக்கு அநீதி இழைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு சுசீ” என்னை மன்னித்துவிடு.”

“மிஸ் டாமினிக் ! எனக்குப் புரியவில்லை.”

“நான் உன்னைப் பார்த்துப் பொறாமைப் பட்டேன்”

“நான் அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?”

“சுசீ .. நீ ஆறாம் வகுப்பு டீச்சராக இருந்தபோது – உன் படிப்பு சொல்லிக் கொடுக்கும் திறனைப் பலர் புகழ்ந்தார்கள். குறிப்பாக, கணக்குச் சொல்லித்தருவதை… என்னால் அதைத் தாங்க முடியவில்லை சுசீ.. நான்தான் கணக்குச் சொல்லித்தருவதில் எக்ஸ்பர்ட் என்று நினைத்திருந்தேன்.”

“நீங்கள்…. நிஜமாக … “

“நீ ட்யூஷன் சொல்லித்தருவாயா என்றுகூடச் சில பெற்றோர் பெனடிக்டாவிடம் விசாரித்தார்கள். எனக்கு பயமாகப் போய்விட்டது, சுசீ “

“பயமா? எதற்காக?”

“நாமிருவரும் குடியிருந்தது  ஒரே ஏரியாவில். எனக்கு வர வேண்டிய ட்யூஷன் கிராக்கிகளை நீ பறித்துக் கொண்டு விடுவாயோ என்று பயமாயிருந்தது. …”

ட்யூஷனில் தனக்குப் போட்டியாக சுசீ வரக்கூடாது என்பதற்காகவே, அவளை ஆபீசில் போடும்படி பிரின்சிபாலிடம் சிபாரிசு செய்ததாகவும் கூறுகிறாள் டாமினிக். சுசீலா அதிர்ச்சியில் துவண்டு போகிறாள்.

“என்னை மன்னித்துவிடு சுசீ! என்னை மன்னித்துவிடு!” என்று அவள் மீண்டும் அரற்றினாள். “உன்னைப்போல நானும் யாரவது ஓர் இளைஞனுடன் சமரசம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நான் மிகவும் கர்வம் பிடித்தவள். பணியாதவள். எல்லா ஆண்களையும் என்னிடமிருந்து விரட்டிவிட்டது. ஒரு கட்டத்திற்குப் பிறகு யாருமே மிச்சமில்லை. நான் மேலும் என் பிடிவாதத்தில் சிறைப்பட்டு, வக்கிரமான சுயநலவாதியாகி, என் உறவினர்களையும் விரோதித்துக் கொண்டு, கடைசியில் நான் அன்போடு நேசித்த ஒரு ஜீவனுக்குக்கூட துரோகம் பண்ணுமளவிற்கு..  “

தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மீது தனது  மதிப்பீடுகள் யாவும் பறிக்கப்பட்டு, கடந்த பத்தாண்டு வாழ்க்கையும் பயனற்றதாக உணர்ந்து, மற்றவர்களை நம்புவதையே கேள்விக்குறியாக்கி…

மிஸ் டாமினிக்!  நீ என் மனதில் சந்தேக விதைகளைத் தூவிவிட்டாய். அவநம்பிக்கையுள்ளவளாக்கி விட்டாய். இதுதான் நீ செய்த மிகப் பெரிய குற்றம், டாமினிக் இனி எந்த ஒரு  ஜீவனையும் முழு மனதாக ஒப்புக்கொள்ளவோ, அதன் மீது நம்பிக்கை வைக்கவோ.. ஓ காட்!

ஒய்வு பெற்றபிறகு மிஸ் டாமினிக் இதே நகரின் புறநகர்ப் பகுதி ஒன்றில்தான் வசித்து வருவதாகக் கேள்வி.  யாரோ அட்ரஸ் கூடக் கொடுத்தார்கள். ஆனால் நான் அவளைப் பார்க்கப் போகவில்லை. பார்க்க வேண்டுமென்று தோன்ற வில்லை.

என்று முடிகிறது கதை

இணையத்தில் கிடைக்கும் இவரது சில கதைகள்.

இண்டர்வியூ          புதுமைப்பித்தனின் துரோகம்      முதலில் இரவு வரும்

 

அம்மா  நீயா  இப்படி…..!  (நித்யா சங்கர் )

குழந்தைப் பருவத்தில் பாலோடு பாசத்தையும். அன்பையும்
ஊட்டி வளர்த்த அம்மா ….. பள்ளிப் பருவத்தில் வேகாத வெய்யிலில் மகன் பட்டினியாய்  இருக்கக் கூடாதே…., சூடாக சாப்பிடவேண்டுமே
யென்று சோற்றுப் பையுடன் பள்ளிக் கூடத்திற்கு ஓடி வந்த அம்மா,
காலேஜ் நாட்களில் பையனுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று
அறிந்து யோசித்து யோசித்து ருசியாக ஆக்கிப் போட்ட அம்மா…..

அம்மா நீயா இப்படி…!

வருகிற மனைவி எப்படி அமைவாளோ…? பாசப் பிணைப்பில்
மகிழ்ந்திருக்கும் நம் குடும்பத்தைப் பிரித்து விடுவாளோ….?’ என்றெல்லாம்
சந்தேகம் எழும்ப கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த
மதுவை உட்கார வைத்து, ‘கல்யாணத்துக்கப்புறம் பாருடா… உன்
மனைவியாக வரப் போறவளை என் பொண்ணு மாதிரித் தாங்கி த்தாங்கி
வெச்சுக்குவேன் என்று உறுதி சொல்லி கல்யாணம் பண்ணி வைத்த
அம்மா……. அம்மா நீயா இப்படி…?

பூஜா புகுந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.
கழுத்திலே கட்டிய மஞ்சச் சரட்டின் நிறம் கூட மாறவில்லை..
அதற்குள் அவசர அவசரமாக ஒரு வீடு பார்த்து, ஒரு நல்ல நாளில்
பால் காய்ச்சி மதுவையும், பூஜாவையும் தனிக் குடித்தனமும் வைத்து
விட்டாள் அம்மா.

‘ஏன்… ஏன்… தப்பு எங்கே நடந்தது?.’ என்று காரணம்
புரியாமல் அயர்ந்து போய் நின்றான் மது.

அவனுக்குத் தெரிந்த வரை பூஜா மேல் ஒரு குறையும் இருப்-
பதாகத் தெரியவில்லை… அதுவும் தனிக் குடித்தனம் வரவேண்டும்
என்று தெரிந்ததும் அம்மாவைக் கட்டிக் கொண்டு அவள் அழுத
அழுகை இருக்கிறதே…..!

‘அம்மா, நான் என்ன தப்பு செய்தேன்… நான் ஏதாவது
தப்பு செய்திருந்தா என்னைத் திட்டுங்க… ஏன் அடிக்கக் கூட
உங்களுக்கு உரிமை இருக்கு. மாமனார், மாமியாருடன் –
அதாவது என் அம்மா, அப்பாவுடன் – ஒரு குடும்பமா சந்தோஷமா
இருக்க வேண்டும் என்று ஆசையோடு வந்தேனே … அதுக்கு
நீங்கள் தரும் தண்டனையா..? ஏன் அம்மா.. இப்படி எங்களைப்
பிரிச்சு வெக்கறீங்க..? சொல்லுங்க அம்மா சொல்லுங்க…’ — அவள்
பேச்சிலே கபடமில்லை.. உண்மை இருந்தது…

தோளிலே சாய்ந்து அழுதவளை மெதுவாக அணைத்துக்
கொண்டும், ஆதரவோடு தடவிக் கொடுத்தும், ‘ அடீ.. பைத்தியக்காரி..
அசடு மாதிரி ஏண்டி அழுதுட்டு இருக்கே… நாங்க கிரவுண்டு
·ப்ளோரில் இருக்கோம்.. நீங்க ·பர்ஸ்ட் ·ப்ளோரில் இருக்கப்
போறீங்க. உங்க படுக்கையறை பால்கனியிலிருந்தோ, சமையலறை-
யிலிருந்தோ ‘அம்மா’ன்னு கூப்பிட்டேன்னா ரெண்டாவது நிமிஷமே
நான் உங்க வீட்டுலே இருக்கப் போறேன். அது போல் நான்
‘பூஜா’ன்னு கூப்பிட்டேன்னா ரெண்டாவது நிமிஷம் நீ என்
முன்னால் நிற்கப் போறே… நீங்க ரெண்டு பேரும் சின்னஞ்
சிறிசுக .. ஜாலியா லைபை எஞ்சாய் பண்ணணும்’ என்று ஆறுதல்
கூறினாள் அம்மா. அம்மாவின் சொற்களில் கோபமோ, தாபமோ,
வஞ்சமோ இல்லை. அன்பும் பாசமும்தான் தெரிந்தது.

‘அவதான் இவ்வளவு சொல்றாளே… பின்னே எதுக்கு
அவங்களைத் தனியாப் போகச் சொல்றே..? அவங்களும் இங்கேயே
இருக்கட்டுமே…’ என்றாள் ஊரிலிருந்து வந்திருந்த அத்தை.

அம்மாவின் பதிலோ அவள் இதழோரம் கசிந்த ஒரு
சின்ன புன்னகை.

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் மது.

‘என்னங்க.. தூக்கம் வரலையா..?’ என்றாள் பூஜா.

‘எனக்கு ஒண்ணுமே புரியலை பூஜா…. தப்பு எங்கே
நடந்ததுன்னே புரியலை…. அம்மா ஏன் இப்படி..!’

அதுதான்ங்க .. எனக்கும் புரியலே… மாமியார், மாமனார்
எல்லோருடனும் கூட்டுக் குடும்பத்திலே இருக்கணும்னு ஆசை
ஆசையாய் வந்தேன். என்ன ஆச்சுன்னே தெரியலையே.. ஆனா
அம்மாக்கும் என் மேல் கோபமோ, வெறுப்போ இருக்கிறதாகவும்
தெரியலே..பாதி வேலையை இழுத்துப் போட்டுண்டு நீங்க
ஆபீஸிலேயிருந்து வறதுக்குள்ளே முடிச்சிட்டு ‘ரெண்டு பேரும்
வெளியிலே ஜாலியா போயிட்டு வாங்க’ன்னு அன்பா அனுப்பறாங்க.
மதுவுக்கு இது பிடிக்கும், பூஜாக்கு இது பிடிக்கும்னு பார்த்துப்
பார்த்துச் செய்து கொண்டு தராங்க… நாம் தனித்தனியே ரெண்டு
வீட்டிலே இருக்கிறோமே யொழிய பாதி நாளும் அம்மாவுடைய
பிரிபரேஷன்தான். உங்களுக்கு நெனவு இருக்கா.. ஒரு நாள்
உங்ககிட்டே ‘ஒரு பர்டிகுலர் ஸாரி டெக்ஸ்டைல்ஸ் ஷாப்பில்
டிஸ்ப்ளேயில் போட்டிருந்தான். அது எனக்கு ரொம்ப பிடித்தது’
என்று சொல்லிட்டிருந்தேன். அதை எப்படியோ அம்மா
கேட்டிருக்காங்க. அன்னிக்கு சாயந்திரமே அதை வாங்கி வந்து
எனக்கு பிரஸண்ட் பண்ணினாங்க. இப்படி ஆசை ஆசையாய்
பண்ணற அம்மா கூடவே இருக்க முடியாமப் போச்சு பாருங்க…
நான் என்ன தப்பு பண்ணினேன்னு தெரியலீங்களே..’ என்று
விசும்பினாள்.

‘ஓகே… கவலைப் படாதே …. எல்லாம் போகப் போக
சரியாகி விடும்….’ என்று ஆறுதல் கூறிய படியே அவளை
அணைத்துக் கொண்டான் மது.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவன், திடீரென்று கண்
விழித்தான். அறையிலே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
வாட்சைப் பார்த்தான். மணி பன்னிரண்டு. பூஜா கனத்த
இருமலோடு பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டிருந்தாள்.

‘பூஜா .. ஏன், என்னம்மா ஆச்சு ..?’

‘என்னமோ தெரியலே .. ஒரே வோமிட்டிங் ஸென்ஸேஷன்..
இருமல் வேறே .. ஜுரம், தலை வலி வேறே ..’

‘அப்படியா .. அம்மாவைக் கூப்பிடட்டுமா ..”

‘வேண்டாங்க .. பாவம் அவங்க நல்லா தூங்கிட்டு
இருப்பாங்க .. படுத்துத் தூங்கினா சரியாயிடும்’ என்று கூறியவாறு
வந்து கட்டிலில் படுத்தாள். அவள் முகம் சோர்ந்து போயிருந்தது.
அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. மதுவுக்கு என்ன
செய்வது என்றே தெரியவில்லை .. அம்மா மேல் கோபம்
கோபமாக வந்தது. எல்லோரும் சேர்ந்திருந்தால் அம்மா
ஏதாவது கை வைத்தியம் செய்திருப்பாள். விடிஞ்சதும்
டாக்டரிடம் போயிருக்கலாம்.

‘என்னடா செய்வது ..?’ என்று எண்ணியபடியே
பால்கனிக்கு வந்தான்.

‘என்னடா .. மது .. என்ன ஆச்சு? தூங்கலியா..?’
என்ற அம்மாவின் குரல் கீழ் போர்ஷனிலிருந்து கேட்டது.

‘அம்மா… பூஜாவுக்கு உடம்பு முடியலேம்மா.. ரொம்ப
இருமலாவும், வோமிட்டிங் ஸென்ஸேஷனாவும், ஜுரமாவும்
இருக்கு .. ‘ என்றான் தீனமான் குரலில்.

‘பயப்படாதே .. ஐந்து நிமிஷத்தில் வரேன்’ னு
சொல்லியபடியே உள்ளே போனாள். மதுவும் உள்ளே வந்தான்.
அம்மாவின் வருகைக்குக் காத்திருந்தான்.

சொன்னபடியே ஐந்து நிமிஷத்தில் கதவைத் தட்டினாள்
அம்மா. மது ஓடிப் போய் கதவைத் திறந்தான். அம்மாவைக்
கண்டதும் அவன் முகத்திலே உள்ள கவலை ரேகைகள்
மறைந்தன. மனதிலே ஒரு திடமும் நம்பிக்கையும் வந்தது. அம்மா
கையில் ஒரு குவளையில் கஷாயம் கொண்டு வந்திருந்தாள்.

பூஜாவிடம் ஓடிப் போய், ‘என் செல்லம் .. என்னடா
செய்யுது .. ஒண்ணும் பயப்படாதே.. அம்மா இருக்கேன் இல்லே..
இந்தக் கஷாயத்தைச் சாப்பிடு.. உன்னுடைய ஜுரம் எல்லாம் ஓடிப்
போயிடும்’ என்றபடியே கஷாயத்தை அவளுக்கு புகட்டினாள்.

‘அம்மா .. எனக்கு பயமா இருக்கும்மா .’ என்று சின்னக்
குழந்தை போல் அதுவரை தேக்கி வைத்திருந்த துக்கத்தையெல்லாம்
அழுது கொட்டித் தீர்த்தாள் பூஜா. அம்மாவின் மடியில் தலை
சாய்த்து படுத்தாள்.

‘சீ..சீ.. அம்மா வந்துட்டேன் இல்லே.. இனி ஒண்ணுக்கும்
பயப்படாதே..’

‘அம்மா.. என்னை விட்டுப் போயிடாதீங்க…’

‘இல்லேடா செல்லம் ..நான் உன் கூடவே இருக்கேன்.
மது நீ ஹாலில் படுத்துக்கோ .. கவலைப் படாமே தூங்கு..
நாளைக்கு ஆபீஸ் போகணும் இல்லியா .. நான் பூஜாவைப்
பார்த்துக்கறேன்.. ‘ என்று அவள் தலையையும், முதுகையும்
ஆதரவோடு தடவியபடியே விடிய விடிய உட்கார்ந்திருந்தாள்
அம்மா. பூஜாவும் நிம்மதியாக உறங்கிப் போனாள்.

ஆபீஸிலிருந்து வந்தவன் வீடு பூட்டியிருப்பதைப்
பார்த்து, ‘பூஜா எங்கே காணலியே ..’ என்ற சந்தேகத்தோடு
அம்மாவின் வீட்டிற்கு வந்தான். வீட்டில் நுழையப் போனவன்
அம்மாவும், அத்தையும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து
வாசலில் நின்றான்.

‘ஏண்டீ உமா… பூஜா ரொம்ப நல்ல பொண்ணாத்
தெரியறா .. உங்கிட்டயும் ரொம்ப பாசமாவும், அன்பாவும்
இருக்கா .. அப்படி இருக்கும்போது அவங்களை ஏன் தனிக்
குடித்தனம் வெச்சிருக்கே….’ என்றாள் அத்தை.

‘அதுக்கு நீங்கதான் காரணம் அக்கா… ‘ என்றாள் அம்மா.
சிரித்தபடியே.

‘ஏய்..ஏய்.. என்ன சொல்றே? நானா காரணம்?’

‘அக்கா .. ஒரு பொண்ணு புதுசா கல்யாணம் பண்ணிட்டு
வரும்போது பல கற்பனைகளோடும், எண்ணங்களோடும் புகுந்த
வீட்டுக்கு வரா.. புகுந்த வீட்டிலே எல்லோரும் புதியவங்க…
அவ தன் வீட்டை எப்படி எல்லாம் வெச்சுக்கணும்னு நினைக்-
கிறாளோ, அது மாதிரி செய்ய முடியாம போகலாம் .. டென்ஷனில்
குடும்பம் நடத்திட்டிருக்கிற மாமியார், மாமனார் வாயிலிருந்து
ஏதாவது கடுஞ்choல் வரலாம். அது நாம் டி.வி. ஸீரியலில்
பார்க்கற மாதிரி பூதாகாரமா வெடிக்கலாம். அதனாலே வருகிற
பெண்ணுக்கு எப்பவும் ஒரு ஸ்பேஸ் கொடுக்கணும். அது
எப்பவும் கூட்டுக் குடும்பத்திலே நம்மால முடியாம போகலாம்.
அது அவளுக்குப் பெரிய குறையா தெரியலாம். உங்க பையன்
விஷயத்திலே அதுதான் நடந்தது. யோசித்துப் பாருங்க..அந்த
நிலைமை ரிபீட் ஆக வேண்டாம்னு தான் நான் இப்படிப்
பண்ணினேன். பூஜா மாதிரி தங்கமான ஒரு மருமக கிடைக்க
நான் கொடுத்து வெச்சிருக்கணும். விட்டா அன்பாலேயே
என்னைக் குளிப்பாட்டிடுவா… அது போல் ‘நானும் ஸீரியல்
மாமியார் இல்லே ..அவள் ஆசா பாசங்களுக்கு அணை போடாத
அன்பான மாமியார்னு அவளுக்குப் புரிய வைக்கணும்
இல்லியா .. இனிமே பாருங்க.. நான் திட்டினாலும் – ஏன்
அடிச்சாலும் – கூட என்கிட்டே என் போண்ணு மாதிரி
ஒத்தைக்கு ஒத்தையா அன்போடு மல்லுக்கு நிற்பாளே ஒழிய
அவள் போடும் சண்டையில் காழ்ப்பு இருக்காது’ என்றாள்
அம்மா கண் கலங்க.

‘என்னடி .. அப்படி ஒரு ஐடியா இருக்கா.. இதுதான்
சாக்குன்னு அவளை அடிக்க வேறே போறியா.. ‘ என்று
சிரித்தாள் அத்தை.

‘அட, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அக்கா,
இப்ப ஜாலியா இருக்காம அவங்க எப்ப வாழ்க்கையை அனுபவிக்க
போறாங்க..நம்ம உடம்புலே இப்போ தெம்பு இருக்கு. அவங்க
ஆனந்தமா இருக்கிறதைப் பார்த்து நாமும் சந்தோஷமா
இருக்கலாமே.. நாம ஓய்ஞ்சு போறபோது அவங்ககிட்டேதானே
போகப் போறோம். அப்போ அந்த வாழ்க்கையிலே அன்பும்,
அரவணைப்பும் இருக்கும். வசந்தம் இருக்கும். காழ்ப்பு இருக்காது.’
என்று சொன்ன அம்மா, தன் காலை யாரோ தொட்டுக் கும்பிடுவதை
உணர்ந்து திகைத்து திரும்பினாள்.

மது அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுது
கொண்டிருந்தான்.

‘அம்மா.. இந்த ஒரு எண்ணத்திலா இப்படிப் பண்ணினே..
புரியாத புதிராக இருந்த உன் செய்கையின் அர்த்தம் இப்பப்
புரிஞ்சது. பூஜாவை நீ சரியாகப் புரிஞ்சுக்கலே.. அவள் ‘நீ இப்படிப்
பிரிச்சு வேச்சுட்டியே’ என்று புலம்பாத நாளில்லே.. நாளைக்கே, ஏன்,
இன்னிக்கே இங்கே நாங்க ஷிப்ட் பண்ணிடறோம்’

‘பைத்தியக்காரா.. ஜாலியா இருங்கடா.. உனக்கு இப்பப்
புரியாது. சில வருடங்களுக்கப்புறம் சொல்வே.. அம்மா நீ
செய்தது சரிதான்னு.. போடா.. பூஜா கோயிலுக்குப் போயிருக்கா..
சாவி அந்த ஆணியில் மாட்டியிருக்கு பார்’ என்றாள் அம்மா.

மதுவின் கண்கள் கலங்கின.

பாஸ்போர்ட் வேண்டுமா? – எஸ்ஸெஸ்

1. Book an appointment through Passport Seva Portal http://passportindia.gov.in 2. Visit the designated Passport Seva Kend...

 

  •   புது பாஸ்போர்ட்  பெற அல்லது பழைய பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க  முதலில் அரசாங்க பாஸ்போர்ட் இணைய தளத்தில்   https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink )   பதிவு செய்து பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்  பெறவேண்டும்.
  • பிறகு உங்களைப்  பற்றிய அனைத்துத் தகவல்களையும், மொபைல் எண் உட்பட அனைத்தையும்   இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
  • பிறகு என்றைய தேதியில் /நேரத்தில் பாஸ்போர்ட் கேந்திராவில் நேரடியாகச் செல்ல அனுமதி இருக்கிறது என்பதையும் இணைய தளத்தில் அறிந்து, அந்தக் குறிப்பிட்ட நேரத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • அதன்பின் பாஸ்போர்ட் பெறுவதற்கான தொகையை கடன் அட்டை அல்லது வங்கி இணையம் வழியாகக் கட்ட வேண்டும்.
  •  அப்போது உங்கள் நேர்காணல் நியமனம் உறுதியாகிவிடும். உங்கள் நியமனக் கடிதத்தை பிரிண்ட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் நேர்காணல் தேதி, நேரம் எல்லாம் உங்கள் மொபைலில் செய்தியாக வந்துவிடும்.
  • குறிப்பிட்டுள்ள நாளுக்கு  முதல் நாளும் அன்றும் உங்களுக்கு நினைவூட்ட செய்தியும் மொபைலில் வரும் .
  • உங்கள் பிறந்த தேதி, தற்போதைய முகவரி, மற்றும் அலுவலக ஆட்சேபணை இல்லாக் கடிதம் , ஓய்வூதிய அட்டை போன்றவற்றின் உண்மை ஆவணங்களை பாஸ்போர்ட் கேந்திராவிற்குச் செல்லும் போது எடுத்துச் செல்லவேண்டும்.  ( எது எது எடுத்துச் செல்லவேண்டும் என்று இணைய தளத்திலேயே தெரிந்து கொள்ளலாம்)

தற்போது குறிப்பிட்டுள்ள நாளில் பாஸ்போர்ட் கேந்திராவிற்குச் செல்லுகிறீர்கள்.

 

Citizen Collect Acknowledgement Letter Stage I – ‘A’ Counter Token Issuance Data verification & Fee Collection (Optional) ...

Token: The token contains a Token Number, which appears at the top of the token. This Token Number is used for further seq...

LCD Display: Token Numbers are displayed on the Token display screen in the manner shown below. The Counter Number where t...

 

  1. முதலில் பாதுகாப்பு சோதனை.
  2. பிறகு உங்கள் ஆவணங்களையும், நியமனக் கடிதத்தையும் சரிபார்த்து டோக்கன் கொடுப்பார்கள்.
  3. அதைப் பெற்றுக்கொண்டு  ‘A’ பிரிவுக்குச்  செல்லவேண்டும். அங்கே உங்கள் டோக்கனுக்கு எந்த கவுண்டர் என்று அறிவிப்புப் பலகையில் வந்ததும் அந்த இடத்துக்குச் செல்லவேண்டும்.
  4. அங்கே உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து உங்களையும் வெப்காமில் படம் பிடித்து , பின்னர் இன்னொரு இடத்தில் உங்கள் எல்லா விரல் ரேகைகளையும் பதிவு செய்வார்கள்.
  5. பிறகு அறிவிப்புப் பலகையில் உங்கள் டோக்கனுக்கு எந்த  ‘B ‘ பிரிவிற்கு (கவுண்டர்) செல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்றால் பாஸ்போர்ட் அதிகாரிகள் உங்கள் தகவல்களும் ஆவணங்களும் சரியாக இருக்கின்றன்னவா என்று சரி பார்த்து பின்னர் ‘C’ பிரிவுக்கு அனுப்புவார்கள்.
  6. ‘C’ பிரிவில் பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் உங்கள் தகவல்களை சரிபார்த்து உங்களுக்குக் காவல்துறை சோதனை தேவையா என்பதைப்பற்றியும் மற்றும் பாஸ்போர்ட் எத்தனை நாட்களில் வரலாம் என்றும் கூறுவார்கள்.
  7. பிறகு நீங்கள் உங்கள் கருத்துப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வெளியேறலாம்.

இவற்றை முடிக்க , மொத்தமாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் நீங்கள் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?

அதிகமில்லை  ஜெண்டில்மேன் , 30 – 40 நிமிடங்கள் தான்.

அதெல்லாம் சரி பாஸ்போர்ட் எத்தனை நாளைக்குப் பிறகு வரும்?

என் நண்பர் ஒருவருக்கு நேர்காணலுக்குப்  போய் 24 மணிநேரத்தில் பாஸ்போர்ட் கையிலேயே வந்து விட்டது!

எனக்கு மூன்று நாட்கள் ஆயின.

அதை தவிர பாஸ்போர்ட் தற்சமயம் பிரிண்ட் ஆகிவிட்டது, தபாலில் சேர்க்கப்பட்டது என்ற தகவல்கள் உங்களுக்கு எஸ்‌எம்‌எஸ் மூலமாக வந்து கொண்டே இருக்கும்.

ஸ்பீட் போஸ்ட் எண்ணைக் கொடுத்து அது எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்காணிக்கும் வசதியையும் தருகிறார்கள்.

மொத்தத்தில் இது ஒரு சுகானுபாவம்.

வாரே  வா ! ஹாட்ஸ் ஆஃப் ! என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா?

சொல்லுவோம்.

அரசுக்கும் உருவாக்கிய டிசிஎஸ் நிறுவனத்துக்கும் நன்றி சொல்லி, அரசாங்கத்தில் ஒவ்வொரு இடமும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு முடிப்போம்.

எதற்காக எழுதுகிறேன் ?

” எதற்காக எழுதுகிறேன் ? “

இந்தத் தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது -. பிரபல எழுத்தாளர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கான பதிலை எழுதி இலக்கிய வட்டத்தில் அவர்களை விட்டே படிக்க வைத்து பின்னர் அவற்றை  எழுத்து என்ற பத்திரிகையின் சிறப்பு வெளியீடாக வெளியிட்டவர் மதிப்பிற்குரிய சி.சு.செல்லாப்பா அவர்கள்.

நடந்த வருடம் 1962.

அதில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள்  ஜானகிராமன், ஜெயகாந்தன், சாலி வாகனன், பிச்சமூர்த்தி, லா ச ராமாமிர்தம், கு.அழகிரிசாமி, ஆர்.ஷண்முகசுந்தரம், வள்ளிக்கண்ணன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்ரமணியன், ஆர்.வி.

சந்தியா பதிப்பகம் 2014 இல் இவற்றை  ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் தான் ஏன் எழுதுகிறேன்  என்று சொல்லியிருப்பது அழகு ! மிக அழகு !

அவர்கள் கதைகளை  ஆராதிக்கும் நமக்கு அவர்கள் அவற்றை ஏன் எழுதினார்கள் என்று தெரிந்தால் இன்னும் நிறைவாக இருக்குமல்லவா?

சுருக்கமாக அவற்றைப் பார்ப்போம்:

ஒரு பிரபல ஆங்கில ஆசிரியர் கூறுகிறார்.

ஒரு எழுத்தாளனுக்கு தேவை நான்கே நான்கு. பார்வை, ஞாபகம், பிரதிபலிப்பு, திட்டம். மற்ற எல்லாமும் இவற்றை செப்பனிடச் செய்யும் கருவிகள் தான். 

நாம் தமிழ் ஆசான்கள் என்ன கூறுகிறார்கள்?

தி.ஜானகிராமன்:

ஏன்  எழுதுகிறாய் என்று கேட்பது  ஏன் சாப்பிடுகிறாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடுகிறோம். …

நான் எழுதுகிறது பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாக்ஷிண்யத்திற்காக,எனக்கே எனக்காக, கொஞ்சம்  எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு யாருக்கு என்று தெரியாமல்  – இப்படிப் பல மாதிரியாக எழுதுகிறேன்…. …

கடைசியில் பார்க்கும் பொழுது இத்தனை காரணங்களும் மூன்று குழிகளில் பிரிந்து விழுந்து விடுகின்றன…. …

எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும்     ..

.இந்த மூன்றும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே எழுத்தில் இருக்கிறார்போல சிலசமயம் ஒரு பிரமை ஏற்படலாம். அது பிரமை தான். உண்மையில்லை.

இரவு  எட்டு மணிக்கு காய்கறி வாங்கும் பொழுது, நேற்று மாலையில் வந்தது, இன்று காலையில் வந்து இன்று முழுதும் வெயிலில் காய்ந்தது, இன்று மாலை வந்தது மூன்றும் ஒரே குவியலாகக் கிடக்கும். ஆனால் சற்று உற்றுப் பார்த்து தொடாமல் கூட கலந்துகட்டி என்று கண்டுபிடித்து விடலாம். …

ஆனால் எனக்குத் தெரியும் எது கொம்பில் பழுத்தது ,   எதை நான் தடியால் அடித்து குடாப்பில் ஊதிப் பழுக்க வைத்திருக்கிறேன் என்று. எனக்காக நான் எழுதும் போது கொம்பில் பழுத்த பழம். நான் பண்ணிய தவத்தின் முனைப்பில் பழுத்த பழம் அது. … .. அது சில சமயம் …மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்கலாம். .. அந்த கருப்பு கசப்பு எல்லாம் அதன் அம்சம். இந்த தவத்தில் தான் என் சுயரூபம் எனக்குத்  தெரிகிறது.

இந்தக் கலை வடிவம் தான் என்னுடையது. என் தவத்தின் பெருமையைப் பொறுத்தது.  மூளியும் அதன் பெருமை. சட்டம் போட்டு என்னைப் பயமுறுத்தாதீர்கள்.  நான் உங்களுக்காக எழுதுகிறதைப் பற்றி நீங்கள் அந்த தீர்ப்பெல்லாம் சொல்லலாம். நான் கவலைப்படவில்லை. வாலைப் போட்டுவிட்டு  பல்லியைப் போல் தப்பிவிடுவேன்.

 

ஜெயகாந்தன்

 

 

நான் எழுதுவதே, ஏதோ தன்னியல்பாக – தெய்வ வரம் போல், அல்லது தெய்வ சாபம் போல் , என் ஆளுகைக்கு அப்பாலான ஏதோ ஒரு நிகழ்ச்சி போல் நிகழ்வாதா? ..

குறியும் நெறியுமில்லாத என்னிடம் உள்ள அதீத , அபூர்வ மனுஷ்வத்தில் கிளைப்பதா?

மலர் எதற்காகப் பூக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? என்றெல்லாம் அழகாக எனது நண்பரொருவர் என்னிடம் கேட்டாரே அது போலத் தானா ? அதெல்லாம் வெறும் ஹம்பக். …

நான் எழுதுவது முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெரும் கல்வியின் விளைவும் நாடு தனி முயற்சியின் பயனுமாகும். …

எனது ரோஜாக்கள் நண்பர் சுப்பிரமணியம் போன்றவர்களுக்கு எருக்க மலர்களாய்ப் படுகின்றன.

இவை எருக்கம் பூக்கள் அல்ல’ இவைகள் ரோஜாவும் மல்லிகையும் கடவுளர்க்கும் பிடித்த பாரிஜாத மலர்களுமாகும் என்று காட்டுவதற்காக , தாங்கள் எருக்கம் பூக்கள் தான் என்று எண்ணி குப்பையில் ஒதுங்கிக் கிடக்கும் அந்த மலர்களுக்கே அவற்றை உணர்த்துவதற்காக நான் எழுதுகிறேன். …

கலைத்தன்மைக்கு எந்தவித குறைவும் வராமல் கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்பு புதல்வனாகவும் இருந்து தான் நான் எழுதுகிறேன்.

சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன்.

எனது கொள்கையில் குறைவில்லாத போதும் எனது திறமைக் குறைவால் நான் தோற்றும் போகலாம். அது தோல்வியாகாது. போர்க்களத்தில் சந்தித்த மரணத்திற்கு நேராகும். என் கையில் இருக்கும் கோடி இன்று கேலி செய்யப்படலாம். பிடுங்கி எறியப்படலாம். ஆனால் அதுதான் நாளைய உலகில் எல்லோரின் தலைக்கு மேலும் பறக்கப்போகிறது. அந்த நாளைய உலகை நிர்மாணிக்கும் மகா சமுத்திரத்தில் நான் ஒரு துளி. என் எழுத்து ஒரு அலை.

(மற்றவர்கள் பிறகு)

 

 

இலக்கியவாசல் முதலாம் ஆண்டுவிழா அழைப்பிதழ்

நண்பர் கிருபானந்தனும் நானும் இணைந்து அமைத்த குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பு  நண்பர்களின் நல்லாதரவோடு  ஓராண்டைப் பூர்த்தி

செய்கிறது.

சென்ற வருடம் சித்திரைத் திங்களில் துவங்கிய இந்த வாசலுக்கு

 திருப்பூர்   கிருஷ்ணன், வா.வே.சு, ஜெயபாஸ்கரன், பிரபஞ்சன்,   பதின்மூன்று சிறுகதை ஆசிரியர்கள், நீரை அத்திப்பூ, சாரு நிவேதிதா, ஸ்ரீஜா வெங்கடேஷ், அசோகமித்திரன், அழகியசிங்கர், ரவி தமிழ்வாணன், பாம்பே கண்ணன், ஞாநி 

ஆகிய இலக்கிய வித்தகர்களுடன், மற்றும் பல இலக்கிய நண்பர்கள், வாசகர்கள்  வந்து சிறப்பித்தை நாங்கள் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறோம்.

இந்த நிகழ்வுகளின் வலைப் பதிவுகளையும் ஒலி வடிவங்களையும்

ilakkiyavaasal.blogspot.in  என்ற  வலைப்பூவில் பார்க்கலாம். கீழே உள்ள வலைப் பதிவுகளைச் சொடுக்கினால் தாங்கள் அந்த நிகழ்வின் புகைப்பட -ஓலி வடிவைக் கண்டு – கேட்டு ரசிக்கலாம்.

இந்த சித்திரை மாதத்தில் முதலாம் ஆண்டுவிழா சற்று பெரிய அளவில் நடைபெற உள்ளது. ” இயல் இசை நாடகம்” என்று மூணு நிகழ்ச்சிகள்

இயலுக்கு, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ,பிரபஞ்சன் என்ற இலக்கிய சிகரங்களைப் பேசக் கேட்டு  கவுரவிக்கிறோம்.

இசைக்கு  ஒரு வில்லுப்பாட்டு.

நாடகத்திற்கு , கோமல் சாமிநாதனின்  நாடகம்.

எங்கே ? எப்போது?

இந்த இதழின் கடைசிப்பக்கம் பார்க்க

 

தலையங்கம் -சூடு

panama copy

 

இந்தியாவில்  குறிப்பாகத் தமிழகத்தில் எங்கும் எதிலும் இப்போது சூடு பறக்கிறது !

மார்ச் ஏப்ரல் மாதத்திலேயே 100 டிகிரிக்கு மேல் கோடையின் தாக்கச் சூடு. கொதிக்கும் சாலைகள் தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்   துவங்கியுள்ளது.

பனாமா வெளியீட்டால் ஊழல் வாதிகள் உலகெங்கும் பறந்து கிடக்கிறார்கள் என்கிற சூடு!

கேரளாவில் கொல்லத்திற்கு அருகே பரவூர் தேவி கோவிலில் நடைபெற்ற வாண  வேடிக்கை விபரீதமாகி 110  க்கும் மேற்பட்டவர்களைப் பலி வாங்கிய சூடு !

( அந்தக் கொடுமையை இந்த வீடியோவில் பார்த்தால் அந்த சூட்டின் கொடுமை புரியும்! )

கொல்லம் கோவில் பட்டாசுத் தீ விபத்து

எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் சூடு வேற!

தமிழகம், கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் சூடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அண்ணா தி மு க வின் இரட்டை இலை எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

தி மு க கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் சில குட்டிக் கட்சிகள்.

விஜய்காந்த் கூட்டணியில் வை கோ, திருமாவளவன், இடது வலது சாரிகள் கடைசியாக வாசனின் த மா கா ,

பாட்டாளி கட்சி  தனியாக ,

பி ஜே பி  தன்னந் தனியாக

இப்படி ஐந்துமுனைப் போட்டி உருவாகியுள்ளது. இதனால் தேர்தல் சூடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கத்திரி வெயிலே தேவலாம் என்ற அளவில் இருக்கிறது தேர்தல் ஜுரம்.

இப்படிப் பலவித சூடுகள்!. நாம் எப்போதும் சூடு கண்ட பூனை ஆயிற்றே!  எததனை சூடு பட்டாலும் நமக்கு சூடு சொரணை வருமா?  தெரியவில்லை. ஆனால் ஓட்டுப் போடுவது நமது கடமை. ஐந்து முகங்களுடன் நோட்டா  ( 49 ஓ) சேர்த்து ஆறு முகங்கள் இருக்கின்றன.  விதியை மனதில் எண்ணிக்கொண்டு நமக்குப் பிடித்த முகத்தில் குத்துவோம். நடப்பது நடக்கட்டும். 

 

 

 

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா