Daily Archives: April 15, 2016
அலாரம் – அழகியசிங்கர்




ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )
ஷாலு சொன்னதைக் கேட்டு அதை என் மனசில் உள்வாங்கி நான் அதைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நேரம் பிடித்தது. அப்படியும் சரியாகப் புரியவில்லை.
இதற்கு ஷாலு அடிக்கடி சொல்லும் வார்த்தை – “இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். பொண்டாட்டி சொன்னா அதைப் புரிஞ்சிக்க முயற்சியே செய்ய மாட்டாங்க” இதற்குப் பதில் எப்பவும் என் மனசில் ஓடும் ‘ ஏம்மா, தாயிங்களா! புருஷன் காரன் புரிஞ்சிக்கிற மாதிரி என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா?” ஆனால் அதைச் சொல்லிவிட்டு அதனால் விளையும் பக்க விளைவுகளை நன்றாகப் புரிந்துகொண்டதால் அந்தப் பதில் மண்டையில் உருவாகி தொண்டையிலேயே நின்றுவிடும் .
அதுக்கு மேலே போய் “உங்களுக்கெல்லால் எதையும் ரெண்டாந்தரம் சொன்னாத் தான் புரியும். ஏன்னா முதல் தரம் எதைச் சொன்னாலும் நீங்க அதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டீங்க! ” இந்த டயலாக்கை எப்போ கேட்டாலும் எனக்கு ரெண்டாம் தாரம் – முதல் தாரம் அப்படின்னு காதில் விழுந்து நமுட்டுச் சிரிப்பு வரும். அதைப் பாத்தா ஷாலுவுக்குப் பத்திக்கிட்டு வரும்.
சமீபத்தில வாட்ஸ் அப்பில ஒரு ஜோக் வந்திருந்தது. மனைவிக்கும் கேர்ள் பிரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று விலாவாரியா சொல்லியிருந்தாங்க.
மனைவி இருக்கா.ளே அவ டி வி மாதிரி. கேர்ல்பிரண்ட் மொபைல் மாதிரி.
வீட்டிலே டிவி பாப்போம். ஆனால் வெளியே போகும் போது மொபைலத் தான் எடுத்துக்கிட்டு போவோம்.
சிலசமயம் டிவி ஐப் பார்த்து ரசிப்போம். அதுவும் புதுசா வந்த போது. ஆனால் மொபைலோடத் தான் எப்பவும் விளையாடிக் கிட்டே இருப்போம்.
டிவி ஆயுசுக்கும் ப்ரீ. ஆனால் மொபைலுக்கு நீங்க சரியா பணம் போடலைன்னா கனெக்ஷன் துண்டாயிடும்
டிவி எப்பவும் பெருசா குண்டா இருக்கும். சிலது ஒல்லியா குச்சி மாதிரியும் இருக்கும். ஆனால் எல்லாம் பழசு. மொபைல் கவர்ச்சியா வளைவும் சுழியுமா கைக்கு அடக்கமா இருக்கும்.
என்ன, டிவிக்கு செலவு கொஞ்சம் கம்மி தான். ஆனால் மொபைல் உபயோகத்துக்கு தகுந்த மாதிரி செலவும் எகிறிக் கிட்டே போகும்.
மொபைல்ல இன்னொரு சவுகரியம். அதுக்கு ரிமோட் கிடையாது.
முக்கியமான சமாசாரம். மொபைல்ல கேட்கவும் செய்யலாம். பேசவும் செய்யலாம். ஆனால் டிவி , அது மட்டும் தான் பேசிக்கிட்டே இருக்கும். பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கேட்டுத்தான் ஆகணும்.
டிவியை கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா தான் நமக்கு நல்லது. மொபைல் அப்படி இல்லே. நெருக்கமா பாக்கெட்டில வைச்சுக்கலாம்.
இதை ஷாலு கிட்டே படிச்சுக் காட்டினேன். ” ஆனாலும் இந்த ஆம்பிளைங்களுக்கு ஏன் புத்தி இவ்வளவு சீப்பா போகிறது? நாங்களும் தான் மொபைல் வச்சுக்கிறோம். எப்பவாவது அதை பாய் பிரண்டு . புருஷன்காரனை குத்துக்கல்லு, கிரிக்கெட் பாக்கிற மிஷின், தின்னுட்டு தூங்கற ஜடம், கம்ப்யூட்டர் பைத்தியம், பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கிற ஆந்தை, ஜொள்ளு பைப் அப்படின்னு அடிக்கடி சொல்றோமா?” என்று அடி மேல் அடி போட்டுத் தாக்கினாள்.
சும்மா ஒரு ஜோக் சொன்னா இப்படிக் கோவிச்சுக்கிறியே?
பெண்கள்னா உங்களுக்கு எப்பவுமே இளக்காரம். நானும் ஆம்பளைங்களைப் பத்திச் சொல்லுறேன் கேட்டுக்கோங்கோ ! நாங்க நாலு பெண்கள் சந்திச்சா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்குவோம் ! ஆனா நீங்க தடியா, மாமு, லூசுன்னு அப்படன்னு தானே கூப்பிடறீங்க?
அது சரி, நாங்க எங்களுக்குத் தேவையானா பத்து ரூபாய் பெருமான சாமானை 20 ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஆனா நீங்க 20 ரூபாய் சாமானை 10 ரூபாய்க்கு உங்களுக்குத் தேவையில்லாட்டி கூட தள்ளூபடின்னா வாங்குவீங்க!
இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே! நாங்க ஏன் உங்க மாதிரி ஆட்களைக் கல்யாணம் பண்ணிக்கறோம்னு தெரியுமா? அதுக்கக்கப்பறமாவது நீங்க திருந்துவீங்கன்னு தான். ஆனா நீங்க மாறறதேயில்லை.
நாங்க ஏன் உங்களைக் கல்யாணாமா செஞ்சுகறோம்னு தெரியுமா? நீங்க முன்னாடி இருந்த மாதிரி தேவதையா எப்பவும் மாறாம இருப்பீங்கன்னு நினைச்சு தான். ஆனா நீங்க கல்யாணம் ஆன உடனே பத்ரகாளியா மாறிடறீங்க!
அதுக்கு என்ன காரணம் தெரியுமா? நாங்க கல்யாணம் ஆகிற வரைக்கும் எப்பவும் எங்க எதிர்கால நிலமையை நினைச்சு பயந்துகிட்டிருப்போம்.
ஆனா , எங்களுக்கு எங்க எதிர்காலத்தைப் பத்திய கவலையே கல்யாணத்துக்கு அப்புறம் தான் வருது.
அது எப்படியோ போகட்டும்! நாங்க எப்பவும் எவ்வளவு டீஸண்டா டிரஸ் பண்ணிக்கறோம். நீங்க எப்பவும் லுங்கி -கிழிசல் பனியன் தான். கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது.
அதெல்லாம் விடு, நீங்க எத்தனை தடவை டிரஸ் மாத்துவீங்க ? காலையில எந்திரிச்சதும்,, குளிச்சிட்டு வந்ததும். கோவிலுக்கு போகும் போது , குப்பையைக் கொட்டும் போது , புஸ்தகம் படிக்கும் போது, செடிக்கு தண்ணி ஊத்தும் போது – இப்படி ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ். தேவை தானா? நாங்க கல்யாணத்துக்கோ எழவுக்கோ போனா தான் டிரஸ்சே மாத்திக்கறோம்.
நிறுத்துங்க ! உங்களுக்கு நம்ம ஷாலினி ,ஷ்யாம் அவங்களைப் பத்தி என்ன தெரியும்? போன காப்பரிக்ஷையில ரெண்டு பேரும் என்ன ரேங்க் வாங்கினாங்கன்னு சொல்லுங்க பாப்போம்.
ரேங்க் கார்டை என் கண்ணிலே காட்டவே இல்லையே ?
உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது. இதைப் பத்தி தான் போன மாசம் எங்க மகிளா சபாவிலே .. “
இத நான் நூறு தடவை கேட்டுட்டேன். அதுக்கு மேல கேக்கிற பொறுமை எனக்கு அப்போ இல்லை.
அதெல்லாம் விடு, ஷாலு, உன்னோட புது போஸ்ட் பத்தி நீ சொன்னது உண்மையா? நீ தமிழகக் கோமாதா-காமதேனு முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ யா? GKMK பேரு நல்லா இருக்கு.
“சே! எவ்வளவு பெரிய கான்செப்ட். அதைப் போய் இப்படிக் கழகம், கொ.பா.செ ஈனு கொச்சையா சொல்றீங்களே? பை த பை , அதென்ன கொ.ப.செ. கேட்டு ரொம்ப நாளாச்சு?
கொள்கை பரப்புச் செயலாளர். அம்மாவுக்கு அந்தக் காலத்தில எம்.ஜி.ஆர் இருந்த போது கிடைச்ச போஸ்ட். அது என்ன கோமாதா? காமதேனு? நீ கொஞ்சம் விவரமா சொன்னாத் தானே புரியும்? என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டேன். இனிமே அரை மணிக்கு ஷாலுவை யாரும் நிறுத்தமுடியாது.
டி வி ஆரம்பமாகிவிட்டது.
உங்களுக்குப் புரியற மாதிரி விளக்கமா சொல்றேன். நடுவில குறுக்க பேசக்கூடாது.
நாங்க சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி வீட்டிலே ஆபூஜை பண்ணினோமே ஞாபகம் இருக்கா?
எனக்கு ஆயுத பூஜை தான் சட்டென்று ஞாபகம் வந்தது. அப்பறம் தான் குருஜினியும் இவளும் சேர்ந்து கோமாதா பூஜை செய்தது ஞாபகம் வந்தது. அதிலிருந்து அவ ஆரம்பிச்சா இன்னும் மூணு மணிநேரம் பழைய சரஸ்வதி சபதம் மாதிரி ‘கோமாதா வண்ணக் குல மாதா’ அப்படின்னு ஈஸ்ட்மேன் கலரில் ஆரம்பிச்சிடுவா. அதனாலே பேச்சை மாற்றி , “அதில்லை. ஷாலு, சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் மோடிஜியை பாத்ததிலிருந்து சொல்லு.”
ஒரு பத்துப் பதினைஞ்சு நாளை பாஸ்ட் பார்வேர்ட் செய்ய முயற்சித்தேன்.
உங்களுக்கு நல்லா புரியனும்னா அந்த பூஜையிலிருந்து தான் ஆரம்பிக்கணும்.
விதி வலிது தான். சும்மாவா சொன்னாங்க ‘மனைவியோட ஆர்கியூ பண்ணற போது கடைசி ஆர்குமெண்ட் அவளோடது தான். அதுக்கப்பறம் கணவன் பேசறதெல்லாம் அடுத்த ஆர்கியூமெண்டுக்கு ஆரம்பம்’ என்று. ஷாலு அப்படித்தான். ஏதோ ஒரு படம் வந்ததே. அது என்னா ஸ்பீட் இல்லே அன்ஸ்டாப்பபிள் . ஒரு ரயில் நிக்காமே ஓடிக்கிட்டிருக்குமே. அது தான் ஷாலு.
” சும்மா இருங்க! நம்ம குருஜினி நம்ம வீட்டிலே ஆபூஜை செஞ்ச நியூஸ் டெல்லி வரைக்கும் போயிடுச்சு. அதனால தான் குருஜினியை சென்னை ஏர்போர்ட்டிலே உலக யோக தினத்தில யோகா எல்லாம் செய்யச்சொன்னாங்க. நாங்க சிங்கப்பூர் போற அன்னிக்கு அதைச் செஞ்சதில மோடிஜி ரொம்ப குஷி ஆயிட்டாராம். அதனால எங்களை சிங்கப்பூரிலேயே பாக்கணும்னு திட்டம் போட்டாராம். ஆனா அவர் வந்து சேர்ர அன்னைக்குத் தான் நாங்க அங்கிருந்து கிளம்பற நாள். அன்னிக்கு சிங்கப்பூரில அவர் எக்கச்சக்கமான ஒப்பந்ததிலே கையெழுத்து வேற போடணுமாம்.
சரி, அடுத்த நாளைக்கு நான் பிரயாணத்தைச் சேஞ்ச் பண்ணிக்கலாம்னு பாத்தா எங்க விசா அன்னிக்கோடா முடிஞ்சு போகுது. அதனால ஏர்போர்ட்டில சந்திக்க முடிவு செஞ்சோம். டெல்லி பஜ்ரங்க்பலி அங்கிள் தான் போனிலே குருஜினியோட பேசி எல்லா ஏற்பாடும் செஞ்சார்.
சிங்கப்பூர் ஏர்போர்ட்டிலே நானும் குருஜினியும் வி ஐ பி லவுஞ்சில் உக்காந்திருக்கோம். சுத்திலும் செக்யூரிட்டி. எனக்கு ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கிட்டிருந்தது. குருஜினியோ அலட்டிக்காம தைரியமா இருந்தாங்க. அப்போ தான் சொன்னாங்க. “எனக்கு மோடிஜியை ரொம்ப வருஷமா தெரியும். அவர் காந்திநகரில முதன் முதலா முதல் அமைச்சரா ஆன போது வாழ்த்து சொன்ன முதல் ஆள் நான் தான். அப்போ அவர் வீட்டுக்கு எதுத்தாப்போல இருந்த ‘க பார்க்கில’ கோமாதா பூஜை செஞ்சுகிட்டிருந்தேன். ( ஷாலுவின் எக்ஸ்ட்ரா நியூஸ்: அந்த ஊரில ரோட்டுக்கு சர்க்கிளுக்குப் பேர் எல்லாம் க, கா, கி, கீ , என்று இருக்குமாம்.)
நடுவில நான் ஒரு கேள்வி மடத் தனமா கேட்டதில குருஜினிக்குக் கெட்ட கோபம் வந்திடிச்சு தெரியுமா?
எனக்கெப்படித் தெரியும்? நீ வழக்கமா கேக்கற மாதிரி கேட்டிருப்பே?
கதை சொல்ற ஜோரில் என்னோட கிண்டலை அவ கவனிக்கவில்லை. அதனால நான் தப்பிச்சேன்
“மோடிஜி எப்ப அடையார் காந்திநகரில் இருந்தார்னு கேட்டேன்”
இப்படிக் கேட்டா குருஜினிக்கென்ன, எனக்கே கோபம் வரும். குஜராத்தின் கேபிடல் காந்திநகர்னு தெரியாதா? ஜியாக்கிரபி கிளாசில அதைச் சாய்ஸில விட்டிட்டியா? இனிமே ஷிவானிக்கு வேற டீச்சர் பாக்க வேண்டியது தான்.
“எல்லாம் தெரிஞ்சவங்க நீங்களே இனிமே ஷிவானிக்கும் ஷியாமுக்கும் பாடம் சொல்லிக் குடுங்க. இனிமே எனக்கு எக்கச்சக்க வேலை இருக்கு”
இப்போ நான் ஜகா வாங்கவேண்டிய நேரம்.
” அத்தை விடு ஷாலும்மா, நீ மோடிஜியை மீட் பண்ணினதைப் பத்தி இன்னும் சொல்லவே இல்லையே?
அந்த கோமாதா பூஜை பிரசாதத்தை குருஜினி மோடிஜி கிட்டே கொடுத்த அன்னிக்கு தான் அவர் சி எம் ஆகிட்டாராம். அதே மாதிரி 2014இல் குருஜினி டெல்லியில கோமாதா பூஜை செஞ்சு மோடிஜி கிட்டே பிரசாதம் குடுத்த அன்னிக்கு தான் அவர் பி எம் என்ற நியூஸ் வந்ததாம். இதைப் பத்தி என்ன சொல்றீங்க? ரெண்டு தடவையும் பஜ்ரங்கி அங்கிள் தான் கூடவே இருந்திருக்காராம்.
என்ன சொல்வது? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைன்னு ஷாலுக்கிட்டே அப்போ சொல்ற தைரியம் எனக்கில்லே .
அப்படி நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது மோடிஜி அந்த ல
வுஞ்சுக்கு வந்தார். எனக்கு அப்படியே “36 வயதினிலே ” ஜோதிகா மாதிரி மயக்கம் போட்டு விழுந்திடுவேனோன்னு பயம் வந்திடுச்சு. தலை சுத்தற மாதிரி இருந்தது.
கொஞ்சம் இருங்கோ ஷிவானி கூப்பிடற மாதிரி இருக்கு.” என்று என்னை சஸ்பென்ஸ் லவுஞ்சில் நிறுத்தி விட்டு ஷாலு பறந்துவிட்டாள்.
எப்பவும் அவ இப்படித்தான். நல்ல மூடிலே இருக்கும்
போது ‘ போன் அடிக்கிற மாதிரி இருக்கு . எங்க அப்பாவாத் தான் இருக்கும் ‘ னு ஓடிப் போய் விடுவாள்,
“காத்திருந்தேன்.. காத்திருந்தேன்.. “
குறும்படம்
கருணாகரன் நடிக்கும் நலனின் இந்தக் குறும் படத்தைப் பாருங்கள்!
குறும்படம் எடுப்பதைப் பற்றியே ஒரு குறும்படமா?
நல்லாவே இருக்கு !
டூன் .. டூன் .. புதிய கார்ட்டூன் – லதா ரகுநாதன்
மூன்று சகோதரிகள் – சிறுகதை – ராமன்
இந்த மூன்று பாறை வடிவமைப்பு ‘தி த்ரீ சிஸ்டெர்ஸ்’ – மூன்று சகோதரிகள் என்று அழைக்கப்படும். இருக்குமிடம் ஆஸ்ட்ரேலியா ‘ந்யூ சௌத் வேல்ஸ்’ மாகாணத்தின் கடூம்பா பகுதியில் ‘ப்ளு மௌண்டன்’ மலைத் தொடர்களில் ‘எக்கோ பாயிண்ட்’டில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேல் கம்பீரமாக இருக்கும் அடுத்து அடுத்து அமைந்துள்ள இந்த மூன்று பாறை அமைப்பு ஆஸ்ட்ரேலியாவின் சுற்றுலா தளங்களின் முக்கிய இடங்களில் ஒன்று. மூன்று சகோதரிகளின் தனித்தன்மை நாள் முழுவதும் சூரிய கிரணங்களினால் வெவ்வேறாக மாறி பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன.
இந்த இடத்திற்கு ஆஸ்ட்ரேலியா ஆதிவாசிகளான அபரிஜினி குடிமக்களின் பழங்கால மரபுக் கதைகள் இரண்டு உள்ளன. இரண்டிலும் காரணங்கள், பாத்திரங்களின் பெயர்கள், முடிவுகள் ஒரே மாதிரியாய் இருப்பதால் அவைகளில் ஒன்றை மட்டும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.
கடூம்பா ஜமைசன் பள்ளத்தாக்கு ஆதிவாசிகளின் குடியில் ‘மீனி’ ‘விம்லா’ ‘குன்னெடூ’ என்று கன்னிபெண்களான மூன்று சகோதரிகள் வசித்து வந்தனர். இந்த அழகிய சகோதரிகள் நேப்பியன் ஆதிவாசிகளின் குடியில் வசித்த மூன்று சகோதர்களுக்கு தமது உள்ளங்களைப் பறிகொடுத்தனர். ஆனால் ஆதிவாசிகளின் கட்டுப்பாடுகள் அதற்கு இடம் தரவில்லை.
சகோதரர்களின் காதல் அவர்கள் கண்களை மறைத்தன. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மூன்று சகோதரிகளையும் கட்டாயப்படுத்திக் கைப்பற்ற அவர்கள் முயன்றதால் அந்த செய்கை இரு ஆதிவாசிகளுக்குள்ளும் பெரிய யுத்தத்தை ஏற்படுத்தியது.
அந்த மூன்று சகோதரிகளுக்கும் பெரிய ஆபத்து நிகழப்போவதை அறிந்த கடூம்பா பள்ளத்தாக்கு மந்திரவாதி அவர்களை ஆபத்திலிருந்து மீட்க மூன்று கல் பாறைகளாக சமைத்துவிட்டான். யுத்தம் முடிந்ததும் மீண்டும் அவர்களை மீட்டுக் கன்னிப் பெண்களாக மாற்ற எண்ணியிருந்தான். யுத்தம் முடிவதற்குள் அவன் மாண்டே போனான். அவன் ஒருவனால் மட்டுமே கற்களாய் சமைந்துவிட்ட சகோதரிகளை மறுபடி அழகிய கன்னிகளாய் மாற்ற இயலும்! அது இயலாததால் கன்னிகள் இன்றும் மூன்று கல் பாறைகளாகவே இருந்து வருகின்றனர்.
இப்போது The Great Continent Drift theory பற்றி ஒரு சிறு தொகுப்பு! பல மிலியன் நூற்றண்டுகளுக்கு முன் உலகின் ஏழு கண்டங்கள் உருவாவதற்கு முன் ஒரே ஒரு கண்டம் உலகின் தென் கோடியில் இருந்ததாக கூறப்படுகிறாது. அதன் பெயர் காண்ட்வானா. பிறகு மெதுவாக கண்டத்தின் பகுதிகள் வடக்கு நோக்கி ஆசைந்து அசைந்து மேலே சென்று இன்றைய கண்டங்களான வடக்கு அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா உருவாகியன. பின் ஆஸ்ட்ரேலியாவின் வட கிழக்கிலிருந்து ஒரு பகுதி மேலெழும்பி ஆசியாவின் தென் பகுதியில் மோதி இன்றைய இந்தியா
உருவானது. இது 1915ன் ஆல்ஃப்ரெட் வெகெனெர் என்ற புவி தரை தோற்றவியலாளரின் தொகுப்பு.
ஆஸ்ட்ரேலியாவின் வடகிழக்கில் ஒரு விரிசல் இருப்பதைக் காணலாம். இந்த விரிசலும் இந்தியாவின் தீபகற்ப பகுதியும் சரியாக பொருந்துவது அந்த தொகுப்பை உறுதி செய்கிறது. ஆஸ்ட்ரேலியாவின் அபரிஜினியின் உடல் தோற்றம் கிட்டத்தட்ட தென் இந்திய இந்தியர்களின் தோற்றத்தை ஒத்து இருக்கிறது. சைவர்கள் வீபூதியை உடம்பில் பூசிக்கொள்வது போல அபரிஜினி சாம்பலை உடலில் பூசிக்கொள்ளுகிறார்கள். அவர்கள் மரபுக் கதைகள் இந்திய புராதன கதைகள் போல இருக்கின்றன. அவர்களின் உதடுகள் பெரியதாக உள்ளன. மேலும் இந்தியர்களை விட கருப்பு மிகுந்தவர்களாய் காணப்படுகிறார்கள்.
மரபுக்கதையில் வரும் பெயர் விம்லா நமது விமலாவா? மீனி கிட்டத்தட்ட நமது மீனாவாக இல்ல? மற்றும் தோற்ற ஒற்றுமைகளையும் சில செயல்பாடுகளைப் பார்க்கும்போது நமக்கும் அபரிஜினிகளுக்கும் தொடர்பு இருக்கக்கூடுமா?
சரித்திரம் பேசுகிறது ( யாரோ)
சந்திரகுப்த மௌரியர்
அலெக்சாண்டர் சென்ற பிறகு இந்தியாவில் பெரும் சரித்திர நிகழ்வுகள் நடந்தன. ஒரு மாபெரும் அரசாட்சி மறைந்து மற்றொரு பிரம்மாண்டமான அரச வம்சம் துவங்கியது. சந்திரகுப்த மௌரியர் அதன் நாயகர். அது பற்றி இன்று ஆராய்வோம்..
இராமன் கதை சொல்ல வேண்டுமென்றால் இராவணன் கதை சொல்வது அவசியமாகும். ஆக – சந்திரகுப்த மௌரியரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் – நந்த அரசாட்சியைப் பற்றி முதலில் சொல்லியே ஆகவேண்டும்.
அலெக்சாண்டர் வேண்டுமென்றால் பயப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது சேனை – நந்தர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு – நடுநடுங்கினர். குறிப்பாக நந்தர்களது சேனை (காலாட்படை: 200000 குதிரைப்படை: 80000 ரதப்படை: 8000; யானைப்படை: 6000) பலம் கண்டு – நொந்தனர். போரஸின் 30 யானைகளே அவர்களைப் படுத்தி எடுத்தது என்றால் – 6000 யானைகளா? ஆள விடுங்க சாமி- என்றனர். அவ்வளவு சக்தி வாய்ந்தது தன நந்தனின் படை பலம்.
நந்தர்களின் ஆட்சி – வங்காளம் முதல் பஞ்சாப் வரையிலும் பரவியிருந்தது. தெற்கே விந்திய மலை வரை விரிந்திருந்தது. அவர்களது அபரிமிதமான செல்வக் குவிப்பு அவர்களது புகழை(?)க் கூட்டியது. தமிழ் நாட்டில் சங்கத்தமிழ்ப் புலவர் மாமூலனார் நந்தர்களது தலைநகரான பாடலிபுத்திரத்தைப் பற்றியும் நந்தர்களது செல்வச் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார்.
பல முதல்கள்:
மகாபத்ம நந்தன் – ‘முதல்’ நந்தன். இந்திய சரித்திரத்தில் க்ஷத்ரியரல்லாத ‘முதல்’ அரசன். அவன் ஆட்சிக்குப் பின்னர் மகன் தன நந்தன் அரசனானான். பெயரிலேயே ‘தனம்’ (‘நிதி’ J ).இவர்கள் இருவரும் இந்தியாவின் ‘முதல்’ மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். மக்களை மிரட்டி – இரக்கமில்லாமல் வரி வசூல் செய்து – பெரும் செல்வம் சேர்த்து மக்கள் மத்தியில் செல்வாக்கற்றிருந்தனர். இவர்கள் செய்த ஊழல் – இன்றைய 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை விடப் பெரியது! இவர்கள் தான் உலகின் ‘முதல்’ அரசியல்வாதிகள் போலும்.
அலெக்சாண்டரால் வெல்ல இயலாத நந்தர்களை – 20 வயதான சந்திரகுப்த மௌரியர் வென்றார். அலெக்ஸாண்டருக்குப் பிறகு வந்த கிரேக்கர்களையும் வென்றார். அவரை இந்தியாவின் ஜுலியஸ் ஸீசர் என்கிறார்கள் (உண்மையில் ஜுலியஸ் ஸீசரை ரோமின் சந்திரகுப்தர் என்றல்லவா கூறவேண்டும்!!)
சந்திரகுப்தர் பாடலிபுத்திரத்தில் பிறந்தார். தகப்பனார் அரச குல க்ஷத்ரியர் என்றும் தாயார் சூத்திரக் குடும்பத்தினர் என்றும் அறியப்படுகிறது.
இந்த சரித்திர சம்பவங்களைப் பார்க்கும்போது கல்கி அல்லது சாண்டில்யன் இதை எழுதவில்லையே என்று என் மனம் ஏங்குகிறது.
நீங்கள் ஏன் ஏங்க வேண்டும்!
‘யாரோ’ எழுத இருக்க உங்களுக்கு அந்தக் கவலை ஏன்? J
மேலே படியுங்கள்!
இந்தியாவின் காவலன்
“என்ன பேறு பெற்றேனோ?!” -வியந்தான் அந்த இளைஞன்.
அவனது வியப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை! தனக்கு முதலில் கல்வி கற்கக் கிடைத்ததோ உலகின் ‘முதல்’ பல்கலைக் கழகம். அதுவும் முதல் தரமான ஒன்று. பிரம்மாண்டமானது. பதினாயிரம் மாணவர்கள் கற்கும் உன்னதமான கல்விச் சாலை. கிரேக்கர்கள், பாபிலோனியர்கள், சீனர்கள் தவிர இந்திய நாட்டினர் என்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்!
தக்ஷசீலம்!
கற்களாலே கோட்டை போல் அமைந்திருந்த பாடசாலைகள். மரங்கள் பாதை ஓரத்தை அலங்கரிக்க அலை அலையாக அதில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாட சாலைக்குச் செல்லும் அழகே அழகு! மயில்கள் சாலை ஓரம் தத்தி தத்தி நடை பழகியது.
முகப்பு மண்டபத்தில் பல வண்ண ஓவியங்கள் தொங்கின. அந்த இளைஞன் அந்த படங்களை வெகு ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மாலை வெயிலில் அந்த ஓவியங்கள் தங்க முலாம் தீட்டியது போல் தக தகத்தது -மின்னியது. தினமும் பார்த்த ஓவியங்கள் தான் என்றாலும் அவன் மனதில் அன்றும் அவை பிரமிப்பை ஊட்டத் தயங்கவில்லை.
அந்த படங்கள் எல்லாம் அந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணாக்கர்கள். எப்படிப்பட்ட மாணாக்கர்கள் அவர்கள் என்றால் – அவர்கள் மாணாக்கர்களாக இருந்து பின்னர் அங்கேயே ஆசிரியராகி உலகிற்கே பெருமை சேர்த்தவர்கள்!
முதல் ஓவியத்தில் பணிநி (Panini) –சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் அமைத்தவர்! அதன் விதிகளை அமைத்தவர்!
அடுத்து சராகா (Charaka) – ஒரு ஆயுர்வேத மருத்துவர்! இவரது சராகா சாமிதா (Charaka Samhita) இன்றைய ஆயுர்வேதத்திற்கே மூலமாக உள்ளது.
ஜீவக் – ஆஹா! இந்த ஆயுர்வேத மருத்துவர் – புத்தருடைய நோயைக் குணமாக்கியவர்! இவரது அறுவை சிகிச்சை பற்றிப் பேசாத வாயே இல்லையே! அமராப்பள்ளி என்ற உலகப் பேரழகியை * (சென்ற குவிகம் இதழில் இவள் அழகைப் பற்றி ‘யாரோ’ எழுதியிருந்தார்) இளமை குன்றாமல் காத்து சிகிச்சை செய்தவர்! உலகின் முதல் Plastic surgeon போலும்!
அடுத்த ஓவியம் விஷ்ணு ஷர்மா- அரசியல் துறையில் புரட்சி செய்த ‘பஞ்ச தந்திர’ கதைகளால் பெரும் புகழ் பெற்றவர்!
பலப்பல ஓவியங்கள் கடந்து வந்தான் அந்த இளைஞன்.
கடைசியாக ஒரு ஓவியம் பாதி வரையப்பட்டிருந்தது.
அதன் ஓவியர் அதன் அருகிலே அமர்ந்து தூரிகையை வண்ணத்தில் தோய்த்துக் கொண்டு இருந்தார்.
“ஐயா. இது யார் ஓவியம்?”
“நீ யாரப்பா?” – ஓவியர்
“என் பெயர் சந்திரகுப்தன். இங்கு அரசியல் பாடம் பயில்கிறேன்”
“சரியான ஓவியத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்! – இது நீ இதுவரை பார்த்த படங்களில் இருப்பவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் இல்லை… மேலும் அரசியல் பாடத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் இவரை விடப் பெரிய மேதை இன்று இவ்வுலகில் யாரும் இல்லை”
சந்திரகுப்தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்:
“அலெக்சாண்டர் தக்ஷசீலம் வாசல் வரை வந்து விட்டாரே! அவரை வெல்ல முடியுமா இவரது ராஜதந்திரத்தால்”
“அவரிடமே கேட்டுப்பார்” – ஓவியர் குரலில் பெரும் நம்பிக்கை ஜொலித்தது.
“அவர் எங்கே இருக்கிறார்? யார் அவர்?” சந்திரகுப்தன் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
“அவர் பெயர் விஷ்ணு குப்தர். சாணக்யா என்றே அனைவரும் அழைப்பர்.
இதே ஊரில் குரு குல பள்ளி ஒன்று நடத்தி வருகிறார்”
“நன்றி ஓவியரே..ஆமாம்…என் படம் ஒன்றும் வரைவீரா?” சந்திரகுப்தன் சிரிக்கவில்லை.
“அது நீ என்ன சாதிக்கிறாய் என்பதைப் பொறுத்தது”- ஓவியர் சிரித்தார்
“வரும் கிரேக்க எதிரிகள் அனைவரையும் நம் நாட்டிலிருந்தே ஒழித்து கொடுங்கோல் மன்னன் தன நந்தனையும் வென்றால்?” சந்திரகுப்தன் மெல்லச் சிரித்தான். அதில் உறுதியும் இருந்தது.
ஓவியன் (மனதில் ‘கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ என்று விளம்பரம் ஓடியது?) திகைத்துப்போனான். இந்த வாலிபன் உடல் வலிவு மட்டுமல்ல நெஞ்சத் துணிவும், கொள்கையும் கொண்டவன் தான் போலும்…
“அதைச் செய்தால் என் ஓவியம் மட்டுமல்ல – இந்திய சரித்திரத்திலேயே உனக்கு இடம் உண்டு..”
மயில் ஒன்று தவழ்ந்து வந்து சந்திரகுப்தன் அருகில் நின்றது. சந்திரகுப்தன் அதைத் தொட்டு என்ன மாயம் செய்தானோ, மயில் தோகை விரித்து ஆடியது.
ஓவியன் வியந்து போனான்.
“மயிலைப் பழக்குவது எங்கள் குலத்தொழில்” – சந்திரகுப்தன்.
“அப்படியானால், நீ சொன்னபடியே நீ மன்னனால்… உனது வம்சம் மௌரியர் (மயில்) என்றழைக்கப்படட்டும்”
அவனது சொல் சரித்திரத்தில் இடம் பெறும் என்று அந்த ஓவியன் கனவு கூட கண்டதில்லை.
அதற்கு மேலும் சந்திரகுப்தனுக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை. சாணக்கியரை சந்திக்க விருப்பம் கொண்டு ஓவியரிடம் விடை பெற்றான்.
மாலை வெயில் மறைந்து இருள் மெல்லப் பரவத் தொடங்கியிருந்தது.
சந்திரகுப்தன் வேகமாக நடந்து தனது குதிரை கட்டப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றான். குதிரையில் ஏறி வழி விசாரித்துச் செல்ல சற்றே தாமதமாகியது. இருள் கவ்வி நின்றது.
சாணக்கியரின் பெருங்குடில் அடைந்து கதவைத் தட்டப்போனான். அப்பொழுது சாணக்கியரின் வாசலில் இரண்டு குதிரை பூட்டிய ரதம் ஒன்று வந்து நின்றது. வாசலில் பத்து வீரர்கள் வேல் பிடித்துக் காவல் காக்கத் தொடங்கினர், சந்திரகுப்தன் அது தக்ஷசீல மன்னன் அம்பியின் ரதம் என்று உணர்ந்தான். சற்றே ஒளிந்து மறைந்தான். அம்பி உள்ளே சென்று சாணக்கியரிடம் பேசத் தொடங்கினான். அவன் குரலில் பெரும் பதட்டம் இருந்தது. உள்ளே பேசுவது சந்திரகுப்தனுக்கு மெல்லக் கேட்டது. அலெக்சாண்டர் படையுடன் நாடு வாசல் நெருங்கியது பற்றிக் கூறி – என்ன செய்யலாம் என்று கேட்டான். சாணக்கியன் – எதிர்த்துப் போரிடுவது தான் சரியான முடிவு என்றான்.
அம்பி: “விஷ்ணு குப்தரே… அலெக்சாண்டரின் பிரதாபங்கள் நீங்கள் கேள்விப்படவில்லையா? பாரசீக மன்னர் எவ்வளவு பலம் பொருந்தியவர். அவரையே வீழ்த்தினானாமே? நகரங்கள் பல எரிந்து மக்கள் மடிந்தனரே!” சொல்லும்போதே அம்பியின் குரல் நடுங்கியது!
சாணக்கியர் – அம்பி அலெக்ஸாண்டரை எதிர்ப்பது எவ்வளவு அவசியமாகும் என்று பல விதமாக அறிவுரை கூறியும் அம்பி அதை ஏற்கவில்லை. அவன் உடல் முழுவதும் பயம் ஒன்றே பரவி இருந்தது.
சற்று நேரத்தில் அம்பி வெகு சோகமாகக் குடிலை விட்டு வெளியேறினான். ரதத்தில் புறப்பட்டுச் சென்றான்.
சட்டென்று ஒரு கரம் சந்திரகுப்தனின் தோளைப் பிடித்தது. அது சாணக்கியன் கரம். ஒரு பிராம்மணனின் கரத்திற்கு இவ்வளவு சக்தியா!
“ஐயா வணக்கம்” – சந்திரகுப்தன்.
“சந்திரகுப்தா, இங்கு என்ன ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்? இது அரச சமாசாரம்!”
சந்திரகுப்தனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
‘உங்களுக்கு என் பெயர்?”
“நீ இங்கு ஒளிந்த போதே நீ யார் என்பதை அறிந்தேன். நீ நந்த குலத்தில் பிறந்தவன். 20 வயதே ஆனாலும் மாவீரன். ஒரே நேரம் 20 எதிரிகளுடன் போரிட்டு வெல்லக்கூடியவன். இதை தக்ஷசீலப் பல்கலைக்கழகத்துப் போர் பயிற்சி சாலையில் நீ செய்யும்போது நான் பார்த்திருக்கிறேன். போர்க்கலையில் பெரும் திறமை சாலி. மக்களாதித்துவத்தில் (leadership) மிகச் சிறந்தவன். அம்பி போல் இல்லாமல் – பயமற்றவன். கொள்கை உள்ளவன்…” என்று சிலாகித்துக்கொண்டே போனார்.
சந்திரகுப்தன் சிறிது வெட்கமும் பெரும் பிரமிப்பும் அடைந்தான்.
“என்னைப்பற்றி இவ்வளவு விபரம்..எப்படி…”
“அரசியலில் இது ரொம்ப சகஜமப்பா! ஒற்று அறிவது அரசியலின் முக்கிய அங்கம். உன்னைப்போன்ற திறமைசாலிகளைக் கண்டெடுத்து அவர்களுக்குப் போதிப்பது தான் எமக்குத் தொழில். உன்னைச் சந்திக்க வேண்டும் என்று நானும் ஆவலுடன் இருந்தேன்”
சந்திரகுப்தனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல் இருந்தது.
“உண்மையைச் சொல்லப் போனால் பாடலிபுத்திரத்தில் உனது வீரத்தையும் அறிவையும் பார்த்து நான் தான் உன் தந்தையிடம் சொல்லி உன்னைத் தக்ஷசீலத்துக்குக் கல்வி கற்க அனுப்பினேன். இது உனக்கும் தெரியாது”
‘இது தான் இறைவன் திருவுளமோ’ – வியந்தான் சந்திரகுப்தன்.
சாணக்கியர் சந்திரகுப்தனை இருக்கையில் அமரச் சொல்லிப் பின் தொடர்ந்தார்.
நாட்டின் பல பகுதிகளின் நிலைமை மற்றும் அரசாட்சிகளின் பலம் மற்றும் பலவீனம் – இவை அனைத்தையும் சுருக்கமாக சாணக்கியர் விவரித்தார்.
தக்ஷசீலாவின் ஒரு மூலையில் இருந்து கொண்டு பாடலிபுத்திரத்திலிருந்து மாசிடோனியா வரை எப்படி அரசியலை ஆராய்ந்து இருக்கிறார் இந்த மேதை!
சந்திரகுப்தனுக்கு ஒரு கேள்வி!
“அலெக்சாண்டர் – நந்தன் இந்த இருவரும் நமது நாட்டை உடைத்து விடுவரோ? இதற்கு என்ன செய்யலாம்?”
“நீ தான் அதைச் செய்ய வேண்டும்” – உறுதியுடன் – ஆணை இட்டார்.
சாணக்கியரின் அந்தத் தொனியில் சந்திரகுப்தனுக்கு மெய் சிலிர்த்தது.
“மன்னன் புருஷோத்தமனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“யாரே அந்த மாவீரரை அறியாதவர்கள்” – சந்திரகுப்தன்.
“அவனது நட்பு உனக்கு வேண்டும்; நீ ஒரு அரசியல் கூட்டணி அமைக்க வேண்டும். புருஷோத்தமனைச் சந்தித்து அலெக்ஸாண்டரைத் தடுக்கச் சொல்லவேண்டும். அவனுடன் ஒரு நட்பு ஒப்பந்தம் செய்து கொள். அலெக்சாண்டரையும் சந்தித்துப் பேசு. அவனும் நந்தனும் இணைந்து விட்டால் இந்த நாட்டைக் காக்க இந்த சாணக்கியராலும் இயலாது!” சாணக்கியரின் முகம் லேசாகக் கருத்தது.
“அலெக்சாண்டரிடம் என்ன பேசுவது?” ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான் சந்திரகுப்தன்.
“நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறு. பாரசீகத்தில் கிடைத்த செல்வத்தை விட நூற்றுக்கணக்கான மடங்கு செல்வம் இருப்பதைக் கூறி அவனை உசுப்பேத்து!”
“இதில் நமக்கு என்ன லாபம்?”
“அதே சமயம் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து நந்தனின் பெரும் படை பலம் பற்றிப் பேசு. முக்கியமாக கங்கை நதி தாண்டினால் அங்கு இருக்கும் 6000 யானைப்படைகளைப் பற்றிப் பேசு.”
“அலெக்சாண்டர் நந்தனை வென்றால் நமக்கு ஒரே எதிரி அலெக்சாண்டர் மட்டும் தான். அலெக்சாண்டர் திரும்பிச் சென்றால் நமக்கு ஒரே எதிரி நந்தன் மட்டும் தான்!! நாம் இந்தப் பூசலில் வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும்”
என்ன ராஜதந்திரம்! சந்திரகுப்தன் பெரு வியப்பில் ஆழ்ந்தான்.
“சந்திரகுப்தா .. இன்னுமொன்று சொல்ல வேண்டும்.உன்னிடம் மட்டும் தான் இதைச் சொல்வேன். இது எனது சொந்த விஷயம்” சாணக்கியர் முகம் சிவந்தது. துக்கச் சாயல் முகத்தில் விரிந்தது.
“எனது அரசியல் புகழ் தன நந்தனையும் சென்றடைந்திருந்தது. அவன் என்ன தான் கொடுமையான வசூல் ராஜா வானாலும் அவன் நிர்வாகம் மெச்சத் தகுந்ததே! பல மந்திரிகள் – சில ராஜதந்திரிகள் ஆலோசனை கேட்டு நடப்பவன். என்னை ராஜதந்திர ஆலோசனையாளனாக நியமிக்க அழைத்தான்”
“அவன் ராஜ கொலு மண்டபத்திற்குச் சென்றேன்! அவனது வரிக்கொடுமையால் மக்கள் படும் இன்னலைச் சொன்னேன்.”
“நந்தன் அதை சற்றும் விரும்பவில்லை. பெருங்கோபத்தில் என்னை அவமானம் செய்தான்”
“நான் என் உயிரைப்பொருட்படுத்தாமல் சொன்னேன்”
“உன்னையும் உன் குலத்தையும் அடியோடு அழித்த பின்னரே எனது குடுமியை முடிப்பேன் – என்று சூளுரைத்தேன்”
“நந்தன் என்னை அங்கேயே கொல்ல விரும்பினான்.ஆனால் அவனது ஆலோசகர்கள் தடுத்ததால் நான் இன்று இங்கு இருக்கிறேன்”
சாணக்கியரின் விரிந்த குடுமி மேலும் பரந்து கோபம் கொண்ட முகம் நெருப்புப் போல் சிவந்தது.
“ஆசிரியரே! நான் வாக்களிக்கிறேன். தன நந்தனை வென்று உங்கள் பழி தீர்க்கிறேன்”- என்றான் சந்திரகுப்தன்.
அன்றிலிருந்து சந்திரகுப்தன் தினமும் சாணக்கியரைச் சந்தித்து – அரசியல் பாடம் கற்றான். இடையில் புருஷோத்தமனைச் சந்தித்துப் பேசினான். அம்பியின் துரோகம் பற்றியும் அலெக்சாண்டரை எதிர்ப்பதின் அவசியத்தையும் கூறினான்.
“புருஷோத்தமரே, எனது படை மகதத்தில் பரந்து கிடக்கிறது. நந்தனை வீழ்த்த பின்னாளில் உங்கள் துணை எனக்குத் தேவை. ஆனால் இன்று நீங்கள் அலெக்ஸாண்டரை நிறுத்த வேண்டும்”
புருஷோத்தமன் பெரு மகிழ்ச்சி கொண்டான். சந்திரகுப்தனின் பிரதாபங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவனது துணிவையும் தீர்க்க தரிசனத்தையும் கண்டு இவன் நட்பு தனக்குத் தேவை என்று முடிவு செய்தான்.
மழைக்காலம் வந்தது. அலெக்ஸாண்டரின் படையும் வந்தது. எதிர்பார்த்தபடி அம்பி அலெக்ஸாண்டரிடம் சரணடைந்தான். பரிசு பல கொடுத்துப் பிழைத்தான். மாமன்னன் புருஷோத்தமனைப் பற்றி பல விவரங்களைக் கூறி அலெக்ஸாண்டருக்குப் பேருதவி செய்தான்.
புருஷோத்தமன் மாபெரும் யுத்தம் செய்தான். இந்த சண்டையில் அலெக்சாண்டர் வென்றதாக கிரேக்க இலக்கியம் கூறும். ஆனால் இது சற்றே சர்ச்சைக்கு இடம் பெற்ற விஷயம். போருக்குப் பின் புருஷோத்தமன் மன்னனாக ஆட்சி செய்தான். மற்றும் அவனது நாட்டுக்கு மேலும் பல பகுதிகள் (அலெக்சாண்டர் முன்பு வென்ற பகுதிகள் உட்பட) சேர்ந்தது. எனவே போரானது வெற்றி-தோல்வியல்லாமல் – ஒரு உடன்படிக்கையால் முடிந்தது என்றும் ஒரு பேச்சு உண்டு. மொத்தத்தில் அலெக்ஸாண்டர் படைக்கு புருஷோத்தமன் ஒரு பெரும் கலக்கம் கொடுத்தான்.
அலெக்சாண்டர் சன்டிரகொட்டோஸ் (Sandrokottos) –(நமது சந்திரகுப்தன் தான்) என்னும் மாவீரன் நந்தருக்கு எதிராக படை திரட்டி வருவதை அறிந்திருந்தான். அவனைப் பார்ப்பதில் அவனும் விருப்பம் கொண்டிருந்தான். இவன் உதவி பின்னாளில் தேவைப்படுமோ?
சந்திப்பு நிகழ்ந்தது.
முன்னம் கூறிய படி சந்திரகுப்தன் நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறி அவனை உசுப்பேத்தினான்.
மேலும் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து:
“தளபதிகளே! போரஸின் 30 யானைகள் உங்களை எப்படித் தாக்கியது? கங்கை நதியைத் தாண்டினால் அங்கு 6000 யானைப்படைகள் உங்களை துவம்சம் செய்யத் தயாராகக் காத்திருக்கிறது. நன்று யோசித்து அலெக்சாண்டருக்கு அறிவுரை கூறுங்கள்”
மாதங்கள் பல சென்றன.
அலெக்சாண்டர் மற்றொரு போரில் காயப்பட்டான். ஆனாலும் நந்தனின் செல்வம் அவனை ஈர்த்திருந்தது. ஆனால் தளபதிகள் முரண்டு பிடித்ததால் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்பினான்.
சந்திரகுப்தன் – சாணக்கியர் இருவரும் தக்ஷ்சீலத்தை விட்டு ரதத்தில் பாடலிபுத்திரத்தை சென்று அடைந்தனர். காட்சிகள் மாறின. பாடலிபுத்திரம் மாட மாளிகைகளுடனும் பரந்த சாலைகளுடனும் விளக்கின் ஒளியாலே அலங்கரிக்கப்பட்டு மின்னியது. நகரின் எந்த பகுதியிலும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து சென்றனர். மக்கள் தங்களுக்குள் – நந்த ராஜனைப் பற்றியும் அவனது வரி பற்றியும் பேசித் துயருற்றனர். வளர்ந்து வரும் தலைவன் சந்திரகுப்தன் அவர்களுக்கு ஒரு தெய்வ தூதனாகவே தோன்றினான்.
சந்திரகுப்தன்- சாணக்கியர் நேரடியாக நந்தனின் அரண்மனையை கத்தியில்லாமல் – ரத்தமில்லாமல் வெல்ல முயன்று தோற்றனர்.
அனைவரும் அறிந்த கதை தான் இது:
மகத நாட்டு எல்லையில் ஒரு சிறு கிராமம். அங்கு ஒரு குடும்பத்தோடு சந்திரகுப்தன் தங்கியிருந்தான். அவன் தான் சந்திரகுப்தன் என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த வீட்டில் சிறுவன் சூடான சப்பாத்தி சாப்பிடும் போது அவசரமாக நடுவில் கையை வைக்க – சூடு தாங்காமல் அலறினான்.
அதற்கு அவன் அன்னை:
“அட.. ஏன் நடுவில் இருந்து சாப்பிடுகிறாய்? சந்திரகுப்தன் நந்தனின் அரசை நடுவில் தாக்கியது போல செய்கிறாயே! விளிம்பில் இருந்து சாப்பிடு. சுகமாகச் சாப்பிடலாம்.”
சந்திரகுப்தனுக்கு இது வேத வாக்காகத் தெரிந்தது. படைகளைத் திரட்டினான்.
பல இளைஞர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.
சந்திரகுப்தன் ஓலை அனுப்ப – புருஷோத்தமனும் படைகளை அனுப்பி உதவி செய்தான். சாணக்கியர் தனது உயர்ந்த மாணாக்கர்களைச் சேர்த்துக் கொண்டார். தக்ஷசீலத்தின் தளபதி – சந்திரகுப்தரின் நண்பன். அவனும் இந்த சேனையில் சேர்ந்தான்.
‘மலை நாயகன்’ என்று அழைக்கப்பட்ட குறு நில மன்னன் – மிகவும் சக்தி வாய்ந்தவன். அவன் படையும் திறமை மிக்கது. சாணக்கியர் மலை நாயகனனுடன் சந்திரகுப்தனுக்காக ஒரு கூட்டணி அமைத்தார்.
சாணக்கியர்: “நாம் வென்றால் நந்த நாட்டில் ஒரு பகுதி உனக்கு”!
மலை நாயகன் சந்திரகுப்தரின் படையில் சேர்ந்தான்.
மகத எல்லையிலிருந்து மெல்ல உள்நோக்கிப் படைஎடுத்து – அங்கு மக்கள் ஆதரவும் பெற்றுப் பின் நந்தனை வென்றான் சந்திரகுப்தன்.
‘தன நந்தன்’ கைது செய்யப்பட்டு அரண்மனைக் கூடத்தில் கொண்டு வரப்பட்டான்.
அன்றைய நாளின் மிகப்பெரிய கேள்வி:
‘நந்தனை என்ன செய்யலாம்?’
சாணக்கியன் குடுமியை முடித்திருந்தான்.
முகத்தில் வெற்றிப் பெருமிதம்.
தன நந்தன்: “சாணக்கியரே! அன்றொரு நாள் நீங்கள் என் நிலையில் இருந்தீர்! உம்மை நான் உயிருடன் விட்டேன் என்பதை நினைவு கூறும்”
சந்திரகுப்தன் சாணக்கியரின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
“உண்மை தான் தன நந்தரே! நீர் சாவது எங்களுக்கு முக்கியமல்ல… நாடு சாவாமல் இருப்பதே முக்கியம். தன நந்தா! நீ உன்னால் சுமக்க முடிந்த தனங்களை மட்டும் எடுத்துக் கொள். எங்கள் கண் காணாத இடத்துக்குச் சென்று விடு. ஆனால் எங்கள் கண்ணில் பட்டால்.. அதன் பிறகு உன் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை”
தன நந்தன் சரித்திரத்திலிருந்து மறைந்தான்.
பாடலிபுத்திரம் புதுப் பொலிவு பெற்றது.
சந்திரகுப்தன் மகதத்தின் அரசனானான்.
மௌரியர் ராஜ்யம் மலர்ந்தது.
மக்கள் விரும்பிய மன்னன்.
சாணக்கியர் போன்ற மகா மந்திரி.
பொற்காலம் ஒன்று பிறந்தது.
இத்துடன் இந்தக் கதையை முடித்திருக்கலாம். ஆனால் சந்திரகுப்தன்- சாணக்கியர் கூட்டணி இன்னும் பல வெற்றிகளை அடைந்தது.
அரண்மனை ஆலோசனைக்கூடம்:
சந்திரகுப்தன்: “ஐயா! மலை நாயகன் மறைவு பற்றி”
சாணக்கியர்: “அவன் தான் அகால மரணம் அடைந்தானே! நாட்டின் எல்லாப் பகுதிகளும் உனக்கே!” – அவரது குரலில் சோகத்தை விட ஒரு சந்தோஷமே தென்பட்டது.
சந்திரகுப்தன்: “அவன் விஷமிடப்பட்டதாக….ஒரு வதந்தி…”
சாணக்கியர்: “அரசியலில் சில விஷயங்கள் நடக்கும்… அது விஷமாகவும் இருக்கும். விஷமமாகவும் இருக்கும். அது நமக்கு விசேஷமாக உதவினால் அதை ஆராயக்கூடாது”
சந்திரகுப்தனுக்குப் புரிந்துவிட்டது…
“அப்ப புருஷோத்தமன்?”
“புருஷோத்தமன் நமக்குத் தேவை. அவனால் தான் மேற்கு நாட்டைக் காக்க முடியும். மேலும் கிரேக்கர்கள் வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியம்”
“ஆஹா… நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன கவலை”
சாணக்கியர் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினார்.
கவலை அவர் நெற்றிச் சுருக்கத்தில் நெளிந்தது.
சந்திரகுப்தன்: “இன்னும் என்ன யோசனை தலைவா?”
சாணக்கியர்: “சந்திரகுப்தா .. நமது வெற்றி முழுமையாகவில்லை… புரிந்தததா?”
சந்திரகுப்தன்: ”ஆமாம் … நமது திட்டத்தின் படி நந்தனை வென்றோம். ஆனால் … அலெக்சாண்டர் போன பிறகு மாசிடோனியாவின் செலுகஸ் நிகேடர் (Seleucus Nicator) … மேற்கில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க உள்ளான். அதை…அவனை.. முறியடிக்க வேண்டும்”
“சரியாகச் சொன்னாய்”
வெகு விரைவில் காரியங்கள் நடந்தேறின.
படையெடுப்பு நடந்ததது. செலுகஸ் நிகேடர் தோல்வி அடைந்தான். உடன்படிக்கைப் படி இளவரசியான தன் மகள் ஹெலெனா (helena) வை சந்திரகுப்தனுக்கு மணம் முடித்தான்.
மேலும் அவன் வசமிருந்த- காந்தாரம், காம்போஜம், காந்தகார், பலோசிஸ்தான் பகுதிகள் சந்திரகுப்தன் அரசுடன் இணைந்தது. பதிலுக்கு 500 யானைகளைப் பெற்றான்.
‘இந்தியாவின் காவலன்’ என்ற இந்தக் குறுங்கதை நிறைவு பெறுகிறது.
(சாண்டில்யனும் – கல்கியும் மன்னித்து அருள்வார்களாக)
சரி….எந்த கதை நாயகனுக்கும் – அவனது வெற்றிக்காலம் முடிந்த பின் கஷ்டங்கள் வரும். மனிதனாகப் பிறந்தாலே இது சகஜம் தானே!
பரசுராமருக்கு ராமனைச் சந்திக்கும் வரை தான் வெற்றி.
ராமன் பட்டாபிஷேகம் முடிந்த பின் அடைந்ததது சோகங்களே.
கிருஷ்ணன் தன் மகன்கள் அனைவரும் அடித்துக்கொண்டு சாவதைக் கண்டு நொந்தான்.
பாண்டவர்கள் மகாபாரதம் முடிந்த பின் சந்தோஷமென்பதே அறியவில்லை.
அதே போல் நம் நாயகன் சந்திரகுப்தன் கதையிலும் சோகங்கள் … அதை விட்டு விடுவோம்.
இன்னும் சில வருடங்கள் கழித்து –இந்த வம்சத்தில்- உலகம் போற்றும் மாமன்னன் – ‘மகா அசோகன்’ தோன்றுவான்.
சரித்திரம் இன்னும் பேசும்….
***சிறு குறிப்பு:
‘இந்தியாவின் காவலன்’ என்ற சரித்திரக் கதையா?.. மருந்துக்கு ஒரு பெண் பாத்திரமே இல்லை என்ற குற்றம் சொல்பவர்களே! அமரப்பள்ளி என்ற அழகியைப் பற்றி கோடி காட்டியுள்ளேன்! நீங்கள் ஆணையிட்டால் அமரப்பள்ளி என்ற சரித்திரக்குறுங்கதை எழுதத் தயார். Circulation worry கொண்ட குவிகம் ஆசிரியரும் மகிழ்வார் !
குட்டீஸ் லூட்டீஸ் : கோணங்கள் (சிவமால்.)
‘சம்மர் வந்தாச்சு… வாங்க.. நாம நம்ம ஏ.பி.ஸி. ஸ்டோர்ஸ¤க்கு
போய் ஒரு ஏர் கண்டிஷனர் வாங்கிடுவோம்..’ என்ற டி.வி.
விளம்பரத்தை நானும், என் மனைவியும், என் பத்து வயதுப்
பெண்ணும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
‘ஓ கே .. புறப்படு ரமா.. ஸம்மர் சூடு தாங்கலை. நாமும்
இப்பவே ஏ.பி.ஸி. ஸ்டோர்ஸ¤க்குப் போய் ஓர் ஏர் கண்டிஷனர்
வாங்கிடுவோம்’ என்றேன் மனைவியிடம்.
‘நோ… வேண்டாம்பா… இந்த ஆன்டி நம்மள ஏமாத்தறாங்க..
இதே ஆன்டிதான் போன வருஷமும் இதையே சொன்னாங்க..
அந்த ஏர் கண்டிஷனர் ஒரு வருஷம் கூட வரவில்லை போலிருக்கு.
அதுதான் இந்த வருடமும் வாங்கக் கிளம்பிட்டாங்க. இவ்வளவு
காசைக் கொட்டி வாங்கிட்டு ஒரு வருஷம் கூட வரலைன்னா
எப்படீப்பா..? அதனாலே இந்த ஸ்டோர்ஸ் வேண்டாம்பா.. வேறே
நம்பகமா ஒரு கடைக்குப் போவோம்’ என்றாள் என் பெண்.
திகைத்து நின்றோம் நானும், என் மனைவியும். அட,
இப்படியும் ஒரு கோணத்தில் விளம்பரங்களைப் பார்க்கலாமா..!.
கடல் புறா -நாடக விமர்சனம்
குமுதத்தில் கிட்டத்தட்ட மூன்று வருடம் தொடர் கதையாக வந்து மாபெரும் வெற்றி பெற்ற சாண்டில்யனின் காவியப் புறா அது. இளைய பல்லவன் என்ற கதாநாயகனை எம்.ஜி.ஆர். பாணியில் ஏன் அதற்கும் மேலாகப் படைத்திருப்பார் சாண்டில்யன்.
அவனுடைய புத்திசாலித்தனம், எந்த சூழ் நிலையிலும் தன் அறிவு மீது அபார நம்பிக்கை வைக்கும் திறமை, பெண்களைக் கவரும் கவர்ச்சி, வீரம், துணிச்சல், விவேகம் எல்லாம் கலந்த கலவை அவன்.
கருணாகர பல்லவன் என்ற இளைய பல்லவன் உண்மையில் சரித்திரத்தில் சோழன் குலோத்துங்கனுக்கு சேனாதிபதியாக இருந்தவன். பிற்காலத்தில் கலிங்கத்துடன் போரிட்டு கலிங்கத்தையே எரித்தவன் என்று கலிங்கப்பரணி என்ற காவியத்தைப் படைத்த ஜெயங்கொண்டார் என்ற புலவர் கூறுகிறார்.
குலோத்துங்கன் இளவரசனாக இருந்த போது அதாவது – கலிங்க யுத்தத்திற்கு முன் – ஸ்ரீவிஜயம் – கடாரம் என்ற இரு நாடுகளுக்கிடையே இருந்த அரசுரிமைப் போர்களில் கலந்து கொண்டு தீர்த்து வைத்தான் என்பது வரலாறு. குலோத்துங்கன் சீனாவிற்கும் சோழப் பிரதிநிதியாகச் சென்றான் என்றும் வரலாறு கூறுகிறது.
இதையும் கருணாகர பல்லவன் என்ற நம் இளைய பல்லவனே செய்து முடித்தான் என்பது தான் சாண்டில்யனின் கற்பனை.
சரி, இனி நாடகத்திற்கு வருவோம்.
கதையைச் சொல்வதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறார்கள். செட்டிங் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உடைகள் பள பளவென்று நாம் கற்பனை செய்து வைத்திருந்த அரச காலத்தை அப்படியே காட்டுகிறது. கடல் போரும் அதற்கு முக்கியத் தேவையான கடல்புறா என்ற கப்பலும் தான் கதையின் நங்கூரங்கள். அவற்றைத் திரையில் காட்டுவது கடினம் தான் என்றாலும் அதில் அவர்கள் அதிகம் மெனக்கிடவில்லை என்பது சுத்தமாகத் தெரிந்தது.
கதையை மட்டும் எடுத்துக் கொண்டு வசனத்தைத் தங்கள் போக்கில் அந்தக் காலத்து ராஜா – ராணி சினிமா பாணியில் எழுதியிருப்பது கதையின் உயிரோட்டத்தைப் பாதிக்கிறது.
சாண்டில்யனின் கதையில் சோகம் என்பது இலேசாக இழையோடியிருக்கும் அவ்வளவு தான். ஆனால் இதில் எல்லா பாத்திரங்களும் சோகத்தைப் பிழிந்து சிவாஜி, பத்மினி போன்று அழுது நடிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. அதுவும் கொடூரமாவன் என்று பெயர் பெற்ற அகூதாவை ஒரு குணசித்திர நடிகர் போல் குலுங்கிக் குலுங்கி ஆழ வைத்திருப்பது தாங்க முடியவில்லை சாமி.
கதாநாயகிகள் காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகி இருவரும் கவர்ச்சிகரமாக உடையணிந்து வருகிறார்கள். மஞ்சளழகியாக நடித்தவரின் குரல் முதல் வரிசைக்கே கேட்டிருக்குமோ என்பது சந்தேகம். ஆனால் அபாரமாக ஆடுகிறார் அதுவும் தலையில் விளக்கை வைத்துக் கொண்டு.
கதையைப் படித்தவர்களுக்கு அதன் போக்கு புரியும் . மற்றவர்களுக்கு ரொம்பவே சிரமம் தான்.
தேவையில்லாமல் பாத்திரங்கள் வள வள வென்று பேசுகிறார்கள். மேடைக்கதையை இன்னும் கச்சிதமாகச் சொல்லியிருக்க வேண்டும். கதையின் சில பகுதிகளை விட்டால் தவறு ஒன்றும் இல்லை. ( உதாரணம்: பாலிக் குள்ளன்). பலவர்மனை, சேந்தனை முழுக் காமெடியனாகப் போட்டிருப்பதில் நயம் இல்லை.
கலிங்க மன்னர்கள், அநபாயன் ,ஜெயவர்மன் ,அமீர், கண்டியத்தேவன் எல்லாரும் நன்றாக நடித்தார்கள்.
இளையபல்லவனாக நடித்தவர் நன்றாக நிற்கிறார். ஆனால் அந்தப் பாத்திரத்துக்கு உயிர் தரவில்லை. ஒரு ஜோஷ் இல்லை.
நாலேகால் மணி நேரம் நடக்கிறது. திரை மாறும் நேரத்தைக் குறைத்திருந்தாலே நாடகம் ஒரு மணி நேரம் குறைந்திருக்கும்.
சிறப்பான மேடைக் கதையும், இன்னும் நிறைய பணபலமும் இருந்திருந்தால் இந்த நாடகம் பெரும் வெற்றி அடைய வாய்ப்பு இருந்திருக்கும்.
( இரண்டு காட்சிகள் என்று சொல்லி கடைசி நாளில் இரண்டையும் ஒன்றாக மாற்றி அப்படியும் பாதி அரங்கு தான் நிறைந்தது என்றால் என்ன வென்று சொல்ல?)
சில்லறையில் ( மொத்தத்தில் அல்ல) எனக்குப் பிடித்திருந்தது. ஐம்பது மார்க் தருவேன்.
இலக்கியவாசலின் பன்னிரண்டாவது நிகழ்வு
இலக்கியவாசலின் பன்னிரண்டாவது நிகழ்வு வாசுகி கண்ணப்பன் அரங்கத்தில் 19 மார்ச் மாலையில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு சுந்தரராஜன் வந்திருந்த முக்கிய விருந்தினர் திரு ஞாநி அவர்களையும் மற்றும் இலக்கிய
ஆர்வலர்களையும் வரவேற்றார்.
திருமதி உமா பாலு அவர்கள் அவருக்கே உரிய முத்திரைக் கவிதைகளை எதார்த்தமாக வழங்கினார். கவிதைகள் சிறியதாக இருந்தாலும் காரமாக இருந்தது.
திரு ஈஸ்வர் தனது பரிசுபெற்ற ‘சிகாகோ மாம்பழம்’ என்ற கதையைப் படித்த விதம் மிக அருமையாக இருந்தது. பாத்திரங்கள் பேசுவதைப் போலவே அவர் படித்தது கேட்பவர் கருத்தை மிகவும் கவர்ந்தது.
சாகித்ய அகாதமியின் மொழியாக்க 2015 ஆவது ஆண்டுக்கானவிருது பெறும் திருமதி கௌரி கிருபானந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். குவிகம் இலக்கியவாசலும் அவர்களைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டது.
வோல்கா எழுதிய”விமுக்தா” என்ற கதைத் தொகுப்பின் ‘மீட்சி’ என்ற நூலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. திருமதி கௌரி கிருபானந்தன் நம் மேடையில் அந்தக் கதை எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அதற்குப் பிறகு , “பரிக்ஷா” நாடக அமைப்பைக் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக நடத்தி நாடகக் கலைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் . திரு ஞாநி அவர்கள் தமிழ் நாடகத்தின் வரலாற்றை அவருக்கே உரிய பாணியில் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பட்டி தொட்டியிலும் நடைபெற்ற நாடகங்கள் எப்படிப் படிப்படியாகத் தேய்ந்து இன்று சென்னையில் மட்டும் எப்பொழுதாவது நடக்கும் அபூர்வப் பொருளாக மாறிவிட்டது என்பதை விளக்கினார்.
ரசிகர்களுக்கும் நாடகக் குழுவிற்கும் இடையே பாலமாக இருக்கவேண்டிய சபா செயலர்கள் இடைத் தரகர்களாக மாறி இந்த அழகான கலையை அழித்தது ஒரு காரணம். பள்ளிகளில் ஒரு காலத்தில் கோலோச்சிய நாடக வடிவத்தை சுத்தமாக மறந்தது இந்தக் கலையின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம். தொலைக்காட்சி தொடர் சீரியல்களை நாடகம் என்று ஒப்புக் கொள்ள மறுத்த ஞாநி அவர்கள் , இந்த மீடியத்தின் அசுர வளர்ச்சி நாடக மன்றங்களின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் என்று விளக்கினார். மேலும் அரசாங்கமும் குறைந்த கட்டணத்தில் நாடக அரங்கங்களை அமைத்துக் கொடுத்திருந்தால் இந்தக் கலை நன்றாக வளர்ந்திருக்கும் என்றும் ஆதங்கத்துடன் கூறினார்.
ஞாநி அவர்களுடைய உரைக்குப் பிறகு இலக்கிய வாசலின் சிறப்பு அம்சமான கலந்துரையாடல் நடைபெற்றது. நேற்றைய இன்றைய நாளைய நாடகங்களைப் பற்றி மக்களின் கேள்விகளுக்கு ஞாநி விளக்கமாக பதில் அளித்தார்.
கிருபானந்தன் , விழாத் தலைவர் ஞாநி அவர்களுக்கும், வந்திருந்த விருந்தினர்களுக்கும் மற்றும் விழா நடைபெற உதவிய செந்தில்நாதன் அவர்களுக்கும் , அரங்கம் தந்த வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
பரீக்ஷா – நாடகக் குழு – ஞாநி
பரீக்ஷா: 1978 முதல் இன்று வரை தொடர்ந்து இயங்கி வரும் முன்னோடி நவீன நாடகக்குழு.
விஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பிரெக்ட், பிண்ட்டர்,
பிரீஸ்ட்லி ஆகியோரின் நாடகங்களை தமிழுக்கேற்ற விதத்திலும், தமிழ் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ந..முத்துசாமி, ஜெயந்தன், பிரபஞ்சன், அறந்தை நாராயணன், அம்பை, எஸ்.எம்.ஏ.ராம், சுந்தர ராமசாமி, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் படைப்புகளையும் சென்னை நாடக ரசிகர்களுக்கு
வழங்கி வந்துள்ளது.
பாதல் சர்க்கார்: இந்தியாவில் வீதி நாடக வடிவத்தின் முன்னோடி. வங்கத்தில் மூன்றாவது அரங்கம் என்ற புதிய வகையை அறிமுகம் செய்து மனித விழிப்புணர்வுக்காகவே நாடகம் என்ற கோட்பாட்டை பரவலாக்கிய பாதல் சர்க்காரின் படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளில் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன.
தேடுங்கள்: பாதல் சர்க்காரின் மிச்சில்தான் தமிழில்
தேடுங்கள்.ஊர்வலங்களின் கால்களுக்குக் கீழே நசுங்கிக் கொல்லப்படும் இளைஞனும், காணாமற் போய்விட்ட கிழவனும் நிஜமான வீட்டுக்கு வழி சொல்லும் ஊர்வலத்தை தேடுகிறார்கள். அன்பை முன்னிறுத்தும் நிஜமான மனிதர்களின் ஊர்வலம் எப்போது வரும் ? கோரஸ் வடிவில் நம் வாழ்க்கையை நமக்கே படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி இந்த நாடகம். பரீக்ஷாவின் தயாரிப்பில் இது முற்றிலும் இன்றைய தமிழ் சூழலுக்கேற்றதாக மாற்றப்பட்டிருக்கிறது.
சென்னை நகரின் முதல் நவீன தீவிர தொழில்முறையல்லாத தமிழ் நாடகக் குழுவான பரீக்ஷா 1978-ல் தொடங்கியபோது, வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பிடையே இருக்கும் போலி நம்பிக்கைகளைக் களைவதே தன் நோக்கம் என்று அறிவித்தது. கடந்த 37 வருடங்களில் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களான இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை, ஜெயந்தன், பிரபஞ்சன், திலீப் குமார், சுஜாதா, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் நாடகங்களையும், பிற மொழிப் படைப்பாளிகளான பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், மகாஸ்வேத தேவி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர், ஜே.பி,பிரீஸ்ட்லீ ஆகியோரின் நாடகங்களின் தமிழ் வடிவங்களையும் பரீக்ஷா நிகழ்த்தியுள்ளது.
வாரந்தோறும் நவீன நாடகம் என்ற முயற்சியை 1992-93ல் ஓராண்டு நடத்தியது. நாடக விழாக்களில் பங்கேற்பு தவிர, இதர புரவலர் ஸ்தாபன ஆதரவு, மான்ய உதவிகள் இல்லாமல், பார்வையாளரிடம் திரட்டும் பணத்தைக் கொண்டு மட்டுமே பரீக்ஷா நாடகங்களை நிகழ்த்தி வருகிறார் இதன் நிறுவனரான எழுத்தாளர் ஞாநி.
ஜெர்மன் நாடகாசிரியர் பிரெக்ட்டின் காகேசியன் சாக் சர்க்கிள் நாடகத்தை தமிழுக்கேற்ற விதத்தில் மாற்றியமைத்து ஞாநி எழுதி இயக்கியிருக்கும் நாடகம்‘வட்டம்’. துரைகள் காலம் முதல் புரட்சி காலம் வரையிலான கதையை 20-க்கும் மேற்பட்ட நடிகர்களுடன் சொல்கிறது இந்த நாடகம். ஒரு குழந்தை யாருக்கு சொந்தம்…பெற்ற அன்னை துரையம்மாவுக்கா, வளர்த்த அன்னை கன்னியம்மாவுக்கா என்பதை திருடியாக இருந்து நீதிபதியாக மாறிய முனியம்மா எப்படி தீர்மானிக்கிறாள் என்பதே கதை. பெண்களுக்கான சம உரிமை, நிலத்தின் மீதான உழவரின் உரிமை, ராணுவம் முதலிய ஆட்சி இயந்திரங்களின் பங்கு எல்லாவற்றையும் பற்றி சமூக அரசியல் தொனியில் எள்ளலுடன் சொல்கிறது ‘வட்டம்’.
எட்டுக் கதைகளின் தொகுப்பு வட்டம்!
தனி நபர் நடிப்பு வடிவத்தில் மேல் சாதி விதவை, ஓர்பால் உறவாளர், மகளை இழந்த தாய், மனைவியை தொலைத்த கணவன், பெண்சீண்டல் எதிர்ப்புப் போராளி, குழந்தையைக் கொன்ற இளைஞன், கணவனைக் கொன்ற இளைஞி, காதலைத் தேடும் இளைஞன், உள்ளேயும் வெளியேயும் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர் என விதவிதமான எட்டு கதைகளைப் பேசுகிறது வட்டம்.
சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைக்கு, நாடகாசிரியர் அ.ராமசாமி அளித்துள்ள நாடக வடிவம்தான் “பல்லக்குத் தூக்கிகள்.”
இது ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோர் பற்றிய நாடகம்.
நாடக நிகழ்வு 20 நிமிடங்கள்.
“சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு வேலைகளிலிருந்தாலும், நாடகம் மீது காதலும் சமூகம் மீது அக்கறையும் கொண்டிருப்பதே பரீக்ஷாவில் இணைவோரை ஒன்றுபடுத்துகிறது” என்று ஞாநி பெருமிதப்படுகிறார்.
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே !

இலவச தமிழ் மின்புத்தகங்களை ( கிண்டில், ஆண்ட்ராய்ட், ஐ ஓ எஸ், மற்றும் பி டி ஃப் வடிவுகளில் வெளியிட ஒரு நிறுவனம் வந்துள்ளது.
அது தான் FREE TAMIL EBOOKS (FTE) என்ற அமைப்பு.
கிரியேட்டிவ் காமன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கிட்டத்தட்ட 200 மின் புதகங்களை ஆரம்பித்த முதல் இரண்டு ஆண்டிலேயே வெளியிட்டு மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
தமிழில் நிறைய மின்புத்தகங்கள் (EBOOKS ) வருவதற்கு உதவுங்கள்.
குவிகமும் FTE உடன் இணைந்து தமிழ் மின் புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
அவர்கள் திட்டத்தைப் பற்றி அவர்களே கூறுகிறார்கள். படியுங்கள் :
மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:
மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.
ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:
ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.
தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:
தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.
சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.
எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.
சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?
சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.
நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.
எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?
கூடாது.
ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.
அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.
அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.
வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.
பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு
அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்
வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.
FreeTamilEbooks.com
இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.
PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT
இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.
அவ்வாறு பதிவிறக்கம் (download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.
இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை
எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.
அவ்வளவுதான்!
மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:
- ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்
- தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்
- சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்
விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?
யாருமில்லை.
இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.
மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.
இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?
ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை.
ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.
அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.
தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
தவிர்க்க வேண்டியவைகள் யாவை?
இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?
நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- email : freetamilebooksteam@gmail.com
- Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks
- Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948
இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?
படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –
மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற
பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும்.
- நூலின் பெயர்
- நூல் அறிமுக உரை
- நூல் ஆசிரியர் அறிமுக உரை
- உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்
- நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில். அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url)
இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.
——————————————————————————————————–
நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.
மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? –
தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs
இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook
எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooks
FreeTamilEbooks மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்
நமது FreeTamilEbooks.com திட்டம் மின்னூல்கள் படிப்பதையே பெரிதும் ஆதரிக்கிறது. ஆனால் சிலர் அச்சு வடிவில் படிக்க நூல்களை அச்சிடுவதை அறிகிறோம்.
மேலும் சில எழுத்தாளர்கள் தாம் வெளியிட்ட மின்னூல்களின் அச்சுப் பிரதி தம்மிடம் இருந்தால் மிகவும் மகிழ்வர்.
இது போன்ற தேவைகளுக்காக, ஒரு பிரதி அல்லது ஒரு சில பிரதிகள் மட்டும் அச்சிட்டுக் கொள்ளும் வகையான Print On Demand சேவையை, மிகக் குறைந்த விலையில் தர, காரைக்குடியைச் சேர்ந்த நண்பர் லெனின் குருசாமிமுன்வந்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான விலை விவரம்
பக்கத்திற்கு 45 பைசா (1 பக்கதிற்கு 2 பக்கங்கள், 2 பக்கங்களுக்கு 4 பக்கங்கள்)
நூல் கட்டுமானத்திற்கு ரூ.15
அட்டைபடம் வண்ணத்தில் அச்சு எடுக்க விரும்பினால் ரூ.7
உதாரணத்திற்கு 6 inch PDF ல் 255 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்திற்கு,
255/4 = 63.5 X 0.45 X 2 = 57 + 15 = ரூ.72
பக்கத்தின் தடிமன் 70GSM
தபால் செலவு தனி.
இந்த விலை FreeTamilEbooks.com திட்டத்தில் உள்ள மின்னூல்களுக்கு மட்டுமே.
மேலும், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் ‘NonCommercial’ என்ற வார்த்தை இருந்தால் அந்த நூலை, அச்சிட்டு விற்பனை செய்ய இயலாது. எனவே “NonCommercial” இல்லாத நூல்களை மட்டும் அச்சு நூலாக வாங்கலாம். இல்லையெனில், நூல் ஆசிரியருக்கு தனியே மின்னஞ்சல் எழுதி, அவரிடம் அனுமதி வாங்கி, பின் அச்சிட்டு வாங்கலாம்.
தொடர்பு விவரங்கள்
திரு. லெனின் குருசாமி
sun_creations@ymail.com
+91 95780 78500
57/1, கல்லூரி சந்திப்புச் சாலை,
அழகப்பாபுரம்,
காரைக்குடி – 630 003
நன்றி !
நகைச்சுவை மன்னர் – தேவன்
தேவன்’ நினைவு நாள்: மே 5, 2010
துப்பறியும் சாம்பு என்ற காலத்தால் அழியாத பாத்திரத்தைப் படைத்த அமரர் தேவன் அவர்களைப் பற்றி பசுபதிவுகள் ( http://s-pasupathy.blogspot.in/) என்ற வலைப்பூவில் விளக்கமாக எழுதியுள்ளார் .
திருவிடை மருதூரில் பிறந்த மகாதேவன் என்ற தேவன் ஆனந்தவிகடனின் ஆசிரியராக இருந்தவர்.
ஆங்கிலத்தில் பி ஜி ஓட்ஹவுஸ் போல் நகைச்சுவைத் ததும்ப எழுதியவர்.
சாம்புவைப் பற்றி திரு பசுபதி அவர்கள் எழுதிய கவிதைகள் :
காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு
வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் — ஆகமது
நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான்
சாகா வரம்பெற்ற சாம்பு
துருவும் கூர்மை விழிமுகம் – துப்பறி தொழிலில் தனிரகம்;
இரும்புக் கரங்கள் பேசினால் – எதிரி மீண்டும் எழுந்திரான்
தெருச்சீ ராளம் புசிப்பான் – திருவாய் மொழியும் ரசிப்பான்
திருடும் நபர்க்குச் சத்துரு – தேவன் படைத்த சந்துரு!
தேவனின் பல கதை, கட்டுரைத் தொடர்களுக்குச் சித்திரங்கள் வரைந்தவர் ராஜு. ‘துப்பறியும் சாம்புவிற்கு’ உயிரூட்டியவர் அவரே.
பிறகு, விகடனில், தேவனின் மறைவுக்குப் பின், ‘சாம்பு’ ஒரு சித்திரத் தொடராக வந்தபோது ‘கோபுலு’ படங்கள் வரைந்தார்.
கோபுலுவின் சித்திரங்கள் குறிப்பாக சாம்புவின் மூக்கு அந்தக் கதைகளுக்கு மெருகேற்றியது என்பது உண்மை !
“ சாம்புவை வைத்து முதலில் ஒன்பதே கதைகளை ‘தேவன்’ எழுதினார். பின்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, மேலும் ஒன்பது கதைகளை எழுதினார். ஆனால், பொதுமக்கள் சாம்புவை அதிகமாக எதிர்பார்க்கவே திரும்பவும் இருமுறை சாம்பு கதைகளைத் தொடர்ந்தார். மொத்தம் 50 சாம்பு கதைகள் வெளிவந்துள்ளன. சாம்பு கதைகள் எழுது முன்பு “கோபாலன் கவனிக்கிறார்’ என்ற ஒரு சிறு துப்பறியும் தொடரையும் எழுதினார்”
சாம்பு’ என்.எஸ். நடராஜன்
திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் கிளப் மிகச் சிறந்த முறையில் நாடகங்கள் நடத்திப் பேரும், புகழும் அடைந்ததற்கு முக்கிய காரணம் திரு.தேவன் எழுதிக் கொடுத்த ‘மைதிலி’, ‘கோமதியின் காதலன்’, மிஸ் ஜானகி’, ‘துப்பறியும் சாம்பு’, ‘கல்யாணி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘பார்வதியின் சங்கல்பம்’ நாடகங்கள் தாம். இந்த நாடகங்கள் சுமார் 500 தடவைகள் நடிக்கப்பட்டு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டவை.
அவர் எழுதிய உன்னதப் படைப்பான ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதையை நாடகமாக்க முடியுமா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டு அவர் என்னிடம் யோசனை கேட்டார். நாங்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அதை நாடகமாக்க முடியும் என்று முடிவெடுத்தோம். ஆனால் அவர் எனக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, ‘சாம்பு’ பாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டுமென்பதுதான் . அதற்கு முதலில் நான் சம்மதிக்கவில்லை. காரணம், அந்த நாடகத்தை நல்ல முறையில் அரங்கேற்ற வேண்டுமானால், பயிற்சியாளன் என்ற முறையில் நான் அவர் எழுத்தோவியத்திற்கு உயிர் ஊட்டவேண்டும். அப்படியிருக்க, நானே பயிற்சியாளனாகவும், கதாநாயகனாகவும் பணியாற்ற முடியுமா என்று திகைத்தேன் ஆனால் அவர் என்னை ஊக்குவித்து அவர் விருப்பத்தைச் சாதித்துக் கொண்டார். எனக்குச் ‘சாம்பு’ என்ற பட்டமும் பெறக் காரணமாக இருந்து, நான் ‘சாம்பு’ நடராஜன் ஆனேன்.
தேவன் எழுதிய மற்றொரு சிறுவர் கதை ! ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான் என்று துவங்குவார்.
ராஜ்மவுலியின் ‘நான் ஈ’ க்கு முன்னோடி.
ஒரே ஒரு சின்ன ஈ ஒரு பெரிய ஓட்டல் மேஜை மேலே இப்டி சுத்தி சுத்தி பறந்துட்டு, கடைசியிலே ஒரு இடத்தைப் பொறுக்கி உட்கார்ந்துது. அங்கேருந்து நாலாப் புறமும் கண்ணோட்டம் விட்ட போது ஒரு மைசூர் பாக் விள்ளல் திருஷ்டிலே விழுந்தது. அதை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறப்போ, அங்கே காபி சாப்பிட்டிண்டிருந்தான் ஒருவன். அவன் கையிலே வைச்சிருந்த பேப்பரைச் சுருட்டி, ‘டப்’னு ஒரு அடி போட்டானே பார்க்கலாம், குறிபார்த்து! சின்ன ஈ முதுகிலே ‘பளாச்’சுனு விழுந்தது அது. ஒரு கலங்கு கலங்கி, இறக்கையை உதறிண்டு, காலை நீட்டி சரி பண்ணிண்டு சின்ன ஈ விட்டது சவாரி! மேஜைக்குக் கீழே ஓடி, மேல் மூச்சு வாங்க, தாத்தா ஈ பக்கமா நின்னு, “தாத்தா, தாத்தா! இன்னிக்கு நான் ஒரு கண்டத்திலே தப்பிச்சேன்!” அப்படின்னுது.
தாத்தா ஈ எல்லாத்தையும் கவனிச்சுண்டுதானே இருந்தது? சும்மா சிரிச்சுட்டு, “போடா! முட்டாள் பையா! ஒரு கண்டமும் இல்லை! அவன் உன்னை அடிச்சது நேத்து நியூஸ் பேப்பராலே! நாலே நாலு காயிதம்தானேடா அதிலே! உம்! என்ன காயம் பட்டுடப் போறது! முன் காலத்திலே எப்படி இருந்தது பேப்பர்னு கேளு, சொல்றேன்! 16, 24 பக்கம். அதனாலே ஒரு அடி வாங்கியிருந்தயானால்…” என்று ஆரம்பிச்சுது.
அதுக்குள்ளே இன்னொரு பெரிய ஈ, “அதைச் சொல்றிங்களே, தாத்தா! அடிச்சானே, அந்த ஆளுக்கு உடம்பிலே திராணி இருக்குதா, பார்த்தியா? ஆறு அவுன்ஸ் ரேஷனிலே என்ன பண் ணிட முடியும் அவனாலே! இங்கே வந்து குடிக்கிறதோ காபிங்கிற வெறும் தண்ணி”னு சொல்லிச் சிரிச்சுது.
இதுக்குள்ளே சின்ன ஈ ஒடம்பைச் சரி பண்ணிண்டு, “கெடக்கிறது, தாத்தா! இதுக்கெல்லாம் பயந்து சாவலாமா? உசிரை லெச்சியம் பண்ணாம கௌம்பிட வேண்டியதுதான்”னுது.
தாத்தா ஈ வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டு, “போடா பைத்தாரப் பையா! உசிரை எதுக்கடா லச்சியம் பண்ணப்படாது? அதோ கொண்டு வரானே, அந்தக் கோதுமை அல்வாவுக்காகவாடா? போடா! முன் காலம் மாதிரி வெண் பொங்கல், சேமியா-பேணி, பால் போளி என்று இருந்தால், உசிரு போனாலும் உட்கார்ந்து சாப்டோம் என்று இருக்கும். இதென்னடா, சோளத்தைப் போட்டு ஒபயோக மத்த பண்டங்கள்…”
சின்ன ஈ நேரே ஓடிப் போய், ஸர்வர் கையிலிருந்த சப்பாத்தியிலே உட்கார்ந்துண்டுது. சூடு பொறுக்காமல் எழுந்திருக்கிறதற்குள்ளே, ‘டணார்’னு மண்டையிலே விழுந் தது ஒரு அடி! ஸர்வர் போட்டு விட்டான். சின்ன ஈக்கு ஸ்மரணையே தப்பிப் போச்சு! ஸர்வர் இப்போ அதைத் தட்டினது நியூஸ் பேப்பராலே இல்லை; இன்னொரு சப்பாத்தியாலேயாக்கும்! அதுதான் அப்படிக் கல்லு மாதிரி அதன் தலை மேலே விழுந்திருக்கு. ஸர்வர் ஒண்ணையும் கவனிக்கவே இல்லை. அவன் சப்பாத்தியைக் கொண்டு போய் மேஜை மேலே வச்சுட்டான்.
இதிலேருந்து நாம் தெரிஞ்சுக்கற நீதி என்ன தெரியுமா? ஆகாயத்திலே பறக்கிற இரண்டு ஈக்களைவிட, ஆகாரத்திலே அகப்பட்டிருக்கும் ஒரு ஈ எவ்வளவோ மேலானது!
காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக நாடகத்தில் நடித்திருக்கிறார். நாடகத்தையும் தேவனே எழுதி இருக்கிறார் – கதைகளை வெட்டியும் ஒட்டியும் உருவாக்கி இருக்கிறார். நாடகமும் இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது.
தூர்தர்ஷனில் தொடல் சீரியலில் ஒய் ஜி மகேந்திரன் துப்பறியும் சாம்புவாக நடித்திருக்கிறார்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் சாம்பு மாதிரி குணாதிசயமும், சாம்பு என்ற பேரும், சாம்புவைப் போலவே அதிருஷ்டம் உடைய துப்பறிபவராக நாகேஷ் நடித்திருக்கிறார். .
துப்பறியும் சாம்புவின் ஒலிப் புத்தகம் கேட்க வேண்டுமா? இதோ இந்த லிங்கில் கேளுங்கள்:
மாணவர்களுக்கு கூகுள் நடத்தும் விஞ்ஞானக் கண்காட்சியும் போட்டியும் !!
கூகுள் நடத்தும் விஞ்ஞானக் கண்காட்சியும் போட்டியும் !
இதில் 13-18 வயது வரை உள்ள மாணவர்கள் தனியாகவோ குழுவாகவோ கலந்து கொள்ளலாம்.
இதன் அடிப்படைக் கருத்து :
விஞ்ஞானத்தைக் கொண்டு உலகை மேலும் சிறப்படையச் செய்வது எப்படி?
மன்னிக்க வேண்டுகிறேன் – அரசியல் வீடியோ
செம கிண்டல் ! ஸோ ஸார்ரி … சூப்பர் !