ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன்
1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்த கே எஸ் சுந்தரம் (ஆதவன்) இந்திய இரயில்வேயிலும், ‘நேஷனல் புக் டிரஸ்டின்’ தமிழ்ப் பிரிவில் துணையாசிரியராக தில்லியிலும் பெங்களூரிலும் பணியாற்றியவர். 1987 ல் சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
“1960, 70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதைக் கழித்த, படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை அபிலாஷைகளையும், சோகங்களையும் நிராசைகளையும் ஆதவன் போல யாரும் தமிழில் பிரதிபலிக்க முடிந்ததில்லை” என்கிறார் திரு அசோகமித்திரன்.
அவர் சொற்களிலேயே ஏன் எழுதுகிறேன் என்பதைப்பற்றி :
“எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன் முடிந்தது; காதலித்தவளை மறக்க முயன்றேன், முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.”
தன் எழுத்துக்கள் குறித்து
‘நானும் என் எழுத்தும்’ என்று சொல்லிக் கொள்ள முற்படும்போது, இந்தச் சொற்றொடரில் பெருமையுடன் கூடவே ஓர் ஏளனத்தின் சாயலும் கலந்து தொனிப்பதாக எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது – ‘இவனும் இவன் மூஞ்சியும்’ என்று சொல்வதைப் போல. வேறு சிலரும் இதே விதமான அபிப்ராயந்தான் கொண்டிருக்கிறார்களென்பதை நான் அறிவேன் – என் மூஞ்சியைப் பற்றியும், என் எழுத்தைப் பற்றியும். இப்படி ஒரு பிரகிருதியா! இப்படி ஒரு எழுத்தா! என்று பரிகாசத்துடன் சிரித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கெடுப்பானேனென்று, பல சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன். “யூ ஆர் ரைட், ஆஸ் யூ ஸே – இந்த – என்ன சொன்னீர்கள்?”
சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞனான ராமசேஷனின் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் பதிவாகும் “என்பெயர் ராமசேஷன்” இவரது தலை சிறந்த படைப்பு என்று அறியப்படுகிறது. இந்தப் புதினத்தின் ரஷ்ய மொழியாக்கம் இலட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனை ஆகியது.
இந்தியத் தலைநகரின் மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைப் போக்கு, மன ஓட்டங்கள் அதிகார வர்க்கம். மாணவர் உலகம், பத்திரிகை உலகம், அரசியல் உலகம், கலை உலகம், விஞ்ஞான உலகம், தொழிலாளர் உலகம் ஆகிய சூழலில் படைக்கப்பட்ட “காகித மலர்கள்” மற்றொமொரு சிறந்த புதினம்.
‘இண்டர்வியூ’, ‘அப்பர் பெர்த்’, ‘தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு’, ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’, ‘புதுமைப்பித்தனின் துரோகம்’, ‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் சில.
சுசீ என்றழைக்கப்படும் பள்ளியாசிரியை சுசீலா, மற்றொரு ஆசிரியையான மிஸ் டாமினிக் பற்றி சொல்லும் இவரது ‘சினேகிதிகள்’ சிறுகதை
“மிஸ் டாமினிக் தன்னைவிட இருபது ஆண்டுகள் ஜூனியரான என்னைப் பார்த்து பொறமைப்படுகிற ஒரு காலமும் வரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை”
என்று தொடங்குகிறது
வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு வந்த அன்றே மிஸ். டாமினிக் தான் பிரின்சிபால் அறைக்கு வழி சொல்கிறாள். நேர்முகத்தேர்வின் குழுவில் அவளும் இருக்கிறாள். கேள்விகள் கேட்டதெல்லாம் பிரின்சிபால் அகதா மட்டுமே.
வேலைக்குச் சேர்ந்தபிறகு ஆறாம் வகுப்பிற்குக் கணக்குப் பாடம் எடுப்பது சுசீலாவிற்குக் கிடைக்கவும் மிஸ் டாமினிக் தான் காரணம் என்று பேசிக்கொண்டார்கள். ‘மிடில்’ வகுப்புகளுக்குக் கணக்கு எடுப்பது மிஸ் டாமினிக்கின் ஏகபோக உரிமையாம்.
டாமினிக்கும் சுசீலாவும் சிநேகிதிகள் ஆகிவிடுகிறார்கள். கொண்டு வரும் மதிய உணவை மிஸ் டாமினிக் வீட்டிற்குச் சென்று சாப்பிடும் அளவிற்குப் பழகிவிடுகிறார்கள். அகதா பிரின்சிபாலாக இருந்தவரை டைம் டேபிள் வாங்குதல், எல்லா வகுப்பு பிராகரஸ் கார்டுகளை மேற்பார்வையிடுதல், பார்ட்டிகளோ சுற்றுலாக்களோ ஏற்பாடு செய்தல் என்று பல பொறுப்புகள் மிஸ் டாமினிக் வசம் இருந்தன. ப்ரின்சிபாலுடன் டாமினிக் டீ சாப்பிடும்போது சுசீலாவும் பல சமயம் இருப்பாள்.
வெவ்வேறு ஆசிரியைகளின் பலவீனங்கள், வகுப்புகளில் நடந்த தவறுகள், ரகளைகள், போட்டிகள், பொறாமைகள் முணுமுணுப்புகள் எல்லாம் பற்றி பிரின்சிபாலுக்கு மிஸ் டாமினிக் மூலமாகத் தகவல் கிடைத்துவிடும். யாரவது லீவு போட்டால் அதை எடுக்க மிஸ் டாமினிக் வந்துவிடுவாள். நோட்புக்குகளை பரிசீலித்து அதிலுள்ள தவறுகளை பிரின்சிபாலுக்கு ரிப்போர்ட் செய்துவிடுவாள்.
டாமினிக்குடன் நல்ல உறவுகளைப் பேணிவர ஒவ்வொரு டீச்சரும் பாடுபட்டாள். அதே சமயத்தில் அவளுக்கு மிக நெருக்கமாகச் சென்றால் தங்களைப் பற்றி- தங்கள் குறைபாடுகளைப் பற்றி – அவளுக்குத் தெரிந்து விடுமோ என்று பயந்துகொண்டு சற்று விலகியே இருக்கவும் செய்தார்கள். என் ஒருத்தியிடம் மட்டும் டாமினிக் காட்டிய அன்பும் பரிவும் அவர்களுடைய பொறாமையைக் கிளப்பிவிட்டதில் ஆச்சரியமில்லை. ஒற்று வேலை செய்வதிலும், தங்களைப் பற்றி பிரின்சிபாலிடம் கோள் மூட்டி விடுவதிலும் நானும் டாமினிக்குக்கு உடந்தை என்றும் சிலர் நினைத்தார்கள்.
சிலர் டாமினிக்கைப் பற்றி, தனியாக இருக்கிறாளா, ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, காதல் தோல்வியா, சகோதர சகோதரிகள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் இவள் வாயைக் கிண்டுவார்கள். இவள் பதிலளிக்காமல் நழுவிவிடுவாள்.
அகதா ஓய்வுபெற்று பெண்டிக்டா பிரின்சிபாலாக வந்தும் டாமினிக்கின் பொறுப்புகளிலோ, அதிகாரத்திலோ எந்த குறைவும் ஏற்படவில்லை.
பிரின்சிபாலுக்குத் தளபதியாக, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பயமூட்டுபவளாக இருந்த டாமினிக் சுசீலாவிடம் மட்டும் செடி கொடிகள், நாய்கள், உலக நடப்புகள், கல்விமுறையில் சீர்திருத்தங்கள் என்று அரிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பவளாக இருந்தது யாருக்குத் தெரியும்.
டாமினிக்கின் தோழமை காரணமாக ப்ரின்சிபலின் அந்தரங்க வட்டத்தில் தானும் அடக்கம் என்ற பிரமையில் திளைத்து வந்தாள்.
பள்ளி அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த பெண் பணம் கையாடிவிட்டதால் அவளை நீக்கிவிட்டார்கள். அலுவலகத்தை நிர்வகிக்க ஒரு நம்பகமான ஆள் தேவைப்பட்டது. பிரின்சிபால் பெனடிக்டாவும் டாமினிக்கும் வேறு ஆளை நியமிக்கும் வரை அந்தப் பொறுப்பை சுசீலாவை ஏற்க வைக்கிறார்கள். நாமும் அதிகார வட்டத்தில் ஒரு நபர் என்னும் பிரமையில் அப்பொறுப்பை ஏற்று சுசீலா என்னும் ‘டீச்சர்’, ‘கிளார்க்’ ஆகிவிடுகிறாள். புதுப் பொறுப்பில் வாசுதேவன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. சுசீலாவைச் சந்திக்க வந்த வாசுதேவனை, பள்ளியின் கணக்கு வழக்குகள் பரிசீலிக்க பெனடிக்டா கேட்டுக்கொள்கிறாள். சுசீலா – வாசுதேவன் நட்பு திருமணத்தில் முடிகிறது.
திரும்பவும் குமாஸ்தாவிருந்து ஆசிரியை ஆகலாம் என்றால், “அந்த லைனிலிருந்து தொடர்பு அறுந்துபோய் இவ்வளவு நாளாகிவிட்டதே!” என்று சொல்லிவிடுகிறாள், பிரின்சிபால் பெனடிக்டா
பெனடிக்டா ஓய்வுபெற்றதும் மரியம் என்னும் புது பிரின்சிபால் பொறுப்பேற்கிறார். அவருக்கு டாமினிக்கின் வழிமுறைகள் பிடிக்கவில்லை. தன் வழி முறைகளை நியாயப்படுத்த முயன்ற டாமினிக்கிடம் “உங்கள் கருத்துக்களை ஆதரிக்கும் வேறு பள்ளிக்கூடத்தில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம்” என்கிறார் பிரின்சிபால்.
ஸ்டாஃப் ரூமில் இருந்தாலே உரத்த குரலும் சிரிப்புமாக அந்த அறையையே கலகலக்க வைக்கும் மிஸ் டாமினிக், அமைதியாகி விடுகிறாள். அரசியாக இருந்தவள், ஒரே நாளில் சாதாரணப் பிரஜை ஆனாள். சுசீலாவிற்கு அவள் மீது அனுதாபமாக இருந்தது.
டாமினிக் இன்னும் ஒரு மாதத்தில் ஒய்வு பெற இருக்கையில், காசு வசூலித்து ஸ்வீட் காரம் காப்பியுடன், தனது வீட்டிலேயே ஒரு ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்கிறாள் சுசீலா.
தேநீர் விருந்து பெரும் வெற்றி. எல்லோரும் கலைந்துபோனதும் சுசீலாவின் கையைப் பிடித்துக்கொண்டு உரக்க அழுகிறாள்.
“நான் உனக்கு அநீதி இழைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு சுசீ” என்னை மன்னித்துவிடு.”
“மிஸ் டாமினிக் ! எனக்குப் புரியவில்லை.”
“நான் உன்னைப் பார்த்துப் பொறாமைப் பட்டேன்”
“நான் அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?”
“சுசீ .. நீ ஆறாம் வகுப்பு டீச்சராக இருந்தபோது – உன் படிப்பு சொல்லிக் கொடுக்கும் திறனைப் பலர் புகழ்ந்தார்கள். குறிப்பாக, கணக்குச் சொல்லித்தருவதை… என்னால் அதைத் தாங்க முடியவில்லை சுசீ.. நான்தான் கணக்குச் சொல்லித்தருவதில் எக்ஸ்பர்ட் என்று நினைத்திருந்தேன்.”
“நீங்கள்…. நிஜமாக … “
“நீ ட்யூஷன் சொல்லித்தருவாயா என்றுகூடச் சில பெற்றோர் பெனடிக்டாவிடம் விசாரித்தார்கள். எனக்கு பயமாகப் போய்விட்டது, சுசீ “
“பயமா? எதற்காக?”
“நாமிருவரும் குடியிருந்தது ஒரே ஏரியாவில். எனக்கு வர வேண்டிய ட்யூஷன் கிராக்கிகளை நீ பறித்துக் கொண்டு விடுவாயோ என்று பயமாயிருந்தது. …”
ட்யூஷனில் தனக்குப் போட்டியாக சுசீ வரக்கூடாது என்பதற்காகவே, அவளை ஆபீசில் போடும்படி பிரின்சிபாலிடம் சிபாரிசு செய்ததாகவும் கூறுகிறாள் டாமினிக். சுசீலா அதிர்ச்சியில் துவண்டு போகிறாள்.
“என்னை மன்னித்துவிடு சுசீ! என்னை மன்னித்துவிடு!” என்று அவள் மீண்டும் அரற்றினாள். “உன்னைப்போல நானும் யாரவது ஓர் இளைஞனுடன் சமரசம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நான் மிகவும் கர்வம் பிடித்தவள். பணியாதவள். எல்லா ஆண்களையும் என்னிடமிருந்து விரட்டிவிட்டது. ஒரு கட்டத்திற்குப் பிறகு யாருமே மிச்சமில்லை. நான் மேலும் என் பிடிவாதத்தில் சிறைப்பட்டு, வக்கிரமான சுயநலவாதியாகி, என் உறவினர்களையும் விரோதித்துக் கொண்டு, கடைசியில் நான் அன்போடு நேசித்த ஒரு ஜீவனுக்குக்கூட துரோகம் பண்ணுமளவிற்கு.. “
தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மீது தனது மதிப்பீடுகள் யாவும் பறிக்கப்பட்டு, கடந்த பத்தாண்டு வாழ்க்கையும் பயனற்றதாக உணர்ந்து, மற்றவர்களை நம்புவதையே கேள்விக்குறியாக்கி…
மிஸ் டாமினிக்! நீ என் மனதில் சந்தேக விதைகளைத் தூவிவிட்டாய். அவநம்பிக்கையுள்ளவளாக்கி விட்டாய். இதுதான் நீ செய்த மிகப் பெரிய குற்றம், டாமினிக் இனி எந்த ஒரு ஜீவனையும் முழு மனதாக ஒப்புக்கொள்ளவோ, அதன் மீது நம்பிக்கை வைக்கவோ.. ஓ காட்!
ஒய்வு பெற்றபிறகு மிஸ் டாமினிக் இதே நகரின் புறநகர்ப் பகுதி ஒன்றில்தான் வசித்து வருவதாகக் கேள்வி. யாரோ அட்ரஸ் கூடக் கொடுத்தார்கள். ஆனால் நான் அவளைப் பார்க்கப் போகவில்லை. பார்க்க வேண்டுமென்று தோன்ற வில்லை.
என்று முடிகிறது கதை
இணையத்தில் கிடைக்கும் இவரது சில கதைகள்.
இண்டர்வியூ புதுமைப்பித்தனின் துரோகம் முதலில் இரவு வரும்