நானறிந்த சுஜாதா” – ஒரு பதிவு
குவிகம் இலக்கிய வாசலின் பதின்மூன்றாவது நிகழ்வாக “நானறிந்த சுஜாதா” பனுவல் புத்தக நிலைய அரங்கில் மே 21, சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் திரு.சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைப்பும் செய்தார்.
.மூத்த எழுத்தாளர் “நகுபோலியன்” அவர்கள் தனது சிறுகதையினை வசித்தார்.
சுஜாதாவின் நாடகமான “மாறுதல்” திருவான்மியூர் ஆனந்த் குடியிருப்புக் குழந்தைகள் ஒரு குறுநாடகமாக . திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் அவர்கள் இயக்கத்தில் எல்லோரும் பாராட்டும் வகையில் அரங்கேற்றினார்கள்.
(ஆயிரம் நாடகங்களில் பங்கேற்ற திரு தமிழ்த்தேனி, உட்கார்ந்தவாறே ஒரு காட்சியினை கண்முன் நிறுத்தமுடியும் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னது இந்த நாடகம் கொடுத்த அனுபவத்தை நன்கு தெரியப்படுத்துகிறது)
“தமிழ்த்தேனி” அவர்கள் ‘அம்மா’ மற்றும் ‘கன்னியாகுமரி’ என்னும் இரு கவிதைகளால் அவையை அலங்கரித்தார்.
சுஜாதா அவர்களிடம் பக்தி என்றே சொல்லக்கூடிய வகையில் ஈடுபாட்டால் ‘சுஜாதா தேசிகன்’ என்று மாறிவிட்ட தேசிகன் அவர்கள் சுஜாதாவின் எழுத்துக்களுக்குள் நுழைந்த கதையினையும், அமரர் சுஜாதாவின் வியத்தகு பார்வையையும் பழகும் முறையினையும் கூறி எழுத்தாளராகவே நாமறிந்த அவரை ஒரு மாபெரும் மனிதனாகவும் கண்முன் நிறுத்தினார்.
ஜெயராமன் ரகுநாதன் அவர்கள் பிரமிப்பு அடையும் வாசகனாக எழுத்துக்களையும் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவரது படைப்புகளைக் கொண்டே விவரித்து அனைவரின் மனதிலும் சுஜாதாவை மறுவாசிப்பு செய்யும் அனுபவத்தை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பங்குபெற்றோர் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். திரு கிருபானந்தனின் நன்றி நவிலலுடன் இனிய மாலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
முகநூலில் இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ள டாக்டர் பாஸ்கரன், திரு சுஜாதா தேசிகன் மற்றும் திரு ஜெயராமன் ரகுநாதன் ஆகியோருக்கும் நமது நன்றி.