Daily Archives: January 17, 2018
குவிகம் 50
இந்த இதழ் குவிகத்தின் 50 வது இதழ் !
நவம்பர் 2013 இல் துவங்கி இன்றுவரை குவிகம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ( டிசம்பர் 2013 தவிர).
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கார்ட்டூன், தொடர்கள் என்று பல பகுதிகள் மூலம் இலக்கியம், அரசியல், திரைப்படம், தொலைக்காட்சி, படங்கள், விஞ்ஞானம் போன்ற பல துறைகள் சார்ந்த தகவல்களை உங்களுக்கு அளித்து வருகிறோம்.
இந்த மின்னிதழை உங்களுக்குச் சேர்ப்பிப்பதில் எனக்கு உதவிய என் துணைவி விஜயலக்ஷ்மி, என் மகன் அர்ஜூன், என் மகள் அனுராதா, இணையாசிரியர் கிருபாநந்தன் ஆகியோருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
‘குவிகம் எத்தனைபேரைச் சென்றடைகிறது? எத்தனைபேர் படிக்கிறார்கள்?’ என்பதுபோன்ற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன.
‘குவிகம்’ என்ற பெயருக்கு விளக்கம் கேட்டு இன்னும் பலர் பல இடங்களில் கேள்விகள் எழுப்பியவண்ணமே இருக்கின்றனர்.
‘குமுதம், விகடன், கல்கி, குங்குமம் ‘ என்ற பிரபலப் பத்திரிகைப் பெயர்களின் சுருக்கமா? ‘ என்று வினவுபவர்கள் அதிகம்.
ஆனால் ‘குவிகம் ‘ என்ற பெயர் இப்போது சென்னையில் இலக்கிய வட்டங்களில் சற்று நன்கு அறிமுகமான பெயர் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதற்கு இணையாசிரியர் கிருபாநந்தன் அவர்களின் பங்கு மகத்தானது.
அவருடன் இணைந்து ” குவிகம் இலக்கிய வாசல் ” என்ற அமைப்பைத் தொடங்கி கடந்த 33 மாதங்களாக இலக்கியக் கூட்டங்கள் நடத்திவருகிறோம். அதன் மூலம் பல இலக்கிய மேதைகளை நம் அரங்கத்தில் சந்தித்து அவர்கள் கருத்துக்களைக் கேட்கமுடிந்தது. குறைவாக இருந்தாலும், நிறைவான வாசகர்களின் கலந்துரையாடல்கள், கதை சொல்லல் , கவிதை படித்தல், எங்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
குவிகத்தின் அடுத்த வளர்ச்சியாக, குவிகம் பதிப்பகம் என்ற ஒன்றைத் துவக்கி இதுவரை 8 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். அவற்றுள் குவிகம் இதழில் வெளிவந்த தொடர்கள் இரண்டு புத்தகமாக வந்துள்ளன. ( சில படைப்பாளிகள், சரித்திரம் பேசுகிறது). குவிகத்தில் வந்த ‘மணிமகுடம்’ தொடர் நாவல் விருட்சம் வெளியீடாக வந்து அனைவர் பாராட்டையும் பெற்றுள்ளது. விரைவில் குவிகத்தில் வந்த ‘ஷாலு மை வைஃப்’ தொடரும் புத்தக வடிவில் வரப்போகிறது.
மேலும், குவிகம் BookXchange என்ற ஒரு திட்டத்தையும் இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் துவக்கியுள்ளோம். அதன்படி, படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு அங்கிருக்கும் புத்தகங்களில் பிடித்ததை எடுத்துச் செல்லலாம். இதை இனிவரும் இலக்கியக் கூட்டங்களில் தொடர்ந்து செய்யவும் உத்தேசம்.
அடுத்தபடியாக, “குவிகம் இலக்கிய அன்பர்கள்” என்று ஒரு அமைப்பை ஏற்படுத்த உள்ளோம் . அதில் Rs 50 கொடுத்து அங்கத்தினர்கள் ஆகலாம். 200-300 அங்கத்தினர்களைச் சேர்த்து அவர்கள் விரும்பும் வகையில் இலக்கியப் பரிமாற்றம் செய்யலாம் என்பது எங்கள் திட்டம்.
அடுத்த இதழிலிருந்து குவிகத்தில் மாபெரும் மாற்றங்களைச் செய்ய எண்ணியுள்ளோம்.
என்னென்ன என்று கேட்பது கேட்கிறது.
கைவிரல்களைக் கட்டிக்கொண்டு காத்திருங்கள்.
உங்கள் எதிர்பார்ப்புகளையும் எழுதுங்கள்.
எல்லாவற்றையும் சேர்த்துப் புதிய குவிகம் படைப்போம் !
தலையங்கம்
சிலப்பதிகாரம் ஏன் எழுதினேன் என்று இளங்கோ அடிகளே கூறும் மூன்று காரணங்கள் உண்டு.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
இதில் ஊழ்வினையைப்பற்றியும், பத்தினியைப்பற்றியும் இங்கு நாம் பேசப்போவதில்லை.
ஆனால் அரசியலில் தவறு செய்பவர்களுக்குத் தரும தேவதையே வந்து தண்டிக்கும் என்ற வாதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
இது இன்றைக்குச் சரியா?
2ஜி வழக்கில் அனைவருக்கும் விடுதலை என்றதும் எழுகின்ற கேள்விதான் இது !
ஆர் கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டார் என்றதும் எழுகின்ற கேள்விதான் இது !
“முருகா உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலை! சுப்பிரமணிய சாமியா வந்து கேசைப் போட்டே ! குமாரசாமியா வந்து கேசே இல்லை என்றாயே” என்பவர்கள் கேட்கும் கேள்வி இது !
தலைமை நீதிபதியே சரியில்லை என்று மற்ற நீதிபதிகள் வெளிப்படையாகப் பேசும்போது மக்கள் மனதில் தோன்றும் கேள்வி இது !
“நீதி வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கியதைப் போலத் தோன்றவும் வேண்டும்” என்று சொல்கிறவர்கள் கேட்கும் கேள்வி இது!
‘ஊழல் இந்திய மக்களின் மத்தியில் புரையோடிக்கிடக்கும் புற்று நோய். அதற்கு மருந்தே கிடையாது’ என்று வெளிநாட்டவர் கூறுவதைக் கேட்டு வேதனைப்படுபவர் கேட்கும் கேள்வி இது !
குறித்துக் கொள்ளுங்கள்!
ஊழல் செய்தவன் கண்டிப்பாகத் தண்டனை அடைவான் என்ற எண்ணம் என்றைக்குத் தோன்றுகிறதோ அன்றுதான் நம் நாடு உலக அளவில் மாபெரும் வல்லரசாக மாறும் !
இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது நம்நாடு வல்லரசாக மாறும்.
அந்த நம்பிக்கை இருக்கிறது.
ஞாநி அவர்களுக்கு அஞ்சலி
பிரபல எழுத்தாளரும் பரிக்க்ஷா நாடகக் குழுவின் அமைப்பாளரும் அரசியல் விமர்சக வித்தகருமான நண்பர் ஞாநி (15.01.2018) காலை நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
அவர் பிரிவால் வாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் குவிகத்தின் மரியாதை கலந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குவிகத்திற்காக “நாடகங்கள் – நேற்று இன்று நாளை ” என்ற தலைப்பில் 19 மார்ச் 2016இல் சிறப்புரை ஆற்றினார்.
ஞாநி என்றும் ஞாநி சங்கர் (1954 – 2018) என்றும் அறியப்படுபவர் தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர்.
இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.
சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தினார். பரீக்ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தினார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் (AAP) சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில்போட்டியிட்டார். பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகினார்.
அவரது படைப்புகள்:
கட்டுரைகள் தொகுப்பு
பழைய பேப்பர் மறுபடியும்
கண்டதைச் சொல்லுகிறேன்
கேள்விகள்
மனிதன் பதில்கள்
நெருப்பு மலர்கள்
பேய் அரசு செய்தால்
அயோக்யர்களும்முட்டாள்களும்
கேள்விக் குறியாகும் அரசியல்
அறிந்தும் அறியாமலும்
ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)
என் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)
நாடகங்கள்
பலூன்
வட்டம்
எண் மகன்
விசாரணை
சண்டைக்காரிகள்
புதினங்கள்
தவிப்பு
திரைக்கதை
அய்யா(பெரியார் வாழ்க்கை)
குறும்படங்கள்
அய்யா
ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?
(நன்றி: விக்கிபீடியா )
முன்னேறு – மதிப்புரை (சுந்தரராஜன் )
உலக ஆன்மீகத்தில், “அம்மா” என்று அனைவராலும் போற்றப்படும் மதியொளி சரஸ்வதி அம்மா அவர்களின் “முன்னேறு” என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.
அந்தப் புத்தகத்தின் முகப்பும் மதிப்புரையும் உங்கள் பார்வைக்கு:
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘நான் யுத்தம் புரியமாட்டேன்’ என்று குருஷேத்திரப் போர்முனையில் தேரில் சாய்ந்துவிட்ட அர்ஜுனனுக்குக் கூறிய அறிவுரைகளின் தொகுப்புதான் பகவத்கீதை என்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சுருக்கமாக ஒரே ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் “முன்னேறு” என்ற சொல்லைத்தவிர வேறு வார்த்தையில் சொல்லமுடியாது.
அப்படிப்பட்ட கீதையின் சாரத்தைத் தலைப்பாக்கிக்கொண்டு கீதையைப்போலப் பதினெட்டு அத்தியாயங்களில் நாம் வாழ்வில் செல்லுவதற்கான பாதையைச் சுட்டிக்காட்டி அதில் “முன்னேறு” என்று நம் கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறார் நமது மதிப்பிற்குரிய மதியொளி அம்மா அவர்கள்.
கவலையை ஒழி, புலன்களை அடக்கு, மனதையும் அடக்கு, ஆசையை விடு, ஞானத்தைத் தேடு, சந்தேகத்தைத் துற, பக்தியில் திளை, தர்மத்தைக் கடைப்பிடி, கர்மத்தைச் செய், பலனை மற, சர்வம் கிருஷ்ணார்ப்பணம் – இவையே கீதை காட்டிய தத்துவக் கோட்பாடுகள்.
அம்மா அவர்களும் கிருஷ்ணனைப்போல, அன்பு, கருணை, ஈகை, பாசம், இன்பம், உண்மை, ஆனந்தம், அக்கறை, வரம், விவேகம், காலம், முக்தி போன்ற அறிவதற்கு அரிதான தத்துவங்களைத் தன் சொல்லாட்சியால் எளிமைப்படுத்தி நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் வடிவில் வடிவமைத்துக்கொடுத்திருக்கிறார்.
இதை ‘அன்னையின் அமுது’ என்றும் ‘அன்பின் ஆசி’ என்றும் சொல்லலாம்.
இந்த “முன்னேறு” என்ற நூல் ஒரு புதுமையான முறையில் அமைந்திருக்கிறது. உரைநடையும் கவித்துவமும் கலந்த இனிமையான நடை, இந்த நூல் முழுவதும் அழகாகப் படர்ந்துள்ளது. கவிதை என்றால் மரபுக் கவிதையும் புதுக் கவிதையும் சேர்ந்த புதிய பாணி. பல இடங்களில் சொற்கள் ஹைக்கூ வடிவில் பரிணமிக்கின்றன. கதையுடன் கட்டுரையும் கலந்த சர்க்கரைப் பொங்கல் இது. எளிமையான சொற்கள் மூலம் கருத்துள்ள கதைகளைக் கவிதை விதைகளுடன் சேர்த்து, படிப்பவர் மனதில் விதைக்கும் புதிய நடை அம்மா அவர்களின் உரைநடை.
இந்தப் புத்தகத்தின் மூலம் நம் மனதில் எழும் பலவித சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு இந்த நூல் விடைகளைத் தந்திருக்கிறது என்றால் அது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை. அவற்றுள் சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.
அவற்றிற்கான விடைகளைப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
- முன்னேற்றத்தின் மூச்சு என்பது என்ன?
- ஊத்துக்காடு வேங்கடசுப்பிரமணிய பாகவதர் பாடும்போது ஏன் தன் மடியில் தாளம் போடுவதில்லை?
- பகவான் என்ற சொல்லின் பதம் என்ன?
- கலக்கம் எப்போது ஓடிப்போகும்?
- முதுமையின் சோர்வை விலக்குவது எப்படி?
- இறைவன் எப்படி விளங்குகிறான்?
- உண்மையை உபாசித்த சந்திரசேனன், கெளதமரிஷி மனம் உருகும்படி என்ன கூறினான்?
- காலம் என்ன செய்யும்?
- மகிழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவது எது?
- தில்லை நடராசப் பெருமான் ஏன் ஆடுவதை ஒருகணம் மறந்தார்?
- அன்னை எப்போது வரமாகி வருவாள்?
- தர்மதத்தர் என்னும் அந்தணர் எப்படித் தசரதன் ஆனார்?
- சுதீட்சனரின் சாபம் எப்படி ராமருக்குப் பாலம் கட்ட உதவியது?
- அம்புப் படுக்கையிலிருந்து பீஷ்மர் தர்மோபதேசம் செய்யும்போது திரௌபதி ஏன் சிரித்தாள்?
- புத்தர் தன் மகன் ராகுலுக்குக் கூறிய அறிவுரை என்ன?
இப்படிப் பல வினாடி வினாவிற்கான விடைகள் கொண்ட அற்புதப் புத்தகம் இது.
மொத்தத்தில், பகவத்கீதையின் சாரத்தைப் பிழிந்து, வடித்து, இளஞ்சூட்டில் இறக்கி, பொடித்து, குவித்துக் கொடுத்த ஆயுர்வேத கேப்ஸ்யூல்தான் அம்மா அவர்கள் நமக்கு அளித்த “முன்னேறு” என்ற நூல்.
மன அமைதிக்கும், ஊக்கத்திற்கும் இதைவிடச் சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை.
கவிதை செய்வோம் – தில்லைவேந்தன்
வார்த்தையால் வாழ்வ ளக்கும்
வடிவமே கவிதை ஆகும்
நேர்த்தியாய்ச் சொல்லி ருக்கும்
நிரல்படக் கருத்தி ருக்கும்
ஈர்த்திடும் எழிலி ருக்கும்
இன்சுவை விரவி நிற்கும்
கோத்தவோர் மொழியின் மாலை
குளிர்தமிழ் இன்பச் சோலை.
வெடுக்கெனக் கற்ப னையாம்
விரிந்திடும் தூண்டில் வீசி
உடுக்களை, நிலவை , மேலே
உலவிடும் கதிரைப் பற்றி
அடுக்கியே கவிதை செய்வோம்.
அந்தமில் வான்சு ருட்டிப்
படுக்கநல் பாயாய் மாற்றிப்
பைந்தமிழ்ப் பனுவல் செய்வோம்
பழங்கதை படித்துச் சொல்வோம்
பழமையில் பெருமை கொள்வோம்
வழங்கிடும் புதுமை மற்றும்
வயங்கிடும் கலைகள் கற்று
முழங்கிடும் தமிழில் நூல்கள்
முனைப்புடன் வடித்துச் செய்வோம்
ஒழுங்குடன் மரபைப் பேணி
உயர்ந்தநல் கவியும் செய்வோம்
சரித்திரம் பேசுகிறது! (18) –யாரோ
காளிதாசன்
காலச்சக்கரம் சுழலும்போது அதுவே இடையிடையே பிரமிப்பில் ஆழ்கிறது.
அதற்குக் காரணம் மனித இனத்தையே மாற்றும் அதிசய மனிதர்களின் அவதரிப்பு!
இலக்கியத் துறையில் மாபெரும் சரித்திரப் புருஷர்கள் ஒரு சில காலங்களில் வாழ்ந்து உலகுக்கு மகிழ்வூட்டி மறைகின்றனர்.
அது அந்தக் காலம் செய்த பேறு என்றே சொல்லவேண்டும்.
ஒரே ஒரு வால்மீகி.
ஒரே ஒரு வியாசர்.
ஒரே ஒரு கம்பன்.
ஒரே ஒரு வள்ளுவன்.
ஒரே ஒரு ஷேக்ஸ்பியர்.
ஒரே ஒரு தாகூர்.
இப்படி நாம் சொல்லிக்கொண்டு வரும்போது ..
ஒரு இலக்கிய சூரியன் சரித்திரத்தின் தொடுவானத்தில் உதித்துப் பிரகாசித்தான்.
ஒரே ஒரு காளிதாசன்!
குப்தர்கள் பொற்காலம் இந்த சூரியனால் ஒளிவீசியது!
ருத்ரதாமன் சம்ஸ்கிருத மொழியில் இலக்கியம் படைத்த காலத்திலிருந்து பல சம்ஸ்கிருத பண்டிதர்கள் – மேலும் கவிஞர்கள் நாடகங்களையும் கவிகளையும் படைக்கத் துவங்கினர். குப்த ராஜ்யத்தில் வீடுகள்தோறும் ‘இலக்கிய மன்றங்கள்’ இருந்தது. சமஸ்கிருதம் வளர்ச்சியடைந்தது. காளிதாசன் தன் கவிதைகளால் பொற்காவியங்கள் படைத்தான். சாகுந்தலம், விக்ரமோர்வசியம், மாலவிகாக்னிமித்ரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம் முதலிய நூல்களை அந்த மகாகவி எழுதினான்.
பின்னாளில் சர். வில்லியம் ஜோன்ஸ் காளிதாசனுடைய சாகுந்தலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபின் அகில உலகும் காளிதாசன் புலமையை அறிந்தது.
இனி கதைக்குப் போகலாம்.
ஒரு காட்சி விரிகிறது. இன்றைய காஷ்மீர் – அந்நாளில். இமயமலை அடிவாரத்தில் ஆடியோடித் திரிந்த சிறுவன் ஒருவன். இயற்கையின் எழில் அவனைக் கவர்ந்தது. உயர்ந்த மலைத்தொடர்கள் அவன் மனதில் நிரந்தரமாகப் பதிந்தது.வெள்ளி உருகி ஓடுவதுபோல் பனிமலைகளிலிருந்து ஓடைகள் சூரிய வெளிச்சத்தில் மின்னியது. ஓடக்கரையில் வளர்ந்திருந்தது குங்குமப்பூச்செடிகள். ஓங்கி உயர்ந்திருந்தது தேவதாரு மரங்கள். மலையின் நடுவில் சிறு ஏரிகள். அவன் மனதில் இத்தனையும் இன்பத்துடன் உறைந்தது.
ஆயினும் புத்திசாலித்தனம் என்பது அவனிடம் மருந்துக்கும் இல்லை. ஆட்டுமந்தை ஒன்றை அவன் நடத்திவந்தான். அவனது பெற்றோர்கள்: இந்த ஊரில் இருந்து கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தால் உருப்பட்டாற்போலத்தான்! தெற்கே மகதம் – மாளவம் சென்று வேலைசெய்து பிழைக்க வழியைப்பார்!
சிறுவன் புறப்பட்டான். பாடலிபுத்திரம் சென்றான். காட்சிகள் பல கண்டான். கலிங்கம் சுற்றினான். ஆந்திராவில் அலைந்து திரிந்தான். பின்னர் மெல்ல உஜ்ஜயினி வந்தடைந்தான். நகரத்தின் பொன்னொத்த புதுப்பொலிவும் – வந்தாரை வாழவைக்கும் எண்ணப்பாடும் – அவனை வரவேற்றது. மரவெட்டியாக வேலை பார்த்தான். சிறுவன் இளைஞனான்.
அருகிலிருந்த மகிஷபுரி என்ற சிற்றரசரனின் மகள் – இளவரசி வித்யோத்மா. அழகி. பலவும் கற்று பெரும்பாண்டித்யம் கொண்ட அறிவாளி. எதுவுமே – அதிகம் இருந்தால் கர்வம் பெருகுவது இயற்கைதானே! அமைச்சர்களையும் – பண்டிதர்கள் அனைவரையும் தனது அறிவாற்றலால் – அலட்சியம் செய்து அவமரியாதை செய்தாள். ‘தன்னை அறிவால் வெல்லும் இளைஞனையே திருமணம் செய்வேன்’ என்றும் சூளுரைத்தாள். அமைச்சர்கள் – அகம்பாவம் பிடித்த இந்த இளவரசிக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும் என்று நினைத்தனர். இவளுக்கு ஒரு முட்டாளைக் கட்டிவைப்போம் – என்று வெஞ்சினம் கொண்டனர்.
ஒரு மரத்தில் அந்த இளைஞன் ஒரு கிளையில் அமர்ந்துகொண்டு தான் அமர்ந்த கிளையையே வெட்டும் காட்சியைக் கண்டனர்.
வெட்டி முறிந்த உடன் இளைஞன் கீழே விழுந்த அவலமும் கண்டனர்.
‘இவன் சரியான முட்டாள்! இவனையே இளவரசிக்கு மணமுடித்து அவளது கொட்டத்தையும் அடக்க வேண்டும்’ – என்று எண்ணினர்.
அவனிடம் சென்று : நீ சாப்பிட்டாயா?
அவன்: ரொம்பப் பசிக்குது
அமைச்சன்: எங்களுடன் அரண்மனைக்கு வா! விருந்து கிடைக்கும். ஆனால் நீ வாயைத் திறந்து பேசக்கூடாது.
அவன்:சரி
அமைச்சன் சிற்றரசனிடம் சென்று : அரசே! நாங்கள் இன்று இந்த அறிவாளி இளைஞனைக் காணும் பாக்கியம் பெற்றோம். இவனே உங்கள் மகளை அறிவால் வெற்றிகொண்டு மணமுடிக்க வந்தவன். ஆனால் இவன் இந்த வருடம் முழுவதும் மௌன விரதம் கொண்டுள்ளான்.
நமது முட்டாள் இளைஞன் இளவரசியிருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
இளவரசி தன் வலக்கரத்தின் ஒரு விரலைக் காட்டினாள். அவன் அதை ‘இவள் எனது ஒரு கண்ணை குத்துவேன் என்கிறாள்’ என்று எண்ணி , ‘இவளது இரண்டு கண்களையும் குத்துவேன்’ என்பதுபோல் தன் இரு விரல்களைக் காட்டினான்!
இளவரசி தன் ஐந்து விரல்களை விரித்து தனது உள்ளங்கையைக் காட்டினாள். அவன் ‘இவள் என்னை அறைவதற்குக் கையைக் காட்டுகிறாள்’ என்று எண்ணி ‘இவளை குத்துவேன்’ என்பதுபோல் தனது விரல்களைக் குவித்து முஷ்டிக்கரத்தைக் காண்பித்தான்.
அருகிலிருந்த அமைச்சர்கள் இளைஞனை வெகுவாக சிலாகித்து : இளவரசி! என்ன அறிஞர் இவர்!
நீங்கள் ஒரு விரலைக் காட்டி, ‘கடவுள் ஒருவர்’ என்றீர். இவர் இரு விரல் காட்டி .. ‘கடவுள் பாதி! மனிதன் பாதி! இரண்டும் சேர்ந்த கலவை நாம்’ – என்று காட்டுகிறார். மேலும் ஐந்து விரல்களைக் காட்டி, ‘ஐந்து உணர்வுகள்’ என்றீர். இவர் அவற்றைக் குவித்து ‘ஐந்து உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதில் சிறப்பு’ என்று கூறுகிறார். இளவரசி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு நமது முட்டாள் மௌனியைத் திருமணம் செய்துகொண்டாள்.
கௌண்டமணி தனது சகோதரிக்குப் பெயிண்ட் அடித்து செந்திலுக்குக் கல்யாணம் செய்த சினிமாக் கதைதான் நமக்கு நினைவில் வருகிறது!
இளவரசி – கணவன் முட்டாள் என்பதை உணர்ந்து – திட்டித் – துரத்திவிட்டாள். அமைச்சர்களும் அவனைத் துரத்திவிட்டனர். அவர்கள் லட்சியம் நிறைவேறிவிட்டது. அழுத இளைஞன் காளி கோவில் சென்று கதறி அழுது முறையிட்டான்: ‘தாயே! எனக்கு அறிவு தரமாட்டாயா?’
அழுது அழுது ஓய்ந்த பின் : ‘தாயே காளி மாதா! எனக்கு நீ அறிவு தரவில்லை என்றால் எனது நாவு இருந்து பலன் என்ன! அதை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்!’
குறுவாளெடுத்து நாக்கை அறுத்துக்கொள்ள முயன்றான். காளி அங்கு தோன்றி அருளையும் அறிவையும் தந்தாள்.அன்று காளிதாசன் பிறந்தான்! சம்ஸ்கிருத மொழி, காளிதாசன் நாவிலிருந்து வெளிவந்ததால் அலங்காரம் பெற்றது!
காளிதாசன் விக்கிரமாதித்தனின் அரசசபையிலுள்ள நவீன ரத்தினங்களில் ஒருவர். விக்ரமாதித்தர் அரசவையில் காளிதாசனைத்தவிர தண்டி, பவ பூபதி போன்ற புலவர்களும் இருந்தனர். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை! ஒருசமயம் இந்த மூவருக்குள் யாருடைய கவித்துவம் உயர்ந்தது என்ற சர்ச்சை எழுந்தது. தெய்வ சந்நிதியில் காளியிடமே தீர்ப்புக் கேட்பது என்று முடிவானது. மூவரும் காளி கோயிலில் வந்து பாடல்கள் பாடினர். தண்டியின் கவிதை ரசனை அதிகமென்றும், பவபூபதியின் பாடல்கள் அறிவுப்பூர்வமானவை என்றும் அசரிரீ ஒலித்தது.
காளிதாசரைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை! காளிதாசருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டுவிட்டது. “அப்படியானால் என் திறமை என்னடி?” என்று ஒருமையில் காளியைத் திட்டிவிட்டார். காளி முடிப்பதற்குள் அவர் அவசரப்பட்டுவிட்டார்.
“மகனே! காளிதாசா! என்னடா அவசரம் உனக்கு?! நான் மற்றவர்களின் பாண்டித்யம்பற்றியே மெச்சினேன்! உன்னைப்பற்றிச் சொல்வதற்குள் அப்படி என்ன அவசரம்? ‘த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சய’ என்று உன்னைப்பற்றிச் சொல்வதற்குள் என்னைத் திட்டிவிட்டாயே” என்றதும் காளிதாசர் அழுதுவிட்டார்.
அந்த ஸ்லோகத்தின் பொருள் ‘நீதானே நான்! நீதானே நான்! நீதானே நான்’. அதாவது காளிதாசனும் காளியும் ஒன்று. நீயும் நானும் ஒன்றானபிறகு உனக்கு மிஞ்சிய புலவனேது? என்றாள் காளி.
மகாகவி காளிதாசன் ருது சம்ஹாரம், குமார சம்பவம், மேக சந்தேசம், ரகுவம்சம் ஆகிய நான்கு காவியங்களையும் விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்ரம், சாகுந்தலம் ஆகிய நாடகங்களையும் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் அழகிய மொழி நடையில் நமது சாதாரண அறிவால் நினைத்துப் பார்க்கவே முடியாத உயரிய கற்பனை வளத்தில் படைத்துள்ளார்.
(சகுந்தலை)
சிலர் பிறக்கும்போதே புகழுடன் தோன்றுவர். சிலரது வாழ்வில் திடீரென்று இறையருள் கிட்டும். இறையருள், யாருக்கு எப்பொழுது கிடைக்கும் என்பது இவ்வுலக நியமங்களின் மாபெரும் புதிர். அதிலும் வெகு சிலருக்குத்தான் இறைவனே நண்பனாகக் கிடைக்கும் பாக்கியம் கிடைக்கும். காளிதாசன் அப்பேர்ப்பட்ட வரம் பெற்றவன்! அது உலகுக்கே ஒரு வரம்!
சரித்திரம் இனிமை கண்டது – புதுமை பெற்றது – பெருமை கொண்டது!
வேறு என்ன கதைகள் சரித்திரம் சொல்லப் போகிறது! பொறுத்திருந்து பார்ப்போம்.
படத்தில் பாகவதம்
பேய்க்குறும்படம்
இது ஒரு கலக்கல் பேய்க்குறும்படம்.
சும்மா ஜாலியா என்ஜாய் பண்ணுங்க !
ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – 7 புலியூர் அனந்து
நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா
இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா?
….
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
முதலில் எப்போதாவது வெட்டிச்சங்கத்துக்குப் (அரட்டை கோஷ்டிக்கு அவர்கள் வைத்திருந்த பெயர்) போய்க்கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி என்றாகி நாளடைவில் நிரந்தர உறுப்பினன் ஆகிவிட்டேன். (இங்குமங்கும் – ஆங்காங்கே – விட்டுவிட்டு – பரவலாக – மிகப் பரவலாக என்றெல்லாம் சொல்வார்களே அந்தக் கால வானொலி வானிலை அறிக்கை நினைவிற்கு வருகிறதோ?)
அந்த இடத்திற்கு அருகில் இருந்ததாலோ என்னவோ, வரதராஜன் சார் முதலில் ஆஜர். பின்னர்தான் ஒருவர் ஒருவராக மற்றவர்கள் வந்து சேர்ந்துகொள்வோம். ஆக, வரதராஜன், மகேந்திரன், ஏகாம்பரம், சந்துரு, சூயன்லாய் மற்றும் நான் என்று அரை டஜன் நபர்கள் கிட்டத்தட்ட எல்லா நாளிலும் கூடுவோம் .
வரதராஜன்தான் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர். எப்போதேனும் அரட்டை விவாதமாக மாறிவிடும். சற்று நேரத்தில் வேறு விஷயத்திற்குத் தாவிவிடும். சில சமயம் விவாதம் முற்றி சூடாகத் தொடங்கினாலோ அல்லது வெகுநேரம் தொடர்ந்தாலோ அதற்கு முடிவுகட்டுவது தலைவர்தான். பல சமயம் ஏதாவது ஜோக் அடித்து முடித்து வைப்பார். மிக அரிதாக அதட்டல் போட்டு முடித்துவைப்பதும் உண்டு.
வேலை தேடும் சந்துருவிற்கு அவர் உறவினர் ஒருவர் சில புத்திமதிகள் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன விஷயங்களும், விதமும் சந்துருவிற்கு எரிச்சல் ஏற்படுத்தியிருந்தாலும் சொன்னவர் அவரது தமக்கையின் புகுந்தவீட்டுப் பெரியவர் என்பதால் ஏதும் பேசமுடியவில்லை.
அங்கிருந்து அதே எரிச்சலுடன் சங்கத்திற்கு வந்திருந்தார். தனக்குச் சொல்லப்படும் எந்தப் புத்திமதியையும் தான் மதிக்கத் தயாரில்லை என்று சொன்னார்.
சர்ச்சை தொடர்ந்தது. சொல்வது சரிப்படுமா, உபயோகப்படுமா என்றுதான் பார்க்கவேண்டும் என்று மகேந்திரனும் ஏகாம்பரமும் வாதிட்டார்கள்.
வயதோ, அனுபவமோ மற்றவருக்கு உபதேசம் செய்யும் தகுதியை எவருக்கும் அளிப்பதில்லை. புத்திமதி சொல்ல யாருக்கும் அருகதையில்லை என்று ஒரு போடு போட்டார் சந்துரு.
மகேந்திரன் “யார் எது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ள மாட்டீர்களோ?” என்று குறுக்கிட்டார்.
“அப்படியில்லை. உருப்படியான யோசனை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்.”
“சரி, ஒருத்தர் சொல்வது புத்திமதியா இல்லை அறிவுரையா என்று எப்படித் தீர்மானிப்பீர்கள்?” என்றார் ஏகாம்பரம் சந்துருவை மடக்குகின்ற தொனியில்.
அதுவரை பேசாமலிருந்த வரதராஜன் குறுக்கிட்டு, “என்ன ஏகாம்பரம், புரியாம பேசுறீங்களே?” என்றார்.
தொடர்ந்து ஏதோ சொல்லத்தானே போகிறார் என்று அனைவரும் அவரையே பார்த்தோம்.
“ஒரு விஷயத்தை சந்துருகிட்டே சொல்லுங்க. அவர் எடுத்துக்கிட்டா அது யோசனை. இல்லாட்டா புத்திமதி. அவ்வளவுதானே?”
எல்லோரும் சிரித்துவிட்டோம். சூடாகிக்கொண்டிருந்த விவாதம் முடிந்துபோனது.
வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நீங்கள் என்றுதான் கூப்பிட்டுக் கொள்வார்கள். நானும் சீனாவும் தவிர.
சுமார் இரண்டு மூன்று மணிநேரம் வெட்டி அரட்டை என்றாலும் பொது அரட்டையைத்தவிர சில சொந்த விஷயங்களும் வந்து விழும் என்பது இயல்புதானே. அப்படித் தெரிந்துகொண்ட அல்லது ஊகித்த விஷயங்கள்தான் இவை.
வரதராஜன் சங்கத்தில் கிட்டத்தட்ட ‘பாஸ்’ போல இருந்தாலும், எல்லோருக்கும் ஏற்புடையவராக இருந்தாலும், குடும்பத்தில் அப்படியில்லை என்பது என் அனுமானம்.
நான்கைந்து சகோதர சகோதரிகளுடன் பிறந்த வரதராஜனின் தந்தை குடும்பத்தைச் சரியாகக் கவனிக்காத ஒரு சுயநலப் பிறவியாம். பெரிய சம்பாத்தியம் இல்லாவிட்டாலும் அதை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிடுவாராம். தனது சௌகரியத்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாதாம். மனைவி, குழந்தைகளுக்குத் தேவையான சாப்பாடு இருக்கிறதா என்றுகூடப் பார்க்கமாட்டாராம்.
அண்ணன் சமையல்காரனாக யாருடனோ சேர்ந்து ஊரைவிட்டே போய்விட்டான். இரு தமக்கைகளில் ஒருத்தி பள்ளியில் படிக்கும்போதே தற்கொலை செய்துகொண்டாள். ஏன் என்று இதுவரை தெரியாதாம்.
இவர் பள்ளிப்படிப்பு முடிந்ததுமே ஒரு கடையில் கணக்கு எழுதும் ஒரு தூரத்து உறவினரைப் பிடித்துக்கொண்டார். வேலை பார்க்கும் கடையைத்தவிர மற்ற சிலருக்கும் அரசாங்கப் படிவங்கள் நிரப்புவது, லைசன்ஸ் வாங்க உதவி ய்வது என்று அவருக்கு சம்பாத்தியம்.
வரதராஜனின் சாமர்த்தியமான உதவி நல்ல வரும்படியைத் தந்தது. அந்த உறவினர் வயதாகி முடியாமல் போனபோது முழு விவகாரத்தையும் வரதராஜன் பார்த்துக்கொள்ளவும், அந்தப் பெரியவருக்கு மாதம் ஒரு தொகையைக் கொடுக்கவும் ஏற்பாடு ஆகியது.
பெரியவருக்குப் பின் எல்லாம் வரதராஜன்தான்.
தம்பியைப் படிக்க வைத்தார். மீதமிருந்த சகோதரிக்குத் திருமணம் செய்துவைத்தார். பெற்றோர்கள் இருக்கும்வரை திருமணமும் செய்துகொள்ளவில்லை
அம்மாவும், அப்பாவும் ஒருவர்பின் ஒருவராக மறைய, தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார். இரு பெண்களும் ஒரு மகனும். இப்போது எல்லோருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில்.
அண்ணன் எங்கே என்றே தெரியாது. தம்பி மற்றும் சகோதரி குடும்பத்துடன் அவ்வளவு போக்குவரத்தும் கிடையாது. எனவே குடும்பம் என்பதே இவரும் இவர் மனைவியும் குழந்தைகளும்தான்.
பிள்ளையோ, பெண்களோ, பேரக்குழந்தைகளோ இங்கு வருவதில்லை. அவர்களைப் பார்க்க இவரும் போவதில்லை. மனைவியோ பெரும்பாலும் அவர்களோடுதான். இவர் இங்கே சொந்தச் சமையல்தான்.
தினமும் சந்திப்பதால் அவர் வீட்டிற்குச் செல்லவேண்டிய அவசியம் எங்கள் யாருக்கும் ஏற்படுவது மிகக் குறைவு. ஒருமுறை சீனாவின் சித்தப்பா ஒருவருக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட வேலையில் வரதராஜனின் உதவி தேவைப்பட்டது. அன்று மாலை இரயிலில் அவர் ஊருக்குத் திரும்புவதால் வரதராஜனை வீட்டிலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. அறிமுகம் செய்துவைக்க சீனா போனான். அவர்கள் இருவரும் காரியம்பற்றிப் பேசும்போது தனக்குப் போரடிக்கும் என்று என்னைக் கூடவரச் சொன்னான் சூயன்லாய் என்கிற சீனா.
வீட்டின் முன் பகுதியில் ஒரு அறையில்தான் தான் பார்த்துவரும் கணக்கு வழக்குகள் மற்றும் இதர காகிதங்கள் போன்றவற்றை வைத்திருந்தார் வரதராஜன். ஒரு மேஜை, அவருக்கும் வருபவர்களுக்குமாக மூன்று நாற்காலிகள்… ஒரு சிறு அலுவலகம்தான் அது.
யாரிடம் என்ன மனு கொடுக்கவேண்டும், அதில் குறிப்பிடவேண்டிய தகவல்கள் என்ன என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். சீனாவின் சித்தப்பா ஒரு தெளிவு பெற்றவராய் மற்ற ஆவணங்களுடன் வந்து சந்திப்பதாகவும் அந்த மனுவை எழுதி யாரைப் பார்க்கவேண்டுமோ அதற்கு வரதராஜன் துணைபுரியவேண்டும் என்றும் கூறி எழுந்துகொண்டார்.
“சீனா, நான் கடைத்தெருவிலே ஒரு நபரைப் பார்த்துவிட்டு வரேன் என்று அண்ணியிடம் சொல்லிவிடு” என்றார்.
நாங்கள் சற்று நேரம் கழித்துக் கிளம்பினோம். அந்த சிறிது நேரத்திலேயே ஒன்று கவனத்திற்கு வந்தது. எங்கள் சிறு கோஷ்டிக்கு அறிவிக்கப்படாத தலைவர் வரதராஜன். ஆனால் அவர் வீட்டிலோ உறவிற்குள் ஏதோ நெருடல் இருந்துவருவது ஊகிக்க முடிந்தது.
எங்கோ வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த அவர் மனைவி, தான் வர தாமதமாகலாம் என்று எங்கோ பார்த்துக்கொண்டு பொதுப்படையாகச் சொல்லிவிட்டுப் போனது விசித்திரமாக இருந்தது. மாலை நேரங்களில் எங்களுடன் அவ்வளவு ஜோக்கும் சிரிப்புமாக இருக்கும் வரதராஜனும் வீட்டில் சற்று இறுக்கமாகத்தான் இருந்தார்.
ஒரு நாள் சங்கம் முடிந்து கிளம்பிக்கொண்டிருக்கும்போது, வரதராஜன், “நாளை மதியம் இரண்டு மணி சுமாருக்கு வீட்டுக்கு வர முடியுமா?” என்று மற்றவர்கள் காதில் விழாதவாறு என்னிடம் கேட்டார். நானும் தலையை ஆட்டினேன்.
நான் – தனியாகத்தான் சென்றேன்.. சூயன்லாய் கூட வரவில்லை. முன்னறையில்தான் அவர் இருந்தார். ஒரு அலமாரியிலிருந்து பாட்டில், சோடா, மற்றும் க்ளாஸ் எடுத்து மேசைமீது வைத்துக்கொண்டார்.
தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்துவதும் அமல்படுத்துவதுமாக இருந்த காலகட்டம் அது.. (ஒரு பிரபல மாலை தினசரி போஸ்டரில் “மதுவிலக்கு விலக்கு ஒத்திவைப்பு ரத்தாகுமா?” என்று போட்டிருந்தார்கள்.)
“என்ன! தண்ணி அடிக்கும்போதுத் துணைக்குக் கூப்பிட்டிருக்கேனே என்று யோசிக்கிறீங்களா? எனக்குத் தெரியும், உங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லைன்னு. வீட்டிலே யாரும் இல்லாதபோது எப்பவாவது தாகசாந்தி உண்டு. ஓரிருமுறை யாரவது நண்பர் கம்பெனி கொடுப்பாங்க. நீங்க கம்பெனி கொடுக்கமாட்டீங்கன்னும் தெரியும். தனியா உட்கார்ந்து சாப்பிடறது சரியாவராது. அதுதான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்க ‘ரா’வா எவ்வளவு சோடா வேணும்னாலும் குடிக்கலாம்.” என்றார்.
வழக்கம்போல நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரே தொடர்ந்தார். “எனக்குத் தெரிஞ்சு நீங்க ஒருத்தர்தான் ‘ஒன்வே டிராபிக்’ ஆளு. விஷயம் உள்ளே போகுமேதவிர வெளியே வாராது.”
கொஞ்சம் கொஞ்சமாக சொந்த சமாசாரம் வெளியே வந்தது. அரசாங்கத்திலே ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் நெளிவு சுளிவு தெரிந்து காரியம் சாதித்துக் கொடுக்கும் சாமர்த்தியசாலி என்று அறியப்பட்ட அவர் பேச்சிற்கு வீட்டில் எந்த மதிப்பும் இல்லையாம். இவர் தனது சகோதர சகோதரிகளுக்கும், மனைவி மக்களுக்கும் எந்தக் குறையும் வைக்காவிட்டாலும் ஏன் இப்படி என்று அவருக்கே புரியவில்லை. ஒட்டுதல் என்பதே இல்லை என்றாகிவிட்ட நிலையில் மாலையில் சங்கத்தில் பொழுதுபோவது மனதிற்கு இதமளிக்கிறதாம்.
அவர் தூங்கப் போனார். நான் வீட்டிற்குக் கிளம்பினேன். தெருவில் யார் வீட்டிலிருந்தோ ‘தெய்வம் தந்த வீடு’ பாட்டு கேட்டது.
அப்படி ஒன்றும் மொடாக் குடியரும் இல்லை அவர். எதிலிருந்தோ தப்பிக்கும் முயற்சியாகவே அவருக்கு ஆல்கஹால் போலும். பின்னாளில் சங்கத்தில் அவர் வழக்கம்போலவே இருந்தார். அன்று எனக்கு சொன்ன ஒரே ‘தேங்க்ஸ்’ தவிர எந்த வேறுபாடும் இல்லை.
சங்கம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது
(அடுத்தது யார்…?)
திரைப் படங்கள் 2017
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
காந்தப் படுக்கைக்குக் கீழே ஒளிந்துகொண்டிருந்த ராகு, சூரியதேவனை விழுங்குவதற்குச் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். சூரியன், சந்திரன் இருவரும் அவனது அழகை அழித்துச் சாயா நிழலாக அலையவிட்டார்கள் என்பதால் அவர்கள் இருவர்மீதும் அசாத்தியக் கோபம் இருந்தது.
உண்மையில் ராகுதேவன் சூரியனைவிட அழகானவனாக இருந்தான். பொன்னிறத்தில் இருந்ததால் பானு என்ற அவனை ஸ்வர்ண பானு என்றே அழைத்தார்கள். ஸ்வர்ணபானுவுக்குத் தன் அழகில் மகா கர்வம். பிறப்பால் அசுரனாக இருந்தாலும் தேவலோக ஆடல் அரசிகள் அனைவரும் அவனைச் சுற்றியே வந்தார்கள்.
ஸ்வர்ணபானுவின் ஆசைக்கோ அளவில்லை. சந்திரனின் இருபத்தேழு மனைவியர்மீதும் மையல் கொண்டான். சந்திரனின் ஒளி இல்லாத அம்மாவாசையன்று அவனுடைய மனைவியர் அனைவரையும் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டான். களை இழந்த சந்திரன் சூரியனிடம் வேண்டிக்கொள்ள சூரியதேவன் கோபம்கொண்டு ஸ்வர்ணபானுவுடன் போருக்குப் போனான்.
ஸ்வர்ணபானு அசுரன் ஆனதால் மாயையால் முகத்தை மறைத்து நிழல் வடிவத்தில் வந்து சூரியனைத் தாக்கினான். சூரியனால் அவன் நிழல் வடிவத்தை உடைக்க முடியவில்லை. சூரியதேவனின் அக்னிக் கணைகள் ஸ்வர்ணபானுவின் பொன் உடலில் பட்டுப் பிரதிபலித்ததேதவிர அவனை அழிக்க முடியவில்லை. கோபவேகத்தில் சூரியதேவன் மிக உக்கிரமாகப் போரிடத் தொடங்கினான். மகாவிஷ்ணு அளித்த நாராயண அஸ்திரத்தைக் கொண்டு ஸ்வர்ணபானுவின் உடலை இறுக்கக் கட்டினான். தன் சக்தியையெல்லாம் வெப்ப சக்தியாகமாற்றி அக்னிப் பிழம்பை ஸ்வர்ணபானுவின்மீது பொழிந்தான்.
அந்த அக்னிக் குழம்பின் ஜ்வாலை அவன் உடலை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனென்றால் நாராயண அஸ்திரம் அவன் உடலைச் சுற்றியிருந்ததால் அது கவசம்போல் அவனைப் பாதுகாத்தது. ஆனால் நிழற்சாயை பூசியிருந்த முகத்தில் அது தன் தீவிரத்தைக் காட்டியது. அழகான முகத்தைக்கொண்ட ஸ்வர்ணபானுவின் முகம் தீப்பற்றி எரிந்த கரிய முகமாக மாறிவிட்டது.
அழகிழந்த ஸ்வர்ணபானு சந்திரனின் மனைவிகளை விட்டுவிட்டுத் தப்பித்தால் போதுமென்று பாற்கடலில் ஆதிசேஷனின் பின்னால் மறைந்துகொண்டான். சூரியதேவனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எரிந்து சாம்பலாகிவிட்டான் என்று எண்ணிக்கொண்டு சூரியனும் தன் உலகிற்குத் திரும்பினான்.
அப்போதுதான் பாற்கடலிலிருந்து அமுதம் எடுப்பதற்காகத் தேவர்களும் அசுரர்களும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். வாசுகி என்ற பாம்பு கயிறாயிற்று. மேரு மலை மத்தாக மாறியது. மகாவிஷ்ணு ஆமை உருவில் மத்தைத் தாங்கும் ஆதாரமாக மாறினார். அசுரர் தேவர் இருவரும் கடையப் பாற்கடலிலிருந்து பல திவ்யப் பொருட்கள் தோன்றின. முதலில் வந்த மகாலக்ஷ்மியைத் திருமால் தன்னுடையவளாக்கிக் கொண்டார். அடுத்து வந்த ஐராவதம், காமதேனு, அட்சயப் பாத்திரம் ஆகியவற்றை இந்திரன் எடுத்துக்கொண்டான்.
அமுதம் திரண்டு வந்தது. ஆனால் அதற்குமேல் பொறுக்க இயலாத வாசுகி தன் விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் அமுதத்தில் கலப்பதற்குமுன் பரமசிவன் அதை எடுத்து விழுங்கினார். அதனால் தன் கணவன் நீல வண்ணமாக மாறிவிடுவாரோ என்ற பயத்தில் அருகிலிருந்த பார்வதி அவர் கழுத்தில் அதை நிறுத்த, பரமசிவன் நீலகண்டராகமட்டும் மாறினார்.
அதன்பின் அமுதம் பொங்கிவந்தது. அதற்காக அசுரர்களும் தேவர்களும் போரிட்டுக் கொள்ளும் நிலைமைக்கு வந்தனர். அதைத் தடுக்க மகாவிஷ்ணு மோகினி வடிவம்கொண்டு வந்து அமுதக் கலசத்தை எடுத்துத் தேவர்களுக்கே அனைத்தையும் வழங்கினார்.
ஆதிசேஷன் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த ஸ்வர்ணபானு தன் தலையைப் பொன்னாடையால் மறைத்து தேவவுருவெடுத்துத் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமிர்தத்தை அருந்தினான்.
ஆனால் சூரியனின் கூரிய விழிகள் ஸ்வர்ணபானுவைக் கண்டுபிடித்துவிட்டன. சந்திரனைக்கொண்டு அவன் முக்காட்டை நீக்கச்செய்தான். மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவை தலைவேறு உடல்வேறாகத் துண்டாக்கினார் .
அமிர்தம் உண்ட காரணத்தால் அவன் உயிர் நீங்கவில்லை. அவன் திருமாலின் பாதங்களில் பணிந்து வேண்டிநிற்க , அவரும் வடக்கில் தலையை வைத்துப் படுத்திருந்த பாம்பைத் துண்டித்து பாம்பின் உடலை ஸ்வர்ணபானுவின் தலையுடன்கூட வைத்தும் பாம்பின் தலையை அவன் உடலுடன்கூட வைத்தும் அவனை இரண்டாக்கினார்.
அவர்கள் இருவரும் ராகு , கேது என்ற பெயருடன் கடும் தவம் செய்ய, மகாவிஷ்ணு அவர்கள் தவத்திற்கு இரங்கி அவர்கள் இருவரையும் கடக மகர ஆழியின் வேதங்களைக் கற்றுவருமாறு பணித்தார். அவற்றை முழுதும் கற்று ஓதியபின் நவக்கிரகப் பதவி தருவதாகக் கூறினார்.
ஸ்வர்ண பானு இப்பொழுது ராகு, கேது என சாகாவரம் பெற்ற இருவராக மாறிவிட்டான்.
இந்த இருவித உடல் அமைப்பே நவகிரகங்களின் குணத்தைக் காட்டும். ராகு அசுர முகம், பாம்பு உடல். அதனால் ராகு போக காரக கிரகமாகமாறி வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று பதவிக்கு வருகிறான். கேதுவோ பாம்பின் தலை அசுர உடல் . அதனால் பொருட்பற்றையும், உடல் பற்றையும் அழிக்கும் சக்தி பெறுகிறான். அதன் மூலம் மோட்சக்காரன் என்று அழைக்கப்படுகிறான்.
இவ்வளவு நற்கதிகள் அடைந்தாலும் சூரிய சந்திரர்கள்மீது அவர்கள் இருவரும் கொண்ட பகைமட்டும் மனதிலிருந்து போகவில்லை.
அவர்கள் சூரிய சந்திரர்களைப் பழி வாங்கும்பொருட்டு மீண்டும் தவம் இருந்தனர். முடிவில் ஈஸ்வரனிடம் இருவரும், சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதற்கான வரத்தைப் பெற்றனர்.
இதையறிந்த சூரிய சந்திரர்கள் ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்து, உபாயம் அருளுமாறு வேண்டினர். அவரும் அசுரர்கள் விழுங்கினாலும் 3 3/4 நாழிகையில் வெளிவந்துவிடலாம் என்று அருளினார். ஆகவே அதுமுதல், ஸ்வர்ணபானு சந்தர்ப்பம் கிடைத்தபோது சூரிய சந்திரர்களை விழுங்கி விளையாடுவது வழக்கமாகிவிட்டது.
இன்றைக்கு ஸந்த்யாவின் அறையில் சந்திர காந்தச் சிகித்சைக்குக் காத்திருக்கும் சூரியதேவனை விழுங்க ஆவலுடன் காத்திருக்கிறான் ராகு .
(தொடரும்)
விஞ்ஞானம்:
சந்திரனின் சுற்றுவட்டப் பாதை சூரியனின் சுற்றுவட்டப் பாதையை வெட்டும் புள்ளியே ராகு கேது எனப்படும். இவைகளுக்கு உருவம் இல்லை. சந்திரன், பூமியின் சூழற்சியின் வேகத்தால் ஏற்படும் இணையற்ற காந்தப்புயலே ராகு கேது ஆகும். இந்த காந்தப் புயலின் சூழற்சியால் பூமியில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது. சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்குப் புலனாகாத (கற்பனை – மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனைப் புள்ளிகள்.
இரண்டாம் பகுதி
எமபுரிப்பட்டணத்துக்கு முதன்முறையாக வந்திருக்கும் அந்த நால்வரும் தங்கள் அறையில் அமர்ந்து எப்படி இந்த மாபெரும் பிராஜெக்டை சமாளிப்பது என்று தங்களுக்குள் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
பிராஜெக்ட் மேனேஜர் அரசு நல்ல பழுத்த அனுபவசாலி. சுந்தாவும் , மாணிக்கும் தகவல் துறையில் ஜீனியஸ். ஞானி சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டர் மேதை. இவர்கள் நால்வரும் வெவ்வேறு கம்பெனிகளில் இருந்தவர்கள். சிவா கன்சல்டிங் சர்வீஸஸ் (எஸ்சிஎஸ்) என்ற புதிய நிறுவனத்தை இவர்கள் நால்வரும் சேர்ந்து ஆரம்பித்தார்கள்.
எஸ்சிஎஸ் வந்தபிறகு மற்ற நிறுவனங்கள் எல்லாம் இவர்களுடன் போட்டி போடமுடியாமல் திணறினார்கள். அரசு, தான் முதலில் இருந்த ஜெய்ன் இன்போ நிறுவனத்திலிருந்து திறமைசாலிகள் அனைவரையும் எஸ்சிஎஸ்க்கு மாற்றி அந்த நிறுவனத்தை செயலற்றதாக மாற்றிவிட்டார். அது மட்டுமல்ல, பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த கௌதம் டெக்னாலஜியையும் முற்றிலும் அழித்து விட்டார்கள்.
அதே சமயத்தில் ராம் டெக் என்ற தகவல் துறை நிறுவனமும் மிகவும் பிரபலமாக இருந்தது. அதன் பன்னிரண்டு பாகஸ்தர்களும் திறமையாக நடத்திவந்தார்கள். இவர்களுடன் எஸ்சிஎஸ் இம் சேர்ந்துதான் மற்ற நிறுவனங்களை அழிக்க முடிந்தது. இவர்கள் இருவருக்கும் இடையேகூட யார் நம்பர் ஒன் என்ற போட்டி அடிக்கடி வரும். இருந்தாலும் இவர்கள் இருவரும் ஒரு கூட்டணி அமைத்துப் பல பிராஜெக்ட்களை முடித்ததால் ஒருவரை ஒருவர் அழிக்காமல் இணைந்து செயல்படுவதே லாபம் என்பதை உணர்ந்தார்கள்.
சித்திரகுப்தன் தன் பிராஜெக்ட்டுக்கு எஸ்சிஎஸ் – ராம் டெக் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று பலத்த ஆலோசனை செய்தான். சிவபெருமான் எஸ்சிஎஸ் க்கு ஆதரவாக இருப்பது புரிந்தது. மகாவிஷ்ணு ராம் டெக்கின் பக்கம் ஆதரவுக் கரம் நீட்டுவதும் புரிந்தது. எமனிடம் சென்று விவாதித்தான்.
எமன் சிவபெருமானை எதிர்த்து எதுவும் செய்யத்தயாராயில்லை. அதுவும் மார்க்கண்டேயன் விவகாரத்தில் தலையிட்டு அவரிடம் அடிபட்டபிறகு எமனுக்கு வேறுவழியே கிடையாது. இருப்பினும் தர்மராஜாவான அவன் பிரும்மாவிடம் சென்று ஆலோசனை நிகழ்த்தினான். முதலில் அவருக்கும் இந்த இரண்டு நிறுவனங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தது. மெத்தப்படித்த மனைவி சரஸ்வதியுடன் கலந்து ஆலோசித்தார். முடிவில் எஸ்சிஎஸ் க்குக் கொடுப்பது தான் சிறந்தது என்றும் ஆனால் அவர்கள் ராம் டெக்குடன் இணைந்தே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் என்றும் தீர்மானித்தார். இவர்கள் எமபுரிப்பட்டணத்தின் மற்ற துறைகளுடம் இணைந்து செயல்பட வசதியாக ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனத்தையும் அமைத்தார்.
அதுதான் நாரதா கம்யூனிகேஷன்ஸ். அவர்கள்தான் இந்தப் பிராஜெக்டுக்கு நாமகரணம் சூட்டினார்கள்.
பெயர் “எமபுரிப்பட்டணம்”
(தொடரும்)
உலக அழகி
இன்றைய உலக அழகி இந்தியாவின் மனுஷி ஷில்லார்
அன்றைய உலக அழகி ஐஸ்வர்யா ராய்
இலக்கியவாசல்
ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு , ஆழ்வார்ப்பேட்டை
சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில்
இலக்கிய சிந்தனையின் 572 வது நிகழ்வு
திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் உ வே சுவாமிநாத ஐயா அவர்களைப்பற்றிப் பேசுகிறார்கள் !
அதே நாள், அதே இடத்தில்
7.00 மணி அளவில்
இலக்கிய வாசலின் 34 வது நிகழ்வு
” புத்தகக் கண்காட்சியில் கற்றதும் பெற்றதும் “
அனைவரும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்
=================================================
குவிகம் BookXchange
நிகழ்ச்சிக்கு வரும் அன்பர்கள் மறக்காமல் தாங்கள் படித்த புத்தகம் ஒன்றைக் கொண்டுவாருங்கள்.
அதைக் கொடுத்துவிட்டு ,
அங்கு இருக்கும் புத்தகங்களில் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள் !
DROP ONE – TAKE ONE
இதுதான் நமது புத்தகப் பரிமாற்றம் !!!
=================================
கலீஜு’ன்ற பூனை – சென்னைச் செந்தமிழாக்கம் மட்டும் – சுரேஷ் சீனு
தோ தெரீது பார்..அந்த அபார்ட்டுமெண்டு பில்டிங்கி.. அது உள்றதான் ‘கலீஜு’ன்ற பூனை ஒண்ணு குடியிருந்துச்சு..
பேருக்கு ஏத்தாமேறியே பாக்கறதுக்கு அது ’கலீஜா, கண்றாவியா இர்க்கும். கலீஜுக்கு 3 விசியம் மெயினா புடிக்கும்.. அன்பு காட்றது, வம்பு வலிக்கறது, அப்பால எந்த கஸ்மாலத்தை வோண்ணா துன்றது. இந்த மூணையுமே காம்பினேசனா வச்சி லோல்பட்டு வாய்ந்த அத்தோட வாய்க்கையே அத்த “கலாஸ்” ஆக்கிட்ச்சி!
கலீஜப் பத்தின டீட்டயிலுல பர்ஸ்ட்டு – கலீஜுக்கு ஒரே ஒரு கண்ணுதான். மத்தது நொள்ளை! கண்ணுகுற எட்த்துல வெறும் தொண்டிதான் இருந்துச்சு! அந்த நொள்ளைக் கண்ணு சைட்லருந்த காதும் காலி. கலீஜோட பீச்சாங்காலு எப்பயோ ஒட்ஞ்சுபூட.. அது குணமாவசொலொ கால் எலும்பு எப்டியெப்டியோ வளைஞ்சிகினு ஒரு குன்ஸா செட்டாயிட்ச்சி போல. அத்தொட்டு நம்ம கலீஜு இஷ்டெய்ட்டா நின்னுருக்கப்பகூட அது ஒருமேறி திரும்பி நிக்குறாப்லயே தெரியும்..
அதும் வாலு இருந்த மொனைல ரவையூண்டு எலும்பு சதை மட்டும் தொங்கினுருக்கும்! அது, நம்ம ’கலீஜீ’ குஜாலாவசொலொவும், மெர்ஸலாவ சொலொவும், அதும்இஸ்டத்துக்கு ஒவ்வொரு சைடுகா தொகிறினே கெடக்கும்! கலீஜோட தலை, கயுத்து தோளாப் பட்டைல்லாம் லைட்டு கலரு. மத்தபடி ஒடம்புல்லாம் சாம்பல் நெறத்துல கோராமையா இருக்கும்!
அத்த யாரு எப்ப பார்த்தாலும் “ உவ்வே! கலீஜாகுதே இந்த கண்றாவிப் பூனை!” அன்டுதான் வெறுப்பா சொல்லுவானுங்கோ. அபார்ட்டுமெண்டுல இருந்த சின்னப்பசங்க கலீஜை தொடக்கூடாதுன்னு கண்டீஸன்கூடர்ந்துச்சு! வெடலை பசங்க கல்ல உட்டு எறிவானுங்கோ! லப்பரு பைப்புல தண்ணிய கலீஜும்மேல பீச்சி வெள்ளாடுவானுங்கோ! இல்ல வேற எதுனா நோண்டிகினே இருப்பானுங்கோ.. தப்பித் தவறி யாரு ஊட்டுக்குள்ளன்னாச்சும் அது பூரப் பாத்துச்சின்னா.. அதும் மூஞ்சுலயே கதவை அடிச்சு சாத்துவானுங்கோ.. அத்தினிநல்லவுங்கோ!
ஆனா இதுக்கெல்லாம் கலீஜி காட்றது ஒரே மேறியான ரியாக்ஸனு தான்!
தண்ணீய பீச்சி அட்ச்சேன்னு வையேன்.. நீ டயர்டாவுற வரீக்கும் அசையாத காட்டிகினு தொப்பலா நனைஞ்சினு கெடக்கும். நீ எதுனா பொருளெட்த்து அதும்மேல கடாசினின்னாலும் கூட, கலீஜு உன் காலாண்ட ஒர்ஸிகினே ’ஸாரிபா’ அன்ற மேறி பாவமா பாக்கும்! எப்பன்னாச்சும் அந்தப் பசங்க வெள்ளாட்றதப் பாத்தா, சந்தோஸத்துல மியாவ்னு கத்திகினே ஓடி வந்து அவங்க மேல மோதி வெள்ளாடும்..அவுங்க கிட்ட அன்பை எஸ்பெக்ட் பண்ணி சுத்தி சுத்தி வரும். அத்த தொட்டு கைல எட்திட்டே.. அவ்ளவ் தான்.. உன் சட்டையை புடிச்சு இயுக்கும், உன் காதுல மூஞ்சுல.. எது கெடைக்குதோ அதை பாசமா நக்கினேருக்கும்!
இது இப்டியிருக்கசொலொ, ஒரு நாளு கலீஜு குஜாலாகி அதும் பீலிங்க பக்கத்து காம்பவுண்ட்லகுற பணக்காரா வூட்டு நாய்ங்களாண்ட காட்டப் போக, அத்தப் புரிஞ்சிக்காத அதுங்க கலீஜு மேல கும்பலா உயுந்து கண்டபடி கடிச்சு கண்ட்மாக்கிடிச்சுங்கொ!
அந்த சத்தத்தை கேட்டு நானு ஓட்னேன். ஆனா நான் போவுறதுள்ள மேட்டரு அல்மோஸ்ட்டு முட்ஞ்சு போச்சு. கலீஜீ பர்தாபமா தரைல கெடந்துச்சு, ப்ச்! அதும் டைம் ஒவராவ போவுதுன்னு என் மன்ஸுக்குப் பட்டுச்சு
ஈரத்துல கெடந்த கலீஜுக்கு பின்னாலகுற காலுங்க ரெண்டு மட்டுல்லாத அதும் இடுப்புங்கூட ஒடிஞ்சு போயி முறுக்கிகினும், அதும் ஒடம்புலியே வெள்ளயா குற வவுறு நடுவுல நாய்ங்க கொதறி வச்சதால ரத்தம் வந்துனுருந்துச்சு.
செரி.. கலீஜை வூட்டுக்குள்ற எத்துனுபோலான்ற நெனப்போட மொள்ளொ அத்தக் கைல தூக்குனேன். அது அத்தோட வேதனைய தாஸ்தியாக்கிருச்சு போல.. ஒரே இஸுப்பா இஸ்துகுனு மூச்சு வுட கஸ்ட்டப்பட்டுப் பொழைக்கற்துக்காவ போராடுச்சு பாவம்! இத்தக் கைல எடுத்து அதுக்கும் இன்னும் ட்ரபிள் குட்த்துட்டதா எனுக்கு ஒரு பீலிங்கி..
அப்பதான் நான் எதிர்பார்க்காத ஒண்ணு நடந்துச்சு..
அந்தக் கஸ்ட்டமான டயத்துலயும், நோவோட வேதனை வாட்றப்பவும் கலீஜீ என் காதை நக்கினுருந்துச்சு.. எனுக்கு என் ஒடம்பு முடில்லாம் எந்திரிச்சு நின்னுட்ச்சி.. இன்னாமேறியான ஜீவன் இது? நீ துப்புனாலும் ஒதுக்குனாலும் தூக்குனாலும் கொஞ்சுனாலும் ரிடர்னா அன்பை மட்டும் தர்றா மேறியான எப்டியாப்பட்ட டிஜைன் இது? என் கண்ணுல தானா தண்ணி கொட்னுருந்துச்சு..
அத்த என் மூஞ்சாண்ட க்ளோஸா வச்சுகுனேன். என் கைல அதும் தலையால மோதி வெள்ளாட பாத்துச்சு. அப்டியே திரும்பி அத்தோட ஒரே கண்ணால என்ன ஒரு பார்வை பாத்துச்சு பாரு.. என் மன்ஸ அப்டியே பெசஞ்சிருச்சி ..
அந்த செக்கண்டு.. எனக்கு கலீஜு தான் ஒலகத்துலயே அயகான, அன்பான ஒரு உசுரா தெரிஞ்சுது. கலீஜோட பார்வை என்னாண்ட அது வெறும் பாசத்தையும், கரிசனத்தையும் மட்டுந்தான் தேடுச்சுன்னு எனுக்கு பட்டுச்சு. மொள்ள அதும் இஸுப்பு வேற மேறி மாறுச்சு. நோவு தாஸ்தியாயிடுச்சாங்காட்டி.. அப்பங் கூட என்னை அது கடிக்கவோ ப்ராண்டவோ டிரை பண்ணல..என்னைய உட்டு போவனும்னு கூட பாக்கல.. நக்க தான் ட்ரை பண்ணுச்சு. நான் இன்னாமோ அதுங்கஸ்ட்டத்த கம்ப்ளீட்டா தீத்துருவேன்னு நம்புறாப்ல என்னப் பாத்துனேருந்துச்சு.
பாத்துனுருகசொலொவே ..கலிஜு.. செத்துப் பூட்ச்சு!!. வூட்டுள்ற எத்தும்போறதுக்குள்ள என்.. கைலியே செத்துப்பூட்ச்சு.. இன்னா பண்றதுண்டு தெர்ல.. அத்த கைல வச்சுகுனே அப்டியே குந்திகுனேன்.. ரொம்ப நேரம் அப்டியேருந்தேன்.
ஒடம்பு பின்னமா, அசிங்கம்.. கலீஜுன்னு நாம நெனச்சினுருந்த ஒரு சின்ன உசுரு எனுக்கு லைஃப்னா இன்னா.. அத்தோட வேல்யூ இன்னா.. பாசத்தோட பவரு இன்னான்னு புரிய வச்சிட்சி.
நூத்துக்கணக்குல புஸ்தவம் படிச்சு, பெர்ய மன்ஸாள் பேசுற பேச்சுங்க, நாலு மன்ஸாளோட பயகி வர்ற எஸ்பீரியன்ஸு, அறிவு இதெல்லாத்தையும் வுட மத்த உசுருங்க கிட்ட அன்பு காட்றதும், கரிசனமா இருக்கற்தும் எத்தினி ஒஸ்தி அண்டு கலீஜு எனுக்கு கத்துக் குட்த்துட்டுப் பூட்ச்சு.
அது ஒடம்பு கலீஜா இருந்துச்சு.. ஆனா கொஞ்ச நேரம் முந்தி வரை என் மன்ஸு அத்தவுட கலீஜா இருந்துச்சு. எனுக்கு வாஜ்ஜாரா மாறுன கலீஜுக்கு வணுக்கம்.. இன்னும் அன்பைப் பத்தி பாசத்தப் பத்தி முயுசா கத்துக்கணும் நான். அதுக்கு டயம் வந்துர்ச்சு
பொதுவா அல்லாருமே பணக்காரவுங்களா, ஃபேமஸானவுங்களா, அழகானவங்களா, அல்லாருக்கும் புட்ச்சவங்களா வாழதான் ட்ரை பண்ணுவாங்கோ. ஆனா இனிதொட்டு நான் கலீஜு மாறி ஆவனும்னிட்டு தான் ட்ரை பண்ணுவேன்.
இந்தக்கதையை யார் எய்தினது, மெய்யாலும் நடந்துச்சா இல்லியா.. தெர்யாது. ஆனா வாய்க்கைக்கு தேவையான மேட்டரை என்னுள்ற செதுக்கி வச்சுட்ச்சி..
உருவம் கோராமையா இருந்தாலும் உள்ளத்தப் பாரு. அன்பைக் காட்டு! நல்லாருப்பே! அன்றதுதான் அந்த லெஸனு.
#அன்பே சிவம்!