Daily Archives: January 17, 2020
பசுமைப் பட்டாசு என்றால் என்ன?
இதற்கும் இப்போது வந்துள்ள தனுஷின் புதிய படத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை
அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள் சல்ஃபர், பொட்டாசியம் மற்றும் பேரியம் ஆகிய வேதி மருந்துகளை பட்டாசில் வைத்தால் காற்று மாசுபடுவதைத் தவிர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காற்று மாசுவை குறைக்கத் தான் பசுமை பட்டாசுகளைப் (GREEN CRACKERS) பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, பசுமைப் பட்டாசுகள் குறித்த தேடல் அதிகரித்துள்ளது.
பொதுவாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், அலுமினியத்தை மூலப்பொருட்களாக வைத்து சல்பர், கார்பன், பொட்டாசியம் நைட் ரேட் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், தற்போது கூறப்படும் பசுமை பட்டாசில் அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் மூலப்பொருளாக சேர்க்கப்பட்டு உள்ளது. சல்பர் மற்றும் கார்பன் தேவையில்லை. இதனால் பட்டாசின் ஒலி அளவு 120-ல் இருந்து 111 டெசிபலாக குறையும். மேலும் காற்று மாசு 70 சதவீதமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சராசரிப் பட்டாசுகளின் விலையை விட பசுமைப் பட்டாசுகளின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு பெரும்பாலும் மாசு ஏற்படுத்தாத வகையில், நீதிமன்ற உத்தரவுப்படி நிகழாண்டு பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடுகையில் பசுமைப் பட்டாசுகளால் 30 சதவீதம் காற்று மாசு குறையும்.
பசுமை பாட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும். வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும். சாதாரணமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40 முதல் 50 சதவீதம் வரை குறைவான நச்சு வாயுவை வெளியிடும். குறிப்பாக பேரியம் நைட்ரúட் மூலப்பொருள் பயன்பாடு 40 சதவீதம் வரை குறையும். உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், பசுமை பட்டாசுகளை தயாரித்து தீபாவளியையொட்டி விற்பனைக்கு அனுப்பி வருகின்றன.
வித்தியாசமான தகவல் -புத்தங்களால் ஆன சரஸ்வதி கோவில்
விஜயதசமி விழாவை முன்னிட்டு, கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் சரஸ்வதிக்கு 1300 புத்தங்களை கொண்டு அமைத்திருக்கும் கோயில், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

புத்தககங்களால் ஆன சரஸ்வதி கோயில்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர், தங்க.கார்த்திக். இவர் கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கலைமீது தீராத காதல்கொண்டவரான தங்க.கார்த்திக், ஒவ்வொரு தமிழர் விழாக்களையும் வித்தியாசமான கலை மூலம் கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில், இவர் தான் பணிபுரியும் பள்ளியில், விஜயதசமி விழாவை மாணவர்கள் சிறப்பாக கொண்டாடும்வகையில், பள்ளியில் உள்ள நூலகத்தில் உள்ள 1300 புத்தகங்ளைக் கொண்டு கோயில் அமைத்திருப்பது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.

இதுகுறித்து ஆசிரியர் தங்க.கார்த்திக்கிடம் பேசினோம். “கலை தொடர்பான விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். அதோடு, கடந்த நாலு வருஷமா பள்ளியில் ஓவிய ஆசிரியரா வேலைபார்த்துட்டு வருகிறேன். மாணவர்களுக்கு கிரியேட்டிவாக இருக்கவேண்டும் என்பதற்காக புதுமையாக சில விசயங்களை செய்துகாட்டுவேன். அதேபோல், ஒவ்வொரு விழாவையும் அந்தந்த விழா சம்பந்தமான பொருள்களை கொண்டு நான் அமைக்கும் கலைவிசயங்களோடு கொண்டாடுவேன்
மாணவர்களையும் அதை செய்ய சொல்லி வலியுறுத்துவேன். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவை கொண்டாட, ராதாகிருஷ்ணன் உருவத்தை சாக்பீஸில் உருவாக்குவேன். அவர் ஆசிரியராக இருந்தவர் என்பதால், அதுசார்ந்த சாக்பீஸில் அவரது உருவத்தை அமைப்பேன். அதேபோல், பொங்கல் திருநாளை கொண்டாட, கரும்பு, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருள்களை வைத்து, பானை செய்வேன். அந்த வகையில்தான், சரஸ்வதிக்கு உகந்த பள்ளிகூடங்களில் கொண்டாடவேண்டிய விஜயதசமி விழாவை மாணவர்கள் வித்தியாசமாக கொண்டாட வேண்டும்னு நினைச்சேன். அதுக்காக யோசிப்பதான், புத்தகங்களைக் கொண்டு, சரஸ்வதிக்கு கோயில் அமைக்கலாம்னு நினைச்சேன்.

அதுக்காக, பள்ளி நூலகத்தில் இருந்த 1,300 புத்தகங்களைப் பயன்படுத்தி, சரஸ்வதிக்கு கோயில் அமைத்தேன். நான்கு தூண்கள், அதன்மேலே 3 நிலைகள், அதுக்கு மேலே கலசம் என்று அனைத்தையும் புத்தகங்களைக் கொண்டே அமைத்தேன். இந்த கோயிலை வெறும் புத்தகங்களை அடுக்கியே அமைத்தேன். பசை எதுவும் பயன்படுத்தி ஒட்டியெல்லாம் அமைக்கவில்லை. இது பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியலாம். ஆனால், இதை ஒவ்வொரு புத்தகத்தின் எடை, கோணம், கிராவிட்டி என அனைத்தையும் மெஷர் பண்ணி, மிக துல்லியமாக அமைக்கணும்.
இல்லைன்னா, பத்து புத்தகங்களை அடுக்கும்போதே, கீழே சரிஞ்சு விழுந்துரும். இதை அமைத்து முடிக்க எனக்கு ஒருநாள் ஆனது. இதை பார்த்துட்டு பள்ளிகூடத்துல சக ஆசிரியர்களும், மாணவர்களும் என்னைப் பாராட்டினாங்க. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அன்னைக்கும் விரும்பி பள்ளிக்கு வரும் மாணவர்களை கொண்டு, இந்த சரஸ்வதி கோயிலில் பூஜை செய்ய இருக்கிறோம். அதன்பிறகு, புதன்கிழை பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களை வைத்தும், இந்த புத்தகங்களால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி கோயிலில் பூஜைகள் பண்ணலாம்னு இருக்கோம்” என்றார், மகிழ்ச்சியாக.
நன்றி: விகடன்
பேப்பர்மேன் குறும்படம்
கார்ட்டூனில் கலக்கிய குறும்படம். பார்த்து மகிழுங்கள்!
புதுமலரே வாராயோ..! — கோவை சங்கர்
பொங்க லென்னும் புதுமலரே
பொங்கி யின்பம் தாராயோ
பங்கமில் விளைவே தந்த
பெருமை பொங்க வாராயோ!
மனிதரும் மகிழ்ந்து வாழ
ஒத்துநல் லில்லங் களிக்க
மன்பதை செழித்து வளர
வாழ்த்து உரைக்க வாராயோ!
எண்ணிய எண்ணியாங் கெய்துவீர்
தண்ணிய நோக்கும் கொள்வீர்
வாழ்விலே ஏற்றம் காண்பீர்
இசையோடு பல்லாண்டு வாழ்வீர்!
பாட்டினைப் போல் ஆச்சரியம்! – தில்லைவேந்தன்
பஞ்சுமுகில் மஞ்சமெனக் கொஞ்சமதில்
படுத்துலகைச் சுற்றச் செய்யும்
இஞ்சியுயர் கோட்டைகளை இங்கிருந்தே
எளிதில்கைப் பற்றச் செய்யும்
கஞ்சமலர்த் தேன்சுவைத்துக் காவியத்தின்
கள்ளருந்தி மயங்கச் செய்யும்
எஞ்சியுள இன்பங்கள் அத்தனையும்
இத்தரையில் முயங்கச் செய்யும்
( இஞ்சி — மதில் சுவர் )
ஊக்கமெனும் ஒருபுயலை உளக்கடலில்
உருவாக்கி வீசச் செய்யும்
தீக்கதிரும், தீம்புனலும் தெறித்திடவே
தெளிவாகப் பேசச் செய்யும்
தூக்கியெறி துன்பங்கள், நோக்கிவரும்
தொல்லையவை கடக்கச் செய்யும்
ஏக்கமெனும் உணர்வினையும் இனிமைபட
இயம்பியதைச் சுவைக்கச் செய்யும்
இனித்திருக்கும் நினைவுகளும் கனவுகளும்
இயைந்தொன்றாய் நிகழச் செய்யும்
கனித்தமிழின் சாறருந்திக் காலமெலாம்
களிப்புடனே திகழச் செய்யும்
அனைத்துலக மக்களெலாம் உறவென்ற
அன்புறவால் நெகிழச் செய்யும்
பனித்துளியில் பனையடக்கும் ஆச்சரியம்
பாட்டினைப்போல் புவியில் உண்டோ?
தை பொன்மகளே வருக ! பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
மார்கழி திங்களுக்கு
மங்களம் பாடி
நித்திரை நீங்கி
முத்திரை பதிக்க
தை பொன்மகள்
மகிழ்வோடு பனித்துளியின்
வாழ்த்துகளுடன் வருகிறாள்!
தை பொன்மகளை
உடல் உள்ளம் பொங்க
உழவர்கள் மட்டுமா
பொங்கல் பானை வைத்து
களிப்புடன் வரவேற்கிறான்!
வீசும் தென்றல்காற்று
விரிந்த பனிமலர்கள்
வர்ணக்கொம்பு மாடுகள்
விளைந்த நெற்கதிர்கள்
இனிக்கும் கரும்புத்தோகைகள்
மணக்கும் மஞ்சள்குலைகள்
மகிழ்வோடு வரவேற்கும் பொழுது…
அன்பு உள்ளங்களே
கள்ளமில்லாமல் துள்ளி
விளையாடும் குழந்தைகள்போல்
உழவரோடு உள்ளம் கலந்து
தை பொன்மகளை நாமும்
வணங்கி வரவேற்போம்!
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை
அம்மா கை உணவு (23) – சதுர்புஜன் – உப்புமா உண்மைகள்
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
5. ரசமாயம் – ஜூலை 2018
6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
21. அவியல் அகவல் நவம்பர் 2019
22. சாம்பார் சக்தி டிசம்பர் 2019
23.உப்புமா உண்மைகள் !
அறியாப் பருவத்திலே நான்
ஆயிரம் தவறுகள் செய்ததுண்டு !
அன்னை தந்தை வார்த்தைகளை
தள்ளியே விட்டுப் போனதுண்டு !
ஆன்றோர் வார்த்தைகளின்
அருமை தெரியாதிருந்ததுண்டு !
ஆண்டவனைக் கூட நானும்
எங்கே காட்டு என்றதுண்டு !
காலம் செல்லச் செல்ல என்
கருத்தும் கூடவே மாறியதே !
வாழ்ந்த காலம் கனவாய்ப் போக
வந்தன புதிய நனவுகளே !
சிறிய வயதினிலே உப்புமா என்றால் ஓடிடுவேன் !
தினமும் உப்புமாவா என்றே மூர்க்கமாய் நானும் சீறிடுவேன் !
இட்லி தோசை கேட்டு வீண் பிடிவாதம் செய்திடுவேன் !
உப்புமா என்றாலே முகத்தை தூக்கியே நானும் வைத்திடுவேன் !
அதே உப்புமாதான் – ஆனால்
ஆள் இன்று நான் மாறி விட்டேன் !
அருமை பெருமைகளை – இன்று
மீண்டும் நானே புரிந்து கொண்டேன் !
நாக்கு மாறியதா – இல்லை என்
போக்கு மாறியதா?
தெரிந்தால் சொல்வீரோ – இந்த
செப்படி வித்தையினை ?
உப்புமா என்றிடிலோ – இன்று
ஊறுது நாக்கினிலே !
கிளறும் போதினிலே – என்
மனமும் கிளர்ந்திடுதே !
பிடிக்காது என்றவன்தான் – இன்று
சுவைத்தே மகிழ்கின்றேன் !
உணர்ந்தேன் உப்புமாவே – இனி
என்றும் உன் அடிமை !
அன்னைக்கு நான் அடிமை – அவள்
கை உணவுக்கு வீழ்ந்திட்டேன் !
உணவுக்கு இல்லையடா – அவள்
அன்புக்கு என்றுணர்ந்தேன் !
அன்புக்கு அடி பணிந்தோர் – அவர்
ஆண்டவர்க்கு அடிமையன்றோ !
கைப் பிடி உப்புமாவும் – அவன்
கருணையால் வந்ததன்றோ !
கொசுறு :
காயம் கருவேப்பிலை
கடுகு மிளகாயுடன்
ஒரு படி ரவ போட்டு
ஒரு புடி உப்பு போட்டு
உப்புமாவைக் கிண்ட சொல்லடி……..
நினைவில் நிற்கும் சில நினைவு இல்லங்கள்
பாரதியார்
காமராஜ்
எம் ஜி ஆர்
சிவாஜி கணேசன்
அண்ணா
கருணாநிதி
ஜெயலலிதா
உ வே சா
பாரதிதாசன்
ராஜாஜி
அப்துல் கலாம்
வ உ சி
கண்ணதாசன்
மறைமலையடிகள்
டி கே சி
பெரியார்
2019 இல் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் – மூன்று கோணங்கள்
கோணம் 1
கோணம் 2
கோணம் 3
இலக்கியக் கூட்டங்கள் பற்றி சில கிசுகிசுக்கள் -தகவல்கள் ( நெட்டில் திரட்டியவை)
இவை உண்மையோ பொய்யோ யாமறியோம். தவறாக இருந்தால் தெரிவிக்கவும். மன்னிப்புப் கேட்கிறோம்.
நன்றி: தேவி பாரதி – மின்னம்பலம்
மாமல்லன் கவிதையொன்றை எழுதி அதை தருமு சிவராமிடம் வாசிக்கக் கொடுத்தாராம். சிவராமு அதைக் கவிதையென்று ஒப்புக்கொள்ளவில்லையாம். மாமல்லன் சும்மா விடவில்லையாம். ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சிவராமு மீது புகார் ஒன்றைக் கொடுத்தாராம். மண்டையைப் பிய்த்துக்கொண்ட காவல் அதிகாரி சிவராமுவை அழைத்து சார் நீங்கள்தான் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அவரது கவிதைகளைக் கவிதைகள்தாம் என ஏற்றுக்கொள்ளக் கூடாதா? எங்களுக்கிருக்கும் வேலைச் சுமைகளுக்கிடையில் இந்த வழக்கை எப்படி கையாள முடியும் என அழாக்குறையாகக் கெஞ்சினாராம். மேற்குறிப்பிட்ட சம்பவம் புனைவா, நிஜமா எனத் தெரியாது. ஆனால், தமிழ் இலக்கியவாதிகளின் கலகச் செயல்பாடுகள் சார்ந்து இதுபோன்று உலவி வந்த எண்ணற்ற புனைவுகள் உண்டு.
காணாமல்போன பகடி
ஆனால், அவை போன்ற கலகச் செயல்பாடுகளுக்கான இடம் கொஞ்சம் கொஞ்சமாக அருகிக் கடைசியில் இல்லாமலேயே போனது. கேலிக்கும் கிண்டலுக்கும் பகடிக்கும் இடமில்லாமல் போனது. இப்போது கூட்டங்கள் ஒழுங்காக நடக்கின்றன. வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை, கருத்துரை, நன்றியுரை எனக் கூட்டங்கள் சரியான நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் முடிந்துவிடுகின்றன. மாற்றுக் கருத்துடையவர்கள் கூட்டங்களுக்கு வருவதையேகூடத் தவிர்த்துவிடுகிறார்கள். கூட்டங்கள் அலுப்பூட்டும்விதத்தில் தொடங்கி, அலுப்பூட்டும்விதத்தில் தொடர்ந்து அலுப்பூட்டும்விதத்திலேயே முடிந்துவிடுகின்றன.
1990களின் தொடக்கம் என நினைக்கிறேன், ஈரோட்டில் பழமலையின் கவிதைத் தொகுதி ஒன்றின் வெளியீட்டு விழா. கவிஞர் அக்னிபுத்திரன் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் உரையாற்றுவதற்காக அ.மார்க்ஸ், கோவை ஞானி உள்ளிட்ட பல ஆளுமைகள் ஈரோடு வந்திருந்தனர். எனக்கும் அப்போது ஈரோட்டில் இருந்த கௌதம சித்தார்த்தனுக்கும் பழமலையின் அந்தத் தொகுப்புப் பிடிக்கவில்லை. ஆனால், மற்றவர்கள் அதைப் பெரிதாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். நானும் சித்தார்த்தனும் ஏதாவது குறும்பு செய்ய நினைத்தோம். பழமலையின் கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அக்னிபுத்திரனிடம் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகக் கேட்டோம். அவை சுமாரான கவிதைகள்தாம். ஆனால், புதிதாக முயற்சி செய்திருக்கிறார் என்பதால் பாராட்ட வேண்டியிருக்கிறது என்றார்.
கூட்டத்தில் பேசிய ஞானி உள்ளிட்ட எல்லோரும் பழமலையின் அந்தத் தொகுப்பை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்கள். அக்னிபுத்திரன் எங்களிடம் சொன்னதற்கு மாறாக அவரது கவிதைகள் மகத்தானவை என்பது போல் பேசினார். எனக்குக் கடும் கோபம். நேராக மேடைக்குப் போய்விட்டேன். அக்னிபுத்திரன் நேர்ப் பேச்சில் சொன்னதைச் சொல்லி மேடையில் இப்படி ஏன் பேச வேண்டும் எனக் கேட்டேன். தான் அப்படிச் சொல்லவே இல்லை என மறுத்தார். நான் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த கௌதமச் சித்தார்த்தனையும் அப்போது அருகிலிருந்த வேறு இருவரையும் சாட்சிக்கு அழைத்தேன்.உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஞானியை முகஸ்துதி செய்கிறார் என்றுகூட விமர்சித்தேன்.
பெரிய களேபரமாகிக் கூட்டம் பாதியிலேயே நின்று விட்டது.
பிறகு எல்லோருமாகச் சேர்ந்து அருகிலிருந்த டீக்கடை ஒன்றுக்குப் போய் டீ குடித்து, தம் அடித்தவுடன் நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பியது. கூட்டமும் தொடர்ந்து நடைபெற்றது. மார்க்ஸ் என் கேள்விகளில் இருந்த நியாயங்களைப் பற்றிப் பேசினார். முகஸ்துதியாளர் என விமர்சித்ததற்காக நான் ஞானியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.
அதே போல் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலுக்காக ஈரோட்டில் நடந்த விமர்சனக் கூட்டமொன்றிலும் ரகளை ஏற்பட்டது. அப்போது ஈரோட்டில் எந்த இலக்கியக் கூட்டம் நடைபெற்றாலும் கடைசியில் அடையாளத்திற்காகவாவது கொஞ்சம் ரகளை நடக்கும்.
இலக்கியவாதிகளின் கலகச் செயல்பாடு பல விதங்களில் நடந்தது. சாரு நிவேதிதா மதுரை சுப மங்களா நாடக விழாவில் நடத்திய நாடகத்தில் ஆபாசமான காட்சிகள் தென்பட்டதாகப் பார்வையாளர்கள் சிலர் அவரையும் அவரது குழுவினரையும் தாக்கியதாகச் செய்திகள் வந்தன.
சென்னையில் மது விடுதியொன்றில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது சாரு நிவேதிதாவுக்கும் விமர்சகர் வளர்மதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வளர்மதி, சாரு நிவேதிதாவின் பல்லை உடைத்துவிட்டதாக இந்தியா டுடேயில் வந்த செய்தியொன்றும் நினைவுக்கு வருகிறது.
2000இன் தொடக்கத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டின்போது எழுத்தாளர் சுந்தர ராமசாமியைச் சிலர் அவமானப்படுத்த முற்பட்டதாக வந்த செய்தி அப்போதைய தீவிர இதழ்களில் விவாதத்திற்குள்ளானது.
பொதுவாக தமிழ் இலக்கிய கூட்டங்கள் பல அதிக முயற்சிகள் அல்லது கச்சிதத்திற்கான முனைப்பு இல்லாமல் ஒருங்கிணைக்கப்படுபவை. பேசுபவர் கேட்பவர் இருவரும் ஆர்வமில்லாமல் இருப்பதையே புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட கூட்டங்களில் பார்க்க முடியும். மேலும் 40 வயதுக்கு குறைவானவர்களை இலக்கியக் கூட்டங்களில் தொடர்ந்து காண்பது அபூர்வம். ஒருவகையான சோம்பலே இலக்கிய கூட்டங்களில் நிலவும்.
அழகியசிங்கர்:
சமீப காலத்தில் நான் நிகழ்த்தும் இக்கூட்டங்களில் சிறப்பான முறையில் ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். தொடர்ந்து புதுமையான முறையில் இக் கூட்டங்களை நாம் நடத்திச் செல்லவேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம் தேவை.
வெற்றிகரமாக ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்த முடிந்த ஒருவரால் வாழ்வில் எதையும் சாதித்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. காரணம் அந்த அளவு இலக்கியக் கூட்டம் நடத்துவது சள்ளையான பிரச்சனைகளும் மனவெறுமையும் ஏற்படுத்திவிடக்கூடியது.
விடுமுறை நாளில் பள்ளியில் நடத்தப்படும் இலக்கியக் கூட்டங்களுக்கு என்றே தனிமரபு இருக்கிறது போலும். ஆட்கள் வந்தால் தான் ஆச்சரியம் அடைவார்கள்
திருவண்ணாமலையில் பவாசெல்லத்துரையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல இலக்கிய நிகழ்வுகள் தமிழ் சூழலில் மிக முக்கியமானவை. அதுபோலவே கவிஞர் கலாப்ரியா குற்றாலத்தில் ஆண்டு தோறும் நடத்தி வரும் கவிதைப்பட்டறையும் புதிய இலக்கிய போக்கினை உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்து வருகிறது.
எஸ் ராமகிருஷ்னன்
கட்டணக் கேட்டல் நன்று: ஜெயமோகன் பக்கம்
கட்டண உரையெனும் இப்புதிய திறவு, பல்வேறு இலக்கியக் களங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. களைகளற்று பொத்தாம்பொது கடந்து , ஒரு தேர்ந்த இலக்கின் வாசக அலை உருவாகலாம். ஹவுஸ்புல்களற்ற திடமான தெரிவுகளின் விருப்ப இருக்கைகளால் அரங்கம் அர்த்தமாகலாம். எந்தச் சூழலிலும் தேடலின் முனைப்புடன் ஆர்வமாய் அங்கு வந்து சேரும் இலக்கிய ருசும்பிகளின் வருகையால் கட்டண உரை மேலும் கவனம் பெறலாம்.
கவனித்து கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் எண்ணங்களும் சிந்தனைகளும் உரைகளும் என்றும் இலவசமல்ல எனும் தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கான முதல் நகர்வே இந்த கட்டண உரை. கட்டணக் கேட்டல் நன்று ! –
கட்டண உரையெனும் இப்புதிய திறவு, பல்வேறு இலக்கியக் களங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. களைகளற்று பொத்தாம்பொது கடந்து , ஒரு தேர்ந்த இலக்கின் வாசக அலை உருவாகலாம். ஹவுஸ்புல்களற்ற திடமான தெரிவுகளின் விருப்ப இருக்கைகளால் அரங்கம் அர்த்தமாகலாம். எந்தச் சூழலிலும் தேடலின் முனைப்புடன் ஆர்வமாய் அங்கு வந்து சேரும் இலக்கிய ருசும்பிகளின் வருகையால் கட்டண உரை மேலும் கவனம் பெறலாம்.
கவனித்து கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர்களின், படைப்பாளிகளின் எண்ணங்களும் சிந்தனைகளும் உரைகளும் என்றும் இலவசமல்ல எனும் தன் உணர்வின் வெளிப்பாட்டிற்கான முதல் நகர்வே இந்த கட்டண உரை. கட்டணக் கேட்டல் நன்று !
வழக்கமாக ஒரு விதி உண்டு, ஒருகூட்டத்தில் ஒருவர் சொதப்பியாக வேண்டும். சென்னையில் என் முந்தைய நூல் வெளியீட்டு விழா 2004ல். அதில் நண்பர் சோதிப்பிரகாசம் சொதப்பினார். எல்லாருமே நன்றாக பேசிய கூட்டத்தில் நானே சொதப்பியிருக்கிறேன். – ஜெயமோகன்
பொதுவாக இலக்கியக்கூட்டங்கள் என்றாலே வெற்றிலைப் பாக்கு கறைகளுடன் கூடிய இருட்டான மாடிப்படிகள் அமைந்த, கொட்டாவியை அடக்கிக் கொண்டு இருபது அல்லது முப்பது நபர்கள் அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருக்கிற, கதர்ச்சட்டையும் ஜோல்னா பையுமாக “இலக்கியவாதிகள்” என்று நெற்றியில் எழுதி ஒட்டி வைத்திருக்கிற சில நபர்களுமாக (அவர்களில் கட்டாயம் ஒருவர் தலை நிறைய முடியுடன் குடுமி வளர்த்திருப்பார்) டீயும் பிஸ்கெட்டும் கொடுப்பார்கள். வெளியே பழைய புத்தகக் கடைகளுமாக இருக்கும்
இன்றைக்கு இலக்கிய உலகில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. சக எழுத்தாளின் வீட்டுக்கு செல்லும் போது பருகத்தருகிற எதையும் குடிக்க பயமாயிருக்கிறது. ஒரு படைப்பை விமர்சனம் செய்ய அதைப் படித்தாக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லாத நிலையே இருக்கிறது. படிக்காமலேயே விமர்சனம் செய்யலாம். “இவன்தான் இப்படித்தான் எழுதுவான்” என்று முத்திரை குத்தி முன்தீர்மானத்துடனேயே அணுகுகிறார்கள். எதையும் படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். என் எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். செருப்பால் கூட அடியுங்கள். ஆனால் படித்து விட்டு செய்யுங்கள். – நாஞ்சில் நாடன்
ஜெயமோகனின் ஊட்டி இலக்கியக்கூட்டங்களைப் பற்றி ஒருவர் (வினவு) பகடியாடுகிறார்.
ஊட்டி சந்திப்பு குறித்து நிறைய சந்தேகங்கள், அளவிலா சம்சயங்கள், முடிவில்லா விசாரணைகள், வந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே அவை குறித்து ஒரு நீண்ட பொதுவான விளக்கம் தரப்படவேண்டியதாகி இருக்கிறது. இது ஒரு சிக்கலான தத்துவப் பிரச்சினையாக இருப்பதால் இலக்கியத்தை மேம்போக்காக சொறிபவர்கள் மேலே படிக்க வேண்டாமென்று அன்புடன் ஆணையிடுகிறேன். லுக்கி லக், பாரு நிவேதிதா போன்ற பதிவுலகின் கஞ்சா காக்டெயில் வழிந்தோடும் வஸ்துக்களை வெறியுடன் குடிக்கும் அடிமைகள் தயவு செய்து கன்ட்ரோல் பிளஸ் டபிள்யு அழுத்தி டாப்பை மூடிவிட்டு சென்று விடுங்கள். இதையே எத்தனை தடவை எழுதுவது, சலிப்பாக இருக்கிறது. ஒரு வேளை நான் எழுத்தை வெறுத்துவிட்டு ரஜினியுடன் இமயமலை சென்று செட்டிலாகிவிட்டேன் என்றால் அதற்கு இதுவே காரணமாக இருக்குமென்று தோன்றுகிறது.
அதே நேரம் வார்த்தைகளால் விளங்கிக் கொள்ள முடியாத, சூக்குமம் சூல் கொண்டுள்ள, குழப்பத்திற்கும் – தெளிவிற்கும் நடுவே நாட்டியமாடும் நன்னெறிக் கருத்துக்களை அபிநயிக்கும் பதிவுகளை பொறுமையாக, விடாப்பிடியாக, தலைவலியோடு, தம்மத்தின் பெருமிதத்தோடு படிக்கும் வாசகர்கள் நிமிர்ந்த நடையுடன் மேலே படிப்பதற்கு தடையொன்றும் இல்லை.
இலக்கியம் பற்றி பேச நாலு பேர் இருந்தாலே அதிகம். 40-50 பேர் உள்ள ஒரு கூட்டம் மாதாமாதம் கூடிப் பேசுகிறது. ஒவ்வொரு மாதமும் 20-25 பேராவது வருகிறார்கள். சென்னையின் ‘நடு சென்டரான’ கோபாலபுரத்திலிருந்து வடபழனி போவதற்கே எனக்கெல்லாம் தாவு தீர்ந்துவிடுகிறது, இவர்கள் சென்னையின் பல மூலைகளிலிருந்து – செங்கல்பட்டு, குரோம்பேட்டை, அம்பத்தூர் என்றெல்லாம் பேர் கேட்டேன் – வருகிறார்கள். ஜெயமோகன் வந்தால் எண்ணிக்கை 100-150 பேராக அதிகரித்துவிடுமாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. மேலும் மேலும் சிறப்பாக நடக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
குவிகம் பொக்கிஷம் – சோகவனம் – சோ. தர்மன்
கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும் வனங்களின் ஏகாந்த மௌனத்திலும் இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும் நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின் மென்னுணர் நரம்புகள் புடைக்க கிளைவிட்டுக் கிலை தாவி, காற்றில் உதிரும் பூக்களெனப் பறந்து உல்லாசமாய் ஆனந்தக் கூத்தாடிக் களித்திருந்தன, அந்த இளஞ்சோடிக் கிளிகள். உடற்சூட்டின் கதகதப்பில் திரவம் உறைந்து அணுக்கள் இறுகிக் கெட்டியாகி உயிர் பெற்று அசைந்து, மண் நீக்கி முளைவிடும் விதையெனத் தோடுடைத்து சூரியனின் இயற்கைச் சூட்டைப் பெறும் வேட்கையிலும், தாயின் மூச்சே காற்றென இருந்த கணம் மாறி உள்காற்றை உந்தித் தள்ளி வெளிக்காற்றில் தலை நீட்டும் முதல் ஸ்பரிசத்திற்காய் காலுதைக்கும் குஞ்சுகள் பொரிக்க இடம் தேடிப் புறப்பட்டன ஜோடிக் கிளிகள்.
தன் வம்சத்தின் பாரம்பரிய நியதியை மீற முடியாமல் கிளைகளின் மேல் கூடு கட்டி வாழும் பறவைகளையும், கிளைகளிலிருந்து தொங்கும் கூடு கட்டி வாழும் பறவைகளையும் உதாசீனப்படுத்தி விட்டு மரப்பொந்துகள் தேடி வனங்களின் மூலை முடுக்குகள் எல்லாம் தேடி அலைந்தன. மலைக் குகைகளின் கல் பொந்துகள் மாறித்தான் மரப்பொந்துகள் உண்டாயிற்று போலும். தான் ஜனித்த தாய் வீட்டை நினைத்து காற்றில் அடையாளமிட்டிருந்த திசையில் பறந்து இடந்தேடியடைந்தன. தன் தாய் வீட்டை அந்த இடத்தில் காணாமல் விக்கித்து நின்றன. தன் வீடு இருந்ததற்கான அடையாளத்தையே காணவில்லை. திசைமாறி விட்டோமோ என்று திகைத்து அடையாளங்கள் தேடினால் அடையாளங்களாக நின்ற மரங்களையும் காணவில்லை. “ஆகா… எவ்வளவு பெரிய இலவ மரம் தன் தாய்வீடாயிருந்தது. எவ்வளவு உயரம், எத்தனை பொந்துகள். பக்கத்திலேயே கூடாரமாய் கிளை பரப்பி வெய்யில் முகமே காணாமல் எந்நேரமும் நீருக்குள் இருக்கிற மாதிரியான குளிர்ச்சியில் அசைந்தாடி பறவைகள் எல்லாவற்றையும் ‘வா, வா’ என்று கையசைத்துக் கூப்பிடும் நிலவாகை மரத்தையும் காணவில்லை. சந்தன வாசனை எங்கே போயிற்று? அடர்ந்த மட்டியும் கோங்கும் பிள்ளை மருதும் இருந்த இடம் எது? ஆயிரம் கைகள் விரித்தாற்போல் நின்ற தேக்கு எங்கே போயிற்று. தன் தாய்வீட்டில் வாசற்படிபோல் பொந்தின் அடியில் இருந்த பெரிய கணுவில் நின்றுகொண்டு இரையூட்டிய தன் தாயின் அலகும் தங்களின் அலகும் எவ்வளவு கச்சிதமாய் பொருந்தி மூடும் இரைகளை அலகு மாற்றிய பின் விருட்டெனப் பறந்து காற்றில் கலக்க எத்தனை தோதாயிருந்தது. அம்மரத்தின் கணு முற்றிப் பழுத்து வெடித்த பலாவின் மணத்தை இந்த நாசி உணரவே வழியிலலியே. உயிர்ப்பித்த பூமியா அத்தனை மரங்களையும் உள் வாங்கிக் கொண்டு ஏப்பம் விட்டது? கடுகளவு விதையையும் பெரிய மரமாக்கி வனமாக்கும் மண் நிச்சயமாய் விழுங்கியிருக்காது. மண் விழுங்கும் சருகுகள் கூட உரமாகி உயிர் பெற்று மரமாய்த்தானே வெளிவருகிறாது. அப்படியெனில் இந்த மரங்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன. பெரு நெருப்பில் கருகியிருந்தால் தடயம் எங்கே. சாம்பலையும்கூட உரமாக்கி செடிகளுக்கு அளித்து பூ பிஞ்சு காய் பழம் விதையென சகக்ரச் சுழற்சியின் விதிக்கு மண் தானே ஆதாரம். அப்படியிருக்க மண் நிச்சயமாய் விழுங்கியிருக்க முடியாது.”
கனிந்து காம்பறுந்து தரையில் விழும் விதை சுமந்த பழங்களை கையேந்தி வாங்கிக் கொள்ளும் மண்போல் தன் உடலுக்குள் சூல் கொண்ட பழங்களைப் பத்திரமாய் இறக்கி வைக்க இடம் தேடியலைந்தன கிளிகள். மழை மேகங்களைச் சுமந்துகொண்டு வனமெல்லாம் அலையும் காற்றைப் போல் அலைந்தன கிளிகள். வயசாகி கிழடு தட்டி நரை திரண்டு முடியுதிர்ந்து வழுக்கையாகி சுருக்கங்கள் கண்டு பொந்துகளாகிப் போன மரங்கள் வனமெங்கும் தேடியும் கண்ணில் படவே இல்லை. நாகங்கள் உலா வரும் தரையில் தன் விதையை விதைக்க முடியாது. மென் பழங்களை மட்டுமே கொத்தும் செவ்வலகினால் மரப்பட்டைகளைக் குடைந்து பொந்துகள் உண்டாக்க முடியாது. கிளிகளின் அலகுகளும் பழுத்துத் தொங்கும் பழங்களும் வெவ்வேறல்ல. வாய்விட்டுக் கதறாமல் ஊமையாய்ச் சுற்றி வனங்களை வட்டமிட்டே காலங்கடந்து போனது. இனிமேல் ஒரு நாள் தாமதித்தால் கூட தன் வம்சம் தரையில் விழுந்து மடிந்து போகும். விதையைப் புஷ்பிக்கும் பூகிக்கு முட்டையைப் புஷ்பிக்கும் கலை மறந்து போனது. விதைவேறு, முட்டை வேறா? விதைக்குப் பூமி, முட்டைக்குப் பறவை. அப்படியானால் பூமியும் பறவையும் ஒன்றுதானே.
கனத்த வயிற்றின் சூல் விரட்ட, வனத்தை மறந்த பெண் கிளி சிறகடித்துப் பறந்தது வெகு தூரம். சோகத்தில் முகஞ்சுளித்த ஆண் கிளியின் இயலாமை, மரப்பொந்து கண்ணில் படவேயில்லை. கிழடு தட்டி வைரம் பாய்ந்த பொந்துகள் உள்ள மூத்த மரங்களைக் காணவேயில்லை. மரங்களற்று செடிகளாகிப் போன வனங்கள். பல்வேறு மலர்களின் சௌந்தர்ய நிறங்களும் மணங்களும் அற்ற வனம். பழங்களின் வாசனைகள் இல்லாத வனம். கூட்டங் கூட்டமாய்த் திரியும் காட்டு மிருகங்களற்ற வனம்.
வெகு நேரம் பறந்து இறக்கை ஓய்ந்து வெட்ட வெளியில் ஒற்றையாய் நின்ற மொட்டைப் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து எட்டிப் பார்த்தன. செத்த பனஞ்சிராய்கள் உள் விழுந்த ஆழப் பொந்து பெண் கிளி உள்ளே போய் முடங்கிக் கொண்டது. மொட்டப் பனையின் உச்சியிலிருந்து ஆண் கிளி கழுத்துருட்டிப் பார்த்தது. கண்ணெட்டும் தூரம்வரை வெட்டவெளி.
மொட்டைப் பனையை ஒட்டிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை. ஓயாமல் கேட்கும் வாகன இரைச்சலும் ஹாரன் சத்தமும். பக்கத்திலேயே சாலையோரக் கேண்டீன், இரவு பகல் எந்நேரமும் ஒளி வெள்ளத்தில் மிதக்க சத்தமாய்க் கூச்சலிடும் ஸ்டீரியோ சினிமாப் பாடல்களும் புகை கக்கும் உயர்ந்த குழாயும், காற்றில் பரவி வரும் விசித்திரமான பிரியாணி வாசனையையும் வாகனங்கள் கக்கிச் செல்லும் டீஸல் பெட்ரோல் புகை நாற்றத்தை சுவாசித்து முகஞ் சுளித்தது ஆண்கிளி. பறந்து வந்த களைப்புத் தீர தாகம் தணிக்கப் பறந்து வெளியில் சென்றது ஆண் கிளி. மலையருவிகள் கொட்ட சிற்றோடைகளில் பாம்பின் நெளிவாய், சுவை கொண்டு பாய்ந்து வரும் கண்ணாடித் தண்ணீர் தேடி அலைந்தது. தூரத்தில் தெரிந்த குளத்தில் தாழப் பறந்து உற்றுப் பார்த்தது. ஒர்க்ஷாப் கழிவுகள் சேர்ந்து எண்ணெய்ப் படலம் மிதக்கும் கருமை நிறத் தண்ணீரின் நாற்றம் பிடிக்காமல் பறந்து போனது. சாலையோரக் கேண்டீனிலிருந்து வெளியேறி கிடங்கில் பெருகிக் கிடந்த மீன் செதில்கள் மிதக்கும் தண்ணீரில் ஒரு கொக்கு தவமிருக்கக் கண்டதும் கிளி பறந்து போனது. தூரத்தில் நடுக்காட்டில் பம்புசெட் கிணற்றின் உப்புத் தண்ணீர் வாய்க்காலில் தொண்டை நனைத்துப் பறந்து வந்தது.
மொட்டைப் பனையின் உச்சியில் உட்கார்ந்து எட்டிப் பார்த்த ஆண் கிளியின் முகத்தில் இளஞ்சூட்டின் வெக்கை படிந்தது. ஆண் கிளி புரிந்து கொண்டது. சாலையோரக் கேண்டீனில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸின் ஜன்னல் வழியே எறிந்த பொட்டலங்களில் ஒட்டியிருந்த பிரியாணித் துகள்களையும் புளியோதரைப் பருக்கைகளையும் கொண்டுபோய் இரையாகக் கொடுத்தது. சில நேரம் ஆண் கிளி முட்டைகளுக்குக் காவல் காக்க பெண்கிளி வந்து கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு போனது. ஒருநாள் யாரோ எச்சிலையில் சிவப்பாய் பழங்கள் கிடக்க, கிளி சந்தோஷத்துடன் ஆவலாய் கொத்தித் தின்னப் போனபோதுதான் தெரிந்தது. அந்தப் பழம் வேறெந்த உயிர்ப்பிராணிகளுமே தின்னாத, மனிதர்கள் மட்டுமே தின்கிற தக்காளிப் பழமென்று. ஏமாற்றமடைந்த கிளி ஒரு குழந்தை கோபத்தில் விட்டெறிந்த காய்ந்த ரொட்டித் துண்டைத் தூக்கிக் கொண்டு பறந்தது. ஒருநாள் பாலிதீன் பையின் கொஞ்சம் மீதம் இருந்த தண்ணீரை யாரோ தூக்கி எறிய, தொண்டை நனையக் குடித்து தாகம் தீர்த்தது. ஒரு வேளை அண்ணாந்து குடிக்கும் போதோ அல்லது பிளாஸ்ட்டிக் பையை பல்லால் கடித்துக் கிழிக்கும் போதோ கை தவறி விழுந்திருக்கலாம் இல்லையெனில் எந்தக் குழந்தையாவது கோபத்தில் தன் அப்பா அம்மா மீது எறிந்து குறி தவறிக் கீழே விழுந்திருக்கலாம்.
இரவில் எந்நேரமும் கண்களைக் கூச வைக்கும் வாகனங்களில் வெளிச்சங்களும் இடைவிடாது கேட்கும் இரைச்சல்களும் பேயாய் அலறும் ஹாரன் சத்தங்களும் கேண்டீன்களில் அலறும் ஸ்பீக்கரின் ஓலங்களும் தூக்கத்தை மறக்கடித்தன. காய்ந்த பணஞ் சிராய்களின் உறுத்தல் வேறு. ஆனாலும் ரொம்பவும் பயமுறுத்தியது ஓயாமல் ஒலிக்கும் ஹாரன்களின் சத்தம்தான். வனத்தில் எப்போதாவது யானையோ சிங்கமோ புலியோ அல்லது இடியோ மின்னலோ பெரிய சத்தத்தையும் பயத்தையும் உண்டுபண்ணும். அந்த பயம் சமயத்தில் இரண்டுநாள் கூட மறக்க முடியாமல் அடிவயிற்றைக் கலக்கும். ஆனால் இங்கேயோ ஒரு நிமிஷம் தவறாமல் பயங்கர சத்தம். சத்தமே வாழ்க்கையென்றாகிப் போயிற்று கிளிகளுக்கு. ஒரு நாள் சில வித்தியாசமான சத்தங்கள் கேட்கவும் இரு கிளிகளும் ஆவலாய் பனைமேல் நின்று எட்டிப் பார்த்தன. தூரத்தில் சில மயில்களும் இன்னும் சில குயில்களும் ஒரு புறாக் கூட்டமும் இருக்கக் கண்டு சந்தோஷமாய் பொந்துக்குள் போய் முடங்கிக் கொண்டன. படை படையாய்ச் சென்ற சிட்டுக் குருவிக் கூட்டம் மொட்டைப் பனையை ஒட்டிப் பறந்தது.
ஒவ்வொரு தடவையும் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும்போது அதன் தாய் பாஷையான கிகீகீ சத்தத்தைக் குஞ்சுகள் கேட்கவிடாமல் வாகனங்களின் ஹாரன் சத்தம் மேலெழும்பி அமுக்கியது. தொண்டை வலிக்கக் கத்தியும் தன் தாய் பாஷையை குஞ்சுகளின் காதுகளில் கேட்கவைக்க முடியாமல் தாய்க்கிளிகள் இரண்டும் தொண்டை வறண்டு ஓய்ந்து போயின. தன் வம்சத்தின் பாரம்பரிய நிறம் மாறி குஞ்சுகள் கிளிப்பச்சை நிறமிழந்து செம்பச்சையாய் வளர்ந்தது கண்டு தாய்க்கிளிகள் இரண்டும் ஒன்றையொன்று ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டன. தன் குஞ்சுகள் எழுப்பும் சத்தம் வாகனங்களின் ஹாரன் சத்தம் மாதிரி ஒலிக்கக் கண்டு இரு கிளிகளும் பதறித் துடித்தன. பஸ்ஸின் ஜன்னல் வழி விட்டெறிந்த அரைக் கொய்யாப் பழத்தை ஆசையாய் கொண்டு வந்து ஊட்டியது தாய்க்கிளி. பழங்களின் வாசனையறியாத ருசியறியாத குஞ்சுக்கிளி தூ.. வென்று துப்பி உமிழ்ந்தபோது தாய்க்கிளிகள் இரண்டும் கண்ணீர் விட்டு அழுதன.
கொஞ்ச நாள் கழித்து வாகனங்களே வராத நிமிஷ நேர இடைவெளியில் மொட்டைப் பனையிலிருந்து ஹாரன் சத்தம் கேட்கவும் சில பேர் பேய் என்றார்கள். சில வருடங்களுக்கு முன் ஒன்றோடொன்று மோதி நொறுங்கிச் செத்த டிரைவர்களின் ஆவி பனையில் குடியேறிவிட்டது என்றார்கள். பேய்கள் வாசஞ் செய்யும் மொட்டைப் பனையை தூரோடு வெட்டிச் சாய்த்து பேய்களின் அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். அதற்கப்புறம் ஜனங்கள் பயமற்று நடமாடினார்கள். காற்றில் சிறகசைத்துப் பறந்து குஞ்சுக் கிளிகளைக் கூட்டிக் கொண்டு வனம் சேர்ந்தன தாய்க்கிளிகள். மரங்கள் குறைந்து செடிகள் நிறைந்திருந்த வனம் இப்போது செடிகள் குறைந்து கொடிகள் நிறைந்த வனமாய்க் காட்சியளித்தது. கிளிகளின் வித்தியாசமான ஹாரன் அலறலில் வனம் நடுங்கியது. அருகருகே வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சிங்கங்களும் புலிகளும் சிலிர்த்துக் கொண்டன. ஒன்றிரெண்டாய் உயிர் வாழும் யானைகள் தும்பிக்கைகள் தூக்கி மிரண்டு நின்றன. வானத்திலிருந்து ஓயாமல் கேட்கும் ஹாரன் சத்தம் வனமெங்கும் எதிரொலித்தது. தன் வம்சத்தின் சாபம் என்றெண்ணிய தாய்க்கிளிகளும் ஓடிப் பதுங்கிக் கொண்டன.
குஞ்சுக்கிளிகள் இரண்டும் வித்தியாசமான மணம், சூழல், இரைகல் கண்டு முகஞ்சுளித்துக் கவலையோடிருந்தன. பழம் கொத்தித் தின்னவும், எதிரியின் கண் முன்னாலேயே மரத்தின் இலையா மாறி தப்பிக்கவும் தெரியாமல் ஓயாமல் ஹாரன் சத்தத்தை ஒலித்துத் திரிந்தன. ஒருநாள் இச்சி மரத்தின் உச்சியில் நின்று இரண்டு கிளிகளும் பலமாய்க் கத்தின. நடுக்காட்டுக்குள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு போவதைப் போல் விடாமல் ஹாரன் சத்தம் கேட்டது. திடீரென்று எதிர்திசையிலிருந்து பக்கத்திலேயே ரயில் வண்டியெழுப்பும் பயங்கரமான ஹாரன் சத்தம் கேட்கவும் கிளிகள் இரண்டும் மௌனியாய் நின்று கவனித்தன. ரயில் வண்டியின் ஹாரன் சத்தம் தங்களை நோக்கி மிக அருகே நெருங்கி வந்தது. மீண்டும் கிளிகள் உற்றுப் பார்த்தன. தங்களை நோக்கி இரண்டு மயில் குஞ்சுகள் கூவிக் கொண்டே வருவதைக் கண்ணுற்றன.
வனமெங்கும் பஸ் ஹாரன் சத்தமும் ரயில் ஹாரன் சத்தமும் விடாமல் கேட்கத் தொடங்கின. சில நாள் கழித்து நடுவனத்தில் ஆலைச் சங்கின் பயங்கரச் சத்தம் கேட்டது. எல்லாப் பிராணிகளும் உற்றுப் பார்த்தன. குயிலொன்று கூவிக் கொண்டு போன சத்தமது. சில நேரம் மிஷின்கள் ஓடும் பாக்டரிச் சத்தங்கூட கேட்கத் தொடங்கியது. பல்வேறு வாகனங்களின் பாக்டரிகளின் விதவிதமான பயங்கரச் சத்தங்கள் வனமெங்கும் ஒலிக்க வனம் சுருங்கிக் கொண்டே வந்தது. வரவர வனத்தின் சௌந்தர்யம் குறைந்து விகாரம் குடி கொண்டது. கடைசியாய் படைபடையாய்ப் பறந்து வந்த சிட்டுக்குருவிகள் ஊசிப் பட்டாசுகளாய் வெடித்துச் சிதறிச் சத்தமெழுப்பி மரக்கிளைகளுக்குள் மறைந்து கொண்டன. தன் செவிப்பறைகள் கிழிந்து ஊமையாகிப் போன வனம் நாளாவட்டத்தில் சுண்ணாம்புக் காளவாசலாய் மாறி அக்னியாய் தகித்தது. வனத்தைத் தேடியலையும் எஞ்சிய பறவைகள் எழுப்பும் பலவிதமான ஹாரன் சத்தங்கள் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன வனங்களையும் கடந்து.
சோ தர்மன் – “சூல்” புதினத்திற்கு 2019 வருட சாகித்ய அகாதமி விருது
சூல் என்ற நாவலுக்கு 2019 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது கிடைத்துள்ளது.
அவருக்கு நம் அனைவரது பாராட்டுதல்களும் உரித்தாகுக!
கரிசல் காட்டு வழியில் கி ரா வைப் பின்பற்றுபவர்.
சோ தர்மனை அவர்களைப் பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு !
“மனக்கசப்பை விரட்டுவதற்காக” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
கடந்த இரண்டு மாதமாக ரீடா (வயது 16) மிகப் பயந்து போய் இருந்ததாக அவள் தாயார் ஜான்சி சொன்னாள். பயம் தோன்றும் போது நெடுநேரம் தூக்கத்திலேயே கழித்து விடுவாளாம். வற்புறுத்தி எழுப்பி, சாப்பிட வைப்பார்களாம்.
யாராவது அவளைக் கோபித்துக் கொண்டால், கடினமான பாடம் படிக்கும்போது, குறைந்த மதிப்பெண் வாங்கினால், வீட்டில் வாக்குவாதம் நேர்ந்தால் இப்படி நிகழ்வதை மூத்த மகள் ராணி கவனித்ததாகப் பகிர்ந்தார். தான் இவற்றை எல்லாம் கவனித்ததில்லை என்றாள் ஜான்சி.
மனநல நிபுணர்களான எங்களது தரப்பில், மேலும் மதிப்பீடுகள் செய்ததில், ரீடாவிற்கு “அட்ஜஸ்மென்ட் ரியாக்க்ஷன் (Adjustment Reaction)”, அதில் உணர்வுகள் பாதிக்கப்பட்டதாக முடிவானது. இது உருவான விதத்தை விவரிக்கிறேன்.
இவர்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர், அக்காவுடன் ரீடா வசித்தார். தந்தை அரசு நிறுவனத்தில் குமாஸ்தா. பத்து வருடமாக ரத்த அழுத்தம், மாரடைப்பு வந்ததால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். தனக்கு ஏதோ ஒன்று நேர்ந்துவிட்டால் குடும்பம் பாதிக்கப் படும் என்ற கவலையால் சலிப்பும், கோபமுமாக இருந்தார். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாக, டாக்டர் எச்சரித்தார்.
ஜான்சி இல்லத்தரசி. தைரியசாலி. தான் எவ்வாறு துணிவாக இருப்பதைப் போலவே ரீடாவும், ராணியும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். பாசம், கனிவு காட்டினால் தைரியம் வராது என்று நம்பியதால் ஜான்சி மிகக் கண்டிப்பாக இருந்தாள். அப்பாவிற்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை, கோபம் அதிகமானது.
அதனால் தான் ரீடாவிற்கும், ராணிக்கும் பாசம் காட்டுவது, பாசத்தை அடையாளம் காண்பது, வெளிப்படுத்துவது, எப்படிப் பழக வேண்டும், தற்காப்பின் எல்லைகள் இந்தத் திறன்கள் எல்லாம் மிகக் குறைந்து இருந்தது. ஜான்சி, பின் பற்றாததால் அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் அமையவில்லை.
ஜான்சி, யோசித்து முடிவு எடுக்க மாட்டாள். எது சரியென்று படுகிறதோ அதைச் செய்வாள். இதற்கு கணவருடன் தர்க்கம் செய்வாள். அவளைப் பொறுத்தவரை, அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவரது முடிவு சரியாக இருக்காது என்ற கருத்து. விளைவு? பிள்ளைகளின் முன் தினமும் விவாதிப்பதில், அவர்களின் பதட்டமும் மனக்கசப்பும் அதிகரித்தது!
பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் துச்சமாகப் பேசும் போது ரீடாவின் கவனத்தைத் திசை திருப்ப ராணி முயலுவாள். அவளுடன் புத்தகம் படிப்பாள், பொம்மலாட்டம் காட்டுவாள், படங்கள் வரைவாள். அந்நேரங்களில் ரீடாவை பாசத்துடன் அரவணைத்தாள், சிறுவயதிலிருந்தே.
இருந்தும் ரீடா நகத்தைக் கடிப்பாள், கைகள் நடுங்கும். சண்டை நிற்பதாக இல்லை என்றால், ரீடா அதைத் தாங்கி கொள்ள முடியாததால் தூங்கிவிடுவாள். பல சமயங்களில் இது மாலை ஆறு-எழு மணிக்கும் கூட நேரும். அடுத்த நாள் தாமதமாக எழுந்து, குளிக்காமல், ஏதோ சாப்பிட்டு வீட்டுப் பாடங்களை முடிக்காமலேயே பள்ளிக்கூடம் போவாள்.
தண்டனை கிடைக்கும். மதிப்பெண் குறையும் நாட்களில் ரீடா வந்தவுடன் தூங்கி விடுவாள். மனத் தவிப்பிற்கு அனுசரித்தது உடல்; மனத் தவிப்பை உடல் மொழி தூக்கம் என்று பாவித்து, அவ்வாறே செய்ய உடல் தானே பழகி விட்டது.
பெரியவள் ராணி போகப் போகச் சரியாகும் என நினைத்துத் தன்னை தேற்றிக் கொண்டாள். ஆகவில்லை.
ரீடாவிற்கு எந்த ஒரு தவிப்பு இருந்தாலும் அதைப் பற்றி ராணியிடம் கூட வெளிப்படையாகப் பேச முடியாத சூழல். அக்கா பாசக்காரி. அம்மாவைப் பற்றிப் பேசுவதைப் பார்த்தோ, கேள்விப் பட்டாலோ, கடுமையாகக் கண்டிப்பாள். அதனால்தான் ரீடா மனதிற்குள் புதைத்தாள். பாசத்திற்கு ஏங்கினாள். வேறு என்ன செய்ய?
இவர்கள் தெய்வ பக்தி உள்ளவர்கள். ஞாயிற்றுக்கிழமை தொழுகை போவது, ஸன்டே ஸ்கூலுக்குக் குழந்தைகள் அவசியம் போய் ஆக வேண்டும். தானதர்மம் செய்வதைக் கடைப்பிடிப்பதை அவர்களின் அக்கம்பக்கத்தினர் பாராட்டிப் பேசினார்கள். குடும்பத்தின் சொல்லாத விதி: என்ன நடந்தாலும் வெளிப்படுத்தக் கூடாது. அமைதி காப்பது போல் காட்ட வேண்டும். இதைப் பின்பற்றுவது, அழுத்தம் கொடுத்தது. தன் கழுத்தைப் பிடித்து வைத்தது போல ரீடா உணர்ந்தாள்.
ரீடாவிடம் மனத்திடத்தின் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாதது பல விதங்களில் தென்பட்டது. அவளை, யார் எதைக் கேட்டாலும், அச்சம் மேலோங்கும். குழம்பிப் போய்விடுவாள். மற்றவர்கள் சொல்வதைச் செய்வாள். மறு பேச்சு பேச மாட்டாள். தனக்கு எதுவும் தெரியாது என்பதை உறுதியாக மனதில் ஏற்றுக் கொண்திருந்தாள். இப்படி இருப்பது அவளுக்கே வேதனை தரும். அதை ஏற்றுக் கொண்டு நெஞ்சில் சுமக்க முடியாததால் தூங்கிவிடுவாள்.
ரீடாவை அவர்களுடைய வாடகை வீட்டில் வசிக்கும் ஆண்களைத் தவிர்த்து வேறு ஆண்களுடன் பேச, பழகப் பெற்றோர் தடை விதித்தனர். மூன்றாவது வகுப்பு வரை ஆண்-பெண் கலந்த பள்ளிக்கூடம். இப்போது பெண்களின் பள்ளிக்கூடம்.
ரீடா படிப்பில் நிறைய சுமார். ராணி வகுப்பில் முதல் இடம் பெறுபவள். பெற்றோர் அவளை மிகப் பெருமையுடன் பேசுவார்கள். ரீடாவை மற்றவர்கள் முன், ராணியுடன் ஒப்பிட்டு ஏளனமாகத் தாழ்த்திப் பேசுவார்கள். அப்போது தான் ரீடாவிற்கு உரைக்கும், அதிகமாக முயன்று நல்ல மதிப்பெண் எடுப்பாள் என நினைத்தார்கள், அவளுடைய மனiத்தவிப்பை பொருட்படுத்தவில்லை, இதில் அவளது தன்னம்பிக்கை இன்னும் குறைந்து போகிறது என்பதைக் கண்டு கொள்ளவில்லை.
இந்த சூழ்நிலையில் ரீடாவின் மாதவிடாய் ஆரம்பமானது. வளரும் பிராயத்தில் பல உடல்-சுரப்பி உற்பத்தியானதால் வெவ்வேறு உணர்வுகள் தோன்றியன, தன்னுள்ளே நேரும் பல விதமான கிளர்ச்சி அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது. இதை யாரிடம் பேச என்று புரியாமல் விழித்தாள். சினேகிதிகள் இல்லை. அவ்வளவு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை.
இந்த நிலையில் தான் அவர்கள் வாடகை வீட்டிற்குக் குடி வந்த வினோத் (வயது 24) ரீடாவைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வாழ்த்து, எப்படி இருக்கிறாள் என விசாரிப்பான். அவளுக்குக் கூச்சமாக இருந்தது. மனதைத் தேற்றியது, நெகிழ்ச்சியானது.
வினோத்துடன் சந்தித்துப் பேசுவதில், அவளுக்கு இந்த நெருக்கம் பல உடல் உணர்வை ஏற்படுத்தியது. அந்த வயதிற்கான பருவநிலை, வளர்ச்சியின் அறிக்கை இது என்பதை யாரும் அவளுக்கு சொல்லித் தரவில்லை.
நாட்கள் போக, ஓரிரு முறை வினோதின் கை உரசியது. அவளுக்குள் கிளர்ச்சி உண்டாயிற்று, ஏதோ செய்தது. ரீடா இதையும் வினோத் கிசுக்கிசு செய்வதையும் அவள் தடை செய்யவில்லை. இன்னொன்றை கவனித்தாள், இப்போதெல்லாம் அவள் நீண்ட நேரம் தூங்குவதில்லை என்று.
இப்படி போய்க்கொண்டு இருக்க, ஒரு நாள் வினோத் தனக்கு வேலை கிடைத்ததைச் சொல்லி அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றான். ஸ்தம்பித்துப் போனாள்.
திடீரென ஏதோ பயம் சூழ்ந்தது. யாரிடமும் ரீடாவால் சொல்ல முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அடுத்த நான்கு வாரத்திற்கு வினோத்தைச் சந்திக்க வில்லை. ஏதோ கேட்டு, முத்ததிதினால் கர்ப்பம் தரிக்குமா? என்ற கவலை அவளை வாட்டியது. தன்னை உற்று கவனித்தாள், சந்தேகம் எழுந்தது.
அன்றையிலிருந்து ரீடா திரும்ப நீண்ட நேரம் தூங்க ஆரம்பித்தாள். இப்போதும், மனம் வாட்டியதை உடல் கேட்டு, நடந்து கொண்டது! யதேச்சையாக வினோத்திற்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிற்று என்றும், அவன் தன் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றதைப் பற்றியும் கேள்விப் பட்டாள். ரீடாவிற்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.
பள்ளிக்குச் செல்ல மறுத்தாள். பெற்றோருக்கு அப்போது தான் ஏதோ பிரச்சினை என்று தோன்றியது. அவர்கள் குடும்ப டாக்டர் எங்களிடம் போகச் சொன்னதில், அழைத்து வந்தார்கள். பள்ளிக்கூட அதிகாரியுடன் பேசி பத்து நாள் சலுகை வாங்கியதாகச் சொன்னார்கள்.
நான் கேள்விகள் கேட்க, கடந்த எட்டு மாத நிலைமையை விளக்கினாள் ஜான்சி. ரீடாவைப் பற்றிப் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் விழித்தாள். இதை மாற்றத் தேவை என்பதை ஜான்சி புரிந்து கொள்ளவே கேள்விகளை நான் அவ்வாறு வடிவமைத்தேன். இந்த யுக்தி பலன் அளித்தது. பதில் தெரியாததை மாற்ற ஜான்சி முன் வந்தாள். அவள் தானாக செய்ய முடிவெடுத்தால் செய்வாள், மற்றவர் பரிந்துரை சொல்லிக் கேட்டு அல்ல. இதனாலேயே கேள்விகளை அவ்வாறு அமைக்க வேண்டியதாயிற்று.
பெண்களின் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதில் குறியாக இல்லாமல், அதற்குப் பதிலாக பெண்களின் சக்தியை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று பல ஸெஷன்களில் கலந்துரையாடினோம். இதன் பிரதிபலிப்பு வீட்டில் தென்பட்டது. வீட்டில் அவள் செய்ய வேண்டிய பல விதமான வழிமுறைகளை ஆலோசித்து அமைத்தோம். அதன் தாக்கம் தெரிய, குடும்பத்தினர் பேசும், பழகும் விதங்கள் மாற ஆரம்பித்தது.
இந்த மாற்றம் முக்கியம் என்பதற்காகவே நான் ரீடாவுடன் முதலில் ஆரம்பிக்கவில்லை. இப்போது தொடங்கினேன். ரீடாவுடைய முதல் பயம், தான் கர்பம்மா என்று மனம் வலித்தது. இதை முதலில் எடுத்துக் கொண்டு, அவளுடைய பாடப் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவளுடன் உரையாடி, கதைகள் வடிவமாகவும் விளக்கினேன். ரீடா தெளிவடைய அந்தப் பயம் பறந்து போனது. இவ்வாறு தெளிவுபடுத்தினால் குழந்தைகள் உறவாடலில் அதிகம் ஈடுபடுவார்கள் என்பது தவறான கருத்து என்றதையும் ஜான்சிக்குக் கூடவே விளக்கினேன். விஷயம் தெரிந்து கொள்வது சரியான முடிவுகள் எடுப்பதில் உபயோகமாக இருக்கும்.
ரீடா தான் அனுபவிப்பது உடலின் மாற்றங்கள், உடல்-மனம் தாக்கம், என்பதைப் புரிந்து கொண்டு, நிம்மதி அடைந்தால். மன அழுத்தங்கள் தாள முடியாததனால் தான் தான் வெகு நேரம் தூங்குகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளப் பல ஸெஷன்கள் ஆயின.
ஆரம்பத்தில் தான் வினோத்துடன் பேசிப்-பழகியது, முத்தம் பெற்றது கெட்டது ஏதோ செய்து விட்டதாகக் கருதினாள். பாவம் செய்ததாக நினைத்தாள். விளக்கமாகப் பேசியதில், தன் உணர்வுகள், அவைகளின் செயல்பாட்டைப் புரிந்து கொண்டது இந்தத் தவறான கருத்தை மாற்றிக் கொள்ள உதவியது. இதைத் தாண்டிய பின், அவளால் தன்னுடைய சந்தேகங்களைப் பற்றி வெட்கப் படாமல் பேச முடிந்தது.
ரீடா தன்மேல் வைத்திருந்த மிக மோசமான அபிப்பிராயங்களை மாற்றி அமைக்க ஆரம்பித்தோம். இதன் முதல் படி, வகுப்பிற்கு மறுபடி போவது தான் என்றேன். என்னை நம்பினாள், சென்றாள்.
அடுத்த ஏழு நாட்களுக்கு என்னுடன் ஸெஷன்கள். அதில் அன்றைக்கு நடந்ததை எடுத்து அலசினோம். அதில் அவளுடைய பயம், அச்சம், துன்பங்கள், துயரங்கள் எனப் பல உணர்வுகளைப் பார்த்தோம். ஒவ்வொன்றாய் எடுத்து அத்துடன் வந்த சிந்தனை, சூழல்களை வரிசைப் படுத்தி எவ்வாறு கையாண்டாள் என்பதைப் பார்த்தோம். இடையூறாக நேர்ந்ததை மாற்றி அமைக்கும் யுக்திகளை ரோல்-ப்ளே மூலமாகச் செய்ததில் நன்றாகப் புரிந்து கொண்டாள்.
மேற்கொண்டு, அம்மா-பிள்ளை இணையப் பல பதினைந்து நிமிட ஸெஷன்கள் அமைத்தேன். முதலில் ரீடாவுடன், அதற்குப் பிறகு வீட்டில் ஜான்சியும் தன் பங்கைத் தொடர்ந்து செய்து வந்ததில் மாற்றங்கள் தென்பட்டன.
இந்த முறை அப்பாவை ஸெஷன்களில் சேர்த்துக் கொண்டோம். அவரின் உடல்நிலை பற்றிய கவலையினால் ஏற்பட்ட சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ளப் பல ஸெஷன்கள் தேவைப்பட்டது. அதிலிருந்து அவருடைய பயத்தின் உற்பத்தி ஆகும் விதங்களை, அதன் தாக்கத்தைப் பார்த்தோம். அவர் தன் இயலாமை பற்றியும் அதனால் தன் மதிப்பு குறைவதையும் பற்றிப் பேசத் தொடங்கினார்.
இத்சமயத்தில், ஜான்சியுடன் இணைந்து ஸெஷன்கள் தொடங்கினேன். இதில் இருவர்களின் உறவுமுறையை மையமாக வைத்துப் பேசி வந்தோம். இவர்கள் தங்கள் வாக்குவாதங்களினால் பெண்கள் மீது ஏற்படும் தாக்கத்தைப் புரிந்து கொண்டு, மாற்றிச் செயல்பட, பல வாரங்கள் ஆயின. .
இது போய்க் கொண்டு இருக்கையில், ஸன்டே வகுப்பில் ரீட்டா சில பொறுப்புகள் ஏற்பதற்கான ஏற்பாட்டை அவளையே செய்ய வைத்தேன். தயக்கத்துடன் செய்தாள். ஒரு வாரத்தில் அதனால் தெம்பு பிறந்ததை உணர முடிந்தது. இப்போது பள்ளிக்கூடத்தில் ஏதாவதொரு பொறுப்பைத் தினம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். தினம் ஒரு சந்தேகம் தீர்ப்பதென்று.
இவ்வளவு நாளாகச் செய்யாததைச் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். முதல் நாள் மிகவும் சங்கடப் பட்டாள். தோழியிடம் ஆரம்பித்தாள். தொடர்ந்து செய்யச் செய்ய, தானாகக் கவனித்தாள்: தூங்குவது எழு மணி நேரம், அதற்கு மேல் தேவையில்லை!
சென்னைப் புத்தகக் காட்சி
புத்தக ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து !
சென்று வாருங்கள்!
புத்தகங்களை வாங்கி வாருங்கள் !
கொண்டாடுங்கள் !
சரித்திரம் பேசுகிறது – யாரோ
கூன் பாண்டியன்
ஹர்ஷன், புலிகேசி, நரசிம்மன் என்று சமகாலத்தில் வாழ்ந்த சரித்திர நாயகர்களைப் பற்றி எழுதி முடித்தபின் நாம் சரித்திரத்தில் அடுத்த காலத்தைப் பற்றி தானே எழுதவேண்டும்?
தவறு. அதே நாளில் இன்னொரு நாயகன் இருந்து கோலோச்சினான். அவனும் மன்னர்களை வென்றான். சரித்திரம் அவனைச் சொல்லாமல் போவதெப்படி? அவன் பாண்டியன் நெடுமாறன்! கூன் பாண்டியன் என்ற பெயரெடுத்தவன். திருஞானசம்பந்தர் கதையில் இவனைப்பற்றி எழுதினோம். ஆனால் அதில் இவன் சப்போர்டிங் ஆக்டர். . இன்று அவன் நமது ஹீரோ!
சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரை முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றான். சோழ மன்னன் தன் புதல்வியான மங்கையர்க்கரசியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். ஏராளமான சீர்வரிசைகளோடு குலச்சிறை என்ற பெயருடைய அறிஞரையும் அமைச்சராக விளங்கும்படி அனுப்பி வைத்தான். மங்கையர்க்கரசி பாண்டிய நாட்டின் அரசியாக முடிசூடிக்கொண்டாள்.
படையெடுத்து சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றான். பகைவரைப் புடைத்தான்; பாழி, செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான். திருநெல்வேலியையும் வென்றான்.
சமண மதத்தில் ஈடுபட்டு – பிறகு திருஞானசம்பந்தரின் அருளால் – சமணர்கள் வாதங்களில் தோற்கடிக்கப்பட்டு – கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறனானது.. இவை எல்லாம் நாம் முன்பே கூறியுள்ளோம். அதில் தோல்வியுற்ற 8000 சமணர்கள்- கழுவில் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டனர். இலக்கியங்களும் – சரித்திரமும் – இது சைவ மதத்தின் மறுமலர்ச்சி என்று கூறி விட்டு வேறு கதைகளுக்குச் செல்லும்.
இங்கு நாம் ஒரு நிமிடம் நின்று அந்த 8000 பேரின் ஜனப்படுகொலையை கண்டனம் செய்து மௌனம் சாதித்துப் பிறகுத் தொடர்வோம்.
நமது பழைய நண்பர் – சீனப் பயணியான ‘யுவான்சுவாங்’ – இவன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தான் அவனது நாட் குறிப்பில் அவன் கூறுவதாவது
• பாண்டிய நாட்டில் உப்பும் முத்தும் மிகுதி. அருகிலிருந்த தீவுகளில் இருந்து முத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன.
• வெப்பம் மிக்க நாடு இது. இந்நாட்டு மக்கள் கருத்தமேனி உடையவர்கள்;உறுதியும் போர் வலிமையும் உடையவர்கள்;
• பாண்டி நாடு வணிகத்தில் வளம் பெறுகிறது. செல்வத்தால் சிறந்துள்ளது
-எனப் பாண்டிய நாட்டினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
நெடுமாறன் 63 நாயன்மார்களில் ஒருவனாகினான்.
பின்னாளில் சுந்தரர் இவரைத் திருத்தொண்டத் தொகையில்:
நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலிவென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்!
ஒரு கதை சொல்வோம்:
காஞ்சிபுரம் அரண்மனை. பல்லவ மகாராணி வானவன் மாதேவி சோகத்துடன் இருந்தாள். அந்த பாண்டிய இளவரசி மாமல்லனைத் திருமணம் செய்து மகாராணி வானவன் மாதேவியாகி 10 ஆண்டுகள் அன்று நிறைந்திருந்தது. மகன் மகேந்திரன், மகள் குந்தவி குதூகலாமாக விளையாடிக் கொண்டிருந்தது கூட அவளது மனதைத் தூண்டவில்லை. மகேந்திரவர்மனின் ராணி புவனமகாதேவியின் முகத்திலும் கவலை படர்ந்திருந்தது.
சோழ நாட்டு இளவரசி மங்கையர்க்கரசி புவனமகாதேவியின் பாதுகாப்பில் அதே அரண்மனையில் இருந்தாள். அவளது வதனமும் வாடிக்கிடந்தது.
காரணம் – மாமல்லனும், அவனது மாபெரும் பல்லவ சைன்னியமும் அதற்கு முதல் நாள் தான் வாதாபி படையெடுப்பதற்காக காஞ்சியை விட்டுப் புறப்பட்டிருந்தது. இலங்கை இளவரசன் மாவீரன் மானவன்மன் காஞ்சியில் அவனது விருந்தினானாக இருந்தான். புறப்படுமுன் நரசிம்மன் மானவன்மனிடம்: “மானவன்மா இந்த காஞ்சி நகரையும், இந்த ராணிகளையும், இந்தக் காஞ்சி மக்களையும் உனது பாதுகாப்பில் விட்டு விட்டு செல்கிறேன். அந்த பாதுகாப்பின் போர்வையில் எனது வாதாபிப் பயணம் நடக்கும்.”
மானவன்மன் :”நண்பா! காஞ்சியைக் கண்ணைப் போலக் காப்பேன். கவலை கொள்ளற்க”
நரசிம்மன்: “நமது படையின் ஒரு பிரிவு காஞ்சியிலிருந்து அருகில் திருக்கழுக்குன்றத்தில் இருக்கும். தேவைப்பட்டால் அதை வரவழைத்துக் கொள். பாண்டியன் நெடுமாறன் மீது நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் ஆதரவற்றிருக்கும் காஞ்சி -அதைக் கவர்ந்து கொள் என்று பாண்டியன் மனதை அவனது சமண குருக்கள் கலைக்கக் கூடும்.”
வானவன் மாதேவி திடுக்கிட்டாள்.
தம்பி நெடுமாறன் அப்படியும் செய்வானோ?
மானவன்மன்: “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லு முன்
வானவன் மாதேவி: “அரசே .. அப்படி ஏதும் நடக்கத் தொடங்கினால் நான் என் தம்பியைக் கொன்று விடுவேன்”
நரசிம்மன் சிரித்தான்.
“மகாராணி.. நெடுமாறனை ஒன்றும் செய்து விடாதே! நான் பல்லவ மன்னனாக காஞ்சியைக் காக்கும் பொறுப்பினால் இப்படி பேசினேன்“
வெறிச்சோடிய அரண்மனையில் நெடுமாறன் பிரவேசித்தான்.
மங்கயற்கரசியின் வதனத்தில் ஒரு கணம் மகிழ்ச்சி. மறுகணம் பயம். இவன் காஞ்சியைத் தாக்க வந்தானா?
“நெடுமாறா? எங்கு வந்தாய்?” – வானவன் மாதேவியின் குரல் கடுமையானது.
‘அக்கா. காஞ்சியைக் கொள்ளையிடவே வந்தேன்!” -அவனது கண்கள் மங்கையற்கரசியைக் காதலுடன் நோக்கின.
வானவன் மாதேவி – அவன் பார்வையை சரியாகக் கவனிக்கவில்லை – அவளது தேகம் நடுங்கியது.
“துரோகி” – என்று கையில் குறுவாளை எடுத்து நெடுமாறனைக் குத்த பாய்ந்தாள்.
“என்ன அக்கா! இது விபரீதம்? என்னை ஏன் கொல்ல வருகிறாய்? நான் கொள்ளையடிப்பதாகச் சொன்னது – உனது தோழி மங்கயற்கரசியை தானே? மற்றும் மாமல்லர் படையெடுக்கச் சென்றபின் உங்களுக்கு உதவி வேண்டுமா என்று விசாரிக்கவே வந்தேன்”
வானவன் மாதேவி – பெருமூச்சுவிட்டாள்.
‘தம்பி .. என்னை மன்னித்து விடடா! உன்னைத் தவறாக எடை போட்டேன்!”
அன்றிரவு..
‘அக்கா. இந்நாளில் இந்த சரித்திரக்காலக் கட்டத்தில் ஒரே உறையில் பல கத்திகள் – இருக்கின்றன. ஹர்ஷன்- புலிகேசி- நரசிம்மன் பற்றும் நெடுமாறன்’ இதில் சில உரசல்கள் – சில ரத்தங்கள்.. பல அழிவுகள். எதிர்காலத்திலும் இப்படி கத்திகள் உரசும்.. அது பல்லவர் – பாண்டியராக இருக்கலாம். அதை நாம் கூறுவதற்கில்லை.. ஆனால் இன்று .. பாண்டிய – பல்லவர்கள் உன்னால் – சேர்ந்தே இருப்போம்.” – என்றான்.
அவன் வார்த்தைகள் பின்னாளில் பலித்தது.. அந்தக் கதைகளையும் சரித்திரம் பேசவுள்ளது..
(தொடரும்)
புத்தக வெளியீடு – “யாரோ” எழுதிய சரித்திரம் பேசுகிறது – இரண்டாம் பாகம்
குவிகத்தில் தொடர்ந்து வந்து கொண்டு பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டு வரும் திரு ‘யாரோ’ அவர்கள் எழுதிய “சரித்திரம் பேசுகிறது” என்ற தொடரின் இரண்டாம் பாகம் தற்போது குவிகம் பதிப்பகத்தின் சார்பில் புத்தகமாக வந்துள்ளது.
இதற்கான வெளியீட்டு விழா சென்னை 43 வது புத்தகக் கண்காட்சியில் 12.01.2020 அன்று நடைபெற்றது.
புத்தகம் வேண்டுவோர் அலைபேசி எண் 9442525191 இல் தொடர்பு கொள்ளவும்.
இந்தப்புத்தகத்தை அமெசான் கிண்டிலிலும் பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்.
இந்தமாத திரைக்கவிதை -பட்டுக்கோட்டையார் பாடல்
எம் ஜி ஆர் அவர்களது படத்தில் இசையும் பாடல் வரிகளும் இயல்பாகவே சிறப்பாக அமைந்துவிடும்.
இந்தப் பாடலில் பட்டுக்கோட்டையாரின் அழகான சித்தாந்தமும் தூக்கலாக இருக்கும்.
‘காடு வெளஞ்சேன்ன மச்சான் நமக்குக் கையும் காலும் தானே மிச்சம் ‘
ஒரு விவசாயியின் அவலத்தை ஒரே வரியில் சொல்லும் திறமை பட்டுக்கோட்டையாரைத் தவிர வேறு யாருக்கு வரும்?
எம் ஜி ஆருக்கேன்றே எழுதப்பட்ட முத்திரை வரிகள்:
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
விதி அனைவருக்கும் பொதுவானது. விதியை மதியால் வெல்லலாம் என்றும் சொல்வதுண்டு. ஆனால் இந்த விதி மதியால் வெல்லக்கூடியது என்ற ஒரு விதி இருந்தால்தான் அதை வெல்ல முடியும். சூரியன் உதிப்பது விதி . அந்தச் சூரியனையே பார்த்து நீ தோன்றாமல் போகக்கடவாய் என்று ஒருபெண் உத்தரவு பிறப்பிக்கமுடியும் என்றால் அது விதிக்கு உட்பட்ட செயலா? விதியை மீறிய செயலா?
சந்தியா சூரியனின் வெப்பத்தில் துடிக்கவேண்டும் என்பது விதியானால் அதை மாற்ற விஷ்வகர்மா என்ன மும்மூர்த்திகளாலும் முடியாது. ஆனாலும் மதியின் செயலே தனி. விதிக்கு உட்பட்டும் நடக்கும். விதியை மீறியும் நடக்கும். மதிக்கு பெரும்பாலும் விதியை மீறவேண்டும் என்ற தீராத ஆசை உண்டு.
விஷ்வகர்மா மாமதி படைத்தவர். புத்தியே சகல சக்தி என்பதை முழுதும் நம்புகின்றவர். அதைப் பல இடங்களில் நிரூபிக்கவும் செய்தவர். அதனால்தான் தான் மதியை நம்பி எப்படியாவது தன்மகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைக்கவேண்டும் என்பதில் துடியாக இருப்பவர்.
சூரியதேவனின் வெப்பம் தரும் ஒளியை விலக்கி அதன் மூலம் ஆயுதங்கள் செய்தால் அவனுடைய ஒளி குறையும். அதனால் வெப்பத்தைத் தணிக்க ஒரு நுண்ணறிவுடன் கூடிய ஊடகத்தை அவரால் படைக்க முடிந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு இருக்குமல்லவா? பூஜ்யம் முதல் எல்லையற்றதுவரை செயல்படும் கருவி இந்தப் பிரபஞ்சத்தில் யாராலும் படைக்கமுடியாது.
சூரியனை ராகு விழுங்கும்போது அவனுடைய ஒளிக்கதிரின் வீச்சு குறையும். ஆனால் ராகு தன்னைபிடிக்கும்படி ஒரு விதியை பிரும்மர் படைத்துவிட்டாரே என்பதில் அவனுக்குத் தாங்கமுடியாத கோபம் வரும். ராகுவின் பிடியில் சிக்கி மூன்றே முக்கால் நாழிகை கழித்து வெளியே வரும் சூரியனின் வெப்பம் வெகு அதிகமாக இருக்கும். அது தேவர்களை அதிகம் பாதிப்பதில்லை. மனிதர்கள் அதன் கொடுமையில் துடிப்பதுண்டு. பிறக்கும்போதே குறைபாட்டுடன் பிறந்த சந்தியாவால் அதைத் தாங்கும் சக்தி கொஞ்சமும் கிடையாது. சென்ற முறை செய்த காந்த சிகிச்சையின் போது ராகு பீடித்தாலும் அதன்பிறகு செய்த சாந்துக்குளியல் போன்றவற்றால் அவனுடைய அதீத வெப்பம் கட்டுக்குள் இறந்தது. சந்தியாவிற்கும் அதனால் அதிக பாதிப்பில்லை. அதனால்தான் அவள் அவனைத் தொடர்ந்து வரமுடிந்தது. அவனுடன் சூரியமண்டலத்திலிருந்து அவனுடன் உறவு கொள்ளவும் முடிந்தது. அதன் விளைவாக மூன்று குழந்தைகளுக்கும் தாயாக முடிந்தது.
ஆனால் குழந்தை பிறந்தபிறகு அவளுடைய சக்தி மேலும் குறைந்துவிட்டது.
தற்சமயம் சூரியனுடைய ஓளியிலிருந்து ஆயுதங்கள் செய்தபிறகு அதுவும் அந்த ஊடகம் படைத்த பிறகு சந்தியாவும் சூரியனும் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றனர்.
தினமும் சூரியதேவன் தான் அரண்மனைக்கு வரும்போது ஒளி வடிவம் கொண்டு அந்தக் கதவின் வழி வருவான். அவனுடைய அழகும் ஆற்றலும் குறையாமல் வெப்பம் மட்டும் குறைந்திருப்பதைக் கண்டு சந்தியா மகிழ்ச்சியில் திளைத்தாள்.
ஒரு மாத காலம்தான் இந்த மகிழ்ச்சி நீடித்தது.
சூரியனை ராகு பிடிக்கும் அந்த நாள் வந்தது.
அன்றைக்குத்தான் சூரியன் உலாவிற்குச் சென்றிருக்கும்போது பிரும்மரின் ஆணைப்படி சூரியமண்டலத்திலிருந்து திரிசூல ஆயுதத்தை எடுத்துச் செல்ல நந்தி தேவர் வந்தார்.
சந்தியா சூரியதேவன் இன்னும் சற்றுநேரத்தில் வந்து தனக்கு அளிக்கப்போகும் இன்பக்களிப்பை எண்ணி தன்னை மறந்து இருந்தாள். நந்தி தேவருக்குத் தர வேண்டிய மரியாதையைத் தரவில்லை. சற்று அலட்சியமாகவே திரிசூல ஆயுதத்தை எடுத்துச் செல்லும் படியும் கூறினாள் .
நந்திதேவர் ஓரளவு இதை எதிர்பார்த்திருந்தார். பிரும்மர் உத்தரவுப்படி திரிசூல ஆயுதத்தை எடுத்துச் செல்லும் போது அங்கிருந்த மாயா ஊடகத்தைக் கவனித்தார். அதில் திரிசூலத்தின் மூன்று முனைகளும் பதியுமாறு அழுத்தி எடுத்தார். ஊடகத்தில் கண்ணீர்க்குத் தெரியாத மூன்று நுண்ணிய துவாரங்கள் ஏற்பட்டன. அதன் நுண்ணறிவும் செயல் இழந்தது.
அன்றுதான் சூரியதேவன் ராகுவின் பிடியிலிருந்து மீண்டு அதிக கோபத்துடனும் தாபத்துடனும் சந்தியாவின் அறைக்குள் நுழைந்தான்.
சந்தியாவும் குழந்தைகளையெல்லாம் உறங்க வைத்து விட்டு காதல் தாபத்தில் அவனுடன் இறுக்கக் கலந்தாள் .
அடுத்தநாள் வரை அவர்களது இன்பக்காதல் தொடர்ந்தது.
சூரிய தேவன் புறப்பட்டுச் சென்று போன பிறகுதான் அவளுக்கு ஏதோ தவறு நடந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள்.
அவள் உடல் வெப்பத்தில் எரிந்து உருகி வழிவதை உணர்ந்தாள்.
ஊடகத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்களையும் கண்டாள்.
கதவிற்குக் கேடு வந்தால் அதைச் சரிப்படுத்தவே முடியாது என்ற தன் தந்தை கூறியது அவள் காதில் நாராசமாக ஒலித்தது.
சூரியதேவனுடன் தான் வாழும் வாழ்க்கைக்கு இறுதி மணி அடிக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்துகொண்ட அவளது கண்களில் கண்ணீர் பெருகியது. அதுவும் ஆவியாவதை உணர்ந்தாள்.
தன் விதி வேறு மாதிரி எழுதப்பட்டுவிட்டது என்பதை அவளின் மதி அறிந்து கொண்டது.
தன் தந்தையாலும் எதுவும் செய்யமுடியாது என்ற உண்மை அவளுக்கு நிதர்சனமாகத் தெரிந்தது.
இனி சூரியதேவனுடன் தான் இருக்க முடியாது என்ற எண்ணம் உடல் வெப்பத்தைவிட அதிகமாகச் சுட்டது.
தான் முழுதும் உருக்கிக் கரைந்து விடுவோமோ என்று பயந்தாள்.
அதற்கு ஒரே வழி இருந்தது.
அவளுக்கென்று விஷ்வகர்மாவால் அமைக்கப்பட்ட காட்டிற்குச் செல்லவேண்டும். சூரியனின் கிரணங்களே படாத கானகம் அது.
அங்கே உள்ள பொற்றாமறைக் குளத்தில் முழுகி இருக்கவேண்டும். ஆயிரம் ஆண்டுகள் அதிலிருந்தால்தான் அவளது உருக்கத் தொடங்கிய அவளது உடல் உருகுவதை நிறுத்தும் !
தனக்கு வேறு வழியில்லை. உடனே புறப்படவேண்டும்.
புறப்பட்டாள்.
குழந்தைகள் மூன்றும் ஒரே சமயத்தில் அழும் குரல் கேட்டது .
குழந்தைகளை அங்கு அழைத்தும் செல்லமுடியாது . சூரிய ஒளியின்றி அவை மாண்டு விடும்.
என்னசெய்வது என்று புரியாமல் பாசத்தினாலும் உருகித் தவித்தாள் சந்த்யா!
(தொடரும்)
இரண்டாம் பகுதி
நான்முகன் நான்கு முகங்கள் மூலமாக ஒரேசமயத்தில் பேசியது கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு வித்தியாசமாக இருந்தது. சரஸ்வதிதேவி மட்டும் தான் ஒன்று சொன்னால் இவர் ஒன்று சொல்கிறாரே என்று யோசித்துக் கொண்டிருந்தார். சத்தியலோகம் போன பிறகு தகறாறு வரத்தான் செய்யும் என்றும் எண்ணிக்கொண்டார். அதற்காக அவர் வருந்தவில்லை. தான் கல்விக்குஅதிபதி. தனக்குச் சரி என்று தோன்றும் கருத்தை சொல்லவேண்டும். மாற்றிச் சொல்லுதல் படித்தவருக்கு அழகல்ல என்பதில் உறுதியாக இருப்பவர்.
படித்தவன் பொய் சொன்னால் ஐயோன்னு போவான் என்று பாரதியை எழுத வைத்ததே அவர்தானே!
அடுத்து லக்ஷ்மிதேவி பேச எழுந்தார். பயங்கர கைதட்டல் பேச ஆரம்பிக்க முன்னாடியே. செல்வத்திற்கு அதிபதி அல்லவா? ஜால்ரா சத்தம் அதிகமாகவே கேட்டது.
எனக்கு சரஸ்வதிதேவி மாதிரி புள்ளி வைத்துப் பேசத்தெரியாது. பிரும்மர் மாதிரி பொடி வைத்தும் பேச வராது. என் கருத்து என்னவென்று தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். சொல்லவேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.
என் கணவர் எத்தனையோ அவதாரங்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொன்றிலும் சிலவற்றைப் படைத்திருக்கிறார். சிலவற்றைக் காத்திருக்கிறார். சிலவற்றை அழித்தும் இருக்கிறார். எது எப்படியிருந்தாலும் அவரது முக்கியப் பணி காத்தல் தான்.
அதுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்பது என் கருத்து.
வாழ்க்கை என்கிற வியாபாரத்தில் ஜனனம் என்பது வரவாகும். மரணம் என்பது செலவாகும். ஜனன மரண தத்துவத்தில் உடல் ஆக்கப்படுகிறது. உடல் அழிக்கப்படுகிறது. இந்த ஜனனம் மரணம் இரண்டுக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கை. அதில் வாழ உடலைப் பாதுகாத்தல் அவசியம்.
இன்னொன்று சொல்வேன். ஒரு காசு மாலையை எடுத்துக் கொள்ளுங்கள் ! எந்த இடத்தில் அதன் மதிப்பு தெரியவருகிறது? தங்கத்தை உருக்கி அந்த மாலையை ஆக்கும் போதா? அல்லது அது பழசாகிவிட்டது என்று அதனை உருக்கி மீண்டும் தங்கக் கட்டியாக மாற்றும் இடத்திலா? அல்லது கழுத்தில் அணிந்து அழகு பார்க்கும் இடத்திலா? அழகை வெளியே கொண்டுவருவது- அழகை அதிகரிப்பது இன்னும் சொல்லப்போனால் அழகைக் காப்பது அந்த காசு மாலை. அந்த வகையில் அழகுக்கு அழகு சேர்ப்பது காத்தல்தான்.
ஒரு குட்டி கதை சொல்றேன். ஒரு ராஜா தனக்குப் பின்னாடி தன் மூன்று பிள்ளைகளிலே பட்டத்து அடுத்த வாரிசு யார் என்பதைக் கண்டுகொள்ள ஒரு யோசனை செய்தாராம். தன் நாட்டுக்கு ஒரு நல்ல தலை நகரை நிர்மாணிக்கும் திட்டத்தைத் தயாரிக்கும்படி மூன்று பேரிடமும் கூறினாராம்.
முதல் மைந்தன் அமராபதி போன்ற புதிய நகரை புது இடத்தில் உருவாக்கும் திட்டத்தைக் கூறினான்.
இரண்டாம் மைந்தன் இருக்கும் தலை நகரை அழித்துவிட்டு புதிதாக மூன்று தலை நகர்களை உருவாக்கும் திட்டத்தைத் தீட்டினான்.
மூன்றாம் மைந்தனோ , ” தந்தையே ! தற்போது இருக்கும் தலை நகரையே நன்கு பராமரித்தால் அதுவே போதுமே ! எதற்காக புதிய நகரை நிர்மாணிக்கும் செலவை மக்கள் தலையில் போடவேண்டும்? ” என்று வினவினான்.
மூன்றாம் மைந்தன் அடுத்த வாரிசானான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
இதற்கு மேலும் காத்தல்தான் சிறந்தது என்பதை நான் சொல்ல வேண்டுமா? நீங்களே சொல்வீர்கள்! சொல்வீர்களா? ” என்று கூட்டத்தைப் பார்த்து இலட்சுமி தேவி இரு விரலைக் காட்டவும் , மக்களில் சிலர் ‘காக்கக் காக்க’ என்றும் சிலர் காக்கா காக்கா என்றும் கத்தினர்.
அந்தக் கத்தலுக்கு நடுவே புன்னகையுடன் மகாவிஷ்ணு பேச ஆரம்பித்தார்.
(தொடரும்)
ஷாலு மை வைப் -புத்தக வெளியீடு
குவிகம் இதழில் வந்த ‘ஷாலு மை வைப்’ என்ற நகைச்சுவைத் தொடர் தற்போது புத்தக வடிவில் வந்துள்ளது.
சென்னையில் நடைபெறும் 43 வது புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கிருபானந்தன் அவர்களால் வெளியிடப்பட்டது.
முதல் பிரதியை திருமலை அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்தப்புத்தகம் கிண்டிலில் E-BOOK ஆகவும் கிடைக்கிறது.
புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும் (9442525191)
இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்
அழகியசிங்கர்
நவீன விருட்சம் என்னும் காலாண்டு இதழை விடாப்பிடியாக 30 ஆண்டுகளுக்கு மேல் கொண்டுவருபவர். கவிதையில் தொடங்கி, கதை, கட்டுரை என்று பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வருபவர். எழுத்துலக ஜாம்பவான்கள் பலருடன் நெருங்கிப் பழகியவர். பெரும்பாலான இன்றைய எழுத்தாளர்கள் பலர் இவரது நண்பர்கள்.
சிக்கலில்லாத எளிய மொழி இவரது பலம். பெரும்பாலான கதையின் களங்கள் இவரது அன்றாட வாழ்க்கையிலிருந்தே இருப்பது வாடிக்கை.
கணையாழி குறுநாவல் போட்டிகளில் பரிசு பெற்றவர். எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாளர் , பேச்சாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர். கடந்த சில ஆண்டுகளாக எனது நெருங்கிய நண்பர்.
இவரது தவறு என்னும் கதை இப்படித் தொடங்குகிறது….
பத்மாவைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்யாணம் செய்து கொண்டு அவளுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்று தோன்றியதில் வியப்பேதுமில்லை.
ஒரு சிறுபத்திரிகை நடத்தும் சங்கர், பல பிரிவுகள் கொண்ட தனது அலுவலகத்தில் மற்றொரு பெண்ணைச் சந்தித்த தருணம் அது. அந்தச் சமயம் இவரது கதை ஒன்றையும் குறிப்பிட்டு ‘நன்றாக இருந்தது’ என்று சொல்கிறாள்.
பிறகு ஒருநாள் தனது விடுப்புகோரும் கடிதத்தை சங்கரின் வீட்டுக்கு வந்து கொடுக்கிறாள். கூடவே பணிப்பெண்ணும் வந்தது ஒரு ஜாக்கிரதை உணர்வாக இருக்குமோ? பத்மா அவள் எழுதிய கதையொன்றைக் கொடுத்து சங்கரை அபிப்பிராயம் கேட்கிறாள்.
சில நாட்கள் கழித்து அந்தக் கதையினைப் பற்றி கருத்து தெரிவிக்க ஒரு ஓட்டலுக்கு காப்பி அருந்த அழைக்கிறார் சங்கர். தயக்கத்துடன் பத்மா ஒப்புக்கொள்கிறாள்.
எங்கள் அலுவலகக் கட்டிடத்திற்கு எதிரிலிருந்தது அந்த ஓட்டல். ஓட்டலில் தனி அறையில் நாங்கள் இருவரும் சென்றமர்ந்தோம். அவள் இயல்பாக இல்லை என்பதோடல்லாமல், நானும் இயல்பாக இல்லை என்பதை உணர்ந்தேன்.
கதை சுமாராக இருப்பதாச் சொல்லிவிட்டு அதற்காக வருத்தப்படுகிறார் சங்கர். ஒரு கதையை இன்னும் திறன்பட கணிக்க எனக்கு அனுபவமில்லை என்று சொல்லிச் சமாளிக்கிறார்.
நகரின் ஒரே பகுதியில் வசிக்கிறார்கள். கடைக்குப் போய்வரும்போது பத்மாவின் வீட்டு வாசலில் அவளைப் பார்க்கிறார். இருவரும் ஒன்றாக கணினிப் பயிற்சி மையத்தில் சேருகிறார்கள்.
தினமும் அவள் வகுப்பிற்குச் செல்லும் நேரத்தை அறிந்து அவள் வீடு இருக்கும் தெருமுனையில் சந்திப்பதுபோல் வருவேன். பிறகு இருவரும் ஒன்றாகச் செல்வோம். சில நாட்களில் நான் வருவதை அவள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
திடீரென ஒரு திருப்பம். பத்மாவிற்கு கல்யாணம் நிச்சியமாகிறது.
பத்மாவின் தாய் இவரை வீட்டிற்கு அழைக்கிறாள். அவள் அம்மா ஒரு புகைப்பட ஆல்பத்தைக் காட்டுகிறாள். அதில் ஒல்லியாக உயரமாகத் தென்படும் பத்மா ‘பார்க்க சகிக்கவில்லை’ என்று தொடருகிறது இவருக்கு. காப்பி கொண்டு வருகிறாள் பத்மா.
இழந்தது இழந்ததுதான். அவளிடம் எனக்கிருந்த ஈடுபாட்டைக் குறிப்பால் கூட உணர்த்தாமல் போய்விட்டேன். இத்தனை நாட்கள் பழக்கத்தில் அவளாவது உணர்த்தியிருக்கலாம் என வருந்துகிறார் சங்கர்.
அழைக்கப்பட்ட நோக்கம் தெரிய வருகிறது
“ரெண்டு பேரும் சேர்ந்து சொசைட்டியில் மெம்பர் ஆனா, ஒருத்தருக்கொருத்தர் சொசைட்டி மூலம் கிடைக்கிற பணத்துக்குப் பொறுப்பேத்துக்கலாம்…. இரண்டு பேரும் ஒரே ஆபீஸிலே இருக்கிறதனாலே இது செளகரியம்”
பின்னால் தெரிவிப்பதாகக்கூறி விடைபெறுகிறார்.
வீட்டில் உள்ளவர்கள் இதுபோன்ற ஏற்பாட்டுக்கு இசையவில்லை. இதனை பத்மா தன் திருமண அழைப்பினை கொடுக்கும்போது தெரிவித்துவிடுகிறார்.
திருமணம் இவர்கள் வசிக்கும் பகுதியில்தான். வீட்டைவிட்டு சற்று முன்னதாகவே கிளம்பி, திருமணத்திற்குச் சென்றுவிட்டு அலுவலகம் போகத் தீர்மானிக்கிறார். அலுவலகத்திற்கு சற்று தாமதமாக வர ‘பெர்மிஷன்’ பெற்றுக்கொள்கிறார்.
திருமண மண்டபத்தில் கூட்டமில்லை. ஒருவர் இவரை டிபன் சாப்பிட மாடிக்கு அழைத்துச் செல்கிறார்.
இந்த கல்யாணத்தின்போது எனக்குள் ஏற்பட்ட மனநிலையின் போக்கை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. எனக்கும் பத்மாவிற்கும் ஏற்பட வேண்டிய திருமணம், அப்படி நடக்காமல் போனதால், ஏமாற்றம் தரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டதாக எனக்குத் தோன்றியது. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தாலும், சாதாரணமாக திருமணம் எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் நான் எதையோ எதிர்பார்த்து பழகக்கூடிய பத்மாவாக அவள் எப்படி மாற முடியும்….. ? நான் கடன் தர இயலாது என்று கூறியதிலிருந்து, அவள் போக்கில் தென்பட்ட மாறுதல்கள், என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டன. அவளுக்காக, அவள் எனக்கில்லை என்று ஆனபிறகு, என்னிடமிருந்து இயல்பாக கழன்று கொண்டாள்.
கீழே வந்ததும்தான் ஒரு விஷயம் தெரிகிறது. இது பத்மாவின் திருமணம் நடக்கும் மண்டபம் அல்ல. அந்தத் தெருவில் மற்றுமொரு புதிய மண்டபம் வந்திருப்பதும் அதில்தான் பத்மாவின் திருமணம் என்பது சங்கருக்குத் தெரியாது போய்விட்டது.
ஒருவழியாக சரியான மண்டபத்திற்கு போகிறான் சங்கர்.
கூட்டத்தை விலக்கிக்கொண்டு, பத்மாவின் முன் போய் நின்றேன். அவள் கணவரை எனக்கு அறிமுகப் படுத்தினாள். நானும் சிரித்தபடியே, அவர் கையைப் பிடித்துக் குலுக்கினேன். இந்த உயரமான தோற்றத்தில் பத்மாவிற்குப் பட்டுப் புடவை கச்சிதமாக இருப்பதுபோல் உணர்ந்தேன். என் பின்னாலிருந்து யாரோ என்னைத் தள்ளாதகுறையாக, பத்மாவை வாழ்த்திச் சிரிப்பது என் காதில் விழுந்தது. பத்மாவின் கவனத்திலிருந்து, நான் அப்புறப்படுத்தப் பட்டேன். யாரிடமும் சொல்லாமல், நான் அங்கிருந்து நகர ஆரம்பித்தேன். யாரும் என்னை சாப்பிட உபசரிக்கவில்லை. பத்மாவின் அம்மா யாருடனோ பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பார்வையில் தென்படும்படியாக, நான் இருந்தாலும், அவளுக்கு என் ஞாபகம் வராது. மண்டப வாசலுக்கு வந்தவுடன், யாரோ பை கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு வேகமாக அலுவலகம் நோக்கி நடையைக் கட்டினேன்.
என்று கதை முடிகிறது.
மண்டபம் மாறிப்போன குழப்பம் கதையின் இறுதில் வந்தாலும், கதையின் க்ளைமாக்ஸ், விருப்பத்தை ஒருவர் மற்றவருக்குத் தெரிவிக்காததை விவரிக்கும் ஒரு சில வரிகள் எனத் தோன்றுகிறது.
முப்பது ஆண்டுகளாக கதைகள், கட்டுரைகள், கவிதைகள் கிட்டத்தட்ட 30 புத்தககங்கள் வெளியாயிகி உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கவிதைகளும் கதைகளும் இரு முழுத் தொகுப்புகளாக வெளிவந்து நல்ல கவனத்தைப் பெற்றுள்ளன. இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார்.
ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் புத்தகம் அறிமுகம்
குவிகத்தில் தொடராக வந்த ‘ஊமைக்கோட்டான் என்கிற ஞானபாண்டிதன்’ என்ற நாவல் புத்தக வடிவில் புத்தகக்கண்காட்சியில் 12.01.2020 அன்று திரு சங்கர் ராமசாமி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது .
எழுதியவர் புலியூர் அனந்து அவர்கள்
இது ஒரு குவிகம் பதிப்பகத்தின் வெளியீடு
இப்புத்தகம் பற்றிய அறிமுகத்தின் வீடியோ தொகுப்பு மேலே !
இந்தமாத ஆடியோ- தென்கச்சி கோ சுவாமினாதன் உரை
தென்கச்சி சுவாமினாதனின் மெலிய நகைச்சுவைப் பேச்சைக் கேட்போமா?
டாக்டர் ஜெ பாஸ்கரின் கடைசிப்பக்கம் புத்தக வெளியீடு
குவிகத்தின் கடைசிப்பக்கத்திற்கு எப்பொழுதும் கிராக்கி அதிகம்.
டாக்டர் ஜெ பாஸ்கரன் அவர்கள் எழுதுவதால் அதற்கு ஒரு சிறப்பான நட்சத்திர அந்தஸ்து வந்துவிட்டது.
மூன்று வருடங்களாகக் கடைசிப்பக்கத்தில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு தற்போது புத்தக வடிவில் வந்துள்ளது.
அதற்கான வெளியீட்டு விழா ஆழ்வார்ப்பேட்டை ராஜ் பேலஸில் ஒரு குதூகலமான விழாவாக நடைபெற்றது.
பிரபல எழுத்தாளர் மாலன், கல்கி ஆசிரியர் வி எஸ் வி ரமணன், நாடக ஆசிரியர் ஜெயராமன் ரகுனாதன் , குவிகம் இரட்டையர்களான சுந்தரராஜன் – கிருபானந்தன் இவர்கல் வாழ்த்துரையுடன் நடைபெற்றது.
திரு மாலன் அவர்கள் வெளியிட்டார்.
டாக்டர் ஜெ பாஸ்கர் எற்புரை வழங்கினார்.
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
திரு ஶ்ரீதர் – பரணீதரன் – மெரீனா
ஒருவரே பல துறைகளில் வித்தகராக இருக்கமுடியுமா? முடிந்திருக்கிறது ! பரணீதரன் என்ற பெயரில் ஆன்மீக எழுத்தாளராகவும், மெரீனா என்ற பெயரில் நாடகங்கள், கதைகள், கட்டுரைகள் எழுதுபவராகவும், ஶ்ரீதர் என்ற பெயரில் கார்டூனிஸ்ட்டாகவும் தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ‘சீடி’ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட திரு ஶ்ரீதர் அவர்கள்.
எழுபதுகளில் ஆனந்த விகடன் அட்டையிலும், உள்ளே ஜோக்குகளாகவும் அவரது கார்ட்டூன்கள் மிகவும் பிரபலமானவை. காஞ்சி மகாப்பெரியவாளின் பரிபூரண ஆசியுடன், இவரது பக்திப் பயணக் கட்டுரைகள் – அருணாசல மகிமை, ஆலய தரிசனம் (246 புண்ணியத் தலங்கள் பற்றிய கட்டுரைகள்) – மற்றும் அன்பே அருளே (பரமாச்சாரியருடனான அனுபவங்கள்), மகாத்மாவின் மனைவி (கஸ்தூரிபா காந்தி வாழ்க்கை வரலாறு), சின்ன வயதினிலே (தன் வாழ்க்கைக் குறிப்புகள்) போன்றவை எல்லோராலும் விரும்பி வாசிக்கப் பட்டவை!
ஆனந்தவிகடனில் தொடராகவும், பின்னர் நாடகமாகவும் மேடையேற்றப் பட்ட தனிக்குடித்தனம் (1969), ஊர் வம்பு, கால் கட்டு, மாப்பிள்ளை முறுக்கு, கூட்டுக் குடித்தனம், சாமியாரின் மாமியார் போன்றவை மத்திய வர்க்க பிராம்மணக் குடும்பங்களின் வாழ்க்கையை நகைச்சுவையுடனும், சுய எள்ளலுடனும் எழுதப்பட்டவை – சாகா வரம் பெற்றவை! சென்னைத் தமிழில் எழுதப்பட்ட வடபழனியில் வால்மீகி, ஸ்வீகாரம் போன்ற புதினங்களும் மெரீனாவின் பன்முகத் தன்மை கொண்ட எழுத்துக்கு சான்றுகள்.
ஶ்ரீதர் டிசம்பர் 25, 1925ல் பிறந்தார். தனது குடும்பசூழல் காரணமாக, திருமணம் செய்துகொள்ளாமல், குடும்பத்திற்காகவே வாழ்ந்தார். 1947ல் வணிகவியலில் பட்டம் பெற்றார். அப்போதே கார்ட்டூன்கள் வரையத் தொடங்கியவர், ரிசர்வ் வங்கியில் கிடைத்த வேலையை ஒதுக்கி விட்டு, தன் மனதுக்குப் பிடித்த கார்ட்டூனிஸ்ட் வேலையைச் செய்தார்! ‘சீலி’ என்ற பெயரில் சுதேசமித்திரனில் ஓவியங்கள் வரைந்தார்.
ஶ்ரீதர் அவர்களின் தகப்பனார் திரு சேஷாசலம் (அம்மா – ருக்மணி), தமிழில் ர்’கலாநிலையம்’ என்ற இலக்கியப் பத்திரிகையை (1928 – 1935) நடத்திவந்தார். கம்பன், ஷேக்ஸ்பியர் காவியங்களை நாடகமாக்கினார். பள்ளிச் சிறுவனாக இருக்கும்போதே, ஶ்ரீதர், வீட்டில் நடக்கும் நாடக ஒத்திகைகளைப் பார்த்து, வசனங்களை மனப்பாடமாகச் சொல்வாராம் – நாடகங்கள் நடக்கும் போது, வசனங்களை ‘ப்ராம்டிங்’(வசனம் மறந்து விட்டால் பின்னாலிருந்து எடுத்துக் கொடுப்பது!) செய்வாராம் – பின்னாளில் நாடகங்கள் எழுதவும், இயக்கவும் இந்த அனுபவமே அத்திவாரமாக இருந்திருக்கலாம்!
ஆனந்த விகடனில் வாசன் அவர்களால் ஆசிரியர் குழுவில் இணைந்தார். 1968 முதல் 1985 வரை அவர் ஆ.வி யில் பணி புரியும்போது ஏராளமாக எழுதினார். தான் பயணித்த பல புண்ணிய ஸ்தலங்களின் புராணங்களைப் பற்றி பரமாச்சாரியாரின் ஆசிகளுடன் எழுதிய தொடரே ‘ஆலய தரிசனம்’. கோல்கொண்டா, ஷீர்டி, பண்டரீபுரம், ஹிமாலயாஸ், கோமுக், பத்ரிநாத், கேதார்நாத், வாரணாசி-ராமேஸ்வரம், கேரளா, கர்நாடகா கோயில்கள் என இவர் பயணித்து எழுதிய பக்திப் பயணக் கட்டுரைகள், பக்தி இலக்கியத்தில் ஓர் ஆவணமாகக் கொள்ளத்தக்கவை.
பரமாச்சாரியார் மீது கொண்ட பக்தியும், அன்பும் அவரை ‘அன்பே அருளே’ என்ற புத்தகத்தை எழுத வைத்தன. அதில் அவர் தனது பரமாச்சாரியாருடன் ஆன ஆன்மீக அனுபவங்களையும், நிகழ்வுகளையும் பக்திப் பரவசத்துடன் எழுதியிருப்பார். வாசிப்பவர்கள் நெகிழ்ந்து, கண்ணீர் மல்க அந்தப் பரவச நிலையை அடைவார்கள் – அது பரணீதரனின் எழுத்தின் வலிமை! பரமாச்சாரியருக்கும், பரணீதரனுக்கும் இடையே இருந்த பந்தம் இறைவன் அளித்த வரம் என்றால் அது மிகையில்லை!
மேலும், சேஷாத்ரி சுவாமிகள் வாழ்க்கை, பாடகாச்சேரி சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் பற்றிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். காளிதாசனின் ரகுவம்சம், ஆர் கே நாராயணனின் கைடு, ஸ்வாமி & ஃப்ரெண்ட்ஸ் போன்றவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் – (பிரபல எழுத்தாளர் ஆர் கே நாராயணன், கார்டூனிஸ்ட் ஆர் கே லக்ஷ்மண் – இவருடைய் கசின்ஸ் என்பது உபரிச் செய்தி!)
SIX MYSTICS IN INDIA – இவரது ஆங்கிலப் புத்தகம்.
ஆனந்த விகடனில் பணிபுரியும்போது, பல ஆன்மீகத் தலைவர்களுடனும், காமராஜ், ராஜாஜி போன்ற அரசியல் தலைவர்களுடனும், நடிகர் சிவாஜி, இயக்குனர் கே.பாலச்சந்தர் போன்ற கலைஞர்களுடனும் ஏற்பட்ட தொடர்பு, பல அனுபவக் கட்டுரைகள் எழுதக் காரணமாயின.
மெரீனா என்ற பெயரில் அவர் எழுதிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை – ஒவ்வொரு நாடகமும் நூறு முறைக்கு மேல் மேடையேற்றப் பட்டவை! பூர்ணம் விஸ்வநாதன், கூத்தபிரான் ஆகியோரின் நடிப்பா, மெரீனாவின் வசனங்களா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு கலாநிலையம் வழங்கிய நாடகங்கள் வெற்றி பெற்றன. பயணங்களில் சந்தித்தவர்கள், நாடகப் பாத்திரங்கள் ஆனார்கள்! இயல்பான வசனங்கள், நடிப்பு இவற்றால், நாடகம் பார்க்கும் உணர்வே இருக்காது. நாமும் அந்த வீட்டிலேயே இருந்து நடப்பவைகளைப் பார்ப்பது போல இருக்கும் – நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, மாமியார், நாத்தனார், ஓர்ப்படி என பாத்திரங்களுடன் நாமும் ஒன்றிவிடுவோம்!
‘கஸ்தூரி திலகம்’ நாடகம் போடும்போது, நடிகர் ஆர் எஸ் மனோகர் உதவியுடன், மேடையில் ஒரு ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் செட் போட்டுக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி சாதனை புரிந்துள்ளார்.
1985 வைகுண்ட ஏகாதசி அன்று, 25 மணி நேரங்களில், தன்னுடைய 11 நாடகங்களைத் தொடர்ச்சியாக நடத்தியிருக்கிறார்! நாடகங்களுக்கிடையே இன்டெர்வெல் -30 நிமிடங்கள்!
1991 – சாமியாரின் மாமியார் நாடகத்தை, இரண்டு இடங்களில், இரண்டு குழுக்களுடன் ஒரே சமயத்தில் அரங்கேற்றியிருக்கிறார்!
1994 ல், ‘எங்கம்மா’ என்னும் இவர் நாடகம், பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, எல்லா ரேடியோ நிலையங்களிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பப்பட்டது! –
தாணு, ராஜு போன்றவர்களின் கார்ட்டூன்களினால் ஈர்க்கப் பட்டு, தன்க்கென ஒரு பாணியைக் கடை பிடித்தார் ஶ்ரீதர். சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை ஶ்ரீதருடைய கார்டூன்கள்.
ஶ்ரீதர் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில், திருப்பூர் கிருஷ்ணன், கார்டூனிஸ்ட் கேசவ், ஆ.வி. ஶ்ரீனிவாசன், கிருஷ்ணகான சபா பிரபு, காத்தாடி ராமமூர்த்தி, பத்மா சுப்ரமணியம், நல்லி செட்டியார், பாரதி பாஸ்கர் ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிந்து கொண்டார்கள். மிகவும் ஆத்மார்த்தமாக நடந்த, நெகிழ்ச்சியான நிகழ்வு.
எல்லா பாராட்டுக்களிலிருந்தும் ஒதுங்கியே இருந்தவர் ஶ்ரீதர். மிகவும் வற்புறுத்தி வழங்கப்பட்ட ‘நாடக சூடாமணி’ விருது பற்றி கிருஷ்ண கான சபா பிரபு சொன்னார்.
‘சிறந்த ஆன்மீக எழுத்தாளர்’ ஒருவருக்கு பரணீதரன் பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் கிருஷ்ணன் முன் வைத்தார். ஆனந்த விகடன் ஶ்ரீனிவாசன், சக்தி விகடன் மூலம் ஒரு விருது வழங்குவத்ற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதி அளித்தார்.
பன்முகத் தன்மையுடன், ஒருவரால் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று வியப்பாக இருக்கிறது – பரமாச்சார்யாரின் அசியும், இறைவன் அனுக்ரகமும் பெற்ற இவர் ஓர் அவதார புருஷர் தான்!