Daily Archives: March 16, 2020
நோ பேங்க் – சந்திரமோகன்

அவள் வந்தாள்! – தில்லைவேந்தன்

சரித்திரம் பேசுகிறது – யாரோ
ராஜசிம்மன்
‘புத்தன் வந்த திசையிலே போர்’- என்றான் ஒரு கவிஞன். இந்திய சரித்திரத்தின் ஒவ்வொரு ஏட்டிலும் – போர் தனது வாளால் எழுதிய ரத்தக்கறை! சென்ற இதழில் சாளுக்கிய விக்ரமாதித்யனும் பல்லவ பரமேஸ்வரனும் அடித்துக்கொண்டதைப் பார்த்தோம். கி பி 680 ல் இந்த இருவரும் ஒரே வருடத்தில் காலமானர். அதற்குப் பிறகு நடந்ததைப் பார்ப்போம்.
சாளுக்கிய கதை:
விக்ரமாதித்யன் மகன் வினயாதித்யன் கி பி 681 முதல் 696 வரை சாளுக்கிய அரசை ஆண்டான். வினயாதித்யன் மகன் விஜயாதித்யன். வினயாதித்யன் வட இந்தியாவில் ஒரு படையெடுத்து வென்றான். அந்தப் போரில் இளவரசன் விஜயாதித்யன் சாகசங்கள் செய்திருந்ததான். விஜயாதித்யன் கி பி 696 முதல் 733 வரை அரசாண்டான்- 37 வருடம்! அவன் காலம் அமைதிக் காலம். அதனால் நாட்டில் செல்வம் கொழித்தது. ஆலயங்கள் பல எழுப்பினான்.
பல்லவர் கதை:
பரமேஸ்வரன் கி பி 680ல் காலமானான். அவன் மகன் யுவராஜா ராஜசிம்மன் மன்னனானான். இவனும் கி பி 720 வரை அரசை ஆண்டான். நாற்பது வருடம்!
வினயாதித்யன், விஜயாதித்யன் அதே நேரம் சாளுக்கிய நாட்டை ஆண்டனர். இவன் காலமும் பொதுவாக அமைதிக் காலம். ஆலயங்கள் பல எழுப்பினான். அழகிய கைலாசநாதர் ஆலயம் எழுப்பினான். மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் அமைத்தான். இலக்கியம் வளர்த்தான். மகா கவி தண்டி அவன் அரசவையை அலங்கரித்தார். அவர் ராஜசிம்மனின் ஆசிரியர். பாண்டிய நாடும் அமைதியாக இருந்தது. தென்னிந்தியா ஒரு அமைதிப்பூங்கா ஆயிற்று.
இப்படி அமைதியாயிருந்தால் ‘சரித்திரம் பேசுகிறது’ எழுதுவதற்கு சமாச்சாரம் எங்கே?
‘ஒய் திஸ் கொலவேரி’ – என்று தானே கேட்கிறீர்கள்?
நாம் என்ன செய்வோம்? நமக்கு வேண்டியது சுவாரஸ்யமான கதை.
ராஜசிம்மனும் , விஜயாதித்யனும் பொட்டு வைத்துக்கொண்டு பொங்கல் சாப்பிட்டார்கள் என்று கதை சொன்னால் நீங்கள் அடிக்கவருவீர்கள்!!
அந்த அமைதிக்கு முன் ஒரு சிறு கதை விரிகிறது.. (ஆமாம் போர் தான்!):
வினயாதித்யன், ராஜசிம்மன் இருவரும் ஒரே நேரம் அரசனாகினரல்லவா?
வினயாதித்யன் தந்தை விக்ரமாதித்யன் – தன் தந்தை புலிகேசி அழிக்கப்பட்ட அவமானமும், பரமேஸ்வரனிடம் தான் பெற்ற சில தோல்விகளும் -மனதை அரித்திருந்தது. சாகும் தருணம்: “வினயாதித்யா .. இந்தப் பல்லவனைப் பழி வாங்கினால் தான் என் கட்டை வேகும்” – என்றான்.
சாளுக்கியத்துக்கும் பல்லவத்துக்கும் இடையே இருந்தது கங்க நாடு. வினயாதித்யன் முதலில் கங்கபாடியைத் தாக்கினான். கங்கன் முதலாம் சிவமாறனை தோற்கடித்து பிறகு ராஜசிம்மனை தாக்கினான். போர் கடுமையாக நடந்தது. போரில் ஒரு முடிவும் ஏற்படாமல் முடிந்தது. இரு தரப்பினரும் தங்கள் தங்கள் தலைநகருக்கு திரும்பினார்கள்.
பல்லவ நாட்டில் மழை பெய்யவில்லை. கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. கஜானா – மூலபண்டாரம் – வற்றியது. பஞ்சத்தால் காஞ்சிபுரம் பொலிவிழந்தது. கவி தண்டி , மற்றும் அரசவை அறிஞர்களும் காஞ்சி விட்டு நாடெங்கும் திரிந்தனர். ராஜசிம்மனும் சில காலம் காஞ்சி நகர் துறந்தான். மூன்று வருடம் பஞ்சம். ராஜசிம்மனும் காஞ்சி வந்தான். ஒரு நாள் புத்த துறவி ஒருவர் காஞ்சிக்கு வந்தார். அவரது பெயர் வச்சிரபோதி.
ராஜசிம்மன்: “துறவியே! மழை வருமாறு தாங்கள் இறைவனை வேண்டுங்கள். மற்ற சமயக் குறவர்களும் தங்கள் இறைவனை வேண்டுங்கள்”. வேண்டுதல் பலனளித்தது.
வானம் கண்ணீர் விட்டது. பல்லவ நாடு மகிழ்ந்தது. ஒரு வருடத்தில் நாடு செழிப்பானது. ராஜசிம்மன் உடனே கைலாசநாதர் ஆலயம் கட்ட ஆரம்பித்தான். சில வருடம் கழிந்தது. கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டு முடிந்தது.
ராஜசிம்மன் அரசகுருமார்களை சந்தித்து கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தான். பூசலார் என்ற நாயன்மார் – திருநின்றவூரில் -தானும் சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது முடியாமல் போகவே – தனது மனத்திலேயே ஆலயம் கட்டி – அதற்குக் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்தார். ராஜசிம்மன் குறித்த அதே நாள்! ராஜசிம்மன் கனவில் சிவன் தோன்றி “பூசலார் கட்டிய கோவிலில் அன்று எழுந்தருளுவோம். உனது கும்பாபிஷேகம் செய்ய வேறு நாள் பார்த்துக்கொள்” என்று கூறி மறைந்தார்.
ராஜசிம்மன் திருநின்றவூர் சென்று பூசலாரை சந்தித்து “ஐயா! உங்கள் கோவில் எங்குள்ளது? அதைக் காட்டுங்கள்” -என்றார். பூசலார் திகைத்தார். தமது வரலாற்றை மன்னனிடம் கூறினார். ராஜசிம்மன் தனது கனவைப் பற்றிப் பூசலாரிடம் சொன்னார்.
அகக்கோவில் கட்டிய அன்பருக்கு வணக்கம் செலுத்தி மீண்டான்! (நன்றி: பெரியபுராணம் எழுதிய சேக்கிழார்).
சில வருடங்களுக்கு அமைதி நிலவியது. ஆனால் நீறு பூத்த நெருப்புப்போல பகை (யுத்தங்கள் தான் வேறென்ன) அடுத்த தலைமுறையில் தொடரும். ஆவலுடன் காத்திருக்கும் வாசக நண்பர்களே.. விரைவில் சந்திப்போம்.
அம்மா கை உணவு (25) – சதுர்புஜன்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
- ஊறுகாய் உற்சாகம் – மே 2019
- பூரி ப்ரேயர் – ஜூன் 2019
- இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
- வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
- வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
- சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
- அவியல் அகவல் நவம்பர் 2019
- சாம்பார் சக்தி டிசம்பர் 2019
- உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
- சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
- துவையல் பெருமை !
துவையல் எனில் எனக்கென்றும் கொண்டாட்டம்தான் –
தஞ்சாவூர்க்காரன் நல்ல சுவையறிந்தவனாம் !
கரணம் தப்பினாலே மரணம்தானே !
நல்ல துவையல் செய்வதுவும் வித்தை தானே !
ஏனோ தானோ என்றெல்லாம் செய்தால் வராது –
போடுவதை போட்டால்தான் துவையல் சுவைக்கும் !
அளவு விகிதம் அத்தனையும் அத்துப்படி ஆனா –
துவையல் சுவை நாவினிலே நற்றமிழாகும் !
உப்பு மிளகாய் புளியை வைத்து எவரும் அரைக்கலாம் –
அத்தனையும் ஒற்றுமையாய் சேர்ந்து வரணுமே !
துவையல் கலையை கற்றுவிட்டால் சமையல் ராணிதான் –
மற்றதெலாம் தானே வரும் எளிதில் கூடுமே !
தேங்காய்த் துவையல் துவையல்களின் தலைவனாகுமே !
அதிலுள்ள தங்க ருசி தரணியில் இல்லை !
பருப்புத் துவையல் பந்து பந்தாய் உண்போம் நாமே !
மிளகு ரசம் கூட வேண்டும் முடிவில்லாமலே !
வெங்காயத் துவையல் வாசம் – வாயிலே ஊறும் !
விழுங்கத் தோணும் சுடச் சுட சாதம் சேரும் !
கத்திரியை நன்கு சுட்டால் நாசியைத் தாக்கும் !
துவையலரைத்து வெட்டும் போது இன்னும் கேட்கும் !
செரிமானம் சரியாக இஞ்சித் துவையல் !
வாயில் ருசி மீண்டும் வர புதினாத் துவையல் !
சாத்வீகம் கூடும்போது கொத்தமல்லியாம் –
எந்தக் காயின் தோலினையும் துவையலாக்கலாம் !
எந்த ஊரு போனாலும் இதுபோல் இல்லை !
அன்னை செய்த துவையலைப் போல் எதுவும் இல்லை !
எதனைப் போட்டு அரைத்தாலும் இதன் சுவை வருமா ?
அன்னை காட்டும் அன்பைப் போல் எதுவும் வருமா ?
என்ன பிடிக்கும் ? வாட்ஸ் அப்பில் வந்தது
மனதைத் தொடும் கதை.
வாட்ஸ் அப்பில் வந்தது
எழுதியது யார் என்று தெரியவில்லை
யாராயிருந்தாலும் அவர் நம் பாராட்டுக்குறியவர்.
என்ன பிடிக்கும் ?
“அண்ணா, டாக்டர்ஸ் என்னதான் சொல்றாங்க?” ராதுவின் குரலில் பதட்டம்.
” அதேதான்மா. அப்பாவுக்கு ஹார்ட் பம்பிங் ரேட் ரொம்ப குறைச்சலா இருக்கு. ஏற்கெனெவே ரெண்டு சர்ஜரி ஆனதால இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. முடிஞ்ச அளவு மருந்து கொடுத்தாச்சு. இருக்கற வரைக்கும் அவரை சந்தோஷமா வச்சிக்குங்கன்னுதான் சொல்றாங்க”.
” இப்போ அப்பா எப்படி இருக்கார்?”
“நார்மலா எப்பவும் போலதான் இருக்கார். இந்த நிமிஷம் வரை பைன்”.
” அண்ணா, நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நான் பசங்களை கூட்டிட்டு இன்னும் ரெண்டு நாள்ல வரேன். நீ ரகு அண்ணாவையும் எல்லோருடனும் வரச்சொல்லு. எல்லாருமா சேர்ந்து அப்பாவோட நாலு நாள் இருக்கலாம். “
” சரிடாம்மா . நான் அவன்கிட்ட பேசறேன்.”
” அம்மாவுக்குத் தெரியுமா?”
” தெரியாது. ஹாஸ்பிடல் போனோம். சரியாகி வந்துட்டார்னுதான் நினைச்சிண்டு இருக்கா”.
” அப்படியே இருக்கட்டும். அம்மாவை கவலைப்படுத்த வேண்டாம்”.
” சரி, நீ டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லு. நான் காரை எடுத்துண்டு ஸ்டேஷனுக்கு வரேன்”.
சாப்பிடும்போது அம்மாவிடமும் அப்பாவிடமும் ராதுவும் ரகுவும் வருவதைப் பற்றி சொன்னான் ரவி. அவ்வளவுதான், அம்மாவுக்கு இரண்டு இறக்கை முளைத்த மாதிரி ஆகி விட்டது. அப்பாவின் மலர்ந்த முகம்தான் அவருடைய சந்தோஷத்தின் அறிகுறி.
” எனக்கே ஒரு வாரமா அவா ரெண்டு பேரையும் குழந்தைகள் எல்லாரையும் பார்க்கணும்னு ஒரு நினைப்பு. நல்லதாய் போச்சு. கொஞ்சம் சாமான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன். நீ சித்த போய் மெஷின்ல அரைச்சுண்டு வந்துடு. குழந்தைகளுக்கு கொஞ்சம் பட்ஷணம், அப்புறம் கொஞ்சம் கஞ்சி மாவு, சாம்பார் பொடி, புளிக்காய்ச்சல், சேவை மாவு. ரகு பொண்டாட்டிக்கு என் கை முறுக்கு ரொம்ப பிடிக்கும் …”
” அம்மா,அம்மா… நிறுத்து கொஞ்சம் மூச்சு விடு..எல்லாம் பண்ணலாம். எங்க எல்லாருக்கும் என்ன பிடிக்கும்னு சொல்றியே, அப்பாவுக்கு என்னல்லாம் பிடிக்கும் சொல்லு”.
உங்கப்பாக்கு நான் என்ன பண்ணி குடுத்தாலும் பிடிக்கும்தான்”. கீற்றாய் மின்னி மறைந்த நாணம் கலந்த பெருமை அவள் வைரத்தோடை மங்கச் செய்தது.
” சரி, அப்பாக்கு பிடிச்சதா ரெண்டு ஐட்டம் சொல்லு பார்ப்போம்.”
” நான் தினமும் அவர் இலைல எஸ்ட்ராவா என்ன போடறேன்னு பார்த்து தெரிஞ்சுக்கோடா”. அம்மா சிரித்தபடி எழுந்து சென்றாள்.
ரவிக்கு ஒரு கணம் அம்மாவை நினைத்து கவலையாக இருந்தது. எப்படி தாங்குவாள்?
ராதுவும் ரகுவும் வந்தவுடன் வீடு களை கட்டி விட்டது. அம்மா சமையலறையோடு ஐக்கியம் ஆகி விட்டாள். அப்பாவை சாக்கு வைத்து எல்லோருக்கும் பிடித்தது எல்லாம் அம்மா செய்து தள்ளிக்கொண்டிருந்தாள். அப்பா எல்லோருடனும் சிரித்துப் பேசி மிக மகிழ்ச்சியாக இருந்தார். அப்பாவுக்குப் பிடித்த பழைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆளாளுக்கு ஆசையாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புது ஷர்ட்டும் புடவையும் வாங்கினார்கள். வீடு வெகு நாட்கள் கழித்து கூச்சலும் கேலியும் விளையாட்டும் அமர்க்களமுமாய் ஆரவாரப்பட்டது. அப்பாவின் உடல்நிலையைப் பற்றிய கவலை கூட சற்று மறந்து விட்டது. சனிக்கிழமை அன்று வெளியில் போவதாகத் திட்டம் போட்டார்கள்.
“எனக்கு எல்லாருடனும் பீச் போகணும்னு ஆசை. அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாம். அம்மாவுக்கு ஒரு வேளை ரெஸ்ட்டா இருக்கட்டும்.” அப்பா சொன்னார்.
அன்றைய பொழுது மிக இனிமையாக கழிந்தது. மகிழ்ச்சித் தருணங்கள் எல்லாம் டிஜிட்டல் உதவியுடன் அமரத்துவம் பெற்றன. ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார்கள். ” அப்பா, என்ன சாப்பிடறேள்?”
அப்பாவுக்கு பிடித்தது எல்லாம் பார்த்து பார்த்து ஆர்டர் செய்தார்கள்.
” அம்மா, உனக்கு என்ன வேணும்?”
” எனக்கு சாம்பார் இட்லி வேண்டாம்,காரமா இருக்கு.” ஒரு வாண்டு கத்தியது.
” இதே வேலை..எதையாவது ஆர்டர் பண்ண வேண்டியது, ஒரு வாய் சாப்பிட்டுட்டு வேண்டாங்க வேண்டியது. ” ராது குழந்தையிடம் சிடுசிடுத்தாள்.
” குழந்தையை வையாதே. நான் அதை எடுத்துக்கறேன். அவனுக்கு வேணுங்கிறதை வாங்கிக்கொடேன்” அம்மா .
” உனக்கு வேணும்ங்கிறதை சொல்லும்மா. இவனை விடு”.
” பரவாயில்லை, எனக்கு இட்லி போதும், அவன் கேட்கிறதை ஆர்டர் பண்ணு “.
குழந்தைகள் மிச்சம் மீதி வைத்ததை அம்மாவும் ராதுவும் பகிர்ந்து கொள்ள ஒரு வழியாக டின்னர் முடிந்தது.
திரும்ப வரும்போது அப்பா மிக நெகிழ்ச்சியாக இருந்தது தெரிந்தது.
இரவு தூங்குமுன் அம்மாவிடம் சொன்னார்.
” ரொம்ப நாள் கழிச்சு குழந்தைகள் எல்லோரோடும் இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யறதுகள். எத்தனை பேருக்கு இது வாய்க்கும்?”
” நீங்க சொல்றது சரிதான்”. அம்மா ஆமோதித்தாள்.
” ஆனா எனக்கு ஒரு சந்தேகம். எப்பவும் அப்பா, இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது, உடம்புக்கு ஆகாதுன்னு சொல்ற பசங்க இப்ப என்ன ஒரு ரெஸ்ட்ரிக்க்ஷனும் இல்லாம ஓவர் உபசாரம் பண்றதுகளேன்னுதான்.”
” ஒரு ரெண்டு நாள் எல்லாரும் சேர்ந்து இருக்கறதுனாலதான் இதெல்லாம். அப்புறம் நானே உங்க ரெகுலர் டயட்டுக்கு மாத்திடுவேன்”. அம்மா சிரித்தாள்.
“அதானே பார்த்தேன், சரி , தூங்கலாம். டயர்டா இருக்கு, நாளை காலம்பற மெல்ல எழுந்துக்கோ. லீவு நாள்தானே”.
” பார்க்கலாம். அதுவாவே சீக்கிரம் எப்பவும் போல முழிப்பு வந்துடும்.”
ஆனால் மறுநாள் காலை அம்மாவுக்கு சீக்கிரம் முழிப்பு வரவில்லை. எல்லோரும் எழுப்பியும் அவள் முழித்துக் கொள்ளவே இல்லை.
வீடு உறைந்து போனது. யாருக்கும் அம்மாவின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. அப்பா அப்பான்னு அம்மாவை கவனிக்காம விட்டிட்டோமோ, ஒரு நாள் கூட ஒரு வலின்னு கூட சொன்னது இல்லையே என்று புலம்பி மருகினார்கள். அதிர்ச்சியிலும்,துக்கத்திலும் பத்து நாட்கள் போனது தெரியவில்லை.
” அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொன்னால் சமையல்ல சேர்த்துடலாம்”.சமையல் மாமி ராதுவிடம் கேட்டார்.
“அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?…ரகு அண்ணா நீ சொல்லேன், அம்மாவுக்கு என்ன பிடிக்கும்? நான் இங்கே வரும்போதெல்லாம் அம்மா எனக்கு பிடிச்சதை செய்வா. அவளுக்கு என்ன பிடிக்கும்னு இப்போ ஒன்னும் தோணலியே..”
” அம்மாவுக்கு என்ன பிடிக்கும் ? ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து செய்வாளே தவிர, அவளுக்குப் பிடிச்சதை கவனிக்கலையே, ரவி, நீ சொல்லு, அம்மாக்கு என்னல்லாம் பிடிக்கும் ?”
” ம்ம்..எப்பவும் எல்லாருக்கும் போட்டுட்டு அம்மா தனியாத்தான் சாப்பிடுவா..எனக்கு இது பிடிக்கும்னு எதுவும் அவ பண்ணினதா தெரியலையே..கடவுளே, என்ன இது..அம்மாக்கு என்ன பிடிக்கும் …”
” அப்பா, அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?”
” அம்மாவுக்கு… அம்மாவுக்கு என்ன பிடிக்கும்”?
*
குவிகம் இல்லம்
குவிகம் பொக்கிஷம் கர்வத்தின் விலை – உருதுக்கதை -சிராஜ் அன்வர்
ஒரு முத்து மதிப்பு மிக்கதாக இருந்தால், அது விலை மதிப்பற்றது என்பார்கள். முத்துக்கள் சிப்பிப் புழுக்களில் விளைகின்றன. புழுக்கள் சிப்பிகளுள் வசிக்கும். அவை சமுத்திரத்தின் அடியில் கிடக்கும். அப்படிப் பட்ட சிப்பிப் புழு ஒன்றின் கதை தான் இது.
இந்தப் புழு தன்னிடம் தானே பெரும் மகிழ்வு கொண்டிருந்தது. உலகத்திலேயே தான் தான் அதிமுக்கியமான ஜீவன் என அது நம்பியது. உண்மைதான், பட்டுப் புழுவும் பயனுள்ளதே, ஆனால் பட்டு, முத்துக்களைப் போல் அதிக விலை பெற்றுத் தருவதில்லை. எனவே தன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது தகும் என்று சிப்பிப் புழு கருதியது.
ஒரு நாள், கடலில் பெரும்புயல் வீசியது. அலைகள் உயரமாய், வீசிக் கொண்டு வெறியோடிருந்தன. இயற்கையே பயங்கரமாக தோன்றியது. அதனால் நமது சிப்பிப் புழு மென்மையான தன் கூட்டை மூடிக்கொண்டு, கடலின் கரையில் உறுதியாய்க் கிடந்தது. முயன்று, பாதுகாப்புக்காகக் கரைக்குப்போவது தன் தகுதிக்குக் கீழானது என்று அது எண்ணியது. அலைகள் வலிதாக இருந்ததால், அதன் தீர்மானத்துக்கு மாறாக, புழுவும் அதன் சிப்பியும் வாரி எடுக்கப்பட்டு கரை மீது எறியப்பட்டன. திறந்த கடற்கரையில் தான் இருப்பதைக் கண்ட புழு, எச்சரிக்கையாகத் தன் சிப்பி மூடியை உயர்த்தியது இடுக்கு வழியே உலகைப் பார்த்தது. அப்படி அது பார்க்கும் போதே, மற்றொரு பெரிய அலை அதைத் தூக்கி மேலும் தள்ளி மணலில் விட்டெறிந்தது. இப்போ, உண்மையிலேயே கலவரமான நிலைமை தான் அலைகள் அதன் மேலே புரண்டன; அதை உருட்டிப் புரட்டின. ஆயினும், அதை மறுபடியும் கடலுக்குள் இழுக்கப் போதிய பலம் அவற்றில் எதற்கும் இல்லை. அப்பாவி சிப்பிப் புழு அந்த இடத்திலேயே கிடந்தது. கடலுக்குள் திரும்பிப் போக வழியேயில்லை. அது மிகவும் கோபம் கொண்டது.
கரை அருகில் ஒரு சிறு மரம் நின்றது. அதில் ஒரு காகம் நெடு நேரமாக இருந்து, சிப்பிப் புழு படும் பாட்டைக் கவனித்தது. முடிவில், அது கீழே வந்தது. தன் அலகால் சிப்பி மீது தட்டி, “யாரது உள்ளே? கதவைத் திற” என்று அதட்டலாய் கூறியது.
சிப்பிப் புழு அதிருப்தி அடைந்தது. யாரோ மோசமான கழிசடை என்னைத் தொந்தரவு செய்கிறது” என்று அது தனக்குள் சொல்லிக் கொண்டது. பிறகு, “யார் அது?” என்று கத்தியது.
“நான் கழிசடை இல்லை. நான் ஒரு காகம் அதிலும் புத்திசாலிக் காகம். கதவைத் திறந்து வெளியே வா.”
“நான் ஏன் வெளியே வரவேண்டும்?”
“சும்மாப்பேசி மகிழ, அவ்வளவு தான் என்று காகம் மென்மையாய் சொன்னது.
“எனக்குப் பேச நேரமில்லை. நான் வெளியே வரவில்லை.”
“நல்லது. ரொம்ப சரி. ஆனால் அங்கே உள்ளே நீ என்ன பண்ணுகிறாய்?”
“நான் முத்து உண்டாக்குவதில் கருத்தாக இருக்கிறேன். மேலும், உன்னைப் போன்ற அசிங்கமான அழகற்ற ஒரு ஜந்துவுடன் நான் ஏன் பேசவேண்டும்?” என்று சிப்பிப் புழு மிடுக்காகக் கூறியது.
“ஒகோ-எவ்வளவு உயர்வு!” என்று காகம் சிரித்தது. “என் அருமை நண்பனே, நான் விரும்பியதெல்லாம் கடலின் அமைப்பு, அளவு பற்றிய சில கேள்விகளை உன்னிடம் கேட்கலாம் என்பது தான். இந்தப் பரந்த உலகம் பற்றிய சில விஷயங்களை உன்னிடம் சொல்லவும் விரும்பினேன்.”
“ஏனோ”
“ஏனென்றால், எனக்கு அறிவியலில் அதிக ஆர்வம். நான் ஒரு பல்கலைக்கழகத்தின் கூரை மேல் வசிக்கிறேன். அறிவியல் பேராசிரியரின் சொற்பொழிவுகளைக் கேட்கிறேன். அதனால் அறிவியலில் எனக்கு விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் கடல் பற்றியும், அங்கு நடப்பது குறித்தும் கேட்டறிய விரும்புகிறேன். புறா முட்டைகள், குருவி முட்டைகள் எல்லாம் அங்கு உள்ளனவா?”
“என்ன பேத்தல்” என்று வெடுக்கெனப் பேசியது சிப்பிப் புழு. “புறாக்களும் குருவிகளும் கடலில் இருப்பது போல் தான்!”
“அதைத் தானே நான் உன்னிடம் கேட்டறிய விரும்பினேன்.”
“மடத்தனமான கேள்விகள் கேட்காதே” என்றது சிப்பிப் புழு. “கடலில், என்னை போல், லட்சக்கணக்கான சிப்பிகள் இருக்கின்றன. ஆனால், அனைத்தினும் நானே பெரியவன். அதனால் நான் மற்ற சிப்பிகளுடன் பேசுவதில்லை. ஆயிரமாயிரம் வகை வர்ணமீன்கள் இருக்கின்றன; பல்லாயிரம் வகைச் செடிகள் இருக்கின்றன. அவ்வளவுதான். உன்னைப் போன்ற முட்டாள்தன அசட்டுப் பிராணிகள் அங்கு கீழே இல்லை.”
காகம் சிரித்தது. நீ என்னை முட்டாள் என்பதில் எனக்கு கவலை யில்லை. உண்மையில் நான் முட்டாள் இல்லை. நான் ஒரு காகம்- அதிலும், புத்திசாலிக் காகம், ஆனால், நண்பனே, நீ இதை எல்லாம் உன் சிறிய பொந்துக்குள் இருந்தபடியே சொல்கிறாயே, ஏன் நீ வெளியே வரக்கூடாது?”
“உனக்கு நல்ல பண்பு கிடையாதா? என்னுடன் நெருக்கமாய்ப் பேச உனக்கு என்ன துணிச்சல் நான் உன் நண்பன் இல்லை.”
“நீ கடல் அரசன் போல் அல்லவா பேசுகிறாய்!”
“சந்தேகம் இல்லாமல்-நான் தான் முத்துக்களை உண்டாக்குகிறேன். அது கடலுக்குக் கீர்த்தி சேர்க்கிறது. எல்லாம் என்னால் தான்” என்றது சிப்பிப் புழு.
காகம் குறும் சிரிப்புடன் சொன்னது: “அப்படியானால் நான் அவசியம் பார்க்க வேண்டும். இப்படி ஒரு அற்புதமான பொருளை நான் பார்த்ததேயில்லை.”
“நான் பொருள் இல்லை-நான் சிப்பிப் புழு, முத்துக்களை ஆக்குவோன்.”
“நல்லது, நல்லது. மாட்சிமை மிக்கவரே, தயவு பண்ணி வெளியே வந்து, உம்மைக் காணும் வாய்ப்பை எனக்கு அளிக்கமாட்டிரா?” என்று காகம் நகைச் சுவையுடன் கூறியது.
இல்லை; மாட்டேன். நான் கதவைத் திறக்க முடியாது. எனக்கு அதிக வேலை.”
“நீ உன் முத்தைப் பிறகு செய்யலாம். இப்ப கதவை திற. நான் எளிய, சாதாரண காகம், உன்னைப் போன்ற முக்கிய நபரை-முத்து செய்யக் கூடியவரை, பார்க்க ஆசைப்படுகிறேன். நான் முத்தையும் பார்க்க வேண்டும். என் வாழ்வில் இதுவரை நான் ஒரு முத்தைக் கண்டதில்லை.”
“நான் தான் சொல்லிவிட்டேனே, நான் திறக்கமாட்டேன். நீ பெரிய புத்திசாலி என்று நீ நினைத்தால், நீயே ஏன் அதை திறக்கக் கூடாது?”
சிப்பிப் புழு இப்படிக் காகத்தை கேலி பண்ண முடிந்தது. ஏனெனில், தன் சிப்பியின் மூடியை காகம் ஒரு போதும் திறக்க இயலாது என அது உறுதியாக நம்பியது.
ஆனால் இப்போது காகம் கோபம் கொண்டது.
“நல்லது. அது தான் உன் விருப்பம் என்றால், நான் செய்து காட்டுவேன். நடப்பது உனக்குப் பிடிக்காது போனால் என்னைக் குறை கூறாதே.”
காகம் சிப்பியைத் தன் அலகில் கவ்விக் கொண்டு, மேலே மேலே பறந்து போயிற்று. ஒரு பாறை அடுக்கை அடைந்தது. மிக உயரே பறந்தபடி அது சிப்பியை பாறைக்கு நேராகப் போட்டது. சிப்பி தூள்துள்ளாகச் சிதறியது. காகம் அதன் பின்னே பாய்ந்தது. சிப்பிப் புழுவை அலகில் கொத்தியது. ஒரே விழுங்கில் முழுங்கித் தீர்த்தது.
பிறகு காகம் முத்தைப் பார்த்தது. முத்து அதனிடமிருந்து விலகி உருண்டோடிக் கொண்டிருந்தது. விலையில்லாத அந்த முத்து ஒரு சாணக் குவியலினுள் விழுந்ததை அது கவனித்தது. பின்னர் காகம் மேலெழுந்து வானத்தில் உயர்ந்து, மகிழ்வுடன் கத்தியவாறு, பறந்தது.
(உருதுக் கதை)
குட்டீஸ் லூட்டீஸ்: ஜாதகப் பொருத்தம்..!- சிவமால்
ஜாதகப் பொருத்தம்..!
‘பத்துப் பொருத்தம் பெர்·பெக்டா பொருந்தியிருக்குன்னு ஒரு ஜோசியர் இல்லே ரெண்டு ஜோசியர்கள் சொன்னாங்க..
ஜாம் ஜாம்னு பெரிய அளவிலே பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். இன்னும் ஆறு மாதம் கூட ஆகலே..
மாமியார் கொடுமை தாங்கலைன்னு அடிக்கடி கண்ணைக் கசக்கிட்டு வந்து நிற்கிறா. என்ன செய்யறதுன்னே தெரியலே.’
என்று புலம்பிக் கொண்டிருந்தான் நண்பன் பரந்தாமன்.
அவன் வீட்டில் அவனுடன் பேசிக் கொண்டிருந்த எனக்கு எப்படி ஆறுதல் சொல்றது என்றே தெரியவில்லை.
அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்த என் மகள் மிதிலா திடீரென்று, ‘அங்கிள்.. நாம அங்கேதான் ஒரு சிறிய
தப்பு பண்ணறோம்’ னு சொன்னாள், வியந்தபடியே அவளை நோக்கினோம்.
‘நீங்க பையன் பெண் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்தீங்க இப்பல்லாம் மெயினா பெண்ணின் ஜாதகம் வரப் போற
மாமியார் ஜாதகத்துடன் பொருந்தியிருக்கான்னு பார்க்கணும்.. அப்புறம்தான் பையன் பெண் ஜாதகப் பொருத்தம் எல்லாம்..’
என்றாளே பார்க்கலாம்.
ஒரு நிமிடம் அவளையே வியந்து நோக்கிய எங்களுக்கு அந்த வேதனையிலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
பாற்கடல் – லா.ச. ராமாமிர்தம்

இம்மாத திரைக்கவிதை – நீல வண்ணக் கண்ணா வாடா
மருதகாசி அவர்களின் நூற்றாண்டு விழா !
அவருடைய பல சிறந்த பாடல்களில் ” நீல வண்ணக் கண்ணா வாடா ” என்ற பாடலை இம்மாதத் திரைக் கவிதையாகத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
பாடல் : மருதகாசி
படம் : மங்கையர் திலகம்
பாடியவர் : பால சரஸ்வதி தேவி
இசை : எஸ் தக்ஷிணாமூர்த்தி
நடிப்பு: பத்மினி
நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா
பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்த வடிவில் வந்தான்
எல்லையில்லா கருணைதன்னை
என்னவென்று சொல்வேனப்பா
வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் ஆட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி
தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்
கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்
சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நடுங்க செய்யும் வாடை காற்றே
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளை போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு
விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை இது
என்றே கேட்கும் மதியை பாரு
இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
இணையில்லா செல்வம் நீயே
பொங்கும் அன்பின் ஜோதி நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே
இம்மாத ஆடியோ – கா காளிமுத்து உரை
டாக்டர் காளிமுத்து அரசியல்வாதி மட்டுமல்ல – அழகான பேச்சாளரும் கூட ! .
அவருடைய குரலில் இலக்கியம் தெறிக்கும்.
அவரை மேடை மணி என்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கூறியுள்ளார்.
அவருடைய தமிழை இந்த மாத ஆடியோவாக வழங்குகிறோம்.
பரந்தாமனின் நீதிமன்றம் ! பாம்பே கண்ணன்

டிப்பன் பாக்ஸ் – குறும்படம்
தனியார் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவன் . மதிய உணவு எடுத்துச் செல்ல நல்ல டிபன் பாக்ஸ் இல்லையே என்பதற்காக என்ன செய்கிறான் தெரியுமா? குறும் படத்தைப் பாருங்கள்!
அதிரடி அடுக்குமாடி
பார்வை…! — நித்யா சங்கர்
பெண் பார்க்கும் படலம்…
பெண் சுகுணாவின் பெற்றோர்கள் ராகவனும், மைதிலியும் ஓடியாடி வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.
மாப்பிள்ளை முரளியின் பெற்றோர்கள் ஸ்ரீதரன், வைதேகியின் முகங்களில் ஒரு குதூகலம், பூரிப்பு…
நமது வழக்கப்படி, தங்களது விருப்புகள், வெறுப்புகள், எதிர்காலக் கனவுகள், திட்டங்கள் – இவற்றையெல்லாம்
தனியாகப் போய் அரை மணி நேரம் விவாதித்து விட்டு வந்திருந்தார்கள் முரளியும், சுகுணாவும்.
சுகுணாவின் முகத்தில் படர்ந்திருந்த வெட்கம் கலந்த பூரிப்பைப் பார்த்த ராகவன் மைதிலிக்கு மனதில் ஒரு பரவசம்-
ஒரு நிம்மதி. முரளியின் முகத்திலே ஒரு திருப்தியின் நிழலைக் கண்ட ஸ்ரீதரன் வைதேகி முகங்களிலும் ஒரு நிம்மதி.
சொஜ்ஜி, பஜ்ஜி, பரிமாறப்பட்டது. டிபன் சாப்பிட்டுக் கொண்டே உலகச் சமாசாரங்களையெல்லாம் குதூகலமாக
அலசிக் கொண்டிருந்தார்கள் இரு வீட்டாரும்.
‘மாப்பிள்ளை.. நம்ம சமுதாயத்தின் முக்கியமான காவியங்கள் – ராமாயணமும், மகாபாரதமும். கடவுள் அவதாரங்-
களான ராமரும், கிருஷ்ணரும் உண்மையாகவே முக்கியமான நாயகர்கள். நீங்கள் லை·ப்லே ராமரா இருக்க விரும்பறீங்-
களா, இல்லே கிருஷ்ணரா இருக்க விரும்பறீங்களா..?’ என்று கேட்டார் ராகவன் திடீரென்று.
ஒரு விநாடி கூட தயக்கமின்றி, ‘இதிலென்ன சந்தேகம்..? கிருஷ்ணரா இருக்கத்தான் விரும்புவேன்..’ என்றான் முரளி.
‘அப்படியா..” என்ற ராகவன் முகத்தில் சிறிது வாட்டம். ஒரு நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டு, மற்றவர்கள் பேச்சில்
கலந்து கொண்டார்.
‘ஓ… ரொம்ப டைம் ஆச்சு…. அப்ப நாங்க கிளம்பறோம். போய் கலந்து பேசி ·போன் பண்ணறோம்’ என்று எழுந்-
தார் ஸ்ரீதரன்.
மாப்பிளை வீட்டார் விடை பெற்றுக் கொண்டு போய் அரை மணி நேரம் ஆகியிருக்கும்.
‘எனக்கு என்னவோ இந்த இடம் சரிப்படும் என்று தோணவில்லை… ‘ என்றார் ராகவன் சிறிது வருத்தத்துடன்.
‘என்ன சொல்றீங்க..?’ என்று கேட்டாள் மைதிலி சிறிது அதிர்ச்சியுடன்.
இந்த இடம் நிச்சயமாகக் குதிரும் என்று கனவு கண்டு கொண்டிருந்த சுகுணாவும் அதிர்ச்சியோடு நோக்கினாள்.
‘இல்லே.. ஏகபத்தினி விரதனான ராமனை விட்டு விட்டு எப்போது கோபியர்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் கிருஷ்-
ணரின் வாழ்க்கைதான் எனக்குப் பிடிக்கும் என்று சொன்னாரோ.. அங்கேயே எனது மதிப்பிலிருந்து ஹன்ட்ரட் பர்-
ஸன்ட் விழுந்துட்டார்… நாம் இவளைக் கட்டிக் கொடுத்துட்டு அவர் கோபிகா கிருஷ்ணன் போல் இருந்துட்டார்னா..?
கொஞ்சம் சலனத்துக்கு ஆளாயிட்டார்னா நம்ம மகளின் கதி…?’ என்றார்.
மைதிலியின் மனதிலும் சிறிது குழப்பம் ஏறியது.
கனவுகளில் மிதந்து கொண்டிருந்த சுகுணாவின் மனதில் ‘ஒரு வேளை.. அப்பா சொல்வது போல் இருந்து விட்டால்..’
என்ற சந்தேகம் எழுந்தது. கனவுகளுடன் இருந்த அவள் முகம் வாடிச் சூம்பியது.
‘இப்போ என்ன செய்யப் போறீங்க..? என்ன சோல்லப் போறீங்க…?’ என்றாள் மைதிலி.
‘அவர்கள் போய் டிஸ்கஸ் பண்ணிட்டு ·போன் பண்ணறேன்னு சொன்னாங்க இல்லையா… அவர்கள் கால் வந்ததும்
ஏதாவது பதில் சொல்லி சமாளிப்போம்’ என்றார் ராகவன் தீர்மானமாக.
‘டேய்.. பெண்ணின் அப்பா ராகவன் கேட்ட கேள்விக்கு, நீ ஏகபத்தினி விரதனான ராமன் போல் வாழணும்னு சொல்-
லியிருக்கணும். உன் பதிலைக் கேட்டு அவர் முகம் சிறிது வாடி விட்டது. ஆனால் அதை அவர் சாமர்த்தியமாக
மறைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார் தெரியுமா..?’ என்றார் ஸ்ரீதரன் முரளியை நோக்கி.
‘அப்பா உங்கள் பார்வையில் அப்படித் தோன்றலாம்.. பட் என் பார்வையில் இட் ஈஸ் டோடலி டி·பரண்ட்.. நீங்க
நம்ம காவியங்களைப் படிச்சீங்கன்னா, ராமர் இல்லற வாழ்க்கையிலே சந்தோஷமா வாழ்ந்த நாட்கள் ரொம்பக் கம்மி…
ஆனா கிருஷ்ணன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தார். என்னுடைய குடும்ப
வாழ்க்கையும் அப்படி சந்தோஷமா இருக்கணும்.. அதனாலே தான் அப்படிச் சொன்னேன். நீங்க அவங்களுக்கு ‘எஸ்’
ஸ¤ன்னு சொல்லிடுங்க…’ என்றான்.
‘இல்லடா… முறைப்படி பெண் வீட்டார்தான் ·போன் பண்ணி விவரம் கேட்கணும். அவங்க கால் வந்தா க்ரீன்
ஸிக்னல் குடுத்துடறேன்’ என்றார் குதூகலமாக.
ராகவனின் ·போன் காலுக்காக காத்திருந்தார்கள்.
இன்னும் சில பாடைப்பாளிகள் – களந்தை பீர் முகமது – எஸ் கே என்
களந்தை பீர் முகமது
நெல்லை மாவட்டம் களக்காடைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாகக் கதை, கட்டுரை, விமர்சனம் என பல தளங்களில் இயங்கி வருபவர். ‘காலச்சுவடு’ இதழின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுபவர். இலக்கியச் சிந்தனை, த.மு.எ.ச, கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகள் பல இவரது பங்களிப்பை அங்கீகரித்துள்ளன
# # #
யாசகம் கதை இப்படித் தொடங்குகிறது
வாப்பா அன்று உற்சாகமாக வந்தார். முகத்தில் ஒரு மலர்ச்சி .அவர் செருப்பை கழட்டி போடும்போதே அந்தத் துள்ளல் தெரிந்தது. பொதுவாகவே வியாபாரம் இப்போதெல்லாம் நன்றாக இருப்பதாக அவர் சொல்வதை தவுலத் கேட்டிருக்கிறாள் வாங்கி வந்த காய்கறிகள் அன்றைக்கே விற்றுவிட்டால் நல்ல வியாபாரம் இன்னும் கொஞ்சம் நன்றாக வைத்தால் வியாபாரத்தைப் பெருக்கிவிடலாம் என்று வாப்பா சொல்வதும் தவ்லத்திற்குத் தெரியும்.
ஒரு சிறிய இஸ்லாமியக் குடும்பத்தின் மூத்த பெண் தவ்லத் பார்வையில் கதை போகிறது. தவ்லத் திருமண வயதில் இருக்கிறாள். அதுவரை தவ்லத்தின் நிக்காஹ் குறித்து வாப்பா வெளிப்படையாகப் பேசியது இல்லை என்றாலும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தவ்லத்தைத் தள்ளிவிடவேண்டும் என்கிற கவலை அவருக்கு உண்டு. அது முடிந்து சில வருடங்கள் கழித்து, பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கும் இளையவளையும் தள்ளிவிட்டக வேண்டுமே? ஒரே மகனான புகாரி பற்றி வாப்பாவிற்கு எப்போதும் புகார் தான். மனம்கொண்டால் தான் தந்தையின் கடையைக் கவனித்துக் கொள்வான். பெரும்பாலும் ஊர் போக்கிரிகளுடன் ஊர் சுற்றுவது அவன் வாடிக்கை.
இதுவரையில் கைக்கும் வாய்க்கும் மட்டுமே சரியாக இருக்கின்ற வருமானம். எப்போதும் நல்ல சாப்பாடு போட்டு இருக்கின்றார் வேறு எந்த விதமான வசதிகளும் பெருகி விடவில்லை. டெலிபோன். டெலிவிசன் எல்லாம் இன்றியமையதாகிவிட்டப் பிறகுதான் அவை வீட்டிற்கு வந்தன.
தந்தையின் மலர்ச்சிக்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று தவ்லத் யோசிக்கிறாள். வியாபாரம் பெருக ஏதேனும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம். அல்லது ஏதேனும் வரனைப் பற்றிய தகவல்களுடன் வாப்பா வீட்டிற்கு வந்து இருக்கலாம். என்னவென்று அவர் தான் சொல்ல வேண்டும். அதுவும் உம்மா மூலமாகத்தான் தெரியப்படுத்துவார்.
வாப்பா ருசித்துச் சாப்பிட்டார். வேறு எங்கெல்லாமோ பார்வைகளில் பார்வைகளைத் திருப்பி, திரும்பிய இடமெல்லாம் பார்வையை அப்படியே வைத்துவிட்டு வாய்க்குள் போன உணவை மென்று கொண்டிருக்கிறார் இது புது வாப்பா அவர் இன்று சாப்பிடுவது ரொம்ப அழகாக இருந்தது தவ்லத்துக்கு.
வாப்பா கொண்டுவந்திருக்கும் நல்ல செய்தி எதுவாக இருக்கும் என்று மிக ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருந்தால் இருந்தாள் தவ்லத். இந்த வருடம் ஹஜ் யாத்திரை போக இருப்பதாகத் தெரிவிக்கிறார் வாப்பா. அவருடைய உற்சாகம் சரியே. அவரது தூரப் பார்வையில் ஹஜ் யாத்திரை மட்டுமே இருந்தது.
அதை புரிந்து கொண்ட அடுத்த கணம்தான் தவுலத் உணர்ந்தாள் தனக்கான மணவாளன் அந்தப் பார்வையில் இல்லை என்பதை! இப்போது அவள் மட்டுமே ஒரு குதிரையில் மெதுவாக செல்கிறாள் மறுபடியும் மரங்கள் நிறைந்த ஒரு பொட்டல் வெளி. பரவாயில்லை, முதலில் அப்பாவின் ஆசை நிறைவேறட்டும்.
எப்படியோ மார்க்கக் கடமையை நிறைவேற்ற நினைக்கிறார். வாப்பா. பல கஷ்டங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு துணிச்சலாக ஹஜ் போவதே பக்தியின் அடையாளம் என்பது வாப்பாவின் முடிவு . இதுபோல வாப்பாவின் ஹஜ் பயணம் பற்றி மற்றவர்கள் சொல்லக் கூடும். சிலர் ஹஜ் அடிக்கடி போய் வருகிறார்கள் ஆனால் அவர்கள் இஸ்லாமியரின் மற்றொரு கடமையான ‘ஜகாத்’ கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றச்சாட்டும் உண்டு.
வாப்பாவின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி இருபது நாட்களே ஆகியிருந்தன ஹஜ் போவதற்கான பணம் கட்டாயம் சேர்ந்து இருக்காது. உம்மா வந்ததும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ந்து விட்டாள். நபிஸஸ் அம்மா ‘யா அல்லாஹ் இது என்ன சோதனை. இரண்டு குமருகள் வீட்டிலே இருக்கும் போது எப்படி சாத்தியம்?’ என்கிறாள்.
ஆனால் யாத்திரை செய்ய வாப்பா மிகவும் உறுதியாக இருக்கிறார். ஊரில் எங்கே திரும்பினாலும் ஹாஜிமார்களாக இருக்கிறார்கள். தானும் அதுபோல் ஆகவேண்டாமா என்பது வாப்பாவின் கேள்வி.
நீண்ட ஜிப்பா, வெள்ளைக் கைலி, நீங்காத தொப்பி மற்றும் நீண்ட வெண்தாடி .. இவைகளுடன் தோன்றும் ஹாஜிமார்களுக்கு இடையில் தொப்பியில்லாமல் பான்ட் ஷர்ட் போட்டு தாடி மட்டும் கொண்ட ஹாஜிமார்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஹாஜிமார்களுக்கும் வாய்தா, வழக்கு என்று வந்துவிட்டது. எந்தச் சொத்துத் தகறாரிலும் இரண்டு பக்கமும் இரண்டிரண்டு ஹாஜிமார்களோ மும்மூன்று ஹாஹிமார்காகளோ இருக்கிறார்கள். ஒரு ஹாஜியார் வீட்டுப் பெண் இன்னொரு ஹாஜியாரால் தலாக் செய்யப்பட்டு திரும்புகிறாள். பஸ் ஏறும்போது அடிதடி என்று ரத்தக் காயத்துடன் திரும்பும் ஹாஜிமார்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் அண்ணன் புகாரி சொல்லும்போது, தவுலத் ‘ஹாஜியார் மேல் அண்ணனுக்குப் பொறாமை’ என்று நினைத்துக்கொள்வாள். மார்க்கத்திற்கு எதிராகப் பேசுகிறானே என்ற எரிர்ச்சலும் குடும்பத்தினருக்கு உண்டு.
புகாரி வீட்டிற்கு வருவதற்கு என்று எந்த குறிப்பிட்ட நேரமும் கிடையாது. அவனால் குடும்பத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அவன் பேசுவது எல்லாமே ஏறுக்கு மாறானது என்பது தவ்லத் உட்பட எல்லோரின் எண்ணம்.
‘ஹஜ் பணத்திற்கு என்ன செய்யப்போறீங்க?’ என்று கேட்கிறார் ம்மா நபீஸ்.
இதைக் கேட்டதும் அவர் தாடியைத் தடவினார். ‘ கடனா பணம் கேட்டுப் பார்த்தேன். ஒண்ணும் நடக்கல. கடைய எம்பேர்ல எழுதித் தந்தீங்கன்னா பணம் தாரேன்னு சொல்றான் எலெக்ட்ரிக் கடை மூசா. வேறு எங்கேயும் கடன் கெடைக்கலேன்னா அப்படித்தான் செய்யணும்!’
“யா ரஹ்மானே! நீங்க சொல்றது ஆண்டவனுக்கே பொறுக்காதே” என்று பதறிவிடுகிறார் நபீசம்மா. கடையையும் கொடுத்துவிட்டால் அப்புறம் வருமானமே இல்லாமல் என்ன செய்வது என்று பயம் வந்துவிடுகிறது. மேலும் இரண்டு பெண்களின் நிக்காஹ் எப்படி நடக்கும்?
அண்ணன் புஹாரி சொல்வதிலும் உள்ள நியாயம் இப்போது தவ்லத்திற்குப் புரிகிறது .
தவ்லத்திற்கு மூச்சு முட்டிவிட்டது. அவள் சட்டென்று விலகிப்போய் அழ ஆரம்பித்துவிட்டாள். புகாரி காக்கா உடனே இங்கு வந்து குதிக்க வேண்டும் என்று அங்குமிங்குமாக அழுத கண்ணீரோடு பரபரத்துப் பார்த்தாள்.
நபீசம்மாவும் அழ ஆரம்பிக்கிறாள்.
“என் புள்ளைங்களை நான் காப்பாத்துவேன். எப்படியாவது காப்பாத்துவேன். இந்தப் பார்- இந்தப் பார்… தெருவில நின்னு பிச்சையெடுத்தாவது – இப்படி பிச்சையெடுப்பேன்” என்று தன் தோளில் கிடந்த துண்டை யாசகம் செய்பவனைப் போல நடித்து நீட்டிக் காட்டினார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நேரத்தில் யாசிக்கும் குரல்களோடு தன் வாப்பாவின் குரலும் ஒலிப்பதுபோல் தவ்லத்திற்கு தோன்றுகிறது
தொழுகை முடிந்து கூட்டம் கூட்டமாக பள்ளிவாசல்களிருந்து கரைந்து வழியும் தொழுகையாளர்களிடமிருந்து ஏதோ ஒரு சில கைகள் அவ்வப்போது அபூர்வாமாய் நீண்டு சின்னச் சின்ன கரன்ஸிநோட்டுகளைக் கைமடக்காக போட்டபோதும், விரித்துப் பிடித்த துணியில் இன்னும் எவ்வளவோ வெற்றிடம். வாப்பா.. ம்மாவின் குரல்களும் சளைக்காமல் கேட்டபடியே இருக்கின்றான் நீண்ட காலத்துக்குமாக.
என்று முடிகிறது .
# # #
இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் இல்லாத இவர்கதைகளும் நிறைய உண்டு. தவிர, இஸ்லாமியக் குடும்ப மற்றும் சமுதாயப் பின்னணி பல கதைகளில் இருந்தாலும், சொல்லப்படும் கருத்துகள் அனைத்து மதத்தினருக்கும் பொதுப்படையாகப் பொருந்தும் என்று தோன்றுகிறது. இந்தக் கதையும் அப்படித்தான்.
வில்லன்
வில்லன் என்பது அழகிய தமிழ் வார்த்தை
கலித்தொகை 37, கபிலர்
கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,
“உறவுகளால் மலர்ந்தாள் ” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
சுமதியை, அவள் தத்தெடுத்திருந்த பெண் சுபா எங்களிடம் அழைத்து வந்தாள். சுபாவின் கையை இறுக்கிப் பற்றியபடியே சுமதி வந்தாள். மகன் முருகனும் கூட வந்தான்.
இரண்டு வருடமாகச் சுமதிக்கு அடிக்கடி தலைவலி. அத்துடன், படபடப்பு, தூக்கம் சரியாக வருவதில்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை என்பாளாம். தனிமையில் அதிகரிக்கும், கூட யாராவது இருந்து விட்டால் எந்த விதமான தொந்தரவும் இருக்கவே இருக்காதாம். அப்பாவின் மரணத்திற்குப் பிறகே
இப்படி நடப்பதாகச் சொன்னார்கள்.
மனோதத்துவ பரிசோதனையில் இந்த குணாதிசயங்கள் “ந்யூராட்டிக் டிப்ரெஷன்” (Neurotic Depression)இன் அறிகுறி என்பது ஊர்ஜிதமானது. இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட்டது என்பதை இங்குப் பகிரப் போகிறேன்.
சுமதி வறுமைக் கோட்டிற்குச் சற்று மேலே இருப்பவள். ஒரு காலத்தில் செழித்து வாழ்ந்த விவசாய குடும்பம். இப்போது அவள் பட்டணத்தில் வாழ்வைத் தேடி வந்ததின் விளைவு!
இன்றைய தேதியிலும் அவள் உடன் பிறந்தவர்கள் விவசாயிகள். எண்பது வயதிலும் அப்பா தன்னால் முடிந்ததைச்செய்து வருகிறார். எழுவது வயதான அம்மா, கணவருக்கு ஈடு கொடுப்பவள். கடுமையாகப் பேசி விமர்சிப்பதால், பலர் இவளுடன் உறவை முறித்துக்கொண்டார்கள்.
சுமதியின் இரண்டு அண்ணன்மார்களும் கல்யாணத்திற்குப் பிறகு தங்களுடைய குடும்பத்துடன் தனியே வசிக்கிறார்கள். அம்மாவின் புண்படுத்தும் வார்த்தைகளே இந்த முடிவிற்குக் காரணம் என்று கூறினார்கள். மூன்றாவது அண்ணன் விவசாய பொருட்கள் வியாபாரியாக இருந்தார்.
தங்கை பிரசவத்தில் இறந்துவிட்டாள். அம்மாவின் கண்டிப்பினால் அண்ணன்கள் சுமதியிடம் அதிக பாசத்தைக் காட்டினார்கள், அவளுக்குக் கல்யாணம் ஆகும் வரையில்.
அண்ணன்கள் விவசாயத்தில் கை கொடுக்க, சுமதி சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது என்ற பொறுப்புகளைப் பார்த்துக் கொள்வாள். சுமதியை இரண்டாம் வகுப்புடனும் அண்ணன்களை ஐந்தாம் வகுப்புடனும் படிப்பை நிறுத்தி விட்டார்கள். சுமதிக்குத் தோழிகளுடன் பேச, விளையாட அனுமதி கிடையாது.
நான்கு வருடங்களுக்கு விளைச்சல் குறைந்து விட்டதில் குடும்பம் சற்று கஷ்டப்பட்டது. விவசாயத்தின் வருமானத்தில் தான் சுமதி கல்யாணத்திற்குச் சேமித்து வந்தார்கள். அந்த சேமிப்பிலிருந்து கஷ்டத்தைப் போக்க எடுக்க வேண்டியதாயிற்று. அந்தச் சமயம் பார்த்து, சுமதியின் கல்யாணத்திற்கு வரன்கள் வந்தன. அவர்களில் ஒருவர், இருபது வயதான சுந்தரம். அவன் எந்த செலவும் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள முன் வந்தான். சுமதியைப் பற்றி கேள்விப் பட்டதால் தங்களது குடும்பத்திற்குப் பொருத்தமாக இருப்பாள் என்பதால் தான்.
கல்யாணம் ஆனது. அப்போது சுமதியின் வயது பதினாறு. சுந்தரம் குடும்பத்தினரும் விவசாயிகள். அவன் மூத்த மகன் என்பதால் தன் பெற்றோருடன் இருந்தான். கூட சுந்தரத்தின் இரு தம்பிகளுக்கும். தங்கைகளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டன.
சுந்தரத்தின் பெற்றோர் வயோதிக நிலையிலிருந்ததால் வேலைகளைப் பிள்ளைகள் பங்கு போட்டிருந்தார்கள். சுமதியின் கைப்பக்குவம் எல்லோருக்கும் பிடித்திருந்ததால், அவளுக்குச் சமையல் கட்டு என்று முடிவானது. சுந்தரம் ஆதரவாக இருந்ததால் எல்லாவற்றையும் அழகாக எடுத்துச் சென்றாள். எல்லோரும் அவளைப் புகழ்ந்து பேசினார்கள்.
வாழ்க்கை இவ்வாறு நல்லபடி போய்க் கொண்டிருந்தது. திருமணம் ஆகி ஏழு எட்டு வருடங்கள் ஓடின. குழந்தை பிறக்கவில்லை. சுந்தரம் அதை ஒரு விஷயமாகக் கருதவில்லை. ஆனால் சுமதியின் சுந்தரத்தின் சகோதரி உஷா இதைப் பற்றி தன் கருத்தைப் பேச ஆரம்பித்தாள். தன் பெண்ணை இரண்டாவது தாரமாகக் கட்டித் தருவதாகக் கூறினாள். சுந்தரம் சரியென்று சொல்லவில்லை. சுமதி மிகவும் பயந்து விட்டாள்.
உஷா மிகப் பிடிவாதமாக வற்புறுத்தினாள். திருமணத்திற்கு சம்மதித்த சுந்தரம், சுமதியை விவாகரத்துச் செய்ய மறுத்தான். மறு கல்யாணத்திற்குப் பின்னும் அங்கேயே அவள் தங்கும் படி செய்தான்.. சுமதி இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. ஏனென்றால் அவளுடைய அம்மா வீட்டைப் பொறுத்தவரை, அவரவர் தன் குடும்பத்தில் வருகிற பிரச்சனைகளை தானே சமாளிக்க வேண்டும் என்று. தீர்மானமாக இருந்தார்கள் .
சுந்தரத்திற்கு மறு திருமணம் நடந்த அடுத்த வருடமே இரண்டாவது மனைவி ஆண்மகவை ஈன்றாள். முருகன் என்ற பெயர் சூட்டினார்கள். சுந்தரமும் அவனுடைய இரண்டாவது மனைவியும் சேர்ந்து வேலைக்குப் போவதால் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சுபாவுடையதானது. இவளிடமே இருப்பதால் முருகன் அவளை “அம்மா” என்றே அழைத்தான். சுமதி பூரித்துப் போனாள்.
சுந்தரத்தின் மற்றொரு தங்கை தனக்குப் பிறந்த பெண் கருநிறம் என்றதால் அடியோடு அந்தக் குழந்தையை வெறுத்தாள். இதை சுமதி கேள்விப் பட்டதும் அந்தக் குழந்தையை தானே தத்தெடுத்துக் கொண்டாள். இவள் தான் சுபா. என்றுமே சுமதி பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டாள்.
இப்படி மூவரானது சுமதியின் உறவுகள். அந்த இன்னொரு தங்கை வசதியானவளாக இருந்ததில் எப்போதாவது பணம் கொடுப்பாள். சுந்தரம் வீட்டின் ஒரு அறையை இவர்களுக்கு என்று வைத்தார்கள். குழந்தைகளை வளர்க்க சுமதியும் , தையல், பூத் தொடுப்பது போன்ற கைத் தொழில்கள் செய்ய ஆரம்பித்தாள்.
இவ்வாறு போய்க்கொண்டு இருக்கையில் சுந்தரத்திற்கு வலது பக்கத்தில் பக்கவாதம் வந்தது. சிகிச்சை செய்து ஒர் அளவு குணமாகிக் கொண்டிருந்தான். ஆனால் வேலைக்குப் போக முடியவில்லை. சுந்தரத்தினால் இனி சம்பாதிக்க முடியாது என கருதினாள் அவனுடைய இரண்டாவது மனைவி. விவாகரத்து பெற்று அல்லது சுந்தரத்தைத் துறந்து அவர்கள் பக்கத்தில் குடியிருந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டாள்.
சுமதி தன்னால் முடிந்தவரை உழைத்து, சுந்தரத்தைப் பார்த்துக் கொண்டு, சுபா-முருகன் இருவரையும் படிக்க வைத்தாள். சுபாவிற்கு கல்யாணம் செய்ய முடிவெடுத்தாள். சுந்தரத்தின் இரண்டாவது தம்பி சுபாவைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தான். அவன் நடத்தை சுமதிக்குப் பிடிக்காதலால், அதைத் தட்டிக் கழித்து விட்டாள். அவன் சுமதியிடம் பேசுவதை நிறுத்தி விட்டான்.
சுபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து முடிக்கையில் முருகன் ஸ்கூல் முடித்திருந்தான். மேற்கொண்டு டிப்ளோமா படிக்க விரும்பினான். பணப் பற்றாக்குறை. ஆனால் அவனைப் படிக்க வைக்க வேண்டும் என்று சுமதிக்கு இருந்தது. சுமதி இவ்வாறு பொறுப்புகளை தனி ஒருத்தியாக ஏற்பதைப் பார்த்து, மனம் சோர்ந்து சுந்தரம் மரணம் அடைந்தான். அன்றிலிருந்து பகிர யாரும் இல்லை என்பதை சுமதி உணர்ந்தாள். மனம் வருந்தியது.
முருகனை மேற்கொண்டு படிக்க வைக்க ஆசைப் பட்டாள். வழி தெரியவில்லை. எங்கே தன்னுடைய இயலாமையினால் படிப்பு நின்று விடுமோ என்று நினைத்து வாடிப் போனதில் சுமதிக்கு மன உளைச்சல் நேர்ந்தது. இந்த நேரத்தில் தான் சுபா அவளை எங்களிடம் அழைத்து வந்தாள்.
முருகனுக்கு தன்னால் இப்படி நேர்ந்தது என்ற குற்றப் மனப்பான்மை வாட்டியது. அவனையும் சுமதியுடன் கூடவே பார்க்கத் தொடங்கினேன். முருகன் படிக்க விரும்புவதை ஊக்கப்படுத்தும் வகையில் சுமதியை யோசிக்கச் செய்தேன். அவளுக்கு உறுதுணையாக முருகன் இருக்கும் படியான பாதைகளைப் பற்றி அவர்களை யோசிக்கச் செய்தேன்.
சுமதி அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் வங்கியில் விசாரிக்க முடிவெடுத்தாள். முருகன் தன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் பேச முடிவெடுத்தான். மேற்கொண்டு முன்னேற பாதை இருக்கிறது என்று தெரிய வந்ததே சுமதியை அசுவாசப் படுத்தியது. இரண்டு நாட்களில் திரும்பி வந்தார்கள். வங்கிக்குத் தேவையான ஆதரவை சுமதியின் பூ வாங்கும் வாடிக்கையாளார் ஒருவர் செய்வதாகச் சொன்னாள்.
முருகன் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததை காலேஜ் தலைமை ஆசிரியர் கவனித்து படிப்பிற்குப் பண உதவி (scholarship) இருப்பதைப் பற்றி கூறினார். இதுபோன்ற சலுகைகளைப் பற்றிய பல தகவல்களைத் தந்தார். இந்த தகவல்கள் புரிய வர, சுமதி அமைதி அடைந்தாள்.
அம்மாவும் மகனும் (வளர்ப்பு மகன் என்ற சாயல் எதிலும் தென் படவே இல்லை) மிக சந்தோஷப் பட்டார்கள். முருகனின் கவலை, தான் படிக்க வெளியூர் போனால் யார் தன் அம்மாவைப் பார்த்து கொள்வார்கள் என்று. இருவருக்கும் தெரியாமல் சுபா என்னைச் சந்தித்தாள்.
சுபா தன் கணவனுடன் வந்தாள். இருவரும் அந்த இரண்டு வருடம் சுமதி தங்களுடன் இருப்பதை விரும்பவதாக தெரிவித்தார்கள். சுமதி இதை ஒப்புக் கொள்ள மறுப்பதாகச் சொல்லி சுபா வருந்தினாள். இவர்களை சுமதி முருகனுடன் சேர்ந்து வரச்சொல்லி அனுப்பி வைத்தேன்.
அதற்கு முன்பு சுமதி ஸெஷனுக்காக என்னிடம் வந்தாள். தனக்கு மனத் தோழனாக சுந்தரம் இருந்ததைப் பற்றி விளக்கினாள். சமீப காலமாக தனக்குப் பேசி, பகிர யாரும் இல்லாதது போல இருப்பதாகக் கூறினாள். இதை விலாவாரியாகப் பேச தன்னுடைய கூடப் பிறந்தவர்களைப் பற்றி பகிரச் செய்தேன்.
கல்யாணம் ஆகும் வரையில் கூடப் பிறந்தவர்களுடன் பாசமாக, மன ஒற்றுமையுடன் இருந்ததை ஞாபகம் செய்யச் செய்ய அவர்களுடன் உறவை மீண்டும் புதுப்பிக்க நினைத்தாள். செய்தாள். இதுவும் மனதிடத்தை அதிகரித்தது.
கூடப் பிறந்தவர்களை சந்திக்கையில் சுமதி பலவற்றை கவனித்தாள். குறிப்பாக, ஒவ்வொருவரும் தன்னுடைய பிள்ளைகளுடன் இருப்பதை. சுமதியை தங்களுடன் சுபாவும் கணவரும் அழைத்து வந்தார்கள். அவர்களுடன் இந்த இரண்டு வருடம் சுமதி இருந்தால் அது எப்படி தனக்கும் உதவும் என்பதை வர்ணித்தார்கள். சுபாவும் கணவரும் உற்சாகத்துடன் சொன்னதே சுமதியை உருக்கியது.
முருகனின் மேல் படிப்பு பக்கத்து டவுனில் அமைந்தது. அங்கேயே ஹாஸ்டலில் இருக்கச் சொன்னார்கள். இருப்பதற்கு முருகன் முடிவு செய்தான். அடுத்த மூன்று செஷங்களில் சுபாவுடனும் கலந்து ஆலோசித்து அம்மாவின் இருப்பிடம், நிம்மதி பற்றி முடிவெடுக்கப் பட்டது. சுபாவுடன் இருக்க சும்டஹியிடம் பரிந்துரைத்தான். சுமதி சுபாவுடன் இருக்க ஒப்புக் கொண்டாள். மனம் நிம்மதி அடைந்தாள்.
சுந்தரம் இல்லாததற்கு ஈடுகட்ட முடியாது எனத் தோன்றியது. சுபா வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள எட்டு பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு விட்டு அழைத்து வருவதென்று பொறுப்பு ஏற்றுக் கொண்டாள். இனி மீதி வாழ்க்கை இப்படி பல பிள்ளைகளுக்காக என்ற எண்ணத்தை ஏற்றுக் கொண்டு மனத்தெளிவுடன் வாழ்ந்தாள் சுமதி.
கொரானா உயிர்க்கொல்லி
சீனாவில் ஆரம்பித்து இன்று உலகத்தையே அச்சுறுத்தும் கொடிய விஷக் கிருமி கோவிட் 19 என்கிற கொரானா நோய். !
இதை மூன்றாம் உலக யுத்தம் எனலாம்!
உலகளாவிய தொற்று நோய் ( PANDEMIC) என்று சொல்லப்படுகிறது.
இதைப்பற்றி விவரிக்கிறது இந்த அறிவு பூர்வமான காணொளி !
சுஜாதா குவிஸ் – ( பதில் அடுத்த பக்கம்)
சுஜாதா குவிஸ்
- சுஜாதாவை வளர்த்த அவரின் அப்பாவழிப்பாட்டியின் முழுப்பெயர் என்ன? (பல இடங்களில் சுஜாதா இவரைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கிறார்)
- சுஜாதாவின் அப்பா இவரிடம் கேட்கவேண்டும் என்று எழுதிவைத்துக்கேட்கமுடியாமலேயே இ|றந்துவிட்டசப்ஜெக்ட் என்ன? –
3.அந்தக் கேள்வியெல்லாம் நாங்க கேக்கறதிலை” என்னும் அதிர்ச்சி வரிகளுடன் முடியும் சுஜாதாவின் சிறுகதை எது? –
- லாயர்கணேஷ் தோன்றிய முதல் கதை எது? அடுத்த சில கதைகளில் வரும் அவரின் அஸிஸ்டெண்ட் பெயர் என்ன? –
- “மகாவிஷ்ணுதான் தரிசனம் தர விரும்புகிறாரோ என்று பார்த்தால்” என்னும் சுவாரஸ்ய வரிகளில் தொடங்கி சுஜாதா எழுதினது என்னசப்ஜெக்ட்?
- சுஜாதா பல இடங்களில் மேற்கோள் காட்டிய பெண் கவிஞர் யார்? –
- ”நிம்ஜோஇண்டியன்டிஃபன்ஸ் ஆடுவியா” என்று கேட்கும் கதாபாத்திரம் ஆணா பெண்ணா?
- Dying is an art like everything else I do it exceptionally well –சுஜாதா மேற்கோள் காட்டிய இந்தக்கவிஞர் யார்? – இதை மேற்கோள் காட்ட வேண்டிய உந்துதல் என்னவாக இருக்கும்?
- சுஜாதாவின்லாண்டரிக்கணக்கில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன? –
- ”வட்டநிலாப்பின்னணியில்,வண்ண ஜரிகை நிலத்தில் அந்தத்தோணி அசைந்து அசைந்து வந்தது. எங்கும் இருட்டு. காட்டைப்போல இருட்டு. மசியைப்போல இருட்டு. சாவைப்போல இருட்டு.” – இந்த அபார வரிகள் எந்தக்கதையில் வருகின்றன?
- சுஜாதா எழுத்தாளர் ஆனபிறகு எழுதிய முதல் நாடகத்தின் பெயர் என்ன?
- சுஜாதா – பூர்ணம்விஸ்வனாதன் கூட்டணியில் வந்த முதல் நாடகம் எது?
- திராவிடன் பண்டுதானே?அது பிராவிடண்ட பண்ட் , இங்க்லீஷ் பேப்பரை மாவு சலிக்கிறதுக்கு உபயோகப் படுத்தினா அவ்வளவுதான் வரும். இது எந்த நாடகத்தில் வரும் வசனம்?
- கடவுள் வந்திருந்தார் நாடகத்தில் வரும் எதிர்கால மனிதனின் பெயர் என்ன?அவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவன் ?
- இந்த நாடகத்தைசெட்டுக்கள் ஏதும் இன்றியே ஒளியால் பிரித்து நடிக்க முன்வந்தாலும் எனக்குச் சம்மதமே ! – சுஜாதா எந்த தன் நாடகத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்?
- அலன்பெக்கர் எழுதிய டோலரஸ் என்ற நாடகத்தின் பாதிப்பில் சுஜாதா எழுதிய நாடகம் எது?
- ஜே பிமில்லரின் பிரபல டெலிவிஷன் நாடகத்தை ஒட்டி எழுதிய நாடகம் எது?
- சுஜாதா என்கிற ரங்கராஜன்எங்கு பிறந்தார்?
- முதல் கதை எந்தப் பத்திரிக்கையில் வந்தது?
- சுஜாதாவுடன் திருப்பூர் கிருஷ்ணன் பணியாற்றியது எந்தப் பத்திரிகையில்?
21 . கணையாழியில் சுஜாதா கடைசிப்பக்கத்தை எவ்வளவு காலம் எழுதினார்?
22 . “ அடிக்கடி எழுதுங்கள்” என்று ஒரு வரியில் சுஜாதாவை ஊக்குவித்த பத்திரிகை ஆசிரியர் யார்?
- ஒரு நாணயம் (coin) பற்றி சுஜாதா ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். எந்த நாணயம் அது?
- .”என்னே இந்த சமூகத்தின் கொடுமை?”என்று சுஜாதா ஒரு கதையில் எழுதாமல்இருந்ததற்காக தன்னைப் பாராட்டிக் கொள்ளும் கதை எது?
- . “கணவனின் சட்டை என்பதே ஒருகிறக்கத்தைஏற்படுத்த அன்புடன் அதை முகர்ந்து பார்த்தாள். முதுகுப் பக்கத்தில் லேசான பர்பியூம் வாசனை. நம் வீட்டில் இந்த வாசனை கிடையாதே? ” இது எந்தக் கதையில் வருகிறது?
- சுஜாதா எழுதியதிமலா என்ற சயின்ஸ் பிக்ஷனில் திமலா எதை உருவகப் படுத்தியிருக்கிறது?
- .சுஜாதாவின் எந்தக் கதை குமுதத்திலும் பின்னர் குங்குமத்திலும் பிரசுரிக்கப்பட்டது? அதற்கு இலக்கியச் சிந்தனையின் விருது கூட கிடைத்திருக்கிறது.
- .விகடனில்வந்த ஒரு கதை டி வியில் நாடகமாக வந்துள்ளது?
- இந்த கதையைப் படித்து விட்டு,உங்க வீட்டிற்கு (கொல்ல) வரட்டுமா என ஒருவர் சுஜாதாவிற்கு விகடன் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினாராம். எந்தக் கதை ?
- இலட்சம் புத்தகங்கள் என்கிற சிறுகதை எந்த ஊரில் நடந்த நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது?
- தலைமைச் செயலகம் என்று எதைப்பற்றி எழுதினார்?
- சுஜாதாவின் கருப்பு வெளுப்பு சிவப்பு கதையின் speciality என்ன?
- எமர்ஜென்ஸிபற்றி சுஜாதா பாடிய நேரிசை வெண்பாவின் முதல் சொல் எது ?
- . சிறுவர் இலக்கிய வரிசையில் சுஜாதா எழுதிய நாவல் எது ?
- எல்லோருக்கும் தெரிந்த ஆனால் தெரியாதது மாதிரி நடிக்கும் சுஜாதாவின் பிரபலமானஜோக்கில்வரும் நாடு எது?
- சுஜாதாவின் கோணல் பார்வை என்று அவரை விமர்சித்து புத்தகம் போட்ட எழுத்தாளர் யார் ?
- ஓலைப்படாசுஎன்ற கதையின் மெயின் தீம் என்ன ?
- சுஜாதாவின் முதல் நாவல் எது?
- . சுஜாதா தயாரித்த தமிழ்ப் படம் எது?
- சுஜாதாவின் எந்தத் தொடர் கதைக்காக அவருக்குகட்-அவுட்வைத்தார்கள்?
- பத்துசெகண்ட்முத்தம் எதைப்பற்றி?
- 14 நாட்கள் எதைப் பற்றி?
- சுஜாதா எழுதியஒரெழுத்துநாவலின் பெயர் என்ன?
- சுஜாதாவுக்குத்தமிழில் பிடித்த 6 வார்த்தைக் கதை?
- சுஜாதா ஒரு நடிகர்-நடிகைதிருமணத்திற்குசென்று எடுத்த போட்டோ கற்றதும் பெற்றதுமில் வந்திருக்கிறது. யார் அவர்கள்?
- காகித சங்கிலிகள் என்ற நாவல் எந்த வியாதியை அடிப்படையாக வைத்து எழுதியது?
- கொலையுதிர்காலத்தில் சுஜாதா பயன்படுத்திய விஞ்ஞானக் கோட்பாடு எது?
- கணையாழியில் சுஜாதா எழுதிய
“பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி-மத்தபடி
பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சணை.”
என்ற வெண்பாவிற்கு ஈற்றடி கொடுத்தவர் யார்?
- கதை கட்டுரை தவிர முவரதராசனார்– சுஜாதா இருவருக்கும் உள்ள ஒருஒற்றுமை என்ன?
50 நைலான் கயிறு கதையில் டெலிபோன் எண்ணின் முடிச்சை அவிழ்ப்பது எது?
சுஜாதா குவிஸ் -விடை
சுஜாதா குவிஸ் ( விடை)
- லட்சுமி அம்மாள்
- பையானிக்ஸ்
- மஹாபலி
- பாதி ராஜ்யம்,நீரஜா
- ரெடீனாடிடாச்மெண்ட்
- எரிக்காஜாங்
- ரோபோ- யம் என்று பெயர். ஆகாயம் என்னும் நாடகம்
- சில்வியா பிளாத், அவர் தற்கொலை செய்துகொண்டார்
- கர்ச்சீஃப்1 (ரத்தக்கறையுடன்)
- கரையெல்லாம் செண்பகப்பூ
- முதல் நாடகம்
- ஒரு நாடகம் அல்ல;இரு நாடகங்கள் : ஒரு கொலை – ஒரு பிரயாணம்
- கடவுள் வந்திருந்தார்.
- ஜோ,22ம் நூற்றாண்டு
- டாக்டர்நரேந்திரனின் வினோத வழக்கு
- சரளா
- முயல்
- திருவல்லிக்கேணியில்
- 1953இல் சிவாஜி என்ற பத்திரிகையில் வந்தது.
- அம்பலம் என்கிற இணையதளப் பத்திரிகையில்
- 35வருடங்கள்
- எஸ் ஏ பி அண்ணாமலை (குமுதம்)
- இரண்டனா
- அரிசி
- வாஷிங் மெஷின்
- திருமலாதிருப்பதி
- நிஜத்தைத் தேடி
- முதல் மனைவி
- பாலம்
- யாழ்ப்பாணம்
- மூளை
- பாதியில் நிறுத்தப்பட்டது .
- மீசா
- பூக்குட்டி
- மெக்ஸிகோ
- வெற்றியழகன்
- சிறுவனின்பிளாக்மெயில்
- நைலான்கயிறு
- லிட்டில்ஜான் / நிலாகாலம் / பாரதி
- கனவுத் தொழிற்சாலை
- ஒலிம்பிக்ஸ்100 மீட்டர் ஓட்டம்
- இந்தியா பாகிஸ்தான் போரைப்பற்றி
- ஆ
- ஒருஊர்லஒரு நரியாம். அதோட சரியாம்
- சூர்யாஜோதிகா
- கிட்னிசெயல் இழப்பு, nephrology
- ஹோலோகிராம்
- நா பார்த்தசாரதி
- இருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்
- ஜாக்பாட்
எல்லிஸ் டங்கனின் தமிழ்நாடு 1930 களில்
எல்லிஸ் டங்கன் ( யார் தெரியுமா? எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவர் . சீமந்தனி, இரு சகோதரர்கள்,அம்பிகாபதி,சூர்ய புத்திரி,சகுந்தலா,காளமேகம்,தாசிப்பெண்,வால்மீகி,மீரா, பொன்முடி மந்திரி குமாரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர். அமெரிக்கர் )
தென்னிந்திய வாழ்க்கை என்ற அவர் குறும்படத்தை பாருங்கள் !
அவர் படத்திலிருந்து சுட்ட காட்சிகள் மாதிரி இருக்கிறது.
அவரே பின்குரல் !
எமபுரிப்பட்டணம் – அறிவுப்பு
எமபுரிப்பட்டணம் இரு வடிவங்களில் வந்துகொண்டிருப்பது குவிகம் வாசகர்களுக்குத் தெரியும்.
முதல் பகுதி சூரிய புத்திரனாக எப்படி எமன் பிறக்கிறான் என்பதைப் பற்றி புராண ஆதாரங்களுகள் கூடிய கற்பனைச் சித்திரம்.
இரண்டாம் பகுதி இன்றைய கால கட்டத்தில் எமபுரிப்பட்டணத்தில் நடைபெறும் கலாட்டாக்கள் !
இந்த இரண்டையும் வெவ்வேறு வடிவில் கொண்டு செல்லப் புதிய திட்டம் உருவாகி வருகிறது.
அதற்கு சற்று காலம் தேவை !
புது வடிவம் என்ன – எப்படி வரப்போகிறது என்பதைப் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வரும்
அது வரைக்கும் சற்று பொறுக்கலாமே!
கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
ஒட்டாவா வில் மதியம் லஞ்ச் எதிர்பாராதது நம்ம ஊர் மலையாள சேச்சி உணவகம்
Thali – coconut lagoon –
சோறு , பூர இரண்டு , சப்ஜி , பப்படம் , சாம்பார் , தயிறு
என அமர்க்களம்!
சிரித்த முகத்துடன் (சந்தனம் மிஸ்ஸிங் )
உபசாரம் செய்த சேச்சிக்கு வயது இருபத்தைந்துக்குள்தான்!
பொடி நடையாக அருகே இருந்த பார்லிமெண்ட் கட்டிடம் சென்றோம். சுற்றிலும் பனி. மிகப் பழைய கட்டிடங்கள். மணிக் கூண்டு. வாசலில் ஏதோ ஒரு கட்சியினர் கொடிகளுடன் அரசுக்கு எதிரான கோஷங்கள் போட்டபடி நின்றிருந்தார்கள். போலீஸ் பந்தோபஸ்த்து, பந்தல், வாழ்க ஒழிக கூச்சல்கள், தலைமுறை சொல்லும் பேனர்கள் எதுவும் கிடையாது – ‘இதெல்லாம் ஒரு போராட்டம்’ என்றது மைண்ட் வாய்ஸ்!