வானிலை சரியாக இருந்ததால் விமானம் சரியான நேரத்திற்குக் கிளம்பியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தாய் நாட்டுக்குச் செல்கிறோம் என்ற நினைப்பில் மிதந்து கொண்டு இருந்தேன் நான். வழக்கமாக சுவையற்று இருக்கும் விமானக் கம்பெனியின் உணவு கூட அன்று சுவை கூடி இருந்ததாகப் பட்டது. எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம். தேவையில்லாமல் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ மனதில் ஏற்றிக் கொள்ளும் போது, நம்மை சுற்றி இருக்கும் இடங்களோ, நடக்கும் நிகழ்வுகளோ கூட அதற்கேற்றார் போல மாறி விடும். விமானப் பணிப் பெண் கொடுத்த உணவைத் திருப்தியாக உண்டு விட்டு, இலேசாகக் கண் அயரலாம் என்று நினைத்தேன் எப்பொழுதுமே எனக்குத் தூக்கத்திற்கு மாத்திரை மருந்துகள் தேவையே இல்லை. ஏதாவது ஒரு புத்தகத்தில் அமிழ அரம்பித்தால் அப்படியே ஒரு பத்து நிமிடங்களுக்குள் கண்கள் அயர ஆரம்பித்து விடும் அப்படியே தூங்கி விட வேண்டியதுதான்.
ஆனால் இன்றைக்கு அது நடக்காது போலத் தோன்றியது. ஏனென்றால் பக்கத்து சீட்டில் அமர்ந்து இருக்கும் இளம் பெண் ஏதேனும் தொல்லைக் கொடுத்துக் கொண்டே வந்தாள். அவள் கைகள் என் மேல் இடித்த வண்ணம் இருந்தன. விமானம் கிளம்பியதில் இருந்து ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த பெண் ஏதோ பதட்டத்திலேயே இருக்கிற மாதிரி தெரிந்தது. உள்ளே வந்து இருக்கையில் அமரும் போதே கவனித்து விட்டேன். கண்களில், உடலில் ஒரு பதட்டம். மேலே பெட்டியை வைக்கும் போது கைகளில் ஒரு சின்ன நடுக்கம். நேராக உட்காராமல் சற்று சரிந்தே உட்கார்ந்தாள். சிறிது நேரம் வலப்புறம் திரும்பி மடிந்து அமர்ந்தாள். பொறுக்காமல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே மீண்டும் இடப் பக்கம் மடிந்து அமர்ந்து கண்களை மூடினாள். ஒரு ஐந்து நிமிடங்கள் கூட அவளால் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார முடியவில்லை. முகத்தைப் பார்த்தால் இந்தியர் மாதிரிதான் தெரிந்தது. இந்தியா போய் சேர இன்னும் எட்டு மணி நேரம் ஆகும். அது வரை இப்படித்தான் பதட்டத்திலேயே இருப்பாளா? தன் உடையை திருகிக் கொண்டும், முடியை இழுத்துக் கொண்டும், பிறகு சற்றுநேரம் கண்களை மூடியும்….என்று பதட்டத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டேதான் இருந்தாள். காபி, டீ எதுவும் வேண்டுமா என்று கேட்கப் பட்ட போது அவைகளை மறுத்தாள். உடல் நிலை சரியில்லையோ?
முதலில் என்ன விஷயம் என்று கேட்கலாமா என்று நினைத்தேன். பிறகு வேண்டாம் என்று முடிவு செய்து கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் கண்களை ஓட்ட ஆரம்பித்தேன். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று இரண்டே நிமிடங்களில் எனக்குப் புரிந்து போனது. அவளைத் தவிர்த்து விட்டு புத்தகத்தில் அமிழ மனம் ஒத்து வரவில்லை. என்ன ஏது என்று கேட்டு விடலாமா என்று ஒரு சமயம் தோன்றியது ஆனால் மற்றொரு புறம் எனக்கெதுக்கு வம்பு? எதையாவது கேட்கப் போய் அது வேறெதுவிலாவது கொண்டு போய் விடலாம் என்றும் தோன்றியது.. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டேன். புத்தகத்தில் என் கவனத்தை வலுவாகச் செலுத்தினேன். ஹூஹும் மனம் பிடிவாதம் பிடித்தது. கண்கள் புத்தகத்தில் லயித்தனவே அல்லாமல் மனதில் எதுவும் விழ வில்லை. ஒரு முறை என்னை சுற்றி ஒரு முறை பார்த்துக் கொண்டேன். பிறகு புத்தகத்தை மூடி வைத்து விட்டு மெல்ல கண்களை மூடினேன்.
நேரம் ஆக ஆக பக்கத்து இருக்கையில் அவளுடைய அவஸ்தை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. பணிப்பெண்கள் சுற்றிச் சுழன்று குடிப்பதற்கு, சாப்பிடுவதற்கு என்று எதையாவது கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள். ஆனால் என் பக்கத்து இருக்கைக்காரி அது எதையும் கவனித்த மாதிரியே தெரியவில்லை. தொடர்ந்து ஒரு பதட்டத்திலேயே இருந்தாள். அவளுடைய முழங்கை என் மேல் இடித்த வண்ணமே இருந்தது.
என்னால் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொறுக்க முடியவில்லை. மெல்ல அவளைத் திரும்பி நேராக பார்த்தேன். வயது இருபத்தி ஐந்து அல்லது ஒன்றிரண்டு கூடுதலாக இருக்க வேண்டும். கவலையை தெளிவாகக் காட்டும் முகம். என் கண்களை நேரில் பார்ப்பதைத் தவிர்த்த மாதிரிதான் எனக்குத் தெரிந்தது. தாங்க முடியாமல் “எதாவது உதவி தேவையா? என்று அவளிடம் ஆங்கிலத்தில் கேட்டே விட்டேன். என் கையிலிருந்த புத்தகத்தை பார்த்தவள் “இல்லை” என்று தமிழில் பதில் கொடுத்தாள்.
தமிழகத்தைச் சேர்ந்தவள்தான். அப்பாடா என்றிருந்தது. “இல்லை உன்னைப் பார்த்தால் ஏதோ பதட்டத்தில் இருப்பதைப் போல எனக்குப் படுகிறது” நானும் தமிழுக்கு மாறினேன். மெல்லக் கண்களை மூடிக் கொண்டாள். எதையோ சொல்வதற்கு தயாராகிறாள் என்று எனக்கு பட்டது. அமைதியாகக் காத்திருந்தேன். அரை நிமிட அமைதிக்குப் பிறகு என்னை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் இலேசாக கண்ணீர் துளிகள் தெரிந்தன. எனக்கு சங்கடமாக இருந்தது. அவளது உதடுகள் துடித்தன. அழுகையை அடக்கிக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள்.
“நாளைக் காலையில் என் தந்தையை தூக்கில் போடுகிறார்கள்.”
என் காலடியில் உலகம் சடாரென நழுவினதைப் போல உணர்ந்தேன் நான்.. ஒரு வெடிகுண்டைத் தூக்கி என் மேல் போட்டதைப் போலத் திடுக்கிட்டுப் போனேன். இதயம் துடிப்பது ஒரு வினாடி நின்றுவிட்டதோ என்று பட்டது. இது என்ன இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டு விட்டாள்!? என்ன சொல்வது என்று எனக்கு ஒன்றுமேப் புரியவில்லை. இதென்னக் கொடுமை? இந்தச் சிறிய வயதில் இவளுக்கு இப்படி ஒரு சோதனையா? அடப் பாவமே! என்று என்னையுமறியாமல் சற்று சப்தமாகவே கூறி விட்டேன். அவள் எங்கோ பார்த்தபடி தன் கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள். எனக்கும் மனம் கலங்கிப் போயிருந்தது. அவளிடம் என்ன பேசுவது? அவளைச் சமாதானப் படுத்த வேண்டுமா? அதை எப்படி செய்வது? அவளைப் பார்த்துப் பார்த்து மனது கலங்கிப் போனேன் நான் ஒரு ஐந்து நிமிடங்கள் நாங்கள் இருவரும் எதையும் பேசவில்லை. விமானம் பறக்கும் போது கேட்கும் ஒரு விதமான அலுப்பூட்டும் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
அந்தப் பச்சாதாபம், பரிதாபம் சிறிது நேரம்தான். அப்படியே என் உணர்ச்சிகள் சரசரவென்று தலைகீழாக மாறத் தொடங்கின.. என் அனுதாபம், பச்சாதாபம் வடிந்து போக மெல்ல மெல்ல அவள் மேல் இனம் காண முடியாத ஒரு கோபம் வளர ஆரம்பித்தது. கண்களில் எரிச்சலோடு அவளை இப்போது உற்று நோக்கினேன். ஓங்கி அறையலாமா என்று கூட வந்தது எனக்கு. .
“இப்படி சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?!” என்று மெல்லிய குரலில் கேட்டேன். பின் பக்க இருக்கைகளில் இருப்பவர்களில் ஓரிருவர் மெல்ல எங்களை கவனிக்க ஆரம்பிப்பது தெரிந்தது. என்னுடைய எரிச்சலையும் கோபத்தையும் கட்டுப் படுத்துவது மிகவும் சிரமாக இருந்தது. பற்களைக் கடித்துக் கொண்டு அடிக்குரலில் மீண்டும் கேட்டேன். “போன வாரமே நீ இந்தியாவில் இருந்திருக்க வேண்டாமா? அவரைப் பார்த்து பேசுவதற்குக் கூட அனுமதி கொடுத்திருப்பார்களே கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல் இங்கே ஒரு விமானத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்?” கோபத்தில் என் வார்த்தைகள் பாம்பு மூச்சு விடுவது போல வந்தன. என்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதே மிகவும் கஷ்டமாக இருந்தது.
என்ன இந்த காலப் பிள்ளைகள் இப்படி இருக்கிறார்கள்? உறவுகளுக்கு இவ்வளவுதான் மரியாதையா? என்றெண்ணிப் புழுங்கினேன். பெற்றவர்கள் மேல் கூடவா மதிப்பு இல்லை? என்னை அமைதிப் படுத்திக் கொள்ள நான் மிகவும் சிரமப் பட வேண்டியிருந்தது. அவளோ அமைதியாக கண்களை மூடி மூடித் திறந்துக் கொண்டிருந்தாள். தன் கவலையை என்னிடத்தில் ஏற்றி விட்டதில் அவளுக்கு சற்று நிம்மதியாக இருக்கும் போல இருக்கிறது.
ஒரு விதத்தில் பார்த்தால் பாவமாகக் கூட இருந்தது. சிறு வயது, உலகம் தெரியாமல் இருக்கலாம். ஒரு வேளை லீவு எடுத்துக் கொண்டு இந்தியா வர முடியாமல் இருந்திருக்கலாம். நியாயமான காரணத்தினால் கூட அவள் இந்தியா செல்லாமல் இருந்திருக்கலாமோ? விசா, பாஸ்போர்ட் இது மாதிரி ஏதாவது சிக்கல்கள் இருந்திருக்கலாமோ? இந்தியாவிற்குப் போவதால் விசா தேவை இருந்திருக்காது. பின் வேறு என்னவாக இருந்திருக்கும்? கேள்விகளும் பதில்களும் என்னை சுற்றி சுற்றி வந்தன. நானும் இருக்கையில் சாய்ந்து மனதை அலைபாய விட்டேன்.
இப்போது அவளுடைய பதட்டம் இடம் மாறி என்னைத் தொற்றிக் கொண்டது. உட்கார முடியாமல் தடுமாற ஆரம்பித்தேன் நான். சே! எனக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தி என் பயணத்தின் அமைதியைக் கெடுத்து விட்டாளே! அவளை மறக்க வேண்டும். நான் யார் இதில்? யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? யார் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? மித மிஞ்சிய எரிச்சலில் இந்த கேள்விகளை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.
எங்களுக்குப் பின் புற இருக்கைகளில் இருந்து வீடியோ பார்ப்பவர்களின் மெல்லிய சப்தங்கள் வந்து கொண்டிருந்தன. விமானத்தின் இரைச்சல் அதிகமானதாகத் தெரிந்தது. பணிப்பெண்கள் அங்கும் இங்குமாக நடந்து பயணிகளின் தேவைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் குசுகுசுப்பான பேச்சு சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. கண்களை மூடி அப்படியே இருந்தேன். பயணிகள், சேவைக்கு அழைக்கும் மணியை அழுத்தும் போது எழும் மென்மையான “டிங்” என்ற சப்தம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது.
அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேன் என்று தெரியவில்லை. அவள் பழையபடியே மாறி மாறி அமர்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவள் மாறும் பொழுதும் அவள் முழங்கை என் மேல் இடித்துக் கொண்டே இருந்தது. என் கோபத்தை மெதுவாக விழுங்கிக் கொண்டிருந்தேன். மேலும் ஒரு அரை மணி போயிருக்கலாம். அவளைப் பார்த்தேன். அழுது கொண்டிருந்திருப்பாள் போல இருந்தது. பெண்களுக்கு அழுகை என்ற ஆயுதத்தைக் கடவுள் கொடுத்து விட்டான். நினைத்த நொடியில் அதை உபயோகப் படுத்திக் கொள்வார்கள். மெல்ல அவள் கையை பற்றி ஆதரவாக அழுத்தினேன். சற்று அவளை ஆசுவாசப் படுத்தலாம் என்கிற நோக்கில், “அப்பிடி என்ன குற்றம் செய்தார் உன் அப்பா?” என்று அவளிடம் அடிக் குரலில் கேட்டேன். என் பின் இருக்கைக்காரர் அநேகமாக எங்களையே கவனித்துக் கொண்டிருந்தார் என்றுதான் நினைக்கிறேன். அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். உதடுகள் துடிக்க மெல்லிய குரலில் எனக்கு பதில் சொன்னாள்.
“என் கணவரைக் கொன்று விட்டார். ஆணவக் கொலை”
வியப்பின் விளிம்புக்கே சென்று விட்டேன் நான். இதென்ன என்று அதிர்ந்து போனேன். அடுத்தடுத்து அணுகுண்டுகளா? என்ன இவள் இவ்வளவு சோகங்களைத் தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறாள்? எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் மனமும் உடலும் பரபரப்பாக மாறின. என்ன செய்வாள் இவள்? கணவனைக் கொன்றவர் என்கிற விதத்தில் தந்தையை வெறுப்பாளா? பெற்றெடுத்த தந்தை என்கிற விதத்தில் அவருக்காக, அவருடைய மரணத்திற்காக வருத்தப் படுவாளா? அதுவும் இயற்கையான மரணமா? அசாதாரண, வன்முறையான மரணம் ஆயிற்றே! மறுபடியும் அவளை உற்றுப் பார்த்தேன். வேறேங்கோ வெறித்துப் பார்த்த படி தன்னை மிகுந்த சிரமத்துடன் கட்டுப் படுத்திக் கொண்டு உட்காரந்திருந்தாள். அழுதழுது வற்றிப் போயிருப்பாள் என்பது புரிந்தது. இந்த சிறுவயதில் இப்படி ஒரு சோதனையா என்றும் நினைத்தேன். என்ன தலைவிதி இவளுக்கு? ஏன் இவளை ஆண்டவன் இப்பிடி சோதிக்கிறான்? நான் ஊமையாகி விட்டேனோ என்று எனக்குத் தோன்றியது. அவளால் வேறு என்ன செய்ய முடியும்? கணவனின் கொலைகாரன், இருந்தால் என்ன இறந்தால் என்ன என்கிற நினைப்பில் முதலில் வர வேண்டாம் என்று இருந்திருப்பாள். பிறகு என்ன காரணத்தினாலோ, யாருடைய அறிவுருத்தலாலோ வர வேண்டும் என்று கிளம்பியிருக்கலாம். எனவே தாமதாமாகி இருக்கலாம். ஆண்டவா இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது என்று தோன்றியது. எவ்வளவு கொடுமையான ஒரு மனோ நிலையில் இந்தச் சின்னப் பெண் இருந்திருக்க வேண்டும்.
மிகுந்த யோசனைக்குப் பிறகு, “நம்ப ஊரில் சூரிய உதயத்திற்கு முன் தண்டனையை நிறைவேற்றி விடுவார்களே.” என்றேன் அவளிடம். அப்படி சொல்வது கூட அநாகரீகமோ என்று ஒரு கணம் எனக்குத் தோன்றியது. மெல்ல ஒரு வினாடி என்னிடம் பார்வையைத் திருப்பியவள், “உம்…தெரியும்” என்று முனகினாள்.
“இந்த விமானம் சென்னையை விடிகாலையில்தான் சென்றடையும்” என்றேன்.
சற்று திரும்பி அமர்ந்தவள், “தெரியும்” என்றாள்.
“அப்புறம். எல்லாம் தெரிந்து கொண்டு எதற்கு போகிறாய்? நீ வரப்போவது யாருக்காவது தெரியுமா அங்கே?” என்று கொஞ்சம் எரிச்சலோடு வினவினேன்.
“நீங்கள் சொல்வது சரி. முதலில் போவது இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். பிறகு அவருடைய ஞாபகங்கள் என்னை வாட்டத் தொடங்கின. திரும்பத் திரும்ப என்னுடைய சிறுவயதும், அதில் அவர் என்னை வளர்த்த விதமும் தோன்றிக் கொண்டே இருந்தன. கணவன் கொல்லப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றன. அப்பாவையாவது அவருடைய கடைசி நிமிடத்தில் உயிரோடு பார்த்து விட முடியுமோ என்கிற பேராசையில் லண்டனில் இருந்து கடைசி நேரத்தில் கிளம்பி விட்டேன்.” அவளை மறுபடி உற்றுப் பார்த்தேன். “இதுதான் இந்திய நாட்டின் பண்பாடோ?” என்று எனக்குத் தோன்றியது.
நான் நினைத்தது சரிதான். போவதா, வேண்டாமா என்ற மனப் போராட்டத்தில் நேரத்தைக் கடத்தி இருக்கிறாள். கடைசியில் தானாடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. பாசம் அவளைக் கலைத்துப் போட கிளம்பி இருக்கிறாள். இவள் நேற்று இரவு சென்னையில் இருந்திருந்தால் கூட அவரைப் பார்க்க அனுமத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இரண்டு நாட்களுக்கு முன் தான் உறவினர்களை அனுமதிப்பார்கள் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இவள் இப்பொழுது அங்கு போய் என்ன சாதிக்கப் போகிறாள்? கண்டிப்பாக அவளது தந்தையை அவளால் உயிரோடு பார்க்கவே முடியாது. கெஞ்சிக் கூத்தாடினால் கூட அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே.
“இந்த விமானம் அதிகாலை ஐந்து மணிக்குதான் சென்னையை சென்றடையும். விமான நிலையத்தில் சடங்குகள் அனைத்தையும் முடித்து கொண்டு நீ சிறைச்சாலையை சென்றடைய கண்டிப்பாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகி விடும். அப்பொழுது எல்லாமே முடிந்து போயிருக்கலாம்.” என்ற என் அபிப்ராயத்திற்கு அவள் பதில் எதுவும் கூறவில்லை. கண்கள் மூடியிருந்தன. தன்னையே மறந்து நிலைமையை அசை போடுகிறாள் என்று நினைத்தேன். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் பிரச்சினை என் மண்டையில் ஏறி விட்டது. எதாவது செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். என்ன செய்வது என்று புரியவில்லை. இந்த விமானம் இன்னும் ஒரு மணி நேரம் முன்னதாக சென்னையை அடைய முடியுமா? எனக்குத் தெரியவில்லை. எழுந்தேன். பணிப்பெண்ணை அழைத்து கேப்டனோடு பேச வேண்டும் என்றேன். அவள் ஓரக் கண்ணால் என்னையும் என் சக பயணியையும் பார்த்துக்கொண்டே கேப்டனோடு உள்பேசியில் பேச ஆரம்பித்தாள்.
கேப்டன் வெளியே வந்தார். ஆறடியை தொடும் உயரம். மழு மழு என்று சிரைக்கப் பட்ட தாடை. சிரிக்கும் கண்கள். என் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு முன் சீட்டில் அமர்ந்தார். “என் உதவி எதற்காகத் தேவைப் படுகிறது?” என்று நாசூக்காகக் கேட்டார். நான் தணிந்த குரலில் அவரிடம் நிலைமையை விளக்கினேன். அமைதியாக முழுவதும் கேட்டார். “என்னால் எதுவும் செய்ய முடியாதென்றே நினைக்கிறேன். வேண்டுமானால் சென்னைக்கு பேசி இந்தப் பெண்ணை முதலில் வெளியே அனுப்ப முயற்சி செய்யலாம். அதையும் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஒரு முயற்சிதான்” என்று பதிலளித்தார். “இவள் தன் தந்தையைக் கடைசி கடைசியாகப் பார்ப்பதும், பார்க்க முடியாமல் போவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது” என்று அவர் கைககளைப் பிடித்துச் சொன்னேன். அவர் வெறுமனே சிரித்தார். அந்த சிரிப்பு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.
திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தேன். கலக்கத்திலும் வருத்தத்திலும் அமிழ்ந்து அவள் தூங்கி விட்டதைப் போல இருந்தது. “என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தாகி விட்டது” என்கிற ஒரு சின்ன திருப்தியோடு நானும் சற்று கண்களை மூடிக் கொண்டு தூங்க முயற்சித்தேன். அதற்குள் செய்தி மெல்ல விமானம் முழுவதும் பரவத் தொடங்கி விட்டது. பலர் குசுகுசுவென்று செய்தியை அசைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சரியாக அடுத்த நாள் காலை ஐந்து மணி பத்து நிமிஷத்துக்குதான் விமானம் சென்னையில் இறங்கியது. சொன்னபடியே எல்லோரும் அவளை முன்பாக அனுப்பி வைத்தோம். பலரும் அவளுக்காகப் பிரார்த்தனையும் செய்தோம். பலரின் கண்கள் கலங்கி இருந்தன. சென்னையில் அன்று நல்ல மழை. விமான நிலையத்தில் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்து விட்டு அவள் ஒரு வாடகைக் காரில் ஏறும் பொழுது மணி சரியாக ஐந்து முப்பது. என்னுடைய அலைபேசி எண்ணை அவளிடம் கொடுத்து, எல்லாம் முடிந்த பின் சாவகாசமாக என்னிடம் பேசச் சொன்னேன். அதற்கு பிறகு நான் என் வழியே செல்ல ஆரம்பித்தேன். அவளை மறந்து விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தேன். ஆனால் மனம் துடித்துக் கொண்டேதான் இருந்தது. என்ன ஆயிற்றோ தெரியலையே? அவள் அந்த இடத்திற்கு போய் சேரும் போது கண்டிப்பாக மணி ஏழு ஆகியிருக்குமே. அவளால் அவள் அப்பாவை உயிரோடு பார்க்க முடிந்ததா? சட்டப்படி அவள் அனுமதிக்கப் படுவாளா? அதுவும் தண்டனை நிறைவேற்றப்படும் சமயத்தில் யாரையாவது உள்ளே வர அனுமதிப்பார்களா? என்றெல்லாம் கேள்விகள் என்னை சுற்றிக் கொண்டே இருந்தன. சட்டத்திற்கு உணர்ச்சிகள் புரியாதே!
இந்த வேதனை எனக்கு இரண்டு நாட்கள் நீடித்தது. இரண்டு நாள் கழித்து அவள் பேசினாள். அவள் குரலே என்னைக் கலக்கியது. மெல்லிய குரலில் என்ன நடந்தது என்பதை விவரித்தாள் அந்த துர்பாக்யவதி.
***********
அந்தப் பெண் சிறைச்சாலையை அடையும் பொழுது எல்லாமே முடிந்திருந்தது. சிறையிலிருந்து சிறைக்கைதியைக் கிளப்பி அழைத்துக் கொண்டு போகும் போது யாரையும் அனுமதிக்கும் வழக்கமே கிடையாது. அவள் வந்த பொழுது அவளின் தந்தையை மேடைக்கு அருகே கொண்டு சென்று விட்டனர். எனவே அவளால் தன் தந்தையை உயிரோடு காணவோ அவரோடு பேசவோ முடியவில்லை. இது அவளுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. சரியான நேரத்திற்கு வரத் தவறி விட்டோமே என்று கதறி அழுதாள். அப்பாவைக் கடைசி நிமிடத்தில் காணப் போகிறோம் என்கிற மிகுதியான துடிப்பில் பசி, தூக்கம், களைப்பு எல்லாம் மறந்து இருந்தவளுக்கு. அது இல்லை என்றானவுடன் மிதமிஞ்சிய சோர்வில் தடுமாற ஆரம்பித்தாள்.. ஏமாற்றமும், சோகமும் அவளைச் சூழ்ந்து கொண்டன.
சுமார் இரண்டு மணி நேரம் காத்திருக்குப்புப் பின் அவள் அதிகாரியின் அறைக்கு அழைத்து செல்லப் பட்டாள். அறைக்குள் வந்தவள் பட்டும் படாமலும் தன் இருக்கையில் அமர்ந்தாள். ஒரு இறுக்கமான அமைதி சிறிது நேரம் அங்கே நிலவியது. அந்த அமைதி அவளைக் குலைத்துப் போட்டது. திடீரென்று உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். இருபத்தி நாலு மணி நேரமாகப் பதுக்கி வைத்திருந்த சோகம் எல்லைகளின்றிப் பீறிட்டுக் கிளம்பியது. குலுங்கிக் குலுங்கி அழுதாள். அதிகாரி அமைதியாக அவளை அழ விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நீ வருவாய் என்று அவர் உணர்ந்திருந்தார்” என்று மெல்லிய குரலில் அவளுக்கு அதிகாரி சொன்னார். அந்த வார்த்தைகளால் அடிபட்டுத் திடுக்கிட்டவளாய் அவள் நிமிர்ந்தாள். அவளுடைய கேவல்கள் இன்னும் அதிக வீரியமாயின. உலகத்தையே மறந்தவளாய் கதறி அழ ஆரம்பித்தாள்.
“ஆனால் எப்படி வருவாய்? எப்போது வருவாய் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை..” வெடித்துக் கிளம்பும் தன் கேவல்களை அடக்கிக் கொள்ள அவள் மிகவும் முயற்சித்தாள். அதிகாரி கண் ஜாடை காட்டவே வெளியில் காத்துக் கொண்டிருந்த ஒரு காவலர் உள்ளே வந்தார். அவர் கையில் ஒரு சிறிய பார்சல்.
“என் மகள் கண்டிப்பாக என்னைத் தேடி வருவாள். அப்போது நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது. இருந்தாலும் அவளுக்கு நான் எதாவது தர வேண்டும். தந்தே ஆக வேண்டும். அதில் நான் இருக்க வேண்டும். அது அவளுக்கு என்னை அவள் வாழ்வின் கடைசி நிமிடம் வரை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் என்னை உயிரோடு இருப்பதாக உணர வேண்டும். என் வேண்டுகோள் அரசுக்கு இதுதான். என் கடைசி ஆசையும் இதுதான். என் முகத்தை கடைசியாக மூடிய அந்தக் கறுப்புத் துணியை அவளிடம் கொடுத்து விடுங்கள். அதில் கண்டிப்பாக நான் இருப்பேன். என் கடைசி மூச்சு அதில் உறைந்து இருக்கும்தானே? என் பார்வை அந்த இருளை மட்டுமே கடைசியில் பார்த்திருக்கும். அந்தத் துணியில் என் பார்வை உறைந்திருக்கலாம். என் மூச்சுக் காற்று கூட வெப்பத்தோடு அவளுக்காக அங்கே காத்துக் கொண்டு இருக்கலாம். அதை அவளுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் அவள் என்னைக் காணுவாள்” என்று உன் தந்தை சொன்னார்.
அதைக் கேட்டதும் அவள் இன்னும் உடைந்து போனாள். “ஐயோ அப்பா! என்று அவள் கதறக் கதற, அவளின் நடுங்கும் கைகளில் அந்த பார்சலைக் காவலர் வைத்தார். என்ன சொல்வது என்ன செய்வது என்றே புரியாமல் கதறி அழுதபடி அந்த துணிப் பார்சலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாளாம் அந்தப் பெண். அவள் கைகள் நடுங்கிக் கொண்டு இருந்தனவாம். எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்து விட்டோம். பெற்று வளர்த்தத் தந்தையை அவருடைய கடைசி காலத்தில் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று அந்த சிறைச்சாலையே கிடுகிடுக்கும் படி கதறினாளாம்.
“என் அப்பாவையே ஒரு குழந்தையாய் என் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன் என்று அவள் என்னிடம் போனில் நடுங்கும் குரலில் சொன்னாள். அதற்கு பிறகு அவள் பிணவறைக்கு அழைத்துச் செல்லப் பட்டாளாம்.
*******************************************

ஐயா, இந்தக் கதையை வெளியிட்டமைக்கு நன்றி
LikeLike