Daily Archives: October 15, 2015
குவிகம் அக்டோபர் 2015 இதழில் வழக்கம் போல 25 பக்கங்கள் இருக்கின்றன !
நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து செல்லும்போது உங்களுக்கு முதல் பதினைந்து பக்கங்கள் மட்டும் தெரிந்தால் click older entries என்ற அறிவிப்பைக் கிளிக் செய்யவும். மற்றப் பத்துப் பக்கங்களையும் பார்க்கலாம்.
அதேபோல் click older entries என்ற தலைப்பை அது தோன்றும் சமயத்தில் கிளிக் செய்தால் சென்ற மாதங்களின் குவிகம் இதழையும் படிக்கலாம்.
பக்கத்தின் நடுவில் " keep reading” என்று மெசேஜ் இருந்தால் அதைக் க்ளிக் செய்தால் முதலில் படித்ததன் தொடர்ச்சி கிடைக்கும்.
இதுவரையில் 580 டிஜிட்டல் பக்கங்கள் உள்ளன . அவற்றை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் !
தலையங்கம்

எங்கே போகிறோம்?
இந்திய எழுத்தாளர்கள் 23 பேர் தங்கள் சாகித்ய அகாதமி விருதுகளைத் தேவையில்லை என்று திரும்ப அளிக்கும் நிகழ்ச்சி தற்சமயம் நிகழ்ந்து கொண்டு வருகிறது. மேலும் பதினைந்து எழுத்தாளர்கள் திருப்பித் தரத் தயாராயிருக்கிறார்கள் என்றும் சொல்லப் படுகிறது.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் :
சாகித்ய விருது பெற்ற கல்பர்கி என்ற எழுத்தாளரைக் கொன்ற போது அகாதமி மவுனம் சாதித்தது. மேலும் அனந்தமூர்த்தி , பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்களைத் தாக்கிய போதும் அகாதமி அமைதியாகவே இருந்தது. மதத்தின் பெயரால் பேச்சுரிமை – எழுத்துரிமை நசுக்கப்படுகிறது. அதற்கும்
அகாதமி
கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது. அகாதமியா ? அரசு இயந்திரமா?
இன்னும் நமது வேற்றுமையில் ஒற்றுமையை குலைக்கும் செய்திகள்:
ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக ஃபட்வா இட்டிருக்கிறார்கள். அவர் ஈரான் தயாரித்த ‘முகம்மது’ என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறாராம்.
சிலர் பசுக்களைத் தெய்வமாகப் பார்க்கிறார்கள். சிலர் அதைச் சாப்பிடுவதைத் தங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பசு வதை தடை செய்யப் படுகிறது. பசுக்களை சாப்பிடுபவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதைக் கண்டித்து மற்றவர் பசு மாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள்.
அரசியல்வாதிகளும் பதவி விரும்பிகளும் தங்களுக்குப் பிடித்த அந்த ‘சிலரை’ ஆதரித்து மற்றவரை எதிர்த்து அறிக்கை விட்டு எரியும் நெருப்பில் எண்ணை விட்டுக் குளிர் காய்கிறார்கள்.
நாம் எங்கே போகிறோம்?
மதம் என்ற இரும்புச் சங்கிலியை எடுத்துவிட்டு மனிதம் என்ற அன்புச் சங்கிலியில் இணைவோம்!
வெறுப்பு என்ற களையைக் களைந்துவிட்டு நட்பு என்ற பயிரை வளர்ப்போம்!
எழுத்தாளர்களும், ஊடகங்களும் இவற்றைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.
நமது நாடு முன்னேற அது தான் ஒரே வழி!
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
page
இலக்கியவாசல் -7

குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு
தலைப்பு : அசோகமித்திரன் படைப்புகள்
உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா
இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ்
இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கர்
24 அக்டோபர், 2015 சனிக்கிழமை
மாலை 6.30 மணி
இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் சென்னை 600041 (திருவான்மியூர் சிக்னல் TO திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் BOMBAY DYEING SHOW ROOM அருகில் )
இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம்.
ஷாலு மை வைஃப்

ஷாலுவை கல்பாக்கத்தில் பார்த்த ஞாபகம் என் கண்ணில் அப்படியே நிற்கிறது.
கல்பாக்கத்தில் ஒரு சிறிய எளிமையான அழகிய வீடு. அங்கே பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக்கொண்டிருந்தது. நான், என் நண்பன், அவன் பெற்றோர்கள் நால்வரும் அப்போது தான் பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்று முடித்தோம். அவள் பட்டுப்புடவையைத் தழையத் தழையக் கட்டிக்கொண்டு கையில் காபி ட்ரேயுடன் தயங்கித் தயங்கி வந்தாள். வைத்த கண் மாறாமல் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தான் முதலில் காபி கிடைத்தது. காபி குடிக்கவேண்டும் என்பதே தெரியாமல் அவள் மற்றவர்களுக்குத் தரும் அழகையே ரசித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் இருக்கும் என் நண்பன் காபியைக் குடித்துக் கொண்டே மெதுவாக என் காதில் கேட்கும் அளவில் ‘எனக்குப் பிடிக்கலை’ என்றான்.
அப்போது தான் நான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டேன்.
அதற்குள் அவள் அப்பா ’ பொண்ணுக்கு சங்கீதம் கத்துக் கொடுத்திருக்கிறோம். ஒரு பாட்டுப் பாடம்மா ’ என்றார். அவள் கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் ஜமக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாட ஆரம்பித்தாள். கர்நாடக சங்கீதம் வரும் என்று எதிபார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். “ சின்னஞ் சிறு வயதினிலே சித்திரம் தோணுதடி ’ என்ற ’ மீண்டும் கோகிலா’ ஸ்ரீதேவி பாட்டைப் பாடினாள். நான் அசந்து போய்விட்டேன். அதுவும் ஸ்ரீதேவி, மேலே வரிகள் ஞாபகமில்லாமல் தடுமாறிய இடத்தைப் பாடும்போது அப்படியே ஓரிரு வினாடி தடுமாறிவிட்டு நிமிர்ந்து எங்களைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு கமல் பாடும் ‘கள்ளத்தனம் என்னடி’ என்ற வரிகளையும் அவளே தொடர்ந்து பாடினாள். நான் பிரமிப்பில் திகைத்து மனதுக்குள் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது என் நண்பன் மீண்டும் காதில் கிசுகிசுத்தான். "எனக்குப் பிடிக்கலை’ என்று.
‘எங்கள் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு ஊருக்குப் போய் பெரியவாளைக் கலந்து ஆலோசிச்சிட்டு முடிவைச் சொல்லுகிறோம்’ என்று சம்பிரதாயமாகப் பேசிவிட்டு எல்லாரும் கிளம்பினோம்.
கார் கிளம்பி அவர்கள் வீட்டைக் கூடத் தாண்டவில்லை. என் நண்பன் மறுபடியும் என் காதில் ‘எனக்குப் பிடிக்கலை’ என்றான்.
இது காரில் இருந்த மற்றவர்களுக்கும் கேட்டு விட்டது. ‘என்ன சொல்றான் இவன்?
அப்போது தான் நானும் சுதாரித்துக் கொண்டேன். நாங்கள் வந்திருப்பது அவனுக்குப் பெண் பார்க்கத் தான்’ என்ற உணர்வு உறைக்கத் தொடங்கியது. அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை. பட்டென்று போட்டு உடைத்து விட்டேன். ” சார்! இதைக் கேளுங்க! இவனுக்கு இந்தப் பெண் இல்லே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பிடிக்காது. ஏன்னா இவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான்.“ "டேய்..டேய்..” என்று அவன் கத்துவதைப் பொருட்படுத்தாமல் நான் மேலே சொல்லத் தொடங்கினேன். அவர்களும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு
அதிர்ச்சியுடன்
கேட்டார் கள். “என்னப்பா சொல்றே?”
"ஆமாம் சார்! இவன் எங்க ஆபீஸில் இருக்கும் ஒரு பொண்ணைக் காதலிக்கிறான்.“
அவர்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இப்படிப் படால் என்று சொல்லுவேன் என்று எதிர்பார்க்காத என் நண்பனும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்தான்.
"எல்லாம் அவள் சொன்னது தான் சார்.’ நீ உங்க அப்பா அம்மா சொல்ற பொண்ணைப் பாரு. அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சௌக்கியமா இரு’ என்றாள்."
"யாரு சொன்னா?”
“ஸ்டெல்லா புருஷோத்துமன்”
“யாரு புருஷோத்துமன்? ”
“அவளோட அப்பா!”
“அப்ப ஸ்டெல்லா கிறிஸ்டியனா?”
“இல்லே தெலுங்கு பிராமின் கிறிஸ்டியன்"
"அவ அம்மா கிறிஸ்டியனாக்கும்!
"அவ அப்பா தெலுங்கு பிராமின்"
"பாஷை தெலுங்கு வேறயா?”
“அவளுக்குத் தமிழ் டைப்ரைட்டிங்க் நல்லா தெரியம். ஹையர் பாஸ் பண்ணியிருக்கா”
“நாம வேலைக்கா ஆள் எடுக்கிறோம்?” என் நண்பன் கத்தினான்.
இங்கே பாருப்பா! இந்த வயசுக்கப்பறம் நாங்க தெலுங்கு , சர்ச் எல்லாம் கத்துக்க முடியாது. பேசாம அவளை மறந்துட்டு, அவ சொன்னபடியே இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு"
“அவளும் இதைத் தான் சொல்றா?”
“எவ?”
“ஸ்டெல்லா!”
“ என்னப்பா குழப்பறே ?”
“சார்! இவன் தான் ஸ்டெல்லாவை உயிருக்கு உயிராக் காதலிக்கிறான். ஆனால் அவ இவனைக் காதலிக்கலை. ஒரு தலைக் காதல் ”
“இந்தக் கண்றாவி வேறையா?”
“ சார்! அவளும் மனசுக்குள் இவனை லவ் பண்ணறா! ! உங்களுக்காகத் தான் அவள் தயங்கறா! நீங்க ஒத்துக்கிட்டா தான் கல்யாணம் என்று உறுதியா இருக்கா . அது இவனுக்கே தெரியாது. நேத்துத் தான் என்கிட்டே சொன்னாள். ?"
"அப்படியாடா?”
“பின்னே எதுக்கு இந்தப் பொண்ணைப் பார்க்க ஒத்துக்கிட்டானாம்?”
“அதை அப்பறம் சொல்றேன்! இப்ப மகாபலிபுரம் பீச் கிட்டே போய் ஒரு நிமிஷம் அந்த பிட்ஃஜா கடைக்குப் பக்கத்தில நிறுத்துங்க” என்றேன்.
கார் நின்றது!
நான் அவசர அவசரமா இறங்கி அவளை அழைத்து வந்தேன்.
“ டேய்! ஸ்டெல்லா இங்கே எப்படிடா?”
“ சார்! இவ தான் ஸ்டெல்லா ! நான் தான் இவளை இங்கே காத்திருக்கச் சொன்னேன்.”
“ இவளை எனக்குத் தெரியுமே?” என்றாள் என் நண்பனின் அம்மா.
“ என்னம்மா சொல்றே?”
“ஆமாண்டா! சாய் பஜனிலே நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன். அழகா பஜன் பாடுவா! ”
“அவ உங்களை இம்ப்ரஸ் பண்ண அங்கே வந்தது உண்மை தான். ஆனா அவளுக்கு பஜன் பண்ணவும் பிடிக்கும். சர்ச்சிலே காயர் பாடவும் பிடிக்கும். அருமையான குரல் இவளுக்கு ”
“ ஏங்க! எனக்கு இவளை ரொம்பப் பிடிச்சிருக்கு! நம்ம பையனைக் கல்யாணம் செஞ்சிக்க இவ ஒத்துப்பாளோ?”
“என்னம்மா இப்படிக் கேக்கறீங்க?”
‘ஏதோ ஒருதலை இருதலை அப்படின்னு சொல்றானே இந்தத் தறுதலை"
“ அய்யோ !அம்மா! இதுக்காகத் தான் நான் காத்துக்கிட்டிருக்கேன்!” என்றாள் ஸ்டெல்லா!
“ இவ்வளவு நல்ல பொண்ணைப் பத்தி முதலிலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே ! ஏன் இந்த விபரீத பொண்ணு பார்க்கிற விளையாட்டு ?. அவங்க என்ன நினைச்சுப்பாங்க?
” அதை நானே சொல்றேன் அப்பா! இவனும் அந்த ஷாலுவும் ஏற்கனவே லவ் பண்றாங்க"
“ இதென்னடா புதுக் கூத்து?"
” இந்த மகாபலிபுரம் லைட் ஹவுஸ் கிட்டே தான் இவனுக்கும் ஷாலுவுக்கும் காதல் பிறந்தது"
“எங்கே! அந்தக் குரங்குகள் எல்லாம் ஒடுதே அங்கேயா?”
“ஆமாம்பா! அந்த அனுமார் சீதையையும் ராமரையும் மட்டும் சேர்த்து வைக்கலை ! இவனையும் ஷாலுவையும் சேர்த்து வைத்ததே அவர் தான்."
“ அப்ப நீ தான் அந்த அனுமாரா?” என்று கேட்ட அவன் தந்தை "சரி ஸ்டெல்லா நீயும் காரில் ஏறிக்கொள். நாம் எல்லாரும் அந்த ஷாலு வீட்டுக்குப் போய் மன்னிப்புக் கேட்போம். அதோட இவனுக்காவும் பொண்ணும் கேட்போம்.“
” அப்பா! நீங்க கிரேட்! இவனுக்கு நம்மை விட்டா வேறு யாரு இருக்கா பொண்ணு கேட்க! அதனால் தான் இந்த நாடகம்"

அங்கே ஷாலு வீட்டில் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தனர் ….
“ என்னடி சொல்றே? இந்த மாப்பிள்ளைப் பையன் வேண்டாமா? அவன் கூட வந்த சினேகிதனைத் தான் கட்டிப்பியா? ”
“ நீ முதல்லே அவன் கிட்டே காபி கொடுக்கும் போதே நினைச்சேன்"
"அந்த மாப்பிள்ளைப் பையன் காபி குடிச்சுட்டு ஏதோ விளக்கெண்ணை குடிச்சா மாதிரி இருந்தானே? அப்பவே எனக்கு ஏதோ சந்தேகம்”
“ஐயோ நான் புது அத்திம்பேர் மூஞ்சியைச் சரியா பாக்கலையே?”
“நான் இன்னும் அவனை ஒகேயே பண்ணலை , அதுக்குள்ளே அத்திம்பேர் உறவா? ”
“அப்பா! இது உல்டா மணிரத்னம் படம் மாதிரி. இல்லே ! தங்கச்சியைக் கட்டிப்பேன்னு அரவிந்த்சாமி ரோஜாவில சொல்லலே?"
”“சரி! ஷாலு! உனக்கு ஓகே தானா? ”
“என்னப்பா! விடிய விடிய கதை கேட்டுட்டு சீதைக்கு அனுமார் அத்திம்பேர் என்கிற மாதிரி கேட்குரே?”
“அது சரிடி! அவரை எங்கே பார்த்தே? ”
அது ஒரு தனி கதைம்மா! அனுமார் சீதையும் ராமரையும் மட்டும் சேர்த்து வைக்கலை !“
"வேறென்ன பண்ணினார்?
” எங்களையும் மகாபலிபுரம் லைட் ஹவுஸ் கிட்டே அவர் தான் சேர்த்து வைச்சார்!“
"அதென்னடி புதுக்கதை?”
ஷாலு சொல்ல ஆரம்பிக்குமுன் வாசலில் கார் வந்து நின்றது.
மனோரமா

கோபிசாந்தா என்கிற மனோரமா என்கிற ஆச்சி என்கிற தமிழ்த் திரையின் நவரச நாயகி மறைந்து விட்டார்.
கின்னஸ் சாதனை படைத்தவர். ரேடியோ,டி.வி.மற்றும் நாடக மேடைகளில் தனது முத்திரையைப் படைத்தவர்.
1500 படங்கள்,1000 மேடை நாடகங்கள், பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, தேசிய விருது (புதியபாதை படத்திற்காக) ,ஃபிலிம்பேர் விருது என்று விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர்.
தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார்.
நாகேஷுடன் நூற்றுக்கணக்கான படங்கள் நடித்து நகைச்சுவை மழையைப் பொழிந்தவர்.
செட்டி நாட்டுத் தமிழ், சென்னைத் தமிழ்,
செந்தமிழ்,
பிராமணத் தமிழ், கிராமத்துத் தமிழ், பணக்காரத் தமிழ் என்று பல குரலில் பேசிய தமிழ்த் தாய் அவர்கள். 100க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியவர்.
மனோரமா என்றதும் நினைவுக்கு வரும் படங்கள் :

அன்பே வா, தில்லானா மோகனாம்பாள், சம்சாரம் அது மின்சாரம், கலாட்டா கல்யாணம், சின்னக் கவுண்டர், பொம்மலாட்டம், அபூர்வ சகோதரர்கள், புதியபாதை, சின்னத்தம்பி, ஞானப் பறவை ( சிவாஜிக்கு ஜோடி) ,பாட்டிசொல்லைத் தட்டாதே,காசே தான் கடவுளடா , கிழக்கு வாசல், கொஞ்சும் குமரி, சரஸ்வதி சபதம், அண்ணாமலை,
குவிகம் மனோரமாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறது!
page
மூன்று நிமிடம் ஓடும் பாசமலர் படத்தின் இறுதிக் காட்சியை இன்று பார்ப்பவர்கள் ஓவர் ஆக்டிங்கிற்கு உதாரணம் என்று பேசக்கூடும் .
ஆனால் அன்று இதைப் பார்த்துவிட்டு முரட்டுக் கண்களிலிருந்து கூடக் கண்ணீர் பெருகியது!
இன்றும் இதைப் பார்த்துவிட்டு உங்கள் கண்களில் கண்ணீர் கசியுமானால் நீங்கள் நிச்சயம் ஒரு பாச மலர் தான்.
page
மூலை – ஆர். வத்ஸலா
–

குவிகம் இலக்கியவாசல் சிறுகதைச் சிறுவிழாவில் படிக்கப்பட்ட கதை!
அவள் கணவன் திடீரென மாரடைப்பால்
இறந்துபோனான். அவள் அழவில்லை. உறவு கூடியது. ‘அவளுக்கு அதிர்ச்சி’
என்றது. உடல் எரிந்தது; அஸ்தி கரைந்தது; ‘மனதில் வைத்துக்
கொள்ளாதே, அழுது விடு’ என்றது சுற்றம். அவள் அழவில்லை. ‘அழாதே,
தைரியமாக இரு’ என்று சொல்லிய திருப்தியில்லாமலேயே வந்தவர் கிளம்பினர், ‘சம்பிரதாயத்திற்காகவாவது
அழக்கூடாதோ?’ என்கிற அங்கலாய்ப்புடன். உண்மையைச்
சந்திக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது?
மகனும் மகளும் மீண்டும் அலுவலகம் செல்லத்
துவங்கினர். அவள் எப்போதும் போல் சமைத்தாள். மகனுக்கும் மகளுக்கும் உணவு கட்டிக்
கொடுத்தாள். சாப்பிட்டாள், தூங்கியெழுந்து காபி குடித்தாள், பத்திரிகை
படித்தாள், தொலைக்காட்சி பார்த்தாள். பல வருடங்களுக்குப்
பிறகு நிம்மதியாக இருந்தாள்.
ஊருக்காகவாவது ஒரு சில மாதங்கள்
விசேஷங்களில் கலந்து கொள்ளாமலிருக்க வேண்டிய நிர்ப்பந்தம்தான் கொஞ்சம் சிரமமாக
இருந்தது. அவளுக்கு நாலுபேர் கூடுமிடத்திற்குப் போவது பிடிக்கும். அவனுக்கு நண்பர்கள் கிடையாது. தவிர, அவளுடன் அவன்
எங்கும் போகமாட்டான். பெண்கள் தம் தோழிகள் வீட்டிற்குத் தனியாகப் போவது என்பது அவள்
குடும்பத்திலில்லாத பழக்கம். ஆகவே நவராத்திரி போன்ற பண்டிகைகளையும் உறவினர்,
குடும்ப சிநேகிதர்கள் வீட்டு விசேஷங்களையும் அவள் ஆவலோடு எதிர்பார்த்திருப்பாள்.
அவள் கலகலப்பான சுபாவமுடையவள். அவள் பேசினால் எல்லோரும் கேட்டுக்
கொண்டிருப்பார்கள். திறமைசாலியும்கூட.
விசேஷங்களுக்குத் துணிமணி, பண்டங்கள் வாங்குவது, சமையற்காரருக்கு ‘அவசரநிலை’ ஆலோசனை கூறுவது, வருவோரை உபசரிப்பது, பெண்களுக்கு
அலங்காரம் செய்வது, படிக் கோலமிடுவது, பாடுவது, கொலு வைப்பது – எல்லாவற்றிலும்
அவளுக்கிருந்த திறமையை எல்லோரும் பாராட்டுவார்கள். எல்லாவற்றையும் அக்கறையுடன்
செய்வாள். இப்படித் திறமையுடன் செயல்படுவதும், அதற்கானப் பாராட்டைப் பெறுவதும்
அவளுக்கு மிகுந்த ஆத்மதிருப்தியைக் கொடுத்ததோடு அவளுடைய பிரச்னைகளை மறக்கவும்
உதவியது.
பிறந்தகத்திற்குத் தன் குழந்தை
உழைப்பையும், புகுந்தகத்திற்கு தன் இளமை உழைப்பையும், இளமுதுமை உழைப்பையும் தாரை
வார்த்தவள் அவள். அப்பா கோபக்காரர், பழைய சம்பிரதாயம். அம்மா கோபக்காரரின் மனைவி,
கோபக்கார மகன்களின் தாய். (நாட்டுப்) பெண்களிடம் மட்டும் கோபக்காரி, பழைய
சம்பிரதாயம். மாமனாரும் கணவரும் இவள் அப்பாவைப் போலவே. மாமியார் இவள் அம்மாவைப்
போலவே. நாத்தனார்களின் திருமணம், கணவனின் கோபம். மூத்த மகன் வீட்டை விட்டு ஓடிப்
போதல், கணவனின் கோபம், மாமனார் – மாமியாரின் முதுமை – சாவு, கணவனின் கோபம், மகள் –
இரண்டாவது மகன் இவ்விருவரின் வளர்ப்பு – படிப்பு – வேலை, கணவனின் கோபம், கணவன் ஓய்வு
பெறுதல் – கணவனின் முழுநேர பிடுங்கல் – இப்படியாக அவள் நாற்பத்தைந்து வயதில் முழு
கிழவியாகினாள். இதற்குள் அவள் தன் கணவனிடம் வாங்கியத் திட்டுக்களுக்கும்,
அடிகளுக்கும் அவளால் மனித நேய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிந்திருந்தால்
அவளுக்கு என்ன நஷ்ட ஈடு வழங்குவது என்று நீதிமன்றம் தவித்திருக்கும். கணவனின் அடியில்
அடங்கியிருக்கும் ஆழ்ந்த அவமானத்திற்கு எதைத்தான் ஈடாக்கமுடியும்?
வீட்டு விவகாரத்தில் அவள் கணவன் எடுத்த
முடிவுகள் எல்லாமே தப்பானவை. அதன் விளைவுகளைச் சமாளித்துக் குடும்பத்தைப்
பாதுகாத்தவள் அவள்தான். அவளுடைய நகைகளைச் சீட்டாட்டத்தில் தொலைத்து பெண்ணுக்கு ஒரு
திருகாணியில்லாமல் செய்துவிட்டான் அவன். அஞ்சனப் பெட்டி, சீட்டு, தபால் வங்கியென
சேர்த்து பெண்ணுக்கு சீர் செய்து வைத்தாள் அவள். அப்பாவின் ரௌத்திரத்தையும் அம்மாவின்
அவஸ்தையையும் சகிக்க முடியாமல் மூத்த மகன் வீட்டை விட்டு ஓடிப்போனான். (இது ஒன்று மட்டும்
அவளால் சமாளிக்க முடியாத விளைவு. அவளுக்கு மரத்துப் போகாத வலி.)
முட்டாள்தனமாக வில்லங்கமுள்ள வீட்டு
மனையை வாங்கி, வீடு கட்ட கடனும் வாங்கி, வீட்டையும் கட்ட முடியாமல், மாதாமாதம்
வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி குடும்ப பொருளாதாரத்தை அடியோடு அழிக்க
அடிகோலினான் கணவன். அவள்தான் யார் யாரையோ பார்த்து வில்லங்கத்தைச் சரி செய்து,
வீட்டைக் கட்டி, வாடகைக்கு விட்டு, நிலைமையைச் சீர் செய்தாள். இரண்டாவது மகனுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காதபோது, அவன் ஒரு வருடம் சும்மாயிருந்துவிட்டு
அடுத்த வருடம் மறுபடியும் முயற்சிக்க வேண்டும் என்று கணவன் தாண்டவமாடியபோது மகன் விரும்பியபடி
ஒரு கல்லூரியில் கிடைத்த பி.எஸ்.ஸி.
கணித இயலில் அவனை சேர்த்துவிட்டு வீடு திரும்பியதும்
வழக்கம் போல ஓங்கிய கணவனின் கையை பிடித்து
முறிக்க மகன் யத்தனிக்க அடிகள் நிரந்தரமாக நின்றன. மகளை இளநிலை பட்டப்படிப்புடன் நிறுத்தி வீட்டோடு சிறை வைத்து ’வரன்
பார்க்கிறேன் பேர்வழி’ எனத் தொடங்கி, வந்த வரன்களை ஏதோ சாக்கு சொல்லிக் கணவன் தட்டிக் கழித்ததற்குக் காரணம் கணவனுக்கு மாப்பிள்ளைப் பையன்களிடமோ, அவர்களின் தந்தைகளிடமோ
இருந்த தாழ்வு மனப்பான்மைதான் என அவளுக்குத் தெரிந்தென்ன லாபம்? இதெல்லாம்
போகட்டும். மகளை ”தரித்திரமே, ஒன்னெ எவன் கல்யாணம் பண்ணிப்பான்?” என
நோகடிக்கும்போது அவளுக்குத் தன் கணவனைக் கொன்றுவிடலாமா எனத் தோன்றும். அவன் தடைகளை
மீறி மகனின் ஆதரவோடு மகளை, ப்ரெஞ்சு மொழி, தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிப்பொறி
வகுப்பு என்று மாற்றி மாற்றி ஏதாவது ஒரு வகுப்புக்கு அனுப்பியதோடு அஞ்சல் வழி கல்வியில்
முதுநிலை பட்டமும் வாங்க வைத்து, மகளுக்குப் பைத்தியம் பிடிக்காமல் பார்த்துக்
கொண்டதோடு, ஒரு வேலையும் கிடைக்க வழி செய்தாள். கணவனுடன் போராடி
மகளை வேலைக்கு அனுப்பி வைத்தாள். மகன் அதற்குள் எம்.ஸி.ஏ. முடித்து
நல்ல வேலையில் சேர்ந்து விட்டிருந்தான்.
கணவனுடன் போராடிக் களைத்திருந்த அவளுக்கு
மகனின், மகளின் அன்பு இதமாக இருந்தது. அவர்கள் இருவருடைய திருமணத்தை அவள் ஆவலாக
எதிர்பார்த்திருந்தாள். கணவனுக்கு வயதாகி உடல் வலு குறைந்ததாலும் குழந்தைகள் அவள்
பக்கம் என்பதாலும் அவனுடையத் திட்டுகள் இப்பொழுது நச்சரிப்பாக க்ஷீணித்திருந்தன. அவன்
ஓய்வு பெற்று விட்டதால் பிடுங்கல் முழு நேரமாகிவிட்டிருந்தது. மகளையோ, மகனையோ
அவர்களில்லாத நேரங்களில் குறை கூறிக்கொண்டேயிருப்பான். அவனால் நேரடியாக இட தைரியமில்லாத
கட்டளைகளை அவளிடம் சொல்லி பிறப்பிக்கச் சொல்வான். மகனை ஏழு மணிக்குள் (மகளை
இருட்டுவதற்குள்) வரச் சொல்ல, மகன் பெண் நண்பர்கள் வீட்டிற்கு (மகள் யார்
வீட்டிற்குமே) போகத் தடை விதிக்க, மகன் தன் ஊதியத்தில் எழுபத்தைந்து சதவிகிதத்தை
(மகள் முழு ஊதியத்தையும்) வீட்டில் கொடுக்க வேண்டுமென்று நிபந்தனை போடச் சொல்லி (”இல்லாட்டா
வெளிலெ போகச் சொல்லு”) அவளை நச்சரிப்பான். அவள் அப்படிச் செய்ய மாட்டாள்.
முடிந்தவரை அவனுடன் ஒரே அறையில் நிற்பதை
அவள் தவிர்ப்பாள். கண்ணையும், வாயையும் மூடிக் கொள்வதைப் போல காதை மூடிக் கொள்ள வழியில்லையே
என அவள் நினைத்துக் கொள்வாள். அந்த நேரத்தில்தான் அவன் கண்ணை மூடிவிட்டான். அவள்
அழவில்லை.
சமைத்தாள். குழந்தைகளுக்குக்
கொடுத்தாள். சாப்பிட்டாள். பத்திரிகையைப் படித்தாள். தொலைக்காட்சி பார்த்தாள்.
மூன்று மாதங்கள் கழிந்தன. உறவினர் வீட்டுத் திருமணம். வந்து அழைத்தனர். “நீங்க
பாட்டுக்கு வாங்கோ, மன்னி, யாரு வேணா என்ன வேணா நெனெக்கட்டும்” (யார் என்ன
நெனெப்பா? ஏன் நெனெக்கணும் – அவளுக்குக் கேட்கத் தோன்றியது) மகனுக்கும் மகளுக்கும்
விடுப்பு இல்லை. தனியே போகவேண்டும். தயக்கத்துடன் ஒரு பட்டுப் புடவையை எடுத்தாள்.
(தலைப்பில் சரிகை அதிகமாக இருக்குமோ?) தலைப்பை உள்ளே வைத்துக் கட்டினாள். (மடிசஞ்சி
மாதிரி இருக்காதேம்மா. எல்லாரும்
இப்ப ஸ்டிக்கர் பொட்டு வச்சுக்கறா) கறுப்பா, சிவப்பா? சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு
வைத்துக் கொண்டாள். திருமாங்கல்யம் எடுத்த கொடியா? வேண்டாம் சாதாரண சங்கிலி ஒன்றை
அணிந்து கொண்டாள். மெல்லியதுதான். பரவாயில்லை. சிறிது பௌடர் போட்டுக் கொண்டாள். பஸ்ஸில் போக
ஒரு மாதிரி இருந்தது. ஆட்டோவில் கிளம்பினாள்.
வாசலில் நின்ற சின்னப் பெண் ரோஜாவை
நீட்டியது. கவனிக்காததுபோல் உள்ளே சென்றாள். சற்றுத் தயங்கித் தெரிந்த முகங்கள்
இருக்குமிடத்தில் போய் உட்கார்ந்தாள். அதற்குள் பெண்ணைப் பெற்றவள் வந்து
வரவேற்றாள். டிபன் உபசாரம் மறுத்து அருகிலிருந்தவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
கல்யாணப் பெண்ணுக்கு என்னென்னப் புடவைகள் எந்தெந்த கடைகளில் எடுத்தார்கள், எந்தெந்த நிறத்தில்
எடுத்தார்கள் என விவரித்துக் கொண்டிருந்தனர். ‘அந்தக் கடையில்
விலை அதிகமாயிற்றே! முகூர்த்தத்திற்கு ஊதா நிறமா? கறுப்பு கலந்திருக்குமே!’ (எல்லாம்
மனதில்தான்.) இந்தப் மணப்பெண்ணின் அக்காவின் திருமணத்திற்கு அவள்
தேர்ந்தெடுத்த புடவைகளை எல்லோரும் எவ்வளவு பாராட்டினார்கள்?
‘ஊஞ்சல்’ பார்க்க மற்றவருடன் இவள் கிளம்புவதற்குள் முன் வரிசை குங்கும முகங்களால் தன்னம்பிக்கையுடன்
ஆக்ரமிக்கப்பட்டுவிட்டிருந்தது. யார் யாரோ பாடினார்கள். பின்னால் நின்றதால் இவள்
காதில் கேலிப் பேச்சுகள் விழவில்லை. அது கிளப்பிய சிரிப்பலைகள் மட்டும் கேட்டது. ஆயாசம்
தோன்ற மறுபடியும் பழைய இடத்தில் வந்தமர்ந்தாள். அங்கு அமர்ந்திருந்த பெண்களில்
பெரும்பான்மையோருக்கு வெற்று அல்லது ஸ்டிக்கர் பொட்டு நெற்றி போலத் தோன்றியது, இவள்
பிரமையோ?
“என்ன மன்னி? இங்க
ஒக்காண்டு இருக்கங்கோ?” கேள்வி கேட்டவளுக்கு பதிலுக்குக் காக்க அவகாசமில்லை.
சாப்பாட்டிற்கு அழைத்தனர். சாப்பிட்டாள். கிளம்பியவளை உள்ளே
அழைத்துப் போய் ஒரு பாலிதீன் கவரைக் கொடுத்தனுப்பினாள் ஒருத்தி.
வீட்டிற்கு வந்து பூட்டைத் திறக்கக் குனியும்போது அவள் தலையிலிருந்து ஒரு அட்சதை விழுந்தது. முகூர்த்தத்தின் போது
பின்னலாலிருப்பவர்கள் கடமைக்காக மேடை நோக்கி வீசியெறிந்தது போலும், ‘குறைபட்டவள்”
தலையில் ‘முழுமையானது’! பாலிதீன் கவரைத் திறந்தாள். வெற்றிலை பாக்குக் கூட இல்லாமல்
ஒற்றையாக ஒரு ரவிக்கைத் துண்டு! ’இதென்ன பிச்சையா?’ மனம் வெதும்பியது.
கணவன் இறந்தபோதே அவளுக்குத் தெரியும்தான்,
சமுதாயத்தில் தன் நிலை மாறுமென்று. ஆனால் வேதனை தரக்கூடிய நடப்புகளுக்கு நாம்
என்னதான் நம் மனதை தயார் செய்து வைத்திருந்தாலும் அவை நடக்கும் பொழுது வேதனை ஏற்படத்தான் செய்கிறது. நெருப்பு பட்டுவிட்டால்
சுடத்தான் செய்கிறது, சுடுமென்று தெரிந்திருந்தாலும்.
“அத்தெ நீங்கதான் மொதல்ல ‘பிடி’
சுத்தணும். மன்னி ஒங்க கையால கொடுங்கோ. டேய், மொதல்ல சித்திகிட்ட ஆசீர்வாதம்
வாங்குடா”. இதெல்லாம் இனி இருக்காது எனத்
தெரியும். நம் சம்பிரதாயத்தில் எல்லாமே மங்கலம் – அமங்கலமாக
(வெள்ளை – கறுப்பாக) பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், மூடநம்பிக்கைகளைத்
தர்க்கரீதியாக ஒதுக்கும் மனிதர்கள்கூட தன் மகனுக்கோ மகளுக்கோ கெடுதி நேருமோ என்கிற
அர்த்தமற்ற பயம் வரும்போது சிந்தனையை மூட்டை கட்டி வைத்து விடுகின்றார்கள்.
அரைகுறையாக தெரிந்த சாத்திரம், குரல் ஓங்கியவர் கூறும் சம்பிரதாயம், ஒவ்வொருவர்
மனதிலும் ஒளிந்திருக்கும் சுயபச்சாதாபத்தின் விளைவாக துன்புறுத்தி திருப்தியுறும்
மனோபாவம். இவையெல்லாம் மனித நேயத்தைக் கொன்றுவிடுகின்றன. வரிசையாக
குங்குமம் நீட்டிக் கொண்டு வந்து இவள் பக்கம் நீண்டு மடங்கும் கை, முக்கிய
நேரத்தில் முன்னணியில் நின்றால் குற்றம் சாட்டும் கண்கள், கலகலப்பாக பேசினால் சிலர்
முகத்தில் தெரியும் யந்திர புன்னகைகள். அவளுக்குக் கோபம் வந்தது. யாரை கோபிக்க?
சுயபச்சாதாபம் சூழ்ந்தது. விசேஷங்களைத் தவிர்க்கத் தொடங்கினாள்.
ஒரு
நாள் அவளுடைய மூத்த சகோதரனும் அவன் மனைவியும் வந்தார்கள். மகளுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கிறதாம்.
அது சரிப்பட்டு வந்தால் மகனுக்கும் வரன் பார்த்து இருவர் மணத்தையும் அவர்களே
முன்னின்று முடித்துவிடுவார்களாம். அவள் கவலைப்பட வேண்டாமாம். அவள் கற்பனையில்
இருவர் திருமணங்களையும் பார்த்தாள் – மூலையில் நின்று கொண்டு. அவர்கள் போனபின்
வெகு நேரம் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென ஓலமிட்டாள்.
“என்னெ இப்பிடி மூலேலெ வெச்சுட்டு செத்துத் தொலெச்செயேடா பாவி மனுஷா!”
“உடலே சவப்பெட்டியாக” சிறுகதை தொகுப்பு, ‘நிகழ்’ வெளியீடு,
1999
(ராஜேச்வரி பாலசுப்ரமண்யம் சிறுகதை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது)
page
அறம் [சிறுகதை]

ஏற்கனவே குவிகத்தில் ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதையைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம்.
அதைப் படிக்க விரும்புவார்கள் மேலே குறிப்பிட்டுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
கதையைப் படித்து ரசியுங்கள்!
நவராத்திரி நாயகியர்

வில்லுப்பாட்டு
‘முந்தி முந்தி நாயகனே முக்கண்ணனார் தன் மகனே
கந்தனுக்கு மூத்தவனே, கணபதியே கணபதியே ‘
‘தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிலே பாட
ஆமாம் வில்லிலே பாட (2) வந்தருள்வாய் கலைமகளே ….
கணபதிக்கு வந்தனம் சொல்லியே
ஆமாம்
வந்தனம் சொல்லியே (2)
வில்லிலே பாட ஆமாம் வில்லிலே பாட (2)
கணபதிக்கு வந்தனம் சொல்லியே
ஆமாம் வந்தனம் சொல்லியே
பாடுகிறோம் நாங்க வில்லுப்பாட்டு. (2)
ராகம்: வாங்க மக்கா வாங்க
ஆனந்த் பிளாட் பெரியோர்களே, தாய்மார்களே
வாங்க நீங்க வாங்க வில்லுப் பாட்டு கேக்க வாங்க
வாங்க நீங்க வாங்க அம்மன் கதையைக் கேக்க வாங்க
வாங்க நீங்க வாங்க அம்மன் அருளைப் பெற வாங்க
வாங்க நீங்க வாங்க வில்லுப்
பாட்டு கேக்க வாங்க
வாங்க நீங்க வாங்க வில்லுப்
பாட்டு கேக்க வாங்க

நம்ம நாடு முழுக்க நவராத்திரி விசேஷமாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த
நல்ல நாளிலே, நவராத்திரி
நாயகிகளான, முப்பெரும்
தேவியர்களான பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய லோக மாதாக்களின் பெருமையை வில்லுப் பாட்டாகப்
பாட உங்கள் முன் வந்துள்ளோம். இதில் சொற்குற்றம், பொருட்குற்றம். எக்குற்றம் இருப்பினும் சிறியோரான எங்களை மன்னிக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
ராகம்: பால் வடியும் முகம்
அம்பிகை கதையினை சொல்பவர் கேட்பவர்
செய்திடும் பாவங்கள் மறையுமே –
ஜகதம்பிகை
கதையினை சொல்பவர் கேட்பவர்
செய்திடும் பாவங்கள் மறையுமே
தேனினும் பாலிலும் இனியவளே – தேவி
உள்ளம் குடிகொண்ட தேவி அவதாரம்
சொல்லச் சொல்ல நம் நெஞ்சம் உருக
உருக ( அம்பிகை )
அவதார நாயகியான
அம்பிகையின் வீரதீர பராக்ரமங்கள் எத்தனை, எத்தனை தெரியுமா? அன்பே உருவான லோக மாதா, அழகே உருவான லலிதாம்பாள், அருளைப் பொழியும் பராசக்தி, அக்கிரமத்தை
அழிக்கும் மாகாளி, துஷ்டர்களை
அழிக்கும் பயங்கரி துர்க்காதேவி. அந்த அகிலாண்ட நாயகியின் வீர தீர
பராக்கிரமங்களைப் பார்ப்போமா?
ஓ! பேஷா பாப்போமே!
ஒரு சமயம், மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரங்களால் ஆணவம் கொண்டு விண்ணையும், மண்ணையும் ஆட்டிப் படைக்க ஆரம்பித்தான். தேவர்கள், ரிஷிகள், மண்ணுலக வாசிகள் எல்லோரும்
அவனுடைய கொடுமை தாங்காமல் மகிஷனை அழிக்க வேண்டி அம்பிகையிடம் வந்து,

ராகம்: அம்ப பரமேஸ்வரி
அம்ப பரமேஸ்வரி! அகிலாண்டேஸ்வரி!
மகிஷனைக் கொல்ல வருவாயே !
ஸ்ரீ புவனேஸ்வரி ! ராஜராஜேஸ்வரி !
பக்தர்கள் எம்மைக் காப்பாயே !
என்று வேண்டிக்
கொள்ள எல்லோர்க்கும் வேண்டிய வரம் தரும் தேவியும் மகிஷனை வதம் செய்யப்
புறப்பட்டாள்.
எப்படி?
கைகள் பதினெட்டிலும்
ஆயுதம் எடுத்து, சிம்ம வாகனத்தில்
ஏறி, அலங்கார ஸ்வரூபியாய் புறப்பட்டாள்
அன்னை பராசக்தி. பல வரங்கள் பெற்ற மகிஷனும் மாயையால் பல ரூபமெடுத்தான். தேவி அன்னை
பராசக்தி காளி ரூபம் எடுத்துக் கொண்டு, கையில் சக்ராயுதம் கொண்டு மகிஷ ரூபம் எடுத்த மகிஷாசுரனை, வெட்டிச் சாய்த்தாள். மகிஷன் அழிந்தான்.
தேவர்கள், ரிஷிகள், மக்கள் எல்லோரும்
சந்தோஷப்பட்டிருப்பார்களே!
நிச்சயமாக!
எல்லோரும் மகிழ்ச்சியுடன் பூமாரி பொழிந்தனர். அன்னையைப் பாடலால் துதித்தனர்.
எப்படித் தெரியுமா?
எப்படி?
ராகம்: அயிகிரி நந்தினி
மங்கள ரூபிணி, சிங்கள வாஹினி, மன்மத பாணியளே !
சங்கடம் தீர்த்திட, தேவரைக் காத்திட, காளிதேவியாய் வந்தவளே !
மகிஷ உருவெடுத்த அசுரனைக் கொன்று, தருமத்தைக் காத்தவளே !
அகிலத்தைக் காத்திடும், தேவி உன்னை தினம் தினம் போற்றி வணங்கிடுவோம் !
மகிஷனுக்குப் பிறகு
சும்பன், நிசும்பன்னு ரெண்டு
அசுரர்கள் தேவாதி தேவர்களை எல்லாம் கலங்க
அடிக்க வந்தார்கள்.
அய்யய்யோ !
மறுபடியும் அசுரர்களா?
அதுவும் ஒருத்தர்
கூட அல்ல, இரண்டு பேர்.
அப்புறம் என்ன ஆச்சு?
சும்பனும், நிசும்பனும் சின்ன வயசிலேயே கோர தவம் புரிந்து ஏராளமான
வரம் பெற்றார்கள்.. வரம் கெடச்சா அசுரர்கள் சும்மா இருப்பார்களா?
என்ன செய்தார்கள்?
இந்திரன் முதலான
பிரம்மாதி தேவர்களை எல்லாம் சிறையில்
அடைத்தார்கள்.. வானுலகமே தவித்தது. கஷ்டத்தில் இருக்கிற எல்லாரும் யாரைக் கூப்பிடுவா? தாயைத்தானே? நம்ம உடம்பில திடீர்னு ஏதாவது அடிபட்டால் ‘ அம்மா!’ ன்னு தானே கூப்பிடறோம்? அதுபோல கலங்கித் தவிக்கும் தேவர்கள் அன்னை மகாசக்தியிடம்
போய் முறையிட்டார்கள்.
எப்படி
வேண்டினார்கள்?
ராகம்: கூடை மேல கூடை
வெச்சு
அடி மேல அடி வாங்கி அவதியும் படுகிறோமே
எம் அபயக்
குரல் கேட்டு நீ வந்திடவும் வேணும் தாயே (2)
வாராமலே நீ
இருந்தா அது நியாயமா?
உன்னைத்தானே
நம்புகிறோம் வெகு காலமா
நீ வந்தெம்மைக்
காத்தாலே வாழ்வோமே சந்தோஷமா
நீ இல்லாமல்
எங்கட்கு துணை யாரம்மா?
(2)
என்று ஒரு சாரார் வேண்ட, இன்னொரு சாரார்,
ராகம்: அலை பாயுதே
தருவாய் நீயே தாயே தரிசனம் தருவாய்
நீயே
உன் மைந்தர்கள் படுகிற துயரினை
நீக்கிட
வருவாய் நீயே தாயே தரிசனம் தருவாய்
நீயே ! (2)
என்று மனம் உருகி
வேண்டினார்கள்.. பிள்ளை அழும் குரல் கேட்டு வராத தாய் உண்டோ? அன்னை பராசக்தி நேரில வந்து அவர்கள் துயரினைத் தீர்க்க
உறுதி கூறிப் புறப்பட்டாள்.!
எங்கே?
சும்ப நிசும்பனை
வதம் செய்ய !
எப்படி தெரியுமா?
எப்படி?
பட்டமும் சுட்டியும்
நெற்றியில் மின்ன, பதக்கம் மார்பில்
அசைய, தண்டை சிலம்பு காலில்
துள்ள, அழகெல்லாம் கொஞ்ச, கன்னிகா ரூபத்தில் தேவி ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, அம்பிகையின் அழகைக் கண்டு அகிலமே ஊஞ்சலாட ஆரம்பித்தது.
சும்பனும் , நிசும்பனும் அம்பிகையின் அழகைக் கேள்விப்பட்டு, அவளைத் தூக்கி வர, தூம்ப்ரலோசனன், சண்டமுண்டன், ரத்த பீஜன் போன்ற பல அசுரர்களை அனுப்பி வைத்தார்கள்.
அச்சச்சோ ! தேவியைத்
தூக்கிண்டு போய்ட்டாங்களா?
தேவி என்ன செய்தாள்?
நமது அன்னை- திவ்ய
ரூபிணி – காளி ரூபம் – சாமுண்டி ரூபம் எடுத்து, வந்திருந்த அரக்கர்கள் அனைவரையும் சம்ஹரித்தாள். கடைசியாக வந்த
சும்பனையும், நிசும்பனையும் துர்க்கா தேவியாகி வதம் செய்தாள். ஈரேழு பதினாலு
லோகத்தவரும் அன்னையின் பெருமையைப் பாடி மகிழ்ந்தனர்.
ராகம்: அயிகிரி நந்தினி
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய்
வந்த உமையவளே !
வந்தனை செய்திடும் அந்தகர் தம்மை சொந்தமாய்
நின்று காப்பவளே !
வந்தெதிர் நின்ற சும்ப நிசும்பனை மாய்ந்து
மடிந்திடச் செய்தவளே !
மைந்தரைக் காத்திடும் தாயே உன்னை தினம்
தினம் போற்றி வணங்கிடுவோம் !
இன்னொரு சமயம், பரமசிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த நெருப்பு, மன்மதனை எரித்தது. அவன் சாம்பலை, விஸ்வகர்மா உயிர்ப்பிக்க பண்டாசுரன் என்னும் மாபெரும் அசுரன்
உண்டானான்.. பரமசிவனின் கோப அக்கினியில்
வந்தவனல்லவா? தவம் செய்து ஏராளமான வரங்களைப்
பெற்றான். பிறகு தன் அரக்கக் குணத்தைக்
காட்டி எல்லா தேவர்களையும் சிறையில் அடைத்தான்.. விண்ணுலக வாசிகளெல்லாம் என்ன செய்யரதுன்னு
தெரியாம கலங்கித் தவித்தார்கள். அப்போ நாரதர் வந்து தேவர்களிடம் , தேவி
லலிதாம்பாளின் பெருமையைக் கூறி , அவளிடம் சரணடைந்து துதித்தால் உங்கள்
கஷ்டங்களெல்லாம் தீரும்னு சொல்ல ,எல்லோரும் தேவியிடம் சென்று,
ராகம்: ராதே ! ராதே !
அம்பா தாயே ! லோக மாதா லலிதாம்பிகையே !
லலிதாம்பிகையே !
வம்பன் பண்டனை வதைத்து எம்மைக்
காத்தருள்வாயே ! காத்தருள்வாயே !
என்று வேண்ட, லலிதாம்பிகை வந்தாள். அந்த அழகான தேவி எப்படி இருந்தாள் தெரியுமா?

ராகம்: அழகே, அழகே
ஸா……………………………….
அழகே அழகே அம்பாள் அழகே
அன்பின் வடிவம் அம்பாள் அழகே
முகம் மட்டுமா அழகு? மீன் கண்கள் கூட
ஒரு அழகு !
இதழ் மட்டுமா அழகு ? வெண் பற்கள் கூட ஒரு அழகு.!
தலையில் ரத்தினக் கிரீடம் அழகு !
இடையில் தங்க ஒட்யாணம் அழகு !
கையில் வைர வளையல் அழகு !
காலில் சலங்கை அழகோ அழகு !
ஸா ………………………..
அழகு முகம் நோக்கியே
முழு நிலவும் நாணுதே
இனிய குரல் கேட்டுமே
குயிலும் ஊமை ஆனதே ( 2 )
அன்னையருள் இருந்தால்
உலகம் முழுதும் அழகு
எம்மை அவள் காத்தால்
வாழ்க்கை முழுதும் அழகு !
ஸா ………………………….
இப்படிப்பட்ட அழகான
தேவி எப்படி வந்தாள் தெரியுமா?
ராகம்: அச்சுதம் கேசவம்
ரத்தினக் கிரீடமும், சுட்டி ராக்கோடியும்
சித்திரத் தேரினில் சக்கரக் குடையுடன்
சிங்கார ரூபமாய் ஓங்கார நாதமாய்
பைங்கிளி லலிதா தேவியும் வந்தனள் !
பண்டனின்
கொடுமைகளைக் கேட்டதும் லலிதாம்பாளின் கண்கள் சிவந்தன. பண்டாசுரனை வதைக்க
அகிலாண்ட லோக மாதா லலிதாம்பிகா தேவி சினங்கொண்டு சீற்றங் கொண்டு புறப்பட்டாள்.
எப்படி?
ராகம்: ஜெய ஜெய தேவி
பண்டனைக் கொல்ல சண்ட
மாருதமாய் லலிதா தேவியும் வந்தாள் !
கண்டவர் கலங்கிட
துஷ்டர்கள் நடுங்கிட துர்க்கா தேவியும் வந்தாள் !
ரதகஜ துரக பதாதி களுடனே காளிகா தேவியும் வந்தாள் !
வாராகி வைஷ்ணவி
சாமுண்டி எனும் ஏழு தோழி யருடனே வந்தாள் !
சண்ட முண்டரை வென்றாள் !
பண்டா சுரனைக் கொன்றாள் !!
இப்படிப் பல அவதாரம்
எடுத்து, பல ரூபம் எடுத்து
துஷ்டர்களை அழித்துப் பக்தர்களுக்கு அபயம்
அளித்துக் காத்து வரும் தேவி ராஜராஜேஸ்வரியை போற்றிப் பணிந்து புகழ்ந்து பாடுவோமா?
ராகம்: ரார வேணுகோபா பாலா
ராஜராஜேஸ்வரியே
சரணம் ! அகிலத்தை ஆள்பவளே சரணம் !
பராசக்தி தேவி சரணம்
! பரமனின் சரிபாதியே சரணம் !
கண்ணில் இமையவளே !
பாடும் பண்ணில் இசையவளே !
சொல்லும் சொல்லின்
பொருளவளே !
ஏட்டினில் எழுதிடும்
பாட்டினில் உறைந்திடும்
கவிதைப் பொருள் அவளே
!
வா ! காத்திட வா !
வாழ்த்திட வா ! அருளிட வா வா வா !
தா ! தீரத்தை தா
! வீரத்தை தா ! தைர்யத்தை தா தா தா !
பகைமையைத் தீர்த்து
விடு ! அன்பினைப் பெருக்கி விடு !
பண்பினை வளர்த்து
விடு ! முரடனையும் திருடனையும்
மன்னித்து மனிதனாய்
மாற்றி விடு !! ( ராஜ )
இத்தனை நேரம் அம்பிகையின்
கதையை விரிவாய்ப் பார்த்தோம். வில்லுப்
பாட்டை முடிக்கறதுக்கு முன்னால லக்ஷ்மி
தேவி, சரஸ்வதி தேவியையும் போற்றிப்
பாடி முப்பெரும் தேவியரின் அருளையும்
பெறுவோமா?
ஓ பேஷா செய்யலாமே !

ராகம்: கும்மியடி பெண்ணே
கும்மியடி
பாடிடுவோம்
நாமும் பாடிடுவோம்
திருமகள்
புகழினைப் பாடிடுவோம்
பாடிடுவோம்
நாமும் பாடிடுவோம்
லக்ஷ்மிதேவியின்
பெருமையைப் பாடிடுவோம்.
திருமாலின்
திருமார்பில் வசிப்பவளாம் – அவள்
அருள்மாரி
பொழிந்திடும் அம்பிகையாம்!
தாமரை
மலரினில் இருப்பவளாம் – அவள்
தாமதம்
செய்யாமல் அருள்பவளாம்!
பொங்கும்
தனம் தரும் தனலக்ஷ்மி – அவள்
மங்காத
புகழ் தரும் மஹாலக்ஷ்மி !
சந்தானம்
அருளிடும் சந்தானலக்ஷ்மி – தேடி
வந்தோர்க்கு
வரம் தரும் வரலக்ஷ்மி !
வித்தைகள்
தந்திடும் வித்யாலக்ஷ்மி – தீரா
வினைகளைத்
தீர்த்திடும் விஜயலக்ஷ்மி !
பயங்களைப்
போக்கிடும் தைர்யலக்ஷ்மி – வாழ்வில்
ஜெயங்களைத்
தந்திடும் ஜெயலக்ஷ்மி !
சரஸ்வதி தேவி மேலே
புதியதாக ஒரு பாட்டு பாடுவோமா?

ராகம்: வர வீணா
கலைவாணி அருள்வேணி
சகலரும்
பூஜிக்கும் ராணி
கற்றவர் போற்றும் தேவி
மற்றவர் ஏற்றும் செல்வி
வீணையைக் கையில் உடையவளே !
வெண் பட்டாடை உடுத்தவளே !
வரம் யாவையும் தரும் தேவி நீ !
வாழ்த்திட வருவாய் அருள் நாயகி !
வருவாய் தருவாய் கலைகளையே !
அனுதினம் எமக்கே !
இப்படிப்பட்ட லக்ஷ்மி
தேவி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி ஆகிய முப்பெரும் தேவியரின் அருளைப் பெறத்
தான் நாம் பொம்மைக் கொலு வைத்து நவராத்திரியாகக் கொண்டாடி வருகிறோம். இப்போது இந்த
பொம்மைகளைப் பற்றி ஒரு பாட்டு பாடுவோமா?

ஓ ! நல்லா பாடுவோமே
!
ராகம்: சின்ன சின்ன ஆசை
சின்ன சின்ன பொம்மை
சிறகு வைத்த பொம்மை
வண்ண வண்ண பொம்மை
வட்ட மிடும் பொம்மை
எங்கள்
வீட்டுக் கொலுவில் தொடர்ந்து வரும் பொம்மை !
தங்க மாடிப் படியில் அடுக்கி வைத்த பொம்மை !
சின்னத் தொப்பை போட்ட செட்டியாரு பொம்மை !
வீணை கையில் ஏந்தும் வாணியவள் பொம்மை !
சிட்டுப் போல ஓடும் சுட்டிப் பையன் பொம்மை !
பட்டுக் கவுன் போட்ட குட்டிப் பெண்ணின்
பொம்மை !
குட்டைச் சட்டை போட்ட சட்டைக்காரன் பொம்மை !
குழலூதும் கண்ணன் நீல நிற பொம்மை !
கோபியர் ஆடும் நாட்டியப் பொம்மை !
ஏராளமான சாமிகளின் பொம்மை !
தாராளமான தலைவர்களின் பொம்மை !
கேட்டுத் தலை ஆட்டும் மக்களது பொம்மை ! !
இத்தனை நேரம்
பொறுமையாக இருந்து வில்லுப் பாட்டு கேட்ட உங்களுக்கு நன்றி கூறி எங்கள் வில்லுப்
பாட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொள்கிறோம்.!
கல்வியும், கலைகளும் தந்திடும் கலைமகள் சரஸ்வதிதேவிக்கு,
பொன்னும் பொருளும் தந்திடும் அலைமகள்
லக்ஷ்மிதேவிக்கு
வீரமும் தீரமும் தந்திடும் மலைமகள் பார்வதி தேவிக்கு
சந்ததம் மங்களம் மங்களம் – தேவியர்க்கு
இசைந்ததே மங்களம் மங்களம் !
வந்தவர்க்கும்
, கேட்டவர்க்கும், சொன்னவர்க்கும்
மங்களம் மங்களம் மங்களம் !
page
குறைவே நிறைவு!

மினிமலிசம் அல்லது குறைவே நிறைவு என்ற கருத்து இப்போது வெகுவாகப் பாராட்டப்படும் அம்சமாக இருக்கிறது. ஏழை இந்தியன் இடுப்பில் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு இருப்பவன் அதைவிட என்ன மினிமலிசம் செய்யமுடியும் என்று கேட்கலாம்.
ஆனால் இங்கே தான் நகைக்கடையில் முழி பிதுங்கும் அளவுக்குக் கூட்டம். மக்களுக்கு நாலைந்து வீடு, காலி மனைகள், வில்லாக்கள், ஆடி-டெஸ்லா கார்கள், 100 பவுன் நகை, 100 புடவைகள், டி.வி, விதவிதமான கம்ப்யூட்டர், செல் போன்கள்,காலணிகள், மற்றும் பணம், பதவி, அதிகாரம், புகழ், ஷேர் ,செக்ஸ், குடி , போதை எல்லாவற்றிலும் ஆசை அதிகமாக இருக்கிறது.
இவற்றில் ஏதாவது உங்களுக்குத் தேவையானதாக இருந்தால் அவற்றைப் பெறுவதில் தவறில்லை. அவை தேவை இல்லாமலிருக்கும் போதே அவற்றைப் பெற ஆசைப்படுகிறோமே அது தான் மினிமலிசத்திற்கு எதிரி.
அப்படியென்றால் மினிமலிசம் என்றால் என்ன?
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ‘மினிமலிசம் என்பது உங்கள் வாழ்வில் அதிகமாக இருப்பவற்றைக் குறைத்து வாழ்வின் முக்கியமானவற்றைப் பெற உதவும் ஒரு கருவி.’
அதிகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முக்கியமானவற்றிற்கு முக்கியம் கொடுப்பதே மினிமலிசம் ஆகும்.
எது முக்கியமானது?
நமக்கு சந்தோஷமும், திருப்தியும் , எல்லாவற்றிக்கும் மேலாக சுதந்திரமும் தரும் பொருள் ,செயலே நமக்கு முக்கியமானவை.
இந்தக் குறைவே நிறைவு என்ற எண்ணம் நமக்கு என்னென்னவெல்லாம் தருகிறது தெரியுமா? ?
– அதிருப்தியை விரட்டுகிறது.
– நேரத்தை மீட்டுத் தருகிறது
– நிகழ்காலத்தில் நம்மை நிறுத்துகிறது.
– நமது விருப்பங்களை நிறைவேற்றுகிறது
– நமது கடமையை உணர்த்துகிறது
– உற்பத்தியைப் பெருக்கி உபயோகத்தைக் குறைக்கிறது
– சுதந்திரத்தை உணர வைக்கிறது.
– மன – உடல் நலத்தைப் பாதுகாக்கிறது
– தேவையில்லாதவற்றை அப்புறப்படுத்துகிறது
– வாழ்வின் குறிக்கோளைக் கண்டுபிடிக்கிறது
மொத்தத்தில் மினிமலிசம் நமக்கு வாழ்வின் இனிமையை பொருள்களின் மூலம் இல்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கிடைக்க வழி செய்கிறது.
நமது மகாத்மா காந்தி அவர்களைப் போல குறைவில் நிறைவு கண்டவர் யாருமில்லை. அவருக்கென்று சொந்த வீடு கிடையாது. அவரிடம் இருந்த பொருள்கள் பத்துக்கு மேல் அதிகமில்லை. கொஞ்சம் துணி, கொஞ்சம் பாத்திரங்கள், தடி, கண்ணாடி,செருப்பு , பாக்கெட் கடிகாரம் இவையே அவரின் சொத்து.

அவர் தேவைக்கு அதிகமாக எதையும் வைத்துக் கொள்வதில்லை. அவர் குறைவான உணவை உண்டதால் என்றும் ஆரோக்கியமாகத் திகழ்ந்தார். குறைந்த தேவையான உடையையே அணிந்தார். எளிய வாழ்க்கைமுறையை அனுசரித்தார். எப்போதும் மகிழ்ச்சியுடன் மன அழுத்தம் இன்றி இருந்தார். நல்ல பேச்சாளர்-எழுத்தாளராக இருந்தாலும் சுருக்கமாகப் பேசுவது – எழுதுவதே அவரது வழக்கம்.
இவரை விட மினிமலிசத்திற்கு நல்ல உதாரணம் கிடைப்பது அரிது.
small is beautiful என்று சொல்வதைப் போல நாமும் நமது தேவையில்லா ஊளைச் சதையைக் குறைப்போம்!
முதலில் நமது உடமைகளைப் பட்டியல் போடுவோம். அவற்றில் முக்கியமில்லாதவற்றை விலக்கி எறிவோம்.
கொஞ்சம் கொஞ்சமாக இனிமையான வாழ்க்கை வாழ ஆரம்பிப்போம்! செய்வீங்களா என்று கேட்கவில்லை, செய்வோமா?
page
எதிர்பாராதது – கவிஞர் ஆரா
அது ஒரு
பெரிய உணவு விடுதி. பலவித அலங்காரங்கள்
கட்டமைப்பு. எல்லா வகை மக்களும்
சாப்பிடும் இடம் அது.

விடுதி
சின்னதாக இருந்தபோது முத்துபாண்டியின் அப்பா அதை ஆரம்பித்தார். போகப்போகக் கூட்டம்
ருசிக்காக வந்தது. நகரம் பெரிதாக ஆக கூட்டம் அதிகம் வந்தது. முத்துபாண்டிக்கு
சிறிய வயதிலேயே, படிப்பு சரியாக வராததினால், அப்பாவுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.
சைவமாக
இருந்த விடுதியை அசைவமாக முத்துபாண்டியின் மகன் சங்குபாண்டி மாற்றினான். வெளிநாடு
சென்று படித்தவன். பெரிய விடுதி ஆயிற்று. காரிலும் பைக்கிலும் மக்கள் கூடினர்.
இடைவேளை
இருந்த காலம் போய் இடைவிடா வேலையில் பணிபுரிவோர்கள். சாப்பிடுவோரும், பல வகையான, பலப்பல வகையான உணவுகளை
விரும்ப, அதையெல்லாம் செய்ய, சிறுவர்கள்,
பெரியவர்கள், மகளிர் என கூட்டம் அலை மோதியது.
சங்குப்பாண்டியைப்
பற்றி இங்கு சொல்லியாக வேண்டும் முத்துபாண்டியின் வருமானம் நன்றாக இருக்கவே அவன்
படிப்பு பங்கமின்றி தொடர்ந்தது. பரம்பரைக் குணமோ என்னவோ, ‘கேட்டரிங் டெக்னாலாஜி’
படித்தான். இங்கு மட்டுமல்ல இலண்டனிலும் சென்று படித்தான். ஜப்பான், மலேசியா,
ஆஸ்திரேலியா என ஊர் ஊராகச் சென்று
படித்தான்,
2020
(கற்பனை தானே)
பெரிய ஒரு
உணவு விடுதியாகக் கடற்கரையில் அமைத்தான். மீன்கள் அவன் கண்களில் பட்டது. அவை மூலம்
என்னென்ன செய்யமுடியுமோ அதெல்லாம் செய்தான். விதவிதமான மீன்கள். அவற்றை ஏழாவது
மாடியில் தோட்டம்போல் அமைத்து அதில் மீன் தொட்டியை வைத்து, அப்படியே வருவோர்
விரும்புவதை பொரித்துத்தர, மக்கள் விரும்பினார்கள். கல்லாவும் நிரம்பியது.
ஆஸ்திரேலியா
இன்னொருமுறை சென்றான் சங்குபாண்டி. போய்வந்து
சிலநாளாக யோசனையில் இருந்தான். பால் பாண்டியன் அவனின் நண்பன். பால் பாண்டியன் கொஞ்சம்
வித்தியாசமான ஆசாமி. கோழிகளை அடித்து உடனே சமைத்துச் சாப்பிடுவான். அப்படியான
குணம் உள்ளவன்
அவன்
சொன்னானோ, சங்கு மனம் சொன்னதோ, இருவரும் யோசித்தனர். யோசித்ததை செயல்படுத்தத்
திட்டம் இட்டனர்.
‘புதிய
புதிய உணவு காணுங்க’ என்ற விளம்பரம் ‘பெரிய பெரிய’ நாளிதழ்களில் வெளியானது. ‘20.07.2020
பாருங்க, வாருங்க சாப்பிட எங்க விடுதியிலே, சங்கு முகத்தில் ’ என நியானில் மின்னின வாசகங்கள்.
காசிக்குப்
போனதிலிருந்து மனசு சரியில்லா முத்துபாண்டி, மனைவி காமாட்சியுடன் சென்னைக்கு உடனே விமானம் மூலம்
திரும்பினார். 19.07.2020 இரவு. விமான நிலையத்திலே இவரும் விளம்பரம் பார்த்தார்,
யோசித்தார். யோசித்துக்கொண்டே காரில் வீடு வந்தார்.
ஓய்வெடுக்கவில்லை.
“சங்கு” என்றார். சங்கு போனில் வந்தான். “என்னப்பா?” என,
“உடனே வாடா..” என்றார். வந்தான்.
“என்னடா
செய்யப்போறே?”
பால்
பாண்டியன் முகம் பார்த்தான் சங்கு.
“பால்
பாண்டியா .. என்னடா?” என்று கேட்டார் முத்துபாண்டி.
“ஒண்ணுமில்லே..
மீன் பொரிக்கிறோமில்ல… ”
“ஆமாடா..
சொல்லு”
சங்கு,
“அதுபோல, ஆடு , மாடு வெட்டி சமைக்கலாமின்னு…” என்றான்
“முட்டாப்பயலுக..
நினைச்சேண்டா. கோக்கு மாக்கு பண்ணிடாதீங்கடா .. இரு” என்றவர்,
“காமாட்சி, இங்கே வா” என்று கூப்பிட்டார்.
காமாட்சி
வந்தாள்.
“விளக்கிச்
சொல்லுடா” என்றார் முத்துபாண்டி.
அம்மாவிற்கோ,
கேட்டதும் மயக்கமே வரும் போலிருந்தது.


“என்னடா.
இது.. சரிப்படாதுடா. நம்ம மக்கள்
வெட்டுவதை ரசிக்க மாட்டாங்கடா. மாடு நம்ம தெய்வமடா. கேரளாவிற்குப் போகும். .அப்பவே, எங்க
அப்பா அதை எதுத்தாரு. .. என் மகன்டா நீ. இது எப்படிடா?” என்றாள் காமாட்சி.
முத்துபாண்டியின்
ஆமோதிப்புடன் திட்டம் கைவிடப் பட்டது/
தோட்டத்தில்,
லக்ஷ்மி “ம்மா… ” என்றது கன்றுக்குப் பால் தர. .
page
சுட்ட ஜோக்குகள் – மிகவும் ரசித்தவை

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் , எப்படி இருக்கக்கூடாது
என்பதற்கு பட்டிமன்ற நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட ஒரு சுவையான உதாரணம் :-
கற்பனையான
சம்பவம் : “குடும்பத்தலைவர் மாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு
திரும்புகிறார். வழியில் இருந்த கண்ணாடி பாத்திரம் அவர் கால்பட்டு உடைந்து
விடுகிறது”
(1)அதம வகை,(இருவருமே
விட்டுக்கொடுப்பதில்லை):
கணவன்:“உனக்கு அறிவிருக்கிறதா? கண்ணாடி பாத்திரத்தை
வழியில் வைத்திருக்கிறாயே.”
மனைவி:“நீங்க
பாத்து வரவேண்டியதுதானே. கண்ணு என்ன அவிஞ்ஜா போச்சி.”
(2)மத்திம வகை.( யாராவது
ஒருவர் விட்டுக்கொடுப்பது).
கணவன்:“கண்ணாடி பாத்திரத்தை வழியிலா வைப்பது,முட்டாள்,
மனைவி
:” தவறுதான், மன்னித்துவிடுங்கள்.
(அல்லது)
மனைவி
:“ஏங்க பாத்து வரக்கூடாது ?
கணவன்:"தவறு
செய்து விட்டேன் . மன்னித்துவிடு.”
(3)உத்தம வகை-(இருவரும்
விட்டுக்கொடுப்பது)
கணவன்:“அடாடா. நான் பார்த்து வந்திருந்தால் இந்த
தவறு நடந்திருக்காதே.”
மனைவி
:“தவறு என்னுடையததுதான். கண்ணாடி பாத்திரத்தை வழியில் வைத்திருக்க கூடாது,”
ஆனால் பாருங்கள் , இந்த மூன்று வகையிலும்
என் குடும்பம் வரவில்லை , நான்
விட்டுக்கொடுத்தாலும், என்
மனைவி விடமாட்டாள். உதாரணமாக இந்த காட்சியையே எடுத்துக்கொள்வோம்.
நான்:“அடாடா, நான் பார்த்து
வந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காதே.”
மனைவி :“நீங்க என்னிக்கிதான் பார்த்து வந்தீங்க, உங்களுக்கு தான் கடவுள்
கண்ண பிடரியல வச்சுட்டானே.”

கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க… தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“
கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே….!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க…. பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“
கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“
மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“
.
கணவன் – “இதோபாரு…. நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“
மனைவி – “சரிங்க…. இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“
.
கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்…?“
கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்…..
கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“
மரணத்திற்கு அப்பால் ..

மரணத்திற்கு அப்பால் கொஞ்சம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது!
பிரபஞ்ச ரகசியம் என்ன? என்று ஒருவர் கேட்கிறார் !
மானிடர் ஆத்மா மரணம் எய்யாது. மேனியைக் கொல்வாய் என்ற பகவத் கீதையின் தத்துவத்தை முன் வைக்கிறார் இன்னொரு நண்பர்.
விஞ்ஞானம் இதற்கு விடை சொல்ல முடியாமல் அம்பேல் ஆகி ஓடிவிடும் என்கிறார் ஒரு நண்பர்.
முகுந்த முரளி அவர்கள் தான் பதிவுகளில் “மரணமில்லாப் பெருவாழ்வு” பற்றிக் கூறும் போது இப்படிக் கூறுகிறார்:
ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை. (கீதை 2-20)
பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது. (பகவத் கீதை 2-22)
ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும். (பகவத் கீதை 2-23)
தனி ஆத்மா பிளக்க முடியாதது. கரைக்க முடியாதது. எரிக்கவோ, உலர்த்தவோ முடியாதது. என்றுமிருப்பது, எங்கும் நிறைந்தது, அசையாதது, என்றும் மாறாமலிருப்பது. (பகவத் கீதை 2-24)
ஆத்மா கண்ணுக்கெட்டாததும், சிந்தனைக்கப்பாற்பட்டதும், மாற்ற முடியாததுமாகும். இதை நன்கறிந்த, உடலுக்காக வருந்தாமலிருப்பாயாக. (பகவத் கீதை 2-25)
பிறந்தவன் எவனுக்கும் மரணமும், மரணப்பட்டவனுக்குப் பிறப்பும் நிச்சயமே. தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில் இதற்காகக் கவலைப்படாதே. படைக்கப்பட்டவை எல்லாமே முதலில் தோன்றாதிருந்து, இடைநிலயில் தோன்றி, இறுதியில் மீண்டும் மறைகின்றன. எனவே, கவலைப்பட என்ன இருக்கிறது? பகவத்கீதை 2 – 26,27,28)
சரி இஸ்லாம் மதம் இதைப் பற்றி என்ன கூறுகிறது? நமது வக்கீல் விளக்குகிறார்!
இறப்பு என்பது நம் வாழ்வின் முடிவு மட்டுமல்ல. அல்லாவை அடையத் தயாராகும் அமைதிப் பயணத்தின் துவக்கம். நிறைய இஸ்லாமியர்கள் ’ நல்லவர்கள் இறைவனின் அருளைப் பெறுவார்கள்; கெட்டவர்கள் நரகத்தின் பாதையில் விழுவார்கள்’ என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் ஆத்மா என்பது தீர்ப்பு நாள் வரை அமைதித் துயிலில் இருக்கும். வாழ்வில் நாம் செய்த நல்லது கெட்டதிற்கு ஏற்பவே தீர்ப்பு நாளில் நாம் நிச்சயிக்கப் படுகிறோம்
இன்னொரு முஸ்லீம் கோட்பாட்டின் (SUFISM) படி மனிதன் இறந்த பிறகு தனக்குத் தானே தீர்ப்பு அளித்துக் கொள்கிறான். அவனுடைய சொர்க்கத்தையும் நரகத்தையும் அவனே தீர்மானிக்கிறான். இந்தத் தத்துவம் ‘இதயத்தின் வழி’ அல்லது ‘தூய்மையின் வழி’ என்று உணரப்படுகிறது. இந்த வழி மனிதனைத் தனது தாழ்வான நிலையிலிருந்து
எங்கும் நிறைந்த இறைவனின் தூய ஒளியை நோக்கிச் செல்லும் பாதையாகிறது. இறை ஒளியை அடைய நிறைய வழிகள் இருந்தாலும் எல்லா வழிகளின் கோட்பாடு ‘உன்னைத் தெரிந்து கொள்; உன் இறைவனைத் தெரிந்து கொள் “ என்பதேயாகும்.
(இஸ்லாமிய நண்பர்கள் இந்தக் கருத்து சரியா தவறா என்று தெரிவிக்கவும்)
(மற்றவை பிறகு)
தி ஜ ரங்கநாதன் – எஸ் கே என்

“கதையின் ஒரோர்
அம்சமும், ஆரம்பம், நடு, முடிவு ஒவ்வோர் அமைப்பும், ஒவ்வொரு சொல்லும், கதையின்
சுவாரஸ்யத்திற்கு, திட்டத்திற்கு உதவ வேண்டும். கதை முழுவதையும் படித்தபின் ‘பூ!
இவ்வளவுதானா? இதை ஏன் படித்தோம்?’ என்ற உணர்ச்சி படிப்பவருக்கு ஏற்படக் கூடாது.
கதையின் முடிவு ஏமாற்றமாயிருந்தால், அந்த ஏமாற்றமும் ஓர் இன்பமாயிருக்கவேண்டும்.
இதுதான் முக்கியம்.”
தஞ்சை மாவட்டம் திங்களூரைச்
சேர்ந்த திரு ரங்கநாதன் படித்தது என்னவோ நான்காவது வரை தான். கணிதத்திலும் அறிவியலிலும்
ஏற்பட்ட ஆர்வத்தால் ஆங்கிலம் பயின்றவர். திண்ணைப்பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா
என்று பல பணிகள் செய்தவர்.
ஒரு கட்டுரையாளராகத்
தொடங்கிய தி.ஜ.ர, கவிதைகள் கதைகளும் எழுத ஆரம்பித்தார். ஒரு பத்திரிக்கையாளராக ‘சமரபோதினி’ யில் தொடங்கி சில பத்திரிக்கைகளில் பணியாற்றி , ‘மஞ்சரி’ இதழ் ஆரம்பித்ததிலிருந்து
சுமார் நாற்பது ஆண்டுகள் அதன் ஆசிரியராக இருந்தார். மொழிபெயர்ப்புகளும்
செய்துள்ளார். பல சிறந்த சிறுகதைகள் எழுதியிருந்தாலும் இவரது ‘பொழுது போக்கு’, ‘ஆசிய
ஜோதி ஜவஹர்’, ‘இது என்ன உலகம்’, ‘புதுமைக்கவி பாரதியார்’ போன்ற கட்டுரைத் தொகுதிகள் மிகப் பிரபலமானவை. பிரதமராயிருந்த
ஜவஹர்லால் நேருவிற்கு ‘ஆசிய ஜோதி
ஜவஹர்’ கட்டுரைத் தொகுப்பைத் தானே
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து. (பிரசுரத்திற்காக
அல்ல. தமிழ் தெரியாத நேரு படிப்பதற்காக) அனுப்பியிருந்தார்.
எளிய சம்பவங்களையும் எளிய மனிதர்களையும் நகைச்சுவை
இழையோட எழுதி வந்த இவரது ‘கன்னியின் பிரார்த்தனை ‘கதை இப்படிப் போகிறது.
அந்தப் பத்திரிக்கைக்காரருக்கு, ஒரு வியாபார நண்பர் .காக்கையா செட்டியார் மூர்வி மார்கெட் என்னும் கடையின்
சொந்தக்காரர்.
‘அந்த
ஊரில் மனப்பூர்வமாய் நாகரிக வாழ்க்கை நடத்த முயன்று கொண்டிருக்கக் கூடிய எந்த
மனிதனும் காக்கையா செட்டியாரின் கடைக்கு
வந்துதான் தீரவேண்டும்.’
‘காருக்கு
நல்ல டயர், நவீன பாதரட்சைகள் முதல் மனிதனுடைய நாகரீகத்தை எவ்விதத்திலும்
மலினமடையாமல் காத்து வரக்கூடிய ரெப்பிரிஜிரேடர் முதல் சேப்டி
பின், சில்க் ரிப்பன்கள் வரைக்கும்
சகல சாமான்களும் காக்கையா கடையில் எந்நேரத்திலும் விற்பனைக்குத் தயார்.’
தவிர காக்கையாவும் ஒரு
வியாபார நிபுணர். அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டுப் போன ஒரு துரை அவருக்குச்
சொல்லிக்கொடுத்த ரகசியம். ஒரு பிச்சைக்காரனிடம் நாற்பது ரூபாய்ச் சாமான் விற்கும்
சாமர்த்தியம். (அது ஒரு ஆர்மோனியப் பெட்டி என்றும் அதை வாங்கியதன் மூலம் அந்தப்
பிச்சைக்காரனின் வருமானம் பெருகியது என்றும் சொல்கிறார்)
ஒருநாள், காமிரா என்று
சொல்லப்படும் ஒரு ’ ஒற்றைக்கண்’ சாமான்கள் பல கண்சிமிட்டிக்கொண்டு இருந்தன. ‘பம்பாயிலிருந்து
பிளேனில் வந்தது’, ‘இந்தப்படம் இந்தக்
காமிராவினால் என் எட்டு வயது பையன் எடுத்தது’ என்றெல்லாம் கூறுகிறார் காக்கையா.
“வியாபாரம் என்றாலே புளுகு தான்’ என்று அவரே கூறுவாராம்.
மிகவும் உபயோகமாயிருக்கும்,
வெள்ளைக்காரன் தேசத்திலெல்லாம் போட்டோ எடுக்கத் தெரியாதவன் பத்திரிக்கைத்
தொழிலுக்கே லாயக்கில்லாதவன் என்றெல்லாம் சொல்லி, தன் பத்திரிக்கைக்கார
நண்பரிடமே ஒரு காமிராவை விற்றுவிடுகிறார்.
‘காமிராவின்
விலை இருபத்து நாலே மூணுவீச அரை வீசமாய்
திகைந்தது. அதோடு போயிற்றா பிளேட் , தட்டு, தங்க மருந்து, பிம்பம் திரட்டும்
திரவகம் என்று வேறு என்ன என்னவோ சாமான்களையும் சுமத்திவிட்டார்’
குழந்தை கோகிலத்திற்குக் காப்பு வாங்க வைத்திருந்த பணம்
அம்பேல்.
தொடர்ச்சியாகப்
பத்திரிகைகளில் வெளியாகும் புகைப்படப் போட்டிகளில் கலந்துகொண்டு போட்ட பணத்தை
எடுத்துவிட முடிவு செய்துகொள்கிறார்.
இவரது போட்டோ பிடிக்கும்
திறனை வளர்த்துக்கொள்ள இவரது குடும்பத்தினரைப் படம் பிடிக்கிறார். இருட்டறை தயார்
செய்து கொள்கிறார். காமிராப் புத்தகத்தின் படம் அலம்பும் அத்தியாயத்தை பல முறை
படித்து செல்லுலாயிட் மருந்துத் தண்ணீரில் பிளேட்டை வைத்து, ஊஞ்சலாட்டுவது போல்
அசைத்து .. கடைசியில் படம் இரண்டும் ஒரே சூன்யம்.
தவறு இவருடையதல்ல. அந்தப்
புத்தகத்தில் வீட்டுக்குள் எடுக்கலாகாது என்று எங்கும் காணோம். ‘வெளியில் வைத்து
எடுக்க வேண்டும் என்ற வாக்கியம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கிடந்தது. காக்கையாவின் அறிவுரையின்
பேரில் ஒரு நல்ல போட்டோக்காரனை வைத்து பிளேட்டுகளை அலம்பித்தர வைக்கிறார்.
மல்லிகைப் புதர் அருகே
வைத்து எடுத்த குழந்தை கோகிலத்தின் படத்தை கழுவிக் கொடுக்க போட்டோக்காரரிடம்
கொடுக்கிறார்.
‘குழந்தையை
நீங்கள் கரையான் புற்றருகில் நிறுத்தியிருக்கலாகாது சார். குழந்தை பயந்துகொண்டு
ஒரே ஆட்டமாய் ஆடியிருக்கிறது’ என்றார் அந்த கைதேர்ந்த போட்டோக்காரர்.
அது தூர நிர்ணயத்தின் விஷயம்
என்று புரிகிறது இவருக்கு.
தீபாவளி வந்துவிடுகிறது.
குழந்தைக்கு வாங்க வேண்டிய காப்புக்கான பணம் தான் காமிரா ஆகிவிட்டதே. வருவது
வரட்டும் என்று இரண்டு ரூபாய்க்கு அருமையான கில்ட் காப்பு வாங்கி
வைத்துவிடுகிறார்.
அந்த தீபாவளிக்குக்
காரியங்கள் செய்வதற்கு, மனைவியின் பிடிவாதத்தின் பேரில், உதவிக்கு ஒரு பாட்டியை ஏற்பாடு செய்து
கொள்கிறார்கள்.
அந்தப் பாட்டியை ஒரு படம்
எடுக்கலாமே என்கிறாள் மனைவி.
இந்தக்
குறும்பு வார்த்தையைக் கேட்டு வருத்தப்படவேண்டியவன் நானா, அந்தப் பாட்டியா?
நான்தானே. ஆனால் அதற்கு நேர்மாறாகப் பாட்டிக்குக் கோபமுண்டாகி அவளை சமாதானப்
படுத்துவது பிரம்மப் பிரயத்தினமாகி விட்டது.
படமெடுத்தால் ஆயுசு குறைந்து
போகுமாம். கண்டிப்பாக படமெடுக்கப் போவதில்லை என்ற உறுதியின் பிறகுதான், பாட்டி
மேலே வேலை செய்யச் சம்மதிக்கிறாள்.
களேபரத்தில், காமிராவை
மூடிவைக்க மறந்து போகிறது. இரவு இருட்டு தானே அறையில் என்று சும்மா இருந்து
விடுகிறார். காலையில் பாட்டியைக் காணவில்லை. காமிர வெறும் பிளேட்டில், பாட்டி அந்த
காப்பை கையில் மறைத்துக் கிளப்பிக்கொண்டு போவது அவளது கை மத்தாப்பு வெளிச்சத்தில்
படமாகியிருந்தது. பேசிய சம்பளமும் இரண்டு ரூபாய். காப்பும் இரண்டு ரூபாய். அதனால்
நஷ்டமொன்றும் இல்லை.

ஒரு தமாஷுக்காக அந்தப்
படத்தைப் போட்டிக்கு அனுப்பிவைக்க அது நூறு ரூபாய் முதல் பரிசு பெறுகிறது.
மேலும்
அந்தப் படத்தைக் குறித்து அந்த போட்டோ நிபுணர் எழுதியிருந்த மதிப்புரையின்
சுருக்கமாவது: இதற்கு முதற் பரிசு ரூபாய் நூறையும் அப்படியே கொடுத்து விடுவதெனத்
தீர்மானித்திருக்கிறோம். இவ்விஷயம் ஏழு ஜட்ஜுகளால் ஏக மனதாய் முடிவு
செய்யப்பட்டது. படத்தில் ஒளியும் நிழலும் அற்புதமானதோர் இசைவுடன்
விழுந்திருக்கின்றன. ஒரு வாலிபப் பெண்ணின் எந்த நிலை மிக நேர்த்தியாயிருக்குமோ
அந்த நிலையில் எடுக்கப்பட்டிருக்கிறது. கன்னியின் ஹஸ்த மறைவு அவள் காதலின்
எல்லையில்லாத் தன்மை வாய்ந்தது என்பதைச் சுட்டிக் கட்டுகிறது. மொத்தத்தில் இது நமக்குச்
சில முதல்தர வங்காளி ஒவியங்களை ஞாபகமூட்டூகிறது. இதற்கு ஏற்ற தலைப்பு
"கன்னியின் பிரார்த்தனை” என்பதேயாகும்.
அந்தப்
பரிசுத்தொகை, இவருடையதா, பாட்டியுடையதா?
சர்ச்சைக்குப் பிறகு, மனைவி சொல்லியபடி,
அது கோகிலத்தின் காப்புப்பணம்
என்று முடிவாகிறது என்று கதை முடிகிறது
இவரது இழையோடும் நகைச்சுவையை இவரது கதைகளில்
மட்டுமல்ல, கட்டுரைகளிலும் காணலாம்.
பலராலும் பெரிதும் மதிக்கப்படும் தி ஜ ரங்கநாதன்
அவர்களின் கதையினை இணையத்தில் படிக்க : மூட்டைப்பூச்சியும்
கடவுளும்:
page
குட்டீஸ் லூட்டீஸ்

நானும் என் நண்பர்களும் டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்த ஸ்டான்ட் -அப் காமெடி ஷோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். உடன் என் நண்பரின் ஐந்து வயது மகன் ரமேஷும் இருந்தான்.
சிறிது நேரம் ஷோவைப் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் , “டாடி, டி.வி.யில அந்த அங்கிள் நின்று கொண்டே ஜோக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை
ஸ்டான்ட் -அப் காமெடி என்று சொல்கிறீங்க . அவர் அதையே உட்கார்ந்து கொண்டு சொன்னால் ஸிட் -டவுன் காமெடின்னு சொல்வீங்களா ” என்றானே பார்க்கலாம்.
அங்கு எழுந்த சிரிப்பலையும் ,திகைப்பலையும்,விழிப்பலையும் அடங்க வெகு நேரமாயிற்று.
– சிவமால் .
குட்டீஸ்க்காகப் பாட்டு எழுதியவர் அழ. வள்ளியப்பா அவர்கள். இன்றைய தமிழ் நாட்டுப் பெரிசுகள் எல்லாம் அவருடைய பாடல்களைப் பள்ளியில் படித்த பெரிய மனிதர்கள் தான்.
சிறுவர்கள் மனதைக் குதூகலிக்கச் செய்து பாடவும், ஆடவும் செய்த கவிஞர் அழ.வள்ளியப்பா, “குழந்தைக் கவிஞர்” என்ற அடைமொழிக்கு உரியவர்.
அவர் மிகவும் ஈடுபாடு கொண்டு நடத்திய மாத இதழ் “பூஞ்சோலை”.
அவரது புத்தகங்கள்:
- பாடல்கள் தொகுதி 11
- கதைகள் 12
- கட்டுரை நூல்கள் 9
- நாடகம் 1
- ஆய்வு நூல் 1
- மொழிபெயர்ப்பு 2
- தொகுப்பு நூல் 1
ஆக, 37 நூல்கள் எழுதியிருக்கிறார்.
கைவீசம்மா கைவீசு பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக சிவாஜி கணேசனின் பாசமலர் உதவியது. (அந்த வீடியோவை இந்தக் குவிகத்தில் பார்க்கலாம் )
அவருடைய இரண்டுபாடல்களை வார்த்தை வடிவில்
தந்திருக்கிறோம்
திருவிழாவாம் திருவிழா பாட லை ஒலி வடிவிலும்
தந்திருக்கிறோம்
.
படித்து, கேட்டு, மகிழுங்கள்:


தவிப்பு – சேது கோபிநாத்

குவிகம் இலக்கியவாசல் சிறுகதைச் சிறுவிழாவில் படிக்கப்பட்ட கதை!
ரங்கசாமி
அன்று காலையிலிருந்து கடுமையான மன இறுக்கத்துடன் காணப்பட்டார். மூலை, முடுக்கு,
பீரோ, பெட்டி, பரண், படுக்கை, புத்தக அலமாரி … எல்லாவற்றையும் குடைந்து குடைந்து
எதையோ தேடிக் கொண்டிருந்தார். ஏன், குப்பைக்கூடை, செருப்பு அடுக்கும் பெட்டி
ஆகிய எதையும் விட்டு வைக்கவில்லை! அதை
எங்கே வைத்தோமென்று நினைவிற்கு வரவில்லை. எங்கே தேடுவது என்றும் புரியவில்லை! தன் நினைவாற்றல் குறைவைத் தானே நொந்து
கொண்டார்.
எழுபது வயதான அவருக்கு இரத்தக்கொதிப்பு, சக்கரை வியாதி, மூட்டு வலி,
பார்வைப்பிரச்சினை, வழுக்கை … எதுவும் இல்லை! சற்று நரைத்த தலை மட்டும் உண்டு.
ஆனால், அவ்வப்போது வீட்டுச்சாவி, பேனா, செல்போன் போன்றவற்றை எங்காவது மறந்து
வைத்துவிட்டுத் தேடுவதுண்டு. பிறகு கிடைத்துவிடும்.
இம்முறை அவர் எங்கோ மறைத்து
வைத்தது ஒரு புத்தகம்! தினமும் பூங்காவில் அவர் சந்திக்கும், அரசு பணியிலிருந்து
ஓய்வுபெற்ற நண்பர், உலகநாதன் சில நாட்களுக்கு முன் படிப்பதற்காகத் தந்த புத்தகம். எப்படிக் காணாமல் போயிருக்கும்? தன்னைத்தானே திட்டிக் கொள்வதைத் தவிர வேறு என்ன
செய்ய?
அவருடைய மகனும்
மருமகளும் ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் அலுவலர்கள். வீட்டுக்குச் சற்றுத்
தாமதமாகத்தான் திரும்பி வருவார்கள். ஐந்து வயதுப் பேரன் ஸ்கூல் வேன் மூலம் மாலை
நான்கு மணிக்கே வந்து விடுவான். பிறகு அவன் பெற்றோர் வரும் வரை, தாத்தாவும் பாட்டியும்தான்
கவனித்துக்கொள்வர். அவரது மனைவி சில நாட்கள் முன்பு ஊருக்குப் போயிருந்தாள்.
எப்போது வருவாளோ..? பயணத்தின் போது படிப்பதற்காக சில பத்திரிக்கைகளை
எடுத்துக்கொண்டு போனாள். உலகநாதன் தந்ததையும் எடுத்துச் சென்றுவிட்டாளோ..?
இருக்காது! மேசையை ஒட்டித் தரையில் இருந்த
குப்பைக் கூடையில் அது விழுந்து, நேற்று வேலைக்காரி அதையும் குப்பையோடு எடுத்துச்
சென்றாளோ…? கடவுளே! உலகநாதன் ஜாலியான ஆள்தான். ஆனால், வேறு நண்பர் அவரிடமிருந்து
வாங்கிச் சென்ற புத்தகத்தைத் திருப்பித்தர தாமதமாயிற்று என்று, உலகநாதன் சென்னைத்
தமிழில் ‘ஓங்காரமாக’த் திட்டியது, ரங்கசாமியின் நினைவிற்கு வந்து பயமுறுத்தியது.
இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!
வேலைக்காரி
வந்தாள். பாய்ந்து சென்று அவளிடம், “செல்வி, நேத்து சாயங்காலம் என் ரூமில
இருக்கிற குப்பைக்கூடையைக் கிளியர்
பண்ணினியே, அதுலே புஸ்தகம் ஏதாவது இருந்ததா?” என்று கேட்டார்.
அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றாலும், ஒரு புத்தகம் குப்பைக்கூடையில் கிடந்தால் அதன் மதிப்புத்
தெரியாமலா இருக்கும்? அவள் வாய்விட்டுச் சிரித்துவிட்டு “சாமி, உங்களுக்கு
வயசாயிடுச்சு, மறதியும் சாஸ்தியாயிடுச்சு.
எங்கேயோ வச்சிட்டு எங்கேயோ தேடுறீங்க!” என்று கேலியாகச் சொல்லிவிட்டு
மும்மரமாகப் பாத்திரம் தேய்க்கத் தொடங்கினாள்.
ரங்கசாமியின் கோபம்
மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை ஏறிவிட்டது. மறதியைப் பற்றிச் சொன்னால் பரவாயில்லை,
வயதாயிற்று என்று கேலி செய்கிறாளே?
ஆங்!
இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. பழைய பத்திரிக்கைகள், பாட்டில்கள், பிளாஸ்டிக்
பைகள் எல்லாவற்றையும் எல்லா அறைகளிலிருந்தும் சேகரித்து, மருமகள் நேற்று எடைக்குப்
போட்டாளே! அந்தக் குவியலோடு போயிருந்தால் ….? செல்வியிடம் வீட்டைப்
பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு, தெருக்கொடியிலுள்ள பாண்டியன் கடைக்கு ஓடினார்.
ரங்கசாமியின் பதற்றதைப் பார்த்து, அவர் தேடி வந்தது ஒரு புத்தகம் என்றறிந்தவுடன்,
“ஐயா, நீங்களே தேடிப் பாருங்க, எனக்கு இங்கிலீசு வராது!” என்று
கூறினான். ஊஹூம்! வெறுங்கையுடனும், பெருந்தும்மல்களுடனும் வீடு திரும்பியதுதான்
மிச்சம்!
இரண்டு
நாட்களுக்கு முன்பு, பக்கத்திலிருந்த
“லெண்டிங் லைப்ரரி” லெட்சுமனனுக்கு பல ஆங்கில மாத ஏடுகளின்
பிரதிகளை நன்கொடையாகத் தந்தோமே! ஆம்… அவற்றோடு இதுவும் போயிருக்க வேண்டும். மதிய
உணவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த லெட்சுமனனைச் சரியான தருணத்தில் பிடித்துக்
கொண்டார். “ சார், கவலைப்படாதீங்க, நீங்க குடுத்த பதினெட்டுப்
புத்தகக்களையும் இன்னும் கட்டுப் பிரிக்காமல் வச்சிருக்கேன்!” என்று கூறி
அவர் வயிற்றில் குளிர்ச்சியான ஆவின் பால் வார்த்தான். ஆனால் ரங்கசாமி தேடியது
கிடைக்கவில்லை!
அன்று மாலை
மகனும் மருமகளும் சற்று சீக்கிரமே வீடு
திரும்பிவிட்டார்கள். ஒரு பார்டிக்குப் போகவேண்டுமாம். பேரனும் பள்ளி வேனில் திரும்பி வந்து விட்டான்.
வழக்கம் போல் பூங்காவிற்குச் செல்லாமல் எதையோ தேடிக் கொண்டிருக்கும் ரங்கசாமியைப்
பார்த்து, அவர் மகன், “அப்பா! அவ்வளவு சீரியஸா என்னதான் தேடுறீங்க? நான்
தேடித் தரவா?” என்று கேட்டவுடன் பதறிப்போய், “வேண்டாம் ராஜா! நானே
தேடிக்கறேன் ஆபீஸிலேருந்து களைச்சுப்போய் வந்திருக்கீங்க, பாவம்!” என்று
கூறிவிட்டுத் தேடுதலைத் தொடர்ந்தார்.
பள்ளியிலிருந்து வந்தவுடன், தன்னை
அள்ளியணைத்துக் கொஞ்சி, ‘நேர் காணல்’ தொடங்கும் தாத்தாவிற்கு இன்று என்ன ஆயிற்று?
பேரன் பிரபு திகைத்து நின்றான். ராஜா பாத்ரூமிற்கும், அவன் மனைவி ராதா
அடுக்களைக்கும் சென்றுவிட்டனர்.
“தாத்தா!
என்ன தேடுறீங்க?” பிரபு கேட்டான்.
“பிரபுக்
கண்ணா! ஒரு புஸ்தகத்தை எங்கேயோ வச்சிட்டு மறந்து போயிட்டேம்ப்பா. அந்த மீசைக்காரத்
தாத்தா உலகநாதன் என்னைப் பார்க்க வருவாரே, அவருக்குத் திருப்பிக் கொடுக்கணும்!”
அழாத குறையாகப் பேரனிடம் முறையிட்டார். பிரபுவும் தாத்தாவிற்கு உதவியாகத் தேடித்
பார்த்துவிட்டு, எந்தெந்தப் புத்தகங்களையோ கொண்டுவந்து தந்தான்.
வழக்கமாகத்
தன்னை மாலை ஐந்து மணிக்கு விளையாடுவதற்காக பூங்காவிற்கு அழைத்துச் செல்லும் தாத்தா
இன்று ஏதோ தேடிக் கொண்டிருக்கிறாரே! பூங்காவிலுள்ள
‘கிழவர் கிளப்’ தினமும் மரத்தடியில் கூடும். கிழவர்கள் வம்பு பேசிக் கொண்டிருக்க,
தான் மட்டும் சற்று நேரம் அங்கு விளையாடிவிட்டு வீட்டுக்கு வருவதுண்டு. பாட்டி
ஹார்லிக்ஸ் கலந்து கொடுப்பார். குடித்துவிட்டு ‘டி.வி’யில் ‘சோட்டா பீம்’
பார்பதுண்டு. இன்று யாருக்குமே ‘மூடு’ சரியில்லையே! பாட்டியும் ஊரிலில்லை.
இடிந்துபோய்ப் படுக்கையில் சாய்ந்துகொண்டு, மூளையைச் சொறிந்து கொண்டிருந்த ரங்கசாமியிடம்,
“தாத்தா! இன்னிக்காவது அலிபாபா கதையை முழுசாப் படிச்சுச் சொல்லுங்க!”
வாழையிலை போன்ற ஒரு புத்தகத்தை நீட்டினான். வேண்டா வெறுப்புடன் அதை வாங்கி, “பிரபு,
நீ கிச்சனுக்குப் போயி, அம்மா போட்டுத் தர்ற ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு வா!”
என்று அவனை அனுப்பிவிட்டு, அலிபாபா படக்கதைப் புத்தகத்தை மேஜை மீது
விட்டெறிந்தார். அதற்குள்ளிருந்து ‘தொப்’பென்று அவர் தேடிக்கொண்டிருந்த புத்தகம் விழுந்தது.
யாருக்கும்
தெரிந்துவிடக் கூடாதென்று, மனைவி ஊரிலில்லாதபோது, பேரனுடைய புத்தகத்துக்குள் ஒளித்து
வைத்துப் படித்துக் கொண்டிருந்த அந்த ஆங்கில மாத ஏடு- ஹ்யூ ஹெஃப்னர் வெளியிடும்
‘அடல்ஸ் ஒன்லி’ பத்திரிக்கையான ‘ப்ளே பாய்’ !
திருடனுக்குத்
தேள் கொட்டினால் கத்தவா முடியம்… ?
page
மதிப்பு முதலீட்டைப் பற்றி மாதாமாதம் எழுதி வருகிறோம். இந்த மாதம் அதற்கான வீடியோ ஒன்று மேலே உள்ளது.
பார்த்துப் புரிந்து கொள்ளலாம். ( அனுப்பியவர்: சீனு )
நான் சூப்பர் சிவப்பு நிலா !!
சூப்பர் நிலா என்பது நிலா பூமிக்கு மிக அருகில் வரும் நாள். அன்றைக்குத் தான் நிலா நமக்கு மிகப் பெரியதாகத் தெரியும்.
முழுச் சந்திர கிரகணத்தின் போது சூரியனின் கிரணங்கள் பூமியில் பட்டுச் சிதறுவதால் நிலா சிவப்பு நிறத்தில் இருக்கும். அதனால் அதற்கு இரத்த நிலா (BLOOD MOON ) என்று பெயர் வைத்திருக் கிறார்கள்.

சந்திர கிரகணம் எப்படி உண்டாகிறது என்பதற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைய தளத்தில் பார்க்கவும்.
http://www.timeanddate.com/eclipse/lunar/2015-september-28
சூப்பர் நிலாவும் இரத்த நிலாவும் சேர்ந்து வருவது நமக்குக் கிடைக்கும் ‘வான வேடிக்கை’ . 1982 ல் இந்த சேர்க்கை நடைபெற்றது.
இப்போது 2015 செப்டெம்பர் 27 தேதி இந்தக் கண்கொள்ளாக் காட்சி அமெரிக்காவில் தெரியவந்தது.

சான்ஃபிரான்சிஸ்கோ : முழு சந்திர கிரகணம்
ஆரம்பம் : Sun, Sep 27, 2015 at 5:11 PM
உச்சம் : Sun, Sep 27, 2015 at 7:47 PM
முடிவு : Sun, Sep 27, 2015 at 10:22 PM
நேரம் : 5 மணி, 11 நிமிடங்கள்
அடுத்த நிகழ்வு 2033ல் தான் நடைபெறப் போகிறது.
நான்கு முழுச் சந்திர கிரகணம் தொடர்ந்து வந்தால் அதை டெட்ராட் (TETRAD) என்று சொல்கிறார்கள். 2014-15ல் இந்த டெட்ராட் வந்திருக்கிறது.
செப்டம்பர் 27 கிரகணம் இந்த டெட்ராடீன் கடைசி கிரகணம்.
இந்த நூற்றாண்டில் மொத்தம் 8 டெட்ராட் வரப்போகின்றன.
இதற்காக குவிகம் இணை ஆசிரியர் அர்ஜூன், சான் பிரான்சிஸ்கோ கடல் வெளியில் எடுத்த படங்களை கீழே காண்கிறீர்கள:


இலக்கிய வாசல் -6

2015 செப்டம்பர் மாதத்திற்கான
குவிகம் இலக்கியவாசலின் ஆறாம் நிகழ்வு
கண்ணப்பன் வாசுகி அரங்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் ,சென்னையில் வழக்கம் போல மூன்றாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
அது ஒரு கருத்தரங்கம்! முழுதும் பங்களிப்பார்களுக்கென்றே அமைக்கப்பட்ட நிகழ்ச்சி!
"திரைப்படப் பாடல்களில் கவிநயம்" என்ற தலைப்பில் மக்கள் தங்களுக்குப் பிடித்த- ரசித்த இலக்கிய நயம் மிகுந்த திரைப்பாடல்களை மற்றவர்களும் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லவேண்டும். அது தான் அன்றையக் கூட்டத்தின் குறிக்கோள்.
தலைப்பு நிகழ்வோடு இம்மாதம் முதல் ஒரு சிறுகதையும், சில கவிதைகளும் படைப்பாளர்கள் வாசித்து அளிக்கவேண்டும் என்றும் தீர்மானமாயிற்று.
அதன்படி செயலாற்றியவர்கள்:
இம்மாதச் சிறுகதை :- திரு கோ. சரவணன்
இம்மாதக் கவிதைகள் :- திருமதி கிருஷாங்கினி
(இவற்றைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்)
பாடல்களில், கவிஞர்கள் பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், கு.மா.பாலசுப்ரமணியன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய் போன்ற கவிஞர்கள் எழுதிய சிறப்பான வரிகளைப் பார்வையாளார்கள் கோடிட்டுக் காட்டினார்கள்:
அந்த முத்துக்களில் சில உங்கள் பார்வைக்காக உருளுகின்றன:
படம்: மன்னன் எழுதியவர்: வாலி
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது
உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அபிராமி சிவகாமி கருமாயி
மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள்
நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம்
அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன்
நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம்
வேண்டுமே
அதை நீயே தருவாயே
பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு
எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு
அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன்
தீருமா
உன்னாலே பிறந்தேனே
படம்: பலே பாண்டியா எழுதியவர்: கண்ணதாசன்
அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய்
காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய்
காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய்
காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
கன்னிக்காய்
ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய்
அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ
காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இரவுக்காய்
உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய்
நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவம் காய்
ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ
காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
ஏலக்காய்
வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய்
கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம்
விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ
காயாதே என்னுயிரும் நீயல்லவோ
உள்ளமெலாம்
மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய்
பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ
கோதை எனைக்
காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும்
காயாதே தனிமையிலே காய் வெண்ணிலா
படம்: ஜீன்ஸ் எழுதியவர் : வைரமுத்து
பூவுக்குள்
ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப்
பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும்
காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர்
இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே
அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
கல்தோன்றி
மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல்
அதிசயம்
பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற
காதல் அதிசயம்

படம்; ஆட்டோகிராஃப் எழுதியவர் : பா.விஜய்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே
சொல்கிறதே..
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ.. மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்.
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை
தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்பேம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி விதைபோடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே
உரமாகும்
தோல்வி இன்றி வரலாறா துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில்
தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

படம்: தங்க மீன்கள் எழுதியவர் : நா.முத்துக்குமார்
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
வாட்ஸ் அப் about வாட்ஸ் அப்
கோயமுத்தூர் கவுண்டம்பாளயத்தில் புதிதாகக் கல்யாணம் ஆன 20 வயதுப் பெண் ஒருத்தி கணவன் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ் புக் பார்க்கத் தடை விதித்ததால் தூக்குப்போட்டுக் கொண்டு இறந்து விட்டதாக TIMES OF INDIA தெரிவிக்கிறது.
Scolded for too much WhatsApp, Facebook, woman commits suicidePTI | Oct 13, 2015, 06.36 PM IST
என்ன கொடுமை இது?
மக்கள் இந்தப் போதைக்கு அடிமை ஆகிவிட்டார்கள்.

மேலும் whatsup இல் பொய்யான தகவல்கள் நிறைய வருகின்றன.
இதை ஷேர் செய்யுங்கள் என்று எண்ணற்ற தகவல்கள். மற்றவர்கள் நம் வீட்டில் போடும் குப்பைகளை நாம் சந்தோஷமாக நமது நண்பர்கள் வீட்டுக்குத் தள்ளுகிறோம்.
மோடி ஏன் உலகம் சுற்றுகிறார்?
ஆயிரம் கீரைகளும் அதற்கான மருந்து குணங்களும்
இந்தக் குழந்தை தெருவில் கிடந்தது
சூரியன் எப்போது பச்சைநிறமாக இருக்கிறது ?
சாணி தெளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இதை ஷேர் செய்தால் 37 நிமிஷத்தில் பணம் வரும்
இதை அனுப்பினால் 19 ரூபாய்க்கு டாக் டைம் கிடைக்கும்
இப்படி எத்தனையோ கற்பனைச் செய்திகளை உண்மையைப் போல் – ஆராய்ச்சி செய்து எழுதுவது போல் எழுதும் கும்பல் நிறைய வந்துவிட்டது.
இதற்கு ஒரு மாற்று வரவேண்டும்! வரும்!!
எழுந்து நில் – குமரி அமுதன்

ஜீவா
பரபரப்புடன் இருந்தார். அன்று மாலை நேரு விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியின் ஆண்டு
விழாவில் அவர் பங்கேற்க வேண்டும்.
போட்டிகளில்
வென்ற மாணவர்கள் அவர் கையால் பரிசுகள் பெறப்போகிறார்கள். அந்த நிகழ்வை எண்ணி
மாணவர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். அந்த அளவிற்கு நாட்டுப்பற்றிலும்
விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் மிக்கவராய் விளங்கியவர் ஜீவா.
மாலைப்
பொழுது…..
விழா
தொடங்கியது.. வாழ்த்துரைகளுக்குப் பின் பரிசளிப்பு நேரம். மாணவர்களுக்குப் பரிசுகளுடன் உற்சாக உரைகளும் வழங்கினார் ஜீவா. நாட்டுப்பற்று, மொழிப்பற்று பற்றி
எல்லாம் குறிப்பிட்டுப் பேசினார். விழா நிறைவு பெறும் வேளை. தேசிய கீதம் ஒலிக்க
வேண்டியதுதான் பாக்கி.
அந்தநேரத்தில்
உதவியாளரை அவசரமாக அழைத்தார் ஜீவா. உடனே அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.
உதவியாளருக்கு
ஒரு ஐயம். அது நீண்ட நாள்களாகத் தொடர்ந்து வருவதும் கூட… அதை வெளிப்படுத்தும்
வகையில், பணிந்த குரலில், “ஐயா, நீங்க முன்னாள் ராணுவ உயர் அதிகாரின்னு
சொல்லியிருக்கீங்க; உங்களுக்கு தேசிய கீதத்தின் அருமை அதிகமாகத் தெரியும் . ஆனா நீங்க நாட்டுப் பாடல் ஒலிக்கிறத்துக்கு
முன்னாலேயே விழா மேடையிலிருந்து வெளியே வந்துட்டீங்க. இது சரி தானா? தேசிய
கீதத்துக்கு அவ மரியாதை செய்வது ஆகாதா?” என்று மிகுந்த தயக்கத்துடன்
கேட்டார்.
ஜீவா
அவரைக் கூர்ந்து நோக்கியபடி பதில் சொல்லத் தொடங்கினார்.
“ராணுவத்தில்
இருந்தபோது தேசிய கீதம் ஒலிக்கும் போதெல்லாம் எழுந்து நின்று மரியாதையை செய்தவன்தான்
நான். அதை ஒரு கடமையாக மட்டுமல்ல, பெருமையாகவும் கருதியவன் நான் !. இருபது
ஆண்டுகால நீண்ட பழக்கம் அது. இப்போதும் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நின்று
மரியாதை செய்ய என் நெஞ்சம் துடிக்கும்: உடம்பு பரபரக்கும். ஆனால், என்னால் அது
எப்படி முடியும்? என்று கலங்கிய விழிகளுடன் கேட்டார், போரில் இரு .கால்களையும் இழந்து,
‘வீல் சேர்’ எனப்படும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஜீவா !
page
திண்ணை
இதை தமிழின் முதல் இணைய பத்திரிகை என்று சொல்கிறார்கள்.
அவர்களின் சமீபத்திய இதழில் வெளிவந்த தலைப்புகள்:
அந்தத் தலைப்புகளைக் க்ளிக் செய்தால் முழு விவரத்தையும் படிக்கலாம்!
- வேலி – ஒரு தமிழ் நாடகம்
- செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
- இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது
- நகுலன் கவிதைகள்
- மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி
- தினம் என் பயணங்கள் -46
- ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015
- திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்
- மிதிலாவிலாஸ்-14
- மிதிலாவிலாஸ்-15
- மிதிலாவிலாஸ்-16
- அவன் முகநூலில் இல்லை
- மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015
- பொன்னியின் செல்வன் படக்கதை – 7
- பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்
- திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்
- அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015
- தொடுவானம் 88. வீரநாராயண ஏரி
- அவன், அவள். அது…! -4
- சுந்தரி காண்டம் 8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி
- ஊற்றமுடையாய்
கௌரி கிருபானந்தனின் மிதிலாவிலாஸ் என்ற தெலுங்கு மொழிபெயர்ப்பு நாவலை வெளியிடுகிறார்கள்!
வழக்கமான கதை கவிதை அம்சங்களுடன் பொன்னியின் செல்வனைப் படக்கதையாக வெளியிடுகிறார்கள். பாராட்டுதல்கள்!

This gallery contains 2 photos.
அக்டோபர் 2, காந்தியடிகளின் பிறந்த நாள்! அவரது கருத்தை ‘கவரும் வகையில்’ பாடலை எழுதிவர் “ கோவை சங்கர்"
This gallery contains 3 photos.
இவ்வளவு சரித்திரப் புருஷர்களை ஏன் குவிகத்தில் வெளியிட்டிருக்கிறோம்? அடுத்த தீபாவளி இதழிலிருந்து புதிய தொடர்! இந்திய சரித்திரத்தின் கதை! பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற சரித்திரக் கதை அல்ல. சரித்திரத்தின் நிகழ்வுகளை ஆராய்ச்சியாளர் பார்வையில் அளிக்கிறோம். எழுதப் போவது யாரோ? அடுத்த இதழில்! page